இரண்டாம் தந்திரம் - 21. சிவநிந்தை கூடாமை


பண் :

பாடல் எண் : 1

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அளியுறு வார்அம ரர்பதி நாடி
எளியனென் றீசனை நீசர் இகழில்
கிளியொன்று பூசையின் கீழது வாமே. 

பொழிப்புரை :

யாவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருக் கோலத்தின் உண்மைகளை நூல்களாலும், நாட்டில் அமைந்த திருக் கோயில்கள், அவற்றில் நிகழும் விழாவகைகள் முதலியவற்றாலும் ஓர்ந்துணர்ந்து, அதனால் தெளிவுபெற்ற ஞானத்தை உடையராய் உள்ளத்தில் அன்புமிகப் பெறுவோர் பின்னர்த் தேவராவர். அவ்வாறு ஓர்ந்துணரவும், தெளியவும் மாட்டாத கீழ்மக்கள் அப்பெருமானை, எலும்பு, தோல், சாம்பல், வெண்டலை முதலியவைகளை உடைய வனாய்ச் சுடுகாட்டில் ஆடுதல், தலையோடு ஏந்தி இரத்தல் முதலிய வைகளையே நோக்கிச் சிறுதெய்வமாகக் கருதி இகழ்வார்களாயின், அச்செயல், கிளி ஒன்று தானே பூனையின் அருகுசென்று அகப்பட்டு நின்றது போல்வதாய்விடும்.

குறிப்புரை :

``பதி நாடி`` என்றதனை முதலிற்கூட்டி உரைக்க. அளியுறுதல் - அன்பினால் நெகிழ்ந்து உருகுதல். `அமரராவர்` என்னும் ஆக்கம் விரித்துரைக்க. பதி - தலைவனாம் தன்மை. ``ஈசன்`` என்பது முன்னே ``பதி`` என்றதனோடும் ஆறாவதன் பொருள்படச் சென்று இயைந்தது. ``அமரர்`` என்றது பொதுப்பட உயர்நிலையைக் குறித்ததாகலின், பதமுத்த, அபர முத்தர் முதலிய பலரது நிலைகளும் கொள்ளப்படும். `அமராபதி` என்பது பாடம் அன்று. கீழது - கீழ்நின்றாற்போல்வதொரு செயல். கீழ் நிற்கும் நிலையை, ``கீழ்`` என்றார். இதற்குக் `கீழ்தல் - கிழித்தல்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். இங்குக்கூறிய உவமையை, `கூற்றத்தைக் கையால் விளித் தற்று` (குறள், 894) என்றாற் போல்வனவற்றோடு வைத்துக் காண்க. சிவபெரு மானது முதன்மையை அறியாது நிற்றல்தானே தீங்கு பயப்பதாக, அதன்மேலும் அப் பெருமானை இகழ்தல் விரையப் பெருங்கேடு எய்துவிப்பதாம் என்பது இவ்வுவமையாற் பெறப் படுவது. `இதற்குத் தக்கன் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு` என்பது முன்னர் கூறப்பட்டது (தி.10 பா.336 உரை).
நிந்தனை செய்வாரது இழிநிலை இனிது விளங்குதற்கு, துதித்தல் செய்வாரது உயர் நிலையையும் உடன் கூறிக்காட்டினார்.
இதனால், சிவநிந்தை உய்தியில் குற்றமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்தமு தூறிய ஆதிப் பிரானைத்
தளிர்ந்தவர்க் கல்லது தாங்கஒண் ணாதே. 

பொழிப்புரை :

`தேவர்` எனவும், `அசுரர்` எனவும் சொல்லப் படுவோர் பேராற்றல் உடையவர்போலச் சொல்லப்படினும், அவரெல்லாம் வினைவெப்பத்தில் அகப்பட்டு உயர்கின்றவர்களும், அழிகின்றவர்களுமேயாவர். அதனால், அவர் திரிபின்றி நிலைபெறும் உணர்வை அடைந்திலர். ஆகவே, தன்னை உணர்வாரது உணர்வில் அமுதம் கசிந்து ஊறுவதுபோல ஊறி நின்று இன்பம் பயக்கும் சிவபெருமானை நினைந்து உள்ளம் குளிர்பவர்க்கல்லது உண்மை ஞானத்தைப் பெறுதல் இயலாது.

