மூன்றாம் தந்திரம் - 15. ஆயுள் பரீட்சை


பண் :

பாடல் எண் : 1

வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்தம் மிகுத்திட் டிரட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே. 

பொழிப்புரை :

ஒருவனது வாழ்நாள் எல்லையை அளந்தறிகின்றவன் தனது கையை அளக்கப்படுபவனது தலையின்மேல் வைக்க, அஃது அவனுக்கு இயல்பான எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாளுக்குக் கேடில்லை. அவ்வாறன்றி, மிகுந்த எடையுள்ளதாய்த் தோன்றுமாயின், அவனது வாழ்நாள் அதுமுதல் ஆறுதிங்கள் அளவின தாம். மேலும், அஃது இரட்டிப்பான எடையுள்ளதாய்த் தோன்றின், அவனது உயிர்க்கு ஒருதிங்களில் பிறக்கும் சொல் `இறப்பு` என்பதாம்.

குறிப்புரை :

``நீத்தல்`` என்பது குறுகி நின்றது. `பிறக்கும்` என்பது சொல்லெச்சம்.
இதனால், ஒருவகைப் பரீட்சை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை உணர்ந்த வுணர்வது வாமே.

பொழிப்புரை :

உணர்விற்கு முதலாய் நிற்றலில் சொல்லும், இறைவனும் ஒரு நிகரானவர். (ஆயினும் இஃது உலகியலிலாம். ஆதலால்,) சொல்லை விடுத்தவரே இறைவனை உணர்கின்றவாராவர். சொல்லை விடுத்தவரது உள்ளத்தில் இறைவனும் அச்சொல்லைத் தம்மின் வேறாக உணர்ந்த உணர்வு வடிவாய் நிற்பன்.

குறிப்புரை :

எனவே, `வாய் வாளாமை கடவுட்டன்மையை மிகு விக்கும்` என்றவாறு. `ஈசனை உள்காது வாய்வாளாமை மட்டுமே உடையவர் சொல்லை விடுத்தவர் ஆகார்` என்றற்கு, ``ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர்`` என்றும், `நாத ஞானமும் பாச ஞானமே` எனவும், ஆதலின் `அதுவும் நீக்கற்பாலது` எனவும், `உணர்த்தற்கு ஓசை உணர்ந்த உணர்வது வாமே` என்றும் கூறினார்.
இதனால், வாய் வாளாமை இறையுணர்வோடு நிகழ்தல் வாழ்நாள் குறைபடாமைக்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடில்
நாமே உறைகின்ற நன்மை அளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே உலகில் தலைவனு மாமே. 

பொழிப்புரை :

ஒவ்வொரு மூச்சிலும் பிராண வாயு அழிதலை அறியும் அறிவு உண்டாகுமாயின், அது பயனுடையதாகும். அஃதாவது, நாம் நெடுங்காலம் இவ்வுலகில் வாழ்கின்ற நன்மையைக் கொடுக்கும். அதனால், ஆதார கமலங்களில் நிலைத்து நிற்றற்குரிய ஞானமும் கைவரும். அந்த ஞானம் கைவரப் பெற்றோர் உலகில் கட் புலனாய் நிற்கின்ற இறைவனாகி நிற்கும் பெருமையையும் அடைவர்.

குறிப்புரை :

எனவே, `வாயுப் பயிற்சி உடையவரை அத்தன்மை உடையவராக அறிக` என்பது குறிப்பெச்சம். போதம் - ஞானம்.
இதனால், வாயுப்பயிற்சி ஒன்றேயும் வாழ்நாள் குறை படாமைக்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தலைவன் இடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலந் தன்வழி நூறே. 

பொழிப்புரை :

இறைவன் கொடுத்த இடைநாடி பிங்கலை நாடி வழிகளைப் பயனுடையனவாகின்ற வகையில் சாதனை செய்பவர் உலகத்து அரியர். அந்நாடிகள் பயனுடையனவாய் விடின், அவற்றால் பஞ்சேந்திரியங்களும் தன்வழிப்படும். அவை தன்வழிப்பட்ட நிலையில் பின்னும் அச்சாதனையைச் செய்யின், அவ்வாறு செய் பவனது வாழ்நாள் நூறாண்டு அளவினதாய்க் குறைவின்றி நிற்கும்.

