மூன்றாம் தந்திரம் - 8. தியானம்


பண் :

பாடல் எண் : 1

வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே. 

பொழிப்புரை :

தாரணை இறுதிக்கண் சொல்லியவாறு, `பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று` என்னும் பதினைந்துடன் புருடன் ஒன்று கூடப் பதினாறையும் தியான முறைப் படி அவ்வவ் வாதாரங்களில் வைத்துத் தியானித்தல், கருவி கரணங்களினின்று நீங்கிநிற்கும் சாதன யோகமாகவே முடியும். அதற்குமேல் ஒளி வடிவாகிய சத்தியையும், அதற்குமேல் அருவாய் நிற்கும் சிவத்தையும் தியானித்தலே சாத்திய யோகமாம். ஆகவே, தியான யோகம், சாதன சாத்திய வகையால் இங்ஙனம் இருகூறாய் நிற்கும் என்க.

குறிப்புரை :

வரும் - வந்த; தாரணையுள் சொல்லிப் போந்த. ஆதி - முதல்; தத்துவம். அவைகளை ஆதாரங்களில் வைத்துத் தியானிக்கும் முறை, ``நிலம்`` என்னும் பூதத்தையும், அதற்குரிய ``கந்தம்`` என்னும் தன்மாத்திரையையும் மூலாதாரத்திலும், பின்னும் முறையே ஏனைய பூதங்களையும், தன்மாத்திரைகளையும் சுவாதிட்டானம் முதலிய வற்றிலும் வைத்தும், அந்தக்கரணங்களை ``மனம், அகங்காரம், புத்தி, சித்தம்`` என்னும் முறையில் சுவாதிட்டானம் முதலாக முறையே வைத்தும், சித்தமே பிரகிருதியாய் அடங்கப் புருடனை ஆஞ்ஞையில் வைத்தும் தியானித்தல். பொருவாத புந்தி புலன் போக மேவல் - ஆன்ம அறிவொடு மாறுபட்டு வாதிக்கின்ற பொறி புலன்களின் வாதனை அற்றுப்போக, அமைதியுற்று நிற்றற்குரிய சாதனையாம். புந்தி, மேவல் இவை ஆகுபெயர்கள். ஆஞ்ஞையில் புருடனை விழுங்கி நிற்கும் ஒளி வடிவாக இறைவனைத் தியானிப்பின், அது சத்தித் தியானமாகும். பரம் - மேலானது. ஒளி வடிவிற்கு மேலானது அருவம். இறைவனை நிராதாரமான உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இந்தச் சத்தி சிவத் தியானமே சாத்திய யோகத்தியானம் என்க. `பரத்தியானமாக` என ஆக்கம் வருவிக்க. குரு - திட்பம்.
இதனால், ஞான யோகத்தின் நிலைகள் இவை என்பது கூறப்பட்டது. இயமம் முதலிய எட்டனுள் `தியானம், சமாதி` என்னும் இறுதி இரண்டுமே யோகத்தில் சாத்தியக் கூறாதலின், இதனை, ஈண்டுப் போதந்து கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 

பொழிப்புரை :

கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.

குறிப்புரை :

ஞானக்கூட்டம் - ஞானத்தொடு கூடும் கூட்டம். கருவி கரணங்களாகிய மாயேயங்களோடு கூடுதலால் உயிர் பெறுவது அறிவு விளக்கமும், அவ்விளக்கத்தை அவ்வாற்றால் உயிர்கள் பெறச் செய்வது திருவருளும் ஆதலால், ``பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு`` என்றார். அப்பொருளை இங்ஙனம் சிறப்பித்துக் கூறவே, `அதனைக் காணுதலே உயிர் பெறத்தக்க பேறு` என்பது போந்தது. `இனி அப்பேற்றை அடைய வழியறியாது திகைக்கின்ற உயிர்க்கு வாசி யோகத்தின் வழிக் கிடைக்கும் குண்டலி சத்தியே அதனை அடைவித்து உதவி செய்வது` என்பார் ``அண்ணாக்கின் ... ... பிழைப்பித்தவாறே`` என்று அருளினார். `வியக்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். `கொல்லும் இயல்புடைய பாம்பு, பிழைக்கச் செய்தது வியப்பு` என்பது நயம். பிள் நாக்கி - பிளவுபட்ட நாவை யுடையது; பாம்பு. அண்ணாக்கினை அடுத்துள்ள துளைவழி உச்சியை அடைகின்ற பிராணவாயு, அவ்வுச்சி வழியாகப் புருவ நடுவை அடையும் சுழு முனை நாடியைத் தாக்குதலால், ஆஞ்ஞையில் அனுபவம் நிகழ்தல் பற்றி, ``அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி`` என்றார். ``நம்மைப் பிழைப்பித்தவாறே`` எனத் தமது அனுபவத்தைக் கூறிய வாற்றால், `அவ்வொளியைக் காண வேண்டுவார்க்கு வழி இதுவே` என்பது குறிப்பெச்சமாயிற்று. இங்ஙனம், சுருங்கக் கூறினாராயினும், `தாரணையில் மின்னல்போலத் தோன்றுகின்ற அவ்வொளியை இடைவிடாது உன்ன, அவ்வொளி மறைவின்றி நின்று பயன் தரும்` என விரித்துரைத்துக் கொள்ளப்படும்.
இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

