ஆறாம் தந்திரம் - 7. அருளுடைமையின் ஞானம் வருதல்


பண் :

பாடல் எண் : 1

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே.

பொழிப்புரை :

(இதன் பொருள் வெளிப்படை)

குறிப்புரை :

பிரான் - சிவபிரான். நற்செல்வம் - அறத்தாற்றின் வரும் செல்வம். நன்ஞானம் - ஐயமும், திரிபும் இல்லாத மெய்ஞ் ஞானம். பெருந்தன்மை - வியாபக நிலை `தெய்வம்` என்றது, தெய்வ நிலையை. பெருந்தெய்வ நிலைகளாவன அயன் மால் உருத்திரரது நிலைகள். இதனானே, `மந்திகேசுரர், அணுசதாசிவர்` என்போரது நிலைகளும் உளவாதலை இனம் பற்றிக்கொள்க. ``அருளின்`` இரண்டும், `அருள் பண்ணினால்` என்றவாறு. ``அருள் உண்டெனின் உண்டு`` எனவும், ``அருள் பண்ணினால் உண்டு`` எனவும் கூறியதனால், `அவை இல்லையாயின் யாதும் இல்லையாம்` என்பது போந்தது,
``அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு``
-அற்புதத் திருவந்தாதி - 9
அம்மை திருமொழியும் காண்க.
இதனால், சிவன் அருள் செய்தவழியல்லது யாதும் உளதாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தமிழ்மண் டலம்ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகர் திரிவார்
அவிழும் மனமும் ஆதி யருளும்
தமிழ்மண் டலம்ஐந்தும் தத்துவ மாமே.

பொழிப்புரை :

`சேர மண்டலம், சோழமண்டலம், பாண்டி மண்டலம், கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் தமிழ்வழங்கும் மண்டலம் ஐந்திலும், மிகப் பரந்த ஞானத்தை உணர்த்துவார்போலப் பிற நாட்டவர் புகுந்து திரிவார்கள். ஆயினும், அம்மண்டலம் ஐந்திலும், `உயிர்களின் அன்பு, இறைவனது அருள்` என்னும் அவ்இரண்டுமே பொருளாக விளங்குகின்றன.

குறிப்புரை :

`ஆதலின், அவற்றை அறியாத பிறர் தமிழ் மண்டலத் தின் உள்ளார்க்கு உணர்த்தும் சீரிய ஞானம் யாது மில்லை` என்றபடி, பிறநாட்டில் காசுமீரம் போன்ற சிறிதிடத்தில் சைவ சித்தாந்தம் ஓரளவு வழங்கப்படுகின்றதாயினும், அது தொன்று தொட்டு இன்றும் இனிதே விளக்கமுற்று நிற்பது தமிழ்நாட்டிலேயாகலானும், சைவ சித்தாந்தம், உயிர்கள் தம் பரிபாகத்திற்கு ஏற்பச் செய்யும் அன்பிற்குத் தகச் சிவன் அவைகள் மாட்டு அருளுடையனாய் ஞானத்தை வழங் குவன்` என்பதை முடிநிலைப் பொருளாகக் கூறுத லானும், `அதனை யறியாத பிறநாட்டவர் தமிழ் நாட்டவர்க்கு உணர்த்த இருக்கும் தத்துவம் யாதுளது? என்றார். ``வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு`` l என்பது முதலிய பண்டை நிலைக்குப் பின் நாயனார் காலத்தில் தமிழ் மண்டலம் ஐந்தாயிற்று என்க.
இரண்டிடத்தும் ``ஐந்தும்`` என்பதில் ஐந்தன்கண்ணும் என உருபு விரித்து, ``திரிவார்`` என்பதனோடும் ``ஆம்`` என்பதனோடும் முடிக்க. அறிவு - ஞானம்; அஃது அருளேயாதல் அறிக. `ஆதி அருளும்` என்றே பாடம் ஓதுதலுமாம் ஈற்றடியையும், `தமிழ்மண் டலம் ஐந்தின் தத்துவ மாமே` ஓதுதல் சிறக்கும்.
இதனால், `இவ் அதிகாரப் பொருள் தமிழ் நாட்டிலே உள்ள இணையிலா உயர்பொருள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

புண்ணியம் பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேரறுத் தப்புறத்
தண்ணல் இருந்திடம் ஆய்துகொள் ளீரே.

