ஆறாம் தந்திரம் - 4.துறவு


பண் :

பாடல் எண் : 1

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.

பொழிப்புரை :

இறப்பும், பிறப்பும் ஆகிய இரண்டினின்றும் இயல் பாகவே நீங்கி, உயிர்களும் அவற்றினின்றும் நீங்குதற்குத் துறத்த லாகிய தவநெறியின் முறைமையைச் சொல்லியருளிய சுயஞ்சோதி யாகிய சிவனை ஒரு ஞான்றும் மறத்தல் இல்லாதவராய், வாயாலும் வாழ்த்தி நிற்பவர்கட்கு அவன் இன்ப உலகமாகிய தனது உலகத்தை வாழும் இடமாகக் காட்டியருளுவான்.

குறிப்புரை :

சிவன் பிறவாமை உரையாலும் கருதலாலும் அறியப் படுதலின் அதனையே முன்னர்க் கூறினார். செவ்வெண்ணே யன்றி உம்மை யெண்ணும் தொகை பெறுமாதலின், இனிது விளங்க, ``இருமையும் நீங்கி`` எனத் தொகைகொடுத்து ஓதினார். எனவே, ``இருமை`` என்பது எண்ணின்கண் வந்தது. `இருமையினும்` என ஐந்தாவது விரிக்க. சிவன் இருமையினும் நீங்கினமையை எடுத்தோதி யதனால், `உயிர்களும் அவற்றின் நீங்குதற்கு` என்பது பெறப்பட்டது. தவம் - தவமாகிய நெறி. உயிர்கள் வினைவழியே இயங்குவது அவ நெறியும், வினை நீங்குதற்குரிய வகையில் இயங்குவது தவநெறியு மாதலின், அவற்றுள் துறவு தவநெறியாதல் உணர்த்துவார், `துறக்கும் தவம்` என்றார். எனவே, துறத்தலையே `தவம்` என்றமையால், பெயரெச்சம் வினைப்பெயர் கொண்டதாம். ``கண்ட`` என்றது `தானே கண்ட` என்னும் பொருட்டாய், `பிறர்க்குச் சொன்ன` எனத்தன் காரியம் தோன்ற நின்றது. சொல்லியது வேதாகமங்கள் வாயிலாக என்க. `சோதிப் பிரான்` என்றதும் அவ்விரண்டும் பற்றி. எனவே, அவனல் லது பிறர் அதனை அறிவாரும், அறிவிப்பாரும் இல்லை என்க. மறப் பின்மை பிற பொருளை நினையாமே யாதலின், அது பற்றறுத்தலைக் குறித்தல் அறிக. வாய்மொழிதல் நினைவின் வழித்தாதல் வெளிப் படை. அறப் பதிபுண்ணியலோகம்; என்றது, சிவபுண்ணிய லோகத்தை என்னை?
``யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்`` 1
என்றமையால், துறந்தார் அடைவது பசு புண்ணியம் செய்வார். அடைதற்குரிய துறக்க லோகம் ஆகாமையின். ``அமரர் பிரான்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. இதன்கண் ``பிரான்`` என்பது, ``அமரர்`` என்பார் முகமகனாக அங்ஙனம் கூறப்பட, உண்மை அமரன் சிவனேயாதல் விளக்கிநின்றது.
``அச்சுதன் அயன் அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமகனே. 2
என்ற கந்தபுராணத்தை நோக்குக.
இதனால், பிறவி நீங்கும் நெறி துறவேயாதலும், அதுவும் சிவநெறியின் பொதுவும், சிறப்பும் ஆகிய நூல்களிற் சொல்லப்பட்ட தேயாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்த மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

பொழிப்புரை :

