ஆறாம் தந்திரம் - 6. தவ தூடணம்


பண் :

பாடல் எண் : 1

தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெறுதற்பொருட்டே தவம் வேண்டப் படுகின்றதாதலின், அந்த ஞானப்பேறு கிடைத்துவிடின், அதன்பின் தவம் வேண்டாததாகும். ஆகவே, சிவயோக சிவபோக நிலையை எய்தினார்க்குத் தவம் கடப்பாடன்றாம். அதனால் சிலவிடத்து, `தவம் வேண்டா` எனச் சொல்லப்படும் சொல்லினது பொருளைப் பலர் அறியமாட்டார்.

குறிப்புரை :

``சமாதி`` என்றது பேற்றை. ``அச் சகமார்க்கம்`` எனச் சிறப்பித்துக் கூறினமையின், அது ஞானகுருவின் அருள்பெற்றபின் நிற்கும் சிவயோகமேயாயிற்று. இதற்குமுன் ``வேண்டா`` என்றது, ``நியதமன்று`` என்றவாறு. அஃதாவது சிவயோக சிவபோக நிலையிற் சென்றார்க்கு உலகியல் உணர்வு தோன்றாது மறைதலின், அவரது தவச் செயல்களும் ``உறங்கினோன்கை வெறும்பாக்கெனத் * தாமே தவிரு மாயின், அஃது அவர்க்குக் குற்றமாகாது என்பதாம். அங்ஙன மாகவே, `அத்தகை யோர் அந்நிலைகளில் நீங்காது நிற்கவே முயலல் வேண்டு மன்றி, மீளத் தவநிலையில் நிற்க முயலுதல் கூடாது` என்பதும், `மீட்சி தானே உள தாயபொழுதே மீள முன்போல உலகியல் வந்து சூழாத வாறு தவ நிலையில் நிற்றல் வேண்டும்` என்பதும் பெறப்பட்டன. இவையெல்லாம் குருவருள் பெற்றார்க்கன்றி அறியலாகாமையின், ``தவம் வேண்டா மாற்றந் தனையறியாரே`` எனக்கூறி, `அதனைக் குரு முகமாக அறிந்துகொள்க` எனக் குறிப்பால் முடித்தார். இறுதியிலுள்ள ``தவம் வேண்டா`` என்னும் தொடர் தன்னையே குறித்துநின்றது.
இதனால், தவம் ஞானத்திற்குச் சாதனமாவதன்றிச் சாத்திய மாகாமை கூறி, அதனது நிலை இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால்
காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால்
சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்
போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.

பொழிப்புரை :

அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாகிய சிவத்தைத் தன் அறிவினுள்ளே ஒருவன் தலைப்பட்டு விடுவானாயின் அதன்பின் அவன் ஞானநூல்களை ஓதவேண்டுவதில்லை. `பர காயம்` எனப்படும் திருவருளையே ஒருவன் தனக்கு நிலைக்களமாகக் கண்டுவிட்டால், பின்பு அவன் தான் அதனின், வேறாய் நின்று அதனைப் பெற அவாவ வேண்டுவதில்லை திருவருள் கண்ணாகச் சிவத்தை அறிந்து அதிலே அழுந்தி நிற்கும் நிலை ஒருவனுக்கு இப்பொழுது கூடுமாயின், அவன் இவ்வுடல் வீழ்ந்தொழிய வேண்டும் என இதனை வெறுக்க வேண்டுவதில்லை. சிவயோக நிலையினின்று மீளுதல் இல்லாதார்க்குப் புலன்கள் வந்து பற்றும் வழிகளாகிய பொறிகள் செயற்படாது கெட வேண்டுவதில்லை.

குறிப்புரை :

`சாத்தியம் கைவந்தபின் சாதனம்வேண்டா என்பதனைப் பல்லாற்றானும் வகுத்துக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 3

கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டா துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டா செயலற் றிருக்கிலே.