பொழிப்புரை :

உலக வாழ்க்கையில் `நல்வினை, தீவினை` என்று இருவினைகளின் தோற்றமும், பயனுமே உள்ளன. அத்தோற்றம், பயன் என்பவற்றை அவை நிகழுங்காலத்தே தெளிய அறிபவர் சில ஞானியரே, அதனால், நீவிர் அந்த ஞானியர் வழிநின்று அவற்றைக் கருதியுணர்ந்து, அவ்வினைகளையும் அடியோடு போக்கி, அவற் றிற்கு அப்பால் இறைவன் இருக்கின்ற இடத்தை ஆராய்ந்தறியுங்கள்.

குறிப்புரை :

`அப்பொழுது ஞானம் வரும்` என்பது குறிப்பெச்சம். [``புண்ணிய பாவம்`` எனத் தொகையாக ஓதுதல் பாடமாகாமை அறிக.] `வினை உளதாய்ப் பயன் தருதலை உலகர் உணரார்; ஆதலின், நீவிர் உலகர் வழியிற் செல்லாது, அறிவர் வழியிற் செல்க` என்பார், ``நண்ணும் பொழுதறிவார் சில ஞானிகள்`` என்றார். ``பொழு தறிவார்`` என்றது, `பொழுதிடத்தே நேர்பட அறிவார்` என்றவாறு.
``நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்`` 3
என்றவாறு, உலகியல் வினைவழிப்பட்டதேயாக, மெய்ந்நெறி அவ் வினை வழிக்கு அப்பாற்பட்டதாகலின் அதனை, ``அப்புறத்து அண்ணல் இருந்திடம்`` எனவும் ``அவ்விடமாவது அருளேயாகலின், அதனை ஆய்ந்துணர்ந்து அடைய ஞானம் வரும் என்பார், ஆய்ந்து கொளீரே`` எனவும் கூறினார். `இருந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. `இருப்பிடம்` என்பதும் பாடம். வினையை அடி யோடு அறுத்தலாவது. அதற்கு முதலாகிய விருப்பு வெறுப்புக்களை விடுதல். விருப்பு நல்வினைக்கண்ணும், வெறுப்பு, தீவினைக்கண்ணும் நிகழ்வன. அவ்விரண்டையும் விடுத்து இரண்டன் கண்ணும் ஒப்ப நிற்றலையே `இருவினை ஒப்பு` என்பர், இதனை,
``ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்``l என்றாற் போலும் இயல்புகளால் விளக்குவர். இருவினையொப்பின்றி இறைவனது அருளைப் பெறுதல் கூடாமை யின், ``இரண்டையும் வேரறுத்து - அண்ணல் இருந்திடம் ஆய்ந்து கொளீரே`` என்றார்.
இதனால், அருளுடைமை வருமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

முன்னின் றருளும் முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.

பொழிப்புரை :

அடியேனுக்கு என் கண்முன் நின்று முத்தியை அளித்தருளிய சிவன், இருவினை நீங்கிய காலத்து அங்ஙனம் நீங்கப் பெற்றார்க்கு யாதானுமோராற்றல் கண்முன் நின்றே அருளை வழங் குவன். வினையில்லாத நன்மை பொருந்திய குழாத்தினர்க்கு உயிர்க் குயிராய் இருந்தே அருளை வழங்குவன். யாவர்க்கும் அருள் வழங்கிய பின்னும் அவ்அருள் நிலையினின்றும் வழுவாதவாறு பாதுகாப்பன்; அப்பாதுகாப்பின் பயனாக முடிவில் பிறவியை நீக்கிவிடுவான்.

