மூன்றாம் தந்திரம் - 17. வார சூலம்


பண் :

பாடல் எண் : 1

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது சூலம் மாறி மாறி வருகின்ற திசை களைச் சொல்லுமிடத்து, திங்களும், சனியுமாகிய கிழமைகளில் கிழக்காம். செவ்வாயும், புதனுமாகிய கிழமைகளில் வடக்காம். ஞாயிறும், வெள்ளியுமாகிய கிழமைகளில் மேற்காம். இக்கிழமை களில் சூலம் இவ்வாறாக நிற்கும்.

குறிப்புரை :

எஞ்சிய கிழமையில் நிற்கும் திசையை அடுத்து வரும் திருமந்திரத்திற் காண்க. அத்திருமந்திரத்தில், ``அக்கணி சூலம்`` என வருமாறே, இத்திருமந்திரத்திலும், ``சூலம்`` என்பதுடன் ``அக்கணி`` என்பதனைக் கூட்டிப் பொருள்கொள்க. பார் ஒத்தல் - நிலத்திற்குப் பொருந்துதல். செவ்வாயை `நில மகன்` (நிலத்திற்கு உரிமை யுடையவன்) எனச் சோதிட நூல் கூறும்.

பண் :

பாடல் எண் : 2

தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமும் ஆம்இடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலம்முன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே. 

பொழிப்புரை :

வியாழக்கிழமையில் சூலம் இருக்கும் திசை தெற்காகும். சிவபெருமானுடைய சூலம் (பயணம் செய்பவனுக்கும், யோகிக்கும்) இடப் பக்கத்திலும், பிற்பக்கத்திலும் இருப்பின் ஏற்புடையதாகும். ஆகவே, அப்பொழுது அவர்கட்குத் தீங்கு இல்லை. வலப் பக்கத்திலும், முற்பக்கத்திலும் இருப்பின் தீங்கு மிக விளையும்.

குறிப்புரை :

அக்கு அணி - எலும்பை அணிந்தவன். உம்மை இரண்டும் அசைநிலைகள். `சூலம் இடம் பின் ஆகில் ஆம்; துக்கம் இல்லை` எனவும், வலம் முன் தோன்றிடில் மிக்கதாகிய மேல்வினை மேன்மேல் விளையும் எனவும் கூட்டி வினை முடிவுசெய்க.
இவ் இரண்டு திருமந்திரங்களாலும் கூறப்பட்ட பொருள்கள் சோதிட நூல்களிலும் இவ்வாறே கூறப்படுகின்றன.
சிற்பி