மூன்றாம் தந்திரம் - 6. பிரத்தியாகாரம்


பண் :

பாடல் எண் : 1

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

பொழிப்புரை :

மனத்தை அகநோக்கிலே காணத்தக்க ஆதார நிலைகளைக் கண்டு கண்டு நிற்குமாறு அடக்கினால், அங்குத்தானே களிப்புப் பெற்று பயன்கள் பலவற்றை அடையலாம். முடிவில் பழைய வேதங்கள் எல்லாம் காண விரும்பிப் பண்டு தொட்டு எங்கும் சென்று தேடியும் காணாத சிவனை இன்றே, இவ்விடத்தே கண்டு, அமைதி யோடு இருத்தலும் கூடும்.

குறிப்புரை :

`கருத்தினை உள்ளே கண்டு கண்டு உறவாங்கிடின்` என மாறிக் கூட்டுக. காணுதல், கொள்ளுதல். இவற்றிற்குச் செயப்படு பொருள்கள் வருவிக்கப்பட்டன. ஆதார நிலைகள் இனிக் கூறப்படும். ``குணம்`` என்பது, ``கோளில் பொறியிற் குணமிலவே`` (குறள், 9) என்பதிற் போல, `பயன்` எனப் பொருள் தந்தது, தேடி - தேடப்பட்டவன்.
இதனால், பிரத்தியாகாரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 

பொழிப்புரை :

உந்திக்குக் கீழ்ப்பன்னிரு விரற்கிடையளவில் உள்ள இடத்தில் மனத்தை நிலைபெறச் செய்வதாகிய இரகசிய முறையை உலகர் அறியார். அதனை அறிந்து மனத்தை அங்கே நிறுத்துவராயின், இறைவன் தானே வந்து அவர்களைத் தன்பால் வர அழைத்து, அங்கு வீற்றிருப்பான்.

குறிப்புரை :

இதில் குறிக்கப்பட்ட இடம் `மூலம்` (அடிநிலை) எனப்படும். இது முதல் ஆதாரம், இஃது எருவாயுமன்று; கருவாயு மன்று; இரண்டிற்கும் இடைப்பட்ட இடம் என்பது பின்னர் இனிது விளங்கும். தாபித்தல் நிலைபெற வைத்தல். அவ்வாறு வைப் பதனையே ``மந்திரம்`` என்றாராகலின், ``தாபிக்கும்`` என்ற பெய ரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``மந்திரம்`` என்றது, `இரகசியம்` என்னும் அளவாய் நின்றது. இனி, `மந்திரம்` என்றே பொருள் உரைப்பின், ``அறிகிலர்`` எனப் பிறரை இகழ்கின்ற நாயனார், தம் மாணாக்கர்க்கு அதனை அறிவியாது வாளாபோதல் அடாதாம். அன்றியும், இஃதொன்றற்கே யன்றி ஏனைப் பலவற்றிற்கும் மந்திரம் உண்மையின் அவ்விடங்களிலும் அவற்றைக் கூறல் வேண்டும்; அவ்வாறு கூறிற்றிலர். இனி, மந்திரமே யன்றி அதிதேவர், அக்கரம், அடையாளம் முதலாக மற்றும் பல உள ஆகலின், அவற்றையும் குறியாது போதல் குன்றக் கூறலாம். அங்ஙனமாயின், அவையும் எடுத்தோதற் பாலனவாகலின் அவற்றை அவ்வாறு ஓதாதுபோதல் என்னை எனின், அவையெல்லாம் யோகத்துட் கிரியையேயாய், நூல்கள் தோறும், மரபு தோறும் வேறு வேறாகக் கொள்ளப்படும் வழி பாட்டு முறைகளேயாதலால், சிவநெறியாளர் அனைவர்க்கும் பொதுப் பட அருளிச் செய்யும் இந்நூலூல் அவற்றுட் பொதுவாவன சிலவற்றை யன்றி ஏனையவற்றை வரையறுத்தோதுதல் ஆகாமையின், ``அவற்றை அவரவர் தம் தம் வாய்ப்பிற்கு ஏற்பப் பெற்றுக் கடைப்பிடிக்க`` என்னும் கருத்தால் வாளா போகின்றார்; ஆதலின், அது நாயனார்க்குக் குற்றமாதல் எங்ஙனம் என்க. சைவாகமங் களுள்ளும் இவற்றுட் சிலவற்றை வேறு வேறாகக் கூறப்படுதற்கும் காரணம், `இவை யெல்லாம் சில வழிபாட்டு முறையே`` என்னும் கருத்தினாலேயாம்.
யோகமும், மன ஒருமைக்கும், ஆன்ம பரிபக்குவத்திற்கும் உரிய ஒரு சாதனமேயன்றிப் பொருளியல்பை உள்ளவாறுணரும் தத்துவ ஞானம் (மெய்யுணர்வு) அன்று` என்பது உணரமாட்டாதார், யோகத்தையே, ``ஞானம்`` என மயங்கி, ஒரு நெறியையே பற்றிப் பிற வற்றை இகழ்வர், இங்கு யோகத்தை உணர்த்தும் நாயனார், பின்னர் ஞானத்தையே முடிவாக உணர்த்துதல் காண்க.
இவ்வாறாயினும், இவ்வழிபாட்டு முறைகளுள் சிலவற்றை இவ்வதிகாரத்திறுதியில் சிறிது காண்போம். பிற அறங்களினும், பிற தெய்வ வழிபாட்டினும், சிவதன்மமும் சிவ வழிபாடும் வேறாதல் போலப் பிற யோகங்களினும் சிவயோகம் வேறு, சரியை முதலிய நான்கனுள் மூன்றாவதாகிய யோகம் சிவயோகமே என்பது உணர்க. முதல் மூன்று அடிகளிலும் வடவெழுத்துப் பகரம் தமிழில் வகரமாய்த் திரிந்தது.
இதனால், பிரத்தியாகாரத்தில், `மூலாதாரம்` என்னும் முதல் ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. 

