மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்


பண் :

பாடல் எண் : 1

மதிவட்ட மாக வரையைந்தும் நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே. 

பொழிப்புரை :

திங்களினது சுற்றாக வரையறுக்கப்படுகின்ற ஐந்து பகுதிகளையும் முன்னே ஆராய்ந்து, பின்பு அதனை விடுத்து, ஞாயிறு பன்னிரண்டும் பொருந்திய அக் கூற்றினால் இறைவன் கால சக்கரத்துள் நின்று உடலைக் காக்கின்ற வகையையும், பின்பு அங்ஙனம் காக்கப்படுகின்ற உடலை விட்டு உயிர் போகின்ற வகையையும் இங்கு ஆராயத்தொடங்கினேன்.

குறிப்புரை :

சந்திரன் பன்னிரண்டு இராசிகளையும் ஒருமுறை சுற்றிவருகின்ற வட்டத்தில் ஓர் அரை வட்டம் - ஆறு இராசி அளவு - வளர் பிறையாயும், மற்றோர் அரைவட்டம் - ஆறு இராசியளவு தேய் பிறையாயும் தோன்றும். சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்திருக்கும் நாளே அமாவாசியை. அப்பொழுது சந்திரன் சூரிய ஒளியில் மறைந்து விடுவதால் காணப்படுதல் இல்லை. சூரியனை விட்டு விலகிச் செல்லச் செல்லச் சந்திரனது ஒளி சிறிது சிறிதாக மிகுந்து காணப்படும். இந்நிலையில் சந்திரன் சூரியனுக்கு முன்னே செல்வதாய் இருக்கும். அதனால், அந்நிலை `முற்பக்கம்` (பூர்வ பட்சம்) எனப்படும். இது சந்திரனது வெள்ளொளி மிகுந்துவரும் காலம் ஆதலின், `சுக்கில பட்சம்` என்றும் சொல்லப்படுகின்றது. சுக்கிலம் - வெண்மை. சந்திரன் சூரியனுக்கு ஆறாவது இராசியில் நிற்கும்பொழுதே முழு நிலவாய்க் காட்சியளிக்கும். அதுவே பூரணை (பௌர்ணிமை) யாகும். பின்பு சந்திரன் சூரியனுக்கு ஏழாவது இராசி முதலாக வரும்பொழுது சூரியனை நெருங்குவதால், அதன் ஒளி மறையத் தொடங்கும். அந் நிலையில் சந்திரன் சூரியனுக்குப் பின் செல்வதாய் இருக்கும். அதனால், அந்நிலை `பிற்பக்கம்` (அபர பட்சம்) எனப்படுகின்றது. ஒளி குறைய இருள் மிகுவதால் இந்நிலை `கிருஷ்ண பட்சம்` என்றும் சொல்லப் படுகின்றது. கிருஷ்ணம் - கறுப்பு. இந்த அரைவட்டம் ஒவ்வொன்றும் சூரியனது நாட்கணக்கில் ஏறக்குறையப் பதினைந்தாக அமைவதால், அப்பதினைந்திலும் உள்ள சந்திரனது நிலைகள் ஒன்று, இரண்டு என்று முறையாக எண்ணப்பட்டு `பிரதமை, துவிதியை` முதலிய பதினைந்து திதிகளாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கூற்றிலும் உள்ள ஐந்து திதிகள் நந்தை, பத்திரை, சயை, இரித்தை, பூரணை எனப் பெயர் பெறும். இவ்வைந்தையும் நன்கு உணர்வதே சந்திரகதியை நுண்ணி தாக அறிவது ஆதலின், ``மதி வட்டமாகவரை ஐந்தும் நாடி`` என்றார். ``வரை ஐந்து`` வினைத்தொகை. சந்திர கதியை முன்னே ஆராய்தல், அதுவே நிலவுலகின் உயிர்களது வினை நுகர்ச்சிக்குச் சிறந்த காரண மாதல் பற்றியாம். இதுபற்றியே திதியும், நட்சத்திரமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முன்னர் ``மதி`` என்றதனாலும், `சூரியர் பன்னிருவர்` என்பது பயின்ற வழக்கு ஆதலாலும், வாளா, ``ஈராறு`` என்றே போயினார். பின் வந்த `வட்டம்` கால சக்கரம் என்பது முன்னிரண்டடிகளாலும் விளங்கிக் கிடந்தது. காலம் இறைவனது ஆணைவழி நின்றே உலகத்தைத் தொழிற்படுத்தும் என்பது உணர்த்துதற்கு, `காலம், பாலிக்குமாறு` என்னாது ``பதி வட்டத்துள் நின்று பாலிக்கு மாறு`` என, இறைவனது செயலாகவே ஓதினார்.
\\\"காலமும் கடவு ளேவ லால்துணைக் கார ணங்காண்``
என்பது சிவஞான சித்தி. (சூ. 1-10)
இதனால், `இவ்வதிகாரம் நுதலிய பொருள் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும்
கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே.

பொழிப்புரை :

உடற் கூற்றால் ஐம்புலன்களை ஐம்பொறிகள் பொருந்திப் பொதுவாக அறிகின்ற ஐந்தினாலும், பொறிகள் பொதுவாக அறிந்தவற்றை மனம் முதலிய உட்கருவினைப் பற்றி நின்று சிறப்பாக அறிகின்ற நிலையில் அந்த ஆறினாலும், மனம் சிறப்பாக அறிபவற்றில் உயிர் அழுந்தி நிற்கும் நிலையில் அந்த ஏழினாலும், உயிர்க்கு உறுதி தேட எண்ணி நூல்களைக் கற்கும் நிலையில் அந்த எட்டினாலும் கற்றவற்றை அநுபவமாக உணரும் நிலையில் அந்த ஒன்பதினாலும், அநுபவமாக உணர்ந்த நூற் பொருளைக் கடைப்பிடிக்கும் நிலையில் அந்தப் பத்தினாலும் இவ்வாறு பலவகைத் தொழிலால் உடலிற்கு அளந்த நாழிகை, கழிந்தது தெரியாமல் கழிந்து போவது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

புலனுணர்வில், ஒரு காலத்திலே ஒரு பொருளின்கண் ஐம்புலன்களையும் உணர்தல் சிறந்ததாகலின், காலக்கழிவை ஐந்தின் மேல் வைத்தே கூறினார். `ஒருகாலம்` என்றல் விரைவு பற்றியாதலின், ``ஐந்து`` என்றது மலைவாகாமை அறிக. ``ஐந்து`` முதலியவற்றில் ஆன் உருபு விரிக்க. `இப்பலவகை` என்னாது, ``பல வகை`` என்றே கூறினமையால், `இவ்வாறு பலவகையால்` என்பதே பொருளாயிற்று. ஆகவே, ஒன்றனையும் அறியாது அறியாமையுள் அழுந்துதலாலும் காலம் கழிதல் பெறப்படும்.
இதனால், உடலிற்கு அளந்த காலம் ஒழிவின்ற உருண்டோடு கின்றமையும், அவ்வோட்டந்தான் பல்வேறு வகையினதாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே. 

பொழிப்புரை :

உலகர்க்குப் பதின்மூன்றாண்டுகள் பயனின்றி இறக்கும் எல்லையாகவும், முப்பத்து மூன்று ஆண்டுகள், பலரும் இரங்கிப்பேச இறக்கும் எல்லையாகவும், அறுபத்திரண்டாண்டுகள் பயன்பெற்று இறக்கும் எல்லையாகவும் எண்பது ஆண்டுகளும், நூறாண்டுகளும் நிறைந்து முற்றிய எல்லையாகவும் கணக்கிடப்படுதல் கால சக்கரத்தின் முறையாகும்.

