மூன்றாம் தந்திரம் - 16. வார சரம்


பண் :

பாடல் எண் : 1

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

பொழிப்புரை :

கிழமைகள் ஏழனுள், `வெள்ளி, திங்கள், புதன்` என்னும் மூன்றில் இடநாடி வழியாகவும், `சனி, ஞாயிறு, செவ்வாய்` என்னும் மூன்றில் வலநாடி வழியாகவும், வியாழனில் வளர் பிறையாயின் இடநாடி வழியாகவும், தேய் பிறையாயின் வல நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண இயக்கமாகும்.

குறிப்புரை :

எனவே, மாறி இயங்குதல் உடல் நலத்திற்குப் பொருந்தாது என்பதாம்.
இதனால், சர ஓட்டத்தின் இயற்கைத் தன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்மூன்றும்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் நமக்கு மகிழ்ந்துரைத் தானே. 

பொழிப்புரை :

`பிராணன், மேற்கூறியவாறு, குறித்த கிழமைகளில், குறித்த நாடியின் வழியே இயங்குமாயின், ஞானத்தைப் பெறுதற்கு வாயிலாகிய உடம்பிற்கு யாதொரு குறையும் உண்டாகாது` என்று, அருள் வள்ளலாகிய நந்தி பெருமான் எங்கட்குத் திருவுளம் உவந்து அருளிச்செய்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 3

செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே.

பொழிப்புரை :

பிராணன், மேற்கூறியவாறு செவ்வாய், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வல நாடி வழியே இயங்குதல் வேண்டும் என்பதை அறிந்த யோகியை, `சிவன்` என்றே சொல்லலாம். அஃது அவ்வாறு இயங்காது மாறி நிகழும்பொழுது அதனை ஒத்த முறையில் இயங்கச்செய்து அதன் பயனை அறிபவர்க்கு, அப்பயன் சிவானந்தமாய் முடியும்.

குறிப்புரை :

மேலைத் திருமந்திரத்துள், ``காயத்துக்கு ஊனம் இல்லை`` என்றதனையும், இத்திருமந்திரத்துள், ``ஒவ்வாத வாயு வலத்து (ஒவ்வுமாறு) புரியவிட்டு`` என்றதனையும் இரண்டற்கும் பொதுவாமாறு கூட்டிப்பொருள் கொள்க. அங்ஙனங் கொள்ளவே, `பிராணன் முதலிற் கூறிய இயல்பில் இயங்காது மாறி இயங்கின், அஃது, உடல், இயற்கை நிலையில் இல்லாமைக்கு அறிகுறியாய், மேலும் உடலின் இயற்கை நிலையைக் கெடச்செய்யும்` என்பதும், `அதனால் யோகியானவன் தனது பிராணாயாம முறையால், ஒவ்வா இயக்கத்தை மாற்றி, ஒத்த இயக்கத்ததாக ஆக்குதல் வேண்டும்` என்பதும் போதரும். இத்திருமந்திரத்துள் வல நாடி இயக்கத்திற்குச் சொல்லியன யாவும் இடைநாடி இயக்கத்திற்கும் பொருந்துதல் எளிதின் அறியப்படும்.
`பிராணன் எஞ்ஞான்றும் ஒரு நாடி வழியாகவே இயங் குதலோ, அல்லது மாறி நிகழினும் அம்மாற்றம் முன்னை நிலையொடு பின்னை நிலை ஒத்த அளவினதாய் நில்லாது மிக்காதல் குறைந்தாதல் நிற்றலோ உளதாயின், உடல் தன் இயற்கை நிலைகெடும்` என்பது இம் மூன்று திருமந்திரங்களாலும் அறியப்படும். படவே, `அவ் இரு வகையும் ஆகாது ஒரு நிகரான மாற்றத்ததாமாறு கிழமைக் கணக்கில் வைத்து அமைக்கப்பட்டது` என்பதும் உணர்ந்து கொள்ளப்படும்.
இவ் விரண்டு திருமந்திரங்களாலும் சர ஓட்டத்தின் ஒத்த நிலையது பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மாறி வரும்இரு பால்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேஉயிர் உக்கிரம்
தேறி அறிமின் தெரிந்து தெளிந்தே. 

பொழிப்புரை :

இடை நாடி பிங்கலை நாடிகளாகிய வழியால், முறையே, `சந்திர கலை` என்றும், `சூரிய கலை` என்றும் ஆகின்ற பிராணன், எஞ்ஞான்றும் அவ்வாறே இயங்கி அப்பெயரையே பெற்று நில்லாமல் மாறி வரும். (அஃதாவது, இடை நாடியில் இயங்கி, `சந்திர கலை` எனப் பெயர்பெற்று நின்ற பிராணனே அந்நிலையினின்றும் மாறிப் பிங்கலையில் இயங்கி, `சூரிய கலை` எனப் பெயர்பெற்று நிற்கும். பின்னும் அச் சூரிய கலைதானே சந்திர கலையாய் மாறும். இம் மாற்றத்திற்கு முடிவில்லை) இனி, பிராணன் மேற்கூறியவாறு, `சந்திர கலை, சூரிய கலை` எனப்பெயர் பெறும்பொழுது, அவ்வந் நாடியின் வழி முன்னர் வெளிச் செல்லுதலையும், பின்னர் உட்புகுதலையும் உடையதாய் இருக்கும். நீர் ஊற்றுப்போல இங்ஙனம் சுரந்து முடி வின்றிச் சர ஓட்டமாய் ஓடுகின்ற பிராணன், மேற்கூறிய இரு நாடிகளின் வழி ஓடாது, நடு நாடி (சுழுமுனை நாடி) வழியே இயங்குமாயின், (அஃதாவது, பிராணாயாமமாய் அமையுமாயின்,) அஃது உடற்கே யன்றி, உயிர்க்கும் வலிமை தருவதாம். ஆகவே, அதனை அறிந்து, உலகீர், பிராணனை நடு நாடியிற் செலுத்தும் முறையைக் குருமுகமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுங்கள்.