குறிப்புரை :

இடைநாடி பிங்கலை நாடிகள் பயனுடையன வாதல், அவை முறையே பிராண வாயுவை உள்வாங்குதற்கும், வெளி விடுதற்கும் உரியவாம் பொழுதாம். எனவே, அவற்றின் பொருட்டே அவை தரப்பட்டன என்க. ``ஆயிடில்`` எனப்பின்னர் வருதலின், வாளா, ``சாதிப்பார்`` என்றார். ஆதல், பயன்படுதல். `இடைநாடி பிங்கலை நாடிகள் இறைவனால் கொடுக்கப்பட்டனவாதலேயன்றி, அவை சத்தி சிவங்களாயும் நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``தையல் தலைவன் இடம் வலம்`` என்றார்; இது நிரல்நிறை. பின்னிரண்டி டத்திலும், `வலத்தால்` என உருபு விரிக்க. ``தன்வழி அஞ்சில்`` என அனுவாதகமாகக் கூறவே, அஞ்சும் தன்வழியவாதலும் பெறப்பட்டது. ``வழி`` இரண்டில் பின்னது, வாழ்நாளின் வழிமுறை.
இதனால், வாயுவசம், இந்திரியவசம், யோக அனுபவம் மூன்றன் கூட்டம் நிறை வாழ்நாட்குக் குறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறொரு பத்தாம் அமர்ந்த இரண்டையுந்
தேறியே நின்று தெளிஇவ் வகையே. 

பொழிப்புரை :

பிராண வாயு வலநாடி இட நாடிகளில் முறையே, `ஒன்று, ஆறு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் எண்பதாண்டு வரையிற் செல்லும். அவ்வாறன்றி, `ஒன்று, ஏழு` என்னும் முறையில் வெளிப்போகுமாயின், வாழ்நாள் அறு பதாண்டாம். இவ்விரண்டையும் உணர்ந்து, இவ்வாறே இடை நாடியின் வழி இயங்கும் இயக்கம் மிக மிக, வாழ்நாளின் எல்லை குறையும் என்று மேற்கூறுவனவற்றையும் உணர்வாயாக.

குறிப்புரை :

இடை நாடி வழியால் பிராண வாயு உட்செல்லின் உடல் வலிமை மிகும். அவ்வாறன்றி அவ்வழியே வெளிச்செல்லுமாயின், உடல் வலிமை குன்றும். ஒவ்வொரு முறையும் மூச்சு வெளிச்சென்று உட்புகும்பொழுது குறைந்தே புகுகின்றது என்பதுமேலெல்லாம் சொல்லப்பட்டது. அக்குறைவு வல நாசியின்வழி நிகழின் தீங்குமிக இல்லை. இடநாடியின் வழி நிகழின், தீங்கு மிகுதியாம். ஆகவே, கன்மத்துக்கு ஈடாகச் சிலர்க்குப் பிராண வாயு நெடுநேரம் வல நாசியின்வழி வெளிப்போதலும், சிலர்க்கு இடநாசியின்வழி நெடுநேரம் வெளிப்பேதாலும் உளவாகின்றன. அந்நிகழ்ச்சியைச் சரவோட்டம் அறியும் முறையாற் காணின், அவரவரது வாழ்நாள் எல்லையை அறிந்துகொள்ளலாம் என்பது கருத்து. இடை நாடி சத்தியை மிகுவிக்கும் வாயிலாதல் பற்றியே `சத்தி நாடி` எனப்படு கின்றது. அறியாமையால், உலகர் பிராண வாயுவை அது போகின்ற போக்கிலே விட்டிருப்பர். யோகியர் அதனைத் தம் வழிப்படுத்து முறைப்படி இயங்கச்செய்வர். அம்முறை, ``ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்`` (தி.10 பா.556) ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (தி.10 பா.558) ``வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே`` (தி.10 பா.561) என மேற்கூறப்பட்டது. இங்கும் வருகின்ற திருமந்திரத்துள், ``இடம் பெற ஓடிடில்`` எனக் குறிக்கப் படும். அதனால், ஏறுதல் இடநாடியின் வழி என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. ``தெளி இவ்வகையே`` என்றது சரவோட்டத்தின் பயன் முறையை விளக்கியவாறு. ``ஆறொரு பத்து`` என்னும் பெயர்ப் பயனிலை வினையின் இயல்பினதாய், ``எண்ணில்`` என்னும் எச்சத் திற்கு முடிவாயிற்று. `இவ்வாறாய் அமர்ந்த இரண்டையும்` என்க.
இதனால், சர ஓட்டத்தால் வாழ்நாள் எல்லையை அறியும் முறை இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே. 

