நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம்


பண் :

பாடல் எண் : 1

இருந்தஇவ் வட்டங்கள் ஈரா றிரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றில் எய்துவன் தானே.

பொழிப்புரை :

மந்திரங்களைச் செபிக்கும் முறைகளுள் ஒன்றாதல் பற்றி மேலையதிகாரத்துள் பொது வகையாகக் கூறப்பட்ட திருவம்பலச் சக்கரத்தின் இயல்புகளை இனி இவ்வதிகாரத்துள் எண்பத்தொன்பது திருமந்திரங்களால் கூறுகின்றார்.
சக்கரங்கள் பலவற்றில், நெடுக்கும், குறுக்குமாகப் பன்னிரு, பன்னிரு கீற்றுக்கள் கீற, நூற்றிருபத்தோர் அறைகளாக அமைகின்ற சக்கரத்தில் கூத்தப் பெருமான் விளங்கித் தோன்றுவான்.

குறிப்புரை :

`வட்டங்களுள்` என ஏழாவது விரித்து, அதனை, ``ஒன்றில் எய்துவன்`` என்பதனோடு முடிக்க. ``தான்`` என்றது மேலை மந்திரத்தில் ``ஆடினான்`` எனப்பட்டவனைக் குறித்தல் வெளிப்படை. ``இருத்தி`` என்பதை முதலடியின் இறுதியிலும் கூட்டி பின், `அவ்வாறிருந்த` என உரைக்க. ஈராறு - பன்னிரண்டு; பன்னிருபத்து - நூற்றிருபது; அதனுடன் ஒன்று சேர்க்க நூற்றிருபத்தொன்றாகும்.
இதனால், திருவம்பலச் சக்கரத்துள் ஒன்றனை வரையுமாறு கூறப்பட்டது. பிறவற்றை வருகின்ற மந்திரங்களுள் கூறியருளுவார்.

பண் :

பாடல் எண் : 2

தான்ஒன்றி வாழ்இடம் தன்னெழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பேர் எழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே.

பொழிப்புரை :

தான்மேலே குறிக்கப்பட்ட பெருமான், ஒன்றி வாழ்தல், நடுவிடத்தை ஒட்டியிருத்தல். தன் எழுத்து சிகாரம். தன்பேர் எழுத்து, தனது திருப்பெயராகிய மூல மந்திர எழுத்துக்கள். அவற்றுள் சிகாரமாகிய ஒன்று முன்னே கூறப்பட்டமையின், இவை ஏனைய நான் கெழுத்துக்களாம். நாற்கோணம், நான்கு திசைகளிலும் இடை வெளி யாய் நீண்டு, நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு சக்கரத்தைப் பிரித்து நிற்கும் நேர்க்கோட்டு அறைகள். அவைகளில் ஐந்தெழுத்துக் களும் சிகாரம் முதலாக அமையும். ஒன்றிலே ஒன்றுதல், நடுவண தாகிய ஓர் அறையிலே பொருந்துதல். அரன், `ஹர`: என்னும் மந்திரம். இஃது `ஓம்` என்பதனை முன்னர்க்கொண்டு நிற்கும் என்பது ஆற்ற லால் விளங்கும்.

குறிப்புரை :

இடத்தில் நிற்பவற்றை ``இடம்`` என்றார். ``அந்நான்கு`` என்றதும், `எஞ்சிய நான்கிடங்களில் நிற்கும் எழுத்துக்கள்` என்றதேயாம். ``அவ்வரன்`` என்பதில் அகரம் பண்டறிசுட்டு. ``அரன்`` என்னும் சொல் இங்குத்தன்னையே குறித்து நின்றது. ஈற்றில் நின்ற `தான்`, அசை. ஏகாரம், `அரனாகிய` எனத் தேற்றமாயிற்று. இனி இச்சக்கரத்தைப் புலப்படக் காணுமாறு கீழே காண்க.
பெருந்திசை நான்கில் நான்கு சிகாரங்களும், கோணத்திசை (மூலை கள்) நான்கில் நான்கு சிகாரங்களும் உள்ளன. அவற்றை முதலாகத் தொடங்கி, `சிவாயநம` என ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் பெருந்திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் இருமுகமாகத் தொடர் தலும், கோணத் திசையில் உள்ள சிகாரம் ஒவ்வொன்றும் மூன்று முகமாகத் தொடர்தலும் காணலாம். ஆகவே, அவற்றைக் கிழக்கு முதலாகத் தொடங்கி வட கிழக்கில் மூன்று முகமும் ஓதி முடித்தால், இருபது (20) உருச் செபித்தலாகும். அவ்வாறு ஐந்து முறை திரும்பத் திரும்ப ஓதி, அதன் பின்னர்ப் பெருந்திசை முதலாக மட்டும் தொடங்கி ஓதி முடித்தால், நூற்றெட்டு (108) உருச் செபிக்கப்பட்டு முடியும். ஐம்பது முறை முற்ற ஓதி, இறுதியில் மேற்சொன்னவாறு பெருந் திசையில் தொடங்கிமட்டும் ஓதி முடித்தால், ஆயிரத்தெட்டு (1008) உருச் செபிக்கப்பட்டு முடியும். சித்தி பெறும் வரையில் இவ்வாறே இச்சக்கரத்தை வழிபட்டுப் பலமுறை ஓதுதல் செய்யத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 3

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை

குறிப்புரை :

இதனால், மேற்குறித்த சக்கரத்தின் நடுவண் நிற்கும் `ஹர`: என்னும் மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது. சிவனுக்கு இப்பெயர் பாசங்களைப் போக்குபவனாதல் பற்றி வந்தது. மெய்கண்ட தேவரும் தமது நூலுள் 1 இப்பெயரையே சிறந்தெடுத்தோதினார். `சிவன்` என்னும் பெயரது சிறப்பே இதுகாறும் கூறிவந்தமையின், இதனை இங்குக் கூறல் வேண்டினார்.

பண் :

பாடல் எண் : 4

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.

பொழிப்புரை :

எட்டுநிலை, மேற்காட்டிய சக்கரத்துள் நடு அறையைச் சுற்றியுள்ள அறைகள். அவற்றில் சிகாரம் நிற்றல் மேலே கூறப்பட்டது.
அவ்வெட்டில் கோணத்திசை (மூலைகள்) நான்கும் ஒழித்து எஞ்சிய நான்கிற்கும் நேர் நேராக நடு அறையுள் மேலைச் சக்கரத்தில் உள்ள `ஹர`: என்பதை நீக்கி ஹும், ஹௌம், ஹம், ஹ: என்பவற்றைப் பிரணவத்திற்கு மேலே பொறிக்கப் பெருமானோடு, பெருமாட்டிக்கும் உரிய சக்கரமாய் விளங்கும்.

குறிப்புரை :

இருமூன்று, ஆறாவது உயிரெழுத்து; ஊ. ஈரேழு, பதினான்காவது உயிரெழுத்து; ஔ. இவை தனியாய் நிற்றலேயன்றி, மேற்காட்டியவாறும் நின்று பீசங்களாம். விந்து, அம். நாதம், அஃபான்மொழி, சத்தி. `ஓங்கிட மந்திரம்பான்மொழி பாலேபட்டது` என வேறு தொடராக்குக.
இதனால், மேற்காட்டிய சிவ சக்கரம் சிவம் சக்திகளது சக்கரம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லார்உயிர் காக்கவல் லாரே.

பொழிப்புரை :

தேனோடு மலர்கின்ற இதயத் தாமரையுள் சிவன் அருட் சத்தியுடன் எழுந்தருளியிருக்கும் முறையை மக்கள் அறி கின்றார்களில்லை. அதனை அறிந்து பாசங்களை நீக்கி விட்ட ஆன்ம எழுத்தைச் சிவத்தை ஒருபோதும் விட்டு நீங்காத அருளெழுத்துடன் பிணைக்கவல்லவர் உளராயின், அவரே தம்மைப் பிறவிக்கடலில் வீழ்ந்து அழியாமல் காத்துக்கொள்ள வல்லவராவர்.

குறிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் நடுவண் நிற்கும் ஓர் அறை இதயத் தாமரையாக அறியத்தக்கது என்பது முதலிரண்டடிகளில் குறிப்பாற் கூறப்பட்டது. அவ்வறையைச்சூழ எல்லா இடத்தும் சிகாரம் நிற்றலைச் சிவன் சத்தியோடு ஒட்டியிருத்தலாகக் கூறினார். பின் இரண்டடிகளால் மேல், ``தானொன்றும் அந்நான்கும் தன்பேரெழுத் தாகும்`` (898) எனக் குறித்ததை, `வாயநம` என, எழுத்து இவை என்ப தும், அவை பொறிக்கப்படும் முறையும் இனிது விளங்கக் கூறினார். இச்சக்கரத்தில் உள்வட்டம் மூன்றும் அக வட்டங்களும், வெளி வட்டங்கள் இரண்டும் புறவட்டங்களும், ஆதலின், பாச எழுத்துக்கள் புறவட்டத்திலும், அவற்றுள்ளும் மல எழுத்து விளிம்பு வட்டத்திலும் நிற்பவாயின என்க. தேன், இதயத்தாமரையில் சிவானந்தமாம்.

பண் :

பாடல் எண் : 6

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஅத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

பொழிப்புரை :

இறைவன் தனக்கு இடமாக விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற திருவைந்தெழுத்து, முதற்கண் அவன் அங்ஙனம் எழுந் தருளியிருந்த தூல நிலை போகப் பின்பு அவனுக்கு மிக உவப்பான இடமாக அறியப்படுகின்ற சூக்கும நிலையைத் தனக்கு இடமாகும்படி கொண்டு அதன்கண் மிக விரும்பி எழுந்தருளியிருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகையால், இந்தச் சூக்கும பஞ்சாக்கரமே திருவம் பலச் சக்கரத்துள் கொள்ளப்படுவதாயிற்று` என்பது குறிப்பெச்சம்.
எனவே, இதனால், `மேற்கூறிய சக்கரத்தில் தூல பஞ்சாக் கரமும் கொள்ளத் தக்கதோ, அன்றோ` என எழும் ஐயத்தினை அறுத்த தாம். இதனானே, இது சூக்கும திருவம்பலச் சக்கரம் ஆதலும் பெறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

இருந்தஇவ் வட்டம் இருமூன் றிரேகை
இருந்த அதனுள் இரேகைஐந் தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்த அறை ஒன்றில் எய்தும் மகாரமே.

பொழிப்புரை :

இறைவன் அமர்ந்திருக்கின்ற மேற்சொல்லிய சக்கரத்தில் இருபத்தைந்து அறைகள் அமைந்துள்ள ஒரு பகுதியைத் தனியாக வாங்கித் தனிச்சக்கரமாகக் கொண்டு, அதன் நடுவிடத்தில் மகாரத்தைப் பொறிக்க.

குறிப்புரை :

எஞ்சிய அமைப்பு முறைகளை அடுத்த மந்திரத்தில் கூறி முடிப்பார். நூற்றிருபத்தொன்றாகக் காணப்படும் மேற் சொல்லிய சக்கர அறைகள் ஒன்று இருபத்தைந்து அறைகளாக அமைந்த நான்கு சக்கரங்களின் கூட்டாக அமைந்திருத்தலின் `அவற்றுள் ஒன்றை மட்டும் கொள்க` என்பார், அதுதானே பிறிதொரு சக்கரமாதலை உணர்த்தற்பொருட்டுச் செய்முறையை விரித்துக் கூறினார் என்க.

பண் :

பாடல் எண் : 8

மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஒகாரம் வளைத்திட் டுப்பிளந் தேற்றி
யகாரம் தலையா இருகண் சிகாரமா
நகார அகாரம்நற் காலது வாமே.

பொழிப்புரை :

மேற்சொல்லியவாறு நடுவே பொறிக்கப்பட்ட மகாரத்தைச் சூழ வகாரத்தைப் பொறியுங்கள்; பின்பு அவ்விரண் டையும் ஒகாரத்தால் வளைத்து, அவ் ஒகாரத்துள் உகாரத்தைத் தொடங்கி அடுத்த அறைகள் இரண்டிரண்டாகும்படி பிளந்து ஏறக் கீறிப் புறவட்டத்தில் இருபக்கத்து அறைகளைத் தலைகளாகவும், மற்றைய இருபக்கத்து அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு, தலைகளாகின்ற அறைகளில் யகாரத்தையும், கால்களாகின்ற அறைகளில் ஒன்றில் நகாரத்தையும், மற்றொன்றில் அகாரத்தையும் பொறித்து வழிபடுதலையும், செபித்தலையும் செய்யுங்கள்.

குறிப்புரை :

இதன் வடிவத்தைக் கீழே காண்க.
இதனால், உருவாகும் மந்திரங்கள், `அ உ ம வ சி ய` என்பதும், ` ந ம உ வ சி ய` என்பதும் ஆகும். இரண்டற்கும் முன்னே `ஓ` கொள்ளப்படும். அகாரம் முதலாகவும், நகாரம் முதலாகவும் தொடங்கும்பொழுது உள் வட்டத்திலிருந்தே தொடங்கிப் பலமுக மாகவும் செல்ல ஓதுதல் கூடுமாற்றை அறிந்து கொள்க. விளிம்பு வட்ட தலைக்குப் பக்கங்களில் உள்ள அறைகள் நடனத்தில் இறை வனது தலைசெல்லும் பக்கங்களாகவும், கால்களுக்கு நேரே உள்ள ஓர் அறை, நிற்கும் நிலை இட மாகவும், அவற்றின் பக்கத்தில் ஒற் றித்தும் இரட்டித்தும் உள்ள இடங்கள் நடனத்தில் தலை, கை, கால்கள் பெயர்ந்து செல்லும் இடங்களாகவும் கருதிக்கொள்க. இங்ஙனமெல்லாம் கருதிக்கொள்ளுதற்காகவே` தலை, கண், கால்` என உருவகித்து ஓதினார். சமட்டி, வியட்டிப் பிரணவங் களோடு தூல பஞ்சாக்கரம் அமைந்திருத்தலால், இது தூலத் திருவம்பலச் சக்கரம் ஆதல் அறியப்படும்.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் மற்றொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய தூலசக்கரத்தில்தானே முன் சொன்ன எழுத்துக்களை நீக்கி நடுவிடத்தில் நடுவிலே பிரணவத் தையும், (நடுவிடத்தை இருமுக்கோணத்தின் கூட்டாகக் கருதி) மேல் முக் கோணப் பகுதியில் சிகாரம் நான்கும், கீழ் முக்கோணப் பகுதியில் வகாரம் நான்கும், நடுவிடத்தைச் சூழ்ந்துள்ள உள்வட்டக் கட்டங்கள் எட்டினையும் முன்சொன்ன வாறே பகுதிப்படக் கருதி மேற் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `நம` என்பதனையும், கீழ்ப் பகுதி அறை ஒவ்வொன்றிலும் `ய` என்பதனையும், சுற்று வட்டத் தின் (விளிம்பு வட்டத்தில்) மேற் புறத்து இடப்பக்க மூலையிலும், கீழ்ப்புறத்து வலப்பக்க மூலையிலும், `சி` என்பதை நிறுத்தி, அவற்றின் இருபக்கக் கட்டங் களிலும் முறையே, `வா, ய, ந, ம` என்னும் எழுத்துக்களையும் பொறித்து வழிபட்டுச் செபிக்க.

குறிப்புரை :

இதன் வடிவம் வருமாறு:-
இதனுள், பிரணவத்தை முதலிற் கொண்டு, `நமசிவாய` என்பதை நான்கு முறையாலும், `சிவாயநம` என்பதை நான்கு முறையாலும் செபிக்க ஒரு வட்டமாம். ஐம்பத்து நான்குவட்டம் செபிக்க தூல சூக்கும பஞ்சாக்கரங்கள் தனித்தனி நூற்றெட்டு உருவாக முடியும். இருநூற்று ஐம்பத்து நான்கு வட்டம் செபிக்கின் அவை தனித்தனி ஆயிரத்தெட்டு உருவாக முடியும்.
இவற்றுள், தூல பஞ்சாக்கரத்தில் பாச எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும், பதி எழுத்து இரண்டும் தம்முள் இணைந்தும் ஆன்ம எழுத்து அருளெழுத்தோடும், திரோதான எழுத்தோடும் தொடர்புற்றும் நிற்றல் அறிந்துகொள்க.
சமட்டிப் பிரணவத்தோடு `தூலம், சூக்குமம்` என்னும் இருபஞ்சாக்கரங்களும் செபிக்கப்பட நிற்றலால் இது சூக்குமா சூக்கும திருவம்பலச் சக்கரமாகும். சூக்கும சக்கரம் தவிரப் பிற்கூறிய இரண்டிற்கும் தலை, கால் பக்கங்கள் உளவாதலை அறிக.
இதுகாறும் விளக்கப்பட்டு வந்தவற்றுள் சூக்கும சக்கரம் வீடுபேற்றினை விரும்புவோர்க்கும், தூல சக்கரம் உலக இன்பத்தை விரும்புவோர்க்கும், சூக்குமா சூக்கும சக்கரம் இரண்டனையும் விரும்புவோர்க்கும் உரியனவாம் என்க.
இதனால், வேறொருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசி வயய நமசிவா
ஆயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம்தொட் டந்தத் தடைவிலே.

பொழிப்புரை :

`சிவாயநம` என்பதை ஒன்று, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டாம் எழுத்துக்களை முறையே முதலில் வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே மேற்கூறிய சக்கர அறைகளில் பொறிக்கச் சிகாரமே முதலாகத் தொடங்கி, முடிவாகவும் முடியும்.

குறிப்புரை :

`இதுவும் ஒருவகைத் திருவம்பலச் சக்கரமாம்` என்பது கருத்து. அச்சக்கரம் ஆமாறு:-
மேற்கூறிய சக்கரங்களைக் கொள்ளமாட்டாதவர் பொருட்டுக் கூறப்பட்டது. ஐந்தெழுத்தின் பேதங்கள் பலவும் இதில் அடங்கி யுள்ளன என்பது உட்கிடை. இரண்டாம் அடியில் வகர ஆகாரம் செய்யுள் நோக்கிக் குறுக்கலாயிற்று. இவ்வடியின் இறுதியை வேறு வகையாக ஓதுதல் கூடாமையறிக.
இதனால், மற்றும் ஒருவகைத் திருவம்பலச் சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

அடைவினில் ஐம்பதும் ஐயைந் தறையின்
அடையும் அறைஒன்றுக் கீரெழுத் தாக்கி
அடையும் அகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்தைம்பத் தொன்றும் அமர்ந்ததே.

பொழிப்புரை :

இதுமுதல் ஐந்து மந்திரங்களால் பெரியதொரு திருவம்பலச் சக்கரம் கூறுகின்றார். எனவே, இது பேரம்பலச் சக்கர மாம். பெருமை, எல்லா மந்திரங்களும், எல்லா எழுத்துக்களையும் கொண்டிருத்தல். இதனால், முன்னவை சிற்றம்பலச் சக்கரங்களாய் நிற்பனவாம். சிறுமை, சிலமந்திரங்களையே கொண்டிருத்தல்.
மேற் சொல்லிய வகையில் நெடுக்கில் ஐந்தும், குறுக்கில் ஐந்துமாக இருபத்தைந்து அறைகள் உள்ள சக்கரத்தில் மாதுரு காட்சரங்கள் (மூல எழுத்துக்கள்) ஐம்பதும் அடங்கி நிற்கும். அம் முறையில் உயிரெழுத்துப் பதினாறு, உடலெழுத்து முப்பத்தைந்து (வட மொழி எழுத்துக்கள்) ஆக ஐம்பத்தொன்றினையும் `அ, ஆ` முதலாக முறையே ஓர் அறைக்கு இரண்டாக வைத்துப் பொறித்துவர, ளகாரம் ஈறாக மேற்கூறியவாறு ஐம்பது எழுத்துக்களும் நிரம்பும். அதற்குமேல் ஐம்பத்தொன்றாவது எழுத்தாக நிற்பது க்ஷகாரம். அதனை எல்லா எழுத்திற்கும் பொதுவாகிய `ஹ` என்பதுடன் கீழ்வரிசை அறை ஐந்தில் நடு அறையின் கீழ் வெளியில் பொறித்துவிடல் வேண்டும்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், ``அகாரம்`` என்றது ஹகாரத்தை யேயாம். அடைவு, நெடுங்கணக்குமுறை. `அமர்ந்தது` என, இடம் வினைமுதல்போலச் சொல்லப்பட்டது. `அமர்ந்தது சக்கரம்` எனச் சொல்லெச்சம் வருவித்துமுடிக்க.

பண் :

பாடல் எண் : 12

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம்அதனுள் வட்டம்
அமர்ந்த அசபையாம்அத னுள்வட்டம்
அமர்ந்த இரேகையும் ஆகின்ற சூலமே.

பொழிப்புரை :

சதுரத்தில் அமைந்த மேற்கூறிய சக்கரத்திற்கு வெளியே அதனை உள்ளடக்கி `புறம், நடு, உள்` என மூன்று வட்டங்களை வரைந்து, சதுர சக்கரத்தில் அறைகள் உண்டாதற் பொருட்டுக் கீறியுள்ள கீற்றுக்களை வெளியே நிற்கும் புற வட்டம் வரையில் நீட்டி, மேலும் வெற்றவெளியிலும் செல்ல நீட்டி, அக்கீற்றுக்களின் முனைகளைச் சூலவடிவாக ஆக்குதல் வேண்டும். பின்னர் வெற்ற வெளியை ஒட்டிநிற்கும் புறவட்டத்தில் உள்ள அறை களில் ஒவ்வொன்றிலும் `ஹர` என்பதையும், நடுவட்ட அறைகளில் `ஹரி` என்பதையும், சதுரத்தை அடுத்து நிற்கும் உள்வட்டத்தில் `ஹம்ஸம்` என்பதையும் பொறித்தல் வேண்டும்.

குறிப்புரை :

`ஹர` என்பதும், `ஹரி` என்பதும் தமிழ் முறையில் அடுக்கிக் கூறப்பட்டன. அடுக்குக்கள், பன்மைபற்றி வந்தன. அசபை யாவது, அம்ஸ மந்திரமாதல் வெளிப்படை. `ஆகின்ற` என்றது முற்று.

பண் :

பாடல் எண் : 13

சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழூம்ஓங் காரத்தால்
சூலத் திடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்
தால்அப் பதிக்கும் அடைவது ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சூலங்கள் ஒவ்வொன்றின் முனை யிலும் சத்தி பீசம் (ஹ்ரீம்) காணப்படும்; அங்ஙனம் காணப்படுதல் தன்னைச் சூழ நிற்கும் ஓங்காரத்துடனாம்.
இனி ஒரு சூலத்திற்கும், மற்றொரு சூலத்திற்கும் இடையே யுள்ள வெற்றிடங்கள் ஐந்திலும் இடத்திற்கு ஒன்றாக ஐந்தெழுத்துக்கள் பொறிக்கப்படும். இதுவும் மேற்கூறிய சக்கரத்தின் முறையாம்.

