ஐந்தாம் தந்திரம் - 6. கிரியை


பண் :

பாடல் எண் : 1

பத்துத் திசையும் பரம்ஒரு தெய்வமுண்டு
எத்திக் கினில்இல்லை என்பது இனமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண்எனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

பொழிப்புரை :

எல்லாத் தெய்வங்கட்கும் மேலான ஒரு தெய்வ மாகிய சிவபிரான் பத்துத் திசைகளிலும் நிறைந்திருக்கின்றான். அவனை எந்தத் திசையில் `இல்லை` என்று கூறமுடியும்! ஆதலால், பலவகை மலர்க் கூட்டத்தைக் கொண்டு அவனது திருவடியையே புகலிடமாகக் கருதி வழி பட்டால், பொங்கிப் புரண்டு வருகின்ற வினையாகிய கடல் வந்து மோத மாட்டாது ஒழியும்.

குறிப்புரை :

`ஆதலின், அதனைச் செய்க, என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில், ``எத்திக் கினிலில்லை`` என்பதைப் பிறவாறு ஓதுவன பாடமாகா என அறிந்து கொள்க. `கொத்தோடு` என மூன்றாவது விரிக்க.
இதனால், `கிரியையாவது சிவபெருமானை மலர்தூவி வழி பகுதலேயாம்` என்பது கூறப்பட்டது.
இதன் பின் பதிப்புக்களில் உள்ள ``கானுறு கோடி`` என்னும் மந்திரம் பின்னர் ஏழாம் தந்திரத்தில் `குருபூஜை` அதிகாரத்தில் வருவது.

பண் :

பாடல் எண் : 2

கோனக்கன் றாய குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாய நடுவே உழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழும்
ஆனைக்கன் றீசன் அருள்வெள்ள மாமே.

பொழிப்புரை :

தலைவனாகிய சிவபெருமானது நடனம் புரிகின்ற திருவடிகளைத் துதியுங்கள். ஏனெனில், `ஞானக்கன்றுகளின் கூட்டம்` எனத் தக்க அடியார் கூட்டத்தின் நடுவே திரிந்துகொண்டிருப்பவனும், வானத்தில் வாழும் பசுக்கன்றுகளாகிய தேவர்களால் தொழப் படுபவனும் ஆகிய சிறப்பால் யானையை ஒத்த அடியவனுக்கே மறுமையில் சிவனது திருவருட் பெருக்கு உளதாகும்.

குறிப்புரை :

`கோன் நக்கன் தாய குரை கழல்` எனவும் `ஞானக் கன்று ஆய நடுவே` எனவும், `ஆனைக்கு அன்று` எனவும் கண்ணழித்து உரைக்க, ``உழிதரும், கைதொழும்` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``ஆனை`` என்னும் ஒருபெயர் கொண்டன. ``ஆனைக்கே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தல் பெற்றது. `அருள் பள்ளமாமே` எனவும் பாடம் ஓதுவர். `வள்ளமாமே` என்பது பாடமன்று.
இதனால், கிரியையுள் தோத்திரம் சிறந்ததோர் உறுப்பாதல் கூறப்பட்டது. ``பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடி`` 1 என்றார் நாவுக்கரசரும்.

பண் :

பாடல் எண் : 3

இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லாம்
அதுபணி செய்கின் றவள்ஒரு கூறன்
எதுபணி மானுடர் செய்பணி? ஈசன்
பதிபணி செய்வது பத்திமை யாமே.

பொழிப்புரை :

உலகங்கள் அனைத்தையும் செயற்படுத்தலாகிய அச்செயலைச் செய்பவளாகிய அம்மையும் அதனைச் செய்தல் அவளை ஒரு கூற்றிலே உடைய சிவனிடத்து இக்கிரியைத் தொண்டைச் செய்தேயாம். அங்ஙனமாயின், `மக்கள் செய்யத் தக்க பணி` யாது என்பார்க்கு, பதியாகிய அவனிடத்துச் செய்யுங் கிரியையே` என்பது கூற வேண்டுமே! இனி, `பத்திமை` எனக் கூறப்படுவது இக்கிரியையேயாம்.