குறிப்புரை :

`மதி வெய்யவன் இரு பால் மாறி வரும்; அவை இடை பிங்கலையிடை ஏறி இழியும்` என்க. முதல் அடியால், `மதி, வெய்யவன்` என்பன பொருள் வேறாதலைக் குறியாது, ஒருபொருள் தானே இடம் பற்றிப்பெறும் நிலை வேறுபாட்டினையே குறிக்கும் என்பது உணர்த்தியவாறு. இரண்டாம் அடி, அஃது அவ்வப்பெயர் பெறுங் காலத்தை உணர்த்திற்று. பால் - இடமும், வலமும் ஆகிய பக்கங்கள். `இரு பாற்கண்` என உருபு விரிக்க. மாறுதல் - வேறிடம் செல்லுதல். வருதல் - முன்னையிடத்திற்கு மீளுதல். `இருபாற்கண் வரும்` என இயையும். எனவே, ஏழாவது இறுதிக்கண் தொக்கதாம். மதியும், வெய்யவனும் ஆகுபெயர்கள்.
``உயிர்`` இரண்டனுள் முன்னது பிராணன்; பின்னது ஆன்மா. ``நடுவே`` என்பதன் பின், `இயங்கின்` என்பதும், `உக்கிரம்` என்பதன்பின் `ஆம்` என்பதும் எஞ்சி நின்றன. `இதனைத் தேறி` என எடுத்துக்கொண்டு, `அறிமின்` என்பதற்கு, `நடுவே இயங்குதற்குரிய வழியை` என்னும் செயப்படுபொருள் வருவித்து முடிக்க. `குருமுகமாக` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.
இதனால், சரவோட்டம் இரு நிலையது ஆமாறும், பின்னும் அதுதானே பிராணாயாமமாய்ப் பயன் தருமாறும், அப்பயனை எய்துமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி ஓடுத லாம்அகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி யுணர்ந்துகொள் உற்றே.

பொழிப்புரை :

பிராண வாயு வல நாடியால் நுழைந்து, இட நாடியால் வெளியேறுமாயின், அது, பிராணன் தனது நிலை கலங்கி இயங்குதலாம். ஏனெனில், அவ்வாறான ஓட்டத்தால் பிராணன் தனது வலிமையை மிக இழந்து நிற்கும். இனி, அதுதானே இட நாடியால் நுழைந்து வல நாடியால் வெளியேறுமாயின், `அது தன் இயற்கையில் உள்ளது` என அறிவாயாக.

குறிப்புரை :

`வலத்து உதித்து` என மாறுக. அகலுதல் - நீங்குதல். இதற்கு `வலிமையை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. ``ஆரும்`` என்பதன்பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. ``அதுவே`` என்ற தேற்றேகாரத்தால், உதித்தலும், ஓடுதலும் முற்கூறியதற்கு மாறாய் நிகழ்தல் பெறப்பட்டது. இராசி - இயல்பு.
இதனால், சரவோட்டம் பொதுவே நன்றாமாறும், தீதாமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
யிடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

பொழிப்புரை :

சுழுமுனையில் நில்லாமல், ஏனை இருவழிகளிலும் ஓடி, அதனால் வாழ்நாளைத் தேய்க்கின்ற பிராண வாயுவை யோகி தன் வசமாக்கிக் கொள்ளும் வழியிலே சென்று, அதனால் குண்டலி சத்தியை உணர்ந்தபின், அவ்வுணர்வு வாயிலாக அணையும் விளக்குப் போல மிக ஒளிவிடுகின்ற திரோதான சத்தியை அனுபவமாகக் காண்பான்.

குறிப்புரை :

அந்தணன் - முனிவன்; யோகி. கூடுதல் - அடைதல்; ``கூடியிடுகின்ற`` என்பது ஒருசொல். பணி - பாம்பு; குண்டலினி. தீபத்தின் - தீபத்தைப்போல. இதன்பின், திரோதான சத்தியைக் குறிக்கின்ற. `ஒன்று` என்னும் சொல் எஞ்சி நின்றது. முன் - முன்பே. `என்பான்` என எதிர்காலத்தால் கூறற்பாலதனை, துணிவு பற்றி ``என்றான்`` என இறந்த காலத்தாற் கூறினார். `யோக முறையால் குண்டலினி சத்தியை உணரப் பெற்றவன், அதனால் திரோதான சத்தி உண்மையை இனிது உணர்வான்` என்பது இம்மந்திரத்தின் திரண்ட பொருள். `உலகர்க்கு விளக்குப்போல நிற்கின்ற திரோதான சத்தி, யோகத்தில் ஞானத்தை எய்தினோர்க்கு அருட் சத்தியாய் மாறும் நிலையை அடையும்` என்றற்கு அணைகின்ற விளக்கை உவமையாகக் கூறினார். அதனானே, அஃது இனிது காட்சிப்படுதலும் பெறப்பட்டது.
இதனால், யோகப்பயிற்சி சத்திநிபாதத்திற்கு ஏதுவாதல் கூறும் முகத்தால், `அப்பயிற்சியை மேற்கொள்ளுதலே சரவோட்டத் தின் இயல்புணர்தற்குப் பயன்` என்பது கூறப்பட்டது.
சிற்பி