நான்காம் தந்திரம் - 4. நவகுண்டம்


பண் :

பாடல் எண் : 1

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

பொழிப்புரை :

அழலோம்புதற்குரிய குண்டங்கள் ஒன்பது வகையின. அவற்றின் சிறப்பை நான் சொல்லுமிடத்து, சிவபெருமானது சிறந்த உருவமாகிய ஒளிப்பிழம்பு ஓங்கி விளங்குவது அக்குண்டங்களிலே தான். அதனால், அப்பெருமானை அம்முறையில் வழிபடும் வழி பாட்டினால் எல்லா நன்மைகளும் விளையும். அது பற்றி அவற்றின் முறையை நான் இங்குக் கூறுகின்றேன்.

குறிப்புரை :

``நல்தீபம்`` என்றது சிவனது ஒளி உருவத்தையாம். ``தானும்`` என்பதில் தான், அசை. உம்மை, சிறப்பு.
இதனால், அதிகாரம் நுதலியது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

பொழிப்புரை :

மேற் சொல்லப்பட்ட குண்டங்களிலே முக்காலங் களையும், ஐம்பெரும் பூதங்களையும், மும்மல நீக்கத்தையும் `அக்கினி` என்ற ஒன்றன் வழியாகவே காணுதல் கூடும். ஆதலின், அக் குண்டங்கட்கு மேலான தெய்வ இடங்களாக நான் வேறொன்றை அறிந்திலேன்.

குறிப்புரை :

``முக்காலம்`` என்றது, அவற்றின்கண் உள்ள நிகழ்ச்சிகளை. அவற்றுள், இறந்தோரை நற்கதி எய்துவித்தல் முதலியன இறந்தகாலம் பற்றியன, பகைவரை அழித்தல் முதலியவை நிகழ்காலம் பற்றியன, மகப் பேறு முதலியவை எதிர்காலம் பற்றியன. ஐம்பெரும் பூதங்களைக் காணுதல் அவற்றின் வடிவாய் அமைந்த குண்டங்களை வழிபட்டுப் பயனடைதல். `நிலம், நீர், தீ, வளி, வானம்` என்னும் பூதங்கட்கு வடிவம் முறையே, `நாற்கோணம், பிறை, முக்கோணம், அறுகோணம், வட்டம்` என்பனவாதல் நன்கு அறியப் பட்டது. 1 இதனுள் பிறை வடிவம் சந்திரனுக்கு ஆகும். சூரியனுக்கு வட்டத்தின் வகையாகிய தாமரை ஆகும். முக்கோணத்தைச் சிறிது வேறுபடுத்தி யோனி வடிவாக்கச் சத்திக்கு ஆகும். ஒரு சதுரத்தின் மேல் மற்றொரு சதுரம் வடக்கு முதலிய திசைகளை நோக்கி அமைந்த மூலைகளை உடையன போல அமைக்க அட்டகோணம் அட்டமூர்த்தி வடிவினனாகிய சிவபிரானுக்கு ஆகும். பஞ்சமுகம், பஞ்சாக்கரம், பஞ்சக்கிருத்தியம், பஞ்ச மூர்த்திகள் முதலியன பலவற்றிற்கும் இயைபுடைய பஞ்சமுக குண்டமும் பதும குண்டத்தின் வேறுபாடாய் அமைவதாம். இவ்வாறாக நவகுண்டமும் காண்க. இவற்றை நாயனார் பின்னர் (1027) விதித்தல் அறியத் தக்கது. குண்டங்கள் வழிபாட்டிற்கு ஏற்பப் பல வகையாக அமைத்தல் சொல்லப்படினும், எல்லாவற்றிற் கும் பெரும் பான்மை நாற்கோண குண்டமே அமைத்தல் காணப்படு கின்றது. அது பிருதிவியின் அடையாளமாதல் பற்றிப் போலும்.
இதனால், நவகுண்ட வடிவுகள் குறிப்பாற் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டம் சிறகற நின்றது
நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.

பொழிப்புரை :

பிராணாயாம முறையை அறிந்து அதன்வழியே தியானிக்கப்பட்ட சிவந்த ஒளிப்பிழம்பே புறத்திலும் குண்டத்தின் அழலாய் அறியப்பட்டுக் காட்சிப்பட நின்ற பொருளாய், நிலவுலகத் தாரல் நன்கறியப்பட்டு, அண்டங்களின் திசைவரம்பைக் கடந்த பெரும் பொருளாய் நிற்கும். அவ்வுண்மையை நான் நன்கறிந் திருத்தலால். அப்பொருளை அகத்தே தியானத்தினாலும், புறத்தே அழலோம்பலாலும் பெற்றேன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்து, ``அப் பொரு ளாய்`` என ஆக்கம் வருவித்துரைக்க. முதலடி மூன்றாம் அடிகளில் உள்ள, `அறிந்து` என்பன, `அறியப்பட்டு` என்னும் பொருளன.
``சுடர்விட்டுளன் எங்கள் சோதி`` 1
என்னும் திருப்பாசுரத் திருமொழிக்குச் சேக்கிழார் இவ்வாறே.
``தோன்று காட்சிச் ``சுடர்விட் டுளன்`` என்பது
ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய், அன்பில்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்;
ஏன்று காண்பார்க் கிதுபொருள் என்றதாம்`` 2
எனக் கருத்துரைத்தல் காண்க. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `நவகுண்டத் துள்ளெழும் நல்தீபத்தது` உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

பொழிப்புரை :

நான் மெய்ப்பொருளைப் பெற்ற வகைகளுள் ஒன்றாகிய குண்டத்தீயால் பதினான்கு உலகங்களை ஆக்கவும் முடியும்; பழமையாய் அவற்றுப் பரந்து கிடந்த மறைகளின் விரிந்த பொருள்களை நான் இன்று செய்கின்ற இந்தச் சிறிய ஒரு நூலின் பகுதியிலே எடுத்துக் கூறினேன்.