பொழிப்புரை :

புறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத கண்ணில் (திறவாது மூடியிருக்கின்ற நெற்றிக் கண்ணில்) மின்னல் போலத் தோன்றிய ஒளியைப் பின் அக்கண் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து, அதனொடு உணர்வு ஒன்றியிருப்பின், பிற முயற்சிகளுள் யாதும் செய்யாமலே அந்த ஒளியை நன்கு தரிசித்திருக்கலாம்.

குறிப்புரை :

ஒண்ணா நயனம் - பிறர் `கண்` என்று உடன்படவே முடியாத கண். `அக் கண்ணார` எனச் சுட்டு வருவிக்க. விண் ஆறு - வான் வழி. `சென்று` எனற்பாலது, ``வந்து`` என இடவழுவமைதியாய் நின்றது. ``கண்டிட`` என்பது, `அளந்தறியுமாறு` என்றபடி. அஃதாவது, `வான் வெளி முழுதும் ஓடி` என்பதாம். `ஓடிப் பண்ணாமல்` என்றது, `இவ்வாறெல்லாம் உழல வேண்டாமல்` என்றவாறு `ஞான யோகம் செய்ய மாட்டாமையால் இறைவனைக் காணுதற்குச் சிலர் தாம் பெற்ற சித்தியால் ஆகாயத்தில் சென்று அவனைப் பல இடங்களில் தேடியும், பிரமன் முதலிய தேவர்கள் வானவெளியில் தேடி உழன்றும் எய்க்கின்றனர்; அவை வேண்டா` என்றபடி. `நின்று பார்க்கலும் ஆம்` என இயையும். உம்மை, சிறப்பு.
இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவே. 

பொழிப்புரை :

உலகர் பலரும் அழிபொருளாகிய உடம்பை உணர்கின்றார்களே யன்றி, அதனோடு வேறறக் கலந்து நிற்கின்ற அழிவில் பொருளாகிய உயிரை அறிதல் இல்லை. இனி, ஒரு சிலர் உயிரை அறியினும், அவ்வுயிர்க்கு உயிராய் நிற்கின்ற சிவனை அறிகின்றார்களில்லை. இனிச் சிலர், `உயிர்க்குயிராய்ச் சிவன் ஒருவன் இருக்கின்றான்` என்று உணரினும், `அவன், ஆஞ்ஞைத் தியானத்தால் காணத்தக்கவன்` என்று உணரமாட்டாதவராகின்றனர். இன்னும் ஒரு சிலரோ, `அவ்வாறு காணத் தக்கவன்` என்று உணர்ந்தும் ஒரு நொடி நேரமாயினும் அந்தத் தியானத்தைத் தலைப்பட எண்ணாமலே யிருந்தொழிவர்!

குறிப்புரை :

`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். `தியானத்தின் சிறப்பை அறிந்திருந்தும் அதில் நில்லாதவர் அறியாதா ரோடு ஒப்ப அறிவிலிகளே` என்றற்கு இங்ஙனம் அறியாமையது நிலையைப் பலபட வகுத்துரைத்தருளினார். நான்கிடத்தும் `ஒரு பொழுதும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `சிந்தை` என்பது

பண் :

பாடல் எண் : 5

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே. 

பொழிப்புரை :

மேல் மாடத்தில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில் பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக் கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு மேல் மாடத்தில் ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.