குறிப்புரை :

எல்லையே கூறினமையால், அவற்றுக்கு உட்பட்ட ஆண்டுகளும் அத்தகையனவாதல் தெளிவு. திருந்து - முதனிலைத் தொழிற்பெயர். இஃது அதனையுடைய முறைமையைக் குறித்தது.
இதனால், கால சக்கரம் அனைவரிடத்தும் ஒருவகையாற் சுழலாது பல்வேறு வகையால் சுழன்று செல்லுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே. 

பொழிப்புரை :

பிறந்த நட்சத்திரமும், அதனோடு ``இரண்டு, நான்கு, ஆறு`` என்பவற்றைக் கூட்ட வருகின்ற ``மூன்று, ஐந்து, ஏழு`` என்னும் எண்ணுமுறைக்கண் வருகின்ற நட்சத்திரங்களும் ஒழித்து மற்றைய நட்சத்திரங்களிலே, இல்வாழ்க்கைக்குரிய யாதொரு செயலையும் தொடங்குதல் பொருந்தும்.

குறிப்புரை :

பொருந்துதல், அச்செயல் பற்றி நிகழும் நாள்கள் பலவும் பயன் தரும் நாளாதற்கு ஏதுவாதல். எனவே, விலக்கப்பட்ட நட்சத்திரங்களில் தொடங்கினால் அந்நாள் வீணாகக் கழியும் என்க. இதனானே, யோகியர் யோகம் தொடங்குதற்கு உரியநாளும் இங்கு ``ஆம்`` எனப்பட்ட அவையே என்பதும் கூறியவாறாம். ஒன்று - கூடுகின்ற. ``இருமூன்று`` என்பதில் ``இரு`` என்பது முன்னும் சென்று இயையும். அதற்கேற்ப ``இரண்டு`` என்பதும் இருமுறை ஓதப்படும். ``எட்டு மூன்று`` என்பது பாடம் அன்று. ஒருவன் பிறந்த நட்சத்திரம் முதலாக இருபத்தேழு நட்சத்திரங்களையும் ஒன்பது ஒரு கூறுபடுத்து மூன்று கூறாக வகுக்க. மூன்று கூற்றிலும் முதலில் உள்ள நட்சத்திரங்கள் முறையே ``சென்ம நட்சத்திரம், அனுசென்ம நட்சத்திரம், திரிசென்ம நட்சத்திரம்`` எனப்படும். அவை மூன்றும் ஆகா என்பது வெளிப்படை மற்றும் அம்மூன்று கூறுகளிலும், `மூன்று ஐந்து ஏழு` என்னும் எண்ணு முறைமைக்கண் நிற்கும் நட்சத்திரங்களும் ஆகா என்பதும், ``இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது`` என்னும் எண்ணுமுறைமைக்கண் நின்ற நட்சத்திரங்கள் ஆகும் என்பதும் இங்குக் கூறப்பட்டன. நட்சத்திரங் களை இவ்வாறு அறிதலை, `தாரா பலன் பார்த்தல்`` எனச் சோதிட நூல்கள் கூறும். அதனை வாழ்நாள் பற்றிய ஆராய்ச்சியில் இங்கு நாயனார் கூறினார் என்க. `மனை` என்றது மனைவாழ்க்கைக்குரிய செயலைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், கால சக்கரத்துள் நன்மை தரும் பகுதிகள் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே. 

பொழிப்புரை :

ஞாயிற்றின் வட்டத்துள், `முப்பது நாள் ஒரு கூறாகப் பன்னிரண்டு கூறு கூடியது ஒருவட்டம்` என்று அறிந்து, அவ் வட்டம் சிலபோது, பன்னிரண்டு கூறும் கூட வருகின்ற முந்நூற்றறுபது நாள்களுக்கு மேல் ஆறு நாளும், சில போது நான்கு நாளும் கூடி நிற்றலையும் உங்கள் மனத்தில் நன்கு ஆராய்ந்து மேற்சொல்லிய செயல்களில் புகுவீராக.

குறிப்புரை :

`நாள்` என்பது, `ஞாயிறு தோன்றி மறைந்து மீளத் தோன்றுமளவும் உள்ள காலம்` என்பதும், அக்காலத்துள் ஞாயிறு காணப்பட்டு நிற்பது, `பகல்` என்றும், காணப்படாது நிற்பது `இரவு` என்றும் சொல்லப்படுதலும் யாவரும் அறிந்தவை. அவ்வளவான நாள் முப்பது கூடியது, ஞாயிற்றின் பகுதி வட்டம். இதனை, மேடம் முதலிய ராசிகளின் தொடர்பு பற்றி, `மேடரவி, இடபரவி` முதலாக வழங்குவர். எனினும், இப்பகுதிகளில் சந்திரன் முழுநிலவாய்த் தோன்றும் நட்சத்திரத்தை ஒட்டி, இவற்றை, சித்திரைத்திங்கள் வைகாசித் திங்கள் முதலாக வழங்குதலே பெரும்பான்மை. இவ்வாற்றால், ஞாயிற்றின் வட்டப் பகுதியும் வேறே. திங்களின் வட்டப்பகுதியும் வேறே. ஞாயிற்றின் வட்டப்பகுதி பெரும்பான்மை என்றும் ஒருபடித்தாய் நிகழும். திங்களின் வட்டப்பகுதி அவ்வப்பொழுது வேறுபடும். ஞாயிற்றின் வட்டப்பகுதி ஒருபடித்தாய் நிகழ்தலின், அதனை உலகியல் நடை முறைக்கும், திங்களினது வட்டப்பகுதியால் உலகின் விளைவுகள் வேறுபடுதலின் அதனை நோன்புகள் முதலியவற்றிற்கும் வகுத்தனர் முன்னோர். கோள்களின் நிலைகளால் உலகில் விளைவுகள் வேறு படுதலை, நாவுக்கரசர், ஞானசம்பந்தர் பாண்டிநாடு செல்ல நினைத்த பொழுது, `நாளும் கோளும் வலியில` எனக் கூறியருளினமை யாலும், அதுபொழுது ஞானசம்பந்தர், `அவை அன்ன வாயினும் சிவனடி யாரை வாதியாது, நல்லனவாம்` என்பதை வலியுறுத்தித் திருப்பதிகம் அருளிச்செய்தமையானும், பின்னும் அவர் (ஞானசம்பந்தர்) புனல் வாதத்திற்கு அருளிச்செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
``கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க``
என்று அருளிச் செய்தமையானும் அறியலாம்.
``மகத்திடை நாடி`` என்பது பாடம் அன்று. பத்து அஞ்சு - பதினைந்து. இரு பதினைந்து - முப்பது. ``எனை முப்பதும்`` என்றது எந்த ஒரு முப்பதுநாள் கூடிய பகுதியும் ஞாயிற்றின் வட்டத்தில் பன் னிரண்டில் ஒருகூறாய் நிற்கும் என்றவாறு. இக் கூறு `மாதம்` எனவும், இம் மாதம் பன்னிரண்டு கூடிய ஒரு வட்டம் `யாண்டு அல்லது வருடம்` எனவும் படும். ஞாயிற்றின் ஒரு வட்டத்தில் முந்நூற்றறுபது நாள் களுக்கு மேலும் சில நாள் கூடுதல், சில மாதங்கள் முப்பதுக்கு மேலும் சில நாள்களைப் பெறுதலினாலாம். சில மாதங்கள் முப்பது நாளிற் குறைதலும் உண்டு. இவை எல்லாம் சூரியன் அந்த அந்த இராசியோடு தொடர்புகொண்டு நிற்கும் நிலையைப் பற்றியன. சில யாண்டுகளில் ஆறு நாளும், சில யாண்டுகளில் நான்கு நாளும் கூடுதலை, `யாண் டொன்றுக்கு முந்நூற்றறுபத்தைந்து நாள்` என்று அமைத்துப் போவர். இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது அறுதியிட்டுக் கூறுவர் அறிந்தோர். இவர் `கணிவர்` எனப்படுவர். ``தனை`` என்றதும், ``தற் குறி`` என்றதும் முறையே, ஞாயிற்றின் முழு வட்டத்தையும், அதன் பகுதி யாய நாளினையுமாம். `ஏற அட்டும்` என்பது குறைந்து நின்றது. ஏற அட்டுதல் - கூடச் சேர்த்தல். வினை அறி ஆறு - ஞாயிற்றின் செலவை அறியும் வழி. `எனை முப்பதும் ஈராறு என்னும் அடுக்காகக் கூட்டி ஞாயிற்றின் முழு வட்டத்தின் அளவை உணர்ந்து, தற்குறி ஆறு, விளங்கிய நால் இவற்றையும் உம் மனத்திடை நாடி மனை புகுவீர்` என முடிக்க. முப்பது முதலியன, அவ்வளவினவாகிய நாள்களைக் குறித்தன.
இதனால், கால சக்கரத்தின் பெரும்பான்மை இயல்பு இனிது விளங்கக் கூறப்பட்டது. `சிறுபான்மை இயல்புகளைக் கணி நூல்களில் கண்டுகொள்க` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 6

நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும்
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே. 

பொழிப்புரை :

ஒருவன் பிறந்து நான்கு ஆண்டுகளைக் கடந் தானாயின், பின்னும் நான்கு நான்கு ஆண்டாக இருமுறை கடத்தல் வேண்டும். இனி, ஐந்து ஆண்டுகளைக் கடந்தானாயின், அப்பால் பின்னும் பத்து, பதினைந்து என்னும் ஆண்டுகளைக் கடத்தல் வேண்டும். எனவே, நான்கு, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினைந்து என்னும் ஆண்டுகள் வாழ்நாள் இடையறும் காலமாகும் என்பது அறியப்படும். பதினைந்து யாண்டு வரையில் ஒருவன் யோகத்தைத் தொடங்க இயலாது. ஆகவே, அதுகாறும் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளுதலும் இயலாது. அதனால், இவ்வாறு, பிறந்து, ஆண்டுகள் பலவாக வளர்கின்ற உடம்பினை, உடம்பினை உடைய தாகாத தன்மையுடைய ஒரு பொருளால் அருள்புரியப்பட்டு மேற்சொல்லிய ஆறு இடையறவுகளையும் (கண்டங்களையும்) கடந்த ஓர் அருமையை அறிகின்றவர் உலகில் யார் உளர்!

குறிப்புரை :

``அறிவாராயின், பதினாறாவது வயது முதலாகவே அப்பொருளை அடைதற்கு யோகம் முயல்வர். அதனால், காலத்தைக் கடந்து, என்றும் பதினாறாண்டாகவே இருக்கும் பயனையும் பெறுவர்`` என்பதாம். மார்க்கண்டேயரது வரலாறு இங்கு நினைவு கூரத் தக்கது.
நான்கு முதலியன, அவ்வளவினவான ஆண்டுகளைக் குறித்தன. ``கடந்தது`` இரண்டும், ``கடந்ததேல்`` என்னும் பொருள தாகிய முற்றெச்சங்கள். `வரும்` என்றது, `கடத்தற்கு அரிதாய் வரும்` என்றவாறு. இதனைப் பின் வந்த, `நால், பத்து, பதினைந்து` என்பவற் றோடும் கூட்டுக. பாலனாம் தன்மை தமிழில், ``பாலம்`` என நின்றது. குணம் உடையதனை, குணமாகக் கூறினார். இனி, ``சிவன்`` எனத் தோன்றா எழுவாய் வருவித்து உரைத்தலும் ஆம். ஆண்டு - ஆளப் பட்டு. ஆலம் - நஞ்சு; என்றது நஞ்சு போலும் ஆண்டெல்லைகளை.
இதனால், காலசக்கரத்தின் கொடுமையை விதந்து, `அஃது உணர்ந்து, காலம்பெற, யோகத்தைத் தொடங்குக` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.

பொழிப்புரை :

முதல் ஆறு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபதும், அடுத்த மூன்று திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தைந்தும், அடுத்த இரண்டு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத் தாறும், இறுதி ஒருதிங்கட்கு நாள் இருபத்தேழும் என்று இவ்வாறு இறைவன் யோகத்திற்குரிய திங்களின் நாட்கணக்கை உலகியலுக்கு வேறாக வகுத்துள்ளான்.

குறிப்புரை :

உலகியலுக்கு வந்துள்ள கணக்கு, மேல், `மனை புகுவீர்` என்னும் மந்திரத்தும் கூறப்பட்டது. யோகத்தைத் தொடங்குவோர் இத்துணை நாளளவே யோகம் புரிந்து எஞ்சிய நாள்களில் ஓய்வு கொள்ளுதல் வேண்டும் என்பதாம். ஓய்வுகொள்ளும் நாள்கணக் கையும், பகிர்ந்து இடைஇடையே கொள்ளுதல் நலமாகும். ஓய்வுநாள் கணக்கை நாழிகையாகவும் பகுத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் ஓய்வு மிகுதியாகவும், போகப்போக ஓய்வு குறைந்தும் நிற்றல் அறியத் தக்கது. இவ்வகையில் ஓராண்டு சென்றபின் மீளத் தொடங்கும் பொழுதும் இக்கணக்கின்படியே செய்தல் வேண்டும் என்க.
ஆறுக்கு இருபதும் என உருபையும், உம்மையையும் மாற்றி யுரைக்க. ``மதி, நாள்`` என்றவை இறுதி விளக்காய், மேலான வற்றோடும் சென்று இயைந்தன. ``நாள்`` - ``வேறு விதித்தான்`` என இயையும். பதி - சிவன். அங்கண் - அவ்விடம். அஃது யோகத்தை ஆராயும் இடம்.
இதனால், `யோகம் புரிதற்குரிய நாள் முறை இத்தன்மையது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 

பொழிப்புரை :

யோகத்தில் நிற்க விரும்புகின்ற நீ! தத்துவங்களைச் சுருக்கி எண்ண வேண்டின், அசுத்த தத்துவங்களில் மூன்று நீங்கலாக ஏனைய இருபத்தெட்டோடு, சுத்த தத்துவம் ஐந்தனையும் அங்ஙனமே கொண்டு, ``தத்துவம் முப்பத்து மூன்று`` என வைத்துக்கொள். இனி அத்தத்துவங்களில் இந்திரியம் பத்து சூக்கும தேகமாய் உள்ள எட்டு இவைகளையும் நிலம் முதலிய பஞ்ச பூதங்களில் அடங்கி நிற்பன வாகவே பாவித்துக்கொள். இனி நிலம் முதலிய அப் பூதங்கள் ஐந்தும் ஒன்றின் ஒன்று - அஃதாவது, ஐந்தாவது பூதமாகிய நிலம் நான்காவது பூதமாகிய நீரிலும், நான்காவது பூதமாகிய நீர் மூன்றாவது பூதமாகிய தீயிலும் இவ்வாறு முறையே தோன்றின என்பதை உணர்.

