நான்காம் தந்திரம் - 12. புவனாபதிச் சக்கரம்


பண் :

பாடல் எண் : 1

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

பொழிப்புரை :

மேல் (1158) \\\"தக்க பராவித்தை\\\" என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட `ஷ்ரீவித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள மாட்டாத மெலியோர்க்கு அமைந்தது இச்சக்கரம் என்பது உணர்த்துதற்கு முதல் நான்கு மந்திரங்களால் ஷ்ரீ வித்தையின் இயல்பே கூறுகின்றார். ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக் களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.

குறிப்புரை :

ககாரத்தை முதலில் உடைமை பற்றி இவ்வித்தை (ஷ்ரீவித்தை) `காதி வித்தை` என்றும் சொல்லப்படுகின்றது.
ககாரதி ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்` என்பன. ஹகாரத்தையே தமிழ் முறையால், \\\"அகாரம்\\\" என ஓதினார். ஹகாராதி ஆறாவன; `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்` என்பன. ஸகாரத்தையே அவ்வாறு \\\"சகாராதி\\\" என்றார். ஸகாராதி நான்காவன; `ஸ, க, ல, ஹரீம்` என்பன. இப்பதினைந்தெழுத்தின் தொகுதி, `பஞ்ச தசாட்சரி` எனப்படும்.
சத்திக்குரிய மந்திரங்களில் தலையானதாகக் கொள்ளப் படுவது, `லலிதா திரிசதி தோத்திரம்` என்னும் முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15X20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்ட வாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை ஈற்றில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம், `வரிவஸ்யாரகசியம்` என்னும் நூல் முதலியவற்றில், பலவாகச் சொல்லப்படுகின்றன. இவற்றிற்கு முதல் நூல், `திரிபுரை` என்னும் சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதமாம்.
`இப் பஞ்ச தசாட்சரி மந்திரம் காயத்திரியின் மற்றொரு வடிவம்` எனவும், இன்னும், `பொதுவாக யாவராலும் அறிந்து சொல்லப்பட்டு வரும் காயத்திரியினும் இது மிக மேலானது` எனவும், `காயத்திரியை வெளிப்படையாகக் கூறும் வேதம், இதனை அவ்வாறு கூறாமல், மிக மறை பொருளாகச் சில சங்கேத (குறியீட்டு)ச் சொற் களால் கூறுகின்றது எனவும், இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது எனவும் கூறுவர். இம்மந்திர வழிபாட்டிற்குரிய ஷ்ரீ சக்கரம் பற்றி மேற்குறித்த பரா வித்தை கூறிய இடத்தில் சொல்லப்பட்டது. `ஷ்ரீ0` என்பது இலக்குமி பீசம் எனவும், இதனை இவற்றோடு கூட்டி சோடசாட்சரியாகக் கொள்வது மிக உயர்ந்தோர்க்கு உரியது எனவும் கூறுவர். இவ் அக்கரத்தை நாயனார் புவனாபதி சக்கரத்திற்குக் கூறுகின்றார்.
`வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதிகளில் நிறங்கள் வரிவஸ்யரகசியத்தில் முறையே, `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்` எனச் சொல்லப்பட்டன. அவற்றை நாயனார் இங்குக் கூறியவாற்றோடு இயைவனவாகக் கொள்ளுதலே ஏற்புடைத்து, `கண்ட` என்பது இங்கு, `காணிய` எனத்திரிந்து நின்றது. காமிய முத்தி, உம்மைத் தொகை. `போலும்` என்பது உரையசை. இவற்றைத் தருவனவற்றை ஒற்றுமை பற்றி இவையாகவே கூறினார்.
இதனால், சத்தி வழிபாடாகிய ஷ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓரில் இதுவே உறையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோணம் மாவின்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயந் தானே.