குறிப்புரை :

`மனம்` என்பது இங்குச் செய்யும் உருவகத்திற்கு ஏற்ப, `மேல்மாடம்` எனப் பொருள் தருதலை, அதனை எடுத்தல் ஓசையாற் கூறிக் காண்க. அவ்வாறே ``அனைத்து விளக்கும்`` என்பதும் இங்கு உரைத்தவாறே பொருள் படுதலைப் படுத்தல் ஓசையாற் கூறியறிக. சினத்து விளக்கு, உருவகம். இதில் உள்ள ``விளக்கு`` என்பது காரண இடுகுறியாய் நில்லாது, காரண அளவில் நின்று, நெருப்பைக் குறித்தது. எருக்குதல் - அழித்தல். `நெருக்கி` என்பது பாடம் அன்று. ``அனைத்து விளக்கு`` என்றது, கருவி கரணங்களை. ``திரிதூண்ட`` என்பதில், சினை முதலொடு சார்த்தப்பட்டது. மனத்து விளக்கு அது - மனத்தில் ஏற்றத்தக்க விளக்காகிய அந்த விளக்கு, சிவ ஒளி. ``மாயா விளக்கு`` என்று, மனத்து விளக்கின் இயல்பைத் தெரிவித்துக் காட்டியது. இதன்பின் நின்ற தேற்றேகாரம், அஃது அத்தன்மைத்தாயே நிலைபெறுதல் காட்டி நின்றது. இங்கு, `ஆகும்` என்பது எஞ்சி நின்றது.
`தியானம்` என்பது, உலகர்கொள்ளும் உறக்கம் போல்வது அன்று என்பதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத்தூண்ட`` என்றார். எனவே, `யோகநிலையில் நிற்பவர்கட்குக் கருவி கரணங்கள் செயற்படாது நிற்குமேயன்றி, மடிதல் இல்லை` என்பது விளங்கும். இதனை விளக்கவே இந்நிலையே, `யோக நித்திரை, அறி துயில்` என்னும் பெயர்களால் கூறுவர். இவ்வாறன்றிக் கேவல சுழுத்தியாகிய உறக்கம் வருமாயின், இருள் மூடிக் கொள்வதல்லது விளக்கேற்றிய தாகாது; அதனைக் குறிக்கவே, பின்னிரண்டடிகளை அருளிச் செய்தார். இஃது அறியாது ஏகான்ம வாதிகள், `அன்றாடம் உலகர்க்கு வருகின்ற கேவல சுழுத்தியே பேரின்ப நிலை` எனக் கூறி மகிழ்வர். ``சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி`` என்று வெகுளி நீக்கம் கூறிய தனால், ஏனைக் காமம், மயக்கம் என்பவற்றது நீக்கமும் கொள்ளப் படும். `காம வெகுளி மயக்கங்கள் அற்றிருத்தல்` என்றால் `உறங்கிக் கிடப்பது என்பது பொருளன்று` என்றதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட`` என்றார்.
இதனால், தியானத்தில் செயற்பாலன, தவிரற்பாலன கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :

நெடுங்காலம் யோகம் செய்யினும், மேற்கூறிய தியான நிலையை அடைய முயல்பவர் அரியர். அந்நிலையை அடைந்தால், சிவன், கண்ணாடியுள்ளே இருக்கின்ற பொருள் இனிது விளங்குதல்போல, உயிர்க்குயிராய் நிற்கின்ற நிலை இனிது விளங்கும்.

குறிப்புரை :

``கண்`` என்றது, மேற்கூறிய அகக்கண்ணை. மூன்றாம் அடி, தியானத்தைப் பெறும் முறையை நினைப்பித்தது. ``உள்ளே`` என்றதை, `கண்ணாடி` என்பதன் பின்னும் கூட்டுக.
``அடுத்தது காட்டும் பளிங்குபோல்``(குறள், 706) என்பதையும் நோக்குக.
இதனால், ஆஞ்ஞைத் தியானம் இல்வழி யோகத்தால் பயன் இன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.

பொழிப்புரை :

ஒருவன் ஆஞ்ஞைத் தியானம் செய்தால் துன்பம், இறப்பு, கவலை, ``எனது`` என்னும் பற்று, ``யான்`` என்னும் முனைப்பு, இவை காரணமாகச் சிலவற்றைத் தேட முயலும் முயற்சி ஆகிய அனைத்தும் அவனுக்கு இல்லாதொழியும். பின்பு அவன் சிவனேயாய் விடுவான்.

குறிப்புரை :

எனவே, ``இன்பமே உளதாகும்`` என்பதாம். ``நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்தல்`` என்பது, கிரியை நிலையில் செபம் முதலியவற்றில் இருவிழிகளையும் மூடி யொழியாமலும், அலர விழியாமலும் சிறிது திறந்த பார்வையுடன் மூக்கின் இருதுளைக்கும் மேலே உள்ள நுனிமூக்கை நோக்கி நிற்றலைக் குறிப்பது. அத்தொடரை இங்கு இயைபுபட எடுத்தோதி, ``நான், சிவன்`` என்னும் இரண்டு எண்ணத்தையும் புருவ நடுவிலே வைத்தல் என ``நாட்டம் இரண்டு`` என்பதற்கு உட்பொருள் கொள்ள வைத்தார். இங்ஙனம் உட்பொருள் கொள்ளாவிடில், இங்கு இது பயன் தாராமை அறிக. மனை, உடம்பு.
இதனால், மேற்கூறியதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே.

