இரண்டாம் தந்திரம் - 25. பெரியாரைத் துணைக்கோடல்


பண் :

பாடல் எண் : 1

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
கூடவல் லாரடி கூடுவன் யானே. 

பொழிப்புரை :

சிவபிரானை அடைய விரும்பிய யான், பத்தி காரணமாக, அவன் வெளிப்படும் இடங்கட்கெல்லாம் ஓடியும், அவனையே புகழ்ந்து பாடியும் இன்னோரன்னவற்றால் அவனை அடையவல்லாரது அடிநிழலைப் பிரியாது சேர்ந்திருப்பேன்.

குறிப்புரை :

எனவே, ``அச் சேர்ச்சிதானே அவனை அடை விக்கும்`` என்பதாம். ``ஓடவல்லார், பாடவல்லார்`` என்றதும் கூட வல்லார் கூடுமாற்றை விதந்தவாறேயாம். ஆகவே, `நடாவுவன், வாழ்குவன்` என்பனவும். ``கூடுவன்`` என்றதனை வகுத்தோதியவாறாம். `ஓட வல்லாராகிய தமர்` என்க. `சிவனையடைய விரும்புவார்க்கு அவனடியவரே உறவினர்` என்பதை`
`உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்``
-தி.6 ப.98 பா.4
என்பதனாலும் அறிக. `ஓலியொடு` என உருபு விரிக்க. ஒலியொடு வாழ்தலாவது தாமும் அவரொடு சேர்ந்து பாடுதல். பாடவல்லாரை. ``பரமனையே பாடுவார்``(தி.7 ப.39 பா.10) எனத் திருத்தொண்டத் தொகையுள் அருளிச் செய்தமை காண்க. `பாடவல்லாரொடு` என்றே பாடம் ஓதுதலும் ஆம். தேடுதல் - அடையுமாற்றாலெல்லாம் முயலுதலும். ``ஓட வல்லார்`` முதலிய நான்கும், பெரியாராவாரது இயல்பு இவை என்றவாறாம்.
பாடிற் றிலேன்;பணி யேன்; மணி நீயொளித்
தாய்க்குப்பச்சூன்
வீடிற் றிலேனை விடுதிகண் டாய்; வியந்
தாங்கலறித்
தேடிற் றிலேன், சிவன் எவ்விடத் தான் எவர்
கண்டனரென்
றோடிற் றிலேன்;கிடந்துள்ளுரு கேன்;நின்
றுழைத்தனனே. -தி.8 நீத்தல், 45
என்றதனையும் நோக்குக. இங்கு, கூடவல்லார் அடி கூடுவன் என்றாற் போலவே,
``கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே`` -தி.6 ப.96 பா.10
``... ... ... ... ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே`` -தி.7 ப.75 பா.1
என்றற்றொடக்கத்தனவாக வருவன பலவற்றுள்ளும் அடியார்க்கு அடியவராதலே சிறந்தெடுத்துப் பேசப்படுதல் அறிக. ``யான்`` என்றது இசையெச்சத்தால், ``சிவபிரானை அடைய விரும்பிய யான்`` எனப் பொருள் தருதல் காண்க.
இதனால், ``பெரியாரைத் துணைக்கோடலே இறைவனை அடைவிக்கும்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப்பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னொடும் போதுகண் டாயே. 

பொழிப்புரை :

நெஞ்சே, நீ உன்னை அகப்படுத்துகின்ற துன்பத்தில் அகப்பட்டுத் தீயில் வீழ்ந்த தளிர்போல் வாட்டமுற்றாலும் சிவபெரு மானிடத்து அன்பு வைத்திலை. இவ்வாறு அத்துன்பத்திலே இருந்து நீ என்ன செய்யப் போகின்றாய்? நான் போகின்ற இடத்திற்கு நீயும் என்னோடு வா.

குறிப்புரை :

`தாவும்` என்னும் பெயரெச்சத்து உகரம் கெட்டது. தாவுதல் - அகப்படுத்தல். ``தளிர்போல்`` என்றாராயினும், தீயில் வீழ்ந்த தளிர்போல்`` என்றல் கருத்தாதல் அறிக. நெஞ்சை முன்னிலைப் படுத்தமையின், அதற்கும் ஒரு மனம் இருப்பது போலக் கூறினார். ``என் செய்வாய்`` என்றது, ``வேறு பயன் என்ன பெறப் போகிறாய்`` என்றவாறு. ``பெறுவது ஒன்று இன்மையால் என்னொடு வருதலால் இழப்பில்லை`` என்பதாம். ``சிறியார் பெரியாரை அணுக வாரார்`` என்பது தோன்றுதற்குப் ``பெரியோரிடத்து`` என்னாது, ``போமிடத்து`` எனப் பொதுப்படக் கூறினார். `போந்தால் அத்துன்பம் நீங்கும் `என்பது குறிப்பெச்சம். ``கண்டாய்`` முன்னிலை அசை. இத் திருமந்திரத்துள் மூன்றாம் அடி உயிர் எதுகை பெற்றது.
இதனால், `பெரியாரைத் துணைக் கொள்வார்க்குத் துன்பம் நீங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே.

பொழிப்புரை :

அறிவுடைய பெரியோர், தேவர்க்குத் தலைவ னாகிய சிவபிரானை அடையும் வழிகளை யெல்லாம். ஆராய்ந்து; அவற்றானே அவனை அடைவர். பின்னர் அவனேயாய் நிற்பர், ஆதலின், தாமும் நன்னெறியில் உறைத்துநின்று, பிறரையும் அவ்வாறு நிற்கச்செய்து உலகிற்கு நயம்புரிகின்ற பெரியாருடன் கூடுதலே பேரின்பம் எய்துவதற்கு வழியாகும்.

