நான்காம் தந்திரம் - 10. வயிரவச் சக்கரம்


பண் :

பாடல் எண் : 1

அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து
அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற
அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடத்தே.

பொழிப்புரை :

முற்பக்கம் (பூர்வ பக்கம்) பிற்பக்கம் (அபர பக்கம்) என்னும் இருபக்கங்களில் உள்ள பதினைந்து திதிகளையும் அவ்ஆறு திதிகளாகப் பிரிக்கும் முறையில் சக்கரத்தை அமைத்து, உவாக்களோடு கூடப் பதினாறு திதிகட்கும் பதினாறு உயிரெழுத்துக்களில் அகாரத்தைக் கடையுவாவிற்கும், (அமாவாசைக்கும்) பதினாறாவது உயிரெழுத்தைத் தலையுவாவிற்கும் (பௌர்ணிமைக்கும்) உரியவாக வைத்து, ஏனையவற்றை ஆகாரம் முதலாக நேர்முறையில் முற்பக்க பிரதமை முதலியவற்றிற்கு உரியவாக எண்ணியும், பதினைந்தாம் உயிர் முதலாக எதிர்முறையில் பிற்பக்கப் பிரதமை முதலியவற்றிற்கு உரியவாகவும் கொண்டு, முதல் அறை ஒன்றில் மட்டும் அகாரத்தை யும், அடுத்து உள்ள அறைகளில் முறையே வலமாக ஆகாரம் முதல் பதினைந்தாம் உயிர்முடிய ஓர் எழுத்தை இவ்விரண்டு அறைகளிலும், பதினாறாம் உயிரெழுத்தை மட்டும் ஓர் அறையிலும் அடைக்க, (14X2) இருபத்தெட்டும், இரண்டும் ஆக முப்பது அறைகள் நிரம்ப, ஆறு அறைகள் நடுவில் வெற்றிடங்களாய் நிற்கும். அவற்றிற்கு நடுவில் `ஓம் பம்` என்னும் பிரணவ பீசங்களையும், அவற்றின் கீழ்த் தொடங்கி, `பைரவாய நம` என்னும் ஆறெழுத்துக்களை ஆறு அறைகளிலும் எழுதச்சக்கரம் நிரம்பியதாம். இரண்டிரண்டாய் உள்ள ஆகாரம் முதலியவற்றை அமாவாசை தொடங்கி அகரத்தை அடுத்த ஆகாரம் முதலியவற்றை ஒன்றுவிட்டு ஒன்றான அறைகளில் நேரே முற்பக்கப்பிரதமை முதலியவாக ஓர் எழுத்தைப்பத்துருச் செபித்துப் பௌர்ணிமை முடிவில் நடுவில் உள்ள பிரணவ பீசங்களோடு மூலமந்திரத்தைப் பத்துருச்செபித்து அமாவாசை முதல் பௌர்ணிமை முடிய ஒவ்வொரு நாளும் இவ்வாறு வழிபாடு செய்தல் வேண்டும். பின்பு பௌர்ணிமை தொடங்கிப் பிற்பக்கப் பிரதமை முதல் ஒவ்வொருநாளும் பதினைந்தாம் உயிர் முதலாக எதிர் முறையில் அவ்வாறே ஒன்றுவிட்டொன்றாக ஒவ்வோர் எழுத்தையும் பத்துருச் செபித்து, முடிவில் மேற்கூறியவாறு நடுவில் உள்ள மந்திரத்தைச் செபித்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபடும் நாளில் அன்றைய திதிக்குரிய எழுத்து முதலாகத் தொடங்கி அதற்கு முன்னுள்ள எழுத்தில் வந்து முடியவே செபித்தல் வேண்டும். எழுத்துக்களை முதலில் பிரணவத்தையும், ஈற்றில் மகாரத்தையும் கூட்டி உச்சரித்தலேமுறை. பதினைந்தாம் உயிரைமட்டும் ஹகாரத்தின் மேல் ஏற்றி `ஹம்` எனக்கூறல் வேண்டும். அகாரம் ஒழிந்த பிற உயிர்களையும் ஹகாரத்தின் மேல் ஏற்றிக் கூறுதல் வடமொழி வழக்கு.