குறிப்புரை :

நீக்கப்படுகின்ற தத்துவங்கள் ``பிரகிருதி, புருடன், மாயை`` என்க. என்னை? அவை தனி தத்துவமாதற் சிறப்பில ஆதலின். அறை - அறுக்கப்படுவன; அஃதாவது குறைக்கப்படுவன. ``மூன்று அறையாக இருபத்தெட்டொடு`` என மாறுக. ``இருபத் தெட்டொடு`` என்றது, இருபத்தெட்டு உளப்பட என்றவாறு. இருபத் தெட்டு உளப்பட முப்பத்து மூன்று எனவே, சுத்தத் தத்துவங்களில் ஒன்றையும் குறையாது ஐந்தையும் கொள்ளல் வேண்டும் என்பது விளங்கிற்று. ``தொகுமின்`` என்றது, ஒருமை, பன்மை மயக்கம். ``பத்து எட்டும் பாராதிகளில் பதித்து அறி`` என்க. எட்டு; தன்மாத்திரை ஐந்தும், ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணம் மூன்றுமாம். சித்தம் பிரகிருதியாய் ஒழியும். பத்து எட்டுப் பாரா திகளில் அடங்கவே, ஆன்ம தத்துவம் அனைத்தும் பஞ்ச பூதங்கள் அளவாய் நிற்றல் விளங்கும். இக்கருத்துப் பற்றியே, நாம் காணும் உலகம், ``பஞ்சபூத பரிணாமம்`` என்றே சொல்லப்படுகின்றது.
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்`` -தொல். மரபியல்
என்றார் தொல்காப்பியனாரும். மற்றும் திருமுறைகளிலும் பிற இடங்களிலும் உலகம் முழுவதும் பஞ்ச பூத பரிணாமம் என்னும் கருத்தே பெரும்பான்மையாகக் காணப்படுதல் தெளிவு. நான்கு முதலியன அவ்வவ் எண்ணு முறைக்கண் நின்ற பூதங்களை உணர்த்தின. `உதித்தது` என்னும் தொழிற் பெயர் இடைக்குறைந்து நின்றது. ``உதித்தது அறி`` என்பதனை இறுதிக்கண் கூட்டி, ``அப் பாராதிகள் உதித்தது அறி`` என எடுத்துக்கொண்டு முடிக்க. என்னை? ஏனைய எல்லாவற்றையும் பாராதிகளில் அடக்கவே, பின்னர் அறியற்பாலன அப் பாராதிகளே யாதலின். பூதங்களின் தோற்ற முறையை அறிதலால், அவற்றைக் கடக்குமாறு புலனாகும். ``தத்துவங்களை இவ்வாறு அறிக`` என்றது, மேற்கூறியவாறு காலத்தை அவற்றிற்கு அதிதேவர்க்கு உரிய பகுதிகளாக வைத்து அவ்வப்பொழுது அவரவரைத் தியானித்து அக்காலங்களால் வாதிக்கப்படாமல் இருத்தற்காம்.
இதனால், `காலத்தை யோகத்திற்கு உரிய வகையில் பகுத்துணர்கின்ற யோகி, அவற்றைக் கடத்தற்குத் தத்துவங்களின் முறைமையையும் உணர்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே. 

பொழிப்புரை :

யோகம் முயலும்பொழுது இங்குச் சொல்லிய முறைகளை எல்லாம் முறையாக உணர்ந்து முயலாது, அவரவர் தாம் தாம் அறிந்தவாறே முயல்வார்களாயின், ஒருவர்க்கும் காலத்தைச் சிறிது வென்று நிலைபெறுதலும் இயலாது. இம்முறைகளைப் பெரியோர் வெளிப்படச் சொல்லாமல் மறைத்துச் சொல்லுதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; யோகத்தோடு சிறிதும் இயல்பில்லா தவரும் வாளா வாய்ப்பறை சாற்றிப் பெருமை பேசிக்கொள்ளாமல், விருப்பம் உடையவர்கள் தக்காரை அணுகிப் பணிந்து கேட்டு முயன்று கருத்தை முடிக்க வேண்டும் என்பது ஒன்றுதான் காரணம்.

குறிப்புரை :

இறை இரண்டில் முன்னது சிறிது; பின்னது தங்குதல்; வாழ்தல். இருத்தல் - உளதாதல். முடி, முதனிலைத் தொழிற் பெயர். அஃது, அதனைக் கருதுதலைக் குறித்தது. இறுதியில், `காரணம்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `காலத்தை வெல்லும் முறையைத் தக்கார் வாய்க் கேட்டுணராவழிப் பயனில்லை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே. 

பொழிப்புரை :

அகல் இனித் தேட வேண்டாது முன்பே கிடைத் திருக்க, விளக்கெரியப் பண்ணி முன்னே இருளை நீக்கிப் பின் அதனானே நெருப்பை, மூண்டு எரியும்படி மூட்ட வல்லவர்க்கு, கால சக்கரம் சுழன்றவழியே சுழன்று செல்லும். இவ்வுலகத்தில் அச் சுழற்சியுட்படாமல், ஒரு நிலையாய் நிற்றலும் கூடும். இம் முறையால் பலருக்கு விளைந்த பயனை, வேறு வழியில் முயலும் மடவோர் அறியமாட்டார்.

குறிப்புரை :

முதலடியை இறுதியிற் கூட்டி உரைக்க. இடிஞ்சில், மூலாதாரம். விளக்கு, அவ்விடத்துள்ள அக்கினி. `எரியக்கொண்டு` என்பது குறைந்து நின்றது. கடிதலுக்கு `இருள்` என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. இருள், குண்டலியின் உறக்கம். அனல் மூளுதல், மூலாக்கினி எழுந்து உச்சி யளவும் செல்லுதல். வேறுவழி, சில பச்சிலை போன்ற மருந்துகளை உண்டலும், பிறவுமாம்.
இதனால், யோக நெறியே காலத்தை வெல்லுதற்கு உபாய மாதல் கூறப்பட்டது.
கூற்றங் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. -குறள், 269
என்புழித் திருவள்ளுவர், ``நோற்றல்`` என்றது பெரும் பான்மையும் இவ்யோக முயற்சியையே என்க.

பண் :

பாடல் எண் : 11

நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே. 

பொழிப்புரை :

உற்று நினைக்கத்தக்க இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் கையில் சிறுவிரலைப் பெருவிரலோடு சேர்த்து நாண்போல ஆக்க மேல் நிற்கும் ஏனை மூன்று விரல்களைப் போல, இருதயத்தில் வேறு வேறு நிற்கும். பின்பு தலையில், `புருவநடு, நெற்றிநடு, உச்சித் துளை` என்னும் மூன்றிடங்களிலும், அதன்பின், தலைக்குமேல் `சூரியன், சந்திரன், அக்கினி` எனப்படும் மூன்று மண்டலங்களிலும் வேறு வேறாய் நில்லாது ஒன்றியேவிடும்.

