மூன்றாம் தந்திரம் - 3. நியமம்


பண் :

பாடல் எண் : 1

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே. 

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

பொழிப்புரை :

சிவபெருமானைச் சத்தியோடு உடனாய் நிற்பவனாக உணர்பவனே நியமத்தில் நிற்க வல்லவனாவான்.

குறிப்புரை :

`சிவபெருமானது ஒறுக்கும் ஆற்றலையும், அருளும் ஆற்றலையும் உணர்பவனே இயம நியமங்களில் நிற்க வல்லவ னாவான். ஆயினும், இயமத்தையும் அன்பின் வழிக்கொள்ளுதலே சிறப்பு என்பார் இதனை இங்குக் கூறினார். இயமம் இறைவனது ஒறுப்பிற்கு அஞ்சும் அச்சத்தினாலும், நியமம் அவனது அருளை விரும்பும் அன்பினாலும் ஆகற்பாலனவாதலை அறிந்துகொள்க.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச்செய்தார்.
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள் யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு.
என்றார் குமரகுருபர அடிகள். அங்கி - அக்கினியாய் நிற்பவன். நீதி - நடுவுநிலைமை; அஃதாவது பொல்லார்க்கும், நல்லார்க்கும் தெறலும், அளியும் அவரவர் செயலுக்குத் தக்காங்கு செய்தல். உடன் நீதி - உடனாய் நின்று செய்யும் நீதி. ``அளி, தெறல் இரண்டும் கருணையே`` என்றற்கு, பராசத்தியோடு உடனாய் நிற்றலை எடுத்தோதினார்.
இதனால், இயம நியமங்கள் வருமாறு கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புகளில் காணப்படும், ``தூய்மை அருளூரண் சுருக்கம்`` என்ற பாடல் இயமத்தையே கூறுதலானும், அதன் பொருள் மேலே, ``கொல்லான் பொய் கூறான்`` என இயமத்துள் கூறப்பட்டமையானும், மூன்றாம் அடிப் பொருத்த மற்றதாகக் காண்கையிலும் அது பிறர் பாடலாதல் அறியப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

பொழிப்புரை :

தவம் முதலாக மதி ஈறாகச் சொல்லப்பட்ட பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.

குறிப்புரை :

தவம், நெறிப்பட்ட வாழ்க்கை. செபம், வாய்ப்புப் பெற்றுழி மந்திரங்களை மிகுதியாகக் கணித்தல், ஆத்திகம், நூல்களில் சொல்லப்படும் கடவுள், இருவினை, மறுபிறப்பு, துறக்க நிரையங்கள் உள்ளன என உணரும் உணர்வு. சந்தோடம், `உள்ளது போதும்` என்னும் உள்ள நிறைவு. தானம், பொருளை நல்வழியில் ஈட்டி, உயர்ந்தோர்க்குக் கொடுத்தல். சிவன் விரதம், சிவனுக்குரிய சிறப்பு நாள்களில் தவச்செயல்களை மிகச் செய்தல். சித்தாந்தக் கேள்வி, சிவாகமங்களின் ஞானபாதப் பொருளைக் கேட்டல். மகம், இயன்ற பொழுது தீ வேட்டலைச் செய்தலும், செய்வித்தலும். சிவபூசை, சிவலிங்க வழிபாட்டினை இன்றியமையாததாகக் கொண்டு, விடாது செய்து வருதல். ஒண்மதி, நற்பண்பு. நியமமும் இவ்வாறு ``பத்து`` என வரையறுத்து ஓதப்படினும், இவை போல்வன பிறவும் கொள்ளப்படும் என்க. நிவம் - நிபந்தம். மகம், உயிரெதுகை.
இதனால், நியமம் சிறப்பாகப் பத்தாதல் கூறப்பட்டது. இதனை,
பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல்
கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை
பூசனைப் பெரும்பயன் ஆசாற் களித்தலொடு
நயனுடை மரபின் நியமம் ஐந்தே.
என்றார் நச்சினார்க்கினியர்
சிற்பி