ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்


பண் :

பாடல் எண் : 1

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

பொழிப்புரை :

முயலாது வைத்து வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதித் தவத்தவரது பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகாள், உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீவிர் அதற்கியைய உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நிற்குமாற்றால் சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடைத்தாம்.

குறிப்புரை :

``ஆடம்பரங் கொண்டு`` என்பதை, ``வேடங்கள் கொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. `உண்பான்` என்பது தொழிற் பெயராய் நின்றது, `உண்பான் ஏன்` என்பது முதலிய வற்றிற்போல. `பயனாக` என்னும் ஆக்கச் சொல் எஞ்சி நின்றது. `பாடியும்` என உம்மையைத் தொகாது. ஓதுதல் கூடாமை அறிக.
இதனால், அகத்துணர்வோடு கூடாத வேடத்திற்குப் பயன் புறத்தாரை வெருட்டுதலல்லது பிறிதில்லை என்பதும், அதனால், அத்தன்மையான வேடத்தைக் கொள்ளுதல் அறியாமையாம் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஞானமில் லார்வேடம் பூண்டிந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
ஆன நலங்கெடும் அப்புவி ஆதலால்
ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

``ஞானமில்லார் பூண்டு`` என்றதனால், வேடம் ஞான முடையர்க்குரிய வேடமாயிற்று. ``இந்த நாட்டிடை ஈனம் செய்து`` என்றது, `இழிசெயலுக்கு நாணுதலுடைய ஞானியர் மிக்கு வாழும் இந்தநாட்டின்கண் நாணுதல் சிறிதும் இன்றி இழிசெயல்கின்றவர்` எனப் பொருள் தந்தது. ``இந்தநாடு`` என்றது நமது பரத கண்டத்தை. `எப்புவியிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்` என ஒருசொல் வருவித்தே உரைக்க. புவி - நாடு. இஃது, ``இந்த நாட்டை`` எனச் சுட்டியதன் உட்பகுதியைக் குறித்தது. ஆன நலம் - உண்டான. நன்மை `ஈனர்` என்பதில், ஓர் அகரம் விரித்தல் பெற்றது. ``எப்புவி யிருப்பினும் அப்புவி ஆன நலங்கெடும்`` என்றதனால், `ஈனரது வேடத்தை அகற்றுவிக்கற்பாலார் அந்நாட்டில் வாழ்பவர்` என்பது போந்தது. இன்பம் தருவதனை, ``இன்பம்`` என்றார்.
``எவரேனும் தாமாக இலாடத் திட்ட`` என்னும் திருத் தாண்டகம் இதனோடு முரணாமை மேல் ``வேட நெறியில்லார்`` என்னும் மந்திரத்து உரையில் விளக்கப்பட்டது. இதன் மூன்றாம் அடியில், `மான நலங்கெடும்; வையகம் பஞ்சமாம்` என்பதும் பாடம்,
இதனால், போலி வேடத்தாரை அறிந்து அகற்றுதல் அறிவுடையார்க்குக் கடனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள
நன்செயல் புன்செய லால்அந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே.

பொழிப்புரை :

`ஒருநாட்டில் வாழும் மக்களிடத்துள்ள நற்செயல் தீச்செயல்களாற்றானே அந்த நாட்டிற்கு இன்பமும், துன்பமும் உளவாவன` என்று அறிந்தோர் கூறவர். ஆதலால், அரசனாவான் தனது நாட்டில் நிகழும் நற்செயல் தீச்செயல்களை நாள்தோறும் சோர்வின்றி ஆராய்ந்து தீச்செயல் செய்யாதவாறு மக்களைத் திருத்து வானாயின், அவனது நாடு துன்பமின்றி, இன்புற்று வாழும்.

குறிப்புரை :

`ஆதலால் அரசன் அதனை ஒருதலையாகக் செய்க` என்பது குறிப்பெச்சம். போலி வேடத்தாரை அகற்றுதல் சிறப்பாக அரசற்குக் கடமை என வலியுறுத்துவார். அரசு முறைமையைப் பொதுப்பட எடுத்தோதினார். முதல் தந்திரத்துள் இதனையே அரசு முறை பற்றிக் கூறுதற்கண் பல மந்திரங்களால் நாயனார் விரித் துரைத்தமை காண்க.
`நாடு நன்றாவதும், தீதாவதும் அதன்கண் வாழும் மக்களது இயல்பானே` என்பதை,
``நாடா கொன்றோ, காடா கொன்றோ,
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே`` *
எனச் சங்கத்துச் சான்றோராய ஔவையாரும் கூறினார்.
இதனால், `போலி வேடம் தலைகாட்டாதபடி செய்தல் சிறப்பாக அரசற்குக் கடன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இழிகுலத் தார்வேடம் பூண்பர்மேல் எய்த
அழிகுலத் தார்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே.