பொழிப்புரை :

எருவாய்க்கு இருவிரற்கிடைமேலாகவும், வெளியே தோன்றி நின்று கருவைப் பயக்கும் கருவாய்க்கு இருவிரற்கிடை கீழாகவும் நிற்கின்ற வட்ட வடிவான குண்டலி சத்தியுள் தோன்றுகின்ற செவ்வொளியின் இடம், உந்திக்கு நான்கு விரற்கிடை கீழே உள்ளது.

குறிப்புரை :

இங்கு``மூலம்`` என்றது எருவாயை. எனவே, இஃது ஆதாரங்களுள் முதலாவதாகிய மூலாதாரத்தினை இனிது விளங்கக் கூறியதாயிற்று. ஞாலம் - பூமி; இடம். இதில் `அத்து` வேண்டாவழிச் சாரியை, ``குண்டலி`` எனப்படுவது சுத்த மாயையில் தோன்றும் எழுத் தோசையாகிய நாதமே. இதற்கு வட்டமே வடிவாகக் கொள்ளப்படு தலின், ``குண்டலி`` எனப் பெயர் பெற்றது. ``கோலித்த`` என்றதும் இதன் வடிவைக் குறித்ததேயாம். ``வட்டமாய் வளைந்து நிற்பது`` என்பது பற்றி, இது பாம்பாக வைத்துப் பாவிக்கப்படுகின்றது. இது பற்றியே உலகத்துப் பாம்பையும் வழிபாட்டிற்கு உரியதாகக் கருதும் வழக்கம் உளதாயிற்று. உண்மையாகச் செய்யும் வழிபாடு யாதா யினும், அதற்குப் பயன் தருபவன் சிவபெருமான் என்பதை நினைவு கூர்க.
``குண்டலி எனப்படும் பாம்பு ஐந்து தலைகளை உடையது`` என்றல், வாக்குகள் சுத்த மாயையின் பஞ்ச கலைகளில் விருத்திப் பட்டு நிற்றலைக் குறிப்பது. சிவாலயங்களில் சிவலிங்கத்திருமேனிக்கு ஐந்து தலைப்பாம்பைக் கவசமாகச் சாத்தி வழிபடுதலும் சிவபெருமான் தனது சத்தி நிவிர்த்தி முதலிய ஐந்தாகிச் சுத்தமாயையின் ஐந்து கலை களிலும் நிற்க, அவ்விடங்கள் எல்லாவற்றிலும் சிவன் நிற்றலையே குறிக்கும்.
மந்திரங்கள் அனைத்தும் நால்வகை வாக்கு வடிவமாகிய சுத்த மாயையின் காரியங்களே. அக் கருத்து விளங்குதற் பொருட்டு, `அனைத்து மந்திரங்கட்கும் மூலமாகிய ஓங்காரமே குண்டலி சத்தி`` என்பர். நால்வகை வாக்கினாலேயே யாவர்க்கும் பொருளுணர்வு உண்டாகின்றது. அவ்வுணர்வு ஆணவத்தின் சார்பால் உலகப் பொருள்களையே உணர்ந்து நிற்குங்காறும் ``அறிவு`` எனப்படாது ``அறியாமை`` என்றே சொல்லப்படும். அதனால், உலகர் எல்லாரிடத்தும் உள்ள குண்டலி சத்தியாகிய பாம்பு, கண்ணை விழியாது உறங்கிக் கிடப்பதாகின்றது.
உலக நடையிலும் அறிவு புருவ நடுவாகிய மேலிடத்திலும், அறியாமை மூலாதாரமாகிய கீழிடத்திலும் உள்ளன என்பதால், ``குண்டலிப் பாம்பு தனது அறிவுக்கு நிலைக்களமாகிய தலையை அறியாமைக்கு இடமாகிய மூலாதாரத்திலும், அறிவுக்கு நிலைக் களமாகாத வாலை அறிவுக்கு இடமாகிய நெற்றியிலும் வைத்துத் தலைகீழாகக் கிடந்து உறக்கத்தில் ஆழ்ந்துள்ளது`` எனவும், ``அர ணியில் அடங்கியுள்ள அக்கினி, கடைந்தபொழுது எரிந்து சுடுதல் போல, மூலாதாரத்தில் அடங்கியுள்ள அக்கினி, பிராணாயாம பிரத்தி யாகாரங்களால் மூண்டெழுந்து தாக்க, அக் குண்டலிப் பாம்பு கண் விழித்து எழுந்து தலைமேலாகவும், வால் கீழாகவும் சுழன்று, இயற்கை நிலையில் நிற்கும்`` எனவும் யோக நூல்கள் கூறும். இவற்றால் எல்லாம் பெறப்படுவது, ``யோக நெறியிற் பழகினால் உயிரினது உணர்வு புறப் பொருள்களாகிய உலகத்தைப் பற்றி நிற்றலை ஒழிந்து, உயிர்க் குயிராய் நிற்கின்ற இறைவனை உள்ளுணர்வாற் பற்றும்`` என்பதே. அதற்குச் சிறந்த துணையாவன பிரணவம் முதலிய மந்திரங்களும், பாவனைகளும், மனத்தால் அகத்தே செய்யும் வழிபாடுகளுமாகும். அவ்வழிபாடுகட்கு முதலாய் நிற்கும் திருமேனிகள் முன்பு உருவத் திருமேனியாய் நின்று, பின்பு அருவுருவத் திருமேனியாய், முடிவில் அருவத்திருமேனியாகும் என்க.