குறிப்புரை :

`அமரர்` எனப் பெயர் பெற்றாராயினும் கற்ப காலங்களை வருணிக்கும் நூல்களில் அவர் இறந்தமை நன்கெடுத்துக் கூறப்படுதலாலும், அசுரர் பலர் தம் அகந்தையால் அழிந்தமை, பலராலும் நன்கறியப்பட்டதாகலானும், ``எல்லாம் விளிந்தவர்`` என்றும், இறப்பைக் கடக்க மாட்டாமையால் வினையின் நீங்காமை பெறப்படுதலால், ``முளிந்தவர்`` என்றும், வினையுள்ள துணையும் ஞானம் விளங்காதாகலின், ``மெய்ந்நின்ற ஞானம் உணரார்`` என்றும் கூறினார். மெய்ம்மை - திரிபின்மை. `மெய்யாய்` என ஆக்கம் விரிக்க. `தாமே ஞானத்தை எய்தாதார் பிறர்க்கு ஞானத்தைத் தருதல் எவ்வாறு` என்பது கருத்து. `உயிர்கட்குப் பெருந்துன்பந் தருவது அஞ்ஞானமும், பேரின்பம் தருவது மெய்ஞ்ஞானமுமேயாகலின், அவற்றை முறையே போக்குதலும், ஆக்குதலும் மாட்டாதாரைப் புகழ்தலும், அவை வல்லானை இகழ்தலும் பேதைமைப் பாலவாம்` என்றவாறு. அறிவுடையோர் பலர் தேவரைப் புகழ, அறிவிலார் சிலர் அசுரரையும், அவரொடு ஒத்த தீய தெய்வங்களையும் (துர்த்தேவதைகளையும்) புகழ்ந்து அடைதல் பற்றித் தானவரையும் எடுத்தோதினார். தளிதல் - குளிர்தல்; அன்பு செய்து மகிழ்தல். தாங்குதலுக்கு மேல் நின்ற `ஞானம்` என்னும் செயப்படுபொருளை வருவிக்க.
இதனால், சிவநிந்தை குற்றமாதற்கு ஏதுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அப்பகை யாலே அசுரருந் தேவரும்
நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் பொன்றுப தாமே. 

பொழிப்புரை :

அசுரரும், தேவரும் அறியாமையாகிய பகை தம் உணர்விலே நின்று கெடுத்தலால் தம்முள் மிக்க பகைகொண்டு தம் வாழ்நாள் முடிவதற்கு முன்பே அழிந்தனர். ஆகவே, சிவபெருமானை உண்மையில் இகழும் கருத்தினரல்லாதவரும், அவனை இகழ்வார்க்கு அஞ்சித் தாமும் இகழ்வார் போல நிற்பினும் அவர் அழிவே எய்துவர்.

குறிப்புரை :

`பகையாகிய தீக்குணம் அழிவைத் தருதலல்லது ஆக்கத்தைத் தாராது` என்பது உணர்த்துதற்குத் தேவாசுரரது நிலைமையை எடுத்துக் காட்டினார். `இவ்வாறு எவ்விடத்தும் தீமையையே பயக்கும் பகை, சிலரது உள்ளத்தில் சிவபிரானைப் பற்றித் தோன்றின், அவர் பெருந்தீங்கிற்கு உள்ளாதல் சொல்ல வேண்டுமோ` என்பது பின்னிரண்டு அடிகளால் பெறப்படும் கருத்து.
தேவர்கட்கு இறப்பில்லையாயினும், இறந்தாரொடு ஒப்பக் கரந்துறைதலும், அசுரர்க்கு அடிமைசெய்து நிற்றலும் ஆகிய நிலையை இறத்தலாக வைத்துக் கூறினார். ``எப்பகையாகிலும் எய்தார்`` என்றது, `உள்ளத்தில் சிறிது பகையும் இல்லாதவர்` என்றவாறு. தமக்குப் பகையில்லையாயினும், பகைகொண்டாரைத் திருத்தும் வலியின் மையால் தாமும் பகைகொண்டு சிவபிரானை இகழ்வார்போல நிற்பார் அழிதற்கு, தக்கன் வேள்வியில் சென்றிருந்த தேவர்களே சான்றாவர். `எய்தாரும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், எளியன் என்று எண்ணும் எண்ணத்தினாலன்றிப் பகையால் சிவநிந்தை செய்தலின் குற்றமும், அச்செயலுக்கு உடன் படுதலின் குற்றமும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

போகமும் மாதர் புலவி யதும்நினைந்
தாகமும் உள்கலந் தங்குள ராதலின்
வேதிய ராயும் விகிர்தனாம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பொழி வாரே. 

பொழிப்புரை :

வேதத்தை ஓதும் உரிமை பெற்றமையால் `வேதியர்` எனப் பெயர்பெற்றிருந்தும் சிலர், மகளிர் இன்பத்தில் பற்று நீங்காமையால், சிவபெருமானை வழிபட நினையாமல், பிற தெய்வங் களை வழிபடுதலில் முனைந்து நிற்பர்.

