நான்காம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்


பண் :

பாடல் எண் : 1

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக இட்டிடின் மேலதாக்
காண்பதம் தத்துவம் நால்உள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே.

பொழிப்புரை :

`சாம்பவி மண்டலம்` என்னும் பெயரினதாகிய சக்கரத்தின் அமைப்பினை யாம் சொல்லின், வரிசைக்கு எட்டு அறைகளாக எட்டு வரிசையில் அறுபத்து நான்கு அறைகளைக் கீறி, அவற்றின் நடுவில் நான்கு அறைகளை, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்னும் நான்கும் அருவத் திருமேனிகளாகக் கருதி, அவற்றையே அச்சக்கரத்தின் கண்களாக வைத்து, அனைத்தையும் முற்ற நோக்குதல் வேண்டும். அப்பொழுதே அச்சக்கர வழிபாட்டினை நாம் அறிந்தவராவோம்.

குறிப்புரை :

`மண்டலம், சக்கரம்` என்பன ஒருபொருட் சொற் களாதலின், `சாம்பவி மண்டலச் சக்கரம்` என்பது இருபெயரொட்டு. `இட்டிடின் காண்பதம்` என இயையும். மேல் என்றது இரட்டுற மொழிதலாய், உள்ளிடத்தையும், மேலிடத்தையும் உணர்த்தி, இரண்டாவது பொருளில் `தத்துவம்` என்பதனோடு இயைய, \\\"நால்\\\" என்பது காண்பதம் என்பதனோடும் சென்றியைந்தது. தத்துவம் நாலாக என ஆக்கம் வருவிக்க. `உள்ளே நயனமும் கண்டு` எனக் காணுதலை நயனத்திற்குங் கொள்க. நாடு - நாடுதல்; வழிபடுதல்; முதனிலைத் தொழிற்பெயர்.

பண் :

பாடல் எண் : 2

நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே.

பொழிப்புரை :

நாடறிந்த மண்டலமான இந்த நல்ல சக்கரத்தில் வளைதல் இல்லாது நேராய்ச் செல்லும் வீதிகளை நாற்புறத்தும் அமைத்து, அவற்றில் ஒவ்வொரு வீதிக் குள்ளாலும் நடுவில் இரண்டிரண்டு அறைகளை இடைவெளியாகவிடுக. `நெடிய வீதி` எனப்பட்டவைகளில் உள்ள அறைகள் பதினாறாகும். இங்ஙனம் ஆனபின் வீதிக்குள் அமைந்த அறைகளின் எண்ணிக்கையும், உட்சுற்றில் உள்ள அறைகளின் எண்ணிக்கையும் தனித்தனி இருபதாம்.

குறிப்புரை :

பாடு அறி - படுதல் (உண்டாதல்) அறியப்பட்ட. பத்து, ஆறு என்பன அறைகள். ஈடேறுதல் - இடையீடின்றி வலம் செல்லல். `நடுவீதி` என்பதும். `ஏடற என்பதும் பாடம் அல்ல.

பண் :

பாடல் எண் : 3

நாலைந் திடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நந்நால் இலிங்கமா
நாலுநற் கோணமும் நண்ணால் இலிங்கமா
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே.

பொழிப்புரை :

இருபது அறைகளை உடைய ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிவட்டமாய் நிற்கும். நல்ல வீதிகள் நான்கிலும் திசைக்கு நான் காகப் பதினாறு இலிங்க உருவங்கள் இருக்க, நடுவில் உள்ள நான்கு அறை களிலும் அவ்வாறே நான்கு இலிங்கங்கள் நடுவில் உள்ள ஓர் இலிங்கத் துடன் நான்கு தாமரை மலர்களோடு நடுவொரு தாமரை மலரில் இருக்கும்.

குறிப்புரை :

பெருந்திசை பற்றிப் பதினாறே கூறினும், கோணத்திசை நான்கிலும் நான்கு இலிங்கங்கள் கொள்க. நள் - நடு; இதனைக் கோணத்திற்கும் கூட்டி, `நள் நாலு கோணமும் நள் நால் இலிங்கமா` என்க. இதனானே, நடுவிலும் ஓர் இலிங்கம் இருத்தல் கொள்ளப்படும். இதனால், இலிங்கங்கள் அனைத்தும் இருபத்தைந்தாகும். இது சதாசிவமூர்த்தியே மாகேசுர மூர்த்தி தம் இருபத்தைந்து ஆதலை விளக்கும். \\\"அவ்வாறே\\\" என்பதனை, \\\"கோணமும்\\\" என்றதன் பின்னர்க் கூட்டுக. கோணமும் அவ்வாறே `நண்ணலையுடையது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.

பண் :

பாடல் எண் : 4

ஆறிரு பத்துநால் அஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீர் உம்மில் சிவாய நமஎன்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.