குறிப்புரை :

`அறிவார் செறிவார்` எனவும், `நெறி நின்று` எனவும் இயையும். `ஆதலின்` என்பது சொல்லெச்சம். பேரின்பத்தைத் தருவதனைப் பேரின்பம் என்றார்.
இதனால், பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பத்தைத் தருதல் காரணத்துடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாழ்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழால்எந்தை பொன்னடி சேருவார்
வாயடையா உள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறி கூடலு மாமே. 

பொழிப்புரை :

நீண்ட சடையை உடைய சிவபெருமானுக்கு அடி யவராயினமையினால் உலகம் முழுதும் போர்த்த புகழை உடையவ ராய், அப்பெருமானது அழகிய திருவடியையன்றிப் பிறிதொன்றையும் அடைய விரும்பாதவராகிய அவரிடத்துச் சென்று சேர்ந்து உள்ளம் தெளிவடைபவரிடத்துச் சிவபெருமான் அருளுடையவனாவன். அதனால், அவன் அருள் புரியும் நெறி வாய்க்கப் பெற்று. அவனோடு ஒன்றுதலாகிய பேற்றினையும் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``தார் சடையான்`` என்பது பாடம் அன்று. ``போர் புகழ்``, வினைத்தொகை. ``வாய்`` என்றது ஏழனுருபு. ``கோ அருள் செய்யும்`` என மாற்றுக. ``அந்நெறி அடைந்து (அவனைக்) கூடலும் ஆம்`` என்க. இத்திருமந்திரத்துள் இன எதுகை வந்தது.
இதனால், பெரியாரைத் துணைக்கோடல், பிரானருளைப் பயத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழலான் பதிசென்று புக்கே
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே. 

பொழிப்புரை :

சிவபெருமான் அடியவர் யாவரும் தம்மைப் போலும் அடியாருடன் கூடியே சிவபுரத்தை அடைந்து அதன் வாயிலில் நின்றனர். அப்பொழுது அவ்வாயிலில் உள்ள கணங்கள் சிவபெருமானிடம் சென்று, `அடியவர் குழாமாக வந்துள்ளனர்` என்று விண்ணப்பிக்க, அப்பெருமான், `அவர்கள் உள்ளே வருவாராக` எனத் திருவாய் மலர்ந்தருள, அவ்வருளிப்பாட்டினை அக் கணங்களால் உணர்ந்து, `முறையோ` என்று ஓலமிட்டுச் சென்று தம் குறை தீர்ந்தனர்.

குறிப்புரை :

என்றது, ``சிவனடியார்கள் பலரும் பெரியாரைத் துணைக்கொண்டே அவனை அடைந்தார்கள்`` என்றபடி இதற்குச் சேரமான்பெருமாள் நாயனார் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டாகும். படை - சூலம். ``படையும், ஆரழலும் உடையவன்`` என்க. ``புக்கு, அறிவிப்ப`` என்னும் எச்சங்கள் இரண்டும், ``என்றார்`` என்பதனோடு முடிந்தன. அடியாருடன் புக்கே` என்ற ஏகாரம், தனித்துப் புகாமையை விளக்கி நின்றது.
இதனால், சிவனை அடைதற்கு அவனை அடைந்த பெரியாரைத் துணைக்கோடல் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அருமைவல் லான்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந் துழி யிருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 

பொழிப்புரை :

எல்லாம் வல்லவனாகிய சிவபெருமானை உணர்த் தும் நூலறிவினால் வருகின்ற பெருமையை உடைய கலைஞன், காலக் கழிவின்கண் பிறவிக் கடலைக் கடந்து சிவபெருமான் திருவடியை அடைவான். அந்நூலறிவைத் தன தாக்கிக் கொள்ளும் அனுபூதிமான், அப்பொழுதே சிவனைப் பெற்று, உலகம் உள்ளளவும் வாழ்வான். ஆகையால் சிவமே பெறும் திரு நெறியொழுக்கம் வல்ல சிவானுபூதிச் செல்வரோடேயான் சேர்ந்திருக்கின்றேன் (தி.8 திருச்சதகம்).

குறிப்புரை :

அருமை வல்லான் - பிறரால் ஆகாதவற்றையும் செய்ய வல்லவன்; சிவபெருமான். வல்லான் கலை என்னும் ஆறாவதன் தொகை ``வனைகலத்தது திகிரி`` என்பதுபோல, செயப்படுபொருள் ஆகிய காரகத்தின்கண் வந்தது. `ஞானத்துள்` என்றது வேற்றுமை மயக்கம். ``தோன்றும்`` என்றது எச்சம். ``நீந்தும், இருக்கும்`` என்ற செய்யுமென் முற்றுக்கள் எதிர்காலம் உணர்த்தி நின்றன. `ஆகையால்` என்பது சொல்லெச்சம். ``திருமை`` என்பதில் ``மை`` உடையராந் தன்மை குறித்து நின்றது. ``யானே`` என்ற பிரிநிலை ஏகாரம் ``வல்லாரொடு`` என்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டது. அதனால், ``அவரொடு சேர்தல் பெரும்பயன் உடைத்தாதல்`` விளங்கிற்று.
இதனால், ``பெரியாருள்ளும் மிகப் பெரியாரைத் துணைக் கொள்ளுதல் பெரும்பயன் தரும்`` என்பது கூறப்பட்டது.
இங்கு உரைத்தவாற்றானே இறுதியிரண்டு அதிகாரங்களும் பொது அறம் ஆகாது ஈண்டே கூறுதற்குரிய சிறப்பறம் ஆதல் அறிந்துகொள்க.
சிற்பி