பொழிப்புரை :

மாணவகனே, யான் உனக்கு ஒரே முடிவைச் சொல்லுகின்றேன்; கேள்; உண்மையை ஆராயுமிடத்து மேற்கூறிய பதினைந்தெழுத்து மந்திரமே மந்திரங்களில் தலையாயது. இம்மந்திரத் திற்குரிய தேவிதன் பெருமையை ஆராயின் இவளையன்றித் தெய்வம் வேறில்லையாம். இம்மந்திரத்தைக் கொண்ட `ஷ்ரீசக்கரம்` எனப் படுகின்ற முக்கோணச் சக்கரமே பேரின்பமாகிய வீட்டின்பக் கடலாயும் விளங்கும். இன்னும் ஆழ்ந்து நோக்கின், ஷ்ரீசக்கரமே மெய்யுணர்ந்தோர் காணும் சிவன் வடிவாகிய சிதாகாசமாம்.

குறிப்புரை :

\\\"யானொன்று செப்பக் கேள்\\\" என்பதை முதலிற் கொள்க. \\\"இதுவே\\\" என்றது, மேற்கூறிய ககாராதி பதினைந்தெழுத்துக் கூடிய மந்திரத்தை, \\\"இத்தெய்வம்\\\" என்றது, `இதன் தெய்வம்\\\" என்றவாறு. பிறிது - பிறிது தெய்வம். வாரி - கடல் `திரிகோணம் மா இன்ப வாரியாம் முத்தியும்` எனக்கூட்டுக. `மனமின்ப` என்பது பாடம் ஆகாமை அறிக.
உம்மை, சிறப்பு, காயம் - சரீரம், சிவனுக்குச் சரீரமாவது சிதாகாசமேயாதலை அறிக. `சிதாகாயம்` எனப்பாடம் ஓதினுமாம். திரிகோணங்களால் ஆகின்ற ஷ்ரீசக்கரம் ஆதார ஆதேயம், என்னும் அதிகாரத்தில் காட்டப்பட்டது.
இதனால், மேற்கூறிய மந்திரத்தின் சிறப்பும், அதனோடு தொடர்புடையவற்றது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஏக பராசத்தி ஈசற்காம் அங்கமே
ஆகம் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகம் பராசத்தி யாகச் சிவன்உரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே.

பொழிப்புரை :

பராசத்தியாய் உள்ளது ஒன்றே; அதுவே பரசிவத்திற்கு வடிவம். அந்தச் சத்திக்கு வடிவம், `பராவித்தை` எனப்படும் ஷ்ரீவித்தை. அந்த வித்தையால் முத்தி, சித்தி இரண்டும் உளவாம். இனிப் பராசத்தி ஒன்றேயாயினும் சிவன் அங்கியாய் நிற்கச் சத்தி அவனுக்கு அங்கமாய் நிற்றல் உண்மையால், எட்டாய்ப் பிரிந்து நிற்றல் உண்டாகின்றது.

குறிப்புரை :

\\\"ஏக பராசத்தி\\\" என்றது உடம்பொடு புணர்த்தல், \\\"அங்கமே\\\" என்னும் ஏகாரம் பிரித்துக் கூறப்பட்டது, எட்டுப் பிரிவாவன; பரை, ஆதி, விந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` என்னும் நிலைகளாம். `சிவன் அங்கியாகத் தான் அங்கமாதல் உண்மையின்` என்றமையால், `சிவனது சங்கற்பமே இங்ஙனம் பிரிதற்குக் காரணம்` என்பது பெறப்பட்டது.
\\\"எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்\\\" 1
என்ற சிவஞானசித்தியை நோக்குக. `சிவன் உருவாம் யோகம் பராசத்திக்கு உண்மையில் எட்டாம` என்க. `சிவகுரு` என்பது பாடம் அன்று. யோகம் - தொடர்பு. `பராசத்தியே ஏனை ஏழுமாம்` என்றற்கு அதனையும் உடன் கூட்டி எண்ணினார்.
இதனால், ஷ்ரீவித்தைக்குரிய தெய்வமாகிய சத்தியது இயல்பு தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகும் நாதாந்தத் தெட்டும் கலப்பித்த (து)
ஒட்டாத விந்துவும் தான்அற் றொழிந்தது
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

பொழிப்புரை :

பராசத்தி வழிபாடாகிய பராவித்தையால், அச்சத்தி பேதங்களாகிய மேற்கூறிய எட்டும் அட்டாங்க யோகத்தின் வழியே படிநிலைகள் எட்டினையும் அடையச்செய்து, முடிவில் நாதாந்தத்தில் சேர்க்கும். அதன்பின் பரசிவத்தை அடைதற்குத் தடையாய் உள்ள விந்து நாதங்களும் அகன்றொழியும். (ஒழியவே பரசிவத்தைக்கூடிப் பரானந்தம் எய்தலாம்.) இத்தகைய பராவித்தை அறிவாலும், ஆற்றலாலும் கீழ் நிலையில் உள்ளோர்க்கு இயலாததாம்.