பொழிப்புரை :

எட்டு எட்டு(8X8) அறுபத்து நான்கு அறைகள் உள்ள இச்சக்கரத்தில் சுற்று வீதியில் உள்ளவை இருபத்தெட்டு, நடு வில் உள்ளவை நான்கு ஆக முப்பத்திரண்டுடன் திசைக்கு இரண்டாக நான்கு திசைகளிலும் இடைவெளியாக நிற்கும் அறைகள் எட்டுக் கூட அறைகள் நாற்பது. நடுவு நான்கு அறைகளின் நடுவையும் ஓர் அறை யாகக் கொள்ள, கூடிய அறைகள் நாற்பத் தொன்று இவைகளில்.
உடலெழுத்துக்களில் ஐவருக்கத்து இருபத்தைந்தையும் இருபத்தைந்து இலிங்கங்கட்கும் உரிய எழுத்துக்களாக நடுவண் ஐந்தில் தென்கிழக்கு முதலாகத் தொடங்கிப் பின் மேற்கு முதலாக வலஞ்சென்று இலிங்கங்கட்கு அணியவான கீழ் அறைகளில் அடைத்தல் வேண்டும். பின்னர் யகரமாதி நான்கு, ‹ கரமாதி நான்கு ஆக எட்டினையும் சுற்று வீதியில், இடைவெளியாக உள்ள எட்டு அறைகளில் மேற்கு முதல் வலமாக அடைத்து, உட்சென்று வெற்றிடமாய் உள்ள எட்டு அறைகளில் முறையே, `ள, க்ஷ, ஓம், சி, வா, ய, ந, ம` என்னும் எட்டு எழுத்துக்களையும் அடைத்து நிரப்பிச் செபித்தல் வேண்டும். செபிக்கின் குறையின்றி வாழலாம்.

குறிப்புரை :

ஆறு + இருபது + நால் + அஞ்சு = முப்பத்தைந்து. இரண்டாவது அஞ்சு, திருவைந்தெழுத்து, `வேறு உருவாகக் கொண்டு` என ஒருசொல் வருவிக்க. உம்மில் கூறுமின் - வாய்க்குள் மெல்லெனச் செபியுங்கள். அஞ்செழுத்துக்களையே எடுத்துக்கூறினாராயினும் ஓங்காரமும் இயல்பாகக் கொள்ளப்படும்.
ஐவருக்கத்தது இருபத்தைந்து எழுத்துக்களும் மகேசுர எழுத்துக் களாய் நிற்றல் வெளிப்படையாக அறியப்படவே, பிரணவத் தோடு கூடிய திருவைந்தெழுத்து, சதாசிவ எழுத்தாதல் குறிப்பால் அறியப்படும். இவை இருதிறத்தனவும் இங்ஙனமாகவே, இவற்றிற்கு இடைநிற்கும் யகாராதி பத்தும் ஆன்ம எழுத்துக்களாய் ஆன்மாவை மகேசுரர், சதா சிவர் இருவர்களிடை வைத்துக் கீழ் நின்று மேல் ஏற்றுவனவாம் என்க.
ஏரொளிச் சக்கரம் பிரணவயோக சக்கரமாய் முழுவதும் உயிரெழுத்துக்களாலே அமைதலும், இது சாம்பவ யோக சக்கரமாய் முழுவதும் உடலெழுத்துக்களாலும் திருவைந்தெழுத்தாலும் அமைதலும் கண்டு கொள்க.
இவை நான்கு மந்திரங்களாலும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் அமைப்புக் கூறப்பட்டது. இவ்வாற்றால் அமைந்த இச்சக்கர வடிவைக் காண்க.
இதில் உள்ள எழுத்துக்களைக் ககாரம் முதலாக ஒவ்வொன் றனையும் பத்துப் பத்து உருச் செபித்து, முடிவில் திருவைந் தெழுத்தையும் அவ்வாறு செபித்தல் ஒருவட்டமாகும் என்பது மேலை அதிகாரத் தொடர்ச்சியால் விளங்கும். ஏரொளிச் சக்கர வழிபாடு ஞானசாதனமும், இது போக சாதனமும் ஆகும் என்க. இம் மந்திரத்துள், \\\"குறைகளும் இல்லையே\\\" என்றது போகம் பற்றிய குறிப்பேயாம்.

பண் :

பாடல் எண் : 5

குறைவதும் இல்லை குரைகழல் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்வெழுத் தாகில்
திறம்அது வாகத் தெளியவல் லாருக்
கிறவில்லை என்றென் றியம்பினர் காண.

பொழிப்புரை :

வேதத்தால் மூலமந்திரமாகச் சொல்லப்படுவதும் திருவைந்தெழுத்தேயாதலின், அதனை அவ்வாறே தெளிய வல்லவர்கட்கு உலகப் பயன்களிலும் யாதும் குறைதல் இல்லை. வழிநிலைக் காலத்தில் `இறப்பு` என்பது இல்லாமல், சிவபெருமானது ஒலிக்கும் வீரக்கழலை யணிந்த திருவடியும் கிடைக்கும் என்று, அறிந்தோர் பன்முறையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

குறிப்புரை :

இரண்டு, மூன்றாம் அடிகளை முதலிற் கொண்டு, \\\"இறவில்லை` என்பதனைக் \\\"குறைவதும் இல்லை\\\" என்பதன் பின் கூட்டி உரைக்க. `குரைகழலும்` என்னும் சிறப்பும்மை தொகுத்த லாயிற்று. அடுக்குப்பன்மைப்பொருட்டு.