குறிப்புரை :

`இடைவெளி அஞ்செழுத்தால் தோற்றிடும்` என்க. ஆல் உருபு இரண்டும் உடனிகழ்ச்சிக்கண் வந்தன. அடைவது - அடையும் இடம். இடமாவது அவ் இடைவெளி என்க. ஐந்தெழுத்து இவை என்பது வருகின்ற மந்திரத்தில் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 14

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகார ஒகாரம தஞ்சாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே.

பொழிப்புரை :

அகார, இகார, உகார, எகார, ஒகாரங்களே மேற் கூறிய அவ் ஐந்தெழுத்துக்களாம். அவ் வெழுத்துக்களையுடைய ஐந்து ஓங்காரங்களே புறவட்டத்திற்குமேல் மற்றொரு வட்டமாய் நிற்கும். இனி, அறைகளாய் நில்லாது சதுரத்தின் மேல் பொதுவாய் நிற்கும் இடைவெளிகளில் பஞ்சாக்கர பேதங்களுள் ஒன்று எழுதப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

``அது`` என்றது, மேற்சொன்ன அஞ்செழுத்தைத் தொகுதி வகையாற் சுட்டிற்று. முன்னிரண்டடி சொற்பொருட் பின்வருநிலை.

பண் :

பாடல் எண் : 15

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துட் சந்தியில்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே.

பொழிப்புரை :

மேல் ``நம் பேர்`` என்றது சிவமூல மந்திரத்தை யாம். அதன் பேதங்களில் இறுதியானதாகிய சிகார வகாரங்கள் இணைந்துநிற்கும் மந்திரம், வளைந்து நிற்கும் வட்டங்கட்கு உள்ளே சதுரத்திற்கும் அவற்றிற்கும் இடையே உள்ள சந்தி அறைகளில் நிற்பதாம். இங்கு எடுத்துக்கொண்ட சக்கரத்தின் இயல்பு இவ்வாறாம்.

குறிப்புரை :

இதனுள், சதுரத்திற்கு மேல் உள்ள சந்தி அறை ஒவ் வொன்றிலும் `சிவ` என்பது பொறிக்கப்பட வேண்டும் என்பது கூறப்பட்டமை காண்க. ``சக்கரம் ... ... இயல்பிது வாமே` என்றது முடித்துக்கூறி முற்றுவித்தது. சோர்வு, பொதுவாய் நிற்றல். `சோர்வுற்ற சந்தி` என இயையும். இதனுள், எல்லா மந்திரங்களும், எல்லா மூல எழுத்துக்களும் அடங்கியுள்ளன என்பது கருத்து. வடமொழி நோக்கில் எழுத்துக்கள் மிகப் பலவாதல் பற்றி அவையும் அடங்குதற் பொருட்டு அறை ஒன்றில் இரண்டெழுத்துக்களை அமைக்குமாறு விதித்தார். எனவே, இதனைத் தமிழ் முறையில், மேல்வரிசையில் உள்ள ஐந்து அறைகளில் மட்டும் `அ, இ, உ, எ, ஒ` என்னும் ஐந்து குற்றெழுத்துக்களோடு அவற்றிற்கு இனமான ஆ, ஈ, முதலிய ஐந்து நெட்டெழுத்துக்களையும் சேர்த்து இரண்டிரண்டெழுத்தாக முறையே எழுத, எஞ்சி நிற்பவை இருபது அறைகளாம். அவற்றில் முதல் இரண்டு அறைகளில் `ஐ, ஔ` என்னும் இரு நெட்டெழுத்துக்களை யும், அவற்றின்பின் `க,ங` முதல் `ன` ஈறான பதினெட்டெழுத்துக் களையும் எழுத, இருபத்தைந்து அறைகளும் எழுத்துக்களால் நிரம்பி நிற்கும்; வடமொழி வகையில் அமைந்த சக்கரத்தில் `க்ஷகாரம்` எழுதப் பட்ட இடத்தில் `அஃகேனம்` என்பதை எழுதலாம். `ஓம், ஹ்ரீம், ஹர, ஹரி, ஹம்ஸ:, ஸோஹம், ‹ிவ`என்பவற்றை, `ஓம், க்ரீம், அர, அரி, அம்ச, சோகம், சிவ` என எழுதிக் கொள்ளலாம். அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களைத் தமிழில் எழுதுவதில் தடையொன்றும் இல்லை. ஆதலின், இச்சக்கரம் வடமொழி கூறுவார்க்கேயன்றித் தமிழ் கூறுவார்க்கும் உரியதாதல் பெறப்படுதலின், அதனை, இவ்வாற்றால் அறிந்து செய்து கொள்க.
வடமொழியில், `எ, ஒ` என்னும் குற்றெழுத்துக்கள் இல்லை; ஆயினும், அவை மந்திரங்கட்கு வேண்டப்படுகின்றன. அதனால், தமிழிலிருந்து அவை அவற்றில் கொள்ளப்படுகின்றன. வடவெழுத் துக்களில் பல தமிழில் இல்லையாயினும் மந்திரங்களைத் தமிழாகக் கூறுமிடத்தில் தமிழ் முறையிலே அவை சொல்லப்படலாம். அது குற்றமாகாது. `குற்றமாம்` எனின், இந்நாயனாரும், பிற அருளா ளர்களும் அவற்றைத் தமிழ் முறைப்படியே கூறியிருத்தல் குற்றமாய் விடும். அம்முறை செய்யுட்களிற் கொள்ளப்பட்டது எனின், செய் யுளில் குற்றம் ஆகாத ஒன்று வழக்கில் குற்றமாய்விடும் என்றல் ஏற்கத் தக்கதாகாது. நாயனார் தம்மை, இறைவன் தன்னைப் பலபடியாலும் தமிழால் போற்றும் முறையை அருளிச் செய்யவே மூலன் உடம்பில் இருக்கவைத்தான் எனப் பாயிரத்துட் கூறியிருத்தல் 1 பொருட்படுத்தி உணரத்தக்கது.
பஞ்சப் பிரம மந்திரத்தின் பீசங்களுள் ஈசானம், தற்புருடம் இரண்டற்கும் முறையே `ஒ, எ` என்னும் குறில்களே கொள்ளற்பாலன என்பது ஏனைய மூன்றன் பீசங்களையும் நோக்கினால் நன்கு தெரியவரும். ஆயினும், அங்கு நெடிலே கொள்ளப்படுகின்றன. `பிரம மந்திரத்திற்குக் குறில்களும், கலா மந்திரம், அங்க மந்திரங்கட்கு நெடில்களும் பீசங்களாகும்` என்பதே அம் மந்திரங்களைக் கூறிய நூற்குக் கருத்தாகலின், பிரம மந்திரங்கள் இரண்டற்கு நெடிலைக் கொள்ளுதல் ஏற்புடைத்தாகாமை அறிக.
இவ் ஐந்து மந்திரங்களாலும் பெரியதொரு திருவம்பலச் சக்கரத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

இயலும்இம் மந்திரம் எய்தும் வழியில்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா யிருந்ததே.

பொழிப்புரை :

மேற்சொல்லிய சக்கரத்தில் உள்ள மந்திரங்கள் பொறிக்கப்படும் வழியையும், பொறித்து வழிபட வேண்டிய முறை களையும் அறிந்தால் அவ்வாறு அறிபவர்கட்கு இறைவன் அவர்களது உணர்வு தெளிவுபெறும்படி செய்வான். இனி, அம்மந்திரங்களில் ஒவ் வொன்றும் நிலம் முதலிய மா பூதங்களை வழிபடுவதற்கு அமைந்த வித்துக்களில் (பீசாக்கரங்களில்) ஒவ்வொன்றின் முன்னதாயிருக்கும். அதுவும் அவை எய்தும் வழிகளில் ஒன்றாகும்.

குறிப்புரை :

இதனுட் சிறப்பாகச் சொல்லியது, நிலம் முதலிய பூதங்கட்கு உரிய `ஹ்லாம், ஹ்வீம், ஹ்ரீம், ஹ்யைம், ஹ:` என்னும் வித்தெழுத்துக்கள் மேற்கூறிய சக்கரத்திலுள்ள `ஹம்ஸ:, ஹரி, ஹர, ஹ்ரீம், ‹ிவ` என்னும் மந்திரங்கட்கு முன்னே சேர்த்துச் சொல்லப் படும் என்பது. `இவ் வித்தெழுத்துக்கள் இம்முறையே நிவிர்த்தி முதலிய கலைகட்கும் உரியன. என்பது` சிவஞான சித்தியாரிலும் (சூ. 2 - 67, 68) சொல்லப்பட்டது. `இது பற்றியேமேலைச் சக்கரத்தில் சூலங் கட்கு இடையே அகரம் முதலிய ஐந்து குற்றெழுத்துக்களும் பொறிக்கப் பட்டன` என்பது கருத்து.
நிலம் முதலிய பூதங்களைச் செய்யுள்பற்றி முறை பிறழக் கூறினார். முயலுதல் - வழிபடுதல். இங்கு ``முன்`` என்றதை எழுத்திலக்கணத்துள் புணர்ச்சி விதிகளில் `முன்` என்பது போல இடமுன்னாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்திற்கு எய்தியதன்மேல் மற்றொரு செய்தி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஆறெட் டெழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட் டதன்மேலே விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமஎன்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் உள்ள ஐம்பத்தோர் எழுத்துக்களில் நாற்பத்தெட்டாம் எழுத்துடன் (`ஸ்` என்பதுடன்) ஆறாம் எழுத்தையும், (`உ` என்பதையும்) பதினான்காம் எழுத்தையும் (`ஔ` என்பதையும்) ஏறச்செய்து, (`ஸு` என்றும், `ஸௌ` என்றும் ஆக்கி,) அவற்றின் இறுதியில் முறையே விந்துவையும் நாதத்தையும் சேர்த்து ஒலிக்கப் பண்ணிப் பின்பு, `சிவாயநம` என்று உச்சரித்தால் மூன்று மலங்களும் அலறி ஓடிவிடும்.

குறிப்புரை :

`ஏற இட்டு, சீற இட்டு` என்பவற்றில் அகரங்கள் தொகுத்தலாயின. ``கூறிட்டு`` என்பது கூறிட என்பதன் மரூஉ. கூப்பிட்டு என்றது. இலக்கணை. இதனுட் கூறப்பட்டது, `திருவைந் தெழுத்தை, `ஓம் ஸும் ஸௌ: சிவாயநம` எனச் செபித்தல் மிகச் சிறந்ததாகும்` என்பதும் `அதன் பயன் வீடுபேறே` என்பதுமாம்.
இதனால், மேலெல்லாம் பலவகைப்படக் கூறிவந்த திருவைந் தெழுத்துச் செபத்திற்கு ஆவதொரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே
பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே.

பொழிப்புரை :

சிவனும், சத்தியும் தம்முள் வேறல்லர். ஆதலால், அவருள் ஒருவர்க்கு உரிய பீசங்களிலும், மந்திரங்களிலும் மற் றொருவர் பொருந்தியே நிற்பர். என்றாலும் இருவரையும் வேறுபோல எண்ணி, இருதிறத்து மந்திரங்களையும் செபிக்கின்ற செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.

குறிப்புரை :

`உண்மையில் இருவரும் வேறல்லராயினும் வழி பாட்டில் வேறுபோல நின்றே பயன் தருவர்; ஆதலின், அவ்வாறே வழி படல் வேண்டும்` என்பதாம். வழிபாட்டில் அவ்வாறு நிற்றல் வழிபடு வோரது இயல்புபற்றி என்க.
`உள்ளே` என்பவற்றுள் இரண்டாவதன் இறுதியில், `இருக்கும்` என்பது எஞ்சிநின்றது. `எனினும் வேறுபோல எண்ணி` என்க. இப்பொருட்கு, ``அக்கரம்`` என்பன ஒருமருங்கு ஆகு பெயராம். ``இருந்திட`` என்பது ``ஆளர்`` என்பதில் ஆளுதல் தொழிலோடு முடிந்தது.
இனி, இதற்கு மற்றோர் உரை:- சிவனது எழுத்தும், சக்தியின் எழுத்திற்கு இடையில் நிற்கும். அவ்வாறே, சக்தியின் எழுத்தும் சிவன் எழுத்திற்கு இடையில் நிற்கும். இந்நிலைமையை ஓர்ந்துணர்ந்து, இருவரது எழுத்துக்களும் இணைந்திருக்கச் செபிக்கும் செயல் உடையவர்களே மெய்ப்பொருளை உணரப் பெறுவார்கள்.
கு-ரை: இவ்வுரையாற் பெறப்படுவது, `சிவ` என்னும் மந்திரமே யாதலும், அதனைத் தொடர்பாக ஓத, சிவசத்தியரது எழுத்துக்கள் மேற்கூறியவாறு நிற்றலும் அறிந்துகொள்க. இப் பொருட்கு, ``அண்ணல், நல்லாள்`` என்பன ஆகுபெயர்கள். இவ் இரண்டனையும் இதற்கு உரையாகக் கொள்க.
இதனால், மேலைச் சக்கரத்துள், பொறிக்கத்தக்க மந்திரங்களுள் தலையாயதன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கமதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் சந்திகளில் உள்ள குற்றெழுத்துக்களில் முதலாவதாகிய அகாரத்தை வாங்கி அடியிலும், இகாரத்தைவாங்கி முடியிலும் வைத்து இடையில் `ஹர` என்னும் மந்திரத்தை வாங்கியிட்டு நோக்கினால் இலிங்கமாய்த் தோன்றும். ஆதலின் அவற்றை அம்முறைப்படி மூலாதாரம், இருதயம், புருவநடு என்பவற்றில் வைத்துத் தியானித்து மகாரத்துடன் கூட்டிப் பிராணா யாமத்துடன் செபித்தால், கூத்தப்பிரானது ஒளிவடிவு காட்சிப்படும்.

குறிப்புரை :

இங்குக் கூறிய முறையில் இலிங்க வடிவம் அமையுமாறு:-
இவற்றை மகாரத்துடன் கூட்டி செபிக்குமாறு, `அம் இம் ஹரோம்` என செபித்தலாம். `அம், இம்` என்பன அம்ச மந்திரம் போல வாயுப்பயிற்சியைத்தரும். ``தொம்`` என்பது நடனக் குறிப்பு.
இதனால், மேலைச் சக்கரத்துள் நின்ற சில எழுத்துக்கள் மந்திரம் என்பவற்றது சிறப்புணர்த்தும் முகத்தால் அவை தம்முட் கூடிநின்று பயன் விளைக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அவ்வுண்டு சவ்வுண் டனைத்தும்அங் குள்ளது
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்குங் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் றானே.

பொழிப்புரை :

எங்கே அகாரமும், சகாரமும் உள்ளனவோ அங்கே அனைத்துப் பொருள்களும் உள்ளனவாம். இவ்வாறு, இந்த இரண் டெழுத்துக்களில் எல்லாப் பொருளும் அடங்கிநிற்கின்ற நுட்பத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறியவல்லவர்க்குச் சத்தி வடி வாகிய சிவன் சகாரத்திலே உளனாய்த் தோன்றுவான்.

குறிப்புரை :

`அ, ச` என்பவை விந்துவோடு கூடியன என்பதும், அவ்வாறே, ஈற்றில் உள்ள `\\\\u2970?` என்பது நாதமாகிய விசர்க்கத்தோடு கூடியது என்பதும் கருத்துக்களாம். எனவே `அம்ச மந்திரத்தின் வழி சோகம்பாவனை செய்யச் சிவம் விளங்கும்` என்றதாயிற்று. `அம்ச மந்திரம் உயிர்ப்பு மந்திரம் ஆதலின், அஃது எல்லா மந்திரத்திற்கும் மூலமாம்; ஆகவே, அதனுள் அனைத்துப் பொருளும் அடங்குவன வாம்` என்றவாறு. பின்னர் ``அங்கு`` என வருதலால், முன்னர் `எங்கு` என்பது கொள்ளப்படும். கவ்வுண்டு நிற்றல் - அகப்பட்டு நிற்றல்.
இதனால், மேற்கூறியவற்றில் இரு மந்திரங்களின் சிறப்புக் கூறப்பட்டது. இம் மந்திரம் ஹௌம், ஸௌம்` என்னும் பீசங்களது சிறப்புணர்த்துதல் மேலும் நோக்குடையதாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 21

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

மேல், ``அதுவாம் அகார`` என்னும் மந்திரத்தில் (910) கூறப்பட்ட ஐந்தெழுத்து வழியாகவே சிவபிரான் வந்து அமர் கின்றான். அந்த ஐந்தெழுத்தினாலே அவனது பஞ்சாக்கர மந்திர எழுத் துக்களும் அமைகின்றன. ஆகவே, அவ் இருதிற எழுத்துக்களாலும் அமைகின்ற சக்கரங்களிலே அவன் தங்கி நிற்கின்றான்.

குறிப்புரை :

`அக்கர சக்கரம் அஞ்செழுத்தாலே ஆகிய` என்க.
இதனால், மேலைச் சக்கரங்களில் உள்ள அகாரம் முதலிய வற்றின் சிறப்பும், திருவைந்தெழுத்தின் சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 22

கூத்தனைக் காணும் குறிபல பேசிடின்
கூத்தன் எழுத்தின் முதலெழுத் தோதினால்
கூத்தனொ டொன்றிடுங் கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாகுமே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமானைப் பருவடிவிற்காண நிற்கும் பொருள்கள் பலவாம். அவற்றுள் மந்திரம் சிறந்தது ஆதலின், அவற்றுள் தலையானதாகிய மந்திரத்தை முதலெழுத்தளவில் ஓதி னாலும் அப்பெருமானோடு ஒற்றித்து நிற்கும் உணர்வை மக்கள் பெறு வார்கள். ஆகவே, இதுகாறும் சக்கர வடிவில் மந்திரங்களைக் கூறி வந்ததன் குறிக்கோள் அப்பெருமானை அடைவிப்பதேயாம்.

குறிப்புரை :

``பேசிடில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், மேல் பலபடக் கூறியதன் பயன் இது என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 23

அத்திசைக் குள்நின் றனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்வெழுத் தோதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினள் தானே.

பொழிப்புரை :

மேற்காட்டிய சக்கரங்களில் யாதானும் ஒன்றில் உணர்வை நிறுத்திப் பிராணாயாமத்தால் மூலாதாரத்தில் உள்ள அனலை ஓங்கி எழச் செய்து, சக்கரத்தில் உள்ள எழுத்துக்களில் நகாரத்தைச் செபித்தால், அச்சக்கரத்தில் மறைந்து நிற்கும் கூத்தப் பெருமானை அந்த நகாரத்திற்கு உரியவளாகிய திரோதன சக்தி அச்சக்கரத்திலே பொருந்தச் செய்வாள்.

குறிப்புரை :

திசை - பகுக்கப்பட்ட இடம். உறுதல் இங்கே உலகப் பயனைப் பெற்று மகிழ்தலாம். ஆகவே ``நின்ற``, என்பதும், போகியாய் நின்றதனையாதல் அறிக. `ஆக்கினன்` என்பது பாடம் ஆகாமை அறிந்துகொள்க. தான், திரோதான சக்தி.
இதுமுதல் நான்கு மந்திரங்களால், மேலை மந்திரத்துள் ஓதியவாறு ஒவ்வோர் எழுத்தே பயனளித்தலை வகுத்தோதப் புகுந்து, இதனால் நகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல்உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதினால்
தானே அளித்ததோர் கல்ஒளி யாமே.

பொழிப்புரை :

தானாகவே முன் வந்து காக்கின்ற அருட் சத்தியின் எழுத்தாகிய வகாரத்தை ஓதினால், அவள் தானே முன்வந்து சிவ ஞானத்தை அளித்துப் பரமுத்தியை அடையச் செய்வாள். இனி, அவளாலே உபதேசிக்கப்பட்ட மல எழுத்தாகிய மகாரத்தை ஓதினால், அவ்வருட் சக்தியால் வழங்கப்பட்ட மாணிக்கமாகிய உயிர் மாசுநீங்கி ஒளியுடையதாய் விளங்கும்.

குறிப்புரை :

`குரு சிவமேயாதலின், தானே உபதேசித்த` என்றார். கல், உவம ஆகுபெயர். ஒளியுடையதனை ``ஒளி`` என்றார்.
இதனால், வகார மகாரங்களை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

கல்லொளி யேஎன நின்ற வடதிசைக்
கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.

பொழிப்புரை :

வெள்ளியேயானும் மாணிக்கத்தைப் போலச் சிறப் புற்று நிற்கின்ற, வடதிசைக்கண் உள்ள மலை ஆகிய கயிலாயத்தின் கண் தழல்போன்ற உருவினையுடையவனாய் உள்ள சிவபெரு மான், திருவைந்தெழுத்தில் மாணிக்கம் போலச் சிறந்து நிற்பதாகிய சிகாரத் தையே தானாக உணரும்படி, மாணிக்கமாகக் காட்டி நிற்கின்றான்.

குறிப்புரை :

இந்திரன் - தலைவன். பிறதலைவரினின்றும் பிரித்தற்கு ``நல்லிந்திரன்`` என்றார். இனி, `இந்தீரன்` என்பது குறுகியது எனக் கொண்டு, `சந்திரனை அணிந்து காத்த அருளுடையவன்` என உரைத்த லுமாம். ``மாணிக்கமாகக் காட்டிநின்றான்`` என்றதனால், `அதனின் மிக்கது பிறிதில்லை` என்பது பெறப்பட்டது. படவே, `அதனால் சிவானந்த விளைவு உண்டாகும்` என்றவாறாயிற்று. இரண்டாம் அடியில் உள்ள ``ஒளி`` ஆகுபெயர். ஏனைய அடிகளில், `ஒளிக்கல்` என்பது பின் முன்னாக நின்றது.
இதனால், சிகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவ னாமே.

பொழிப்புரை :

ஆன்மா சீவ நிலையினின்றும் ஏழு மடங்கு உயர்ந்து தண்ணிய சந்திரனைப் போல விளங்கி நிற்றலும், நூலறிவை உடைய தாதலும், நல்லியல்பைப் பெறுதலும் தனது எழுத்தை ஓதுவதனாலாம். தனது எழுத்தாவது ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ள `ய` என்பதாம்.

குறிப்புரை :

``தான்`` நான்கும் ஓதுபவனைக் குறித்தன. குணம் - மடங்கு. ஏழு, மிகுதி குறித்து நின்றது. ``தண்சுடராய் நிற்கும்`` என்றது வாலிதாய் (தூய்மை பெற்று) நிற்கும் என்றதாம். வேதத்தால் பெறும் அறிவை ``வேதம்`` என்றார். நல்லியல்பு, சீவத்தன்மை நீங்குதல். மறை - மந்திர எழுத்து. யவன் - யகரத்தை உடையவன். `தானே யவன் ஆம்` என்க. `நிற்கும், நிற்கும்` என்று ஓதினாராயினும் பின்னர் வரும் `ஆவதும்` என்பதனோடு இயைய `நிற்பதும், நிற்பதும்` என ஓதுதலே கருத்து என்க. `நிற்பது, ஆவது` என்பன தொழிற் பெயர்கள்.
இதனால், யகாரத்தை ஓதுதலின் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்செழுத் துள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத் தாம்அவர் தாமே.

