ஐந்தாம் தந்திரம் - 14. சாரூபம்


பண் :

பாடல் எண் : 1

தங்கிய சாரூபந் தான் எட்டாம் யோகமாம்
தங்கும் சன் மார்க்கம் தனிலன்றிக் கைகூடாது
அங்கத் தடல் சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக இழிவற்ற யோகரே.

பொழிப்புரை :

சாலோக சாமீபங்கட்கு மேலே பொருந்தியுள்ள சாரூபம் அட்டாங்க யோகங்களுள் எட்டாம் நிலையாகிய சிவ சமாதி கைவரப் பெற்றோர்க்கே கிடைப்பதாம். அந்தச் சாரூப நிலையினராய முதிர்ந்த யோகியர்க்கு அல்லது அதற்கு மேலே உள்ள சன்மார்க்க மாகிய ஞானம் உண்டாக மாட்டாது. மேலும் அட்ட அங்கங்களும் நிரம்பிய இந்த யோகத்தாலே காய சித்தியும் உண்டாகும். அதனால், இம்மையில் காய சித்தியும், மறுமையில் சாரூபமும் பெறுபவரே குறைவற்ற யோகத்தைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

`எட்டாம் யோகத்தால்` எனவும், `அங்கத்தால்` எனவும் உருபு விரித்துக் கொள்க. ``அங்கம்`` என்றது அவற்றை முற்ற உடைய யோகத்தை குறித்த ஆகுபெயர். ``தனில்`` என்றது, யோகத்தையே குறித்தது, `ஆவர்` என ஓதற்பாலதனை,``ஆக`` என விதியாக ஓதினார். அன்றி `ஆவர்` என்றே பாடம் ஓதலுமாம்.
இதனால், சாரூபம் வருமாறும், அவ்வாற்றானே பிற பயன்கள் கிடைத்தலும் கூறப்பட்டன. ``சன்மார்க்கம் தனில் அன்றிக் கை கூடாது`` என்றதனால், `சரியை முதலிய மூன்றற்கும் உண்மைப் பயன் ஞானமே` என்பதும், `சாலோகம் முதலியவை இடைநிலைப் பயன்களே` என்பதும் போந்தவாறு அறிந்துகொள்க.

பண் :

பாடல் எண் : 2

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலமா தாகும் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை யிறைவன் கதிர்வடி வாமே.

பொழிப்புரை :

பொன்மலையைச் சார்ந்த சராசரங்கள் யாவும் பொன்னேயாய் விளங்குதல்போல், திருக்கயிலாய மலையில் கல்லால் நிழலில் தென்முகக் கடவுளாய் நீங்காதிருந்து ஞான நெறியைத் தக்கார் வழியாக உலகிற்கு என்றும் அளித்து வரும் சிவபிரான் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானது உலகத்தை அடைந்த யோகிகளது உருவம் கயிலையில் மேற்கூறியவாறு வீற்றிருந்தருள்கின்ற பெரு மானது ஒளி பொருந்திய உருவத்தோடு ஒத்த உருவமேயாகிவிடும்.

குறிப்புரை :

உவமை, ``கதிர்வடிவாம்`` என்பது. அதனோடு ஒன்றேயாய் அதுவாகிவிடாது, அதனோடு ஒத்த தாம் என்பது விளக்கி நின்றது `லோக சயிலத்தினை` என மாற்றி உரைக்க. `அச்சயிலம தாகும்` எனச் சுட்டியுரைக்க, உலோகம், இங்கு,பொன். முன்னர், ``பொற் சயிலம்`` என்றதனால், பின்னர், `அச்சயிலம்` என்பது, `பொன்` என்னும் பொருட்டாய் நின்றது. பொன் மலையைச் சார்ந்தன யாவும் பொன்னாய் விளங்குதலை,
``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே`` 1
என்னும் பொன்வண்ணத் தந்தாதியானும் அறிக. ``புக்க போதே`` எனப் பொதுப்படக் கூறினாரேனும், யோகத்தால் ஒன்றிப் புக்க பொழுது` என்பது, ``சார்ந்த பொழுதே`` என்ற உவமையிற் போந்த சார்ச்சி வகை யால் பெறப்பட்டது. படவே, கதிர்வடிவாதல் அவரது உருவமேயாதல் விளங்கிற்று. இவ்வுலகரும் தன் உலகத்தை அடைதற் பொருட்டுச் சிவபெருமான் அருள்புரியுமாற்றை உணர்த்தற்கு, ``பயிலுங்குருவின் பதி`` எனவும், ``கயிலை இறைவன்`` எனவும் அருளிச் செய்தார்.
``மண்ணுல கிற்பிறந்து - நுமை - வாழ்த்தும் வழியடியார் பொன்னுல கம்பெறுதல் - தொண்ட - னேன்இன்று [கண்டொழிந்தேன்`` 2
என்று அருளிச்செய்ததும் காண்க.
இதனால், சாரூபத்தினது இயல்பு உவமையின் வைத்து விளக்கப்பட்டது.
சிற்பி