பொழிப்புரை :

உண்மை நூல்களின் கருத்தையறிந்து அதன்வழியே அடங்கி விட்டால் பின்பு அந்நூல்களைக் குரல் கம்ம ஓதவேண்டுவ தில்லை. சமாதி நிலை கைகூடிவிட்டால், துதித்தல் வேண்டுவதில்லை. அகத்தூய்மையாகிய பற்றறுதி உண்டாகி விட்டால், நீர் பலகால் மூழ்கல்l முதலிய புறத்தூய்மைக்குப் பெரிதும் முயலவேண்டுவ தில்லை. தன் முனைப்பு அற்று, எல்லாம் சிவச்செயலாக இருந்து விட்டால், ஒரு குறியைத் தியானிக்கும் தியானம் வேண்டுவதில்லை.

குறிப்புரை :

சத்தம் - இசை; பாட்டு; துதி.
இவ் இரு மந்திரங்களாலும் சாதனம் வேண்டாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார்
விளைவறி வார்விண் ணின்மிக் காரே.

பொழிப்புரை :

தொன்று தொட்டு அடிபட்டு வரும் தவம் வாய்மை, அறம் என்பவற்றைச் செய்வார் யாவரும், `அவற்றால் விளையும் பயன் இவை` என உணர்ந்தே செய்வர். அங்ஙனம் அறிந்து அவற்றைக் கடை போகச் செய்து அப்பயனைப் பெற்றவர்கள் விண், மண் என்னும் இரண்டுலகத்து உள்ளாரினும் மேம்பட்டவராவர்.

குறிப்புரை :

மெய்த்தவம் - நிட்காமியத்தவம் எனவும், மெய்யறம் - புகழ், கைம்மாறு முதலியவற்றை நோக்காது அன்பும், அருளும் பற்றியே செய்யப்படுவது எனவும் அறிக. `விளைவறிந்தே செய்வார், விளைவுபெற்று உய்வார்` என்றதனால்` அவ்விளைவை அறிந்து செய்து பெறமாட்டாதாரது சாதனங்கள் தவம் முதலியன ஆகாவாயின.
இதனால், சாத்தியத்தைத் தருவனவே சாதனங்களாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே.

பொழிப்புரை :

சிவனடியார்களோடுகூடி, அவர்கள் செய்யும் தவத்தையே நானும் செய்து, அதன் பயனாகச் சிவனது திருவடியைத் தரிசித்தேன்; பின் அத்திருவடியின்கீழ் இருத்தலாகிய வீடுபேற்றை அடைய விரும்பியே பின்னும் தவத்தைச் செய்து அதனை அடைந்தேன். இவ் இருதன்மைகளையும் நீக்கி வாளா மெய்வருந்தச் செய்யும் தவம் தவமாகாது, அவமாம். ஆகவே, உலகோர் பலர் இவ்இரண்டையும் விரும்பாது பிணங்குவாராயின், அவரை எத்தவத்தோர் என்பது!.

குறிப்புரை :

``சிவகதி கண்டேன்`` என்றதனால் குரை கழலும் அவனுடையதாயிற்று. அவ்விரண்டாலும் கூடுதற்கும், தேடுதற்கும் செயப்படுபொருள் இவையென்பது விளங்கிற்று. `இவை களைந்து செய்வது ஏதம்` என மாற்றுக. பிணங்குதல், இந்நெறியொடு மாறுபட்டுப் பிறவாறு செய்தல். ``எத் தவத்தோர்`` என்பது, `யாதொரு தவத்தையும் உடையரல்லர்` என்பது குறித்து நின்றது.
இதனால், `சிவநெறி வழிபடாது செய்வன தவமாகா` என அவைகளது இகழ்ச்சி கூறப்பட்டது. ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு``3 என்றார் ஔவையாரும்.