பொழிப்புரை :

தாழ்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலர், ஒழுக்கத்தால் உயர்வெய்த நினையாமல், எளிதில் மேன்மையைப் பெறுதற் பொருட்டுத் தவவேடத்தைப் புனைந்து கொள்வர். உயர்ந்த குலத்திற் பிறந்தவர்கள் சிலரும் அக்குலத்திற்கு ஏற்ற ஒழுக்கமுடை யராய் நிற்கமாட்டாமையின் அக்குலத்தன்மை அழியப்பெற்று அந்நிலை நீங்கிக் கடவுளராக வைத்துப் போற்றப்படும் மிக உயரந்த நிலையைப் பெறுதற் பொருட்டுத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். இவ் இரு சாராரும், தொன்று தொட்டே பழிபாவங்களையுச் செயது பாழ்பட்டுவரும் கொடியராயினார் நாட்டுவாழ் குலத்தோரி னின்றும் நீக்கப்பட்ட குலத்தராயினாற் போலவே அரசு முறைமையுள் நாட்டு வாழ்க்கையினின்றும் நீக்கப்பட்டனர்.

குறிப்புரை :

`வழிகுலத்தோர்` எனின் மோனை சிதைதலானும், பொருள் படாமையானும் அது பாடமாகாமை அறிக. ``தேவாக`` என்ற தனால், இது `பூசுரர்` எனப்படுவாரை உட்கொண்டு கூறிய தாயிற்று. பழிகுலம் - பழிக்கப்பட்டு வரும் குலம். இப்பழி, அருள் வடிவின வாகிய ஆக்களை அஞ்சாது கொல்லும் தொழிலுடைமை பற்றிப் பழிக்கப்படும் பழியாம். இக்குலத்தவரை, `சண்டாளர்` என்றலும் இது பற்றி `இவர் நாட்டில் ஏனையோரோடு கூடிவாழ்தற்கு உரியரல்லர்` என்பது பண்டை அரசுமுறை. அதனால், `அம்முறையே போலி வேடத்தார்க்கும் உரித்தாகற்பாலது` எனக் கூறுமுத்தால், போலி வேடம் பூண்பாரது கொடுமையை விளக்கினார்.
``நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்`` 3
என்றார் திருவள்ளுவ நாயனாரும், `கழிகுலத்தோர்கள் போல` என உவமஉருபு விரிக்க போலி வேடத்தால் உளவாகும்
தீமைகள் பல. அவற்றுள் உண்மை வேடத்தாரையும் உலகம் ஐயுறச் செய்தலும் அது காரணமாக உண்மை வேடம் தோன்றாது போதலும் தலையாய தீமைகள், `அதனால் அது குறிக்கொண்டு களையற்பாலது` என நாயனார் பல்லாற்றானும் வலியுறுத்துகின்றார்.
``இவ்வேடர் - கொத்துக் கெலாமோர்
கொடும்பழியைச் செய்தீரே``*
என்னும் கந்தபுராணச் செய்யுளில், ``இவ்வேடர் கொத்து`` என்றதற்கு, `இத் தவவேடம் உடையராது கூட்டம்` என்பதே உட்பொருளாக உரைப்பர். அதனானும் போலி வேடத்தது கொடுமையை உணர்ந்து கொள்க.
மூன்றாம் அடியை, `பாசண்டாரனார்` எனப்பாடம் ஓதி, `சமயத் தலைவர்போல வேடம் பூண்டும் அத்தலைமைக் குணம் இல ராய்ப் பழிக்கப்படும் கூட்டத்தினர் மக்களால் விலக்கப்பட்ட கூட்டத் தினராய், அரசனாலும் களையப்பட்டார்` என்று உரைத்தலும் ஆம்.
இதனால், `அரசன் தன் குடிகளில் உள்ளாரை இங்ஙனம் கழித்தல் கூடுமோ` என்னும் ஐயத்தையகற்றி, அது முறையாமாறு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவம் செய்தவர் புண்ணிய ராகாரேல்
பொய்த்தவம் மெய்த்தவம் போகஉண் போக்கியம்
சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.