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, எட்டு` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் ஐம்பதாண்டே` என்று அறியலாம். இனி, `ஒன்று, ஒன்பது` என்ற முறையில் இயங்கினால் அது முப்பத்து மூன்றாண்டேயாம்.

குறிப்புரை :

முவ்வகையாம் - மூன்று கூற்றில் ஒரு கூறாகின்ற `அது, முவ்வகையாம் முப்பத்து மூன்றே` என மாற்றுக.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

மும்மூன்றும் ஒன்றும் முடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறிய வகையில், `ஒன்று, பத்து` என்னும் முறையில் வெளிச்சென்றால், வாழ்நாள் இருபத்தெட்டு ஆண்டாகும். இனி, `ஒன்று, பதினைந்து` என்னும் முறையில் இயங்கினால், `வாழ்நாள் இருபத்தைந்து ஆண்டு` என்று அறியலாம்.

குறிப்புரை :

``இட வகை`` என்பதை, ``முடிவுற`` என்றதற்கு முன்னர்க் கூட்டுக. ``ஈராறு`` என்பதன்பின், `என்று` என்பது எஞ்சி நின்றது.
இதனால், அம்முறை, மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றெனில்
தேக்கலு மாகுந் திருத்திய பத்தே. 

பொழிப்புரை :

பிராணவாயு பகல் முப்பது நாழிகையும் இடநாடி வழியே வெளிப்போதுமாயின், `வாழ்நாள் பன்னிரண்டாண்டு` என்று வரையறுத்துவிடலாம். அதனை அநுபவமாகவும் காண முடியும். இடையே மாற்றம் புகாதொழிய ஒருநாள் முழுதும், (அஃதாவது அறுபது நாழிகை) பிராணவாயு இடை நாடி வழியே உள்வந்து வெளிச் செல்லுமாயின், `வாழ்நாள் இனிப் பத்தாண்டு` என்று துணியலாம்.

குறிப்புரை :

`பகல் முப்பதும் ஆகில், ஆறிரண்டை ஆக்கலும் ஆகும்; பார்க்கலும் ஆகும்` என்க. `புகல் அற, ஒன்று உள்ளிட்டுப் போக்கலும் ஆகும் எனில்` என மாற்றுக. ஒன்று, ஒருநாள். தேக்கல் - நிலைநாட்டல்.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

ஏயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயிரு நாலும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழவே நின்றிடில்
ஆயுரு வாறென் றளக்கலு மாமே.

பொழிப்புரை :

பிராண வாயு இரண்டு நாள் அளவு இடைநாடி வழியாக இயங்கின், உயிர் எட்டாண்டுகாறும் இடையூறுறின்றி உடலில் நிற்கும். மூன்றுநாள் இயங்கின், வாழ்நாளை, `ஆறு ஆண்டு` என்று அளந்து கூறிவிடலாம்.

குறிப்புரை :

``ஆயுரு`` என்பது வடநூல் முடிபு.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே. 

பொழிப்புரை :

வாழ்நாளை அளந்தறிகின்ற வகையில் நான்கு நாள்கள் பிராணவாயு இடைகலை வழியே இயங்கின், நான்கு ஆண்டுகள் உயிர் உடலிற் பொருந்தி நிற்கும். ஐந்து நாள் அவ்வாறு இயங்கின், தெளிவாக மூன்றாண்டு அளவில் வாழ்நாள் எல்லையைக் காணலாம்.

குறிப்புரை :

`கலக்கம்` என்பது திரிந்து நின்றது.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே. 

பொழிப்புரை :

பிராண வாயு பத்து நாள் இடை நாடி வழியே இயங்கின், உயிர் உடலிற் கலந்து வாழும் ஆண்டு இரண்டு என்பதை அறியலாம். பதினைந்து நாள் அவ்வாறு இயங்கின், `வாழ்நாள் ஓர் ஆண்டு` என்பதை மனம் பொருந்தக் கொள்ளலாம்.

குறிப்புரை :

``இரண்டையும்`` என்னும் உம்மை இறந்தது தழுவிற்று.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்திற் காண்பது மூன்றாம்
கருதும் இருப துடன்ஆறு காணில்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே. 