குறிப்புரை :

நாற்றோள் முதலிய தனது இயற்கை வடிவோடு வெளி நிற்றல், குருவாய் வந்து, நோக்கல், தீண்டல், உரைத்தல் முதலியவை களைச் செய்தல் இரண்டையும், `முன்னின்று அருளுதல்` என ஒன்றாக அடக்கினார். இவை இரண்டும் முறையே `பிரளயாகலர், சகலர்` என்பவர்க்கு அருளும் முறையாக ஆகமங்கள் வரையறுக்கும். முடி தலுக்கு, `இருவினை` என்னும் எழுவாய் முன்னை மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `நன்மை` என்னும் பண்புப் பெயர் ஈறு குறைந்து நின்றது. மேல்வினை முடிகின்ற காலத்து என, அருளுக்கு வினை தடையாய் நிற்றலைக் கூறினமையின், நன்மை, அத்தடையில்லாமை யாயிற்று. `நன்னின்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. உலகு - உயிர்தொகுதி. `வினையில்லாத உயிரினத்தார் விஞ்ஞான கலர்` என்பது வெளிப்படை. நடுவுயிர் - உள்ளுயிர். `மூவகை உயிர்கட்கும் மூவகையாக அருளுதலை நியதமாக ஆகமங்கள் கூறுதல் பெரும்பான்மை பற்றி` என்பதையும் `சிறு பான்மை` கீழுள்ளார்க்கும் மேலுள்ளார்க்கு அருளுதல்போலவே அருளுதல் பரிபாக முதிர்ச்சியான் உண்டு` என்பதையும்,
``பண்டைநல் தவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும்
தொண்டரைத் தானே தூய கதியினில் தொகுப்பன்`` *
என்னும் சிவஞான சித்தியாலும், அதற்குச் சிவாக்கிர யோகிகள், சிவஞான யோகிகள் இருவரும் உரைத்த உரைகளாலும் உணர்க.
``ஈன்றுபுறந் தருதல் என்றலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே``l எனச் சிறப்புப் பற்றிக் கூறப்பட்டதாயினும், உடலைப்புறந்தந்து காத்தல், உறுதி கூறி நிற்றல் என்னும் இரண்டும் முறையே தாயர்க்கும், தந்தையர்க்கும் எஞ்ஞான்றும் கடனாயிருத்தல் கண்கூடு. ஆயினும், `உடல் தாய் தந்தையர்க்கு அவற்றைக் கடைபோகச் செய்தல் கூடாதாயினும், உயிர்த்தாய் தந்தையாகிய இறைவன் தான் ஆட்கொண்ட உயிரைக் காத்தலை எஞ்ஞான்றும் கடனாகக் கொண்டிருக்கின்றான்` என்பார், ``பின்னின்று அருளும்`` என்றார். `பின்னும், என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
``அனாதி சிவனுடைமை யால்எவையும் ஆங்கே
அனாதிஎனப் பெற்ற அணுவை - அனாதியே
ஆர்த்த துயரகல அம்பிகையோ டெவ்விடத்தும்
காத்தல் அவன்கடனே காண்``
எனவும்,
``உடனா யிருக்கும் உருவுடைமை என்றும்
கடனாயிருக்கின்றான் காண்``3
எனவும் அருளிச்செய்தன காண்க. `முடிவில் பிறவியை நீக்கும்` என ஒருசொல் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் உயிர்கட்கு அருள் செய்யுமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடிற் சிவலோக மாமே.

பொழிப்புரை :

சிவனது அருளாலே சிலர், தேவர் பதவியை வேண்டின் அவற்றையும் பெறுவர். சிலர் அதனால் மக்களுடம்பில் நின்றே தெய்வங்களோடு ஒத்த ஆற்றல் பெற்று விளங்குவர். எனினும், சிவனது அருளால் சிறப்பாக வினை நீக்கம் உண்டாதலால், சிவனது அருள் ஒருவர்க்கு உண்மையாகக் கூடிற்றுஎன்றால், அதன் பயனாக அவர்க்குச் சிவலோகமே கிடைக்கும்.