பொழிப்புரை :

அகத்தே தவ உணர்வின்றிப் புறத்தே பொய்யாகத் தவவேடத்தை மட்டும் கொண்டு நடித்தவர் புண்ணியராகாது பாவிகளேயாவர் என்பது உண்மையாயின், அச்செயலுடையார் மறுமையில் நரகம் புகுதலும் உண்மை. இனி அவலரது நடிப்பிற்குப் பயன் மெய்த்தவம் இல்லா தொழிய பொய்த் தவத்தால் இம்மையிற் சிறிது இன்பத்தை நுகர்தலும், மறுமையில் பெரிய நரகத் துன்பத்தை அடைதலுமேயாம். ஆகையால் உண்மையான அகத்துணர்வாலே தவம் உளதாகும்; பொய் வேடத்தால் உளதாகாது.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதற்கண் வைத்து உரைக்க. மூன்றாம் அடியை, `போகத்துட் போக்கியம்` என ஓதுதல் பாடமன்று. ஈற்றில் நின்ற பிரிநிலை ஏகாரத்தை, ``ஞானத்தால்`` என்பதனோடு கூட்டுக. ``ஞானம்`` என்று இங்குத் தவ உணர்வை,
இதனால், போலி வேடம் மறுமையில் நரகம் பயத்தல் கூறப்பட்டது.
``தவம்மறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று`` l
என்றதனால், `போலி வேடம் புனைதல் உயிர்க்கொலை செய்த லோடொத்த தீவினைச் செயல்` எனத் திருவள்ளுவரும் குறிப்பால் உணர்த்தினார். அதனால், `அவர் நரகம் புகுதல் அவர்க்கும் உடன் பாடு` என்பது பெற்றாம்.

பண் :

பாடல் எண் : 6

பொய்வேடம் பூண்பர் பொசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர் மிகுபிச்சை கைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தார்க்கே.

பொழிப்புரை :

சிலர் தொழில் செய்யாது மடிந்திருந்து வயிறு வளர்க்கக் கருதியே பொய்யாகத் தவ வேடத்தைப் புனைந்து கொள்வர். (`அவர் இல்வாழ்வாரை மருட்டியும், வெருட்டியும், ழிந்த பிச்சையை, நீக்காது ஏற்று உண்டு வாழ்வர்.) மெய்யாகவே தவ வேடத்தைப் பூண்பவர் இல்வாழ்வார் அன்போடு அழைத்து இடும் உயரிய பிச்சையையே ஏற்பர். (இவையும் அவ்இருசாராரையும் அறிதற்குக் குறியாம்.) தோற்றத்தில் பொய்வேடமும் மெய்வேடம் போலவே பூணப்பட்டாலும், உணர்வோடு கூடாத பொய் வேடம் அவர்க்கு உய்தற்கு ஏதுவாய வேடமாகாது கெடுதற்கு ஏதுவாய வேடமாக,) தவத்தினது பெருமையை உணர்ந்து அதனைப் பூண்டு நிற்போர்க்கே அஃது அவர் உய்தற்கு ஏதுவான வேடமாகும்.

குறிப்புரை :

மிகு பிச்சை - உயர்வுடையதாய பிச்சை உயர்வு அன்பொடு கூடிநிற்றல். `மெய்வேடம் பூண்பார் கொள்ளும் பிசை உயர் பிச்ை\\\\u2970?` எனவே, `பொய் வேடம் பூண்பார் கொள்ளும் பிச்சை இழி பிச்ை\\\\u2970?` என்பது போந்தது. `மெய் வேடம் பூண்டார் இல்வாழ்வார் வருந்தாது மகிழ்ந்து இடக் கொள்ளும் பிச்சை. வண்டு, மலர் வருந்தாது அதனிடத்துள்ள தேனை உண்டல் போல்வது` என்றற்கு அதனை, `மாதூகரி பிச்ை\\\\u2970?` என்பர் வடநூலார். ``பூணினும்`` என்பது `பூணப்பட்டாலும்` எனச்செயப்பாட்டு வினைப்பொருள் தந்தது. இனி, `பொய்வேடத்தை` என இரண்டாவது விரிப்பினுமாம். `அறிந்தோர்க்கே உய்வேடமாம்` என்றதனால், `அறியாத பொய் வேடத்தார்க்கு அஃது உய்வேடமாகாது, கெடுவேடமாம்` என்பது விளங்கிற்று. ``உய்வேடம்`` என்பதற்கு, `அப்பொய்வேடம் ஒழிதற் குரிய வேடமாம்` என்றுரைப்பினுமாம். ``உணர்ந்தறிந்தோர்`` என்ற ஒருபொருட் பன்மொழிகள் அவற்றதுகாரியமாகிய மெய் வேடத்தினையும், அதற்கேற்ற ஒழுக்கத்தையும் குறித்தன.
இதனால், `போலிவேடமும் உண்மை வேடத்தோடு ஒத்துத் தோன்றினும், செயலாலும், பயனாலும் அவை தம்மில் பெரிதும் வேறுபட்டனவாம்` என்பது கூறுமுகத்தால், போலிவேடம் தவ வேடமாகாது அவவேடமாதல் உணர்த்தப்பட்டது.
சிற்பி