இதனுள்,``குண்டலியுள் எழும் செஞ்சுடர்`` என்றது, இறைவனது அருவுருவத் திருமேனியை, இது புறத்தே இலிங்கமாக வணங்கப்படுதல் போல, அகத்தே யோகத்தில் பேரொளிப் பிழம்பாகக் கொண்டு தியானிக்கப்படும். அதன் விளக்கம் எல்லா ஆதாரங்களிலும் நிறைந்து நிற்பதாயினும், இங்குக் குறிக்கப்பட்ட இடமே அஃது இருக்கும் இடம் என்பது இதனால் பெறப்பட்டது. இதுபற்றியே இவ்விடம் ``சுவாதிட்டானம்`` எனப் பெயர் பெற்றது. ``தனது இடம் `` என்பது இப்பெயரின் சொற்பொருள். தான், உள்ளெழும் சோதி. சோதியின் இயல்பு கீழிருந்து மேல் நோக்கி எழுவதாகலின், பிரத்தியாகாரப் பயிற்சியால் இது மேல் நோக்கி வளர்ந்து காட்டும். மூலாதாரம் குண்டலிக்கு இடமாயினமையின், அதற்கு மேலுள்ள இதுவே இச் சோதிக்கு இடமாயிற்று. இஃது இரண்டாவது ஆதாரம். இதன் இயல்பு கூறவே, ``மனத்தை மூலாதாரத்தில் நிறுத்திப் பயின்றபின், இவ்விடத்து நிறுத்திப் பயில்க`` என்றதாயிற்று.
இதனால், ``சுவாதிட்டானம்`` என்னும் இரண்டாவது ஆதார நிலை கூறப்பட்டது.
மூன்றாவது ஆதாரம் ``மணிபூரகம்`` என்பது; இஃது உந்தித்தானமே, ``மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்க`` என மேற் கூறியதனானே இதுவும் ஓர் ஆதாரமாதல் அறியப்படுதலின், இவ் விடத்தும் மனத்தை நிறுத்துதல் உய்த்துணர்வகையால் பெறப்படுதல் பற்றி எடுத்தோதாராயினார், வாயுவைக் கும்பிக்கும் சிறந்த இடமாதல் பற்றி, ``மணிபூரகம்`` எனப் பெயர் பெற்றது.

பண் :

பாடல் எண் : 4

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.

பொழிப்புரை :

மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடை கீழாக உள்ள இடத்தில் நீ மனத்தை நிறுத்தித் தியானிக்க வல்லையாயின், அட்டமா சித்திகளைத் தரும் சித்தியோகம் தானே வந்து உன்னை அடையும், உடம்பிற்கும் அழிவு இல்லையாகும்.

குறிப்புரை :

மூக்கிற்குப் பன்னிரு விரற்கிடைக்கீழ் உள்ளது இருதயத் தானம், இஃது `அனாகதம்` எனப்படும்; `வரவற்றது` என்பது இப் பெயரின் பொருள். மனத்தின் இடம் இதுவே` என்பது கருத்து. `இவ் வளவிலே சிவயோகமல்லாத பிற யோகங்கள் கைவரும்` என்பதையே பின்னிரண்டடிகள் உணர்த்தின. அட்டமாசித்திகளைப் பயனாக உடைய யோகம் `ஹட யோகம்` எனவும், உடம்பு நரை திரை மூப்பு இன்றி நெடுங்காலம் நிற்றலைப் பயனாக உடைய யோகம் `ராஜயோகம்` எனவும் சொல்லப்படும். இவையெல்லாம் ஞானத்தைப் பயவாமை மாத்திரையேயன்றி, அதற்குத் தடையாவனவுமாம்; ஆதலின், ஞானத்தை விரும்புவோர் இவற்றை விரும்புதல் இல்லை. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்து எதுகை.
இதனால், `அனாகதம்` என்னும் நான்காவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே. 