பண் :

பாடல் எண் : 6

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே.

பொழிப்புரை :

ஐம்புல நுகர்ச்சியவாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்களும், நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடுகின்ற நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் ஆகியவற்றால் வரும் பயன்களும் நுகர்ச்சியும் நல்ல அறிவும், கவலையற்ற உறக்கமும், எல்லாம் தானேயாய் நிற்கும் பொன்னும் ஆகிய எல்லாம் இச் சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.

குறிப்புரை :

\\\"தெய்வம்\\\" முதலிய மூன்றும் அவற்றால் ஆம் பயனைக் குறித்தன. பொன் உண்டாயின் எல்லாம் உளவாம்` என்பது பற்றி \\\"தானாகக்காணும் கனகம்\\\" என்றார். காரிகை - சாம்பவி; என்றது அவளுக்குரிய இச்சக்கரத்தை. `காரிகையால் ` என்னும் உருபு தொகுத்தலாயிற்று.
இவை இரண்டு மந்திரங்களாலும் சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேஆகப்
போமே அதுதானும்? போம்வழி யேபோனால்
நாமே நினைத்தன செய்யலும் ஆகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்து எஞ்ஞான்றும் நன்மைக்கு ஏதுவாம் வழி உண்டாகவே செய்யும். அதனையே தெளிந்து வல்லாராதல் யாருக்குக்கூடும்! கூடுமாயின், நினைத்தவற்றை முடித்தல்கூடும். உலகில் நமக்குப் பகைவரும் இலாரவர்.

குறிப்புரை :

`ஆம் வழியே ஆக ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. போதல், மூன்றிடத்தும் `கைவருதல்` என்னும் பொருட்டு \\\"போமே\\\" என்பதில் ஏகாரம் வினாப் பொருளது. `தாமே` எனற்பாலதனை, \\\"நாமே\\\" எனத் தன்மையில் வைத்து ஓதினார். `ஒருவரது பகை` என ஆறாவது விரிக்க. `பகையும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 8

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தை ஓதுபவரிடத்தில் பகை, பெரியோர் இகழும் இகழ்ச்சி, இருவினை, பொருந்தாச் செயல்கள், இடையூறு என்பவை இல்லையாம். நாள்தோறும் நன்மைகளே விளையும். அம்மந்திரமே மலத்தை முற்றக் கழுவித் தூய்மையைத் தரும் நீராம்.

குறிப்புரை :

பணிந்தவர் - பணியப்பட்டவர். `தம்மால்` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். \\\"நாணாளும் நன்மைகள் ஆகும்\\\" என்பதை, \\\"தகையில்லை\\\" என்பதன்பின் கூட்டி உரைக்க. மூன்றாம் அடி உயிரெதுகை.
இவை இரண்டு மந்திரங்களாலும், `முத்தியைத் தருவதாகிய திருவைந்தெழுத்து மந்திரத்தைப் போகம் வேண்டுவார் கணித்தல் பொருந்துமோ` எனப் பேரறிவில்லாதார்க்கு இச்சக்கரம் பற்றி எழும் ஐயம், `திருவைந்தெழுத்து எல்லாவற்றையும் தரும்` எனக் கூறி நீக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
ஆரும் அறியாத ஆனந்த ரூபம்ஆம்
பாரும் விசும்பும் பகலும் மதியதில்
ஊரும் உயிரும் உணர்வது மாமே.

பொழிப்புரை :

மண்ணும், விண்ணுமாகிய எல்லா இடத்திலும், பகலும், இரவுமாகிய எல்லாக் காலத்திலும் வாழ்தலை யுடைய எல்லா உயிரும், அவற்றின் உணர்வுமாய் இருப்பது திருவைந்தெழுத்து. அதனால், எதனை வேண்டுவோரும் அந்த மந்திரத்தை ஓதலாம். ஓதுவதால் உலகில் பிறர் அறிந்திலாத விடய இன்பமும், இறை இன்பமும் மிகவும் உளவாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. \\\"அஞ்செழுத்து\\\" என்பது தாப்பிசையாய் இடைநின்றது. ஆனந்த ரூபம் - இன்பமே உருவாம் நிலை. இன்பம் இருவகை இன்பத்திற்கும் பொதுவாய் நின்றது. \\\"மதியதில்\\\" என்பதிலும் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க. ஊர்தல் - உலாவுதல்; வாழ்தல்.
இதனால், மேலதனை முடிந்தது முடித்தலாகக் கூறி, அது வலியுறுத்தப்பட்டது.
இம்மந்திரத்தின் பின் முன்பு \\\"ஆதார ஆதேயம்\\\" என்னும் அதிகாரத்துட் போந்த. \\\"உணர்ந்தெழு மந்திரம்\\\" என்னும் மந்திரம் சிறிது வேறுபடப் பதிப்புக்களில் காணப்படுதல் மிகையாகும்.
சிற்பி