குறிப்புரை :

``வேதியராயும்`` என்பதனை முதலிற் கொள்க. ``மாதர்`` என்பது தாப்பிசையாய் நின்றது. `மாதரது போகத்தையும் புல வியையும் நினைந்து தமது நெஞ்சேயன்றி உடம்பும் அவர் வசப்பட்டு கிடக்கின்றாராதலின், நினைப்பொழிவார்` என்க. விகிர்தனாம் நீதி - உலகியலுக்கு வேறுபட்ட முறைமை. அது, மணிமுடி சூடாது சடைமுடி தாங்குதல், பொன்னாலும் மணியாலும் இயன்ற அணிகளை அணியாது எலும்பும் தலையும் பாம்பும் அணிதல், சந்தனம் குங்குமம் பூசாது சாம்பலைப் பூசிக் கொள்ளுதல், பட்டும் துகிலும் உடுத்தாது தோலை உடுத்தும் போர்த்தும் நிற்றல், யானை குதிரை சிவிகைகளில் ஏறாது எருதின்மேல் ஏறிவருதல் முதலிய ஒழுகலாறு. இதுபற்றி `அவன் இகமும் பரமுமாய செல்வம், இன்பம், வெற்றி என்பவற்றை அருள வல்லனல்லன்` என விடுத்து, அவற்றின் பொருட்டு அவனின் வேறாய ஒரு தெய்வத்தையோ, பல தெய்வங் களையோ அன்போடு வழிபடும் அறியாமையுடையார் வேதியருள்ளும் சிலர் உள்ளனர் என்பது பின்னிரண்டடிகளில் கூறப்பட்டது. எனவே, ``இது கற்றறி வுடையார்க்குச் சிவநிந்தையாம்`` என்பதும், ``இந்நிந்தையால் அவர் விரும்பிய பயன் கைகூடாமையேயன்றி, அவற்றிற்கு நேர்மாறாய தீங்கு விளைதலும், ஒரோவொருகால் பயன் கைகூடினும் அது நிலை பெறாது இடையே நீங்குதலும் உளவாம்`` என்பதும் கூறியவா றாயிற்று. இவற்றிற்கு, அமுதம் வேண்டிக்கடலைக் கடைந்த தேவர்க்கு ஆலகால விடம் கிடைத்ததும், நூறுபரிமேத வேள்வி செய்து இந்திர பதவியை அடைந்த நகுடன் அதனை ஒருநொடியில் இழந்து மலைப் பாம்பாய் நெடுங்காலம் இன்னலுற்றதும் போல்வனவாகிய வரலாறுகள் சிறந்த எடுத்துக் காட்டாதல் அறிக. `வேதத்தை ஓதும் வேதியர் தாமே அதன் விழுப் பொருளை உணரமாட்டாது இன்ன ராவார் எனின், ஏனையோரைப் பற்றிச் சொல்லவேண்டுமோ` என்ற வாறு. இவ்வேதியர் சுமார்த்தரும், வைணவரும் போல்வார் என்க. ``நீதியுள் நின்று`` என ஒருசொல் வருவிக்க.
``சிவபெருமான் முத்தியைக் கொடுப்பவன்`` என்பது எங்கும் எடுத்துச் சொல்லப்படுதற்குக் கருத்து, ``முத்தியை அவனன்றிக் கொடுப்பவர் பிறரில்லை`` என்பதேயன்றி, அவன் அதனிற் பன் மடங்கு சிறுமையுடையனவாய இகபர நலங்களை அருளமாட்டான் என்பதன்று. இது செயற்கரியவற்றைச் செய்யவல்லார் செயற்கெளிய வற்றைச் செய்தல் தானே பெறப்படும் முறைமை பற்றி விளங்குவதாம். இம் முறைமையை விளக்குதற்கு, `தண்டா பூபிகா நியாயம்` (தண்டம் - கழி. அபூபம் - பணியாரம். `பணியாரத்தைப் பூனை வந்து விழுங்காதிருத்தற்கு அதனை ஒரு கழியில் கட்டி வைத்திருக்க, ஒரு பூனை அந்தக்கழியை விழுங்கிவிட்டது என்பது அறியப்பட்டால், பணியாரத்தை விழுங்கியது என்பது தானே அமைதல்போல` என்பதே தண்டா பூபிகா நியாயம். மற்றைப் பூனைகளால் விழுங்கமுடியாத கழியை ஒரு பூனை விழுங்குமாயின், அது மற்றைப் பூனைகளால் விழுங்கத்தக்க பணியாரத்தை எளிதின் விழுங்குதல் தானே பெறப்படுதல் போலப் பிற கடவுளால் தரமுடியாத முத்தியைச் சிவபெருமான் கொடுப்பன் என்றால், அவன் பிற தெய்வங்களால் தரப்படுகின்ற இகபர நலங்களை எளிதின் வழங்குதல் தானே பெறப்படும் என்பது இங்குக் கொள்ளத்தக்கது.) என்றொரு நியாயம் கூறுவர் நியாய நூலார்.
இக்கருத்துப்பற்றியே திருமுறைகளில்,
``சிவபுரம் நினைபவர் திருமகளொடு திகழ்வரே, செயமகள் தலைவரே, கலைமகள் தர நிகழ்வரே, எழில்உரு உடையவர்களே, சிவபுரம் நினைபவர் புகழ்மிகும் உலகிலே, குலன் நிலனிடை நிகழுமே, வழி புவிதிகழுமே`` -தி.1ப.21
``அன்பன்அணிஆரூர் - நன்பொன் மலர்தூவ -
இன்பம்ஆகுமே``