பொழிப்புரை :

`சுவாதிட்டானத்தில் உள்ளது` என மேலே சொல்லப் பட்ட பேரொளி, உங்களுக்குக் கீற்றுப்போன்ற விளக்கொளியாகப் புலப்படுமாயின், `அப்பொழுதே பேரின்பம் கிடைத்து விட்டது` எனக்கொண்டு, அவ்வொளியை நோக்குதலையே குறியாகக் கொள்ளுங்கள். இருதயத்திற்கு அடுத்ததானமாய் விளங்குகின்ற கண்டத்தில் (மிடற்றில்) நிலைத்துள்ளதாகிய அவ்வொளியைத் தலைப் பட்டால், அதன் பயனாகச் சொல்லப்படுவது, அதுகாறும் கண்டறியாத ஒரு புதிய இன்ப அனுபவமாம்.

குறிப்புரை :

இங்ஙனங் கூறவே, `ஞான நாட்டம் உடையோரே முற்கூறிய நிலையின் மேலும் முயன்று இவ்வொளியைக் காண்பர்` என்பதும், `அந்த நாட்டம் இல்லாதோர் முற்கூறிய நிலையோடே நின் றொழிவர்` என்பதும் பெறப்பட்டன. கண்டம் `விசுத்தி` எனப்படும். `மிக்க தூய்மை` என்பது இதன் பொருள். ஞான நெறியிற், செல்லும் முதல் இடமாதல் பற்றி இப்பெயர் பெற்றது. `நிலவொளி` வினைத் தொகை. ``ஆம் அதுவே`` என்பதில் `அது` என்பது எஞ்சிநின்றது.
இதனால், `விசுத்தி` என்னும் ஐந்தாவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

பொழிப்புரை :

(மாணவனே! பிரத்தியாகாரத்தில் நீ விசுத்திக்கு மேலும் செல்ல விரும்புவையாயின், கும்பகத்தால் நின்ற வாயு கீழே போகாமல்) எருவாய்ப் புழையை இறுக அடைத்து, (அவ் வாயு மேல் அண்ணத்தில் உள்ள துளை வழியாக மூக்குத் துளையை அடைந்து புறப்படுமாறு) மனத்தை அவ் அண்ணத்தின் துளையிடத்தே வைத்துப் புருவ நடுவில் நில் - அந்நிலையில் (அக்காற்று, கண் காதுகள் வழியாகவும் பரவிப் புறப்படும் ஆதலின்), கண்களை இமையும் கொட்டாமல் விழித்திரு. இதுவே நீ காலத்தை வெல்லும் முறை.

குறிப்புரை :