குறிப்புரை :

``உள் வேதம்`` என்பதை, `வேதத்துள்` என மாற்றிக் கொள்க. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மேற்கூறிய தீபத்தது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

பொழிப்புரை :

புறத்தே அமைக்கப்பட்ட குண்டத்தினில் எழுகின்ற தீயினிடத்தும் உடம்பில் சொல்லப்பட்ட பதினாறு இடங்களைக் கற்பித்து வழிபட அவ்விடங்களில் உள்ளே தியானிக்கப்பட்ட பிராசாத கலைகள் பதினாறும் இனிது அருள் வழங்கி நிற்கும். இவ்வாறு அகவழி பாட்டோடு ஒன்றி நிற்கும் வகையில் குண்டத் தீயைக் காண்பவர் களுக்கே அவர்கள் மேல் சீற்றங்கொண்டு எழுகின்ற வினைகள் அவரைச் சாரமாட்டாவாய் ஒழியும்.

குறிப்புரை :

எனவே, `பிறவாறு காண்பார்க்கு அவையொழியாது பற்றுவனவாம்` என்றதாயிற்று. உலகில் நிகழுந் தீமைகட்குக் காரணம் அவரவர் முன்செய்த வினையே. அவையொழிந்தாலல்லது, துன்பங்கள் முற்ற ஒழியா. மாற்று முறைகளால் (பரிகாரங்களால்) ஓரளவே ஒழியும் என்க.
வேள்வித்தீயின் வழியாகத் தேவர் பலரை வழிபடுதலினும், பிராசாத கலையின் அதிதேவர்களை இவ்வாறு வழிபடுதல் சிறப் புடைத்து என்றவாறு. பிராசாத கலை பற்றி முன்னைத் தந்திரக் குறிப்பில் விரித்துக் கூறப்பட்டது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், மேற்கூறிய குண்ட வழிபாட்டில் மிக்கதொன்றன் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

பொழிப்புரை :

ஒன்பது வகைக் குண்டங்களுள் அறுகோணமாய் அமைந்த குண்டத்தில் ஐம்பெரும் பூதங்களும் அக்குண்டத் தீயின் அக மாயும், அதன் புறமாயும் நிற்கும். அதனையும் நினைந்து நிலவுலகத் தின் பகுதிகளாகிய மேடம் முதலிய பன்னிரண்டு ராசிகளையும் அக் குண்டத்திலே பாவித்து வழிபடுவார்க்கு அதனின்றும் எழுகின்ற தீ எல்லாத் தேவரையும், கோள்களையும் மகிழ்விக்கின்ற நல்ல தீயாய் அமையும்.

குறிப்புரை :

``கூட முக்கூடம்`` என்றது, `அறுகோணம்`` என்றவாறு, ஆடிய - காரியங்களைத் தோற்றுவித்த. பாடிய - நூல்கள் சொல்லிய. அறுகோண குண்டத்துள் பன்னிரண்டு ராசிகளைப் பாவிக்குமாறு, கோணம் ஒன்றிற்கு இரண்டிரண்டு ராசியாகக் கிழக்கு முதல் வலமாகச் சென்று வடக்கில் முடிய வைத்துப் பாவித்தல் என்க. குண்டம், இடவாகு பெயர். ``தான்`` என்றது, மேற்குறித்த குண்டத் தீயை.
இதனால், பொதுவகை வழிபாடு ஒன்றன் முறை கூறப்பட்டது. இதன்கண் அறுகோண குண்டம் பயன்படுமாறும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில்
பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும்
நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.

பொழிப்புரை :

அங்கியங் கடவுட்குச் சிரசும், முகமும், கொழுந் தாகிய சுடர்களாம். பக்கங்களில் படர்ந்து தாவுகின்ற சுடர்கள் கைகளாம், கீழ்நின்று பசிய நிறத்தை உள்ளே உடையதாய் எழுகின்ற இடை ஒளிப் பிழம்பே மேனியாம், இவ்வாறாதலின் வேள்வித் தீயே சிவனது வடிவமாகவும் எண்ணப்படுகின்ற நன்மையை உடைய தாகின்றது என்று சிவசக்தி கூறினாள்.

குறிப்புரை :

முதல் `நற் சுடர்` - சிறந்த சுடர்; அவை கொழுந்தாகி மேலே உள்ளன. சிரம் கூறவே சிகையும் கொள்ளப்படுவதாம். `நற் சுடர் சிரமாகும்; முக வட்டமாம்` என்க. `கைகளில் ஆகும் சுடர் கை,` எனக் கொண்டு கூட்டி உரைக்க, `கை` இரண்டில் பின்னது பக்கம் `பைஞ்சுடர்` என்பது வலிந்து நின்றது. பதைப்பு அறுதலாவது, சாந்தம் உறுதல். எழவே, `சிவலிங்கம்` என்றதாயிற்று. ஈற்றடியை `நற்சுடர் பதைப்பற்ற லிங்கமுமாய் எழும் நல்லது` எனக் கூட்டி உரைக்க. சிவ சத்தி கூறியதாக அருளிச் செய்தது, அவளே வேள்விக்குரிய மந்திரங் களைப் பிரேரிப்பவளாதல் பற்றி. தீயின் வடிவத்தை இவ்வாறு அங் கியங் கடவுள் வடிவாகக் கற்பித்துக் காட்டினார், மேற்கூறிய பிராசாத கலா நியாசத்தையும், பிறவற்றையும் செய்தற் பொருட்டு. ``லிங்கம்`` என்றது, வியத்த லிங்கத்தை என்பது மேல் உறுப்புகளைக் கற்பித்துக் காட்டியதனால் கொள்க. இதனுள்ளும் இன எதுகை வந்தது.
இதனால், வேள்வித் தீ தீக் கடவுளாய் நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.

பொழிப்புரை :

வேள்வித் தீயினது சிறப்பைக் கூறிய அந்தச் சிவ சக்தியே, `நம்மைச் செலுத்தி நிற்பன மந்திரங்களே` என அருளிச் செய் தாள். அம் மந்திரங்களையே தனக்கு முடி முதல் அடிவரையும் உள்ள உறுப்புக்களாகக் கொண்டு அருளோடு நிற்கின்ற அவளது உண்மை யை உணராதவர்கள், எல்லாக் கல்விகளையும் அடி தொடங்கி முறையாகக் கற்றும் அக்கல்விகள் பகலில் காணப்படுகின்ற வான வில்போல வெறுந்தோற்ற மாத்திரையாய்ப் பயன்படாதொழியும்.