பண் :

பாடல் எண் : 6

மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

பொழிப்புரை :

மனத்தின்கண் நிறைந்து நிற்கின்ற ஆசையாகிய பெரிய எழுகடல்களைக் கையாலே நீந்திக் கடந்து தவத்தில் நிற்பவரே தமக்கு என்றும் சார்பாகும் மெய்ப்பொருளை அடைவர். அது மாட்டாதே தவம்செய்து பிறவியில் அழுந்துவோர் மேற்குறிய அத் தவத்தோரை வழிபடுவாராயின், அவர் சிவனைத் தம் கண்முன் னாகவே காணுதலும் கூடும்.

குறிப்புரை :

``மனத்துறை மாகடல் ஏழ்`` என்பது அற்புத உருவகமாய் ஆசையைக் குறித்தது. அதனை முற்றும் விடுத்த அருமை தோன்ற, ``கை நீந்தி`` என்றார். தவம் இன்னதென்பது மேற்கூறப்பட்ட மையின், வாளா, ``தவத்திடையாளர்`` எனவும் அஃதல்லாத பிற செயலாளரை ``பவத்திடையாளர்`` எனவும் கூறினார். ``அவர் பணி கேட்கின் முந்தலும் ஆம்`` என்றது, `கேளாதவழி முந்துதல் கூடாது` என வலியுறுத்தவாறு. இதனானும், முன்னை மந்திரத்தில் ``கூடி`` என்றது, `சிவனடியாரோடு கூடி` என்றதே எனல் விளங்கும். இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், `மேற்கூறியதவமும் ஆசையறாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து
புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.

பொழிப்புரை :

உள்ளமாகிய உறையிலே உள்ள ஞானமாகிய வாளை உருவி ஐம்பொறிகளாகிய பசுக்களைப் பிணித்துள்ள ஆசை யாகிய கயிற்றை இரண்டு துண்டாய் அறும்படி அறுத்து அவைகளை ஏனைப் பசுக் கூட்டத்தினின்றும் நீக்கி, அப்பசுக்களோடு தாமும் கொல்லையிற் சென்று மேயாதபடி அவற்றை மடக்கி வைத்தல் ஒருவனுக்கு கூடுமாயின், தவத்தில் தோன்றுவனவாகிய ஆறு ஒளிகளும் அவனுக்கு உரிய ஒளிகளாகிப் பயன் தரும்.

குறிப்புரை :

`அது கூடாதபொழுது அவனது தவம் ஒளியில்லாது, இருளேயாம்` என்றபடி, ``மதிவாள்``, ஏகதேச உருவகம். ``புனத் திடைப் போகாமல்`` என்றதனால், ``அஞ்சு`` எனப்பட்டவை `பசு` என்பது விளங்கிற்று.
`பார்ப்பா னகத்திலே பாற்பசு ஐத்துண்டு``l என ஐம்பொறிகளைப் பசுக் களாகப் பின்னும் கூறுதல் காண்க. ஆறு ஒளி - ஆறு ஆதாரங்களில் தோன்று இறையொளி. `ஐம்புல ஆசையை அறுத்தவர்க்கே யோகமும் தவமாய்ப் பயன்படும்` என்பது உணர்த்தி, `அது செய்யாதாரது யோகம் தவமன்றாம்` என இகழ்ந்தவாறு.
இதனால், `மேற்கூறிய எழுகடல் போலும் ஆசை ஐம்பொறி களின்வழிப் பெருகித் துன்புறுத்துமாகலின், அவற்றை அடக்காதாரது தவம் தவமன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது. இதன் பின்னிரண்டடிகள்,
``நினைத்த இடத்தே நிலைபெறுமாகில்
அனைத்துயிர்க் கெல்லாம் அதிபதி யாமே``
என்பது பாடமாகவும் காணப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 8

ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

பொழிப்புரை :

அவரவரது பரிபாகநிலைக்கு ஏற்ப அவரோடு இயைந்து நீங்காது நின்று அருளுபவனாகிய இறைவனை அவனுக்கு அடியராய் நின்று வாயார வாழ்த்துதல் அவன்பால் பக்தியை மிகுவிக்கும். ஐம்பொறி யடக்கல் முதலிய நோன்புச் செயல்கள் அவர் முனிவராம் நிலையை நிலைபெறுவிக்கும். இறைவனை அடிபணிந்து தொண்டுகள் பலவும் செய்து நிற்றல் முத்தியைத் தரும்.