குறிப்புரை :

எனவே, அவற்றை உன்னி உணரும் உணர்வும் அவ்வாறாதல் போந்தது. இவ்வாறு உணர்வு அலையாது நிற்றலால் உடம்பும் நிலைக்கும் என்க. ``சிறுவிரல் நாணாக`` என்றது, ``காள கர்ணி`` என்றும், ``திரிசூலம்`` என்றும் சொல்லப்படும் முத்திரையைக் குறித்தவாறு. `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடி களும் இருதயத்தில் அம்முத்திரைபோல நிற்கும் எனவும், ``சேரவே`` என்றதனால், `ஆஞ்ஞை முதலிய இடங்களில் ஏனை இரு நாடிகளின் ஆற்றலும் சுழுமுனையில் ஒன்றிவிடும்` எனவும் உணர்க. ``சென்னியில் மூன்று`` என்றது, `இரட்டுற மொழிதலாய்` நின்று இவ்வாறு பொருள் பயந்தது. ஓவியம் போல்வனவற்றை ஓவியம் என்றே ஆகுபெயராக ஓதினார். ``ஒத்திடும், நின்றிடும்`` என்பன முற்றுக்கள். உன்னி உணர்தல் - அறிவுடையதாதல். ``ஓவியமாய் விடும்`` என்றது, உடம்பை, இங்கு அதிகாரப்பட்டது அதுவே யாகலின். உடம்பு ஓவியமாதல், காலக் கழிவால் மாறுபடாது, என்றும் இளமையோடிருத்தல்.
இதனால், `யோகத்தின்வழி உணர்வு ஒருங்குதல் காலத்தை வெல்லும் வழியாகும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 

பொழிப்புரை :

ஓவியம்போல உணர்வு அலைவற நிற்றற்குரிய வழியை அறியுங்கள். இவ்வுணர்வினால் காலத்தை வெல்வதாகிய பயன் விளைதலை முன்னை நல்வினை இல்லாதோர் அறியமாட்டார்; (அதனால் அவர் வேறு உபாயங்களைத் தேடி அலைவர்.) இனி அவ்வழியாவது, பந்தமாய் நிற்கும் வினை காரணமாக வந்த இவ்வுடலில் உள்ள சூரிய சந்திர அக்கினி மண்டலங்கள் மூன்றிற்கும் ஓர் இணைப்பாகப் பல தாமரை மலர்களில் ஊடுருவி நிற்கும், யோகத்திற்கு ஏதுவாகிய தண்டேயாம்.

குறிப்புரை :

`அதன்வழி உணர்வைச் செலுத்தி நில்லுங்கள்` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளால் குறிக்கப்பட்டது சுழுமுனை நாடி. `யோகம் செய்யாத உடலால் பயனில்லை` என்றற்கு, `தீவினையாம் உடல்` என்றும், அதனைப் பயன்படச் செய்வது `சுழுமுனை` என்பார், ``புண்ணியத் தண்டு`` என்றும் கூறினார்.
இதனால், `காலத்தின், வாதனையைக் கடத்தற்கு யோக நெறியால் உணர்வொன்றியிருத்தலே சிறந்த உபாயம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே. 

பொழிப்புரை :

மேற்சொல்லியவாறு புண்ணியத்தண்டின்வழிச் சென்று உணர்வைப் பிரமரந்திரத்தில் வைத்த யோகிக்கு உடலில் `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் மூன்று மண்டலங்களும் தக்கவாறு அமைந்திருக்கும். ஆகவே, உடல், காலத்தால் வாதிக்கப் படாதாம். இந்நிலையைக் கண்டவர், உடல் கால வயப்படாது நிற்கும் பயனைக் கண்டனர். காணாது வேறு உபாயங்களில் சென்றோர், உடல் கால வயப்பட்டு நீங்க, அதனைக்கண்டு துன்புறுகின்றார்கள்.

குறிப்புரை :

மேல், ``பாவிகள் இத்தின் பயனறிவாரில்லை`` என்றதனால், `கண்டவர் கண்டனர்` என்பதற்கு இதுவே பொருளாதல் அறிக. ``பிரிய`` என்றதும், `பிரியும் நிலையை எய்த` என்றதாம். இனி, ``பந்தல் பிரிந்தது`` (தி.10 பா.151) என்றாற்போல, `கட்டுக் குலைந்தது` என்றலுமாம்.
இதனால், `உணர்வு ஒன்றுதல் காலத்தை வெல்லும் உபாயம் ஆமாறு இவ்வாறு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. 

பொழிப்புரை :

யோகம் செய்யாது பிணங்குகின்றவனுக்கு அவன் அடையத்தக்கதாகிய பயன் கிட்டாது கெடும். அஃது அங்ஙனம் ஆகின்றவாற்றை நீ கேட்பாயாக; பெண்டுடன் கூடுகின்ற நாள் மிகு மாயின், முற்பிறப்பில் இறைவனை வணங்கிய புண்ணியத்தால் வந்த மானுடப் பிறப்பின் வாழ்நாள் அளவு தேய, தான் சிலநாள் வாழ்கின்ற வாழ்வும், நாய்க்காக உடம்பை வளர்க்க முயல்வதாய் முடியும்.

குறிப்புரை :

`பிணங்கிக்கு` என்னும் நான்கனுருபு தொகுத்த லாயிற்று. `நான்` எனப்படுவது ஞாயிற்றின் வட்டப்பகுதியே என்றற்கு, ``ஆதித்தன் ஆறு`` என்றார். `ஆதித்தன் ஆறு அணங்குடனாய் விரியின்` என மாற்றியும், ஆக்கம் வருவித்தும் உரைக்க. ஆய், ஆகுமாற்றால். விரிதல் - மிகுதல். `சில வாயினும் குற்றமின்றாம்` என்றற்கு ``விரியின்`` என்றார். `வணங்கு` என்ற முதனிலைத் தொழிற்பெயர், அதன் பயனாகிய காரியத்தின்மேல் நின்றது. சிற்றின்பத்தை மிக விரும்புவோர்க்குக் கால சக்கரம் விரையச் சுழன்று நிற்கும் என்பதாம்.
இதனால், `காலத்தை வெல்ல வேண்டினோர் சிற்றின்பத்தைத் துறத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமல்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே. 

பொழிப்புரை :

`சக்கரம்` எனப்படுகின்ற ஆறு ஆதாரங்களிலும் சிவனது திருவடியாகிய திருவருளைக் காணாதவன், அத்திரு வருளினுள் புகாமல், நெருப்பில் புகுந்து அழிவான். அவற்றில் அத்திரு வருளைக் கண்டு அதனுட்புகும் உபாயத்தை அறிய வல்லவர்க்கு, ஐந்தொழிற் கூத்தினை இயற்றுகின்ற சிவன் அவ்வாதாரங்களில் விளங்கியே நிற்பன்.

குறிப்புரை :

``கூத்தன் நின்றிடும்`` என்றது, `காலத்தைக் கருவியாக வைத்து உலகத்தை நடாத்துகின்ற அப்பெருமானது அருளால் காலத்தை வென்று நிற்பர்` என்றவாறு. `சுழல்கின்ற` என்பது, `சுழல்வதனோடு ஒப்பிக்கின்ற` என்றதாம். துணைமலர் - இரண்டு மலர்போலும் திருவடிகள்; உவம ஆகுபெயர். ``கூத்தன்`` எனப் பின்னர் வருதலின், வாளா, ``துணைமலர்`` என்று போயினார். திரு வருளை, `திருவடி` என்றார். உடல் தழலிடைப் புகுதலை, உயிர் தழ லிடைப் புகுவதாக அருளினார், உயிர் அதனால் பயனிழந்து கெடு தலின். ``தன்`` என்றது திருவருளை. `அதனுட் போம் வழி` என்க. குழல், சுழுமுனை நாடி. ஆதாரங்களை அவற்றிற்குப் பற்றுக் கோடாகிய சுழுமுனையாக உபசரித்தார்.
இதனால், யோகநெறி வேறோராற்றானும் காலத்தை வெல்லும் உபாயமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோகம் நோக்கிடில்
ஆத்தனு மாகி அமர்ந்திடும் ஒன்றே. 

பொழிப்புரை :

புறத்தில் சிவபெருமானது திருவுருவில் உண்மைகள் பலவற்றை உணர்ந்தவர், நூலுணர்வாகிய அபர ஞானத்தைப் பெற்றவராவர். அகத்தில் அவனைக் கண்டு, அதனால் விளையும் பயன்களை உணரின், அப்பெருமான் அங்ஙனம் உணர் பவர்க்கு உறவாயும் வேறாய் நில்லாது ஒன்றாயும் உடன் இருப்பான்.