குறிப்புரை :

சொல், இங்கு மந்திரம். மென்மை - அருள். கல், கல்வி; முதனிலைத் தொழிற் பெயர். நாள் - பகல்.
இதனால்,` அங்கியங் கடவுட்கு மந்திரமும் வடிவாம்` என்பது பெறுதற் பொருட்டு யாவர்க்கும் மந்திரம் வடிவாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச்
சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

பொழிப்புரை :

வில்லின் நுனி போன்ற இரண்டு நுனிகளுடன் விளங்கும் இளம்பிறை வடிவாகப் பொருந்திய குண்டத்தில் அந்த இரு நுனிகளிலும் எழுகின்ற தீ இரண்டு பாம்புகளாய் எங்கும் ஒளி வீசும். அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பற்கள் நான்கு. இந்த நாகங்களுடன் பரந்தெழுகின்ற தீ எனது உடம்பினுள்ளும் இடங் கொண்டிருத்தல் வியப்பு.

குறிப்புரை :

`வில் நாப்போலும் நாவினையுடைய இளம் பிறை போல் மேவிய குண்டம்` என்க. `சொல் நால்` என்பது பாடமன்று. சுடர் நாகம், வினைத்தொகை. `திக்கெங்கும் தாவும்` என்க. இவ்வாறு உடம் பினுள் அமையுமாறு:- நாபித்தானம் குண்டமாகவும், இட நாடி வல நாடிகள் பாம்பாகவும், மூலாக்கினி மேல் எழுந்து நடு நாடிவழிச் செல்லுதல் குண்டத்தீ ஓங்குவதாகவும் அமைதலாம். `பல் நாலு` என்றது, அவ் வாயுவிற்கு வலுவூட்டுகின்ற அம்ச மந்திரத்தை. அம்ச மந்திரத்துள் ஈரிடத்தும் இங்கு விந்துவை வேறெண்ணித் தொகை கூறப்பட்டது.
இதனால், ஒளி நிலை அகத்தும், புறத்தும் ஒரு படித்தாய் நிற்குமாறு கூறப்பட்டது. இதனுள் பிறைக் குண்டம் குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக
நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச்
சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

பொழிப்புரை :

சிவபிரானது அகத்தொளி வடிவில் ஊன்றிய திருவடி அக்கினி மண்டலமாகிய மூலாதாரமும், சுவாதிட்டானமும் ஆம். தூக்கி யாடுந் திருவடி நீர் மண்டலமாகிய மணிபூரகமும், அனா கதமுமாகும். திசைகளை அளக்கும் எட்டுக் கைகள் உடலகம் எங்கு மாகும். முகமும், அதன்கண் உள்ள முச்சுடர்களாகிய மூன்று கண்களும் விசுத்தியும், ஆஞ்ஞையுமாகிய இடங்களாகும்.

குறிப்புரை :

இடங் கொள்ளுதல் - நிலத்தை இடமாகக் கொள்ளுதல், சுடர் - நெருப்பு. சகம், இங்குத் திசை. இரண்டு ஆறு - எட்டு. இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், இறைவனது அகத்தொளியுருவம் உடம்பினுள் இடங்கொண்டு நிற்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன்
எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.

பொழிப்புரை :

மூன்று கண்களை உடையவனாகிய சிவபெரு மானே அனைத்துத் தேவர்க்கும் வாயிலாகும் நிறைவான ஓமாக்கினி. அஃது எவ்வாறெனில், மண்ணை உண்டு உமிழும் அந்த மாயோனும், உலகங்களைப் படைக்கும் எண்கணனாகிய பிரமனும் தானேயாய் நிற்றலால். இதனானே, எங்கு யாவன் ஒருவன் தேவன் இருப்பினும் அவனுக்குப் பற்றுக்கோடாகின்றவன் சிவனே என்பது விளங்கும்.

குறிப்புரை :

எனவே, `ஓமாக்கினியில் அவன் ஒருவனையே மந்திர நியாசங்களுடன் வழிபடின் அஃது எல்லாத் தேவர்க்கும் உவப்பாகும்` என்பது கருத்தாயிற்று. இவ்வுணர்வு தோன்றி நிலைபெறுதற் பொருட்டே, வைதிக வேள்வியில் ஓமாக்கினியை அங்கியங் கட வுளாகக் கொள்ளுதல் போலல்லாது, சிவவேள்வியில் வாகீசுவரியது பூப்பு நீராட்டு, கர்ப்பாதானம் முதலிய சடங்குகளால் அக்கினியை வாகீசுவரனால் பிறப்பித்து, அவனுக்குப் பிறப்புச் சடங்கு இயற்றி, `சிவாக்கினி` என நாம கரணம் செய்து சிவாக்கினியாக்கிக் கொள்ளும் முறை சைவாகமங்களில் விரிவாகக் கூறப்பட்டது என்க.
`அகிலமும் உண்ட அக்கண்ணனும் தானே; திசை எட்டும் கண்டவனாகிய திக்குக் கண்ணனும் ஆகி` என்க. எச்ச உம்மைகள் தொகுத்தலாயின. ``ஆகி`` என்பது பெயர். இறுதியில் `பற்றுக்கோடு` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வித் தீ சிவாக்கினியாதலின் சிறப்புக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 12

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.

பொழிப்புரை :

சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறு முகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க அதுவும் கூடி ஆறுமுகம் வெளிப்படையாய்த் தோன்றும்படி முருகன் உமையிடத்து உதியாது சிவபிரானது, முகங்களினின்றே தோன்றினமையாலும், பின்னும் சிவனும், சத்தியுமாகிய தந்தை தாயரது இடையிலே முருகன் குழவியாய் என்றும் நீங்காதிருத்தலாலும் `மைந்தன் தந்தையின் மறுவடிவமே` என்னும் ஒற்றுமை பற்றி, மேற்கூறிய ஓமாக்கினியை, `சிவாக்கினி` என்றலேயன்றி, `குகாக்கினி` எனவும் ஆகமங்கள் கூறுதலின் பொருத்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