குறிப்புரை :

அவை முத்திதரும் `என்றால், அவற்றுள் ஒன்றும் அன் றாகிய தவம் என்னதவம்` என்பது குறிப்பு. `அடியாராய்` என ஆக்கம் வருவிக்க. அடியாராதலாவது, ``பாரம் ஈசன் பணியலது ஒன்றிலர்`` 8 ஆதல், இறுதிக்கண் வைக்கற்பாலதாகிய இது செய்யுள் நோக்கி இடையில் வைக்கப்பட்டது. சத்து - நிலைபேறு ``தான்`` இரண்டும் அசை நிலைகள் `சத்தானவையாகவேச் செய்வது` என ஆக்கம் விரித்து உரைக்க. முனிவர் நிலை பலவாதல் பற்றி, ``சத்தானவையாக`` என்றார். தவம், இங்கு நோன்பு. அதுதான் செயல் வகையாற் பலவாயினும், `நோன்பு` என ஒன்றாய் அடங்கல் பற்றி ஒருமையாற் கூறினார்.
இதனால், `ஒத்து நின்றானை ஒருவாற்றானும் அணுகாத தவம் தவம் அன்றாம்` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

பொழிப்புரை :

தலையாய நூல்களை அறியும் முன் நான் சிவனுக் கென்று கருதியே பச்சிலையைக் கிள்ளியும், பூவைப் பறித்தும், சில மலர்களைத் தொடுத்தும் பணிபுரிந்தேன். ஆயினும் அவற்றால் யாதொரு பயனும் விளையக் காணவில்லை. அந்நூல்களை அறிந்த பின் சிவனிடத்தே என் உள்ளம் குழைந்து நின்றது அதனால், சிவத்தைத் தலைப்பட்ட அனுபவத்தை அடைந்தேன். ஆகவே, நான் தவத்தை உணர்ந்தவாறு அதுவேயாயிற்று.

குறிப்புரை :

`பச்சிலையும், பூவும் முதலியன கொண்டு வழி படுதலும் அறிவின்வழிப் பட்டபொழுதே உண்மைத் தவமாம்` என்பது இதனுட் கூறப்பட்டது.
``கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடையார்`` l
எனவும்
``பன்னும் பனுவற் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே`` 8
எனவும் வந்தனபோல்வன காண்க. இரண்டாம் அடியில், `தொடுத்து` என்பது, ``தொட்டு`` என மருவிநின்றது. `வளைத்துக்கட்டி` எனினுமாம். கொள்ளுதல் மேற்கொள்ளுதல். அதற்கு, `பணி` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. பலன், உலகியலின் வேறானதோர் அனுபவம். அஃது அறிவில்வழி உளதாகாது என்பதாம். தலைதொட்ட - தலை யாய இடத்தில் பொருந்திய. ஈற்றில் நின்ற தலை, சிவம். `அதுவே தவங்கண்டவாறு` என எழுவாய் வருவித்து முடிக்க.
இதனால், `மேற்குறித்த தவந்தானும் அறிவோடு கூடாதவழித் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.

பொழிப்புரை :

விரிந்த சடைமுடியோடு பெரிய தவத்தை மேற் கொண்ட அடியவர்க்கு யாதொரு துன்பமும் வாராதவாறு இறைவன் தனது அருளை வழங்குவன். அவ்வருளைத் தெளியாது தமக்குத் துன்பம் வராமல் மணி மந்திர ஔடதங்களால் காப்புச் செய்து கொள்வ தில் காலம் போக்குவாரது தவ நிலையை நோக்கின் அது, துன்பம் வந்து அடையும் வழியைத் தாமே ஆக்கிக்கொள்வதோர் பித்தச் செயலாகவே முடியும்.