பொழிப்புரை :

ஆஞ்ஞைத் தியானத்தை முறைப்படி செய்து அதனால் இன்புற்றிருப்பவர்க்கு இவ்வுடம்பு தரும் பயன் இவ்வின்ப நிலையேயாம். ஆகவே, இப்பயனை இவ்வுடம்பு தாராதொழியின், அதனால் பயன் வேறில்லை.

குறிப்புரை :

உயர்வு எழா - வெளியே போகாமல், `துயர் அற` என்றதனால், `இன்புற்று` என்பது பெறப்பட்டது. `தூங்குதல்` என்பது, அமைதியுற்றிருத்தலைக் குறித்தது. `இந்நிலை கூடுதல் அரிது` என்றற்கு, `வல்லார்க்கு` என்றார். `வல்லார்க்குப் பயன்` எனவே, `பயம் இல்லை` என்றது மாட்டாதார்க்கு ஆயிற்று.
இதனால், `இந்நிலையைப் பெறாத வழி, யோகமேயன்றி, உடம்பும் பயன் இலதாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மணிகடல் யாஅனை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபே ரிகையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாம்இவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே. 

(இதற்குப் பின் உள்ள ``கடலொடு மேகம்`` என்னும் பாடல் நாயனார் திருமொழியன்று.)

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

பொழிப்புரை :

`மணி நா ஓசை, கடல் ஓசை, யானை பிளிறும் ஒலி, குழல் இசை, மேகத்தின் முழங்கு குரல், வண்டு, தும்பி இவற்றின் ஒலி, சங்கநாதம், முரசின் முழக்கம், யாழ் இை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?` என்னும் ஒலிகள் போன்ற மெல்லிய ஒலிகள் பத்தினையும் ஆஞ்ஞைத் தியானத்தை அடைந்தவர் கட்கல்லது, மற்றையோர்களுக்குக் கேட்டல் கூடாததாகும்.

குறிப்புரை :

எனவே, `கேட்கப்படுதல் தியானத்தில் நிலைத்து நின்றமைக்கு அறிகுறி` என்றவாறாயிற்று. இவ்வோசைகள், பிராண வாயு மேற்கூறிய பத்து நாடிகளிலும் நிற்றலால் உளவாவனவாம். `இந்த இந்த நாடியில் இன்ன இன்னவாறு ஓசை எழும்` என வரை யறுத்தும் சில நூல்கள் கூறும். வார் - நீண்ட. அணி - அழகு. தணிந்து எழுநாதம் - மெல்ல ஒலிக்கின்ற ஓசை. எனவே, ``மேக ஒலி`` என்றது ``இமயத்து ஈண்டு இன்குரல் பயிற்றி`` (புறம். 34) என்றாற்போல மழை பொழிய வரும் மேகம் மெல்லென முழங்கும் முழக்கத்தையாயிற்று. பணிந் தவர் - (தியானத்துள்) அடங்கியவர். ``அல்லது பார்க்க ஒண்ணாதே`` என எதிர்மறையாற் கூறினமையின், ``இஃது அறிகுறி`` என்பது பெறப் பட்டது. படவே, தியான நிலையில் நிற்போர் அவ்வோசையைக் கேட்டலிலும் செல்லுதல் கூடாமை அறிந்துகொள்ளப்படும்.
இதனால், தியான நிலையை உணர்தற்கு ஆவதோர் அடையாளம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே. 

பொழிப்புரை :

தியான யோகத்தால் இறைவனை உணரமாட்டா தவர்க்கு அவனது இயல்பும், தேவர் கூட்டம் முதலிய பிற எல்லாப் பொருள்களும், அவரது உணர்வைத் தம்பால் ஈர்த்து அடக்கி அவரது உணர்வேயாய் நிற்கின்ற, மேற்கூறிய, ``மணி கடல் யானை`` முதலிய ஓசைகளாகவே தோன்றும். அவ்யோகத்தால் அவனை உணர வல்லவர்க்கு அவ்வாறின்றி, ஈசன் இயல்பு முதலிய யாவும், ``அவ் வோசையின் வாசனை`` எனச் சொல்லத்தக்கவாறு, அவ்வோசை நீங்கிய பின்னும் நிலைபெறுவதொரு நுண்ணிய ஓசையாய் விளங்கும்.