இஃது ``ஈசானஸ் ஸர்வ வித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வ பூதா நாம் I பிரஹ்மாதிபதிர் பிரஹ்மணோதிபதிர் பிரஹ்மாசிவோமே அஸ்து சதாசிவோம் II `` எனச் சதாசிவனையே `ஓம்` மொழிப் பொருளாகக் கூறிய வேதம்.
``சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்``
எனக் கூறுதல் பற்றி ஐயம் நிகழாமைப் பொருட்டு அறுமுகன் ஐம்முக னின் வேறாகாமை விளக்கப்பட்டது. இதனானே, சிவாக்கினி எல்லாத் தேவர்க்கும் வாயிலாதலே யன்றிச் சிறப்புடைய முருகனுக்கும் உரித் தாதல் கூறப்பட்டதாம்.
வட்டம், இங்கு முகம். `வட்டமாயும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ஏகாரம், உமையினின்றும் பிரித்த பிரிநிலை, அதனால், சிவனின் வேறன்மை இனிது விளக்கப்பட்டதாம். `கந்தனும், சுவாமியும்` என்க. `சுவாமி` என்பது சிவனுக்கே உரிய பெயராதலை, `சுவாமி நாதன்` என்னும் முருகனது பெயருள்ளும் காண்க. மாட்டு - பொருத்தம். அஃதாவது, வேத மொழியின் பொருத்தம். திருவுருத் திரத்துள் ``யாதே சிவாதநூ:`` எனத் தொடங்கும் மந்திரத்தின் தியான உருவம் அறுமுகனாகச் சொல்லப்படுதலும் இங்கு நினைக்கத்தக்கது. சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணம் குமரகோட்டப் படலத்துள், மேற்காட்டிய வேத மந்திரங்களை,
``எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும்
ஈசன் என்னத்
தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன்ஓம் எனவேதாம்
சாற்றும் அல்லால்
முக்கனல்சூழ் வேள்வியிற்சுப் பிரமணியன் ஓமெனவும்
முக்காற் கூறும்
இக்கருத்தை யறியானை எவ்வாறு விடுவிப்ப
தியம்பு மின்னோ``
என மொழி பெயர்த்துக் கூறினார். முருகன் அறுமுகச் சிவனாதலை நாயனார் இரண்டாம் தந்திரத்துள் `அதோமுக தரிசனம்` என்னும் அதிகாரத்துள்ளும் கூறினார்.
இதனால், `வேள்வித் தீ சிவாக்கினியே` என்பது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.

பொழிப்புரை :

அகமும், புறமும் ஒற்றுமைப்படக் காட்டிய குண்டங்களில் எழுகின்ற தீயினுள்ளே, `காற்று` என்னும் ஒன்று, `இடைகலை, பிங்கலை` என இரண்டாய் இயங்கும். அவ் இயக்கத் திற்கு உரிய வழி மூன்றில் இரண்டு தடுக்கப்பட, ஒன்றில் மட்டுமே இயங்கச் செய்வோர் மேற்கூறிய ஒளியால் தேவராக மதிக்கப்படுவர்.

குறிப்புரை :

வேத மந்திரத்தின் வடிவாதல் பற்றி வேள்வித் தீயை, ``வேதம்`` என்றே கூறினார். ஆட்டிய - பொருள்களைச் சலிப்பிக் கின்ற. `ஒன்றே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. `இரண்டு மாய்` எனவும், `கையிரண்டு வாட்டியவாக` எனவும் ஆக்கம் வருவித்துக் கொள்க. கை - பக்கம்; என்றது வழியை. `ஒன்றில் பதைத்து எழ` என உருபு விரிக்க. `எழ நாட்டும் இவர் நல்லொளி யானே சுரராவர்` என்க. `சிவபுத்திரனாய் நிற்கும் அக்கினியையும் யோகியாக்கித் தாமும் யோகராயிருந்து வேட்பார் பெரும் பயன் எய்துவர்` என்றவாறு.
இதனால், அழல் ஓம்புதற்கு ஒரு சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

பொழிப்புரை :

மொழியையே அறிவாகப் பெற்று இயங்கிவரும் மக்களுயிர்க்கெல்லாம் மாணிக்க ஒளிபோல உள்நின்று, கண்மணி போல உதவி வருகின்ற சிவன், இவ்வுலக முழுதிலும் வேள்வித் தீயாக விளங்கியே திருக்கோயிற் படிமங்களில் உள்ளொளியாய்க் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி உரைக்க. ``கல்`` இரண்டில் முன்னது அதனாலாகிய படிமம். பின்னது மாணிக்கம். ``ஆகி`` என்பதை அதன்முன் உள்ள ``கல்லொளி`` என்பதனோடும் கூட்டுக.
இதனால், அழலோம்பல் திருக்கோயிற் சிறப்பிற்கு இன்றி யமையாததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.

பொழிப்புரை :

மேற் கூறியவாறு சிவன் திருக்கோயிலில் விளங்கி நிற்றற்கு உரியது, சிறப்பாக அறுகோணக் குண்டமே. அவற்றோடு முன்னே சொன்ன பிறவும் இருத்தல் சிறப்பே இதனுள், விளங்கு கின்ற சிவாக்கினியையும், தம்மையும் முன்போல யோகியராகச் செய்தலேயன்றி, முப்பத்தாறாய தத்துவ ரூபிகளாகவும் செய்தால், எவ் வுலகத்தில் உள்ளார்க்கும், எப்பொருளையும் அவன் வாயிலாகக் கொடுத்தல் கூடும்.

குறிப்புரை :

`குண்டநிலை ஆறுகோணமாக, வட்டமும் பதைத் தெழும்` என முடிக்க. `கொண்ட தத்துவம் ஆறாறும்` என மாறிக் கூட்டுக. ``உள்ளே`` எனப் பொதுப்படக் கூறியதனால், இருவருள்ளும் கொள்க. `வட்டமும், என்னவும்` என்னும் உம்மைகள் தொகுத்தல் ஆயின. `எடுக்கலுமாமே` என்பது பாடமாகாமை அறிக. இதனுள் ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், அழலோம்புதற்கண் உள்ள மற்றொரு சிறப்பு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக்
கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு
அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.

பொழிப்புரை :

குண்டத்தில் தீயாய் விளங்கும் சிவனுக்கு, (சிவாக்கினிக்கு) நடக்கின்ற பாதங்கள் மூன்று; `ஐ` என்னும் எழுத்தின் வடிவை ஒத்த முகம் இரண்டு; அம்முகங்களில் உள்ள கண்கள் ஆறு; நாக்கு ஏழு; தலையிரண்டிலும் கொம்புகள் நான்கு; கை ஏழு; இவ்வாறு அமைந்துள்ளன.