பொழிப்புரை :

பிராண வாயு இருபது நாள் இடைநாடி வழியே இயங்கினால், வாழ்நாள் ஆறு திங்களாம். இருபத்தைந்து நாள் இயங்கினால் மூன்று திங்களாம். இருபத்தாறுநாள் இயங்கினால் இரண்டு திங்களாம்.

குறிப்புரை :

ஆறு முதலியவை, `திங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், அம்முறை மற்றும் மூன்று கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றெனக்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே. 

பொழிப்புரை :

பிராண வாயு இருபத்தேழு நாள் இடைநாடி வழியே இயங்கின், அப்பால் ஒரு திங்களே வாழ்நாள் என்பதை மெய்ப்பித்துக் காட்டமுடியும். இருபத்தெட்டுநாள் இயங்கின், அப்பால் பத்து நாள்களே வாழ்நாள் என்று காட்டலாம்.

குறிப்புரை :

இயக்கம் இருபத்தேழு நாள் என்பது, ஒரு நாள் கூட இருபத்தெட்டு நாளாகுமாயின், எத்துணைத் தீங்கு மிகுகின்றது என்பது இங்கு ஊன்றி உணரத்தக்கது.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகைஆறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்றும் நாளே. 

பொழிப்புரை :

பிராண வாயு மேற்கூறியவாறு இருபத்தொன்பது நாள் இயங்கினும் இருபத்தெட்டு நாள் இயங்குதலோடு ஒப்பதேயாம்; வேறுபாடில்லை. இனி, முப்பது நாள் இயங்கின், வாழ்நாள் அப்பால் ஏழு நாளாகவே நிற்கும்.

குறிப்புரை :

பார் அஞ்சி நின்ற பகை - உலகம் அஞ்சுகின்ற பெருந்தீங்கு; இறப்பு. வாரம் - கூறு. `நாள், ஓர் அஞ்சொடு, ஒன்று, ஒன்று என ஒன்றும்` எனக் கூட்டுக.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகும்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே. 

பொழிப்புரை :

பிராண வாயு இடை நாடி வழியே முப்பத்தொரு நாள் இயங்குமாயின், வாழ்நாள் அப்பால் மூன்று நாளே. முப்பத் திரண்டு நாள் இயங்கின், அப்பால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்ல, அது வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற மன்றத்தின் இயல்பு தோன்றுவதாகும்.

குறிப்புரை :

கன்றிய நாள் - உயிர் உடலில் அழுந்தியிருக்கும் நாள். ``சென்று`` என்பது, `செல்ல` என்பதன் திரிபு.
இதனால், அம்முறை மற்றும் இரண்டு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

மனையினில் ஒன்றாகும் மாதம்மும் மூன்றும்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற ஓங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே. 

பொழிப்புரை :

உயிர் வளர்கின்ற மாதங்கள் முதற்கண் ஓர் அறை யில் ஒன்பதும், பின் நீர்க்குட்டத்தில் ஒன்றும் என்று எங்கள் நந்தி பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். (அஃதாவது தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து, பத்தாம் மாதம் நீரில் மிதந்து கிடக்கும் என்றவாறு) பத்தாம் மாதம் அவ்விடத்தை விட்டு அகன்று திருவருள் உணர்வோடு சிறப்புற்று வெளிவருமாயின், அது தன்னைப் பெறுதலாகிய பேற்றினால் உலகர்க்குத் தலைவனாதலும் கூடும்.

குறிப்புரை :

எனவே, `அவ்வாறின்றி வினைவயப்பட்டே வெளி வருமாயின், அளவற்ற உயிர்களுள் தானும் ஒன்றாய், மேற்கூறிய வாழ்நாள் எல்லைகளுள் ஒன்றைப் பெற்றுக் கழியும்` என்றதாயிற்று. ஒன்றாகும் - பொருந்துதல் உடையதாம்.
இதனால், யோக முயற்சி முன்னைத் தவம் உடையார்க்கே கூடும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
தவமும் தவமுடையார்க் காகும்; அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
-குறள், 262
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.

பண் :

பாடல் எண் : 17

ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளக்கின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறிந் தேனே. 

பொழிப்புரை :

வாழ்நாளை அளந்தறிதற்குக் கருவியாகிய (எனவே, உயிர் வாழ்தற்கு முதலாகிய) மூலாக்கினி, பிராண வாயு இவற்றின் பெருமைகளை அறிகின்றவர் உலகில் எவரும் இல்லை. அதனால், அவற்றை ஒழுங்குபட நிறுத்தாமையால் விரைவில் நீங்குகின்ற உயிரினது பெருமையையும் அறிகின்றவர் இல்லை. யான் திருவருளால் அவ்விரண்டையும் அறியப் பெற்றேன்.