குறிப்புரை :

``பாசமாய்`` என ஆக்கச் சொல் வருவிக்க. பாசம், பிறவற்றிற் செல்லாதவாறு தடுத்துத் தம்பால் ஈர்ப்பவை. ``இயங்கும், நிற்கும்`` என்னும் எச்சங்கள், ``ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்னும் ஒரு பெயர் கொண்டன. ``உயிர்`` என்றது, அதன் உணர்வை. ஓசை நிகழ்ச்சியை, ``பாசம்`` என்றதற்கு ஏற்ப, அதன் நீக்கத்தை ``விடுவது`` என்றார். ``விடுவது`` என்றது விட்டபின் நிலை பெறுவதாகிய தன் காரியம் தோன்ற நின்றது. `ஈசனை` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. இதனால், சொல்லியவை, `மணி கடல் யானை முதலிய ஓசையின் வழி இறைவனை உணர்தல் தியான யோகத்தின் முதல் நிலை` என்பதும், `அவை அடங்கப்பெற்று அவனை உணர்தலே அவ் யோகத்தின் முடிவு நிலை` என்பதுமாம். ``ஓசையெலாம் அவற்றால் ஒலிக்கும் திருச் சிலம்பின் ஓை\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\u2970?`` என்றார் திருக்களிற்றுப் படியாரிலும் (வெண்பா, 33).
இதனால், தியான யோகத்தின் முதல் நிலை முடிவு நிலைகள் இவை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவில்நல் யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே. 

பொழிப்புரை :

தத்துவ நிலையிலும் சத்தியும் சிவமும் இருப்பது நாத தத்துவத்திற்கு அப்பாலாகலின், தியான யோகத்தின் முடிவு நிலையும் மேற்கூறிய பத்து வகை ஓசைகள் அடங்கிய இடமேயாம். அதனால், யோகியரது நோக்கம் அவ்விடத்திற் செல்வதே.

குறிப்புரை :

`தியான முதிர்ச்சியில் சிவாநுபவத்தைத் தலைப்படல் கூடும்` என்பதற்கு, ``நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டன்`` என்பதனை இறுதிக்கண் கூறினாராயினும், அதனை இரண்டாம் அடியாக வைத்து, அதன்பின், `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைத்தல் கருத்தென்க. நல்யோகம் - தியானம். ``இருப்பது`` எனவந்த எழுவாய்கள் மூன்றும், ``முடிவில்`` என்னும் பயனிலைகளை முதலிற் பெற்று நின்றன. ``நஞ்சுண்ட கண்டன்`` என்பதன் பின்னும் அவ் எழுவாய் எஞ்சிநின்றது.
இதனால், ஓசை அடங்கிய இடமே தியான யோகத்தின் முடிவு நிலையாதல் தத்துவத்தில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே. 

பொழிப்புரை :

ஆதார மூர்த்திகள் வெளிப்படும் இடமாகிய ஆறு ஆதாரங்களுள்ளும் உள்ளொளியாகிய பிரமன் முதலிய ஐவரையும் தியானிக்கும் தியானத்தால், புகழப்படுகின்ற ஒளியை உடைய, ஆயினும், சிவனைத் தலைப்பட ஒட்டாத - மயக்கம் நீங்க, அதன்பின், மேம்பட்டவராக மாயோனை முதலில் வைத்து இறுதிக்கண் நாதமூர்த்தியைக் கூட்டி எண்ணும் ஐவருள் நாதமூர்த்தியும் ஒடுங்கக் காணின், பரமசிவனது திருவடியை அடைதல் கூடும்.

குறிப்புரை :

`ஆறினுள்ளும்\\\' என உருபு விரிக்க. `ஆறினுள்\\\' எனப் பாடம் ஓதுதலும் ஆம். உம்மையுடைய இப்பாடத்திற்கு, முற்றும்மை எச்சப்பொருள் தந்ததாக உரைக்க. அங்கி - ஒளி. உள்ளே விளங்கு தலின் ஆதார மூர்த்திகளை `உள்ளொளி\\\' என்றார். ஆஞ்ஞையாகிய ஆறாவது ஆதாரத்தில் விந்துச் சத்தியுடன் விளங்குபவர் நாதமூர்த்தி. ஆகவே, அவருக்குக் கீழுள்ள ஐவராலும் பத்துவகை ஓசைகளைக் கேட்கும் தியானயோகம் முதிர்ந்து வருதலை இருள் நீங்குதலாகக் கூறினார். இங்கு \\\"இருள்\\\" என்பது, சிவாநுபவத்தைப் பெற ஒட்டாது தன்னையே கேட்டு நிற்கச் செய்யும் பத்து வகை ஓசை நிகழ்ச்சியே என்றற்கு, \\\"துதிக்கின்ற தேசுடை\\\" என்றும், ஆதார மூர்த்திகளுள் கீழுள்ளவன் மலரோன் ஆதலின், அவனுக்கு மேல் உள்ளவரை `அதிக் கின்ற ஐவர்\\\' என்றும் தெரித்துக் கூறினார். நாதம் - நாதமூர்த்தி. அவர் ஒடுங்கினமை கூறவே, ஓசை ஒடுங்கினமை தானே பெறப்பட்டது. கதி - புகலிடம். `கதியாகிய ஈசன்\\\' என்க. `கதியாகிய கழல்\\\' எனினு மாம். \\\"கதி\\\" எனவே, அஃது ஒன்றே அடையத் தக்கது என்றவாறு.