குறிப்புரை :

`இவ்வாறு ஆகமங்களுட் சொல்லப் பட்டது` என்பதாம். மூன்றது - மூன்று என்னும் எண்ணினையுடையது. படித்து - ஒரு படித்தாக. ``அடுத்து`` என்றது, `மற்று` என்னும் பொருளது. ``ஆனது`` என்பதனை எல்லாவற்றோடும் கூட்டி, ஏற்ற பெற்றியால் முடிக்க. `எழுகண்ணானது` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், சிவாக்கினியது உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.

பொழிப்புரை :

அழிவில்லாத சிவாக்கினியைத் தன்னுள் வியாப் பியமாகக் கொள்வதோர் இடமில்லை. (அவனே எல்லாவற்றிலும் வியா பகன்.) அவனுக்குத் தோற்றமும், முடிவுமாகிய கால எல்லையும் இல்லை. (என்றும் உள்ளவன்.) அவனது இயல்பை முற்றக் கூறச் சொல்லில்லை. ஆகவே, அவனைத் திருவைந்தெழுந்துள் யகர வாச்சியமாகிய ஆன்மாவினுள்ளே காண்பதே அறிவுடைமையாம்.

குறிப்புரை :

`சிவாக்கினியாவான் சிவனே` என்பதனை இவ்வாற்றால் உணர்த்தினார். `பத்தின் கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது.
இதனால், `சிவாக்கினியாவான் சிவனே` என்பது கூறி, அதன் சிறப்புணர்த்தப்பட்டது, இதனானே, சிவன் அவ்வக்கினியாய் யாண்டும் நின்று அருள்புரிதலும் பெறப்பட்டது படவே, ``பொங்கழல் உருவன்``1 என்ற திருஞானசம்பந்தர் திரு மொழி, - `அழல்போலும் உருவத்தை உடையவன்` என உவமத் தொகையாயும், `அழலை உருவாக உடையவன்` என இரண்டாம் வேற்றுமைத் தொகையாயும் நிற்றலேயன்றி, `அழலாகிய உருவத்தை உடையவன்` எனப் பண்புத்தொகையாயும் நின்று பொருள்படுதல் கொள்ளப்படும். உவமத் தொகையை நிறமும், வடிவும் பற்றிக் கொள்க. வடிவு இலிங்கத் திருமேனி.

பண் :

பாடல் எண் : 18

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

பொழிப்புரை :

பத்தும், எட்டும், ஆறும், நான்குமாகிய கோணங்களால் வரையறுக்கப்பட்ட குண்டமாகிய பொய்கையில் வளர்ந்து மலர்கின்ற தீயாகிய தாமரை மலரில் அடங்கிக் கலந்து நிற்கின்ற முப்பத்தாறு தத்துவங்களும், அவற்றின் காரியமாகிய உடம்பும் சத்தியிடமே அடங்கிநிற்பனவாம்.

குறிப்புரை :

நவ குண்டங்களுள் சிறப்புடையவற்றை எடுத்துக் கூறியவாறு. தீயைத் தாமரையாக உருவகித்தது, அகத்தும், புறத்தும் தத்துவங்களைச் சிவனுக்குக் கமலாசனமாகக் கற்பிக்கும் முறையோடு மாட்டேற்றுதற்கு. ஆசனமாய் அடங்கும் தத்துவங்கள் யாவும் மூர்த்தியாகிய சத்திக்குக் கீழே அடங்கிவிடுதல் பற்றி, ``மெய்யும், ஆகமும் பார்ப்பதிபாலே பட்டிட்டுநின்றது`` என்றார். மெய் - தத்துவம்; இதனிடத்து எண்ணும்மை தொகுத்தல் பெற்றது. இதனுள்ளும் முதலடி இன எதுகையாய் நின்றது.
இதனால், மேல் (1012) ``ஆறாறும் கொண்ட இத்தத்துவம்`` எனக் குறிக்கப்பட்ட தத்துவங்கள் அகத்தொளி, புறத்தொளிகளில் கலந்து நிற்கச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.

பொழிப்புரை :

மேற் கூறிய கமலாசனத்தில் எழுந்தருளியிருப்பவ ராகிய, மனோன்மனி மணாளராகிய சதாசிவ மூர்த்திக்கு முகம் ஐந்தாக லின், உச்சி முகம் நீங்க ஏனைய நாற்றிசையில் உள்ள நான்கு முகங் கட்கும் முகம் ஒன்றிற்கு நான்காகக் கைகள் இருபதும், எல்லா முகங் கட்குமாக வாய் ஐந்தும், கண்கள் ஐம்மூன்று பதினைந்தும், காதுகள் பத்துமாய் உள்ளன.

குறிப்புரை :

`கால் பத்துப் பத்து (இருபதில் காற்பங்கு) முகம்` எனவும், `கால் பதி - காற்பங்கு குறைந்த - பத்துப் பத்து (இருபது) கண்கள்` எனவும் கொள்க. பூப்பதி பாதம் - கமலாசனத்தில் பொருந்தி யுள்ள திருவடி` `நாற்பத்து` என்பது முதல் நீண்டது, `இருப்பு` என்னும் குற்றுகர ஈற்றுச் சொல், அத்துச் சாரியை பெற்றது. `சுடர் முடி பத்துச் சோத்திரம் இருப்பத்து அஞ்ே\\\\u2970?` என இயைந்து நிற்கும். இதனை, முதற் கண் எடுத்துக் கொண்டு உரைக்க. இங்ஙனங் கூறவே, மேல், ``எடுக் கின்ற பாதங்கள்`` என்னும் மந்திரத்துட் கூறியாங்குச் சிவாக்கினியை வேறு வடிவில் தியானித்தலே யன்றிச் சதாசிவ மூர்த்தியாகவே தியானித்தலும் முறை என்பது பெறப்பட்டது. இஃது இன எதுகை.

பண் :

பாடல் எண் : 20

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

பொழிப்புரை :

ஐந்து முகங்களால் ஐந்து வேறுபட்ட நிலைகள் போலக் காணப்படுகின்ற சதாசிவரால் அளவிட்டறிந்து ஆளப்படும் மகேசுவரரது நிலைகள் இருபத்தைந்தும் புகை பொருந்திய ஓம குண்டத்தில் பொருத்தி விளங்குதலால், சதாசிவர் முதல் ஐவராக விரிந்து நிற்கின்ற சிவன் மகிழ்ந்து தோன்றுகின்ற ஓமாக்கினியை நல்ல வகையில் ஓம்பி வாழ்தலே முத்தி நிலையாகும்.