குறிப்புரை :

கட்டு - நிலை. அவை எட்டாவன; ஆறு ஆதாரம், சகத்திரதாரம், நிராதாரம் என்பன, `யோகத்தால் கட்டாகும் எட்டும் கலப்பித்தது நாதாந்தத்துக் கலப்பித்தது` என்க. `சத்தி யோகத்துக் கலப்பித்தது` எனவே, பராவித்தையைக் கிரியையளவில் மட்டுமின்றி, யோக நிலையில் கொண்டு செய்தவழியே பெரும்பயன் உளதாதல் கூறப்பட்டதாம். `அப்பெரும்பயனும் முத்தியே` என்பார், \\\"ஒட்டாத விந்துவும் தான் அற்றொழிந்தது\\\" என்றார். நாதத்தால் வரும் ஞானத்தை \\\"வைந்தவ ஞானம்\\\" என்றே கூறுவராகலின், `நாதமும் அற்றொழிந்தது` என்னாது, `விந்துவும் அற்றொழிந்தது` என்றார்.
\\\"ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே\\\" 1
என்னும் சிவஞான சித்தியை இங்கு நினைவு கூர்க.
\\\"ஒழிந்தது\\\" என்பது வினைப்பெயர். அது, \\\"கிட்டா தொழிந்தது\\\" என்பதனோடு முடிந்தது. ஷ்ரீசக்கர வழிபாட்டின் முறையும், பயனும் கூறும்முகத்தால் அதனது சிறப்புணர்த்தி, அது மெலியோர்க்குக் கூடாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஏதும் பலமாம் இயந்திரரா சன்னடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பில் சட்கோணந் தான்இடே.

பொழிப்புரை :

இதுமுதலாகவே புவனாபதிசக்கரம் கூறுகின்றார். வழிபடுவோர்க்கு எப்பயனையும் தருவதாய், `இயந்திரராசன்` எனப்படுகின்ற புவனாபதி சக்கரத்தை எந்தத் துதியினாலேனும் துதித்து, அதனை வழிபடும் முறையைக் குருவின் உபதேசத்தால் அறிந்து. நீ இயல்பாகச் செய்துவருகின்ற கர நியாச அங்க நியாசங்களை இவ்வழிபாட்டிற்கு ஏற்பச்செய்து, பிறவி நீக்கத்தைச் சிறப்பாக விரும்பி, செப்புத்தகடு ஒன்றில் முதலில் அறுகோணச் சக்கரத்தை வரை.

குறிப்புரை :

பலம் ஆம் - பயன் விளைதற்கு ஏதுவாய, `இயந்திர ராசன்` என ஆண்பாலாகக்கூறியது வடமொழி மதம். `இதனைப் புவனாபதியாகவே கருதுக` என்றற்கு, \\\"அடி ஓதி\\\" என்றார். அங்க நியாசமே கூறினாராயினும் கரநியாசமுங் கூறுதல் கருத்தாம். `அவைகளை இதற்கேற்பச் செய்க` என்றது, `இச் சக்கரத்தில் அடைக்கப்படும் பீசங்களாலே செய்க` என்றபடி. அவற்றை வருகின்ற மந்திரங்களில் காண்க.