தந்துரைத்தன எல்லாம் இசையெச்சங்கள், புருவ நடு வாகிய இடம், `ஆஞ்ஞை` (ஆக்ஞை) என்னும் பெயருடையது. `அறிவிற்கு நிலைக்களம் என்பது இதன்பொருள். இஃது `இலாடம்` என்றும் சொல்லப்படும். இயல்பாக மூக்கின் வழியே உட்புகுந்து மீண்டும் மூக்கின்வழியே வெளிச் செல்லுகின்ற காற்றை அவ்வாறு செல்லாமல் தடுத்து நிறுத்தி, மூலாதாரத்தின் மேல் உள்ள முது கெலும்பின் அடிப்பாகத்திலிருந்து அம் முதுகெலும்பின் உள்ளால் செல்லும்படி செலுத்தினால், அது சிறிது சிறிதாக அவ்வழியே அண்ணத்தில் உள்ள துளையை அடையும். அதனை வாய்வழி வாராது தடுத்தால், உச்சியை அடைந்து மூக்கு வழியாக வெளிவரும். இந்த மாற்று வழியால் உடலுக்குப் பல நன்மைகள் உண்டாதலுடன், தொழிற்படாமலே மடிந்து கிடக்கின்ற அறிவுக் கருவிகள் பலவும் எழுச்சியுற்றுத் தொழிற்படும். அதனால், உண்மைகள் பல எளிதிற் புலனாகும். இம்முறையைத் தான், `இருவழியை (இடைகலை பிங்கலைகளை) அடைத்து, ஒரு வழியை (சுழுமுனையை)த் திறத்தல் வேண்டும்` என்று யோக நூல்கள் கூறுகின்றன. ஞானசம்பந்தரும்,
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்(து)
ஏனை வழிதிறந்(து) ஏத்துவார்க்(கு), இட
ரான கெடுப்பன அஞ்செ ழுத்துமே. -தி.3 ப.22 பா.3
என்றும்
``ஐம்புலன், நாலாம் அந்தக் காரணம்,
முக்குணம், இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை`` -தி.1 ப.128
என்றும் அருளிச் செய்தார். இவ்வாறு மூச்சை அடக்கும்பொழுது இருதயத் துடிப்பும் நிற்கலாம். ஆயினும் அஃது இருதயம் கெட் டொழிந்ததாகாது. சிறிதுபொழுது அதன் செயலை நிறுத்திவைத்து, மீட்டும் தொடங்குவதேயாகும். இது, கடிகாரத்தில் ஊசலியை - பெண்டுலத்தைச் சிறிதுபொழுது நிறுத்திவைத்து, மீட்டும் அசைய விடுவது போன்றது. இவ்வாறாகவே, இது வாழ்நாள் நீட்டிப்பதற்கு ஏதுவாதல் விளங்கும். எவ்வாறாயினும், இவையெல்லாம் முறையறிந்து செய்யாத வழிப் பெருந்தீங்கு விளைப்பனவாகவே முடியும்.
`மூச்சைப்பிடிப்பது` என்றால், முருட்டுத்தனமாக, விடாமலே பிடித்துக் கொண்டிருப்பது என்பது பொருளன்று; முறையறிந்து சிறிது சிறிதாகப் பயின்று, இயன்ற ஒரு கால எல்லை அளவேதான் பிடிக்கத்தக்கது. `சிரசாசனத்தில் இருப்பது` என்றால், ``எப்பொழுதும் அப்படியே இருப்பது`` என்பது பொருளாகாதது போலத்தான், பிராணாயாமம், பிரத்தியாகாரம் முதலிய யாவும். சிறிது நேரம் செய்த சிரசாசனம், பின் பல நேரத்திற்குப் பயன் தருதல் போலத்தான் பிராணாயாமம் முதலியவைகளும் பயன்தரும்.
மூக்கு வழியாக உட்புகுந்த காற்று மீளவும் அவ்வழியே திரும்பிப் போகாதவாறு தடுத்து, அதனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி உச்சியினின்றும் மூக்கு வழியாக மீளச் செய்கின்ற யோகிகள், தங்கள் உடலை விட்டுப் போய்விடக் கருதுவார்களாயின், உச்சியை அடைந்த காற்று மூக்கு வழியாகப் புறப்பட ஒட்டாமல் மூக்கைப் பிடிப்பர்; அதனால், அக்காற்று உச்சியில் மென்மையாக மூடப் பட்டிருக்கும் பெருந்துளையை (பிரமரந்திரத்தை)த் திறந்துகொண்டு வெளியேறிவிடும். அதனுடன் `உடல்` என்னும் இயந்திரம் செயலற்று வீழ்ந்துவிடும். இது பற்றற்ற நிலைமையில் வீடுபெறும் விருப்பத்தால் இறை நினைவுடன் செயப்படுதலின், பாவமாதல் இல்லை. யோகியர் பலர் இவ்வாற்றால் உடல் விடுத்துச் சென்றதை நூல்களால் அறிகின்றோம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, பெருமிழலைக் குறும்ப நாயனாரது செயலாகும். அதனைச் சேக்கிழார் பின் வருமாறு எடுத்தோதுவார்.
மண்ணில் திகழுந் திருநாவ லூரில் வந்த வன்றொண்டர் நண்ணற் கரிய திருக்கயிலை நாளை எய்த நான்பிரிந்து
கண்ணிற் கரிய மணிகழிய வாழ்வார் போல வாழேன் என்(று)
எண்ணிச் சிவன்தாள் இன்றேசென் றடைவன் யோகத்தால்
என்பார்.
நாலு கரணங் களும்ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏலவே முன் பயின்றநெறி எடுத்த மறைமூ லந்திறப்ப
மூல முதல்வர் திருப்பாத மடைவார் கயிலை முன்னணைந்தார்.
(மறை மூலம் - மூல மறை; மூல மந்திரம்; திருவைந்தெழுத்து. `கபால நடுவை மூல மந்திரம் திறக்க` என்க)
காலத்தை வெல்லுதல் - காலத்தால் தடைப்படாது, முக்காலப் பொருளையும் ஒருங்குணர்தல். இப்பேரறிவு பிறக்கவே, கருவி கரணங்களின் வழிச்செல்லும் ஏகதேச அறிவில் விருப்பம் நிகழாது என்க. `மேலைத் துவாரத்தில்` என்னாது, ``மேலைத் துவாரத்தின் மேல்`` என்றதனால், `நிற்றல் புருவ நடுவில்` என்பது பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

பொழிப்புரை :

சுவாதிட்டானத்தில் நின்று மூலாதாரத்திலும் ஊடுருவி விளங்குகின்ற பேரொளியைப் புருவ நடுவில் நின்று தியானிக்க வல்லவர்கட்கு, பிறப்பை நீக்குகின்ற ஞான மயனாகிய இறைவன் இரண்டற நின்று, அவரே தானாகி விளங்குவான்.