குறிப்புரை :

மஞ்சு - மேகம்; என்றது புகையை. `மஞ்சம்` என்பது கடைக் குறைந்து நின்றது. `சிவபிரான் அவ்வப்பொழுது அடியவர்க்கு அருளக் கொண்ட பழைய உருவத் திருமேனிகள் இருபத்தைந்து` என ஒரு வரம்பு செய்யப்பட்டுள்ளன. அவையாவன:- 1. விக்கினப் பிரசாதர், (விநாயகரை அளித்தவர் - கஜமுகானுக்கிரகர்) 2. பிரமசிரச் சேதர், (நகமுக நிக்கிரகர்) 3. பிட்சாடனர், 4. வீரபத்திரர், 5.கஜசம்மாரர், (யானையுரித்த பெருமான்) 6. சிராதர், (வேடர் -அருச்சுனனுக்கு அருள்புரிந்தவர்) 7. காளகண்டர், (விஷாப ஹரணர் - நஞ்சுண்ட பெருமான்) 8. கங்காளர், (கங்காளம் - பரம விட்டுணுக் களது எலும்புக்கூடு) 9. சக்கரப் பிரதானர், (திருமாலுக்குச் சக்கரம் அருளியவர்) 10. சண்டேசானுக்கிரகர், 11. சுகாசனர், (யோக மூர்த்தி) 12. ஏகபாதர், (உலகைத் தோற்றுவித்தவர்) 13. நடராஜர், 14. சலந்தராரி (சலந்தரனை அழித்தவர்) 15. திரிபுராரி, (திரிபுரத்தை எரித்தவர்.) 16. காலாரி, (காலனை உதைத்தவர்) 17. காமாரி, (மன்மதனை எரித்தவர்) 18. இலிங்கோற்பவர், 19. சந்திரசேகரர், (பிறைமுடிப் பெருமான்) 20. சோமாஸ்கந்தர், 21. இடபாரூடர், 22. உமாமகேசர், 23. கல்யாணசுந்தரர், 24. அர்த்தநாரீசுரர், 25. அரியர்த்தர் (திருமாலை இடப்பாதியில் உடையவர்)என்னும் மூர்த்தங்களாம்.
இவை சிறிது மாறுபடவும் கூறப்படும். அவ்விடத்தில் தட்சிணாமூர்த்தி, யக்ஞேஸ்வரர், உக்கிரர், கங்காதரர், ஆபற்சகாயர், மச்ச கூர்மவராக நரசிங்க சங்காரர்கள், அந்தகாரி (அந்தகாசுரனை அழித்தவர்) என்னும் மூர்த்தங்கள் சொல்லப் படும். வீரபத்திரரையும், பைரவரையும் மாகேசுர மூர்த்தங்களுள் வையாது சிவகுமாரர்களாகக் கொள்ளுதலே மரபு.-
ப்ரதமம் ஸோம தாரீச த்விதீய முமயாசகம் I
த்ருதீயம்து வ்ருஷாரூடம் சதுர்த்தம் ந்ருத்தரூபகம் II
வைவாஹை்யம்பஞ்சமம் வித்யாது ஷஷ்டம்பிக்ஷாடனம்பவேது I
காமாரிம் ஸப்தமம் வித்யாது காலகால மதாஷ்டமம் II
நவமம் த்ரிபுராரிஸ்யாது ஜலந்தர வதோதச I
ஏகாதசம் தஜாரிஸ்யாது த்வாதசம் வீரபத்ரகம் II
த்ரயோதசம் ஹரேரர்த்தம் அர்த்தநாரீ சதுர்தசம் I
பஞ்சாதசம் கிராதம்ஸ்யாது கங்காளம் ஷோடசம்பவேது II
சண்டேசானுக்கிரஹம்சைவ ததஸ்ஸப்த தசோபவேது I
விஷாபஹரணஞ்சைவ த்வஷ்டாதச மிதிஸ்ம்ருதம் II
சக்ரதானஸ்வரூபந்து ஏகோநவிம்சமீரிதம் I
விக்னப்ரஸாதம் விம்சஸ்யாது ஸோமாஸ்கந்தமத:பரம் II
த்வாவிம்ஸதேக பாதந்து த்ரயோவிம்சத்ஸுகாஸநம் I
தக்ஷிணாமூர்த்திரூபந்து சதுர்விம்சத்ப்ரகீர்த்திதம் II
லிங்கோத்பவஸ்வரூபந்து பஞ்சவிம்சத்ப்ரகீர்த்திதம் I
ஏதந்மஹேசரூபாணாம் மூர்த்தி பேதா: ப்ரகீர்த்திதா: II
இதனால்,`ஓமாக்கினியே அனைத்துச் சிவமூர்த்திகளாயும் நிற்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :

வீடு பேற்றைத் தருகின்ற ஞானவடிவினனும், வேள்வியில் நிறைவுடைய தீயாய் நிற்பவனுமாகிய சிவன், வேதங்களைக் கற்று அவ்வொழுக்க நெறியில் குற்றமின்றி நிற்பவரது உள்ளத்திலே விளங்கி நிற்பான். உலகப் பற்றுக்களைவிடுத்து அவனை யே நாடி, படர்ந்து எரிகின்ற அத்தீயிடமாக அவனை அணுகி வெகுளி முதலிய குற்றம் நீங்கி நின்றவர் அவனைப் பெற்று நின்றார்கள்.