ஆணவ மலம் பரிபாகம் எய்தாத பொழுது சத்தி நிபாதமும் வாராமையால் அம்மலம் பலமாயப் பொருள்களின்வழிப் பலவகை மயக்கத்தைச் செய்தலால் பிறந்தும், இறந்தும் உயிர்கள் தன்னை மறந்து நின்ற பொழுது அவற்றது அறிவினுள்ளே மறைந்து நின்றும், பின் அம் மலம் பரிபாகம் எய்தியபொழுது சத்திநிபாதம் வரு தலால் உயிர்கள் தன்னை நினைந்தவழி அச்சத்திநிபாத நிலை கட்கு ஏற்ப வெளி யிடத்தும், உள்ளே இதயத்தும் உருவம், அருவுருவம், அருவம் என்னும் தடத்தநிலைகளிலும், அறிவின்கண் சொரூப நிலை யிலும் முறையானே விளங்கிநிற்கின்ற சிவன் அச்சத்தி நிபாத நிலை கட்கு ஏற்பத்தோன்றும் துறவுணர்வின் அளவாக, முன்னர்ச் சிறிதாய்த் தோன்றிப் பின் பெரிதாய்ச் சுடர்விட்டு ஒளிர்கின்ற பேரொளி போல விளங்கிநிற்பன்.

குறிப்புரை :

பேதைமை, இங்கு மயக்க உணர்வு. இதனைத்தரும் ஆணவ சத்தி, `அதோநியாமிகாசத்தி` எனப்படும். இஃது உயிர் தோறும் ஒவ்வொன்றேயாயினும் அதற்கு வாயிலாய் உள்ள பொருள் களது பன்மை பற்றிப் பலவாயிற்று. ``பல்பேதைமையாலே`` என்பதை முதற்கண்வைத்து உரைக்க. ``மறந்த`` என்னும் பெயரெச்சம், ``இருள்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. `நீங்கச் சிறந்த` என்க. ``மறைந்து சிறந்த`` என்பதற்கு, `முன்னர் மறைந்து பின்னர்ச் சிறந்த` என உரைக்க, முன்னைநிலை மறத்தலாகவே, பின்னைநிலை நினைத்தலாயிற்று. ``சிறந்த`` என்றது, `படிமுறையான் ஓங்கி நின்ற` என்றவாறு. அருள் - அருட்சத்தி. ``அருள்சேர் பருவத்து`` என்பதை ``மறைந்து`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இதனானே, `முன்னைநிலை அருள்சேராப்பருவம்` என்பது போந்தது. `பருவத்து ஆம்` என இயையும். `ஆதல் துறந்த உயிர்க்கு` என்றதனால், அவ்விடத்துத் துறவுதானே உண்டாதல் பெறப் பட்டது. சிவன் மறைந்து நின்ற காலத்துப் பிறப்பிறப்பாய பெருந் துன்பம் உளதாதல் கூறவே, அவன் விளங்கிநின்ற காலத்துப் பேரின்பம் உளதாதல் விளங்கிற்று. `அது துறவால் வருவது` என்பதே இங்குக் கருதப்பட்டபொருள்.
``ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்;
ஆசை விடவிட ஆனந்த மாமே`` 1
என நாயனார் முதற்கண் அருளிச்செய்தமை காண்க.
இதனால் பற்றுள்ளம் - மலத்தாலும், சத்திநிபாதம் இன்மை யாலும் உளதாதலும், துறவுள்ளம் - மலபரிபாக சத்திநிபாதங்களால் உளதாதலும், அவ்விரண்டானும் முறையே பிறவித்துன்பமும், வீட்டின்பமும் உளவாதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

பொழிப்புரை :

``அறவாழி யந்தணன்``1 என்றற் றொடக்கத் தனவாக நூல்களில், `பல வகை அறங்களையும் தனக்கு வடிவாக உடையன்` எனக் கூறப்படுகின்ற கடவுள், பிறப்பு இல்லாதவனும், அதனால், பற்றுச் செய்தற்குக் கிளைஞர் ஒருவரும் இல்லாதவனும், வாழும் இடம் காடாகவும், உண்ணும் உண் பிச்சையாகவும் உடைய வனுமாதலால் சிறந்த துறவியாய் உள்ள சிவனேயாவன். அதனால், அவன் துறவு பூண்டவர்களையே பிறவியைக் கடப்பித்து உய்விக் கின்ற பேரருளாளனுமாய் உள்ளான். இவற்றை அறிமின்கள்.