குறிப்புரை :

`பிரத்தியாகாரத்தை ஆஞ்ஞையில் செய்ய வல்ல வர்க்குச் சிவோகம் பாவனை கைவர, அவரே சிவமாய் நின்று. எல்லாம் செய்ய வல்லராவர்` என்றவாறு. முதலிரண்டடிகள், ``மூலத் திருவிரல்`` என்னும் திருமந்திரத்திற்போல மூலாதாரத்தை வரையறுத் துணர்த்தின. ``உரு விடும்`` என்ற ``விடு`` துணைவினை, ``கருவிடும்`` என்றதில் விடுதல், நீக்குதல்.
இவை இரண்டு திருமந்திரங்களாலும், `ஆஞ்ஞை` என்னும் ஆறாவது ஆதார நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

பொழிப்புரை :

மனத்தை ஒருக்குதலால், கருவி கரணங்களின் தொடக்கையும், ஆன்ம அறிவையும் வேறு பிரித்துக் காணுதலும், அவ்வாறு காணும் காட்சியையும் மெல்ல மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய இறைவனை உணர்தலும், அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடக்க முயலுதலும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.

குறிப்புரை :

இதனானே, `பிரத்தியாகாரமாவது இது, என்பது விளங்கும். ``ஒருக்கு`` பிறவினையாய முதனிலைத் தொழிற்பெயர். உபாதி - குற்றச் சார்பு; அது மாயேயத்தொகுதி, சடமாய அவையும் ஒருவாற்றால் ``சோதி`` எனப் படுமாகலின், சித்தாய ஆன்ம அறிவை, ``ஒண்சோதி`` என்றார். உணர்வு, தொழிற்பெயர். பிரிவும், உணர்வும் ஆகுபெயர்கள். கரைத்தல் - அழித்தல். கரைதல் - இளகுதல். ``உள`` என்பதன்பின், ``ஆதல்`` என்பது வருவிக்க. `பயன்` என்னாது, `பெருமை` என்றார். `சித்தி, காயகற்பம் முதலியன சிறந்த பயன்கள் அல்ல` என்றற்கு.
இதனால், பிரத்தியாகாரத்தின் சிறப்புப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

பொழிப்புரை :

பிராணாயாமத்தை அறியாத முன்னெல்லாம் சிறிதும் நின்று பயன் தராமல் வெளியே போய்விடுகின்ற பிராணவாயு, பிராணாயாமத்தில் பூரகத்தால் உள்ளே புகுதலும் அது முன்போலப் போய்விடாதவாறு யோகி கும்பகம் செய்தலில் உறுதி பெற்று நிற்றலால் அவ்வாயு உண்மையாக அவனோடு ஒத்து நிற்குமாயின், மனமும் அவனால் அடையப்பட்ட பொருளாய், அவன், வழிப்பட்டு நின்றதே யாம். அதனால், இறைவன் அவ் யோகியினது உள்ளத்தினின்றும் புறம் போகான்; (சிவனை மறக்கும் நிலை உண்டாகாது என்றபடி.)

குறிப்புரை :

``புக`` என்பது, ``நின்றால்`` என்பதனோடு முடிந்தது. ``திறப்பட`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாகலின், ``திறப்பட்டு`` எனத் திரிந்து நின்றது. இதற்கு, ``யோகி`` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. `நின்றது` என்பது, துணிவுபற்றி எதிர்காலம் இறந்தகாலமாய் வந்த கால வழுவமைதி.
இதனால், பிரத்தியாகாரத்தினது இன்றியமையாமை கூறப்பட்டது. இது கூறுவார், இதற்குப் பிராணாயாமம் இன்றியமை யாமையும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 10

குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரனு மாமே. 

பொழிப்புரை :

பிரத்தியாகாரத்தை மனப்பயிற்சி அளவில் செய்தால், கால வரையறை இடவரையறைகள் இன்றி, எல்லா வற்றையும் ஒருங்கே உணரத்தக்க யோகக் காட்சியைப் பெறுதலே அதற்குப் பயனாய் முடியும். அதனை அஞ்ஞான இருள் நீங்கி இறைவனை உணரும் கருத்தோடு செய்யின், தான் இறைவனை உணர்தலேயன்றிப் பிறரையும் உணரச் செய்கின்ற கடவுள் தன்மையையும் உடையவனாகலாம்.

குறிப்புரை :