குறிப்புரை :

எனவே, `யான் மேற்கூறியவை ஒருவரும் அறிந்திராத அருமறை` என்றவாறு.
இதனால், ஆயுள் பரீட்சை முறையின் அருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயிர் அத்தின்
பிறிவுசெய் யாவகை பேணிஉள் நாடிற்
செறிவது நின்று திகழும் அதுவே. 

பொழிப்புரை :

அறியவேண்டுவது, பிராணவாயுவின் இயக்கமும், அதனால் நிலைபெறுகின்ற ஐம்பொறிகளாகிய அறிவும் ஆகிய வற்றையே, `அறிவு` என்று சொல்லப்படுவது எதுவோ அதுவே, உலகில் `உயிர்` என்று சுட்டப்படுவது. அவ்வுயிர் உலகினின்றும் பிரிந்து போகாதவாறு அதற்குரிய முறைகளை அறிந்து, அறிந்த வழியிலே பேணிக் காப்பின், அது உடம்பில் அழுத்தம் உடையதாய் நிலைபெற்று விளங்கும்.

குறிப்புரை :

பின்னர் வரும், பிறிவு செய்யா வகையை அறிதற்கு, முதற்கண், ``அறிவது வாயுவொடு ஐந்தறிவாய`` என்றார். ``ஆய`` என்பது வினைப்பெயர். அதனிடத்து, `ஆயவற்றை` என உருபு விரித்துக்கொள்க. `அதனின்` என்பது, ``அத்தின்`` என மருவிற்று. ``அது`` என்றது, முற்போந்த உலகினை.
இதனால், `அறிவுடையார் ஆயுள் நீட்டிக்கும் முறையை அறிந்து அவ்வழியில் நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறைஅவ னாமே. 

பொழிப்புரை :

`அது` என்று பொதுமையிற் சுட்டப்படும் முதற் பொருள் செய்கின்ற அருள் அனைத்துயிர்க்கும் பொதுவாக உலகின்பத்தையும், உயர்ந்தோர்க்குச் சிறப்பாகப் பேரின்பத்தையும் தரும். அவ்வருளும், செந்தாமரை வெண்டாமரை மலர்களில் வீற்றிருக்கின்ற திருமகள், கலைமகள் என்னும் இருவர்க்கும் தலைவியாகிய உமையே. அதனால், வாழ்நாளை நீட்டிக்கும் அருளைப்புரியும் இறைவன், அவ்வுமைக்குத் தலைவனாகிய சிவபெருமானே.

குறிப்புரை :

`அதனால் அப்பெருமானை நினைந்தே வாழ்நாள் நீட்டிப்பில் முயல்க` என்பது குறிப்பெச்சம். ``அருளும்`` மூன்றில் முன்னது எச்சம்; ஏனையவை முற்று. `உலகத்திற்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மது, சிவானந்தத் தேன்.
இதனால், வாழ்நாள் நீட்டிப்பின் முயற்சிக்கு இன்றியமை யாததொரு துணை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே. 

பொழிப்புரை :

`உயிர்கள் பிறத்தல் வேண்டும்` என்று கருதிய இறைவனது குறிப்பின்படி அவற்றிற்குக் கிடைத்த அழகிய உடம்பு, `பிஞ்சு, காய், செங்காய்` என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்துவிடும். அதற்குள் பாசங்கள் ஆழ்ந்து போம்படி அதற்குரிய முறைகளில் பழகினால், பாசம் விலகி, ஞானம் மிகும்.

குறிப்புரை :

`அவ்வாறு முயலுதற்பொருட்டே, இவ்வாயுள் பரீட்சை கூறப்பட்டது` என்பது குறிப்பெச்சம். `குறிப்பதனால்` என உருபு விரிக்க. உடம்பை, `குரம்பை, பதி` என்பனவாகக் குறித்தார். ``ஆவது, அறும்`` என்பன முற்றுக்கள். ``பற்றறும்`` என்பதை, `செய்வார்க்கு` என்பதன் பின் கூட்டுக. உரைக்க - `ஆழ` என்பது குறுகிநின்றது. படி - முறை.
இதனால், இவ்வதிகாரத்திற்குக் காரணம் கூறப்பட்டது.
சிற்பி