குறிப்புரை :

தவ ஒழுக்கத்தோடு தவவேடமும்பூண்டாரது நிலை சிறப்புடையதாகலின், அநநிலையுடையாரை, ``மாதவம் பற்றிய பத்தர்`` என்றார். இதனானே, ``சடை` என்பதில் தொக்குநின்ற உருபு, `அன்போடு வரவேற்றான்` என்பதுபோலத் தவம் மேற்கொள்ளு தலைச் சிறப்பித்து நின்றமை விளங்கும். மாதவம் பற்றிய பத்தர்க்கு இடர் அடையா வண்ணம் ஈசன் அருளுதலை, அருச்சுனற்குப் பன்றி யால் இடர் வாராவண்ணம் காக்கச் சென்றமை முதலிய வரலாறுகளும், நாவுக்கரசருக்குச் சமணர்கள் விளைத்த இடர்கள் அவரை யாதும் செய்யாதொழிந்தமைமுதலிய அனுபவங்களும் இனிது விளங்கும். விடர் - பிறப்பு; அது தவத்தின் வேறாய செயல்களை குறித்தது. ``அடை`` இரண்டும், `குடல் - குடர்` என்பதுபோல லகரத்திற்கு ரகரம் போலியாய் வந்தன. ``உடர்`` என்பதும் முதனிலைத் தொழிற் பெயர்கள், ``உடம்போடுயிரிடை நட்பு`` l என்பதில், நட்பு அல்லாத கூட்டத்திளை `நட்பு` என்றதுபோல, மெய்த்தவம் அல்லாத தவத் தினை ``மெய்த்தவம்`` என நகை உள்ளுறுத்துக் கூறினார். உன்மத்தம் போல்வதனை ``உன்மத்தம்`` என்றார்.
இதனால், `திருவருளைத் தெளியாது மணிமந்திர ஔடதங்களால் நலனடைய முயல்வாரது தவம் தவமாகாது` என அதன் இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :

நூல்முறைமையை அறியாதவர் பசி, வெயில், மழை முதலியவற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு தவத்தைச் செய்யமாட்டாராய், இல்லறத்தார் இடும் சோறு முதலிய வற்றைப் பெற்றுப் பிழைத்தற்பொருட்டுத் துறவு நிலையிற்புகுந்து தவத்தவர்போல வேடம்பூண்டு திரிதல், யாற்றில் ஒருதுறைக்கண் முதலை இருத்தலைக் கண்டு அஞ்சி அதனைவிட்டு நீங்கி, மற்றொரு துறைக்கண் குட்டிகளை ஈன்ற கரடி அக்குட்டிகளோடு குளித்துக் கொண்டிருத்தலை யறியாது அதன்கண் இறங்கி அக்கரடியினிடத்து அகப்பட்டாற்போல்வதாம்.

குறிப்புரை :

யாறு வாழ்க்கைக்கும், முதலை உள்ள துறை தொழில் முயற்சியோடு கூடிய இல்லறத்திக்கும், ஈற்றுக் கரடியுள்ள துறை நோன்றலோடு கூடிய துறவு நிலைக்கும் உவமையாயினவாறு அறிக. நோற்றல் - நோன்றல்; பொறுத்தல்.
இதனால், `உள்ளத்தால் தவத்தவராகாது, புறத்தே வேட மாத்திரையால் தவத்தவர்போல நிற்பாரது போலித்தவம் முடிவில் துன்பமே பயத்தலல்லது, சிறிதும் இன்பம் பயலாது\\\' என அதனது இகழ்ச்சி கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும்
குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

பொழிப்புரை :

தவ உணர்வாகிய பழம் பழுத்தற்பொருட்டும், பின் அத்தவத்தால் அனுபவம் பெறுதலாம் அப்பழத்தை உண்ணுதலைச் செய்தற் பொருட்டும், பிராணவாயுவாகிய இளங்கன்று துள்ளிச் சென்று அப்பழம் வைக்கப்பட்டுள்ள மனமாகிய அந்தக்கோணியில் புகுந்து அப்பழத்தைத் தின்றுவிடாதபடி - அஃதாவது தவ உணர்வைப் போக்கிவிடாதபடி - அதனைப் புருவ நடுவாகிய கொட்டிலில் கட்டி வைக்க வல்லவர்க்கு யாதொரு மனக் குற்றமும் உண்டாகாது; உள்ள மாகிய வயலில் ஊன்றுதற்கு ஞானமாகிய ஒப்பற்ற வித்தும் கிடைக்கும்.