குறிப்புரை :

`அறவடிவானவன்` என்னும் பொருட்டாய்க் கடவுட்கு யாவரும் உடன்பட்டுக்கூறும் பொதுக் காரணப்பெயராய் ``அறவன்`` என்பது எழுவாயாய் நின்று சிவனைக் குறித்த ``துறவன்`` என்னும் சிறப்புக் காரணப் பெயராய பயனிலையைக் கொண்டது. பிறப்பிலி முதலிய நான்கும் சிவன் சிவன் சிறந்த துறவியாமாற்றை விளக்கி நின்றன. `சிவன் சிறந்ததுறவி யாதலின், சிறந்த துறவியரிடத்தே அருள் மிக உடையனாய் அவர்களை உய்விக்கின்றான்` என்றவாறு. இல்லறத் தவரும் அன்பு, பொறை, ஒப்புரவு, ஈகை முதலியவற்றை உடையரா யினும் பற்றறாமையின், எல்லா உயிர்கள்மேலும் அருளுடையராய்த் `தன்னுயிர் நீப்பினும் தான் பிறிது இன்னுயுர் நீக்காது`2 ஒழுகுதல் முதலியவற்றை உடையராக மாட்டாமையின், `அறவோர்` எனப் பெயர் பெறமாட்டார்கள். துறவியரே அந்நிலைக் கண் நிற்கவல்லராய் ``அற வோர்`` எனப் பெயர் பெற்று நிற்றலின், அவரே அறவாழியந்தணனாகிய இறைவனது அருட்குப் பெரிதும் உரியராகின்றனர் என்பது தோன்ற, இறைவனை, ``அறவன்`` எனப் பொதுவகையானும், ``துறவன்`` எனச் சிறப்பு வகையானும் கூறினார். ``உறைவது காட்டகம், உண்பது பிச்ை\\\\u2970?`` என்றவை, `உடுப்பது தோல், முடிப்பது சடை, பூசுவது சாம்பல்` முதலிய வற்றிற்குத் தோற்றுவாயாய் நின்றன. நிற்கவே, இவை பற்றிச் சிவனை இகழ்வோர் துறவாது பெருமையை அறியும் அறிவிலார் என்பது அறியப்படும். அறிவுடையார் இன்னோரன்னவற்றைப் புகழ்ந்து போற்றுதல் அறியத் தக்கது. ``துறவனும்`` என்னும் உம்மையை, ``பித்தன்`` என்பதனோடு கூட்டுக. ``பிறவி யறுத்திடும்`` என்னும் தொகைச்சொல் `உய்விக்கும்` என்னும் ஒருசொற் பொருட்டாய் , ``துறந் தவர்தம்மை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. பித்துப் போறலின் பேரருள். ``பித்து`` எனப்பட்டது. உய்வித்தற்குக் காரணத்தைக் குறித்து நிற்றலின், இது துறந்தார் மேலதாதல் அறியப்படும்.
இதனால், துறந்தோரே சிவனருட்கு உரியராதல் கூறப்பட்டது. இத்துறவு, ``தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணரும்``1 உணர்வால் வரும் அகத்துறவாதல் அன்றி, வாளா, மனை துறந்து. 2
``நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் 3
வருந்துதலாகிய புறத்துறவாகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 4

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.