பண் :

பாடல் எண் : 13

பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே. 

பொழிப்புரை :

மேற் (பா. 568-573) கூறிவந்த இடங்களுள் முடிவாகிய பள்ளியறையில் பகலன்றி இரவே இல்லை. இவ்வொளி யிடத்தை அடைய நினைத்தால் இஃது ஓரு யோசனை தூரத்தில் உள்ளது. இதனை அடைந்துவிட்டால், வீட்டை எக்காலத்தும் தீப்பற்றிக் கொள்ளாமலும் காப்பாற்றலாம். இப்பள்ளியில் சென்றவர் விழித்தெழுந்து வெளிப்போத வேண்டுவதில்லை.

குறிப்புரை :

நாத மூர்த்தி விந்துச் சத்தியுடன் பிரிவின்றி நின்று அறிவைப் பிறப்பிக்கும் இடமாதல் பற்றியும், தியான யோகத்தின் முதிர்ச்சியில் ஆன்மா ``சமனை`` என்னும் சத்தியோடு கூடி நிற்கும் இடமாதல் பற்றியும் ஆஞ்ஞையை, ``பள்ளியறை`` என்றார். ``இதனை அடைந்துவிட்டால்`` என்பது இசையெச்சம். ``அறையில் கொள்ளி கொளுந்தாமற் காக்கலாம்`` என மாற்றி உரைக்க. அறை, உடம்பு. ``தியானம் முதிரப் பெற்றோர்க்கு வாழ்நாள் நீட்டிப்பும் உளதாகும்`` என்றபடி. `ஓர் ஓசனை நீள்` என்பது சிலேடை. ஓர் ஓசனை (யோசனை) ஒப்பற்ற தியானம். நீளம் - உயரம்; முடிவு. ``நீளம்`` என்பது கடைக்குறையாயிற்று. வெள்ளி அறை, சுவரும், நிலமும் வெள்ளியால் ஆக்கப்பட்ட அறை. ``ஒளியிடம்`` என்பது உண்மைப் பொருள். `அவ்வெள்ளி அறை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``விடிவில்லை`` என்றது, ``எழுந்து வர வேண்டுவதில்லை`` என்பதைக் குறித்த குறிப்பு மொழி.
இதனால், தியான யோகத்தின் முடிவு நிலையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

கொண்ட விரதம் குறையாமல் தான்ஒன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே. 

பொழிப்புரை :

இயமம் முதலாகத் தான் மேற்கொண்ட நோன்புகள் சிறிதும் குறைவுறாதவாறு அவற்றில் உறைத்து நின்று, பிராணா யாமத்தால் சுழுமுனை நாடி வழியே சென்று ஆஞ்ஞையை அடைந்த யோகிக்கு, உடம்பு, `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` என்னும் மூன்று பகுதிகளிலும் செம்மையுற்று, நிற்க வேண்டிய முறையில் சிறிதும் பழுதின்றி நிற்கும் ஆதலால், அஃது ஊழிக் காலம் வரினும் நீங்காத தன்மையைப் பெற்றிருக்கும்.

குறிப்புரை :

``ஆறு ஆதாரங்களுள், மூலாதாரம், சுவாதிட்டானம் இரண்டும் அக்கினிமண்டலம்; மணிபூரகம், அனாகதம், விசுத்தி மூன்றும் சூரியமண்டலம்; ஆஞ்ஞையும் பிரமரந்திரமும் சந்திர மண்டலம்`` என்பது யோக நூற்கருத்து. இம்மூன்று மண்டலங்களிலும் உடல் செம்மையுற்றிருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் ஆங் காங்குப் பழுதுறுவதினாலே வாழ்நாள் குறைகின்றது. யோகப் பயிற்சி யால், உடற் செம்மை தானே அமைந்துவிடுதலின், யோகியர்க்கு வாழ்நாள் நீடுவதாம் என்க.
இதனால், மேல், ``கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்`` என்றது, ஏதுக்காட்டி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே. 