``ஐயன்அணிஆரூர் - செய்ய மலர்தூவ -
வையம் உமதாமே`` -தி.1ப.91
``நீலமாமிடற் - றாலவாயிலான் - பாலதாயினார் -
ஞாலம் ஆள்வரே``
``அண்ணல் ஆலவாய் - நண்ணினான்றனை - எண்ணியேதொழத் - திண்ணம்இன்பமே``
``அம்பொன் ஆலவாய் - நம்பனார்கழல் -
நம்பிவாழ்பவர் - துன்பம் வீடுமே`` -தி.1ப.94
``அண்ணல் மருதனைப் பண்ணின் மொழிசொல்ல விண்ணுந்தமதாமே``
``எரியார் மருதரைத் தரியா தேத்துவார்
பெரியார் உலகிலே``
``எந்தை மருதரைச் - சிந்தை செய்பவர் - புந்தி நல்லரே``
``மறையார் மருதரை - நிறையால் நினைபவர் -
குறையார் இன்பமே`` -தி.1ப.95
``அரவன் அன்னியூர் - பரவுவார் விண்ணுக் -கொருவ ராவரே`` -தி.1ப.96
என்றாற்போல்வன பலவும் ஆங்காங்குப் பலபட எடுத்துக் கூறப் படுகின்றன. எனினும் வேதியரேயாயினும், இன்னோரன்ன அருள் முழக்கங்கள் செவியில் ஏறப்பெறுதலும், அவற்றில் தெளிவுண் டாதலும் முன்னைத் தவத்தாலன்றி ஆகாவாம்.
இனி, முத்தி சிவபெருமானால் அன்றிப் பிறரால் தரப் படாமையை,
பரசிவன் உணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும் விரவிய துயர்க்கீ றெய்தி வீடுபே றடைதும் என்றல்
உருவமில் விசும்பின் தோலை உரித்துடுப் பதற்கொப் பென்றே பெருமறை இயம்பிற் றென்னில் பின்னுமோர் சான்றுமுண்டோ.
-கந்த புராணம் - தட்ச காண்டம் - உபதேசப் படலம் , 25 மானுடன் விசும்பைத் தோல்போற் சுருட்டுதல் வல்ல னாயின் ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடும் எய்தும்;
மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே
ஆனமர் இறையைக் காணும் உபாயமே அறிதல்வேண்டும்.
-காஞ்சிப் புராணம், சனற்குமார படலம், 43
அவனவ ளதுவெனு மவைதொ றொன்றுமிச்
சிவனலால் முத்தியில் சேர்த்து வாரிலை;
துவளரும் இம்முறை சுருதி கூறுமால்;
இவனடி வழிபடின் முத்தி எய்துவாய்.
-காஞ்சிப்புராணம், திருநெறிக்காரைக் காட்டுப் படலம், 29
என்றாற்போல்வனவற்றால் நன்கறியப்படும். வீடாவது பிறவி யறுதலேயாகலின், `அதனைப் பிறவியுடைய வேறு சிலரும் தருவர்` என்றல் பேதைமைப்பாலதேயாம். இவற்றுள், `சுருதி என்றது அதர் வணவேதம்` என்பது காஞ்சிப் புராண வயிரவேசப் படலத்துள் கூறப்பட்டது.
இதனால், பேதைமையால் சிவபெருமானை இகழ்தலும் குற்றமாதல் கூறப்பட்டது.
சிற்பி