பொழிப்புரை :

ஆன்மா மந்திர ஆன்மாவாய் விளங்கிச் சிவமாக வேண்டியே சிவபிரானால் கொடுக்கப்பட்டது மக்கட்பிறவி. ஆகவே, அதில் நிற்கும் ஆன்மா அங்ஙனமே மந்திர ஆன்மாவாய் விளங் குதலை அறிந்து அப்பெருமான் மகிழ்வதைக் காணக்கூடியவர்கள், எல்லா மந்திர வடிவினனுமாயினும் சிறப்பாகத் திருவைந்தெழுத்துள் மறைந்து நிற்கும் கள்வனாகிய அப்பெருமானது திருவைந்தெழுத்தே தாமாய் நிற்பவரே; பிறரல்லர்.

குறிப்புரை :

`ஆகையால், அப்பயனைப் பெற விரும்புவோர் அம்மந்திரத்தையே செபிக்க` என்பது குறிப்பெச்சம். சிவபெருமான் பின்னர்க் குறிக்கப்படுதலின், ``மதித்த`` என்றும், ``மதித்திட`` என்றுமே கூறிப்போயினார். மதித்தல், இங்கு அதன் காரியம் தோன்ற நின்றது. பிறவியைப் பெற்றவனை, ``பிறவி`` என்றார், `அவன் ஒரு தெய்வப் பிறவி, அதிசயப்பிறவி` என்பன போல. மூன்றாம் அடியில் ``மறையவன்`` என்பதன்பின், `ஆயினும்` என்பது வருவிக்க. நான்காம் அடியில் அச்சொல்லின்பின் ஆறாவது விரிக்க.
இதனால், மேற்கூறிய ஐந்து எழுத்துக்களின் சிறப்பும் தொகுத்துக் கூறி, அவை ஒருங்கு தொடர்ந்து நின்ற மந்திரத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம்
ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தில் நகாரம் கூத்தப் பெரு மானுக்குத் திருவடியாயும், மகாரம் வயிறாயும், சிகாரம் தோள் களாயும், வகாரம் முகமாயும், யகாரம் சென்னியாயும் நிற்கும்.

குறிப்புரை :

இவ்வாறே உண்மை விளக்க நூலிலும் கூறப்படுதல் காண்க. (வெண்பா - 33). ஆதல் - மந்திரமேயாதல். மூன்றாம் அடி யிலும், `ஆகின்ற இருதோள், ஆகின்ற வாய்` எனக் கூட்டிக் கொள்க. `இரு தோள் வாய் சீ வவ்வாகக் கண்டபின்` என, ஆக்கம் வருவிக்க. `சி` என்பது நீட்டல் பெற்றது. சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய் அதனையுடைய தலைக்கு ஆயிற்று. ஒளி சடையினால் உளதாவது. `அவ்வியல்பாமே` என்பது, பாடம் அன்றாதல் அறிக. அடுத்த மந்திரம், `அவ்வியல்பு` எனத் தொடங்குவதாயினும், இதனுள், ``அவ் விய`` என்பதே அதற்கு அமையும். மேலை மந்திரத்துள் ``ஆம்`` என்ற அதனைக் கொண்டே இம்மந்திரம் ``ஆகின்ற`` எனத் தொடங்கிற்று. `அவ்ய` என்பது இடையே இகரம் விரித்தல் பெறநின்றது.
திருவைந்தெழுத்து இம்முறையால் இறைவனுக்குத் திருமேனி யாதல் கூறவே, அவனை வழிபடுபவரும் தம் உடல் உறுப்புக்களில் அதனை இம்முறையில் நியாசம், திருநீற்றுத் திரிபுண்டரம் இடல் முதலியவற்றால் பொருந்தக் கொள்ளல் முறையாதலும் பெறப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரம் இறைவனுக்குத் திரு மேனியாய் நிற்கும் முறை வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அவ்வியல் பாய இருமூன் றெழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடின்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு தனக்குத் திருமேனியாய் அமைகின்ற, பிரணவத்தோடுகூடி ஆறெழுத்தாய் நிற்கின்ற நகாரம் முதலிய ஐந்தெழுத்தினாலும் ஆகிய மந்திரத்தையே சிவபெருமான் தனக்கு நேர் வாயிலாகக் கொண்டு நிற்கின்றான். ஆகையால், அவனை அந்தப் பிரணவத்தின் காரியங்களாகிய ஏனை எழுத்துக் களையும் அவனது ஒளிக்கதிர்களாகப் பொருந்தக் கொண்டு தியானித்தால், அவன் தனது ஆனந்தக் கடலாய் அளவின்றி நிற்பான்.

குறிப்புரை :

பிரணவம் இயல்பாகவே எல்லாமந்திரத்தின் முன்னும் நிற்குமாதலின், அதனை, ``இருமூன் றெழுத்தையும்`` என அனுவாத முகத்தாற் கூறினார். ``செவ்வியல்பாக`` என்றதன்பின், `கொண்டு` என ஒரு சொல் வருவிக்க. `ஓ` என்பது தொடை நோக்கிக் குறுகி நின்றது. அதனது காரியத்தை ``இயல்பு`` என்றார், பரிணாமமாகாது, விருத்தி யாதல் பற்றி. `ஒளியாக உறநோக்கிடில்` என மாற்றிக்கொள்க. `அனு வாதத்தாற் கூறிய ஓங்காரம் ஒளிப் பிழம்பாகிய திருவாசியாயும், அதனது விருத்தியாகிய அகாரம் முதலிய எல்லா எழுத்துக்களும், அத்திருவாசியின் மேல் விளங்கும் சுடர்களாயும் நிற்கும் என்பது மூன்றாம் அடியாற் குறித்தவாறு.
``ஓங்கார மேநல் திருவாசி; ஆங்கதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம்``
என்னும் உண்மை விளக்க வெண்பாவை (35) நோக்குக. `பவ்வம்` என்பது கடைக்குறைந்து நின்றது.
இதனால், மேலைச் சக்கரத்தில் கூறிய ஓங்காரமும், பிற எழுத்துக்களும் கூத்தப்பெருமானுக்குத் துணை உறுப்புக்களாய் (உபாங்கங்களாய்) நின்று பயன் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரும் மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓம்என் றெழுப்பே.

பொழிப்புரை :

மந்திரம் வகையாலும், விரியாலும், பலவாய்ப் பரந்து கிடப்பது. அதனால், அவை பலதிறத்து எல்லா உயிர்கட்கும் அவை விரும்பிய பயனைத்தரும் தன்மையன ஆதலின், உனக்கு உன் குரு வினது அருளால் மந்திரம் கிடைக்குமாயின் அதனைப் பெற்று அதன் துணையால் உன்னைச் சூழ்ந்துள்ள வினையாகிய பகை தொலையும் படி ஓட்டு. ஓட்டுமாறு எங்ஙனம் எனின், அதற்குரிய வலிமையை உனக்குத் தருகின்ற மந்திரத்தை முதற்கண் பிரணவத்தை வைத்து உச்சரி.

குறிப்புரை :

பல திறமாவன, பிறப்புவகைகள். மூன்றாம் அடியில் உள்ள `மந்திரம்` என்பதை மேலே, ``வாய்த்திட`` என்பதற்கு முன்னே கூட்டுக. முதல் மூன்றடிகள் சொற்பொருட் பின்வருநிலை. மக்கள் உடம்பில் நின்ற உயிர் சில தீவினை காரணமாகக் கீழ்ப்பிறப்பை எடுக்குமாயின், அப்பிறப்பிலே அவை எவ்வகையாலேனும் மந்திரங் களை அறிந்து எண்ணிப் பயன்பெறும் என்பது உண்மை நூல் துணி பாகலின், ``பல்லுயிர்க்கெல்லாம் வரந்தரும்`` என்றார். அஃறிணை உயிர்கள் பல இறைவனை வழிபட்டுப் பயன்பெற்றமை புராணங் களில் பெரும்பான் மையது. இனி, `இங்கு உயிர்` என்றது, `மக்கள் உயிரையே` எனக் கொள் ளினும் கொள்க. `மந்திரங்கள் மேற்கூறிய ஆற்றலை உடையதாதல் அவற்றை இறைவன் தனக்கு வாயிலாகக் கொள்ளுதலாலே என்பது மேலை மந்திரத்தால் அறியக்கிடந்தது.
இதனால், இறைவன் உயிர்கட்குத் தனது அருளை வழங்கு தற்கு வாயிலாக மந்திரங்களை அமைத்துள்ள சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

ஓமென் றெழுப்பித்தம் உத்தம நந்தியை
நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென் றெழுப்பிஅவ் வாரறி வார்களே
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

மந்திரங்கட்கெல்லாம் தலையானதாகிய சிவமூல மந்திரமாம் திருவைந்தெழுத்தை முதற்கண் பிரணவமும், நகார மகா ரங்களும் முற்பட்டு நிற்க ஓதிப் பின்னர், அவ் ஐந்தெழுத்தில் நடுவண் விளக்குப்போல எழுச்சிபெற்று விளங்குகின்ற சிகாரம் முதலிய மூன் றெழுத்துக்களையும் அம்ச மந்திரத்தாற் செய்யப்படும் பிராணா யாமத்தால் இதய வெளியில் உள்ள ஒளி விளக்கமுறும்படி செய்து, தியானிக்கப்படும் பொருளை மேற்கூறிய சிகாரம் முதலிய மூன் றெழுத்தின் முறைமையதாகவே அறிந்து நிற்பவர்கள், திருவம் பலத்தை உள்ளவாறு தரிசித்து மகிழ்ந்திருப்பார்கள்.

குறிப்புரை :

``நந்தி`` என்பது ஆகுபெயராய் அவனது மந்திரத்தை உணர்த்திற்று. ``உத்தமம்`` என்பது ஆகுபெயர்ப் பொருளைச் சிறப் பித்து நின்றமையால், ``உத்தம நந்தி`` என்பது இருபெயரொட்டாகு பெயர். இத் தொடரை முதலில் வைத்து உரைக்க. `நம என்று` என்பது ``நாம என்று`` எனவும் `அம் என்று`, என்பது ``ஆம்`` எனவும் தொடைக் கேற்ப வேண்டுந்திரிபு பெற்று நின்றன. ``நடுவெழு தீபம்`` என்பது இரட்டுற மொழிதலாய், சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையும், இருதய ஒளி யையும் குறித்து நின்றது. மூன்றெழுத்து நின்ற முறைமை யாவது, உயிர் பாசத்தை விடுத்து அருளைச் சார்ந்து அதுவழியாகச் சிவத்திற்கு அடிமையாதலாம். இவ் எழுத்துக்கள் இருதயத்தில் வைத்து எண்ணவும், புருவ நடுவில் வைத்துத் தியானிக்கவும் படும் என்க. இவை ``தத்துவமசி`` என்னும் வேதாந்த மகாவாக்கியப் பொருள், ``சிவத்துவமசி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருள் என்ப வற்றையும் தந்து நிற்குமாறு அறிந்துகொள்க. `உண்மைத் திருவம் பலம்` என்றதற்கு ``மாமன்று`` என்றார். இது இதய வெளியும், புருவ நடுவுமாகும்.
``சிறைவான் புனல்தில்லைச் சிற்றம்பலத்தும் என்
சிந்தையுள்ளும் உறைவான்`` ( திருக்கோவையார் - 20)
எனப் புறத்தும், அகத்தும் விளங்கும் மன்றுகளைக் குறிப்பால் அருளிச் செய்தவாறு அறிக. இதனால், மேல் பலவாய்ப் பரந்து நிற்பவனவாகக் கூறிய மந்திரங்களுள், சிறந்து நிற்பதும் மிகச் சிறந்து நிற்பதும் இவை எனக்கூறி, அவற்றை ஓதுமாறும் அதனால் பெறும் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 32

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தில் பாகுபட்டு நின்ற அறை களில் வழங்கப்படுகின்ற ஐம்பத்தோரெழுத்துக்களின் இடையே திருவைந்தெழுத்து நிற்குமாயின், கூத்தப்பெருமான் அந்தச் சக்கரத்தில் பாகுபோல இனிதாய ஆனந்த நடனத்தைப் பொருத்தி நிற்பன்.

குறிப்புரை :

``எழுத்தைந்தும்`` என்பதை முதலிற்கொண்டு உரைக்க. ``வர்த்திக்கும், ஆகின்ற`` என்னும் பெயரெச்சங்கள், ``ஐம்பத்தொரு எழுத்து`` என்னும் தொகைநிலைப் பெயர் கொண்டு முடிந்தது. இறுதி யிலுள்ள பாகு, உவம ஆகுபெயர். `ஐந்தெழுத்து நிற்க ஆனந்த நடனத்தைப் பொருந்தி நிற்பவன்` எனவே `அவை நில்லாதபொழுது அருள் நடனமாத்திரையே பொருந்தி நிற்பான்` என்பது போந்தது. பதங்கள் - இடங்கள்; அறைகள். `ஐம்பத்தோரெழுத்து` என நிற்கற் பாலது, செய்யுள் நோக்கி, `ஐம்பத்தொரு எழுத்து` எனத் திரிந்து நின்றது.
இதனால், மேற்கூறிய சக்கரம் சிறந்து நின்று பயன் தருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

பரமாய அஞ்செழுத் துள்நடு வாகப்
பரமா யநவசிம பார்க்கில் மவயநசி
பரமா யசியநம வாபரத் தோதில்
பரமாய வாசி மயநவாய் நின்றதே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்து மேற்கூறியவாறு ஐம்பத் தோரெழுத்துக்களின் இடை நிற்குங்கால் நெடுக்காயினும் குறுக் காயினும் நடுவரிசை யுள்ளே நிற்கும். ஆகவே, அதன்பொருட்டு ஏனைய இடங்களில் எழுத்துக்கள் நடுவரிசைக்கு மேல் வரிசையில் (2) `ய ந வா சி ம`` என்றும், அதற்கு மேல் வரிசையில் (3) `ம வா ய ந சி` என்றும், அடி வரிசையில் (4) `சி ய ந ம வா` என்றும் அதற்கு மேல் வரிசையில் (5) `வா சி ம ய ந` என்றும், மாறி நிற்பனவாம்.

குறிப்புரை :

அஃது ஆமாறு:-
இதனால், நடுவரிசையை இடமிருந்து வலமாகவும், கீழிருந்து மேலாகவும் ஓதத் திருவைந்தெழுத்து நகாரம் முதலாக அமைதலும், சிகாரங்கள் முக்கோணக் கூட்டிரேகையில் முழுதும் நின்று சிகாரம் முதலாக ஏற்ற பெற்றியால் ஓதிக் கொள்ளுமாறு அமைதலும் காண்க. மேற்கூறிய சக்கரத்தில் வடமொழி எழுத்துக்களோடு இவற்றை எழுது வதாயின் இரண்டெழுத்திற்கும் இடைநிற்கவும், தமிழ் எழுத்துக் களோடு எழுதுவதாயின் அவ் எழுத்திற்கு மேல் நிற்கவும் எழுதுதல் வேண்டும் என்க. `மிகவும் உள்ளிடம்` என்பார் ``உள்நடு`` என்றார்.
பரம் - மேன்மை, மேல். நடுவரிசை தொடங்கி மேன்மேற் செல்லுங்கால் அடிவரிசைக்குத் திரும்பிப் பின் நடுவரிசையை அணுக வருதல் அறிக. வகார ஆகாரத்தைச் செய்யுள் நோக்கிச் சில இடங்களில் வகரமாக ஓதினார்.
இதனால், மேற்கூறிய பேரம்பலச் சக்கரத்திற்கு மேலை மந்திரத்திற் கூறிய ஒரு சிறப்பு முறை விளக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

பொழிப்புரை :

மேலை மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு பொறிக்கப் பட்டபின் செங்குத்தாய் நின்ற வரிசைகளில் முதல் வரிசையிலுள்ள எழுத்துக்களை மேல்நின்று நோக்கினால், `ம ய ந வா சி` என வரும். அவை முறையே, `நிலம், நீர், தீ, வளி, வான்` என்னும் பூதங்களாய் நிற்கும். ஆதலால், அவற்றை முதலாகக் கொண்டு வலம் நோக்கிச் செல்லும் தொடராகிய மந்திரங்களும் அப்பூதங்கள் ஆதலை யுடையவாம். அதனால், அவ்வெழுத்துக்களும், தொடர் களும் அப்பூதங்கட்கு உரிய `பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, புகைமை` என்னும் நிறங்களாயும் நிற்பனவாம். அவை இவ்வாறு நிற்றலால், அவை அடங்கி நின்ற சக்கரத்தைக் கூத்தப்பெருமான் தனக்கு இடமாகக் கொண்டு விளங்குகின்றான்.

குறிப்புரை :

முதலிரண்டடிகளில், `ஆம்` என்பன எஞ்சி நின்றன. மூன்றாம் அடியில், ``நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்`` என்பது, முன்னும் பின்னும் உள்ள அடிகளுடன் சென்று இயையும், நேர்தர நிற்றல் - செம்மையுண்டாக நிற்றல். நின்ற எழுத்துக்கள்நேர்தர நின்றிடில்`` என்றதனால், முதல் எழுத்துக்கள் மட்டிலே முதன்மை யாகக் கொண்டு, பின்னர் அவற்றைத் தொடர்ந்த வல எழுத்துக்கள் அவற்றின் வழியவாக்கப்படும். உம்மை, `பிறவிடத்து நிற்றலேயன்றி` என எச்சம். பொது நெறிபற்றிப் பூதங்களையே கூறினாராயினும், சிவநெறியின் வழி அவை பஞ்ச கலைகளாயும் நிற்கும் என்க.
இதனால், திருவைந்தெழுத்தை மேலைமந்திரத்திற் கூறிய வாறு பொறித்தால் உண்டாகும் சிறப்புக் கூறப்பட்டது

பண் :

பாடல் எண் : 35

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வா நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடுங் கொள்கையன் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய பேரம்பலச் சக்கரம் மேலை மந்திரத்திற் கூறியவாறு அமைந்த பெருமையுடையது ஆகலின், அதன்கண் எல்லா உலகங்களும் அடங்குவனவாம். அதனால், அந்தச் சக்கரத்தையே திருவம்பலமாகக் கொண்டு விளங்கும், சிதாகாய வெளியனாகிய சிவபெருமானாகிய பசுவை, அந்தச் சக்கரத்தையே கன்றாகக் கொண்டு , அவனது திருவருளாகிய பாலைத்தருமாறு எம் ஆசிரியர் நந்தி பெருமான் கறந்து கொண்டார். அதன் பயனாகக் குன்றின் உச்சியில் ஏறி நின்றவர் போன்ற உயர்வை அவர் பெற்றவரானார்.

குறிப்புரை :

உலகரால் அறியவராத நுண்பொருளாய் இருத்தல் பற்றிச் சிதாகாசத்தை, ``மாய நாடு`` என்றும், ஆயினும் அது மாயம் (வஞ்சனை) உடையதன்று என்றற்கு, ``நன்னாடு`` என்றும் கூறினார். நடு இரண்டடிகள் ஏகதேச உருவகம். மெய்யுணர்வின் மிக்காரை, ``குன்றேறி நின்றார்``1 என்பவாகலின், ``குன்றிடை நின்றிடுங் கொள்கையன்`` என்றார். ``ஆம்`` என்றது. ``முந்நிலைக் காலம் தோன்றும் இயற்கை மெய்நிலைச் சொல்லாய்`` 2 நின்றது. ஈற்றடி, நந்தி பெருமான் கயிலையைக்காக்கும் அதிகாரம் பெற்று நின்றதையும் உட்கிடையாகக் கொண்டது. நந்தி பெருமான் பயன்பெற்றவாற்றைக் கூறி, `பிறரையும் அவ்வாறு பெறுக` என அருளிச் செய்தவாறு.
இதனால், மேற்கூறிய சக்கரம் பயன்தருதற்கு அனுபவம் காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரம் கூத்தன் எழுத்தைந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

பொழிப்புரை :

கூத்தப்பெருமானது பஞ்சாக்கர பேதங்கள் அனைத்தும் இச்சக்கரத்தை இடமாகக் கொண்டன. அதனால், இதன்கண் அமைந்த நலங்கள் இன்னும்பல. அவை அத்திருவைந் தெழுத்தால் குறிக்கப்படும், `சிவன், அருள், ஆன்மா, திரோதாயி, ஆணவம்` என்பனவும், அவற்றுள் சிவன் ஆன்மாக்களின் பொருட்டுச் செய்யும் அளவிறந்த கூத்துக்களும், பிறவுமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை, `கூத்தன் எழுத்தைந்தும் இச்சக்கரம் கொண்ட` என மாற்றி, முதற்கண் வைத்து உரைக்க. ஏனை இடங்களில் ``கொண்ட`` என்பது, செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப் பட்டதாம். குணம் - நன்மை. ``பல`` என்றதை எடுத்தல் ஓசையாற் கூறி, இப்பொருள் காண்க. குறி - குறிக்கோள்; குறிக்கப்பட்ட பொருள். நின்ற - நின்றன. ``பல, ஐந்து`` என்பவற்றின்பின் `உள்ளன` என்பது எஞ்சி நின்றது. கூத்து, `ஞான நடனம், ஊன நடனம்` என இருவகைப் பட்டு, அவை ஒவ்வொன்றும் ஐவைந்தாதலேயன்றி, `தூல நடனம், சூக்கும நடனம், பர நடனம்` என்று ஆதலும், அனைத்து நடனங்களும் சிறப்புவகையால் தத்துவந்தோறும், ஆன்மாக்கள்தோறும் வேறு வேறாதலும் ஆகிய பலவும் அடங்கப் பொதுமையில் ``கூத்து`` என்றார்.
இதனால், மேற்கூறிய சக்கரத்தது சிறப்பின் மிகுதி கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 37

வெளியில் இரேகை இரேகையில் அத்தலைச்
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதம்
தெளியும் பிரகாரஞ் சிவமந் திரமே.

பொழிப்புரை :

வெறுவெளியாய் யாதும் எழுதப் படாத பரப்பு ஒன்றில் ஒரு நேர்க்கோடு இழுத்து, அக்கோட்டின் தலையில் ஒரு சுழியை இட்டால் அஃது உகாரவடிவாய்த் தோன்றும். அதில் `கொம்பு` எனப்படுகின்ற சுழியும், நேர்க்கோடும் முறையே விந்துவிற்கும், நாதத்திற்கும் உரிய வரிவடிவமாகும். இனி அவையே `தீ, காற்று` என்னும் பூதத்திற்கு உரிய குறிகளாயும் நிற்கும். இவற்றை இவ்வாறு தெளிவதே சிவ மந்திரத்தை உணர்தலாகும்.