பொழிப்புரை :

(அக்கினி மண்டலம் முதலாகக் கூறிய மண்டலங்கள் மூன்றுக்கும் சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அறிந்து, எவ்விடத்தும் அவனையே தியானித்து அவனாகின்ற யோகமே உண்மை யோகம்; அது சத்தி நிபாதர்க்கல்லது கூடாது. அது நிற்க.) அம் மூன்று மண்டலங்கட்கும் அக்கினி முதலிய மூவரையே முதல்வராகக் கருதி ஆங்காங்கு அவ்வவரைத் தியானித்து அவரா கின்ற பொது முறைமையும் உண்டு. (அது சத்திநிபாதரல்லாதார்க்கு உரியதாம். மூன்று மண்டலங்கட்கும் மூவர் முதல்வராகிவிடின், கலாம் விளையுமன்றோ எனின்,) மூவரையும் முதல்வராக எண்ணுவோர், ஒருவர் மற்றை இருவர்க்கும் தோழமை யுடையவராக, மூவரிடை இணக்கமே கொள்ளுதலின், கலாம் விளையாதாம்.

குறிப்புரை :

``அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு`` என்றது, ``மூன்று மண்டலங்களையும் தனித்தனி மண்டலங்களாகக் கருதும் முறை`` எனவும், ``அவ்வவர் மண்டலத்து`` என்பது, ``அம்முறையுள்`` எனவும், ``அவ்வவர்க்கே வரில்`` என்றது, ``அவரவருக்கே உரிய தாய்விடின்`` எனவும் கூறியவாறாம். ``அவ்வவர் மண்டலம் மற்றோர்க்கு ஆயம்`` என மாறிக் கூட்டுக. ஆயம் - தோழமை.
இதனால், ``இறப்பில் தவம்`` (சிவஞானபோதம், சூ.8, அதி.1) எனப்பட்டு ஞானத்தைப் பயக்கும் சிவயோகத்தின் வேறான யோகமும், ``யோகம்`` எனச் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது எனமேல் (பா. 557) கூறியதனை
உளத்துட் கொண்டு, அம்முறை பற்றிய மும்மண்டலங்களின் இயல்பு ஈண்டுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே. 

பொழிப்புரை :

ஒவ்வொரு பயனைத் தருபவர் ஒரோவொரு தேவராக நினைந்து அவர் அனைவரிடத்தும் ஓடி இளைக்கின்ற நெஞ்சத்தைத் தனது சரக்காக உடைய இருட்டறையாகிய உடலி னுள்ளே தனித்தனி முதன்மை பெற்றுத் தோன்றுகின்ற மண்டலங்கள் மூன்றிலும் பொருந்தி ஊடுருவிச் செல்வதாகிய பெரிய நூல் அவ்வாறு அவற்றை ஒன்றுபடக் கோத்துச் செல்லுமாயின், உயிர் மேற்கூறிய இளைப்பை அகன்று, மார்கழி நீராட்டுப்போல இன்ப வெள்ளத்தில் மூழ்கிச் சிறக்கும்.

குறிப்புரை :

இருட்டறை, அறியாமைக்கு இடமாகிய உடம்பு. `நிட்டையிலா உடல்` (தி.9 திருப்பல்லாண்டு, 3) என்றாற்போல, ஞானத்திற்கு ஏதுவாகாத குறையை உடல்மேல் ஏற்றிக் கூறுதலும் மரபாதல் அறிக.
`அறியாமை காரணமாக மூன்றும் மூன்று தனி மண்டலங்களாய்த் தோன்றுகின்றன` என்பது உணர்த்துதற்கு, `இருட்டறை யுள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும்` என்றார். துளை, முதனிலைத் தொழிற் பெயர். `துளைத்தலை யுடைய பாசம்` என்க. துளைப்பது ஊசியேயாயினும், `இஃது ஊசியின்றியே உருவிச் செல்வதோர் அதிசய நூல்` என்றவாறு. இது குண்டலி சத்தி என உணர்க. சத்திநிபாதரல்லாதவர்க்கு இம் மண்ட லங்களைத் துளைத்துக் கோத்து ஒன்றாக்கமாட்டாது நிற்கும் இந்நூல், சத்தி நிபாதர்க்குத் துளைத்து ஒன்றாகக் கோக்கும் வன்மையுடையதாம் என்பார், `பெரும்பாசம்` என்றார்.
பாசம் - நூல்; கயிறு. நெளிவும், வளைவும் உடையதாதல் பற்றி, `பாம்பு` எனப்படுகின்ற இதனை, இங்கு, `பாசம்` என்றார். `பிறர்க்குப் பல தெய்வ உணர்வைத் தருகின்ற குண்டலிசத்தி, சத்திநிபாதர்க்குச் சிவனது தனிப்பெரு முதன்மையைத் தந்து நிற்கும்` என்பது கருத்து. சிவயோகம் அல்லாத யோகம் பிறவியைப் போக்காமையேயன்றி அதனை வருவித்தலும் செய்யு மாகலின், அது பவ யோகமாம்.
`மார்கழி` என்பது, அத்திங்களில் ஆடும் நீராட்டைக் குறித்தது. `மார்கழி போல` என உவம உருபு விரிக்க.
இதனால், சிவத்தியான யோகமே பேரின்பத்தைத் தருவது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே. 