குறிப்புரை :

வயிரவர் எந்நாளும் பாதுகாப்பவராதல் பற்றி, ``கால பைரவர்`` எனப்படுதலின், கதிரளவை, (சௌரமானம்) மதியளவை (சாந்திரமானம்) இரண்டிற்கும் பொதுவான திதிக்காலத்தை ஒட்டி வழிபடுதல் வேண்டும் என்பது இம் முறையால் அறிந்து கொள்ளப் படும். ``வலமாக`` என்றாரேனும் அது முற்பக்கத்தில் என்பது எழுத்து முறையாற் பெறப்படுதலின், பிற்பக்கத்தில் எதிர் முறையால் இடமாகச் செல்ல வேண்டும் என்பது உணர்ந்து கொள்ளப்படும். நடுவில் பிரணவம், பீசம், மூலமந்திரம் இவற்றை எழுதுதல் பொது முறையானே கொள்ளப்படும். `நடவே` என்பது பாடம் அன்று. இங்ஙனம் கூறப்பட்ட இச்சக்கர அமைப்பினைக் காண்க.
மேல் வை குற்ற - பின்னர்ப் பொருந்தியுள்ள எழுத்துக்கள். இவற்றை `சத்தமி முதலாக` என்றமையின், ஒரு வரிசையில் ஆறு எழுத்துக்கள் உள்ளமை விளங்கும்.
இதனால், வயிரவச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பொழிப்புரை :

இச்சக்கரத்தில் விளங்கும் வயிரவ மூர்த்தி, சிறப்பாகச் சூல கபாலங்களை ஏந்திய வேக வடிவத்தினர். அதனால், அவர் தம் அடியவரை வென்ற பகைவரைத் தாம் போர்ச்சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்தம் உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக அவர்களது உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவார்.

குறிப்புரை :

கண், இங்கே, அறிவு. ``பகைவர்`` என்றது அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை.
``ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்`` 1
என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகரும், ``ஒன்னார், உவந்தார்`` எனப்பட்டவரை, ``தம் அறத்&#

பண் :

பாடல் எண் : 3

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டங்கு
ஆமே தமருக பாசமும் கையது
ஆமே சிரத்தொடு வாளது கையே.

பொழிப்புரை :

நரசிங்கன், திரிவிக்கிரமன் இவர்களது தோலைப் போர்த்துள்ள ஆதி வயிரவர் மேற்கூறிய சூல கபாலங்களைச் சிறப்பாக ஏந்தி விளங்குவார். இனித் தமருகம், பாசம், வெட்டப்பட்ட தலை, வாள் என்னும் இவைகளையும் அவர் கொண்டிருப்பார்.

குறிப்புரை :

`ஆகம் மேவ\\\" என்பது குறைந்து நின்றது. ஆகம் - உடம்பு; தோல்; ஆகுபெயர். \\\"ஆகம்\\\" என்றதனை வயிரவருடைய தாக்கி, திருமேனியில் எலும்பு முதலியவைகளை விரும்பிப்பூண்ட என உரைத்தலுமாம். இதில் பூணுதற்குச் செயப்படுபொருள் ஆற்றலால் கொள்ளப்படும். இரண்டாம் அடி முதலிய மூன்றனையும் \\\"ஆமே\\\" என்பவற்றோடு முன்னே கூட்டி முடிக்க. அவ்விடத்து முதற்கண் நின்றது வயிரவரது செயலாம்.
இதனால், வயிரவரது கையில் உள்ள படைக்கலம் முதலியவை கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

பொழிப்புரை :

ஆறுகைகளும் நெஞ்சில் விளங்கும் படி நினைக்கப் படுகின்ற திருமேனி செந்நிறம் உடையதாக விளங்குகின்ற வயிரவ மூர்த்தியினது, தூயவர் உள்ளத்தில் துலங்கி நிற்பதாகிய வடிவம், உனது நெஞ்சிலும் உள்ளதாகக் கருதி, மாணவகனே, நீ வஞ்சனை யற்ற, மெய்யான அன்போடு அக்கடவுளை வழிபடுதலைச் செய்.