குறிப்புரை :

`அதனால், அவ்வநுபவம் பெற்றவர்களும் அவனைப் போலவே காலத்தைக் கடந்து நிற்பர்` என்பது கருத்து. பின்னர் ``உள்ளே`` என்றலால், முன்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. குறி - வடிவம். ``குறிகளும் அடையாளமும் கோயிலும்`` என்ற ருளியது காண்க. வடமொழியில் `இலிங்கம்` எனப்படுதலையும் நினைக. குணம் - தன்மை; உண்மை. அவை ``தோற்றம் துடியதனில், தோயும் திதி அமைப்பில்`` (தி.5 ப.90 பா.6) என்றாற்போல்வன. `அகம்` என்றது ஆதார நிராதாரமீதானங்களை. அங்குப் பார்த் திருத்தல் பாவனையினாலாம். `பாவனை` என்பது பொய்யன்று என்பதற்கு, `அனு போகம்` என்றார். ``அனுபோகம் நோக்கிடில்`` எனவே `பார்த் திருப்பின், அனுபோகம் விளையும்` என்பது பெறப்பட்டது. அநுபவங் காரணமாகச் சமாதியில் நீங்காது நிற்றல் கூடுமாகலின், நோக்கிடில் `ஆத்தனும் ஒன்றாய் அமர்ந்திடும்` என்றார். ``ஆத்தன்`` என்றது, கூத்தனைச் சுட்டும் அளவாய் நின்றது. `ஆத்தனும்` என்ற உம்மை `அங்ஙனம் நோக்குவோனுக்கு இயைய` என இறந்தது தழுவிற்று. `ஆத்தனும் ஒன்றேயாகி அமர்ந்திடும்` என மாறிக் கூட்டுக. `யோகத்தாலன்றி ஏனைச் சரியை கிரியா மார்க்கங்களால் காலத்தைக் கடந்து நிற்றல் அரிது` என்றற்கு, அவற்றின் பயனை இங்கு எடுத்துக் கூறினார்.
இதனால், ``யோகம் மேற்கூறிய வகையில் உபாயமாதல் இவ்வாறு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடும் முப்பதுஞ் சேர இருந்திடில்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாறு சிவன் வேறின்றி நிற்கப் பெறின். உளவாகும் நன்மைகள் அளவில. அதனைப் பெறும் முறையை, `நன்மை பயக்கத் தக்கது` என்று உணர்ந்து இப்பொழுது கேட்பாய். `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்று நாடிகளிலும் ஒன்றில் பத்துநாள் பிராணன் இயங்குதல் யோக முறையாகும். மூன்று நாடிகளிலும் முப்பது நாள்கள் முறையாக அஃது அங்ஙனம் இயங்குமாறு ஒருவன் யோகத்தில் நின்றால்,மேரு மலையில் விளங்கும் சிவனாகவும் ஆய்விடுவான்.

குறிப்புரை :

மூன்றுக்கு - மூன்றின்வழி இயங்குதற்கு. செய்யுளில் சுட்டுப் பெயர் முன்வந்து, பின்னர் வரும் முப்பதைக் குறித்தது. ``சென்றிடும்`` என்றது, `செல்லுதல் இயல்பு` என்னும் பொருட்டாய், `அதுவே நெறி` என்பது உணர்த்திற்று. சேர - அம்முறையில் பொருந்த. `பொன்திகழ் குன்றிடை` என மாற்றிக்கொள்க. கயிலை, `மேரு` எனவும்படும். சுழுமுனை நாடியையும், `மேரு` எனக் கூறும் யோக நூல்கள். இங்கு, அதனையும் கொள்க.
இதனால், உள்ளே பார்த்திருத்தற்கு ஆவதொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாற்றிடு நூறு தலைப்பெய்ய லாமே. 

பொழிப்புரை :

சிவன் ஒன்றி நிற்றற்குரிய இம்முறையை அறிந்து இதன்படி, ஒன்றில் பத்து நாளாக மூன்று நாடிகளிலும் மாறி மாறிப் பிராணன் இயங்க, அம்முறை யானே அவனை ஆதார நிராதாரத் தாமரைகளில் வழிபட்டு நிற்பவர், அவ்வழிபாட்டினால் எட்டுத் திக்கும் தாம் இருந்த இடத்திலே விளங்க, அவைகளைப் பார்த்து (தமக்கு யோகம் கைவந்தமைக்கு) மகிழ்ச்சியுற்றுப் பின், அத்தாமரை களில் சிவனை முறையாகக் கண்டு நிற்பார்களாயின், நூல்களிற் சொல்லிய நூறாண்டுக் காலத்தை அவர்கள் குறையாது பெறுதல் கூடும்.

குறிப்புரை :

கூத்தவன் - கூத்தன். கூர்மை - நுட்பம். அஃது அன்னதாகிய முறையைக் குறித்தது. ``அங்கே`` என்றது, பின்வரும் பதுமங்களைச் சுட்டிற்று. ``ஏத்துவர்`` வினையாலணையும் பெயர். `பத்தினில் ஏத்துவர்` என மாற்றிக்கொள்க. எண்டிசை தோன்றுதலைக் கூறியது, யோகம் கைவந்தமை அறியும் குறி கூறியவாறு. பதுமர் - பதுமத்தில் இருப்பவர். `சாத்திடும்` என்பது பாடமன்று. இது, வருகின்ற திருமந்திரத்திற்குமாம்.
இதனால், நூறாண்டிற் குறையாது வாழ்தற்குரிய உபாயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே. 

பொழிப்புரை :

முதலில் யோகப் பயிற்சியால் நூறாண்டு வாழ்ந் தவர், பின்பு அம்முறை அவர்க்குக் கைவந்து நிற்றலால், அதனை எளிதாகச் செய்து, `ஆயிர ஆண்டு, (பின் பதினாயிரம், நூறாயிரம் என்று பல ஆயிர ஆண்டுக் காலம்) இருப்பர். பின்பு யுக முடிவு, அதன் பின் கோடிக் கணக்கான யுகம்` என்று இப்படிப் பலகாலமும் காலத்தை வென்றிருப்பர்.

குறிப்புரை :

`இவை, அவர்கள் விரும்பிய பொழுது` என்க. மூத்தல், உலகில் உள்ள பலர்க்கும் ஆண்டினால் முதியராதல், அறிவினால் முதியராதல் பிறவாற்றானும் கூடுமாகலின், ஈண்டு இவ்வுபாயத்தாற் பெறுவது ஆண்டின் முதிர்ச்சியேயாம். ஆயிரம் முதலியன பன்மை குறித்து நின்றன.
இதனால், மேற்கூறிய உபாயம் காலத்தை வெல்லுதற்கு எத்துணையும் பேருதவியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டங் குயருறு வாரே. 

பொழிப்புரை :

யோகத்தால் அளவற்ற காலம் வாழ்ந்தும் உடல் தளர்தல் இன்றி நின்று யோகக் காட்சியில் அளவற்ற காட்சிப் பொருள் கருத்துப் பொருள்களைக் கண்டு, பின் `அகம், புறம்` என்னும் வேறுபாட்டைக் கடந்தவர், தாம் முன்பு கண்ட பொருள்களுள் ஒன்றையும் பொருளாக மதியாமல் விடுத்துச் சிவம் ஒன்றையே பொருளாகக் கொண்டு, அதனோடு ஒன்றும் நிலையைப் பெறுதற் பொருட்டு வாழ்ந்து, அவ் வாழ்வில், காலமும் முடிவு எய்துதலைக் கண்டு, அதனின்றும் அக் காலத்தைக் கடந்து மேற்போவர்.