பொழிப்புரை :

(இம்மந்திரம் பிறிது மொழிதல். இதன் நேர்பொருள் வெளிப்படை.)
இதன் குறிப்புப்பொருள்:- அறநெறியை வகுத்துணர்த்திய இறைவனே மறநெறியையும் வகுத்துணர்த்தினான். அதனால், அறநெறியின் வழுவியவழி மறநெறி உளதாய்த் துன்பம் விளைக்கும். ஆகவே, அறநெறியின் வழுவாது ஒழுக வல்லவர்கட்கு அந்நிலையில் மறநெறி தோன்றித் துன்பம் விளைக்க மாட்டாது.

குறிப்புரை :

`அந்நிலை துறவோர்க்கே முற்ற முடியும்; அதனால், துறவைப் பெறுக` என்பது கருத்து ``படைத்தான்`` இரண்டில் முன்னது வினைப்பெயர்; பின்னது முற்று. முன்னதில் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது.
இதனால், துறவே துன்பம் துடைப்பாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.

பொழிப்புரை :

`தீயன ஆவனவும், நல்லன ஆவனவும் இவை இவை` எனக் குருவினிடத்துக் கேட்டுணர்ந்து` தீயவற்றினின்றும் விலகி வந்து சிவனது திருவடியைச் சேர்தற்குரிய தவத்தைச் செய்த நல்ல கோட் பாட்டை யுடையேன். அதனால் நான் ஐம்புல வேடர்கள் நினைத்து வந்து என்னைச் சூழ்ந்து நின்ற செயலுக்கு யாதும் கடவேனல்லேன்.

குறிப்புரை :

முதலடியை ``ஐவரும்`` என்பதொழித்து மூன்றாமடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. `குருவின்பால்` என்பது ஆற்றலால் வந்தது. ஐவர், குறிப்புருவகம், ``வளைந்தது`` என்பது, அச்செயற்கு நிமித்த மாயதன்மேல் நின்றது. அதுதான் துறவு வாராது பற்றினை மிகுவித்தல். ``அதற்கு யாதும் கடவேனலேன்`` என்றதனால், `அவரை வென் றொழிப்பேன்` என்றதாயிற்று. ``யானேதும் பிறப்பஞ்சேன் இறப்ப தனுக் கென்கடவேன்``1 என்றார் ஆளுடைய அடிகளும், கூடும் தவம் - கூடுதற்கு ஏதுவாகிய தவம். ஈற்றடியின் இறுதியில், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது. `குருவின்பால் கேட்டு வந்து தவம் செய்த கொள்கையேன் ஆகலான் நான் கடவேனலேன்` என்றதனால், நிரம்பிய துறவுக்குத் தவமும், அத்தவத்திற்குக் குருவருளும் காரண மாதல் பெறப்பட்டது. இக்குரு கிரியாகுரு என்க.
இதனால் துறவு வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே.

பொழிப்புரை :

உழவன் உழவைச் செயதற் பொருட்டு மழை பெய்ய, அதன்பின் அவன் செய்த உழவினால் தோன்றி வளர்ந்து பூத்த குவளை மலரை அது களையாதலின் களைய வேண்டுவதாய் இருக்க, உழவன் தன் மனைவி முதலிய பெண்டிரது கண் போல உள்ளது என்று அதன்மேல் அன்புகொண்டு களையாமலே விடுகின்றான்.

குறிப்புரை :

`உலகப் பற்று அத்துணை வலிதாகின்றது` என்பது கருத்து. இங்ஙனங் கூறுதல் இலக்கிய வழக்காதலால், `உலகப் பற்றின் வலிமையை இலக்கியங்களும் இன்னோரன்னவாற்றால் விளக்கி, அதனை விடுமாறு உணர்த்துகின்றன. என்பதும் குறிப்பாயின. ``உழவு உழ`` என்பது `உழுதலைச் செய்ய` என்றவாறு. `உழவன் உழவு` என்பது காரகப்பொருட்டாய ஆறாவதன் தொகை. ``உழவினில்`` என ஐந்தனுருபாகிய இன் இல்லெனத் திரிந்தமை பிற்கால வழக்கு. ``உழவொழிந்தான்`` என்பதில், உழவு - களைதல்.
இதனால், `கற்றோராயின் உலகப் பற்றினை விடுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இம்மந்திரத்தினையும் பிறிது மொழிதலாகக் கொண்டு இடர்ப்பட்டுரைப்பர்.