குறிப்புரை :

`செய்தால் பகைவரை அழிக்கும் பயன் உனக்குக் கிட்டுவதாகும்` என்பது குறிப்பெச்சம். பொய் - வஞ்சனை. அஃதாவது உறுதிப்பாடு இன்மை. மேலே குறிப்பால் உணர்த்திய வயிரவ மூர்த்தி ஆறு கைகளை உடையவர் என்பது இங்கு வெளிப்படையாக உணர்த்தப்பட்டது. இதனை, இந்நூலாற் பெறுதும். பெறவே, மேற்கூறிய படைக்கலம் முதலியவைகளில் சூலம், தமருகம், வாள் என்பன வலக்கைகளிலும், பாசம், கபாலம், வெட்டப்பட்ட தலை என்பன இடக்கைகளிலும் இருத்தல் புலனாகும்; தலையும், கபாலமும் பிரமனுடையனவே. அவை முறையே தலையைக் கிள்ளினமையை யும், அதன் ஓட்டில் எங்கும் சென்று குருதிப்பலி ஏற்றமையையும் நினைப்பிக்கும். நோக்கிடு மெய், வினைத்தொகை. `செம்மையாக` என ஆக்கம் வருவிக்க. `வயிரவன் மெய்` என இயையும்.
இதனால், வயிரவத் தியான முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூசனை செய்யப் பொருந்திஓர் ஆயிரம்
பூசனை செய்ய அதுஉடன் ஆகுமால்
பூசனை சாந்துசவ் வாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

பொழிப்புரை :

வயிரவ வழிபாட்டினைச் செய்ய விரும்பினால், மேற்கூறிய வயிரவச் சக்கரத்தினை மேற்கூறிய வகையில் ஓர் ஆயிரம் நாள் வழிபடல் வேண்டும். வழிபடின் அச்சக்கர வழிபாட்டின் பயன் கூடுவதாகும். அவ்வழிபாட்டினை, சந்தனம், சவ்வாது, புனுகு, நெய் என்னும் இவைகளைச் சிறப்பாகக் கொண்டு செய்து. அது நிறை வெய்திய பின் பகைவர்பால் உங்கள் பகையைப் புலப்படுத்திக் கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`அவ்வாறு செய்தால் வெற்றி கிடைக்கும்` என்பது குறிப்பெச்சம். வாம மார்க்கத்தை விரும்புவார் இதன் இரண்டாம் அடியை `மதுவுடன் ஆகுமால்` எனப் பாடம் ஓதுவர்.
இதனால், வயிரவ வழிபாட்டு முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய ஆறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே.

பொழிப்புரை :

ஒரு வரிசையில் ஆறு அறைகளை உடைய சக்கர வழிபாட்டின் பயன் கிடைக்கப்பெறின் பகைவர்பால் நீ கருதிய மாறுபாட்டுச் செயல் நீ நினைத்தவாறே முடியும். இனித்தம்பனம் முதலிய அறு செயல் ஆற்றலை அடைய விரும்பி இவ்வழிபாட்டினைச் செய்யின் அவ்விருப்பமும் இதனால் நிறைவுறும்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. `கலகமும் வேண்டியவாறு ஆயிடும்` என்க. மெய் - சித்தி. `ஏரொளிச் சக்கரத்திற் கூறப்பட்ட ஆறுபயன்கள் இதனாலும் கிடைக்கும்` என்றற்கு அதனையும் இறுதிக்கண் கூட்டிக் கூறினார்.
இதனால், இச்சக்கரத்தின் பயன் பலவும் முடித்துக் கூறப்பட்டது.
சிற்பி