குறிப்புரை :

இதில் சொல்லப்பட்ட வடிவம் - ``ƒ`` - என்பது. இதனைப் `பிள்ளையார் சுழி` என்பர். இதனைச் சுழி கீழாக ஆக்கினால் - `` `` - இவ்வாறாம். இதனையே ஏழாந் தந்திரத்துள் `ஆன்மலிங்கம்` என்னும் அதிகாரத்தில்,
``விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்;
விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்``.
எனக் கூறுவார். பூதங்களுள் தேயு (தீ) இலிங்கவடிவாய் நிற்றலாலும், அது கீழே சுழித்துக் கொண்டு மேலே கொழுந்துவிட்டு ஓங்குவது ஆதலாலும் சுழியை, `தீ` என்றும், செங்குத்து நேர்க்கோட்டினை, `காற்று` என்றும் கூறினார். தீ கொழுந்து விட்டு எரிதல் காற்றினால் என்பது வெளிப்படை. விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆதலின், இச்சுழியை இவ்வாறு தெளியும் உணர்வே சிகார வகாரங்கள் கூடிய சிவ மந்திரத்தைத் தெளிதலாய் முடியும் என்றார் என்க. எனவே, `மேற்கூறிய சக்கரங்களை யாதானும் ஒரு பரப்பில் பொறிப்பதற்கு முன்னே. மேலிடத்தில் இச்சுழியைப் பொறிக்க` என்பது குறிப்பு ஆயிற்று. `சுழி` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. சுளியில் - சுழித்தால் - `வெளியில் இரேகை உளதாக, இரேகையில் அத்தலைச் சுளியில்` என்க. அத்தலை - அதன் தலை. சுற்றிய - சுழித்தெழுந்த` ``கொம்பு, நேர்` என்பன, ``வன்னி, நேர்`` என்பவற்றுடன். எதிர் நிரல் நிறையாயும் ``விந்து, நாதம்`` `என்பவற்றுடன் முறை நிரல்நிறையாயும் இயையும். நெளிதரல் - நில்லாது இயங்குதல். பிரகாரம் - வகை. இதில் ``பிரகாரம்`` என்ற வடசொல்லின் இகரம் அலகு பெறாது நின்றது.
ஓங்காரம் உச்சரிக்கப்படுவதாய் நாதத்தை உணர்த்தி, மந்திரங்கட்கெல்லாம் முன்னிற்கும். `நாதம்` என்பதனானே அதனை, `ஊமை யெழுத்து` என்பர். எனினும், இங்குக் கூறிய இவ்வடிவம் யாதோர் உச்சரிப்பையும் உடையதாகாமையால், உண்மை ஊமை எழுத்தாய், விந்து நாதங்களாய் நிற்கும். அதனானே, எவற்றையேனும் வரிவடிவு எழுத்தால் எழுதத் தொடங்குமுன் முதலில் இவ்வடிவினை எழுதுதல் மரபாயிற்று. `அம்மரபினை இங்குக் கூறிய சக்கரங்கட்கும் கொள்க` என்பது இதனால் உணர்த்தினார். எனவே, இம்மந்திரம் மேற்கூறிய சக்கரங்களைப் புறத்தில் புலப்பட அமைக்கும்பொழுது முதற்கண் செயற்பாலது ஒரு மரபு செயலினைக் கூறியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 38

அகார உகார சிகாரம் நடுவா
வகாரமொ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவஞ்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

பொழிப்புரை :

சிகாரம் அகார உகாரங்களின் நடுவே நிற்கக் கொண்டு செய்கின்ற பிராணாயாமத்தில் கும்பிக்கப்பட்ட பிராணவாயு வோடே ஆறு ஆதாரங்களில் பொருந்தி, `சிவ என்னும் மந்திரத்தை ஓதிச் சிவனைத் தியானித்தால், பிரணவ முதல்வனாகிய அப்பெரு மான் மகிழ்ந்து சக்கரங்களில் நின்று அருள் செய்வான்.

குறிப்புரை :

`சிகாரம் அகார உகார நடுவாக` என்க, இது, `சிம்` என்பது நடுவேவர, முன்னே `அம்` என்பதையும், பின்னே ``உம்`` என்பதனையும் ஓதல் வேண்டும் என்றதாம். அஃதாவது, பிராணனை ``அம்`` என்று பூரித்து, `உம்` என்று இரேசித்து, `சிம்` என்றுகும்பித்தல் வேண்டும் என்றவாறு. இதுவும் ஒருவகைப் பிராணாயாம முறை. ``வகாரமோடு சிகாரமுடனே`` என எண்ணிடைச்சொல் எண்ணப் படும் பெயர் தோறும் வந்தது. அதனால், அப்பெயர்களை ஒருங்கு இணைய வைத்து உரைக்க. `ஓகாரம்` என்பது குறுக்கலாயிற்று.
இதனால், மேற்கூறிய சக்கரங்களின் வழிபாட்டிற்குரிய, சிறந்ததொரு செபம், அதற்குரிய பிராணாயாமத்துடன் சொல்லப் பட்டது.

பண் :

பாடல் எண் : 39

அற்ற இடத்தே அகாரம தாவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்தபொன் போலும் குளிகையே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு அகாரம் முதலியவற்றால் ஆயாமம் (தடுத்தல்) செய்யப்பட்ட பிராண வாயு நிராதாரமாகிய உச்சியை அடைந்தபொழுது, அடைதற்குரிய பொருளாகிய சிவனைக் காணலாம். அப்பொழுது முன்பெல்லாம் மறக்கருணை உடையனாய் இருந்த சிவன் அந்நிலை நீங்கி அறக்கருணை உடையனாய், வளவிய ஒளியாயும், உண்மையாயும் நின்று, செம்பைக் களிம்பு நீக்கிப் பொன்னாகச் செய்யும் குளிகைத் தன்மையைப் பொருந்தி நிற்பன்.

குறிப்புரை :

அற்ற இடம் - `ஆதாரம்` எனப்பட்டவைகளைக் கடந்த இடம். ``அகாரம்`` என்றது உபலக்கணம். `அகாரமதனால்` என உருபு விரித்துக் கொள்க. ஆவது - உண்டாவது. `அகாரமதனால் ஆவது அற்ற இடத்தே உற்றவிடத்து` என்க. ``செற்றம் அறுத்த செழுஞ்சுடர்`` என்றது அனுவாதமாய் நின்று பொருள் பயந்தது. `செழுஞ்சுடர் குளிகை போலும்` என இயையும். ஈற்றடி, `பொன்னினது குற்றத்தை அறுத்த குளிகைபோலும்` என்னும் பொருளது.
இதனால், `மேற்கூறிய ஆதார யோக செபங்களிலும் நிராதாரயோக செபம் சிறந்தது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்றென் னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வண்ணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

பொழிப்புரை :

அகாரத்தை உச்சரித்த உடனே உகாரத்தை உச்சரித்தால், மேலிடத்ததாக அறியப்படுகின்ற வீட்டின்பம் பொங்கி வழிந்து உயிரின்கண் கலக்கும். அந்த இரண்டெழுத்தையும் மகாரத்துடன் சேர்த்து உச்சரித்து என் உடலகத்தே நான் சிவனை வழிபட்ட செயலால் விளைந்த அவனது இன்பத்தை நான் எவ்வாறு பிறர்க்குச் சொல்லுவேன்! அவ்வின்பம் அத்தகையதாய் இருந்தது.

குறிப்புரை :

முதலடி, மேற்கூறிய பிராணாயாம முறையை அனுவதித்தது. மேல் எடுத்துக் கூறாத மகாரத்தை இதனுள் எடுத்துக் கூறினார். உ என்ற - உகரச்சுட்டால் சுட்டப்பட்ட. `முத்தி, நந்தி` என்பன ஆகுபெயர்கள். `அருள் வழியே ஆனந்தம் பிறக்கும்` என்பதை விளக்க, `பெருகிக் கலக்கும்` என்னாது, `உருகிக் கலக்கும்` என்றார். ``இயற்கை`` என்றது, அவனுக்கு இயல்பாய் உள்ள இன்பத்தையேயாம். இதன்பின், `அன்னது` என்னும் பயனிலை வருவித்துக் கொள்க.
இதனால், மேற்கூறிய பிரணவயோக செபம் வீட்டின்பத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 41

நீரில் எழுத்திவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவார் அவர்களே
ஊனில் எழுத்தை உணர்கிலார் தாமே.

பொழிப்புரை :

இவ்வுலகத்தில் உள்ள பலரும் அறிதல் நீர்மேல் எழுத்துப் போலும் அழியும் எழுத்துக்களையேயாம். மேலை வெளியில் அழியாத எழுத்து ஒன்று உள்ளது. அதனை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனை அறிபவர் எவரோ அவரே உடம்பில் நின்று அறியும் நிலையில்லாத எழுத்தை அறியாதவர் ஆவர்.

குறிப்புரை :

`நீர்மேல் எழுத்துப்போல பிற எழுத்துக்கள் நிலையில் லாதன அல்ல எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் அவையும் நிலையில்லாத எழுத்துக்களே` என்பது முதலடியில் உணர்த் தப்பட்டது. ``வான்`` என்றது, ஏற்புழிக் கோடலால் மேலை வெளி யாயிற்று. மேலை வெளியாவது விந்து. அதன்கண் உள்ள எழுத்துப் பிரணவம். வழக்கிடத்தும், செய்யுளிடத்துமாக அறியப்படும் எழுத் துக்கள் உடம்பில் இயல்பாக நின்று அறியப்படுவனவாதல் அறிக. ``ஊனில் எழுத்து`` என்றது, உலகப் பொருளைக் குறித்த குறிப்பு மொழி. ``உணர்கிலர்`` என்றது, `அவற்றை உணர்ந்து அவற்றில் தொடக்குறுதலினின்றும் நீங்குவர்` என்றவாறு. இதனுள் இடையீட்டெதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய பிரணவ யோக செபம் பாசத்தின் நீங்குதற்கு வாயிலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 42

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்திதந் தானே.

பொழிப்புரை :

பிராண வாயுவை உடம்பில் நடு நாடியாகிய சுழுமுனையில் பொருந்தும்படி செலுத்தினால், அந்நாடியில் நிற்கின்ற ஆதார மலர்களில் ஐம்பத்தோர் எழுத்துக்களும் முறையானே விளங்கி நிற்கும். அவ்வாறு நிறைவிடத்து முதற்காலத்திலே யாவர்க்கும் பொதுவாக வேதத்தை அருளிச்செய்த முதற்பொருளாகிய சிவன் தன் அடியார் நடுவில் இருக்கும் வீடுபேற்றைத் தருதல் திண்ணம்.

குறிப்புரை :

முதலடியில், `நடுவுறச் செய்ய` என ஒருசொல்லும், இரண்டாம் அடியில் `மாலையாக` என ஆக்கமும் வருவிக்க. `காலைக் காயத்தில் நடுவுறச் செய்ய` என்க. கால் - காற்று. `காலை உடம்பின் நடுவிடத்தில் கொணர்ந்து ஊன்ற` என்பது நயம். ஆதல் - தோன்றுதல். `தோன்றவே, அவற்றைச் சுட்டியறிந்து நீங்குதல் கூடும்` என்பது கருத்து. அடியார் நடுவுறும் முத்தி, அபரமுத்தியாம். துணிபுபற்றி, எதிர் காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், மேற்கூறிய செபத்திற்குப் பிராணாயாமம் இன்றியமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 43

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியஒண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.

பொழிப்புரை :

உந்தியின் கீழ் மூலாதாரத்தில் சிறப்புடைய ஓர் எழுத்து உள்ளது. அதன்மேலேதான் சிவன் தானும், தன் துணைவி யுமாக எழுந்தருளியிருக்கின்றான். அதனைத் துறவுபூண்ட முனிவ ராலும் அறிதல் இயலாது. எனவே, துறவுள்ளம் தோன்ற ஒட்டாது மயக்கி நிற்கின்ற வினைக்கட்டில் அகப்பட்டுள்ளவர் அறிய மாட்டாதவராதல் சொல்லவேண்டுமோ!.

குறிப்புரை :

``ஓர் எழுத்து`` என்றது, ஓங்காரத்தை. `தவத்தால் அதனைக் காண முயலுதலே செய்யத்தக்கது` என்பது குறிப்பெச்சம். ஓவியர் - ஓவினவர்; பற்று நீங்கினவர். பொருளுக்கு ஏற்ப அடிகளை மாற்றி உரைக்க. `அறிவாரில்லை` என்பது ஒரு சொல் நீர்மைத்தாய எதிர்மறை முற்று, `அது அறிய ஒண்ணாது` என்க. இதனால், மேற்கூறிய அகார உகார மகாரங்களது சமட்டியாகிய அதனது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

அவ்வொடு சவ்வென் றரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்ற தாரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியு மாமே.

பொழிப்புரை :

சிவனை, `ஔ` என்றும், `சௌ` என்றும் பிறந்து பொருந்திய மந்திரமே `அம்` என்றும், `சம்` என்றும் அமைந்த மறை பொருளை ஒருவரும் அறியவில்லை. அறிந்தார்களாயின் `அம்சம்` எனப்படுகின்ற அந்த மந்திரந்தானே அனாதியான சிவமாய் நிற்கும்.

குறிப்புரை :

`அரனை` என்னும் இரண்டனுருபு தொகுக்கப்பட்டது. ``அவ், சவ்`` நான்கில் முதலது, `ஔ, சௌ` என்பவற்றின் போலி. ஏனை யவை, ஈற்றில் மகாரத்தோடு கூடிய மந்திரங்கள். ``சவ்வும், அனாதியும்`` என்ற உம்மைகள் முறையே இழிவு சிறப்பும், உயர்வு சிறப்புமாம்.
இதனால், `அம்சமந்திரம் சிவ மந்திரமாம் சிறப்பினை யுடையது` என்பது உணர்த்து முகத்தால், மேல், ``அகார உகார``, (934) ``அவ்வென்ற போதில்`` (936) என்னும் மந்திரங்களிற் கூறிய உகாரத்திற்கு ஈடாக `சம்` என்பதனை வைத்து அம்ச மந்திரத்தால் பிராணாயாமத்தைச் செய்தலும் பொருந்தும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியி னுள்ளே உதயம்பண் ணாநிற்கும்
சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்தகன் றார்களே.

பொழிப்புரை :

மேல், ``நல்ல எழுத்து`` எனப்பட்ட அந்த ஓர் எழுத்தே, அக மலர்களாகிய ஆதார பங்ககயதந்தோறும் பலவகை யாகக் காட்சிப்படும். அது மூலாதாரத்தில் நிற்பதாயினும், சுவாதிட் டானத்தில் கும்பிக்கப்பட்ட பிராண வாயுவாய் மேலெழுந்து மணி பூரகம் முதலாக விளங்கத் தொடங்கும். சந்திக்காலங்களில் சந்திவழி பாட்டினைத் தவறாது செய்பவர்களுங்கூட, `அவ்வழிபாடு இக் காட்சியை எய்துதற்கு வழி` என்பதை அறிவதில்லை. ஏதோவோர் ஒழுக்கமாகக் கருதி அந்தியிலுங்கூடத் தவறாமல் அவ்வழிபாட்டினை முடித்து, வேறு செயல் செய்யச் சென்றுவிடுகிறார்கள்.

குறிப்புரை :

`ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. ``மலரில்`` என்பதில், `ஆல்` உருபு, `தொறுப்` பொருளில் வந்தது. ஆர்த்தல் - நிரப்புதல். பிரணவம் பல்வேறு கலைகளாய் ஆதாரந் தோறும் நிற்குமாறு, மூன்றாம் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத்துட் குறிக்கப்பட்டது.
இதனால், சந்திவழிபாடு முதலியவை வாயிலாக, மேற்கூறிய பிரணவக் காட்சியைப் பெற முயலுதல் வேண்டும் என்பதும் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 46

சேவிக்கும் மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவுக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே.

பொழிப்புரை :

மக்கட் பிறப்பு எடுத்தோர் ஒருதலையாக வணங் குதற்குரிய இத்தந்திரத்தில் தொடக்கம் முதலாகப் பலவிடத்தும் கூறி, இங்கும் கூறப்பட்ட ஓரெழுத்தாகிய பிரணவம், மேற்கூறியவாறு விளங்கி நிற்கும் நிலையைப் பெறுவதற்கு, உயிர்ப்புக்கு இன்றியமை யாததாகிய அம்சமந்திரம் முதலிய பிராணாயாம மந்திரங்களே பற்றுக் கோடாகும். ஆகவே, ஆதார பங்கயங்களில் பிரணவத்தை மேற்கூறிய வாறு குற்றமறக் காணவேண்டின், அந்தப் பிராணாயாம மந்திரங்களே ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கும் அங்குசமாய் நின்று, மனத்தை ஒருவழிப்படுத்துவனவாகும்.

குறிப்புரை :

`அதனால், அம்மந்திரங்களுடன் பிராணாயாமத்தை முன்னர்ச் செய்க` என்பது குறிப்பெச்சம். செல்லுதல், முறையாக விளங்குதல். திசை - இடம். ``செல்லும் திசைபெற`` என்றாராயினும், `திசைகளில் செல்லும் நிலையினைப் பெற` என்றலே கருத்து. காற்றை, `ஆவி` என்றலும் ஒரு வழக்கு. காற்று, இங்கே நெறிப்படுத்தப்படும் காற்று. `ஆவிக்கு` என்னும் நான்கனுருபு. `கூலிக்கு வேலை செய்தான்` என்பது போல் நிமித்தப் பொருளில் வந்தது. உள் மந்திரம் - நினைக்கப் படுகின்ற மந்திரம். ``அங்குசம்`` என்றது, குறிப்பு உருவகம்.
இதனால், பிரணவக் காட்சிக்கு இன்றியமையாத பிராணா யாமம். மந்திரத்தோடுகூடச் செய்தலின் இன்றியமையாமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 47

அருவினில் அம்பரம் அங்கெழும் நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகாரம் நடுவாய்
உருவிட ஆறும் உறுமந் திரமே.

பொழிப்புரை :

சிவம் சூக்குமமான நிலையில் பரவெளியாய் நிற்க, அதன்கண் நாதம் தோன்றும். பின்பு சத்தி அச்சிவத்தைவிட தூலமாய் அவ்வெளியினுள் தோன்ற, அதனிடத்து விந்து தோன்றும். ஆகவே, அப்பெற்றியவாய நாத விந்துக்களின் நடுவில் சிகார யகாரங்கள் பொருந்தி நிற்க நின்ற ஆறு எழுத்துக்களும் உயர்ந்த மந்திரமாய் விளங்கும்.

குறிப்புரை :

`அதனால், அம்மந்திரத்தை மேற்கொண்டு செபிக்க` என்பது குறிப்பெச்சம். இங்குக் கூறியவாறு ஆறு எழுத்தாய் நிற்கும் மந்திரம், `ஓம் நமச்சிவாயம்` என்பது. முன்னர் நின்ற விந்துவை அடுத்து நிற்பது யகாரமாதலின் அதனை முன்னர்க் கூறினார். நாதம் சகாரமோடு புணருமிடத்து சகார மெய்யாய் நிற்கும்.
`ஓoநம‹‹ிவாய` என்னும் மந்திரம், தமிழில் `ஓநமச் சிவாய` என்றும், `ஓநமச்சிவாயம்` என்றும் நிற்கும் என்பதை,
``போற்றியோ நமச்சிவாய`` 1
என்னும் திருவாசகத்தாலும்,
``நமச்சிவா யம்சொல்ல வல்லோம்`` 2
என்னும் திருத்தாண்டகத்தாலும் அறிக. இங்ஙனமாகவே, `தமிழ் கூறுவார்க்கு இஃது ஆம்` என்றதாயிற்று. ஆக்கங்கள் வருவித்துக் கொள்க. பெருகுதல் - தூலமாதல், உருவிட - ஊடே நிற்க. `ஆறும் மந்திரமாய் உறும்` என்க.
இதனால், மூலமந்திரம் தமிழில் நிற்பதொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடின்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே.

பொழிப்புரை :

விந்துவும், நாதமும் திருவைந்தெழுத்து மந்திரத் தோடு ஒருசேரப் பொருந்திச் சந்திர மண்டலமாகிய ஆயிர இதழ்த் தாமரையுள்ள தலையை அடையுமாயின் நிராதாரத்தில் உள்ள தேவாமிர்தமாகிய சிவன் இன்ப ஊற்றாய் வெளிப்படுவான். அவனுக்கு அவ்விடத்து நினைக்கப்படுகிற அந்த மந்திர செபமே வேள்வியாய் அமையும்.

குறிப்புரை :

`திருவைந்தெழுத்து மந்திரம்` என்பது மேலை மந்திரத் தினின்றும் வந்து இயைந்தது. அல்லாவிடில், விந்து நாதங்கள் மட்டில் மந்திரம் ஆகாமை அறிக. இப்பயனை விதந்து கூறியது, `மேற் சொல்லிய முறையால் இழுக்கொன்றும் இல்லை` என்றவாறு.
இதனால், `திருவைந்தெழுத்தை விந்து இறுதியாகச் சொல்லு தலால் அதனது தன்மை சிறிதும் குறைவுறாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 49

ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத் தொன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத் தின்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத் தாலே உயிர்பெறல் ஆமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தைப் பிரணவத்தோடு சேர்த்து ஆறெழுத்தாக ஓதி உணரும் உணர்வின் பயனை அறிபவர் உலகில் ஒருவரும் இல்லை. அதனால், அந்த மந்திரத்தை ஒப்பற்ற ஒன்றாகக் கொண்டு ஓதிப் பெறும் உணர்வையும் யாரும் அடைவதில்லை. வேறு மந்திரத்தை அதற்கு நிகரானதாக நினையாமல் அந்த மந்திரம் ஒன்றையே ஓத வல்லவர்கட்கு அதன்கண் உள்ள ஓர் எழுத்தாலே ஆன்ம லாபத்தைப் பெறுதல் இயையும்.

குறிப்புரை :

ஈரிடத்தும் ``ஆறெழுத்து`` என்றே ஓதினாராயினும், `அவ் ஆறெழுத்து` எனச் சுட்டி ஓதுதலே கருத்து. ``இன்றி`` என்றதும், `இணையில்லையாக` என்றவாறு. ``ஓரேழுத்து`` என்றது பொதுப்பட நின்று, சிகாரமாகிய அவ்வொன்றின்மேல் நோக்குடையதாய் நின்றது. இதன்கண் உயிரெதுகை வந்தது.
இதனால், மேற்சொல்லப்பட்ட மந்திரங்கள் பலவற்றுள் திருவைந்தெழுத்து இன்றியமையாச் சிறப்பினதாய் ஆன்ம லாபத்தைத் தருவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே.