குறிப்புரை :

`பழம் பழுக்கின்றவாறும்\\\' என மாற்றி உரைக்க. \\\"ஆறு\\\" இரண்டிலும், `ஆற்றுக்கும்\\\' என நான்காவது விரிக்க. `புல்காது\\\' என்னும் எதிர்மறைவினையெச்சம் ஈறுகெட்டு நின்றது. \\\"இட\\\" என்றதனால், \\\"நெஞ்சம்\\\" என்பது நெஞ்சமாகிய வயல்\\\' எனக் குறிப் புருவகம் ஆயிற்று. ஆகவே, \\\"ஒன்று\\\" என்றது விதை யாயிற்று. `விதை யாவது ஞானமே\\\' என்பது ஆற்றலால் பெறப்பட்டது. \\\"ஒன்றும்\\\" என்னும் உம்மை சிறப்பும்மை. வீடுபெற உணரும் உணர்வு ஒன்றே சாதனநிலையில் `தவம்\\\' எனவும், சாத்திய நிலையில் `ஞானம்\\\' எனவும் நிற்கும் என்பது மேலும் குறிக்கப்பட்டது அதனால் தவம்பழமாகவும், ஞானம் அதனாற் கிடைக்கும் வித்தாகவும் உருவகிக்கப்பட்டன.
இதனால், பிராண வாயுவை அடக்கிப் புருவ நடுவில் நிறுத்தி மனோலயம் பெறமாட்டாது அவ்வாயுவும், மனமும் சென்றவாறே செலவிடுவாரது தவம் நிலையாது\\\' என அதனது இகழ்ச்சி அதன் எதிர்மறைக்கண் வைத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

பொழிப்புரை :

ஒருவர்க்கு அவரது உள்ளம் சிவமேயானபொழுது அவருக்குச் செய்யக் கடவ தவம் யாதும் இல்லையாம். அவரைப் போல உள்ளம் சிவமாய்ச் சிவானந்தத்திலே திளைத்திருக்கப் பெற்றோரது உறவே அவருக்கு உண்டாகும்; பிறரது உறவுகள் யாவும் அற்றொழியும். சித்தியும், வீடுபேறும் அவர்க்கு எளிதின் உளவாம். ஆகையால், உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகும்.

குறிப்புரை :

\\\"ஆக\\\" என்னும் செயவெனெச்சம், `உண்ணப் பசி தீரும்\\\' என்பதுபோலக் காரணப் பொருளில் வந்தது. எனவே, அஃது எதிர்காலத்தில் இறந்த காலமாம். `அவர்க்கு உண்டாம்\\\' எனக் கோடற் பொருள் வருவிக்க. \\\"உறவாவார் உருத்திரபல் கணத்தினோர்கள்\\\' 3 என்று அருளிச் செய்ததும் காண்க. \\\"சித்தி முத்தி\\\", உம்மைத் தொகை. மூன்றாம் அடியின் இறுதியில், `ஆகலான்\\\' என்பது எஞ்சி நின்றது. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை \\\"சிவமாதல்\\\" என்பதனோடு கூட்டியுரைக்க. அங்ஙனம் உரைக்கவே `அப்பயனைத் தாராத பிற தவங்கள் தவமல்ல\\\' என்பது போந்து, அதிகாரப் பொருளை உணர்த்துவதாம்.
இதனால், `சித்தத்தைச் சிவமாகச் செய்யம் பெருந் தவம் அல்லாத சிறு தவங்கள் தவமாகா\\\' என அவற்றது இகழ்ச்சி கூறப்பட்டது. இதனானே சித்தத்தைச் சிவமாகச் செய்வனயாவும் தவமாம் என்பதும் பெறப்படும்.
சிற்பி