மனத்தைக் குறித்த இடத்தில் செல்லச் செய்தலாதல் பற்றிப் பிரத்தியாகாரத்தை, ``குறிப்பு`` என்றார். வெறுப்பு இருள் - வெறுக்கப்படுவதாகிய அறியாமை. ``நாடும்`` என்பது எச்சம். சிக்கென்று உணர்தல் - உறுதியாகப் பற்றுதல். `அறிவிப்பு` என்பது இடைக்குறைந்து நின்றது. `பிறருக்கு உணர்த்தும் தன்மை` என்றது, குருவாகும் தன்மையை, எந்நிலையிலும் குரு இறைவனேயாதல் பற்றி, ``அமரன்`` என்றார்.
இதனால், பிரத்தியாகாரத்தின் கன்ம வகை ஞானவகைகளின் பயன்கள் கூறப்பட்டன. `தாரணை, தியானம், சமாதி` என்பவற்றையும் இங்ஙனம் பகுத்துக் கூறுதல் காண்க.
உயிருக்கு மாயாபந்தத்தின் அடிநிலை, மாயாகாரியங்களை மறவாது உணர்ந்து நிற்கும் பொருள் உணர்வேயாம். இவ்வுணர்வு சொல்லால் உண்டாகலின், அவ்வுணர்வு சொல் வடிவிலே அமைவ தாகின்றது. ஆகவே, அப்பந்தத்தினின்றும் நீங்குதற்குச் சொற்களைச் சுட்டி உணர வேண்டியுள்ளது.
சொற்கள் அளவில்லனவாயினும், அச் சொற்களுக்கு மூலமாய் உள்ள எழுத்துக்கள் அளவிற்கு உட்பட்டன. ஆகவே, எழுத்துக்களைச் சுட்டி உணரின், அது சொற்களை உணர்வதே ஆகும். அதனால், அனைத்து எழுத்துக்களையும் மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங் களில் ஏற்ற பெற்றியில் வைத்துச் சிந்திக்கும் முறை யோக நூல்களில் கூறப்படுகின்றது.
`அனைத்து மொழிகளில் உள்ள எழுத்துக்களும் வடமொழி எழுத்துக்களில் அடங்கிக் கிடக்கின்றன` என்பது வேத மதங்களின் கொள்கை. அதனால், அவற்றை அவை, `மாத்துருகாட்சரம்` (எல்லா மொழிக்கும் மூலமாய் உள்ள எழுத்துக்கள்) எனக் கூறும்.
வட மொழியில் உள்ள எழுத்துக்கள் ஐம்பத்தொன்று, க்ஷகாரத்திற்குப் பின்பும் வேறு இரண்டெழுத்தைச் (:க:வ!) சேர்த்து `ஐம்பத்து மூன்று` என்று ஒருசிலர் (நன்னூலார் முதலியோர்) கூறுவர். பாணினியார் முதலாகப் பலரது கொள்கையும் `ஐம்பத்தோரெழுத்து` என்பதே, அவற்றுள்ளும் `லகாரம் ளகாரங்கட்கும் தம்முள் வேற்றுமை இல்லை` என்று கொண்டு, ளகாரத்தை நீக்கி, `ஐம்பதெழுத்து` என்றே கூறுவர். க்ஷகாரமே நீக்கற்பாலது என்பது மற்றொரு கொள்கை. `ளகாரம் க்ஷகாரம்` இரண்டையுமே நீக்கி, `நாற்பத்தொன்பது எழுத்து` என்றே கொள்ளவேண்டும் என்பது வேறொரு கொள்கை. `ஆல வாய்க் கடவுள் அகாரத்திற்கு உரியவனாய் நிற்க, ஆகாரம் முதலிய ஏனை நாற்பத்தெட்டிற்கு நாற்பத்தெண்மர் புலவர்களாக, கடைச்சங்கப் புலவர் கண்ணுதற் கடவுளை உள்ளிட்டு நாற்பத்தொன்பதின்ம ராயினர்` எனத் திருவிளையாடற் புராணம் கூறுவது, இறுதியிற் கூறிய கொள்கையை வலியுறுத்துவதாய் உள்ளது. எனினும், இந்நாயனார் (திருமூலர்) பலவிடத்தும் ஐம்பதெழுத்தே கூறுகின்றார்.
வடமொழிக்குச் சிறப்பெழுத்தாகக் கூறப்படுவன பல இருப்பினும், அதற்குச் சிறப்பிற் சிறப்பாக உள்ள எழுத்து முப்பத்து மூன்றாவது மெய் (ஹ என்னும்) எழுத்தே, உயிரெழுத்தில் இறுதியில் உள்ள ஒன்றும், இம் மெய்யின் சார்புடையதே, `அ` என்றால் பிறமொழி; `ஹ` என்றால் வடமொழி; `ஆம் ஊம், ஓம்` என்றால் பிற மொழி; `ஹாம், ஹூம், ஹோம்` என்றால் வடமொழி எனக்கொள்ளப் படுகின்றது. வடமொழியைத் `தெய்வமொழி` என்றும், அதனால் `அதுவே மந்திர மொழி` என்றும் சொல்வதற்குச் சிறந்த காரணம், இம்முப்பத்து முன்றாம் மெய்யைச் சிறப்பாக ஆள்வதேயாகும்.