பொழிப்புரை :

உச்சரிக்கும் எழுத்தாகிய அகாரத்தோடு ஏனைய பதினைந்தும் உயிரெழுத்துக்களாம்; ஆயினும், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று` என்று மந்திர நூலார் கூறுவர். அவையெல்லாம் எவ் வாறாயினும், முதல்வனுக்குரிய முதன்மை மந்திரத்தில் மேற் சொல்லிய ஆறெழுத்துக்களே உள்ளன. அவற்றை நால்வகை வாக்கிலும் வைத்து ஆராய்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

``அகரம், ஒலிப்பின் முதல் முயற்சியிலே தோன்றி எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் சிறப்பினது; அதனால், அஃது உயிரெழுத்திற்கும் உயிராய் நிற்பது`` என்பார், ``ஓதும் எழுத்தோடு`` என அதனது இயல்பும், உயர்வும் தோன்ற ஒடுஉருபு கொடுத்து, வேறுவைத்து ஓதினார். இது பற்றியே இறைவன் அகரவடிவினன் எனக் கூறப்படுகின்றான். ``ஓதும் எழுத்து`` என்றது, `ஓதப்படும் - உச்சரித்தல் உண்டான பொழுதே தோன்றுகின்ற - எழுத்து` என்றவாறு, கலை - கூறு. `சொற்களது உறுப்பு` என்பதாம். `மூவைஞ்சும் உயிர்க்கலை` என மாறிக்கூட்டுக` ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. சோதி, இறைவன், நாத எழுத்து - நாதத்தின் காரியமாகிய எழுத்து; `பூதகாரியமாகிய எழுத்தாகக் கொள்ளுதலோடு ஒழியாது` என்றவாறு. `நாத எழுத்தில் இட்டு` என்க. `திருவைந்தெழுத்தை யோகமுறையால் நாத எழுத்தாக உணர்ந்து சுத்தமானதாகக் கணிக்க, சுத்த தத்துவத்தில் விளங்கிநிற்கும் தடத்த சிவனைத் தலைப்பட்டு அபரமுத்தியை எய்திப் பின் பரமுத்தியை எளிதிற்பெறலாம்` என்பது கருத்து.
இதனால், `மூல எழுத்துக்கள் ஐம்பத்தொன்று என்றாலும், அவற்றுள் உயிரெழுத்தாவன பதினாறே` என்பதும், `அவற்றுள்ளும் அகரம் உயிர்க்குயிராய எழுத்து` என்பதும், `எனினும், மேற்கூறிய ஆறெழுத்துக்கள் அவை எல்லாவற்றினும் மேம்பட்டன` என்பதும் கூறி, மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.
`ஐம்பத்தோரெழுத்து இவை` என்பதை மேற்காட்டிய பேரம்பலச் சக்கரத்துட் காண்க.

பண் :

பாடல் எண் : 51

 விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவிபதி னாறு கலையதாய்க்
கந்தர வாகரம் கால்உடம் பாயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன் றாயதே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும் ஓங்காரமாய் நாதம் தோன்ற, அந்த நாதத்தின் தலைவியாகிய குண்டலினி சக்தி, பதினாறு கலைகளையுடைய பிரணவமே தானாகி மக்களது உடம்பில் `தலை, கால், உடல்` என்னும் உறுப்புக்களில் நிற்கின்றாள். அவள் ஒன்றி நிற்கப் பெறுதலே பிரணவம் அழிவின்றி மேற்கூறிய ஐம்பத்தோரெழுத் தாயிற்று.

குறிப்புரை :

``சுழி`` என்றது ஒங்காரத்தின் வடிவத்தை. `சுழியாய்` என, ஆக்கம் வருவித்துக்கொள்க. நாதமாவது வாக்கு. உயிர்களைப் பிணித்துள்ள பந்தங்களில் நீக்குதற்கரிய பரமபந்தமாய் நிற்பது வாக்காதலின், அதனையே ``பந்தம்`` என்றார். `பதினாறுகலைகள் இவை` என்பதும், அவை உடம்பில் நிற்கும் இடங்களும் மேல் மூன்றாம் தந்திரத்துள் `கலைநிலை` அதிகாரத்திற் காட்டப்பட்டன. கந்தரம் - கழுத்து. ஆகாரம் என்பது குறுகி நின்றது. ஆகாரம் - வடிவம். கழுத்தோடு கூடிநிற்கும் வடிவம் தலை. ``அந்தம் இன்றி ஆயது`` என்றது `அக்கரம்` (அட்சரம்) எனப்பட்டது என்றவாறு. இதனால், `உண்மை அக்கரம் குண்டலினிசத்தியே என்பதும், அவட்கு இடமாதல் பற்றியே வாக்கின் வடிவாக எழுத்துக்கள், `அக்கரம்` என உபசரித்துக் கூறப்படுகின்றன` என்பதும் பெறப்பட்டன. உண்மை விளக்கத்துள், `திருவைந்தெழுத்து ஏனையெழுத்துக்கள் போல அழியும் எழுத்துக்கள் அல்ல` (40, 41) எனக் கூறியதையும் இவ்விடத்து நினைவுகூர்க. ``அந்தமும்`` என்ற உம்மை `ஆதியின்றி` என இறந்தது தழுவிய எச்சம். ``ஆயது`` என்பதற்கு, `அது` என்னும் எழுவாய் வருவிக்க. அச்சுட்டுப் பெயர், முன்னர், ``பதினாறு கலைய`` என்ற பிரணவத்தைக் குறிக்கும்.
இதனால், `மேற்கூறிய ஆறெழுத்தின் பொருளாகிய சிவனுடைய சத்தியினது சார்பு காரணமாகவே பிரணவமும், அதன் காரியமாகிய எழுத்துக்களும் சிறப்புற்றன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 52

ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தா கமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே.

பொழிப்புரை :

மேற் சொல்லிய ஐம்பத்தோரெழுத்துக்களே வேதம், ஆகமம் அனைத்துமாய் நிற்கும். அவ் உண்மையை உணர்ந்த பின் `ஐம்பதெழுத்து அல்லது ஐம்பத்தோரெழுத்து` என்றெல்லாம் எண்ணுகின்ற அலைவு நீங்கி, `ஐந்தெழுத்து` என்று உணர்ந்து நிற்கின்ற அடக்கம் உண்டாகும்.

குறிப்புரை :

`ஐம்பதெழுத்துமே` என்பதில் உம்மையும், ஏகாரமும் மாறிநின்றன. ஆவது, அனைத்தும் ஆவது. ``ஐம்பதெழுத்தும்`` என்றது, எல்லா வகையான எழுத்துக்களும்` என்றவாறு. எழுத்துக் களை, `ஐம்பத்தொன்று`என்பதனோடு, `ஐம்பது` என்றலும் வழக்கு என்பது உணர்தற்கு, மேல், ``ஐம்பத்தோரெழுத்து`` என்றவர், இங்கு, `ஐம்பதெழுத்து` என்றார். இது மூன்றாம் தந்திரத்திலும் விளக்கப் பட்டது. வேதம், ஆகமம் முதலிய பல நூல்களையும் கற்றோர், `அவை அனைத்திலும் சொல்லப்படுவது திருவைந்தெழுத்தின் பொருளே` என்பதை நன்குணர்வர் ஆதலின், ``ஐம்பதெழுத்தும் போய் அஞ்செழுத்தாமே`` என்றார்.
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``
என்னும் திருவருட்பயனையும் காண்க. மூன்றாம் அடியில் ஏகாரம் பிரிநிலையும், உம்மை முற்றும்மையுமாம். ஆகவே, `ஐம்பதெழுத் துமே அனைத்துமாவது` என்பது பொருளாயிற்று.
இதனால், அனைத்தெழுத்துக்களும் மேற்கூறிய ஆறெழுத்தின் விரிவேயாதல் கூறப்பட்டது.
இது முதலாக, இருபத்தொரு மந்திரங்களால் திருவைந் தெழுத்தின் பெருமையே கூறி வலியுறுத்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 53

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தத்துவங்களைப் படைத்தும், அவற்றின் காரியமாகிய எண்பத்து நான்கு நூறாயிர வகைப்பிறவி களான உடம்புகளையும் ஆக்கி உயிர்கட்குத் தந்தும், அவைகளைக் காத்தும், அவ்வுயிர்கள் தன்னை மன மொழி மெய்களால் வழிபட்டு நலம் பெறுதற் பொருட்டுத் திருமேனி கொண்டு எழுந்தருளியிருப் பதும் ஆகிய எல்லாம் திருவைந்தெழுத்தாலேயாம்.

குறிப்புரை :

``ஐந்து பூதம்`` என்றது உபலக்கணம். ஐந்தொழில்களில் இங்கு வேண்டற்பாலனவாகிய இரண்டையே கூறினார். ஐந் தொழிலையும் சிவபெருமான் ஏவுதல் வகையானும், இயற்றுதல் வகையானும் செய்தருளுவன்.
``மூவகை அணுக்களுக்கும் முறைமையால் விந்து ஞானம்
மேவின தில்லை யாயின் விளங்கிய ஞானம் இன்றாம்``1
என்றவாறு, நாதம் இன்றி ஒருவர்க்கும் சிறப்புணர்வு கூடாது ஆதலால், `ஏவுதல் ஐந்தெழுத்தாலே` என்பது தெளிவாகும். இனி, அத் தொழில்களைத் தானே இயற்றுமிடத்தும் அவற்றால் உயிர்கள் பயன் கொள்ளுதற்கு நாதம் இன்றியமையாமை பற்றி அதனையும் ஐந்தெழுத் தாலே ஆவனமாகக் கூறுதல் அமைவுடைத்தாம். ஐந்தெழுத்தாலே திருமேனி கொள்ளுதல் எவ்விடத்தும் ஒத்ததாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 54

வீழ்ந்தெழல் ஆம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே.

பொழிப்புரை :

சிவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தைத் தளர்ச்சியின்றி ஓத உறுதிபூண்டு நிற்பவர்கட்கு, வினைக்குழியில் வீழ்ந்து கிடந்தாலும் எழுந்து கரையேறுதல் கூடுவதாம். மேலும் அப்பெருமான் அவர்களை வினைத்துன்பம் விட்டொழியுமாறு தன்மாட்டு அழைத்து ஆண்டுகொள்வான்.

குறிப்புரை :

`வீழ்ந்தும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத் தலாயிற்று. போந்திடும் என்னும் - `வாருங்கள்` என்று அழைப்பான். `புரிசடையோனாகிய தலைவனும்` என மேலே கூட்டி உரைக்க.

பண் :

பாடல் எண் : 55

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின் றமரர் விரும்பி அடிதொழ
எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான், தேவர்கள் தன்னை விண்ணுலகத் தில் விருப்பத்தோடு அடிபணிய, அவர்கட்கு அவர்கள் உண்ணுகின்ற அமுதமாயும், அதன் பயனாகிய நீண்ட வாழ்நாளாயும், அவர்கட்கு விருப்பத்தைத் தருகின்ற இசையாயும், பாட்டாயும் நிற்றலேயன்றி, அவர்களது கருத்தில் நிற்கும் திருவைந்தெழுத்தாயும் நின்று மேலை மந்திரத்திற்கூறிய பயன்களை அளிப்பன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து, இரண்டாம் அடியிறுதியில், `அதுவன்றி` என்பது வருவித்து உரைக்க. ``நிற்கும்`` என முன்னவற்றை முடித்தமையால், பின்னதற்குப் பயன் மேற்கூறிய தாயிற்று. `எண்ணின்ற` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``அஞ்சும்`` என்ற உம்மை, `அவ்வாறு நின்றதன்றியும்` என, இறந்தது தழுவிநின்றது. `தேவர்களும் தாம் விரும்பிய பயனைப் பெறுதல் திருவைந்தெழுத்தை ஓதியே` என்பது இங்குக் கூறப்பட்டது.
``மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றுஅவர் தம்மை ஆள்வன
... ... ... அஞ்செழுத்தும்மே`` 1
என்ற திருஞானசம்பந்தர் திருமொழியும் காண்க. `தலைவன்` என்னும் எழுவாய் இயைபினால் வந்து இயையும்.

பண் :

பாடல் எண் : 56

ஐந்தின் பெருமையே அகலிட மாவதும்
ஐந்தின் பெருமையே ஆலய மாவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே.

பொழிப்புரை :

உலகம் நிலைபெற்றிருத்தலும் கல் முதலியவற்றால் கட்டப்பட்டு அமைந்த இடங்கள் சிவபெருமானது அருள் நிலையங் களாதலும், அந்நிலையங்களில் அவன் விளங்கி நின்று, வேண்டு வார்க்கு வேண்டுவன வழங்குதலும் திருவைந்தெழுத்தாலேயாகும். இனி, அதனை அதன் வகை பலவற்றையும் அறிந்து ஓத, அப்பெருமான் அங்ஙனம் ஓதுவாரது பக்கத்திலே எப்பொழுதும் இருப்பவனாவான்.

குறிப்புரை :

அகலிடம் - உலகம்; என்றது உயிர்களை. `அவை நிலைபெறுதல்` என்பதனை,
``வானின் றுலகம் வழங்கி வருதலால்`` 1
என்பது போலக் கொள்க. ``ஆலயம் ஆவது`` என்றது `ஆலயம் ஆலயமாவது` என்றவாறு. `சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்` என்னும் முறைமையிற் சிறிதும் வழுவாதவன் என்பார், `சிவபெருமானை, `அறவோன்` என்றார். செய்தல், இங்கே ஓதுதல். பால் - பக்கம். பாலன் ஆதலை,
``இவன்எனைப் பன்னாள் அழைப்பொழி யான்என்
றெதிர்ப்படுமே`` 1
``எங்குற்றாய் என்றபோதில்
இங்குற்றேன் என்கண்டாயே`` 2
``தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன்னடியோங்களுக்கே`` 3
``ஆரூரர்தம் - அருகிருக்கும் விதியன்றி அறம் இருக்க
மறம்விலைக்குக் கொண்டவாறே`` 4
என்பன முதலிய திருமொழிகளை நோக்கி அறிக.
``சிவனே சிவனே சிவனேஎன் பார்பின்
சிவன்உமையா ளோடுந் திரிவன்``
என்பதொரு வெண்பாவையும் காண்க. இதன் முதலடி மூன்றாம் அடிகளில் னகர ஒற்றுக்கள் அலகு பெறாது நின்றன.

பண் :

பாடல் எண் : 57

வேரெழுத் தாய்விண்ணாய் அப்புற மாய்நிற்கும்
நீரெழுத் தாய்நிலம் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்
தோரெழுத் தீசனும் ஒண்சுட ராமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நாத எழுத்தாகிய பிரணவமாய் அதன் வழியே வானத்தில் பொருந்தி எல்லாப் பொருட்கும் வியாபக மாய் நிற்பான். நீரெழுத்தாகிய நகாரமாய் அதன்வழியே நீரில் பொருந்தி அதன்வழியே பொருள்களைப் பதம் செய்வான். நில வெழுத்தாகிய மகாரமாய் அதன்வழியே நிலத்திற் பொருந்தி எல்லா வற்றையும் தாங்குவான். நெருப்பெழுத்தாகிய சிகாரமாய் அதன் வழியே நெருப்பில் பொருந்திப் பொருள்களைச் சுட்டுப் பக்குவப் படுத்துவான். காற்றெழுத்தாகிய வகாரமாய் அதன்வழியே காற்றிற் பொருந்திப் பரந்து சலித்துப் பொருள்களைத் திரட்டுவான். எஞ்சிய ஓரெழுத்தாய யகாரமாய் அதன்வழியே ஆன்மாவிலும், இருசுடரிலும் பொருந்தி அறிதலும், ஒளிவீசலும் செய்வான்.

குறிப்புரை :

செய்யுள் நோக்கி, வேண்டும் சொற்கள் பலவற்றைத் தொகுத்து அவை குறிப்பால் தோன்றக் கூறினாராகலின், அவற்றை இவ்வாறு விரித்துரைத்துக்கொள்க. பூதம் முதலியவற்றைத் திருவைந் தெழுத்தில் எழுத்துக்கள் நிற்கும் முறைபற்றிக் கூறினமை அறிக. இங்குக் கூறிய ஐந்தெழுத்துப் பிரணவத்தோடுகூடிய தூல ஐந்தெழுத் தாதல் வெளிப்படை. ``ஒண் சுடர்`` என்பது அகத்தொளியாகிய அறி வையும், புறத்தொளியாகிய சூரிய சந்திரர்களையும் குறித்தது. அப்புற மாதல், வியாபகமாய் நிற்றல். ``ஓரெழுத்து`` என்பதன் பின்னும் ஆக்கம் வருவிக்க. ``ஈசனும்`` என்ற உம்மை சிறப்பு. இவ்வெழு வாயை முதலிற்கொண்டு உரைக்க. மேலை மந்திரத்தில், ``ஐந்தின் பெருமையே அகலிட மாவது`` என்றது இனிது விளங்குதற்பொருட்டு, அஃது ஆமாற்றை இதனுள் வகுத்துக் கூறினார். ஆகவே, நீரெழுத்து முதலியவற்றைப் பூதங்கட்குரிய பீசாக்கரங்களாகக் கொள்ளல் வேண்டாமை அறிக. இங்குக் கூறிய எழுத்துக்கள், அவ்வப்பொருட்கு உரியனவாதலை ஆணையாற்கொள்க.

பண் :

பாடல் எண் : 58

நாலாம் எழுத்தோசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கிற்று
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்கு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே.

பொழிப்புரை :

மேற்கூறிய எழுத்துக்களில் பிரணவம் நீங்க நகாரம் முதலாக முறையானே நின்ற ஐந்தெழுத்துக்களில் இறுதிநின்ற யகாரம் ஒழித்து நான்காய்நின்ற எழுத்துக்களது ஓசையே உலகெங்கும் வியாபிப்பது. அதனால், எல்லா உலகமும் அவ்வெழுத்திற்குள்ளே அடங்கியுள்ளன. அதனால், அவற்றாலாய அவ்வோசையின் பெருமை அறிந்து அதனையே ஓதவல்லவர்கட்கு அதுவே நன்னெறி யாய் நன்மை பயக்கும்.

குறிப்புரை :

கடவுளரைப் போற்றுமிடத்து அவர்தம் பெயரோடு பெரும்பான்மையும் நான்காம் வேற்றுமையைப் புணர்த்து அவரைப் படர்க்கையில் வைத்துப் போற்றுதல் வடமொழி வழக்கு. அப்பெயர் களைப் பெரும்பான்மையும் எட்டாம் வேற்றுமையாக்கி அவரை முன்னிலைப் படுத்திப் போற்றுதல் தமிழ் வழக்கு. அதனால், ``சிவாய`` என்பது தமிழ் முறையில் `சிவ` என்றே நிற்குமாதலின், `சிவமூல மந்திரம், மேல், ``ஆறெழுத்தோதும்`` என்ற மந்திரத்துட் கூறியவாறு பிரணவத்தோடு கூடி ஆறெழுத்தாலேயன்றி, யகாரம் நீங்க ஐந்தெழுத் தாயும் நிற்றலுடையது` என்பது உணர்த்துவார் ஐந்தெழுத்தின் பெருமையெல்லாம் எடுத்தோதினார். எனவே, யகாரம் அவற்றுள் அடங்கி நிற்பதாயிற்று. `இம் மந்திரத்திற்கு இதுவே பொருள்` என்பதை வருகின்ற மந்திரங்களால் அறிக.
நால் ஆம் எழுத்து - `நான்கு` என்னும் தொகையை உடைய வாகின்ற எழுத்து. `அவற்றால் ஆய ஓசை` என்றது, `மந்திரம்` என்ற வாறு. ``உருவுவது`` என்பது குறைந்து நின்றது. எழுத்து அது - எழுத்தாய் நின்ற அம்மந்திரம். `அதுவேயும்` என்னும் பிரிநிலை ஏகாரமும், இறந்தது தழுவிய எச்ச உம்மையும் விரித்துக் கொள்க.

பண் :

பாடல் எண் : 59

இயைந்தனள் ஏந்திழை என்உளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்த்தனன் மற்றுப் பிதற்றறுத் தேனே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு யான் அந்நான்கு எழுத்தையே ஓதினமையால் சிவசத்தி என்னிடத்து வந்து பொருந்தி, எனது உள்ளத்தை இடமாகக் கொள்ள விரும்பி, அங்ஙனம் அதன்கண்ணே அமர்ந்தாள். அதனால், யான் எனது சீவநிலையினின்று நீங்கினேன். பிறமந்திரங்களைப் பல்வேறு பயன் குறித்துப் பிதற்றுதலையும் ஒழித்தேன். ஆகவே, நீவிரும் `நமசிவ` என்று ஓதுதலின் பயனை ஆய்ந்து உணர்மின்; உணர்ந்து அம்மந்திரத்தைப் பற்றுமின்.

குறிப்புரை :

`அந்நான்கெழுத்தையே ஓதினால்` என்பது இயைபு பற்றிக் கொள்ளக் கிடந்தது. ``நமசிவ என்னும்`` என்பது தொடங்கி மூன்றாம் அடியை இறுதியில் வைத்து உரைக்க.

பண் :

பாடல் எண் : 60

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினை
ஓமத்தி லேஉதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே.

பொழிப்புரை :

அரிசி முதலியவற்றில் உடலுக்கு நலந்தரும் பொருளாய் நின்று, அவை சோறு முதலியனவாய்ப் பக்குவப்பட்ட பின்பு அவற்றை, வயிற்றுத்தீ வேள்வித்தீயாகுமாறு அதில்நின்று அவிசாகச் சீரணிப்பிக்கின்ற அத்தன்மையளான திரோதான சத்திக் குரிய நகாரம் முதலாக நின்ற அந்நான்கெழுத்தே துணை என்று இருப் பவர்கட்குச் சிவசத்தி அவர்களது வழிபாட்டின் பயனைத் தரும் முதல் வியாய் நீங்காது நிற்பாள்.

குறிப்புரை :

ஆமம் - அரிசி. அன்னம் - சோறு. இவை உபலக்கணம். `ஓமம், உதம்` என்பன உருவகங்கள். உதம் - அவிசு. ``இருந்து பண்ணும்`` என்னும் அடைமொழியால், ``ஒருத்தி`` என்றது திரோதான சத்தியையாயிற்று. நகாரம் திரோதான சத்தி எழுத்தாகலின், அதனை முதலாக உடைய மந்திரமும் அவளதாயிற்று. நேமம், `நியமம்` என்பதன் மரூஉ. `இனிதாய், உதமாக, தலைவியாய்` என ஆக்கங்கள் வருவிக்க. `உலகப் பயனை வேண்டுவார்க்குத் தூல பஞ்சாக்கரம் உரியது` என்பதை விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 61

பட்ட பரிசே பரன்அஞ் செழுத்தின்
இட்டம் அறிந்திட் டிரவு பகல்வர
நட்டம தாடும் நடுவே நிலயங்கொண்
டட்டதே சப்பொருள் ஆகிநின் றானே.