குறிப்புரை :

உம்மை சிறப்பும்மை. `சேரகிலாமையால்` என உருபு விரிக்க. `சிவனருள் கூரின்` என்பதும்பாடமாகலாம். ``கூறின்`` என்பது பாடமன்று.
இதனால், சிவனருளின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவ ராவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே.

பொழிப்புரை :

அற வடிவினனும், எம் தந்தையுமாகிய சிவபிரானது இரு திருவடிகளை அடைந்ததனாலே, இருளை நீக்கி ஒளிரும் விளக்குப்போல்வதாகிய ஞானம்எனக்கு உண்டாயிற்று. இல்லையேல் உண்டாக மாட்டாது. யாவராயினும் மக்களாய்ப் பிறப்பதோ அல்லது தேவராய்ப் பிறப்பதோ சிவனருள் வாய்க்கப் பெற்றபோதேயாம்.

குறிப்புரை :

`அவ்வாறான பொழுது ஞானியாதல் அவனது அருளின்றி எங்ஙனம் ஆகும்` என்பது கருத்து. `சிவன்` என்னும் சொல்தரும் பொருள்களுள், `தூயதன்மையன்* என்பதும் ஒன்றாக லால், ``புனிதன்`` என்றது `சிவன்` என்றவாறு. ``நண்ணி`` என்னும் செய்தெனெச்சத்தை, `நண்ண` எனச் செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்க. விளக்கு, பயன் பற்றிவந்த உவமை. பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.

பொழிப்புரை :

`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.

குறிப்புரை :

காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுல கத்தே அரனடி கூடுவர்
அவ்வுல கத்தே அருள்பெறு வாரே.

பொழிப்புரை :

`சரியை, கிரியை, யோகம்` என்னும் இவற்றின் பயனாகச் சிவலோகவாசிகளாய் அங்குத்தோன்றினும் அங்ஙனம் தோன்றினோர் ஞானத்தைப் பெறுதற்கு அவ்வுடம்பொடு நின்று அங்கே அரிய தவத்தைச் செய்ய விரும்புவர். அத்தவத்தின் பயனாக ஞானத்தைப் பெற்றுச் சிவனடியையும் சேர்வர், அதற்குச் சிவனது அருளை அவர் முன்னர்ப் பெறுதலுடையவரேயாவர்.

குறிப்புரை :

``ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர்
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம்
ஒடுங்குமபோ தான்முனிவா தொழியினுற்பவித்து
ஞானநெறியடைந்தவர் சிவனை``
எனவும்,
``அங்கு நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற்றாளே`` 8
எனவும் உணர்த்தினமை காண்க.
இதனால், `எத்தகையோரும் தவத்தால் சிவனருளைப் பெற்றே ஞானத்தைப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கதிர்கண்ட காந்தம் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாம்
சதிர்கொண்ட சாக்கி சரியன் வடிவாம்
எதிர்கொண்ட ஈசன் எழில்வடி வாமே.

பொழிப்புரை :

சூரியனைக் கண்ட சூரியகாத்தக்கல் நெருப்பு வடிவாய் நெருப்பை உமிழும். சந்திரனைக் கண்ட சந்திரகாந்தக்கல் முத்துப்போலும் நீர் வடிவாய் நீரை உமிழும். பெருமைபொருந்திய கண் ஆடி எதிர்ப்பட்ட வழியின் வடிவாம். சிவனை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட உயிர்கள் அந்தச் சிவன் வடிவேயாம்.

குறிப்புரை :