பண் :

பாடல் எண் : 6

சட் கோணந் தன்னில் சிரீம்இரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்இரீங் காரம்இட்
டெக்கோண முஞ்சூழ் எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீரெட் டக்கரம் அம்முதல் மேல்இடே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு வரையப்பட்ட அறுகோணச் சக்கரத்தின் அறைகளில் `ஸ்ரீம், ஹ்ரீம்` என்னும் பீசங்களைப் பொறித்து, அச்சக்கரத்தின் ஆறுமூலைகளின் மேலும், `ஹ்ரீம்` என்னும் பீசத்தை மட்டும் எழுதி, எல்லா மூலைகளும் உள்ளே அடங்கும்படி அவற்றைச் சுற்றி வட்டம் ஒன்று வரைந்து, அவ்வட்டத்திற்கு வெளி யில் திக்கிற்கு ஒன்றாக எட்டுத் தாமரையிதழ் தோன்ற அமைத்து, அவ் இதழ்களின் கீழே வட்டத்தில் வடக்குமுதல், திக்கிற்கு இரண்டாக உயி ரெழுத்துப் பதினாறனையும் அகாரம் முதலாக முறையானே எழுதுக.

குறிப்புரை :

\\\"சட்கோணந் தன்னில்\\\" என்ற ஒருமையால், \\\"சட் கோணம்\\\" என்பது ஆகுபெயராய், அவற்றாலாய சக்கரத்தைக் குறித்த தாம். \\\"இட்ட இதழ்கள்\\\" எனப் பின்னர் அனுவதித்துக் கூறலால், அவற்றை இடுதல் இங்குக் கொள்ளப்பட்டது. `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்றது. மிகுதல் உயர்தலாதலின், அஃது உயி ரெழுத்தை உணர்த்தி நின்றது. உயிரெழுத்து என்றே கூறினாராயினும், விந்துவொடு கூட்டியே கொள்க. முதலடியில் இனவெதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 7

இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டிட் டதன்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத் (து) ஆம் கிரோம்என் மேவிடே.

பொழிப்புரை :

சக்கரத்தைச் சூழ்ந்த வட்டத்திற்கு வெளியில் உள்ள இதழ்களின் இடைநிலம் எட்டிலும் எட்டு ஹகார மெய்யை உகார உயிர் புணர்த்து எழுதி, அவ் இதழ்கள் எட்டிலும் பொருந்தி நிற்க, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றைப் பொறித்து, இதழ்களின் இடப்பக்கங்களில் `ஆம், க்ரோம், என்னும் பீசங்களை எழுதுக.

குறிப்புரை :

\\\"அதன் மேலே\\\" என ஒருமையாற் கூறியது, ஒற்றுமை நயங்கொண்டு. இங்ஙனம் கூறுதலை, `சாதியொருமை` என்பர். \\\"மேலே விட்டு\\\" என்றது, `மேலே ஏற்றி` என்றவாறு. `இதழ்களின் மேலே கிட்டும் படி இட்டு` என்க. `மேவ` என்பது ஈறு குறைந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 8

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யுடைய குரோம்சிரோம் என்றிட்டுத்
தாவில் இரீங்காரத் தால்சக் கரஞ்சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

பொழிப்புரை :

பொருந்திய சக்கரத்தின் வெளியே உள்ள இதழ்களின் வலப்பக்கங்களில் எங்கும் வரிசையாக, `க்ரோம், ஹ்ரோம்` என்பவற்றை எழுதி, எல்லாவற்றையும் கேடில்லாத ரீங்காரத்தால் வளைத்து முடித்தபின், அம்மையாகிய புவனாபதியை வழிபடு.

குறிப்புரை :

\\\"பின்\\\" என்பதனை, \\\"சூழ்ந்து\\\" என்றதன் பின்னர்க் கூட்டுக. இச்சக்கரத்திற்குச் சொல்லப்பட்ட பீசாட்சரங்கள், `ஷ்ரீம், ஹரீம், ஹு 0, க்ஷோம், ஸ்ரோம், ஆம்` என்னும் ஆறுமேயாதலால், கர நியாச அங்க நியாசங்களும் இவற்றானே செய்யப்படும் என்க. அங்ஙனம் செய்யுங்கால் கரநியாசத்தைக் தர்ச்சனி (பெருவிரல்) முதலாக முறையே ஐந்து விரல்களிலும், ஆறாவதாக அகங்கை புறங்கைகளிலும் நியசிக்க. அங்க நியாசம் இருதயம் முதலாகச் செய்யப்படுதல் இயல்பு.
இவை நான்கு மந்திரங்களாலும் புவனாபதி சக்கரத்தை அமைக்கும் முறை கூறப்பட்டது. இங்ஙனம் அமைந்த சக்கர வடிவைக் காண்க.