பொழிப்புரை :

சிவன், `ஐம்பூதம், இருசுடர், ஆன்மா` என்னும் உலகப் பொருள் எட்டுமாய் நிற்பவன் ஆதலால், அவரவர் விருப் பத்தை உணர்ந்து அவரவர் மேற்கொள்ளப்பட்ட வகையிலே அமைந்த அஞ்செழுத்தின் உள் நின்று இரவும் பகலும் ஆகிய காலங்கள் மாறிமாறித் தொடர்ந்துவர இடையறாது நடம் புரிந்து நிற்பான்.

குறிப்புரை :

`பட்ட பரிசே அஞ்செழுத்தின் நடுவே நிலயங்கொண்டு ஆடும்` என்க. பட்டபரிசே ஆடுதலாவது, தூல பஞ்சாக்கரத்தின் நடுவில் ஊன நடனத்தையும், சூக்கும பஞ்சாக்கரத்தின் நடுவில் ஞான நடனத்தையும் செய்தல். ஈற்றில் `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது. ஈற்றடி, வேண்டுவோர் வேண்டுவனவற்றை அறிதல் கூறி, `அங்ஙனம் அறிதலால், அவரவர்க்கு உரிய பயனை அளித்தல் அல்லது நியதியின்றி அளியான்` என்பது உணர்த்தப் பட்டது. தூலமும், சூக்குமமும் ஆகிய பஞ்சாக்கரங்கள் தத்தம் பயனையே தருதலன்றிப் பிறிது பயன் தாராமையைக் காரணங்காட்டி விளக்கியவாறு. ``நம`` ஊன நடனத்தையும், ``சிவ`` ஞான, நடனத்தையும் குறித்தலை 955, 956 இல் உணர்த்தியுள்ளார் எனக் கோடல் பொருத்தம்.

பண் :

பாடல் எண் : 62

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகாரம் மலமாய் வரும்முப்பத் தாறில்
சிகாரம் சிவமா வகாரம் வடிவா
யகாரம் உயிரென் றறையலும் ஆமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும் அகாரத்தைப் பற்றியும், சிவ தத்துவம் ஐந்தும் உகாரத்தைப் பற்றியும், வித்தியா தத்துவம் ஏழும் மகாரத்தைப் பற்றியும் நிற்கும். இனித் திருவைந்தெழுத்தில் சிறப்புடைய மூன்றில் அவ்வாறின்றிச் சிகாரம் சிவமும், வகாரம் சத்தியுமேயாக, யகாரம் ஆன்மாவேயாம் என்று சொல்லுதலும் கூடும்.

குறிப்புரை :

மேல் பிரணவ கலைகளையும், திருவைந்தெழுத்தை யும் ஒப்ப வைத்துக் கூறிவந்தமைபற்றி மயங்காமைப் பொருட்டு இவ்வாறு கூறி அக்கலைகளினும் திருவைந்தெழுத்துக்கள் உயர்ந்தன வாதலை விளக்கினார்.
``முப்பத்தாறில்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``முப்பத்தாறில்`` என்றதனால், `உயிர், பரம், மலம்` என்பன அவை பற்றிய தத்துவங்களே ஆதல் விளங்கும். `மலம்` என்றது, `அசுத்தம்` என்னும் பொருட்டாய், அசுத்தமாயா தத்துவங்களை உணர்த்திற்று. வடிவு - சிவனது உருவம்; அது சத்தியாதல் அறிக. `சிவம், வடிவு, உயிர்` என்பவற்றில் தேற்றேகாரங்கள் தொகுத்தலாயின. அவற்றால், அவற்றின் பொருள்கள் சடமாகாது சித்தாதலும் அப்பொருள்களோடு அவ்வெழுத்திற்கு உள்ள பேருரிமையும் தோன்றுவனவாம். அவை பற்றியே ``அறையலும் ஆம்`` என உயர்வு சிறப்பும்மை கொடுத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 63

நகார மகார சிகாரம் நடுவா
வகாரம் இரண்டு வளியுடன் கூடி
ஒகாரம் முதற்கொண் டொருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே.

பொழிப்புரை :

நகார மகாரங்களை முன்னர் உடைய சிகாரம் நடுவணதாய் நிற்க, அவற்றின் பின்னதாகிய வகாரம் இடைகலை, பிங்கலை என்னும் இரு வாயுக்களுடன் பொருந்தி, ஓங்காரத்தை முதற்கண்ணே பெற்று ஓதப்படின், மேற்கூறிய எழுத்துக்களில் மகாரத்திற்கு முதல்வனாய் நின்று அதனைப் பரிபாகப்படுத்திவரும் சிவன், அங்ஙனம் ஓதுவாரது உள்ளத்தைத் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான்.

குறிப்புரை :

``நடுவாய்`` என்றமையால், நகார, மகாரங்களை உடைமை முதற்கண்ணதாயிற்று. `நடுவாய் நிற்க` என ஒரு சொல் வருவிக்க. உரைக்க - உரைக்கப்பட. தூல பஞ்சாக்கரமாதலின் ஊன நடனப் பிரானையே கூறினார். மேல் இரண்டிடங்களில் (955, 56) எடுத்தோதிய `நமசிவ` என்பதனை முதலில் பிரணவத்தோடு கூட்டிப் பிராணாயமத்துடன் ஓதல் வேண்டும் என்பது உணர்த்தியவாறு.
``நாலாம் எழுத்தோசை`` (954) என்பது முதல், இதுகாறும் அஞ்செழுத்து நாலெழுத்தாயும் நிற்கும் முறைமையே கூறினார்.

பண் :

பாடல் எண் : 64

அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன
அஞ்சையுங் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி யகம்புகல் ஆமே.

பொழிப்புரை :

ஒரு காட்டில் வாழ்வனவாகிய ஓர் ஐந்து யானைகள் உள்ளன. அவைகளை அடக்குதற்குச் சிவ நாமத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே அங்குசங்களாய் உதவும். அந்த அங்குசத்தைக் கொண்டு அவைகளை முழுதும் அடக்கவல்லவர்கட்கே ஐந்து பூதம் முதலிய தத்துவங்கட்கு முதல்வனும், முதற்கடவுளுமாகிய சிவனது இடத்தில் புகுதல் கூடும்.

குறிப்புரை :

``அஞ்சு ஆனை`` என்றதும் `அடவி` என்றதும், `தாம் குறித்த அவை` என்னும் பொருளவாய் நின்றன. அவை ஐம்பொறி களும், தத்துவதாத்துவிகக் கூட்டங்களுமாம். ``அஞ்சுக்கும் அஞ்செழுத்து`` என்றது நயம் தோற்றி நின்றது. நகாரம் முதலியவற்றை மூக்கு, நாக்கு, கண், மெய், செவி என்பவற்றோடு முறையே இயைத்துக் காட்ட முயல்வாரும் உளர். கூட - ஒருசேர, `அஞ்சாதி யாகிய ஆதி` என்க. அகம் திருவடி நிழல்.

பண் :

பாடல் எண் : 65

ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகாராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் உள்ள அகரம் முதலிய எழுத்துக்களில் சிலவாயுள்ள நகாரம் முதலிய ஐந்தெழுத் துக்களை அம்முறையில் நில்லாது பிரணவம் முதலாக மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களிலும் முறையே நிற்க மாற்றி வைத்து, தடத்த சிவனை மூலாதாரம் முதலாகவே திரோதன சத்தியோடுகூடத் தியானித்து, இவ்வாறு சந்தியா காலங்களில் வழிபடுபவர்க்கு வேறு சந்தியாவந்தனம் முதலிய சடங்குகள் வேண்டுவதில்லை.

குறிப்புரை :

``ஐந்து கலையில் அகராதி`` என்பதில், ஏழனுருபு பெயரோடு முடிந்தது. ``தன்னில்`` என்பது பன்மையொருமை மயக்கம். ``ஐந்து கலையில் அகராதி தன்னிலே வந்த நகராதிமாற்றி`` என்றது, `பிற எழுத்துக்களுள் சிலவாய அவையாக நிலையாமல், வேறாக மதிக்க` என்பது உணர்த்தற்கு. மேல் (959) ``மகார முதல்வன்`` என்றவாறே இங்கு ``மகாராதி`` என்றார். இங்குக் கூறுகின்றதும் தூல பஞ்சாக்கரமாதல் பற்றி. தூல பஞ்சாக்கரத்தை இறைவன் திருவடி முதலாகக் கொண்டு நிற்கும் முறையிலே ஆதாரங்களில் அமைத்தல் வேண்டும் என்பது கருத்து. `` மூலத்தே `` என்றது, ``மூலத்தில் தொடங்கியே`` என்றவாறு. மூலாதாரம் முதலிய எல்லா ஆதாரங் களிலும் `சிவனையே அவனது சத்தியோடு தியானிக்க` என்றது, `ஆதார மூர்த்திகளைச் சம்பு பட்சத் தினராகத் தியானிக்க` என்றதாம். சிறப்புப் பற்றிச் சந்தியாகாலத்தையே வரைந்தோதினார். அதனால், பிற காலங்கள் தவிர்க்கப்பட்டன அல்ல வாம். ``சடங்கு`` என்றது, `பிறிது சடங்கு` என்னும் குறிப்பினது. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட நின்றது.
பேரம்பலச் சக்கரத்தில் நிற்கும் ஐம்பத்தோரெழுத்துக்களை அகாரம் முதலாகத் தொடங்கி எண்ணுதல் அவற்றின் தோற்ற முறையாகும். அம்முறையில் முதல் தொடங்கிப் பதினாறு (உயிர்) எழுத்துக்கள் சாந்தியதீத கலையில் நிற்கும் (மெய்யெழுத்துக்களில்) ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய மூன்றெழுத்துக்கள் சாந்தி கலையில் நிற்கும். அடுத்த ஏழெழுத்துக்கள் வித்தியா கலையில் நிற்கும். அடுத்த இருபத்து நான்கு எழுத்துக்கள் பிரதிட்டா கலையில் நிற்கும். இறுதி எழுத்தாகிய க்ஷகாரம் ஒன்றும் நிவிர்த்தி கலையில் நிற்கும் என்க.

பண் :

பாடல் எண் : 66

மருவுஞ் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமு மாகும்
தெருள்வந்த சீவனார் சென்றிவற் றாலே
அருள்தங்கி அச்சிவ மாவது வீடே.

பொழிப்புரை :

உயிர்கள் சிவனை அடைவதற்கு வாயிலாகப் பொருந்திய, `சிவாய` என்னும் மூன்றெழுத்துக்களே உயிர்கட்கு உயிரும், கிடைத்தற்கரிய யோகமும், ஞானமுமாய்ச் சிறந்து நிற்பன. இவ்வுண்மையைப் பரிபாகம் வரப்பெற்றமையால் நகர மகரங்களின் நீங்கி யகரமாய் நின்ற உயிர், வகரமாகிய அருளிலே தங்கிப் பின் சிகரமாகிய சிவத்தை அடைந்து அதுவாய் விடுதலே வீடுபேறாம்.

குறிப்புரை :

வருவித்துரைத்தவை ஆற்றலால் வந்தன. அரு மருந்து - தேவாமுதம். அருமந்த, ``அருமருந்தன்ன என்பதன் மரூஉ. `சிவயோகம்` என்றற்கு, ``அருமருந்தன்ன யோகம்`` என்றார். இவ் அடை ஞானத்திற்கும் உரியதாதலின், அதுவும் சிவஞானமாயிற்று. சிவயோக சிவஞானங்களன்றிப் பிற யோக ஞானங்கள் வீடு பய வாமை அறிக. ``வீடே`` என்னும் ஏகாரம், பிரிநிலையாய்ப் பிறவாறு கூறப்படும் வீடுகள் வீடல்ல` என்பது உணர்த்தி நின்றது. மேல், `பல எழுத்துக்களுள் நின்ற சில எழுத்தாகாது அவற்றின் வேறாய் உயர்ந்து நிற்பன` எனக்கூறப்பட்ட ஐந்தெழுத்துக்களுள் மூன்றெழுத்து முத்தி மந்திரமாய்ச் சிறந்து நிற்பன என்பது உணர்த்தியவாறு. இங்கு, ``சிவாயமே`` என ஓதிய இதனாலும், அஞ்செழுத்து இறுதியில் மகாரத்தோடு நிற்றலும் உண்டு என்பது அறியப்படும். `சிவாயவே` எனப் பாடம் ஓதினும் ஆம்.

பண் :

பாடல் எண் : 67

அஞ்சுக அஞ்செழுத் துண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுஎன்று சாற்றுகின் றேனே.

பொழிப்புரை :

ஐந்து மலங்களும் நீங்கிப் போகும்படி அஞ் செழுத்தின் பொருளை எவரேனும் அறிந்தபின், இறைவன் அவர்களது நெஞ்சத்தில் நிரம்பி விளங்குவான். அவர்களது உறைவிடத்திற்கும் `அழிவு` என்பது உண்டாகாது. ஆகையால், இந்த மந்திரமே யாவர்க்கும் புகலிடமாகும். நான் உண்மையாகவே சொல்லுகின்றேன்; இதில் சிறிதும் பொய்யில்லை.

குறிப்புரை :

ஐந்து மலங்களாவன; `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி` என்பன.
``மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான்`` 1
என்றதேயன்றி
``மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்தெனவே`` 2
எனவும் அருளிச் செய்தமை காண்க. உகுதல் - சிந்திப்போதல். ``உண்மை`` என்றது பொருளை. அஞ்செழுத்தின் பொருள்கள் மேலே பலவிடத்தும் கூறப்பட்டன. `உண்மை விளக்கம், திருவருட்பயன்` என்னும் நூல்களிலும் தெளியக் காண்க. `பொருளை அறிதல்` மேற்கூறிய மூன்றெழுத்துக்களின் சிறப்பு உணர்தலைப் பயக்குமாதலின், ``அறிந்த பின், நெஞ்சகத்து உள்ளே நிறையும் பராபரம்`` என்றார், மனை, பெத்தத்தில் உடம்பும், முத்தியில் அருளுமாம். `மனைக்கு அழிவில்லை` எனவே, `அருளே நிலைக்களமாய்விடும்` என்றதாயிற்று. ஆகவே, மேற் கூறிய மூன்றெழுத்தின் பெருமை இதனால் வலியுறுத்தப்பட்டதாம்.

பண் :

பாடல் எண் : 68

சிவாயவொ டவ்வே தெளிந்துளத் தோதச்
சிவாயவொ டவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொ டவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொ டவ்வே தெளிந்திருந் தாரே.

பொழிப்புரை :

மேற்கூறிய ``சிவாய`` என்னும் மூன்றெழுத்தை `ஔ` என்னும் வித்தெழுத்தோடு ஒரு மந்திரமாகத் தெளிந்து, அங்ஙனமே ஓதினால், அம்மந்திரமே சிவனது வடிவாய் விளங்கும். அதனால், அத்தெளிவை உடையவர்கள் பிற மந்திரங்களைத் தெளிதல் இல்லை.

குறிப்புரை :

இதனால் மேற்கூறிய மந்திரம் `ஔ` என்னும் பீசாக்கரத்தை உடைமை கூறப்பட்டது. `ஔ` என்றே விதிப்பினும், `ஔம்` என்பதே கருத்து என்பது மேலே கூறப்பட்டதைக் கடை பிடிக்க. இது, `ஹௌம்` எனப்படுதலும் இயல்பு. `ஓம்` என்பது முதற் கண் நிற்றலை எடுத்துச் சொல்ல வேண்டுவதில்லை. `ஔ` என்பதைச் செய்யுளின்பம் நோக்கி, `அவ்` என்றே ஓதினார். இவ்வாறன்றி, வகர ஈற்றுச் சுட்டுப் பெயராக உரைப்பின் பொருள்படாமை அறிக.

பண் :

பாடல் எண் : 69

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஒகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே.

பொழிப்புரை :

மேல், ``நகார மகார சிகார நடுவாய்`` (959) என்ற மந்திரத்தின் பொருளே இதன் பொருளாகும்.

குறிப்புரை :

அங்கு, நகார முதலாக நிற்கும் மந்திரத்தை ஓதும் முறை கூறுதல் கருத்து; இங்கு அம்மந்திரத்தின் பயனையும் மேலை மந்திரங்களிற் கூறிய மூன்றெழுத்து மந்திரத்தின் பயனையும் புடைபட வைத்து உணர்த்து முகத்தால் பின்னதன் சிறப்பை வலியுறுத்துதல் கருத்து. இவையே இரண்டற்கும் வேற்றுமை. இது, வருகின்ற மந்திரத்திற்கும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 70

நம்முதல் ஓரைந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முத லாகும் சதாசிவன் றானே.

பொழிப்புரை :

நகாரம் முதலாக நின்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் நினைத்த செயல் கைகூடும்; எவ்வாறெனில், ஆன்மாக்களுக்குப் பயனை விளைக்கின்ற வினைகள் அதன்கண் அடங்கியிருத்தலால். சிகாரம் முதலாக நின்ற மேற்கூறிய மூன்றெழுத்து மந்திரத்தில் அவையின்மையால், அதனைத் தெளிந்து ஓத வல்லவர்கட்கு உண்மை முதல்வனாகிய சதாசிவ மூர்த்தியே தலைவனாய் நிற்பான்; என்றது, `அபரமுத்திப் பெரும் பயன் உளதாகும்` என்றவாறு.

குறிப்புரை :

முதலடியின் இறுதியில், `கூடும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. இதன்பின், `என்னை` என எடுத்துக் கொண்டு உரைக்க. ``அடங்கிய`` என்பது முற்று. `வல்வினை அடங்கிய` என மாற்றி. `ஆதலால்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. அடங்கியது நகாரத்திலாம். ``சிம் முதல்`` என்பது அதனை முதலாக உடைய மேற் கூறிய மந்திரத்தைக் குறித்தது. ``தானே`` என்னும் பிரிநிலை உயர்வு சிறப்பு உணர்த்தி நின்றது. மந்திரங்களை ஓதும் நிலை நாதத்தைக் கடவாத நிலையாதலின், அதற்கு அபரமுத்தியே பயனாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 71

நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும்
சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

பொழிப்புரை :

பிரணவமும், சிவமந்திரமும் என்னும் இரண்டுமே உயிர் சிவமாதற்குரிய சாதனமாகும். அவற்றோடே நில்லாமல் பிறவற்றோடு பொருந்தி நிற்பனவெல்லாம் கருவிக் கூட்டத்துள்ளே நிறுத்துவனவே. சிவத்தோடு ஒன்றிய நிலையில் எல்லாவற்றையும் காண்கின்ற அனுபூதிச் செல்வர்களும் தமக்குத் தாம் சிவமேயாய் நிற்கும் தெளிவு உண்டானது அச்சிவமந்திரத்தால் என்றே ஆர்வத்துடன் கூறுவர்.

குறிப்புரை :

`பிரணவம்` என்பதை `நவம்` என்றே கூறினார். ``சிவம்`` மூன்றில் முதலதும், இறுதியதும் அதன் மந்திரத்தின்மேல் நின்றன. சிவ மந்திரம், `சிவ` என்பது. `நவமும் சிவமும்` என்றதனால், `ஓம் சிவ` என்பதைக் குறித்ததாயிற்று. ஈற்றில் மகாரத்தைக்கூட்டி `ஓம் சிவம்` என்றலும் பொருந்துவதாதல், `சிவ` என்னாது, ``சிவம்`` என்ற தனால் பெறப்படும், `ஒன்றிலாதன` என்பது பிறவற்றோடும் கூடி நிற்றலைக் குறித்தது. அதனால்,, இங்கு நகர மகரங்களேயன்றி யகரமும் விலக்கப்பட்டது. ``தானாம்`` என்பது, `தாம் தானாம்` எனப் பொருள் தந்தது ஆற்றலால். தான், சிவம். ஈற்றடி முதலில், `சிவத்தால் என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மேற் கூறிவந்த மூன்றெழுத்து மந்திரத்தினும் இவ் இரண்டெழுத்து மந்திரம் சிறப்புடைத்தாதல் இதனுள் கூறப்பட்டதாம். ``ஐம்பதெழுத்தே`` (948) என்பது முதலாக இதுகாறும் திருவைந்தெழுத்தின் பெருமையே விரித்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 72

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி யதனைத் தெளிந்தறி யீரே.

பொழிப்புரை :

அறிவுடையோர் நாடி நிற்கின்ற சிவனை அறிவின் கண் உள்ளவனாக உணர்ந்து, அவ்வறிவைப் பெறுதற்கு அகார உகாரங்களின் கூட்டாகிய ஓகாரத்தையாவது அல்லது யகாரத்தை யாவது நீயாக மனம் ஒருங்கித் தியானி. அங்ஙனம் தியானித்தால் இது காறும் உன்னோடு மாறுபட்டுப் போராடி வந்த பஞ்சேந்திரியங்களும் உன் வயத்தனவாய் உனக்குத் துணைசெய்து நிற்கும். ஆதலால், அவ் இந்திரியங்களை வயப்படுத்த நீ தேடிக்கொண்டிருந்த வழியை இவ்வாறு தெளிந்தறிக.

குறிப்புரை :

`எட்டு` என்னும் எண்ணின் வடிவம் `அ` என்பதும், `இரண்டு` என்னும் எண்ணின் வடிவம் `உ` என்பதும் ஆதலால், அவற்றைக் குறிக்கும் குறிப்பு மொழியாக முறையே, `எட்டு` என்பதும், `இரண்டு` என்பதும் குழூஉக்குறியாகச் சொல்லப்படுதல் வழக்கம். `கூடிய அ, உ` என்றதனால், `ஓகாரம்` என்பது விளங்கிற்று.
இனி, இஃது, எட்டும், இரண்டும் கூடிய வழி ஆவது பத்தாத லின், `பத்தின் வடிவமாகிய யகரம்` என்பதும் பொருளாகும். ஆகவே, ஆன்மா தன்னை அசுத்த தத்துவங்களினின்றும் வேறாகக் காணுதற்குத் தன்னைப் பிரணவ வடிவாகவேனும், திருவைந்தெழுத்தில் யகார வடிவாகவேனும் உணர்தல் வேண்டும் என்பது இதனால் உணர்த்தப் பட்டதாம். ``எட்டினோடிரண்டும் அறியே னையே`` (திருச்சதகம் - 53) என்ற திருவாசகத் தொடரும் இங்கு நினைக்கத் தக்கது.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. தேடியது - தேடப்பட்டது. ஈற்றில், ``அறியீர்`` என்றது, உயர்த்தற்கண் வந்த பால் வழுவமைதி. திருவம்பலச் சக்கரத்தில் அமைந்த மந்திரங்களுள், திருவைந் தெழுத்தின் சிறப்பினைப் பல்லாற்றானும் வலியுறுத்தி ஓதியபின், இதுமுதலாகப் பிறவற்றின் சிறப்பை வலியுறுத்துகின்றார்.