`கண்ணோடு கூடியது` என்னும் பொருட்டாகிய `சாக்ஷி` என்னும் வடசொல், இங்கு `சாக்கி` எனத்தற்பவமாயிற்று. கண்ணுக்கு உதவியாக அணியப்படும் ஆடியை `உபநேத்திரம்` என்பர், அது வழியை நன்கு தெரிவிப்பதாய் அவ்வழிவடிவாய் நிற்கும், சரி - வழி, `எரியின் வடிவாம்` என்பது பாடமன்று. ``எதிர் கொண்ட`` என்பது அன்பெறாத அகர ஈற்றுப் பலவறி சொல், அஃது உயிர்களைக் குறித்து நின்றது. ``ஈசன்`` எனப் பின்னர் வருகின்றமை யின், வாளா, `எதிர்கொண்டன` என்றார். இங்கும், `எரிகொண்ட` என்பது பாடமன்று. ஈசன் வடிவு அவன் அருளேயாதல் அறிக. இறைவனை உணரும் உயிர் அவனது அருள்வடிவாதல் இனிது விளங்குதற்குக் கதிரவனை எதிரேற்ற சூரிய காந்தக்கல் முதலியவற்றை ஒப்புமைக் கூட்டமாக உடன் வைத்து விளக்கினார்.
இதனால், இறைவனை அருளைப் பெற்ற உயிர் அடையும் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
வீடு மளவும் விடுகின் றிலேனே.

பொழிப்புரை :

நாட்டில் உள்ளார் பலரோடும், மற்றும் எனக்கு உற்றாராய அவரோடும் அளவளாவி, `எங்கள் சிவபெருமான் யாண்டுளன்` என்று தேடுவேன்; அத்தேடுதலுக்கு அவன் அகப்படா தொழியான் ஆதலின், அவன் அகப்பட்ட இடத்தில் `சிவபெருமான் கிடைத்தான்` என்று மகிழ்ந்து அவனோடு சேர்வன். சேர்ந்தபின் என் உயிர் பிறவிடத்தன்றி அவனது திருவடியிலே சென்று சேர்தற் பொருட்டு இந்த உடம்பு அழியும் வரையில் அவனை விடாதே பற்றிக்கிடப்பேன்.

குறிப்புரை :

`நீவிரும் அவ்வாறு செய்ம்மின்` என்பது குறிப்பெச்சம். ``நாடு`` என்றது அதில் உள்ளாரையும், ``உறவு`` என்றது அதனை உடையாரையும் குறித்தன. `நாட்டோடும், உறவோடும்` என உருபு விரிக்க. அளவளாவுதல் சிவன் இருக்குமிடத்தை அறிதற்கு.
``தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை`` **திருவாசகம் - திருச்சதகம் 31
எனவும்,
``வியந்தாங்கலறித் - தேடிற்றிலேன்
சிவன் எவ்விடத்தான் எவர்கண்டனர் என்று`` 3
எனவும் ஆளுடைய அடிகள் அருளிச்செய்தமையும் காண்க. ``சிவபெருமான்`` என்பதற்கு முன்னும், பின்னும் `கிடைப்பின், கிடைத்தான்` என்னும் சொற்கள் எஞ்சிநின்றன வீடுதற்கு வினைமுதல் உடலாதல் வெளிப்படை. உடம்பு உள்ள காலத்து அதன்வழிப்பட்டு வேறொன்றைப் பற்றியிருப்பின் அதுநீங்குங்காலத்து உயிர்முன் பற்றியிருந்த பொருளையே அடையுமாகலானும், அவ்வாறன்றி அக்காலத்தில் இறைவனையே பற்றியிருப்பின் அது நீங்கியபொழுது உயிர் அவனையே அடைந்து விடும் ஆகலானும், ``வீடு மளவும் விடுகின்ற லேனே`` என்றார். நாயனார் சிவனை விடாது பற்றி நின்றவரேயாதலின், ``தேடுவன்`` என்றும், ``தேடிக்கூடுவன்`` என்றும் கூறியது, `விட்டொழிவேமோ` என்னும் அச்சத்தால், `ஒருகால் விடநேரினும் மீளவும் விரையப் பற்றுவேன்` என்றதாக உரைக்க. என்னை?
``பெறாஅமை அஞ்சும்; பெறிற்பிரி வஞ்சும்;
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு``*
என்பது காதலர் இயல்பாதலின்.
இதனால், `சிவபிரானது திருவருளை வேண்டுவார் அஃது ஒன்றையே நாடி முயலுதலும், முயன்று பெறின் பின்னர் விடாமையும் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
சிற்பி