பண் :

பாடல் எண் : 9

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

பொழிப்புரை :

புவனாபதி யம்மையை வழிபடும் பொழுது முதலில் மனத்தைக் காமாதி குற்றங்களின் நீங்கித் தூய்மையுடை யதாகப் பண்ணி, அகத்தில் அவளது உருவத்தை நினைவுகூர்ந்து, பின்பு வெளியில் கும்பம், (நிறை குடம்) விம்பம், (திருவுருவம்) இச் சக்கரம் என்பவைகளில், அவ்வம் மறைமொழிகளால், (மந்திரங் களால்) ஆவாகனம், (வரவழைத்தல்) தாபனம், (இருத்துதல்) சந்நிதானம், (முகநோக்கம்) சந்நிரோதனம், (வேண்டிக்கோடல்) என்பவை களால் விளக்கம் பெற நிறுத்திப்பின் உபசாரங்கள், (முகமன்கள்) பலவும் செய்து முடித்து, அவளது ஒளிமிக்க வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி தியானித்து நில்.

குறிப்புரை :

\\\"அகத்தில்\\\" என்பது தாப்பிசையாய் இடை நின்றது. அகத்தினில் ஆவாகனம் - நினைவுகூர்தல். புறத்தினில் ஆவாகனம் - வரைவழைத்தல். பிராணப் பிரதிட்டை - உயிர் கொடுத்து நிலைப் பித்தல். என்று, ஆவாகனம் முதலிய நான்கையும் உணர்த் திற்று. இவை புறத்திலாதல் வெளிப்படை. அதனால், இவை செய்யப்படும். இடங்களாகிய கும்பம் முதலியனவும் பெறப்பட்டன. \\\"பேசி\\\" என்பதற்குச் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. \\\"பிரதிட்டை செய்து\\\" என்றே போயினாராயினும், பின்னர்ச் செய்யப் படும் உபசாரங்கள் ஆற்றலால் விளங்கும். அவை அபிடேகம், (திருமுழுக்கு) அலங்காரம், (ஒப்பனை. இஃது ஆடை, அணிகலம், சந்தனம், பூமாலை, இவைகளை அணிந்து அழகுசெய்தலாம்.) தூபம், (நறும்புகையிடுதல்) தீபம், (பல விளக்குவகை காட்டல்) நிவேதனம், (நைவேத்தியம் - படையல்கள்) அருச்சனை, (மலரிடல்) நிருத்தம், (ஆடல்) கீதம், (பாடல்) வாத்தியம், (பல்லியம்) பிரதட்சிணம், (வலம் வரல்) நமஸ்காரம், (அடிபணிதல்) பிரார்த்தனை, (வேண்டுகோள்) என்பன. `செபம்` (மந்திரம் கணித்தல்) என்பது இவற்றுடனே கொள்க. தேசு, ஆகுபெயர்.
இதனால், புவனாபதி அம்மையது வழிபாட்டு முறை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 10

செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

பொழிப்புரை :

புவனாபதி யம்மைதன் வடிவில் விளங்குவன செம்மை நிறம், செம்பட்டு உடை , கைகளில் அங்குசம், பாசம் என்னும் படைக்கலங்களும், அபய வரதங்களும், அவயங்களில் அவ்வவற் றிற்கு ஏற்ற அணிகலன்கள் தலையில் இரத்தின கிரீடம் என்பவாம்.

குறிப்புரை :

\\\"அபயம்\\\" என்றதனால், வரதமும் உடன் கொள்ளப் படும். மெய், அவயவம் இவை ஆகுபெயர்கள். \\\"இரத்தினமாம் மேனி\\\" என்றது \\\"இரத்தினஉருவான` என்றவாறு. தோற்றம் உடைய வற்றை, \\\"தோற்றம்` என்றார்.
இதனால், புவனாபதி தியானத்திற்கு அவளது வடிவு கூறப் பட்டது. மேல் பராவித்தை கூறியவிடத்தில் (1158) அம்மைதன் வடிவம் வேறாகக் கூறப்பட்டிருத்தலை நோக்குக.