பண் :

பாடல் எண் : 7

மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

பொழிப்புரை :

அநாதியே துறவனாய் நிற்கும் இறைவன் அத் தன்மையாலே ஒருவர் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளான். உலகருள் கூற்றுவன் வரும் நாளை யிலராயினா ர்க்கு அவன் தோழனாய் விளங்குகின்றான். ஒரு பொருளிலும் பற்று இல்லாதவனாகிய அவன் `அஞ்ஞானம்` என்னும் இருளின் நீங்கி னவர்க்கு அவன் சிவனாய் வெளிநிற்கின்றான். அதனால், உலகப் பற்றின் நீங்கினவர்க்கே தம்மை அவனது நிலையைப் பெறுதற்குத் தக்கவராகச் செய்து கொள்ளுதல் கூடும்.

குறிப்புரை :

``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``1 என்பதிற்போல, ``மேல்`` என்பது, `முற்காலத்தில் என்னும் பொருட்டாய், அநாதி நிலையை உணர்த்திற்று. `துறந்த அண்ணல்` என்பதில் பெயரெச்சத்து அகரம் தொகுத்தல் பெற்றது. `மேல் துறந்த` என உடம்பொடு புணர்த்ததனால், அதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. `கூற்றுவன் வரும் நாள்` என்றது. `இறப்பு` என்ற வாறு, `தவத்தால் கூற்றங் குதித்தலும் கைகூடும்`2 ஆதலின், கூற்றுவன் நாள் துறந்தார். தவத்தவராயினர். இத்தவம் யோகம். இது ``கூற்றை யுதைக்கும் குறிப்பாதலும்``, இதனை யுடையார்க்குச் சிவன் தோழனா தலும் நினைக. `கருமை` என்பதன் திரிபாகிய `கார்` என்பது இருளைக் குறித்தது. யோகிகட்குத் தோழனாகின்ற சிவன் ஞானிகட்கு உண்மைச் சிவனாதல் அறிக. பார் - பூமி; உலகம் இஃது இதன்மேற் செய்யப்படும் பற்றின்மேல் நின்றது. கார்த்துறந்தார், பார்த்துறந்தார் என்பன ஐந்தா வதன் தொகை. பதம் - பக்குவம். இது, கூற்றுவன் நாள் துறத்தற்கும், சிவனை நண்பனாகவும், சிவனாகவும் பெறுதற்கும் ஏற்கு மாற்றால் பல திறத்ததாம். `இவை அனைத்திற்கும் துறவே காரணம்` என்றவாறு. இதனுள் இன எதுகை, மூன்றாமெழுத் தெதுகைவந்தன.
இதனால், துறவே வீட்டு நெறியின் பல நிலைகட்கும் முதலாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது
போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.

பொழிப்புரை :

(இது பிசிச்செய்யுள்) நாகம், உயிர் ஐந்துபடம், ஐம் பொறிகள். போகம் - உணவு. நான்கு உணவு. அந்தக் கரணம் நான் கினும் நால்வகையாய்ப் புலப்படும் பொருள், முட்புற்று, துன்பம் நிறைந்த உடல். நிறைந்தது, மனநிறைவுபெற்றிருந்தது. ஆகம் - உடம்பு. பாம்பு தோலுரிப்பது ஆதலால், இரண்டுடம்பு உடையதாம். அவை இங்குத் தூலமும், சூக்குமமுமாகிய இரண்டுடம்புகளைக் குறித்தன. அவை படம்விரித்து ஆடல், ஐம்பொறிகளின்வழி ஐம்புலன் களையும் பொதுப்படக் கவர்தலும், பின் சிறப்பு வகையில் உணர்ந்து திரிபு எய்தலுமாம். அவ் ஆடலை ஒழிதல் ஐம்புல அவாவை அறுத் தலாம். ஐந்து படங்கள் இன்றி ஒருபடத்தையே எடுத்தலாவது, மெய்ப் பொருள் ஒன்றையே நோக்குதல். உடம்பே இடமாதல் - புற்றைவிட்டு நீங்கி அருள் தாரமாக நிற்றல்.