பண் :

பாடல் எண் : 73

எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொழிப்புரை :

மேல், ``எட்டும் இரண்டும்`` என்னும் குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட அப்பொருள்களை அனுபவமாக உணராதவர், `அ, உ` என்று எழுத்தை அறியத் தொடங்கும் அத் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். இன்னும், எட்டு என்னும் எண்ணை யும் இரண்டு என்னும் எண்ணையும் கூட்டுத்தொகை காணும் அறிவும் இல்லாதவரே யாவர். இனி, ``எட்டும், இரண்டும்`` என்பதற்கு, மேற் சொல்லப்பட்ட இருபொருள்களில் பின்னதாகிய `பத்து` எனக் கொண்டு யகாரத்தைக் கொள்ளுதலே சிவாகமங்களின் ஞானபாதக் கருத்தாகும்.

குறிப்புரை :

கல்வியறிவு மிக்கிருந்தும் அதனாற் பயன் கொள் ளாமைபற்றி அவரை இத்துணை அறிவிலிகளாகக் கூறினார். ஆகவே, இரண்டாம் அடிக்கு இந்த இருபொருளும் கொள்க.
அவ் இருபொருள்களில் ஒன்றை,
``அ உ அறியா அறிவில் இடைமகனே`` 1
என்பதிலும் காணலாம். மேற் காட்டிய திருவாசகத்தொடர் மேற்போக் கில் இங்குக் கூறியவாறே இவ் இருபொருளையும் குறித்தல் வெளிப் படை. இரு மூன்று நான்கு - பத்து. சிவாகமங்களே சித்தாந்தமாதல் நன்கறியப்பட்டது.
இவ் இரண்டு மந்திரங்களாலும் முன்னர்க் கூறிப் போந்த மந்திர எழுத்துக்களுள் சிலவற்றின் சிறப்பு வலியுறுத்தப்பட்டது. `தமிழில் மந்திரம் உண்டோ` என ஐயுறுவார்க்கு `உண்டு` என இம்மரபு தெளிவுறுத்துதல் காண்க.

பண் :

பாடல் எண் : 74

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.

பொழிப்புரை :

செங்குத்தாக எட்டு நேர்க்கோடு கிழித்து, அவற்றின் மேல் குறுக்காக எட்டுக் கோடுகளை இழுக்க நாற்பத்தொன்பது அறைகள் உண்டாகும்; அவற்றுள் நடு அறையில் இறைவன் எழுத் தாகிய சிகாரம் அமையுமாறு மேல் (906) மேற்கூறியபடி திருவைந் தெழுத்தை ஐந்து வகையாக மாற்றி முறையே இருபத்தைந்து அறைகளில் பொறித்தபின், நடு அறையொழிந்த நாற்பத்தெட்டு அறைகளிலும் எழுத்துக்கள் இருக்கச்செய்ய வேண்டும்; அஃதாவது எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பிற எழுத்துக்களைப் பொறிக்க வேண்டும். அவ்வாறு செய்தவுடன் சக்கரத்தை வழிபட்டுத் திருவைந்தெழுத்தைச் செபிக்கத் தொடங்கலாம்.

குறிப்புரை :

``கீறியிட்ட`` என்பது ஒருசொல். கீறியிட்ட நடுவு - கீறிய தனால் உண்டான நடு அறை. `ஒன்றியபின்` என்பது, ``ஒன்றில்`` எனத் திரிந்து நின்றது. வட்டம் - சக்கரம். `நாற்பத்தெட்டிலும் எழுத்தை இட்டு` எனச் செயப் படுபொருள் வருவித்துக் கொள்க. `சிட்ட` என்பதில் அகரம் தொகுத்த லாயிற்று. சிட்டம் - மேன்மை. எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பொறித்தற்கு உரிய எழுத்துக்கள் வருகின்ற மந்திரத்திற் கூறப்படும்.

பண் :

பாடல் எண் : 75

தானவர் சிட்டர் சதுரர் இருவர்
ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

பொழிப்புரை :

தானம் - இடம். தானவர் -இடங்காவலர்; (கே்ஷத் திர பாலகர்) பைரவர். சட்டர் - செப்பம் செய்பவர்; குற்றம் செய் தோரை ஒறுத்துத் திருத்துபவர்; வீரபத்திரர். சதுரர் இருவர் - திற முடைய மகார் இருவர்; பிள்ளையாரும், முருகரும். ஆன இம் மூவர் - இவ்வாறு மூன்று வகையாகச் சொல்ல நின்றவர். ஆற்ற அராதிகள் - நெறியில் உள்ள உருத்திரர் முதலியோர்; உருத்திரர் முதலாகக் கீழ் நோக்கி எண்ண வருகின்ற மாலும், அயனும், உருத்திரர் முதலாக மேல் நோக்கி எண்ணவருகின்ற மகேசுரர், சதாசிவரும் ஆக ஐவர். ஏனைப் பதினைந்தும் - மேற்சொல்லிய ஒன்பதின்மரது எழுத்துக்களையும் பொறித்தபின் எஞ்சி நிற்கின்ற பதினைந்து அறைகளிலும், விந்து, நாதம், சூழ்படை (பரிவாரங்கள்) என்ப வற்றது எழுத்துக்களைப் பொறிக்கச் சிவசக்கரம் அமையும்.

குறிப்புரை :

இச்சக்கரத்தின் வடிவம் ஆமாறு:
`கள்` விகுதி உயர்திணைப் பன்மையையும் உணர்த்தி நிற்றல் பிற்கால வழக்காதல் வெளிப்படை. ``ஏனைப் பதினைந்து`` என்ற தனால்,, `முன்னர்க் கூறப்பட்டன ஒன்பது` என்பது பெறப்பட்டது. பதினைந்தில் விந்து நாதங்களைப் பிரித்தமையால். சேனை பதின் மூன்றாயிற்று. ``சேனை`` எனப்பட்ட பதின்மூவராவார் திசை காவலர் எண்மரும், `நந்தி, மாகாளர், பிருங்கி, இடபர், சண்டர்` என்னும் ஐவரும் ஆவர். ஈற்றில், `அமையும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது.
விளிம்பு அறை இருபத்து நான்கிலும் உள்ள எழுத்துக்களின் விளக்கம் வருமாறு:-
1. ளம் - இந்திரன், 2. ரம் - அக்கினி, 3. யம் - யமன். 4. ந்ரூம்- நிருதி, 5. வம் - வருணன், 6. ஹ்யம் - வாயு, 7. கம் - குபேரன், 8. ஈம் - ஈசானன்.
9. ஹ்லாம் - பிரமன், 10. ஹ்வீம் - திருமால், 11. ஹ்ரூம் - உருத்திரன், 12. ஹ்யைம் - மகேசுவரன், 13. ஹ - சதாசிவன், 14. அம்- விந்து, 15. அ - நாதம்.
16. கம் - கணபதி, 17. ஸம் - கந்தன், 18. நம் - நந்தி, 19. ரும்- இடபன், 20. ஸம் - மகாகாளன், 21. ப்ரும் - பிருங்கி, 22. ஹ்வம் - வீரபத்திரன். 23. சம் - சண்டன், 24. பம் - பைரவன்.
மையக் கட்டத்தில் இறைவன் எழுத்தாகிய சிகாரம் நிற்றலைக் காண்க
இவ் வரிசை எண் வழிபாட்டு முறை பற்றியது. நாயனார் சொல் சுருங்கிச் செய்யுளாமாறு பற்றியே கூறினார்; வழிபாட்டு முறை பற்றிக் கூறினாரல்லர், அஃது ஆசிரியன்மார் அறிவுறுக்க அறிந்து கொள்ளப்படும் ஆதலின்.
சக்கரத்தின் மேற்பக்கம் வடக்காகும். ஆன்மார்த்த வழி பாட்டில், வழிபடுவோர் வடக்குநோக்கி அமர்ந்திருக்க, வழி பாட்டிடம் மேற்குநோக்கிய நுழைவாயிலைக் கொண்டிருக்கும். அதனால், சக்கரத்தின் நுழைவாயிலும் மேற்கு நோக்கியே நிற்கும்.
அம்முறையில் இருத்தப்பட்ட இச்சக்கரத்தில் முதற்கண் திசை காவலரை இந்திரன் முதலாக ஈசானன் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, அதன்பின் பிரமன் முதலாக நாதம் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, மூன்றாவது கணபதி முதலாகப் பைரவர் ஈறாக முறையே வலமாக வழிபட்டு, வழிபாடு முடிந்த பின்னர் அம்முறையே ஒவ்வொரு மந்திரத்தையும் பத்து பத்து உருச் செபித்துப் பின் திரு வைந்தெழுத்தை நூற்றெட்டு முதலாக வேண்டும் அளவு செபிக்கலாம். இது, போக சாதன முறை.
முத்தி சாதன முறைக்குத் திசை காவலரைவழிபட்ட பின்னர்க் கணபதி முதலாகத் தொடங்கி நேரே வலமாகச் சென்று பைரவனோடு ஒரே வழிபாடாக முடிக்கப்படும். திருவைந்தெழுத்தும் இவ் இருமுறை கட்கும் ஏற்றவாறு செபிக்கப்படுதல், மேற் பலவிடத்தும் கூறப்பட்டது.
இச்சக்கரத்தை மேற்கூறியவாறு வைத்து நோக்கின், வலப் பாதி காரணக் கடவுளர் பகுதியாயும், இடப்பாதி காரியக் கடவுளர் பகுதியாயும் நிற்றல் காணலாம். இவையெல்லாம் மரபு வழி அறிய வைத்தார் என்க.
இவ்விரண்டு மந்திரங்களாலும் மேற்கூறிய சிற்றம்பலச் சக்கரத்தைச் சிவசக்கரமாகச் செய்து வழிபடுமாறு கூறப்பட்டது.
இதனுள், இந்திரதிசையில் சூரியனும், குபேரதிசையில் சந்திரனும் அடங்குவர். சூரியனிடத்து அங்காரகன் முதலிய ஐங்கோ ளினரும் அடங்குவர். உருத்திரனிடத்தில் உருத்திரர் யாவரும் அடங் குவர். வித்தியேசுரர்களும், மந்திர மகேசுரர்களும் மகேசுரனிடத்தில் அடங்குவர். அணு சதாசிவர்கள் சதா சிவனிடத்தில் அடங்குவர். நந்தி யிடத்துச் சிவகணங்கள் பலரும் அடங்குவர். பிருங்கியினிடத்து முனிவர்கள் அடங்குவர். இன்னும் பிற தேவர்களும் இந்திரனிடத்தே அடங்குவர். இங்குக்கூறிய தலைவர் பலர்க்கும் பரிவாரங்களாய் உள்ளவர்கள் அவ்வத் தலைவரிடத்தே அடங்கி நிற்றல் சொல்ல வேண்டா. இதனால், இச்சக்கரம் கடவுளர் பலரையும் புறஞ் சூழக் கொண்ட சிவசக்கரமாய் அமைந்து நிற்றல் அறிக.

பண் :

பாடல் எண் : 76

பட்டன மாதவம் ஆற்றும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

பொழிப்புரை :

இயன்ற அளவு செய்யப்பட்ட சிவன் பணியே, மேலானவற்றிற்கெல்லாம் மேலான வீட்டினைப் பெறுவிப்பதாகும். அதனால், தற்போதத்தை விட்டவர்கள் சிவனையே புகலிடமாக அடைவர். ஆகலின், யானும் அவனது பணி வகைகள் பலவற்றில் ஏதேனும் ஒன்றில் எள்ளளவாயினும் மேற்கொள்வேன்; போற்றுங் கால் அவனது திருநாமத்தையன்றி வேறொன்றைச் சொல்ல அறியேன்.

குறிப்புரை :

`இறப்பில்தவம்` 1 என்பார். ``மாதவம்`` என்றார். `பராபரம் ஆற்றும்` என மாறிக் கூட்டுக. ஆற்றுதல் - தருதல். `பராற்பரம்` என்பது `பராபரம்` என மருவிற்று.
இதனால், `சிவசக்கரத்தை அமைத்து அதன் வழி இயன்றளவு சிவழிபாடு செய்யுங்கள்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 77

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :

[இம்மந்திரம் மேலே 89 ஆம் மந்திரமாகவும் வந்திருத்தலால் இதன் பொருளை அவ்விடத்தே கண்டு கொள்க].

குறிப்புரை :

இது முன்னே வந்திருப்பினும், அங்கு, `எல்லாப் பேத மும் சிவபேதமே` என்பதை விளக்குதற் பொருட்டும், இங்கு, எல்லா மந்திரங்களும் சிவனது மந்திரமே` என்பதை விளக்குதற் பொருட்டும் வந்தன. எனவே, இரண்டிடத்தும் கருத்து வேறுபடுதல் அறிக. தொல்காப்பியத்திலும் சூத்திர வடிவம் பல இடங்களில் ஒன்றாய் இருப்பினும், பொருளால் அவை வேறு வேறு சூத்திரங்களாய் நிற்றல் காண்க. இதனால், ``சவை`` என்பது, மேல், `தொகுதி` என்றும், இங்கு, `திருவம் பலம்` என்றும் பொருள்படுதல் அறிந்து கொள்க.

பண் :

பாடல் எண் : 78

வித்தாஞ் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

பொழிப்புரை :

உலகத்திற்குக் காரணமாகிய தத்துவங்களின் எண்ணிக்கை (முப்பத்தாறு) அளவில் அறைகள் கீறி, அவற்றுள் இடப் பால் பதினாறு அறைகளைச் சந்திரன் கூறாகக் கொண்டு ஐம்பத்தோ ரெழுத்துக்களில் ஐவருக்கத்தில் இடைநின்ற பதினைந்தும் நீக்கி ஒடுக்க முறையில் க்ஷகாரம் முதலாக டகாரம் ஈறாக உள்ள பதினாறு எழுத்துக் களையும் சந்திரனது பதினாறு கலைகளாகப் பாவித்தும், வலப்பால் பன்னிரண்டு அறையில் ஞகாரம் முதலாக உயிரெழுத்துக்களில் எகர ஒகரக் குறில்களையும் சேர்த்து எகரம் ஈறாகப் பன்னிரண்டெழுத்துக் களையும் சூரியனது கலைகளாகப் பாவித்தும், எஞ்சி நின்ற எட்டு அறைகளோடு மேற்பக்கத்தில் கொடு முடிபோல நடுவிரண்டு அறைக்கு நேராக இரண்டு அறைகள் நிராதார மாகப் பரசிவன் பராசத் திகளுக்குக் கீறி, ஆகப் பத்து அறைகளில் எஞ்சிய, ளுகாரம் (ளு) முதலிய பத்து உயிரெழுத்துக்களையும் அக்கினி கலைகளாகப் பாவித்தும் பொறித்துக் காயத்திரியை முறைப்படி செபித்தபின், இவ்வெழுத்துக்களை விந்து ஈறாக ஓதுக.

குறிப்புரை :

`செக வித்தாம் அவை மயமாக` என்க. `வித்துக் கூறவே அவற்றின் நிலமாய பரையும், அந்நிலத்தைப் பக்குவப்படுத்து வோனாகிய பரசிவனும் கொள்ளப்படுவர்` என்பது பின்னர் முப்பத் தெட்டு இடங்களைக் குறித்தலால் அறியப்படும். யோகத்திலும், சிவனது கூற்றிலும், `இடப்பால், வலப்பால், நடு` என்னும் மூன்று பகுதியும் சந்திர சூரிய அக்கினிகளின் கூறாதல் தெளிவாதலின், சக்கர அறைகளிலும் அவ்வாறு கொள்ளுதல் பெறப்பட்டது. இம்முறையில் இச்சக்கரம் அமையும் முறை வருமாறு:-
சிவனது அதிட்டானங்களில் (இடங்களில்) சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் சிறந்தனவாகலின் அம்மண்டல வடிவில் அமைவது இச்சக்கரம். இதனால், இது திரிமண்டலச் சக்கரமாகும். இறைவனது அதிட்டானங்களுள் திருவம்பலமாகும் என்பது கருத்து. `நந்து` என்பது வலித்தல் பெற்றது. நந்துதல் - வளர்தல். உத்தாரம் - பின்பு. ஆதி - ஆதித்தன். அவன் கலையொடு தொகுவது அக்கினிகலை.
இதனால், இது மற்றொருவகைத் திருவம்பலமாகிய திரிமண்டலச் சக்கரம் ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 79

கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமஎன லாமே.

பொழிப்புரை :

யான் சிவனை இச்சக்கரத்தின் வழியே கண்டு உயர்வு பெற்றேன்; அதனால், பின்பு அவனை நான் எனது உள்ளத் தாமரையிலே அடங்கக் கொண்டு மேலும் உயர்வு பெற்றேன்; ஆகவே, இனித் தன் இயல்பு கெடாத பதிஞானத்தின் வழியே சென்று அழியாத அன்புடன் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் பேற்றினைப் பெறுதல் திண்ணம்.

குறிப்புரை :

`அதனால், நீவிரும் இவ்வாறு அப்பேற்றினைப் பெறு மின்` என்பது குறிப்பெச்சம். பதி, ஆகுபெயர். ``நம`` என்றது, `நம சிவாய` என்பதை முதற் குறிப்பாற் கூறியவாறு. இங்குக் கூறிய பஞ் சாட்சரம் அதன் பேதங்கள் அனைத்தையும் கொள்ள நின்றது.
இதனால், மேற்கூறிய திரிமண்டலச் சக்கரம் அதற்கு முன்னர்க் கூறப்பட்ட சிவசக்கரத்திற் செலுத்துவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 80

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்
றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

பொழிப்புரை :

தேவர்களுக்குள் பக்குவம் எய்தினோர் பூக்களை மழைபோலத் தூவிச் சிவசக்கரத்தில் உள்ள திருவைந்தெழுத்து வாயிலாகச் சிவபெருமானது இரண்டு திருவடிகளைத் தியானிப் பார்கள். பின்னும் அம்மந்திரத்தையே துணையாகப் பற்றி அத்திருவடி களைக் கண்போலச் சிறந்தனவாக உணர்ந்து அவற்றில் இரண்டறக் கலந்து நிற்பார்கள்.

குறிப்புரை :

இதனால், சிவசக்கரம் திரிமண்டலச் சக்கரத்தின் பயனாதல் கூறி, அதன் சிறப்பு வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 81

ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

பொழிப்புரை :

பிரணவத்தோடு கூடிய ஆறாகிநிற்கும் திருவைந் தெழுத்து மந்திரத்தையே ஆறு சமயங்களும் பற்றி நிற்றல் வெளிப் படை. ஆயினும், சிலர் `அந்த ஆறெழுத்து மந்திரத்தினும் இருபத்து நான்கு எழுத்தாகிய காயத்திரி மந்திரமே சிறந்தது` என மயங்குவர். `ஆறு` என்னும் எண்ணினது நான்மடங்கே இருபத்து நான்கு என்னும் எண் ணியல்பை நோக்கினாலே, `திருவைந்தெழுத்தில் அடங்குவது காயத்திரி` என்பது புலனாய் விடும். இன்னும் காயத்திரியின் முதலிலே `ஓம்` என்ற ஓர் எழுத்து உள்ளது. அதனைப் பகுத்தறிய வல்லவர் திரு வைந்தெழுத்தின் உண்மையையும் உணர்ந்து பிறவி நீங்கவல்லவராவர்.

குறிப்புரை :