பொழிப்புரை :

பிராணாயாமம் முதலியவற்றை முறைப்படி பயில வல்லவர்க்கு அவற்றின் பயனைத் தருபவன், தேவ தேவனாகிய சிவபெருமானே; (அவன் வழி நிற்போராகிய ஏனைய தேவர் அது மாட்டார்.)

குறிப்புரை :

`அதனால், அவனைத் தியானிப்பார்க்கல்லது துன்பம் நீங்காது` என்பதாம். முதல் மூன்று அடிகளும் பிராணாயாம முறையை அனுவதித்தவாறு. `முக்குணங்களாகிய பந்தத்தினின்று விடுபடுதற் பொருட்டு மேற்கொள்ளப்படுவதே யோகம்; அப்பயன் சிவயோகத் தாலன்றி எய்தாது` என்பதனை ``முக்குணம் மூடு அற வாயுவைப் பிடித்திட்டு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார். `உயிரை அவ்வந் நிலையில் வைக்கும்` என்க.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே. 

பொழிப்புரை :

சிவயோகியரேயாயினும், அனாகதத்தளவிலே நிற்பவர் ஆன்ம நிலையையே உணர்வர்; சிவ நிலையை உணர மாட்டார்.

குறிப்புரை :

``ஈத்த`` என்பனவும், ``ஈத்து`` என்பதும் குறுக்க லாயின. அவற்றுள் இறுதியில் நின்றது உவம உருபு. நடல் - நடுதல்; நிலை நிறுத்தல். பிராண வாயுவைக் கும்பித்தல். நாபி - மணிபூரகம். மடல் - தாமரை இதழ். வாணி - வாக்கு. ஆகுபெயராய் மத்திமை வாக்குக்கு இடமான விசுத்தியைக் குறித்தது. ``உள்ளே`` என்றது, `கீழே` என்றவாறு. ``கீழே`` எனப் பாடம் ஓதுதலும் ஆம். மணி பூரகத் திற்கும், விசுத்திக்கும் இடையில் உள்ளது, ``அனாகதம்`` எனப்படும் இருதயம். கடல் - கடலின் தன்மை. அது கரை இன்மையும், ஆழம் அறியப்படாமையும், தெளிவுமாம். சடலம் - உடல். அதன் தலைவன், உயிர். ``தியான யோகத்தை இருதயமட்டாகச் செய்து, அப்பால் ஏறமாட்டாதவர், ஆன்ம இயல்பையே உணர்வர்`` என்பதாம்.
இதனால், ``தியான யோகத்தை முற்றப் பயிலல் வேண்டும்`` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 

பொழிப்புரை :

யோகத்தை முறைப்படி பயின்ற அடியவரே, அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.

குறிப்புரை :

யோகமும் வழிபாடேயாதலின், அதனைச் செய் வோரை, ``அன்பர்`` என்றார். ``அன்பரே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``நிலையாக`` என ஆக்கம் வருவித்துரைக்க. ``அறிந்தார்`` என்றதனை, ``அறிவறிந்த மக்கட் பேறு`` (குறள், 61) என்றாற் போல, ``அறிதற்கு உரிமையுடையார்`` எனக் கொள்க. `துணிவுபற்றி, எதிர்காலம் இறந்த காலம் ஆயிற்று` என்றலுமாம். ``நெறியான அன்பர்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், ``யோகம் முற்றியவர்க்கே ஞானம் கூடும்`` என, யோகத்தது இன்றியமையாமை கூறப்பட்டது. இதனைச் சமாதி இறுதியிற் கூறாது ஈண்டுக் கூறினார், தியானத்திற்கும், சமாதிக்கும் இடையே உள்ள வேற்றுமை சிறிதேயாகலின்.
சிற்பி