குறிப்புரை :

`நாகம் ஒன்று; அதற்குப் படம் ஐந்து; உணவு நான்காய் உள்ளது; முட்புற்றிலே பொருந்தி நிறைவு பெற்றிருந்தது. ஆயினும், பின்பு அது தனக்கு இயல்பாய் உள்ள இரண்டு உடம்புகளோடும் முன் சொன்ன ஐந்து படங்களையும் விரித்து ஆடுதலை ஒழிந்து ஒரு படத்தை எடுத்து வேறோர் உடம்பிடமாக நின்றது` எனப் பிசி வகைக்கு வினைமுடிவு காண்க.
`பசுத்துவம் உடைய உயிர் ஐம்பொறிகளின்வழி அலமந்து துன்பம் நிறைந்த உடம்பினுள் தங்கி வினைப்பயன்களை நுகர்ந்து களித்திருந்தது; ஆயினும், அஃது ஐம்புல அவாவை நீத்த பொழுது திருவருள் நாட்டம் ஒன்றே உடையதாய் அத் திருவருளே தாரமாகநின்று இன்புற்று` என்பது இதனுட் கூறப்பட்ட பொருள்.
``நாகமும்``என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``நாலது`` என்பதில் அது பகுதிப்பொருள் விகுதி. `இரண்டோடும்` என உருபு விரிக்க. `உடம்பே இடமாம்` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றி உரைக்க. அங்ஙனம் உரைக்கவே, `உடம்பு, அருளுடம்பு` என்பது பெறப்படும்.
இதனால், ஐம்புலப் பற்று அற்றவழியே துன்பம் நீங்கி, இன்பம் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றான் எனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

பொழிப்புரை :

துறந்தவரது குடிக்குத் தானே முதல் என நிற்கின்ற சிவபெருமான், `இன்ன வகையினன்` என ஒருவராலும் இனங்கண்டு கூறற்கு எளியனாய் நிற்பானல்லன். அதனால், அவன் அளவற்ற உயிர்களில் நிறைந்து அவையேயாயும் நிற்பன்; அவனது அருள் எவ்வாற்றால்வரும் என்பதையும் நாம் அறியமாட்டோம்.

குறிப்புரை :