குறிப்புரை :

``பணிந்த`` என்பது, `பணியைச் செய்து` என இருசொல் நிலைமைத்தாய் நின்றது. `எண்டிசை மண்டலம் எல்லாம் செய் கின்றவள் அது பணி அவளொடு கூறன்பால் இது பணிந்து` எனக் கூட்டியுரைக்க. அம்மையும் இறைவனை வழிபட்டு வரம்பெற்றமை பல இடங்களில் வெளிப்படை. ``கூறன்`` என்பதில் ஏழாவது இறுதிக் கண்தொக்கது. மூன்றாம் அடியிலும் `இது பணி` என ஓதுதல் பாட மாகாது. `பதியாகிய ஈசன் பணி` எனக் கூட்டுக. `இது செய்வதே பத்திமை` என வேறு தொடராக்கியுரைக்க. சரியை முதலிய நான்கனுள் முன்னிரண்டும் `பத்திச் செயல்கள்` எனவும், பின்னிரண்டும், `ஞானச் செயல்கள்` எனவும் பொதுவாக வழங்கப்படுமாறு அறிக. இது வருகின்ற திருமந்திரத்தாலும் பெறப்படும்.
இதனால், கிரியையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருவரு ளால்சிவ மாகுமே.

பொழிப்புரை :

பத்தியை வேண்டுபவன், முன்னே சரியை கிரியை களிற் பழகிப் பின்பு சத்திநிபாத முதிர்வால் குற்றம் அற்ற சிவயோகத் தில் மனத்தை செலுத்தும் வழியிலே பொருந்தி, அதனால், முதிர்ந்து வருகின்ற ஞானத்தால் குருவருள் வாய்க்கப் பெற்றுப் பின்பு அவ்வருளானே சிவத்தை அடைந்து சிவமேயாவான்.

குறிப்புரை :

அதிகார இயைபுபற்றி, கிரியை முற்கூறப்பட்டது ``சுத்தம்`` என்றது பிறவற்றைக் கீழ்ப்படுத்துத் தான்மிக்குத் தோன்று தலை. அடயோகம் முதலியவற்றால் மலம் நீங்காமையின் அது நீங்குத லாகிய சிவயோகத்தை, ``துரிசற்ற யோகம்`` என்றார். உய்த்தலுக்குச் செயப்படுபொருள் வருவிக்க. ``சித்தம்`` என்றது அறிவை ``குரு வருளால்``என்ற அனுவாதத்தால், குருவருள் ஆதலும் பெறப் பட்டது. `சரியை கிரியைகளாகிய பத்தி நெறியில் நின்றோன் பின்பு யோக ஞானங்களாகிய ஞான நெறியைத் தலைப்பட்டுப் பின் அது வழியாகச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வு எய்துவன்` என்றவாறு.
இதனால், மேற் கூறிய பத்தி நெறி, ஞானம் வாயிலாக வீட்டைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

அன்பின் உருகுவன் ஆளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ ணொனக்கருள்
என்பினுட் சோதி இலிங்கம்நின் றானே.

பொழிப்புரை :

செம்பொன்போலும் திருமேனியும், அதனுட் சிறப்பாகக் குறிக்கத் தக்க தாமரை மலர்போலும் திருவடிகளும் என் கண்முன் தோன்றினாற்போல, என் உடம்பகத்து இருதய கமலத்தில் ஒளியாய் விளங்குகின்ற சிவன், புறத்தில் இலிங்க மூர்த்தியிடமாக எனக்கு விளங்கிநிற்கின்றான். அதனால், அடியேன் அவன்மேல் வைத்த அன்பினால் மனம் நெகிழ்ந்து உருகுகின்றேன்; அவன் இடும் பணிகளைச் செய்கின்றேன்; எல்லாம் செய்து அவனை வேண்டுவது அவனது அருள் ஒன்றையே.

குறிப்புரை :

``மொழிவது எனக்கருள்`` என்பதை முதலடியின் இறுதி யிற் கூட்டி அஃது ஈறாக அனைத்தையும் ஈற்றில் வைத்து உரைக்க. ``செய்`` உவம உருபு. `இலிங்கு நின்றானே. இலங்குகின்றானே` என்பன பாடமல்ல. இடும்பணி, ஆகமத்தின் வழியாகப் பணித்த பணிகள். மோனை நயம் கருதாது, `நாளும் பணி செய்வன்` என்றலுமாம். இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், இலிங்க மூர்த்தியில் சிவனை முடிமுதல் அடிகாறும் தோன்ற வெளிநிற்கப் பாவித்து வழிபடுதலே கிரியையாதலும், அது பயன் கருதாது அன்பே காரணமாகச் செய்யப்பட்ட வழியே உண்மை யாதலும் கூறப்பட்டன, ``என்பினுட் சோதி இலிங்கம் நின்றான்`` என்பதனால், கிரியையாளன் அவ்வாறு அகத்தும் புறத்தும் வழிபடல் வேண்டும் என்பதும் கூறியதாயிற்று.
சிற்பி