குறிப்புரை :

``அகத்துக் கண்டு`` என்க. அயல் - வெளி. `கோடி விட்டுச் சிவம் செறிய` என மாறுக. இறுதியில் உள்ள ``கோடி``, ``முடிவு`` என்னும் பொருளது. ``சிவம்`` என்றது, உயிரெதுகை.
இதனால், காலத்தை முற்றக் கடப்பாரது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

உயருறு வார்உல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே. 

பொழிப்புரை :

உலகத்தில் உடம்பையும், அது வழியாக வரும் பல பற்றுக்களையும் உடையவராய் இருந்தும் பலர் மேற்கூறியவாறு காலத்தை வென்று மேற்போகின்றார்கள். அதனால், உடம்பு எடுத்ததன் பயனையும் அவர்கள் அடைகின்றார்கள். ஆயினும், சிலர், அறிவில்லாமையால் காலச் சுழலைக் கடக்க மாட்டாது அதில் அகப்பட்டு அதன்வழியே வினையுட்படுகின்றனர். அவ்வறியாமை யானே அவர் இவ்வுடம்பு எடுத்ததன் பயனாகப் பெறவேண்டிய திருவருட்காட்சியைப் பெறமாட்டாதவராகின்றனர்.

குறிப்புரை :

`உயர்`, முதனிலைத் தொழிற் பெயர். `உலகத்தொடு கூடியும்` என உம்மையை மாற்றி யுரைக்க. ``பலர், சிலர்`` என்றது, பயனது அனுபவமும், அறியாமையாகிய இழிவும் குறித்தவாறு.
இதனால், காலத்தை வெல்லுதலும், அதனாற் பயன் பெறுதலும் அனுபவமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாம்
காணகி லாமற் கழிகின்ற வாறே. 

பொழிப்புரை :

அறிவின்மையால் மேற்கூறியவாறு திருவருளை உணரமாட்டாதவர், கால வயப்பட்டு அழிகின்றவரேயாவர். இனிக் கல்வியால் அறிவு பெற்றவரும் ஊக்கம் இன்மையால் தாம் கற்றறி மூடராகின்ற நிலைக்கு நாணாமல், நூலறிவைப் பிறர்க்கு இனிமை உண்டாக (க் கிளிப்பிள்ளைகள் போல) விரித்துரைத்துப் போவார்கள். இவ்வாறு இருதிறத்தாரும் உயர்ந்த பொருள்கள் பலவற்றை அறியமாட்டாதவராய் அழிகின்றமை இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`இரங்கத் தக்கது` என்பது சொல்லெச்சம். `நாண கிலாதார்` என்றதனால், `கற்றவர்` என்பது பெறப்பட்டது. கழிந்த பொருள் - மிக்க பொருள்; உயர்ந்த பொருள்.
இதனால், காலத்தை வெல்லும் அறிவும், ஊக்கமும் இல்லாதவரது குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலுமாகும்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

பொழிப்புரை :

எல்லாப் பொருள்களும் கால வயப்பட்டு நிலை யின்றி மறைந்துபோதலை உணர மாட்டாதவர், அதனை உணர்தல் கூடும். எப்பொழுதெனின், அவற்றை உளத்துட்கொண்டு ஊன்றி நோக்குவாராயின். இனி அந்நோக்கினாலே, கால வயப்படாது நிலைத்து நிற்கின்ற முதற்பொருளையும் காணலாம்.

குறிப்புரை :

``கழிகின்ற அப்பொருள்`` என்றாராயினும், `பொருள் கழிகின்ற அதனை` என்பதே கருத்தென்க. பின்னர் வந்த ``கழிகின்ற அப்பொருள்`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. மூன்றாம் அடியில் உள்ள ``கழிகின்ற`` என்பது வினையாலணையும் பெயர். அதனிடத்து, `கழிகின்றவற்றை நோக்கின்` என இரண்டாவது விரிக்க. ``நோக்கின் ஆகும்`` என மேலே கூட்டிமுடித்துப் பின் `அதனானே` என்பது வருவித்து உரைக்க.
இதனால், அவ்வறிவும், ஊக்கமும் பிறத்தற்கு வழி கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே. 

பொழிப்புரை :

அருள் உடையவனும், பிறப்பில்லாதவனும் ஆகிய சிவன் உயிர்களின் அகத்தே அவர்கள் காண்கின்ற குருமூர்த்தி வடிவாயும், புறத்தே எட்டுத் திசைகளாயும், முடிவில் ஒருவனேயாயும் இருப்பான். அவனே நிலையான இன்ப வீடும் ஆவான். உண்மையை ஆய்ந்துணர வல்லவர்க்கு, அவர்கள் அடையத்தக்க, முடிந்த பயன் மேற்சொல்லியவற்றை உணர்தலேயாம்.

குறிப்புரை :

``கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்; கண் ணுடையார் - கண்ணோட்டம் இன்மையும் இல்`` (குறள், 720) என்பவாகலின், கண்ணோட்டம் உடையவன் என்பதனைக் குறிக்க, ``கண்ணன்`` என்றார். பெயக் கண்டும் நஞ்சுண்டு அமையும் (குறள், 580) கண்ணோட்டத் திற்குச் சிவபிரான் ஒருவனே இலக்கியமாதல் வெளிப்படை. `சாதனை யாற் காலத்தை வெல்லும் யோகிக்கு இயல்பாகவே காலத்தைக் கடந்தவனே சார்பாவான்` என்றற்குப் பிறப்பின்மை கூறுவார், சார்ந்தாரைக் காக்கும் கண்ணோட்டத்தையும் உடன் எடுத்தோதினார். ``நந்தி`` என்றது பொதுப்படக் `குரு` என்றவாறு. முன்னர், ``உள்ளே`` என்றதனால், பின்னர், `வெளியே` என்பது பெறப்பட்டது. ``சிவகதி`` என்றதில் சிவம், இன்பம், பதம், பதவி. பயனை, `பதவி` என்றார்.
இதனால், மேல், ``கழியாத அப் பொருள்`` எனப்பட்டதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே. 

பொழிப்புரை :

மேற்கூறிய உண்மையை ஓர்ந்துணர வல்லவர்க்குக் காலத் தாக்கு இல்லை. ஆகவே, அவர்கட்கு இறப்பும் இல்லை. அவர்கள் மக்கள் வடிவில் காணப்படுகின்ற கடவுளாய் விளங்குவர். நூல்களின் முடிந்த பொருளைத் தேடிக் கண்டவர்கள் கண்ட பொருள் இதுவே. இதனைப் பெறவல்ல ஆற்றல் உடையவர்கட்கே இஃது உணர்த்தத் தகும்.

குறிப்புரை :

காலத்தை அதற்குரிய நமன்மேல் வைத்துக் கூறினார். நமனது தாக்குதலை ``நமன்`` என்றது ஆகுபெயர். நரபதி - நரனாகிய பதி. அறிவும், காதலும் இல்லாதார்க்குக் கூறின், அங்கணத்துள் உக்க அமிழ்துபோலப் 1 பயனில் சொல்லாய் முடியும் ஆதலின், `கூட வல்லார்கட்குக் கூறலும் ஆம்` என்றார். உம்மை, `சிந்திப்பித்தலும், தெளிவித்தலும் ஆம்` என எதிரது தழுவிற்று.
இதனால், கழியாத அப்பொருள் காணவல்ல முயற்சியை உடையார் பெறும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே. 