`எனவே, அங்ஙனம் அறியமாட்டாதவரே, `திருவைந் தெழுத்திற்கு மேற்பட்டது காயத்திரி` எனக் கூறிப்பிறவியில் அழுந்துவர்` என்பது பெறப்பட்டது. `இருபத்து நான்கு` என்னும் எண்ணிற்குக் காரண எண் ஆறேயன்றி, `நான்கு, மூன்று, இரண்டு` என் பனவும் ஆதலின், `திருவைந்தெழுத்தும் அவ்வெண்களின் அளவாக நின்று மேன்மேல் உயர்ந்த பயன்களைத் தருதல் மேலெல்லாம் கூறி வந்தவாறு பற்றி அறிந்து கொள்க` என்பது குறிப்பாற் கூறியதாயிற்று. `சாவித்திரி, காயத்திரி` என்பார் வேறு வேறு தேவியாராயினும், ஒற்றுமைபற்றி ஒருவராகச் சொல்லும் வழக்கும் உண்மை பற்றி இங்குக் காயத்திரி மந்திரத்தை, ``சாவித்திரி`` என்றார். தலை - முதல்.
பிரணவமாகிய ஓங்காரம், `அ, உ, ம்` எனப் பிரிக்கப்படும் என்பது மேல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அப்பிரிவு மூன்றனுள் அகாரம் தோற்றத்தையும், உகாரம் நிலையையும், மகாரம் இறுதியை யும் குறிக்கும். அதனால், அவை பிரமன் முதலிய மூவரைக் குறிப்பனவுமாம். வியட்டி நிலையில் பிரணவம் இவ்வாறாதலை உணர்வார், சமட்டி நிலையில் முத்தொழிற்கும் முதல்வனாகிய சிவபெருமானையே குறிக்கும் என்பதை ஐயம் அற உணர்வர். பிரணவத்தின் பின் பூ: முதலிய வியாகிருதியைச் சேர்த்தால் காயத்திரி; சேர்க்காதது சாவித்திரி எனப்படும்.
இனிச் சடப்பொருள்களாகிய தனு கரண புவன போகங் களினது தோற்றம் முதலிய மூன்றனைக் குறிக்கின்ற அவ் அகாரம் முதலிய மூன்றும் சித்துப் பொருளாகிய உயிரினது அறிவின் தோற்றம், நிலை, ஒடுக்கம் என்னும் மூன்றனையும் கூடக் குறிப்பனவாம். ஆகவே, அகார உகாரங்கள் சகல நிலையில் புருவ நடுவில் நிகழும் சகலசாக்கிரம் முதலிய ஐந்திலும் உயிர்கட்குப் பாசஞான பசுஞானங் களைத் தோற்றுவித்து நிறுத்தலாகிய நினைப்பினையும் ஒடுக்கு தலாகிய மறப்பினையும் குறித்தலும், சுத்தநிலையில் அவை சுத்தாவத் தைகளில் பதிஞானத்தினைத் தோற்றுவித்து நிறுத்துதலாகிய அருள் நிலையையும் பின் பசுபேத ஒடுக்கமாகிய ஆனந்த நிலையையும் குறித்தலும் பெறப்பட்டன. படவே, பிரணவம் வியட்டிநிலையில் பிரமன் முதலிய மூவரையும் இயைபுபற்றி ஓர் ஓர் எல்லையளவும் உபசாரத்தாற் குறிப்பதாயினும், உண்மையில் அஃது எந்நிலையிலும் சிவபெருமானையே உணர்த்தி நிற்றல் இனிது பெறப்படும். அதனால், பிரணவத்தின் பொருளும் திருவைந்தெழுத்தால் உணர்த்தப்படும் சிவபெருமானே யாதல் நன்கு அறியப்படும்.
இன்னும் காயத்திரி மந்திரம் மூன்று பிரிவுகளாய் (வியாகிருதி களாய்) நிற்றலைப் பலரும் எடுத்துக் கூறுவர். அவற்றுள், முதற்பிரிவு சிவசத்தியையும், இரண்டாவது பிரிவு சிவத்தையும், மூன்றாவது பிரிவு உயிரையும் முதன்மையாக நோக்கி நிற்பன. ஆகவே, அம்மூன்றையும் குறித்து நிற்கின்ற திருவைந்தெழுத்தின் பொருளே காயத்திரியின் பொருளு மாதல் தெளிவாம். இன்னோரன்ன காரணங்கள் பற்றியே நாயனார், இங்கு,
``சாவித் திரியில் தலையெழுத் தொன்றுள;
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே``
என அறுதியிட்டு அருளிச் செய்தார்.
காயத்திரி மந்திரத்துள் அமைந்த `சவிதா, பர்க்கஸ்` என்னும் சொற்களுக்கு முறையே, `சூரியன்` என்றும், `சூரியனது ஒளி` என்றுமே வைதிகர் பொருள் கொள்வர். ஆனால், சைவர் அவ்வாறன்றி அவற்றிற்கு முறையே `சிவன்` என்றும், `அவனது சத்தி` என்றுமே பொருள்கொள்வர். `வேதம் ஓரோர் இடத்தில் ஓரொரு தேவரைப் புகழ்ந்து கூறினாலும் உண்மை முதற்கடவுளாவான் சிவபெருமானே என்பதே அதற்குக் கருத்து` எனவும், `ஆகவே, காயத்திரிக்கும் மேற் கூறியவாறு சைவர் கூறும் பொருளே பொருள்` எனவும் உணர்ந்து, அதனானே, திருவைந்தெழுத்து மந்திரமே அனைத்து மந்திரங்களினும் தலையானதாகக்கொண்டு அவ்வுணர்வோடே முத்தீவேட்டல், சந்தியா வந்தனம் செய்தல் முதலிய செயல்களைச் செய்வோரே சிறப்புடைய வேதியர் ஆவார் என்பதனைத் திருஞானசம்பந்தர் தமக்கு வேதியர்கள் உபநயனச் சடங்குசெய்து பூணூல் அணிவித்தல், பிரமோபதேசம் செய்தல், வேதம் ஓதுவித்தல் என்பவற்றைச் செய்த பொழுது அவர்கட்குத் தாம் கூறும் அறிவுரையாக,
``செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்திஉள் மந்திரம் அஞ்செ ழுத்துமே`` 1
என அருளிச் செய்தமையும், திருநாவுக்கரசரும் தமது ஆதி புராணத் திருக்குறுந்தொகையில்
``அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்;
அருக்க னாவான் அரனுரு அல்லனோ!
இருக்கு நான்மறை ஈசனை யேதொழும்
கருத்தி னைஅறி யார்கல் மனவரே`` 2
என அருளிச் செய்தமையும் இங்கு இன்றியமையாது நோக்கற் பாலன. திருஞானசம்பந்தர் குறிப்பிட்டருளிய செம்மை வேதியரை இக்காலத்துக் காண்டல் அரிது.
``ஆறு சமயங்கள்`` என்றது `காணாபத்தியம், கௌமாரம், சாத்தம், சைவம், ஸொரம், ஸௌமியம்`` என்பவற்றை. இவற்றில் நிற்போர் தம் தம் விருப்பக் கடவுளர் (இஷ்டதேவர்) ஆகிய கணபதி முதலியோரிடத்து அன்பு பூண்டு அவர்தம் மந்திரங்களை அன்பினால் ஓதினாராயினும், `சிவபெருமானே முதற் கடவுள்` என்பதிலும், `அதனால், அவனது திருவைந்தெழுத்தே முதல் (மூல) மந்திரம்` என்பதிலும் மாறுகொள்ளாதவராய் உடம்பட்டு ஒழுகுதல்பற்றி, ``ஆறெழுத்தாகுவ ஆறு சமயங்கள்` என்றார். ``சமயத்தில் உள்ளது நீறு`` என்ற திருநீற்றுப் பதிகத் தொடரும் இங்கு உடன் வைத்து உணரத்தக்கது. இதனானே, இவை `அகச் சமயம்` எனப்பட்டன.
இவற்றோடு ஒரு காலத்தில் ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வைணவம், பிற்காலத்தில், சிவபெருமானது ஆற்றலைத் தெளிய மாட்டாது தக்கனது ஆற்றலுக்கு அஞ்சி அவனது வேள்வியிற் சென்றிருந்து, அதனால், அவ்வேள்வியை ஒதுக்கிநின்ற சில திண்ணிய பேரிருடிகளது சாபத்திற்கு உட்பட்டோரால் மேற்கூறிய கருத்துக் களோடு மாறுகொண்டு வேறு நிற்பதாயிற்று. அதுபற்றி அதுவும் புறச் சமயமாக எண்ணப்படுகின்றது. இது,
``தாயி னும்நல்ல சங்கர னுக்கன்ப
ராய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை உண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துட் பட்ட மனத்தரே`` 1
என்னும், மேற்குறித்த திருக்குறுந்தொகைப் பதிகத் திருப்பாடலால் நன்கறியப்படும். இதனுள் ``மாயன்`` என்றது, `மாயம் செய்யும் இயல்பினன்` என்பதையும், ``பேய் முலை உண்டு உயிர் போக்கிய`` என்றது, `நல்லோரை வஞ்சனையாற் கெடுக்க என்னும் தீயோரைக் தானும் வஞ்சனையாற் கெடுப்பவன்` என்பதையும், வெளிப்படை யினாலும், குறிப்பினாலும் உணர்த்தி நின்றன. ``மாயன் மாயம்`` என்றது, அவன் இவ்வாறான கருத்துப் பற்றிச் செய்த நூல்களை.
இதனால், ஆறெழுத்தின் பெருமை கூறும் முகத்தால் சிவசக்கரத்தினது சிறப்பே வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 82

எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டே
ஒட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

பொழிப்புரை :

வெளியில் நான்கு கோடுகளும், உள்ளால் நான்கு கோடுகளும் ஆக எட்டுக் கோடுகளால் சுற்றிலும் எட்டு அறைகள் உண்டாக்கி, அவற்றின் நடுவில் உள்ள ஓர் அறை எட்டின் வடிவமாகிய அகாரத்தைப் பெற்று எட்டு முகமாய் அந்த எட்டு அறைகளையும் நோக்கும்படி அவற்றைப் பிரணவ கலைகளால் நிரப்பிப் பின்பு எல்லா அறைகளையும் உட்படுத்துச் சூழும்படி ஓங்காரத்தைப் பொறித்து அவற்றைப் பொருந்திச் செபிப்போர்க்குச் சிவன் உமா சகாயனாய் வெளிப்படுவான்.

குறிப்புரை :

எனவே, `இஃது உமாபதி சக்கரம்` என்பது பெறப் பட்டது. `மேற்கூறிய சிவ சக்கரத்தால் சிவன் அனைத்துக் கடவுளர் அதிபதியாய்த் தோன்றுவன்` என்பதும், இதனால், `உமையோடு மட்டும் கூடியே தோன்றுவான்` என்பதும், அறிந்து கொள்ளப்படும். இச்சக்கரத்தைக் காணுமாறு.
இதனால், மற்றொருவகைத் திருவம்பலச் சக்கரமாகிய உமாபதி சக்கரம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 83

நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாக உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.

பொழிப்புரை :

மேற்கூறிய சக்கரத்தின்படியே சமட்டிப் பிரண வத்தை முன்வைத்து வியட்டிப் பிரணவத்தைச் செபிக்குங்கால் இடையே நகார முதலும் யகார ஈறுமான தூல பஞ்சாக்கரத்தை ஓதுதலையும் முறையாகக் கொண்டு, `இச்செபம் உகாரத்தை முதலிற் கொண்ட மந்திரத்திற்குரிய உமாதேவியின் தலைவனாகிய சிவனுக்கு உரியது` என்பதனை ஐயம் அறத் தெளிந்து செபிப்பவர் சென்னிமேல் அந்த உமாபதியாகிய சிவன் எழுந்தருளியிருப்பன்.

குறிப்புரை :

``நம்முதல் அவ்வொடு`` என்றதில், `அ` என்றது, யகரத்தையே, `யவ்வொடு` என்றே பாடம் ஓதினுமாம். ``அவ்வொடு`` என்றது அகர ஈற்றோடு என்றவாறு. அவ்வொடு என்றதன் பின் `பொருந்திய` என்பது எஞ்சி நின்றது. `நம்முதலொடும் அவ்வீற் றொடும் பொருந்திய நாவினர் ஆகி` என்க. ``எட்டு`` என்றது, எட்டு முகமாகவும் செபிக்கப்படும் எட்டு உருக்களை. `நாவினராகியே எட்டிடை உற்று` என்ற தனால், வியட்டிப் பிரணவத்திற்கு முன்னே தூல பஞ்சாக்கரத்தை வைத்து ஓதுதல் பெறப்பட்டது. உகாரம் முதலாகிய மந்திரம், `உம` என்பது,
இதனால், மேற்கூறிய சக்கரத்திற்கு, முன்னர்க் கூறிய முறைகளின்மேல் மற்றொரு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 84

நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத்
தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.

பொழிப்புரை :

மாந்திரிக முறையில் `அட்ட கன்மவித்தை` என்ற ஒரு முறை சிறப்பாகச் சொல்லப்படுவது. `அவற்றுள் சிறந்தன ஆறே` என்பர். அந்த ஆறனையும் இது முதலாக ஆறு மந்திரங்களும் கூறுகின்றன. இவை வாம மார்க்கமாய் உயர்ந்தோர்கட்குரியன அல்ல ஆகையால், திவ்வியாகமப் பொருளாதல் அமையாது. அதனால், இவை பிறரால் சேர்க்கப் பட்டனவோ என எண்ண வேண்டியுள்ளது.
அட்ட கன்ம வித்தையுள் இது தம்பனம் கூறுகின்றது தம்பன மாவது பிறபொருள்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துதல். நீரை அமிழ்த்தவொட்டாது தரைபோலநின்று தாங்கச்செய்வது `ஜலத்தம் பனம்` என்றும், நெருப்பைச் சுடவொட்டாது தடுத்து அதன்கண் இருத்தல், அதனைக் கையிற் கொள்ளுதல் முதலியவற்றைச் செய்தல் `அக்கினித்தம்பனம்` என்றும், காற்றை மோதி அலைக்கவொட்டாது தடுத்தலும், மூச்சுக்காற்றினை இயங்காது உள்நிறுத்தி உடம்பை மேலெழுப்பப் பண்ணுதலும் `வாயுத்தம்பனம்` என்றும் இவ்வாறு பல தம்பனங்கள் சொல்லப்படுகின்றன. மக்களை அசைய வொட்டாது தூண்கள் போல நிற்கச் செய்வதும், ஓடுகின்ற ஊர்திகளை ஓடவொட் டாமல் நிறுத்திவிடுதலும் போல்வனவும் இத் தம்பன வித்தையேயாம்.
தம்பனம் முதலிய ஒவ்வொன்றிற்கும் வேண்டப் படுவன மரப்பலகை, அதில் பொறிக்கப்படும் மந்திரம், ஓலையின் மேல் பூசத்தக்க பூச்சுப்பொருள், அவ்வோலையை இடும் இடம் முதலியன.
அவற்றுள் தம்பனத்திற்குப் பலகை, அரசமரப் பலகை. அதில், மேல் தொள்ளாயிரத்து ஆறாம் (906 ஆம்) மந்திரத்துள் சொல்லப்பட்ட ஐந்தெழுத்து மாற்றுமுறைகளில் இரண்டாவதனை முதலாகக் கொண்டு ஐயைந்து இருபத்தைந்தாகிய சதுரச் சக்கர அறைகளில் பொறித்து, அம்மந்திரம் முயற்சியால் பயனளித்தற்பொருட்டு ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் எந்த மெழுகையேனும் பூசி, விளக்கிலே அதன் வெப்பம் தாக்கும்படி அவ்வோலையைக் காய்ச்சி, யந்திரத்தை வழிபட்டு, மந்திரத்தை அம்முறையிலே செபித்து வர, `தம்பனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

``நேராக ஒன்றிட`` என்றது, ``சக்கரத்தின் மேல்வரிசை யாகிய வடக்கு விளிம்பில்`` என்றவாறு. `ம இட்டு` `மகாரத்தை முதலிலே பொருந்த எழுதி` என்றதாம். இம்மந்திரம் `மசி` எனத் தொடங்குவதால், தம் பனத்திற்கு உரியதாம்; ``தன் தன்`` என்றதில் இரண்டாவது `தன்`, சாரியை, `வெதுப்பில் இட` என்க. இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-
இதனுள் மேல் விளிம்பில் உள்ள மந்திர எழுத்துக்கள் ஈசான மூலை தொடங்கி நிருதி மூலையில் முடியும் ஒரு கோடு தொடங்கி முன்னோக்கி அமைந்திருத்தல் காண்க.
இது `மோகனம்` என்னும் வித்தை கூறுகின்றது. மோகனம் - மயக்குதல். பொதுமக்கள், அரசர், செல்வர், மாதர், பகைவர், தெய்வம், பேய், பூதம், விலங்கு முதலிய அனைத்துயிர்களையும் தம்மிடத்து மயங்கித் தம்வழி நிற்கப்பண்ணுதலே மோகனம் என்க.

பண் :

பாடல் எண் : 85

கரண இறலிப் பலகை யமன்திசை
மரணமிட் டேட்டில் மகார எழுத்திட்டு
அரணமில் ஐங்காயம் பூசி அடுப்பில்
முரணப் புதைத்திட மோகனம் ஆகுமே.

பொழிப்புரை :

இதற்குப் பலகை கொன்றை மரப்பலகை. மந்திரம் மேற்சொல்லியவாறேயாம். மகாரத்தை முதலிற் கொண்டு நிற்றலால் இதுவே மாரண மந்திரமுமாம். (மலம். `மிருத்தியு` எனவும், `மூர்ச்ை\\\\u2970?` எனவும் சொல்லப்படுதலால், அதனைக் குறிக்கும் எழுத்தை முதலில் உடைய இம் மந்திரமே அவற்றை யெல்லாம் தருவதாம். இவ்வாறன்றி, `நசி என மாறித்தொடர்வதே மாரண மந்திரம்` என்னும் கருத்திற்கு இங்கு ஆசிரியர் நேர்ச்சி காணப்படவில்லை). மந்திரம் மேற்கூறிய வாறே யாயினும், அவற்றைச் சக்கரத்திலும், ஏட்டிலும் யமன் திசையாகிய தெற்கில் உள்ள வரிசையை முதலாகவும், வடக்கில் உள்ள வரிசையை இரண்டாவதாகவும் கொண்டு முறையே எழுதி ஓலையில் ஐங்காயத்தை அரைத்துப் பூசி அதனை அடுப்பு வாயில் அழுந்தப் புதைத்துச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தைக் கீழ் விளிம்பு தொடங்கி மேற்கூறிய முறையிலே செபித்து வர, `மோகனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

கரணம் - உபகரணம்; கருவி. அரணம் - பாதுகாவல். அரணம் இல் ஐங்காயம் - பிறரை பாதுகாவல் நீக்கி மயங்கச் செய்யும் ஐங்காயம். சுக்கு, மிளகு, கடுகு, ஈருள்ளி, வெள்ளுள்ளி என்பனவே ஐங்காயமாம். முரண் - வலிமை.
இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-
இதனுள், மாரண மந்திர எழுத்துக்கள் வாயுமூலை தொடங்கி அக்கினி மூலையில் முடியும் ஒரு கோடு தொடங்கி முன்னோக்கி அமைந்திருத்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 86

ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.

பொழிப்புரை :

இஃது உச்சாடனம் என்னும் வித்தை கூறுகின்றது. உச்சாடனம் - ஓட்டுதல். மேல்மயங்கிப் பண்ணின உயிர்களையே விலகி ஓடப் பண்ணுதல் உச்சாடனம் என்க.
இதற்குப் பலகை புரசம் (பூவரசம்) பலகை. சக்கரத்திலும், ஏட்டிலும் எழுத வேண்டிய மந்திரம் மேற்கூறிய வாறேயாம். ஓலையில் கரியும், நஞ்சும் பூசி, ஓங்காரத்தில் மகாரத்தை நீக்கி ஓகாரம் மட்டும் பலகையிலும், ஓலையிலும் சக்கரத்தைச் சுற்றி வளைத்து எழுதி, அதை ஒருமுறை பலகையோடு வழிபட்டு ஓலையைக் கொண்டுபோய் ஐயனார் கோவிலில் வடமேற்கு மூலையில் பாதுகாப்பாகப் புதைத்து விட்டுச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தை மேற்கூறியவாறே செபித்து வர, `உச்சாடனம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

``ஐயனார் கோட்டத்தில்`` என்பதனை முதலில் கொண்டு உரைக்க. பாங்கு பட - பாதுகாப்பு உண்டாகும்படி. `காரேடு` என வரற்பாலது, `கருவேடு` என வந்தது. இதில் இன எதுகை வந்தது. இதற்குரிய சக்கரம் மேற் காட்டியதே ஆயினும், சக்கரத்தை ஓகாரத்தால் வளைத்தல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 87

உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு
வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.

பொழிப்புரை :

இது `மாரணம்` என்னும் வித்தை கூறுகின்றது. மாரணம் - மரணத்துன்பம். `அழிக்கப்படற்பாலன` என்று எண்ணும் உயிர்களை அழித்தொழிப்பதே மாரணம் என்க. உச்சாடனத்திற்குமேல் மாரணம் செய்ய விரும் பினால், மேலே சொல்லியவாறு செய்தபின் மற்றோர் ஓலை அதுபோல எழுதி, ஐங்காயம் பூசி உச்சி வேளையில் (நண்பகற்போதில்) சுடு காட்டிற் கொண்டுபோய் அக்கினிமூலையில் ஒன்றின்மேல் ஒன்றாய் எட்டு மூலை உண்டாக இரண்டு சதுரங்களையும் அவற்றின் உள்ளே ஒரு சதுரத் தையும் வரைந்து உள்ளே புதைத்துவிட்டு வந்து வழிபாட்டினையும், செபத்தையும் முன்போலச் செய்துவர, `மாரணம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற் கொண்டு உரைக்க. ``பச்சோலை`` என்றது, `எழுதுவதற்குப் பதமாயுள்ள ஓலை` என்றவாறு. முச்சதுரம் வரையும் முறை:-

பண் :

பாடல் எண் : 88

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகார உகார எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.

பொழிப்புரை :

இது, `வசியம்` என்னும் வித்தை கூறுகின்றது. மோகனம் செய்யப்பட்டேனும், அது செய்யப்படாது இயல்பாகவேனும் தம்வழி நிற்கும் உயிர்களை எவ்வாற்றானும் பிரிந்து போகாதபடி தம்வசப் படுத்தி வைப்பதே வசியம் என்க. இதற்குப் பலகை, வில்வமரப் பலகை. மந்திரம் அகார உகாரங்கள், அகார உகாரங்கள் விந்துவோடு கூடினவையாக மேற் சொல்லிய சக்கரத்தில் ஈசான மூலையிலிருந்து தொடங்கிப் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் அரிதாரத்தை (மஞ்சள் நிறமுடைய ஒன்றை)ப் பூசி, அதனை அந்தப் பலகைமேலே வைத்து வழிபட்டு அம்மந்திரத்தை எண்பதினாயிரம் உருச் செபித்தால், `வசியம்` என்னும் வித்தை கைகூடுவதாகும்.

குறிப்புரை :

ஈற்றடியில் `ஏய்ந்தது` என்பது ஈறு குறைந்து, `ஏய்ந் ததில்` என ஏழாவதன் தொகைபட நின்றது. வேண்டில் - விரும்பிச் செபித்தல், இதன்பின் `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது. இங்குக் கூறிய சக்கர அமைப்பு வருமாறு:-

பண் :

பாடல் எண் : 89

எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்
டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்
கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே.

பொழிப்புரை :

இஃது, `ஆகருடணம்` என்னும் வித்தை கூறுகின்றது. உயிர்ப் பொருளாயினும், உயிரல் பொருளாயினும் தொலைவில் உள்ளவற்றைத் தான் இருந்த இடத்தில் இருந்தே வரவழைத்தல் `ஆகருடணம்` என்னும் வித்தையாம். இதற்குப் பலகை வெண்ணாவல் மரப்பலகை. மந்திரம் மேற்கூறிய ஐந்தெழுத்து மாறலில் யகராம் முதலாக அமைவது யகாரம் முதலாக உள்ளது முதல் ஐந்து தொடர்களையும் முறையே ஐந்து வரிசை அறைகளில் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் யாதேனும் ஒரு வெண்பூச்சினைப் பூசி வியாழக் கிழமையில் மேற் சொன்ன பலகை மேல்வைத்து வழிபட்டு அன்று முதலாக மேற்கு நோக்கி அமர்ந்து அம் மந்திரங்களை அசபாமந்திரத்தோடே எண் ஆயிர உரு விரும்பிச் செபித்தால், `ஆகருடணம்` என்னும் வித்தை கைவரும்.

குறிப்புரை :

`உகாரம் இட்டு` என்பதும் பாடமாதலால், மேல் வசியத்திற்குச் சொல்லிய அம் மந்திரத்தை உகாரம் முதலாக மாற்றிக் கொள்ளுதலும் இதற்குப் பொருந்துவதே. `ஆகருடணை` என்பது, `ஆக்கருடணை` என மருவி நின்றது. இங்குக்கூறிய சக்கர அமைப்பு வருமாறு:- இதனுள் மந்திரங்கள் குறுக்கு வரிசையிலும், நெடுக்கு வரிசையிலும் ஒரே வகையாக அமைந்திருத்தலும், `நமசிவாயநமசி`, சிவாயநம சி` என மூலை நோக்கில் அமைந்திருத்தலும் காண்க. மேற்கூறியவாறு இச்சக்கரத்தில் ஈசான மூலை தொடங்கி முறையே `அம், உம்` என்பவற்றை `உம், அம்` என மாறி மாறி எழுதுதலும் பொருந்தும் என்க. இரண்டாம் அடியில், ``எண்ணா`` என்பதற்கு, `நாள்களை எண்ணி` என உரைக்க. எண்ணா எழுத்து - செபியாத மந்திரம்; அசபை. ``வேண்டி நோக்கு`` என்றாராயினும், `நோக்கி வேண்டு` என்றலே கருத்தாதல் அறிக. இதனுள், மூன்று, நான்காம் அடிகளைப் பிறவாறு ஓதுவன பாடம் ஆகாமை அறிந்து கொள்க.
சிற்பி