தமிழில் ஆய்த எழுத்திற்கு இத்தன்மை உண்டு. பிற மொழி களிலும் இந்த மெய்யெழுத்து உண்டு. என்றாலும், அம்மொழிகள் இவ்வெழுத்திற்குத் தனிச் சிறப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, இந்த முப்பத்து மூன்றாவது மெய்யை யோகநூல்கள் ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞையில் (புருவ நடுவில்) வைத்துத் தியா னிக்கும்படி கூறுகின்றன, அதனோடு கணக்கில் கொள்ள வேண்டாத க்ஷகாரமும் அங்குச் சேர்க்கப்படுகின்றது. ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள விசுத்தியில் (கண்டத்தில்) உயிரெழுத்துப் பதினாறும், அதற்குக் கீழுள்ள நான்கு ஆதாரங்களிலும் கீழிருந்து முறையே ககாரம் முதலாக, `பன்னிரண்டு, பத்து, ஆறு, நான்கு` என்னும் அளவிலான மெய் யெழுத்துக்கள் ஸகாரம் ஈறாக வைத்துத் தியானித்தல் கூறப் படுகின்றது. ஆகவே, 2+16+12+10+6+4= 50 எழுத்துக்களும் 6 ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை பெறப்படுகின்றது. இதில் ளகாரம் சேர்க்கப்படாமை குறிப்பிடத் தக்கது. எழுத்துக்களின் முறைவைப்பில் முன்முன் உள்ளவை சிறப் புடையன; பின் பின் உள்ளவை சிறப்பில்லன.
ஒவ்வோர் எழுத்தும் தாமரை மலரின் ஒவ்வோர் இதழின் மேல் உள்ளனவாகத் தியானித்தல் வேண்டும் எனப்படுகின்றது. எனவே, மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களும் முறையே நான்கு, ஆறு, பத்து, பன்னிரண்டு, பதினாறு, இரண்டு` என்னும் இதழ்களை உடைய தாமரை மலர்களாகச் சொல்லப்படுகின்றன. இருதய கமலம் எட்டிதழ்த் தாமரையாகக் கூறப்படுதல் தத்துவக் கோட்பாடு பற்றியது; ஆகவே, அதற்கும், இதற்கும் தொடர்பில்லை. உணர்வு, தொடக்கம் முடிவு இரண்டிலும் குவிந்தே இருக்கும். இடைநிலையில் விரிந் திருக்கும்; தொடக்கத்தில் உள்ள குவிவிற்குக் காரணம் அறியாமையும், முடிவில் உள்ள குவிவிற்குக் காரணம் அடக்கமும் ஆகும். ஆகவே, கீழே உள்ள மூலாதாரக் கமலமும், மேலே உள்ள ஆஞ்ஞைக் கமலமும் குறைந்த இதழ்களைக் கொண்டவையாகவும், இடையில் உள்ள ஆதாரங்கள் மிக்க இதழ்களைக் கொண்டவையாகவும் குறிக்கப் படுகின்றன.
இனி, ஆறு ஆதாரங்களில் மேலானதாகிய ஆஞ்ஞை `விந்துத் தானம்` எனப்படுதலால், அதற்குக் கீழ் உள்ள விசுத்தி முதல் நான்கு ஆதாரங்கட்கு அதிதேவராய் அங்குள்ள கமல மலராகிய ஆசனத்தின் மேல் வீற்றிருக்கின்ற கடவுளர் முறையே, `சதாசிவர், மகேசுரர், உருத்திரர், திருமால்` என்பவராவர். இந்த நால்வரும் முறையே, `ஆகாயம், வாயு, தேயு, அப்பு` என்னும் பூதங்கட்கு அதிதேவர் ஆதலால், அப் பூதங்களுக்குரிய பீச மந்திரங்களாகிய `ஹம், யம், ரம், வம்` என்பன அத் தாமரை மலர்ப் பொகுட்டின்கண் வைத்து எண்ணப் படுகின்றன. இவற்றிற்கேற்ப மூலாதாரத்தில் பிருதிவிக்கு அதி தேவராகிய பிரமாவையும், அதற்குரிய பீசமாகிய `லம்` என்பதையுமே வைத்துத் தியானித்தல், வேண்டுமாயினும், மூலாதாரம் `குண்டலிக்கு இடம்` எனப்படுதலால், அதற்குரிய விநாயகரையும், பிரணவத் தையுமே அங்கு வைத்துத் தியானித்தல் சொல்லப்படுகின்றது.
இனி, மந்திரத்தை மட்டும் `லம்` என்பதாகவே வைத்துத் தியானித்தலும் காணப்படுகின்றது. ஆகவே, உலகில் கோயிலைப் பெறாத பிரம தேவர், ஆதாரங்களிலும் பிரமசாரியாராகிய விநாயகர் இடத்தில், அல்லது தமது தோற்றத்திற்கு முதலாகிய திருமாலிடத்தில் அடங்கி நிற்பவராகின்றார். இனி, சுவாதிட்டானம் முதலாகப் பிரமா முதலிய தேவர்களை வைத்து, சதாசிவரை ஆஞ்ஞையில் கொள் வாரும் உளர். சதாசிவரை விசுத்தியில் கொள்ளும் நிலையில் ஆஞ்ஞையில் சதாசிவருக்கு மேல் உள்ள சத்தியே தியானிக்கப் படுவாள். இவ்வாறெல்லாம் மனத்தை அகமுகப்படுத்தி நோக்க, புற நோக்குக் குறைந்து, அகநோக்கு மிகுவதாம் என்க. இத்துணையும் பிரத்தியாகாரம் கூறியவாறு.
சிற்பி