குறிப்புரை :

வேத ஒழுக்க நெறியாவது முத்தீ வேட்டல். `செற்றம்` என்பது குறைந்து நின்றது, வெகுளி முதலிய குற்றமாவன, வெகுளி, காமம், மயக்கம் என்பன. இக்குற்றங்கள் நீங்கினோர் உலக நலத்தின் பொருட்டே வேள்வி வேட்பர்; அவ்விடத்தில் அவர் சிவனைத் தாம் அன்பால் வழிபடுவர்; அவ்வழிபாடு ஞானம் வாயிலாக வீட்டைத் தரும் என்க. இதனுள்ளும் முதலடி இன எதுகை பெற்றது.
இதனால், வேள்வி வீடும் பயக்குமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் வியாபித்து நிற்கின்ற நிவிர்த்தி யாதி பஞ்சகலைகளும், ஓமத் தீயும் ஒன்றாய் இயைந்து நிற்கும், அதனால், எல்லா உலகங்களும் அத்தீயினிடத்து அடங்கி நிற்பன வாம். ஆகையால், அந்தத் தீயை நிவிர்த்திக்குமேல் பிரதிட்டையில் சிறிது எல்லையளவிலே நிற்கின்ற ஐம்பூதங்களின் ஒன்றாகிய தீயாக எண்ணும் எண்ணத்தை வெறுத்தவரே மேற் சொல்லியவாறு சிவ னோடு என்றும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

வேள்வித் தீயைப் பூதாக்கினியாக நினைப்பவர் வைதி கரும், அந்நினைப்பை விடுத்துச் சிவாக்கினியாக நினைப்பவர் சைவரும் ஆவர் என்க. `கலை அஞ்சும் இக்குண்டமும் சேரும் எனக் கூட்டுக. இதனுள்ளும் ஈரடி எதுகைவந்தது.
இதனால், `வீடுபயக்கும் வேள்வி சிவவேள்வியே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த நிலவுலகின் ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) உயிர் உய்தி பெறுதற்கு உரிய உலகமாக அமைத்த ஒருவனாகிய சிவனை அவ்விடங்களில் பிறந்துள்ள நீங்கள் வழிபாட்டினால் அடையுங்கள், அவனால் படைக்கப்பட்ட அவ் வுலகம் முழுதையும் அறியும் அறிவைப் பெற்ற தேவர்களும் அதன்கண் சென்று அவனை வழிபட்டே மெய்ப் பொருளைப் பெற்றார்கள் ஆதலால்.

குறிப்புரை :

`மெய்க்கண்டம், பொய்க்கண்டம்` என்பவற்றின் ஒற்று எதுகை நோக்கித் தொகுத்தலாயிற்று. `விரிநீர் உலகு ஏழையும் மெய்க்கண்டமாகவும், உய்கண்டமாகவும் செய்த ஒருவன்` என்க. ``கண்டம்`` நான்கில் இறுதி ஒன்றும் தடை; அஃதாவது பாசம். ஏனைய, உலகம். `மெய்யுணர்வு பெறுதற்கு ஏற்ற இடம் நிலவுலகமே` என்பது சிவநூல் துணிபு. அதனுள்ளும், பரத கண்டமும், அதனுள்ளும் குமரிக் கண்டமும் சிறந்தன என அவை கூறும் என்க. ``இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு`` எனவும், 1 ``வானிடத் தவரும் மண்மேல் வந்து அரன்றனை அற்சிப்பர்`` 2 எனவும் போந்தன காண்க.
இதனால், வழிபாட்டுலகமாகிய இவ்வுலகத்தின் சிறப்பு உணர்த்தும் முகத்தால் இதன்கண் செயற்பாலாகிய முத்தீ வழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

கலந்திரு பாதம் இருகர மாகும்
அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.

பொழிப்புரை :

சிவாக்கினியது உருவத்தை மேல் ``எடுக்கின்ற பாதம்` (1013) என்னும் மந்திரத்திலும், ``பார்ப்பதி பாகன்`` (1016) என்ற மந்திரத்திலும் கூறியவாறன்றி வேள்வி வேட்பார் தம் வடிவு போன்ற வடிவமாகவும் தியானிக்கலாம். அவ்விடத்திடல் நெற்றிக்கண் ஒன்று மட்டுமே சிறப்புருவமாகக் கொள்ளத்தக்கது.

குறிப்புரை :

`கலந்த, அலர்ந்த, உலர்ந்த` என்பவற்றின் அகரங்கள் தொகுத்தலாயின. கலத்தல் - இணைதல்; அஃதாவது ஒன்றுபோலவே மற்றொன்றும் இருத்தல். ``குண்டலம்` என்பது இடைக்குறைந்து நின்றது. ``அகாரம்`` என்றது நாதத்தை. அஃது அதனைக்கேட்கும் செவியை உணர்த்திற்று, `அகாரத்து அலர்ந்த இரு குண்டலம்` என்க. ``உலர்ந்த`` என்றது, `விரிக்கப்பட்டும், சிவந்தும் உள்ள` என்றவாறு. எனவே, `சடை` என்றதாயிற்று. பாதம் முதலியவற்றில் `உள்ளன, உள்ளது` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன.
இதனால், சிவாக்கினியின் மற்றொரு வகைத் தியான உருவம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வாகீசுவரிக்கு நாயகனாய் இன் புற்று மகிழ்ந்ததனால் உண்டாகிய ஓமத்தீ குண்டத்தின் கீழ்ப்பாதியோடு நில்லாமல் மேற்பாதியிலும் பரத்தலால், அங்கு உள்ள இடங்களும் வேறுபடும். அந்நிலையில் அச்சிவனே அந்தத் தீயுருவில் முதலிலே குழவிப் பருவத்தனாயும், பின்பு காளைப் பருவத்தனாயும் இருப்பான்.

குறிப்புரை :

இதன்கண் உள்ள அடிகளை `ஈறு, ஈற்றயல், முதல், இரண்டு` என்னும் முறையிற் கொண்டு உரைக்க. `ஒரு சோதிப் பாலனாய் உளன்; சோதி மத்திமனாய் இருந்திடும்` என்க. வடக்கில் தோற்றுவிக்கப்பட்ட தீ வலமாக எழுந்து மேற்கில் பரந்து ஓங்கும் என்பார் ``பச்சிம திக்கும்`` என்றார். இதனால், `வடக்கில் பாலனாய்த் தோன்றி வளர்ந்த சிவாக்கினி மேற்கில் காளையாய் நிற்பன்`` என்பது பெறப்பட்டது. ``சத்திமானாக`` என்பதற்கு எழுவாய் `உத்தமன்` என்பதேயாம். தழைத்த கொடி - உண்டாய கொடி; கொடி, தீயின் சுடர். சிவவேள்வியில் தீயை வாகீசுவர வாகீசுவரியர்தம் புதல்வனாகத் தோற்றுவிக்கும் முறை சிவாகமங்களுட் கூறப்படுதல் மேலும் (1008) குறிப்பிடப்பட்டது. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், சிவசத்திகளது கூறாகிய ஓமாக்கினியது நிலைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏ ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு நிற்கும் சிவாக்கினிக்கு இரு முக்கோணங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் இட்டது போல அமைக்கும் அறுகோண குண்டமே சிறந்தது. அதன் கண் சிவசோதியை அவியாத வாறு கண்டவர்க்குப் பெரிய செல்வம் உண்டாகும்.