பண் :

பாடல் எண் : 11

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்
பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால \\\"நாரதா யைசுவா கா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.

பொழிப்புரை :

புவனாபதிக்கு முறைப்படி வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொண்டு செய்தல் வேண்டும். நிவேதனம் பால் அடிசிலேயாம். நிவே திக்கும் மந்திரம் `ஓம் நாரதாயை சுவா:\\\" என்பது, இம் மந்திரத்தால் நான்கு திசைகளிலும் நிவேதனம் செய்தல் வேண்டும். வழிபாடுயாவும் முடிந்தபின்பு பாரங்முக அர்க்கியத்தால் அம்மையை முகம் மாற்றிய பின்பே நிர்மாலிய நிவேதனத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.

குறிப்புரை :

தோல் - உடம்பு; ஆகுபெயர். \\\"பால் போனகம்\\\" என்ற மையால், வாம மார்க்க நிவேதனங்கள் கூடாவாயின. \\\"மந்திரத்தால் பயின்றேத்தி\\\" என்பதை, துதித்து என்பதன்பின் கூட்டுக. நான்கு திசைகளிலும் நிவேதித்தல் கூறினமையால், விம்பத்திலும் அம்மையை நான்கு முகம் உடையவளாகக் கொள்ளுதல் பெறப்பட்டது. பாகம் - சமைக்கப்பட்ட பொருள். நிர்மாலியத்தையே \\\"சேடம்\\\" (எஞ்சியது) என்றார். அதனைக் கொள்ளுதலைச் சேவித்தலாகக் கூறியது மரபு பற்றி.
இதனால், புவனாபதி வழிபாட்டிற்கு, முன்னர் எய்திய வற்றின் மேல் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்
பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.

பொழிப்புரை :

`சேடம்` எனப்படுகின்ற நிவேதப் பொருளைக் கைக்கொள்வதற்குமுன், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை ஒடுக்கிக் கொள்ளுதற்குரிய மந்திரம் கிரியை பாவனை களால் இருதயத்தில் ஒடுக்கி, யாவர்க்கும் அணுகுதற்கரிய மேலான இச்சக்கரத்தை நீ வைப்புப்பொருள் போல உள்ளத்திலே மறவாது வை; பின்பு இது நினைத்தவற்றை யெல்லாம் உனக்குக் கொடுக்கும்.

குறிப்புரை :

`பராங்முக அர்க்கியத்திற்குப் பின் இதுவும் செய்க` என்றற்கு, `சேவிப்பதன்முன்` என மீட்டுங் கூறினார். உத்வாபனம் - மீட்டுக் கொள்ளுதல். இதனை, `உத்வாகனம்` என்றல் பிழை. இஃது இதற்குரிய மந்திரம் முதலியவற்றைக் குறித்த ஆகுபெயர். \\\"பாவித்து\\\" என்றது, `இருதயத்துள் ஒடுக்கி` என்றவாறு, \\\"இதய கமலம் பதிவித்து\\\" என்றது, பின்னர் மறவாது ஊன்றிக்கொள்ளுதலை. `தேவியைப் பதிவித்து, இயந்திர ராசனைச் சேமி` என்க. \\\"நினைந்த\\\" என்பது அஃறிணைப் பன்மை வினைப்பெயர். `நினைந்தது` என்பது பாடம் ஆகாமை அறிக.
இதனால், இச்சக்கர வழிபாட்டினை நிறைவு செய்யும் முறை கூறி முடிக்கப்பட்டது. பலர்க்குப் பயன்படுதல் பற்றி, \\\"இயந்திர ராசன்\\\" எனப்பட்ட இதன் வழிபாட்டில் இதனைக் கூறியதனால், ஏனைச் சக்கரங்களின் வழிபாட்டிற்கும் இஃது உரியதாதல் அறியப் படும்.
சிற்பி