பொழிப்புரை :

மத்திமையாயும், வைகரியாயும் வெளிப்படுகின்ற மந்திரங்கள் உணர்த்தும் பொருளும், அவை உணர்த்தியவாற்றானே உள்ளே உணர்ந்து பற்றத்தக்க பொருளும் மேற்கூறிய பிறப்பில் பொருளாகிய சிவமேயாம். அச்சிவம் சிந்தையுள் நிலைபெறாது நிற்றற்கு, `சூக்குமை வாக்கு` எனப்படும் நாதம் புறம்பற்றி நிகழாது, சுழுமுனைவழி அகம்பற்றி நிகழ்தல் வேண்டும். அவ்வாறு நிகழின், அங்ஙனம் நிகழப் பெறும் சாதகன், ஆறு ஆதாரங்களிலும் அவ்வவ் வாதாரங்கட்கு ஏற்ப நிற்கும் சிவனாகவும் ஆய்விடுவான்.

குறிப்புரை :

`அகார உகாரங்கள் கூறும் பொருள் இது` என மாற்றிக் கொள்க. `அகாரம், உகாரம்` என்பன மத்திமை வைகரியான மந்திரங் கட்குக் குறி. சிந்தையுள் நிற்றற்கு `இது` என மீண்டும் எழுவாய் வருவிக்க. ``நின்றிட`` என்ற காரியப் பொருட்டாய வினையெச்சம், ``ஓடிட`` என்னும் காரணப் பொருட்டாய வினையைக் கொண்டு முடிந்தது. இவ்வாறன்றி, ``நின்றிட`` என்பதனை உடனிகழ்ச்சியாக வைத்து உரைப்பின், மகாரம் குழல்வழி ஓடுதலைக் கூறுதல் வெற் றெனத் தொடுத்தலாய் முடியும். ஆதாரங்கள்தோறும் படிமுறையால் நின்று பயன்பெறுவான் என்றற்கு, ஆறும் அமர்ந்திடுதலைக் குறித்தார். `சாதகன் சிவனாய் விடுவன்` என்றது `காலத்தைக் கடப்பன்` என்றவாறு.
இதனால், நாட வல்லார்கட்கு நண்ணும் பதம் இதுவே யாதல் யோக நெறியில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்
கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன்இவன் ஆகுமே. 

பொழிப்புரை :

சிவனது இருப்பிடத்தை ஒருவரும் அறிய மாட்டாது அல்லல் உறுகின்றனர். அதனைக் குருவின் உபதேசப்படி சிந்தித்துத் தெளிகின்றவர்கட்கு, அவன் என்றும் அழியாது உயிர்க் குயிராய் இருத்தல் விளங்கும். அவ்விளக்கத்தின்வழி அவனைக் கண்டால், அவன் காணுகின்றவனுக்கு வேறாய் இராமல் இவனேயாகி விடுவான்.

குறிப்புரை :

இவனேயாகி விடுதலாவது, இவன் செயல்கள் எல்லா வற்றிற்கும் அவனே முதலாய தன்மை விளங்க நிற்றல். `அது விளங்கவே, பின்னர் இவன் தானாய் நில்லாது அவனேயாய் விடுவன்` என்பது கருத்து.
இதனால், சாதகன் ஆறும் அமர்ந்திடும் அண்ணல் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை
அவன்இவ னாகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம தாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் சீவனேயாய் நிற்கும் முறையை உள்ளவாறு உணர்கின்றவர் ஒருவரும் இல்லை. அதனை, மாணவனே, உனக்குச் சொல்கின்றோம்; கேள். சீவன் அறிகின்ற ஓசை, ஒளி முதலிய புலன்களையும் சிவன் அச்சீவனின் பொருட்டு அறிந்து நிற்கின்றான். அதனோடு, சீவனது சுட்டுணர்வை நிகழ்வித்தும் நிற்கின்றான்.

குறிப்புரை :

`இதுவே சிவன் சீவனேயாய் நிற்கும் முறைமை` என்பது குறிப்பெச்சம். `சிவன் சீவனுமாய் நிற்கின்றான்` என்பதற்கு, `பொன்னே பூடணமாய் நிற்றல்போல` எனவும், `மரந்தானே, கிளை, இலை, பூ, காய் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `மகா ஆகாயந் தானே கடாகாயம், மடாகாயம் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `நீர்தானே நுரை, குமிழி, திவலை முதலியனவாய் ஆதல் போல` எனவும் பலர் பலவாறு விளக்கங்கூறி மலைதல் பற்றி, ``அவன் இவனாகும் பரிசறிவார் இல்லை`` என்றார். ஓசை ஒளி, உபலக்கணம். ஒன்றுதல் அறிவினால் என்க. வரம்புபட்ட சுட்டுணர்வை வட்டமாக உருவகித்தார்.
இதனால், ஞாயிறு கண்ணுக்குப் பொருள்களைக் காட்டுதல் போலச் சிவன் சீவனுக்கு எல்லாவற்றையும் அறிவித்தும், ஆன்ம போதம் கண் ஒன்றைக் காணுதற்குத் தானும் உடன்சென்று காணுதல் போலச் சிவன், சீவன் ஒன்றை அறிதற்குத் தானும் உடன்நின்று அறிந்தும் ஒற்றுமைப்பட்டிருத்தலே `அவன் இவனாய் நிற்கும் முறை` என, மேலே சுட்டியதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே. 

பொழிப்புரை :

ஆதாரச் சக்கரம் ஆறு, அதற்குமேல் உள்ள மதி மண்டலச் சக்கரம் ஒன்று, இந்த ஏழு சக்கரங்களும் உங்கள் உடம் பினுள்ளே ஏழுவகைத் தாமரை மலர்களாய் மலர்ந்து நிற்கும். அவைகள் யாவும் சிவனது இருப்பிடங்களே. அங்ஙனமாகவும் அவனை அடையும் முறையை நீங்கள் அறியவில்லை. மேற்கூறிய வாறு அவன் உங்களோடு ஒன்றாய் ஒட்டியிருத்தலை அறிந்து, நீங்களும் அவனின் வேறாகாது, அவனோடு ஒன்றாய் ஒட்டி அவனையே நினையும் உபாயத்தை உணர்வீர்களாயின், அங்ஙனம் உணர்பவர்களுக்குக் கருப்பங்கட்டிபோல இனிக்கின்ற அவனைக் கண்டுவிடலாம்.

குறிப்புரை :

யோகக்காட்சி கைவருதலும், ஞானச்செய்தி முறையில் முயலும் பொழுதே கூடும் என்றற்கு இதனைக் கூறினார். கட்டி, உவமையாகுபெயர். `இருப்பிடம்` என்றே போயினாராயினும், `அவ்விடத்து உள்ள பொருளை` என்றலே கருத்தாதல் அறிக.
இதனால், கழியாத அப்பொருளைக் காணுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்
காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே. 

பொழிப்புரை :

மேற்கூறியவாற்றால் சிவனை உணர்வோர்க்கு, அவன், `அயன், மால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன், சத்தி` என நிற்கின்ற நிலை வேறுபாடுகளும், தனது திருவருளை ஆன் மாக்களோடு ஒற்றித்து நிற்கவைத்து அவைகளை நடாத்துகின்ற முறைமைகளும் நன்குணர்தல் கூடும்.

குறிப்புரை :

எனவே, `ஆதார நிராதார தரிசனங்கள் எளிதில் கூடும்` என்பதாம். `இத்தகையோர்க்குக் காலத்தை வெல்லுதல் ஒரு பொருளன்று` என்பது கருத்து. ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல்லின் பின், `அவரை` என்பது எஞ்சி நின்றது.
இதனால், காலத்தைக் கடந்தாரது பெருமை கூறப்பட்டது.
சிற்பி