குடிக்கு முதலாதலாவது, ``குடிமுழுதாண்டு, வாழ்வற வாழ்வித்து``1 அதனை `சிவக்குடி` என யாவரும் கூற வைத்தல் `சிவன் யாதொரு கூற்றினும் படாதவன்` என்பதை, ``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ``3 என்பது முதலியவற்றான் அறிக. ``சிவன்தான்`` என்பதில் ``தான்`` என்பது தேற்றப்பொருட்டாய், அனுவதித்தலை உணர்த்திற்று. `உயிர்கள் அளவற்றன ஆதலின், அவற்றிற்கு அவன் அருளும் முறைமைகளும் அளவில்லனவாய். நம்மால் அறியவாரா` என்பார் அவன் அளவற்ற உயிர்களில் அவை யேயாய்க் கலந்துநிற்றலை எடுத்தோதினார். இவ்விடத்து, `சிவன் தாள்` எனச் சத்திமேல் வைத்து ஓதுதற்கு இயைபின்மையின், அது பாட மாகாமை அறிக. நயம், `நயன்` எனப் போலியாற்று. `அருள்` என்பது இதன் பொருள். `சிவனது அருள் உயிர்கட்கு வருமாறு இவையே` என வரையறுக்க ஒண்ணாமையை,
``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா`` 1
எனத் திருஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். இங்ஙனம் கூறவே, `இல்லம் துறந்து, வேடம்பூண்டு ஓரிடத்தில் நில்லாது செல்வோரே துறந்தாராவர்` எனக்கொண்டு, `அவ்வாறில்லாத சிலரும் சிவனது அருள்பெற்றமை கேட்கப்படுதல் என்னை` என ஐயுற்றவர்க்கு, `புறத் துறவு இல்லாது அகத்துறவே உணராய்ப் பல்வேறு நிலையில் நிற்பார்க்கும் சிவன் பல்வேறு வகையாய் அருள்புரிதல் உண்டு; ஆயினும் அதுபற்றுதல் இன்றியாகாது` என ஐயம் அறுத்தவாறாயிற்று. `பற்றறாதவழிச் சிவனருள் கூடாது` என்றற்கே முதற்கண், ``அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரான்`` என அருளிச்செய்தார்.
``... ... ... ... அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்று விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றி``2
என்றது, நிறைவான துறவு நிலையை உணர்த்தியருளியவாறு. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், திருவருளுக்குரிய துறவு நிலை தோற்றத்தால் பல வகையினதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும்
ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஓர் ஆம்பற் குழலினுள்ளே, அங்கணத்தை (சலதாரையைத்) திறந்தாற்போலக் காணப்படும், ஒன்பது புழைகளும் அடங்கி அடைபட்டன. அதனால், மாலுமி வெளியே பார்ப்பதற்கு வேறு வழியில்லாமல், வேம்பினால் ஆகிய தன் மரக்கலத்தின்மேலே ஏறியபொழுது பாய்மரத்தைச் சுற்றிய தாமரைக்கொடி ஒன்று அம்மரக் கலத்தின் கூரையில் பூத்தலைக் கண்டான்.

குறிப்புரை :

``ஆம்பற் குழல்`` என்பதும், ``கூம்பு`` என்பதும் முதுகந் தண்டினையும், `ஒன்பது புழைகள்` என்பது உடம்பின் நவத் துவாரங் களையும், ``மீகாமன்`` என்பது உடம்மை நடத்தும் உயிரையும், `தாமரைக் கொடி` என்பது முதுகந்தண்டைச் சூழ்ந்துசெல்லும் சுழு முனா நாடியையும், `அதன்மலர்` என்பது ஆயிரஇதழ் மலரையும் கொள்ள நிற்றலின், இதுவும் பிசிச்செய்யுளாம். `பிராணாயாமத்தால் பிராணன் சுழுமுனையடியில் கும்பிக்கப்பட்ட பின் உடம்பின் நவத் துவாரங்களாலும் காற்றும், அதன்வழி மன உணர்வும் புறப்படா தொழிய அவ்வுணர்வு ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று, ஆயிர இதழில் சத்தியைக் கண்டது` என்பது இம்மந் திரத்தாற் குறிக்கப்பட்ட பொருள். இந்நிலை துறவர்க்கல்லது ஆகாது` என்பது உணர்த்தற் பொருட்டு இஃது இவ்வதிகாரத்துட் கூறப்பட்டது.
``பட்டது`` என்பது பன்மை ஒருமை மயக்கம். ``வேம்பு`` என்பது கருவியாகுபெயராய், `அம்மரத்தாற் செய்யப்பட்ட மரக்கலம்` எனப் பொருள்தந்தது. `உடல் வெறுக்கத்தக்கது` என்பதை உணர்த்த, சந்தனத்தாலாகிய மரக்கலம்` என்னாமல், `வேம்பினால் ஆகிய மரக்கலம்` என்றார்.
இதனால், துறவறம் யோகத்தைப் பயந்து, அது வழியாக ஞானத்தையும், பின் வீட்டையும், தருதல் கூறப்பட்டது.
சிற்பி