குறிப்புரை :

``கொடி`` என்பதற்குப் பொருள் மேற்கூறப்பட்டது. `ஆறு பக்கம் சென்று குலாவிய குண்டம்` என்க. `இருகோணமாய் அடியும் அந்தமும் (மேலும்) ஒக்கும்` எனக் கூட்டுக. `ஆறு பக்கம்` எனவே, இரண்டும் முக்கோணமாதல் பெறப்பட்டது `கண்டவர்க்கு` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. மாதனம் - பெரிய செல்வம். இது அருட் செல்வத்தையும் குறிப்பதாம்.
அறுகோணம் சிறந்த குண்டமாதல், சிவனது முகத்தோடும், குணத்தோடும் ஒத்து நிற்றலாலும், உடம்பினுள் ஆதாரங்களும் ஆறாத லாலும் என்க. இதனானே, இஃது ஆறுமுகனுக்கும் மிக ஏற்புடைய தாதல் அறியப்படும். இதன் பயனும் சிறப்பாகப் போகமாதல் கூறப் பட்டமை காண்க.
இதனால், அறுகோண குண்டத்தின் சிறப்பு வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 27

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.

பொழிப்புரை :

தன்னைக் காண்பவர்க்குப் பெரிய செல்வமாய் வளர்கின்ற ஓமத்தீயைத் தனக்குப் பயன் தரும் சாதனமாகக் கொண்ட ஆசாரியன், எப்பொழுதும் மாணவர்களது சத்திநிபாத வகையைத் தெரிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு அதனை அறிவித்தலை மேற் கொள்வானாயின், அவன் உலகம் முழுதிற்கும் குருவாய்ப் பலரை ஆட்கொள்ள வல்லவனாவன்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. `போதனம், பாதனம்` என்பன, `போதித்தல், வீழ்தல்` எனத் தொழிற் பெயராய் நின்றன. நான்காம் அடியில், `ஆக` `உண்டாக` என்னும் பொருட்டு.
இதனால், அழலோம்பல் ஆசாரியர்கட்குச் சிறப்புக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

பொழிப்புரை :

உருவத்தால் ஓம குண்டத்தளவிலே நின்ற தாயினும், ஆற்றலால் எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் ஓமாக்கினியைத் தமக்கு எல்லா நலனையுந் தரும் அருந்துணையாக ஆராய்ந்தறிபவர் ஒருவரும் இல்லை, அவ்வாறு அறிந்து அதனை முறைப்படி ஓம்பி, மனத்திலும் தியானிப்பவர் உடல், ஆண்டுகள் பல சென்றாலும் அழிவின்றிப் பல யுகங்களைக் கண்டு கொண்டிருந்தவாறு பல இடங்களில் கேட்கப் படுகின்றது.

குறிப்புரை :

`பார்த்த` என்பதன் அகரம் தொகுத்தலாயிற்று. `கேட்கப் படுகின்றது` என்பது சொல்லெச்சம்.
இதனால், வேள்வி வேட்டல் காய சித்தியையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

பொழிப்புரை :

அக வழிபாடாகிய யோகத்தை நன்கறிந்த யோகி, மேற்கூறியவாறு பல யுகங்கள் அழியாதிருத்தற்கு ஏதுவாகிய நவ குண்ட வேள்வியையும் ஒருங்கே தன் உடலகத்துள் முறையறிந்து வளர்ப்பான். தாய் வயிற்றினுள் தங்கிப் பிறக்கின்ற கருவிற்கு அவளது குறிபோல எல்லாப் பயன்களது விளைவிற்கும் இன்றியமையாச் சாதனமாக உலகம் கண்டது வேள்வியே.

குறிப்புரை :

``அகங் கண்ட யோகி``, என்பதை முதலிற் கொண்டு உரைக்க. `பகத்தைச் சாதனமாகக் கண்டு கொண்ட கரு`` என்க. இவ்வாறு உவமை கூரியதனால். காய சித்தி முதலிய சிவ பயன்களுக்கு யோனி குண்டம் சிறந்ததாதல் பெறுதும்.
இதனால், யோகிகள் வேள்வியை அகத்து ஓம்பியே பயன் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளைவாறு பூநிலை
போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம்
நாதனை நாடும் நவகோடி தானே.

பொழிப்புரை :

பயன்களில் சரியை முதலிய நான்கிற்கும் நாற்கோண குண்டமும், வேள்விக் கடன் முற்றுதற்கு முக்கோண குண்டமும், வெற்றிக்கு வில்லை ஒத்த பிறைக் குண்டமும், துன்ப நீக்கத்திற்கு விருத்த குண்டமும், எல்லாப் பயன்கட்கும் அறுகோண குண்டமும், நிலைபேற்றிற்கு அட்டகோண குண்டமும், ஆசிரியத் தன்மைக்குப் பதும குண்டமும், அழகிய கையையுடைய யானைமேற் செல்லும் அரசச் செல்வத்திற்குப் பஞ்சகோண குண்டமும் சிறப்பாக உரியனவாம். நவகுண்டங்களை இவ்வாறு பெரும்பான்மை பகுத்துணர்ந்து கொள்க.

குறிப்புரை :

யோனி குண்டம் மேலே குறிக்கப்பட்டமையால், அதனை உளப்படுத்து இங்கு, `நவ குண்டம்` என்றார். சாதனை முதலிய எல்லாவற்றிலும் நான்கனுருபு விரித்துக் கொள்க. ``வேதனைக்கு`` என்பதனை, ``துன்பத்திற்கியாரே துணையாவார்`` 1 என்பது போலக் கொள்க. `கைய` என்பது போலியாயிற்று. பூ - பூமி; என்றது அதன் திசைகளை கோடி - கோடுதலை உடையது; குண்டம்.
இதனால், நவ குண்டங்கட்குப் பெரும்பான்மை உரிய பயன் கூறப்பட்டது.
சிற்பி