ஏழாம் தந்திரம் - 1. ஆறாதாரம்


பண் :

பாடல் எண் : 1

நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும்
கோலின்மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலங்கண் டாங்கே முடிந்த முதல்இரண்டும்
காலங்கண் டான்அடி காணலும் ஆமே.

பொழிப்புரை :

ஆறு ஆதாரங்களுள் மூலாதாரம் முதலிய ஐந்தனையும் முதலில் நன்கு தரிசித்து, அதன்பின் ஆறாவதாய் உள்ள ஆஞ்ஞையைத் தரிசிக்கும் பொழுது சிவனது திருவடியைத் தரிசித்தல் கூடும்.

குறிப்புரை :

``நாலு`` முதலாகக் கூறப்பட்டவை ஆதார தாமரைகளை அவற்றின் இதழ் எண்ணாற் கூறியனவாம். ``முதல்`` என்பது `தலைமை` என்னும் பொருட்டாய் ஆஞ்ஞை ஆதாரத்தை உணர்த்திற்று. `முதல் இரண்டும்`` - என்பதன்பின் `காண` என ஒரு சொல் வருவித்து, அதனை ``மூலம் கண்டாங்கே`` என்பதற்கு முடிவாக் குக. `மூலம் கண்டவாறே காண்க` என்பதனால் மூலாதாரத்தை முதலில் கண்டமை அநுவாத முகத்தாற் கூறப்பட்டது. கோல், முதுகந் தண்டு. அதன்மேல் உள்ளது விசுத்தி.
இதனால் ஆதார யோகத்தின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈராறு நாதத்தில் ஈரெட்டாம் அந்தத்தின்
மேதாதி நாதாந்த மீதாம் பராசத்தின்
போதா லயத்து அவிகாரந் தனில்போதம்
மேதாதி ஆதார மீதான உண்மையே.

பொழிப்புரை :

பிரணவ கலைகளில் பன்னிரண்டளவும் ஏறிக் காணின், நாதத்தளவும் செல்லலாம். பதினாறளவும் ஏறிக் காணின், நாதத்தைக் கடக்கலாம். மேதை முதலாக நாதாந்தம் ஈறாக உள்ள கலை களுக்கு மேல் உள்ளது பராசத்தியே. அந்த சத்தி ஞானமயமானது; விகாரம் அற்றது. அதுவே ஞானத்தைப் பெறும் இடமாகும். மேதை முதலாகச் சொல்லப்படுகின்ற பிராசாதகலா யோகத்தின் உண்மை இதுவாகும்.

குறிப்புரை :

இதன் விளக்கங்களை மூன்றாம் தந்திரத்துள் `கலை நிலை` என்னும் அதிகாரத்திற் காண்க. `போத ஆலயத்து அவிகாரந்தனில் போதம் உளது` என்க. பிராசாத யோகத்தின் பயன் ஆதார நிராதாரங்களைக் கடக்கும் முறையால் பராசத்தியே வடிவமாகப் பரசிவன் நிற்கும் இடமாகிய மீதானத்தை அடைதலும், அங்ஙனம் அடைதலாலே பரமபந்தமாகிய நாதத்தையும் கடந்து ``சேவுயர் கொடியினான்றன் சேவடி சேர்தலும்`` (சிவஞான சித்தியார், சூ.1) ஆகும் என்றபடி. இதன் முதல் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால் பிராசாத யோகத்தின் முடிநிலை இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேலென்றும் கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்றும் நானென்றும் தன்மைகள் ஓராறும்
பாரெங்கு மாகிப் பரந்த பராபரன்
காரொன்று கற்பக மாகிநின் றானே.

பொழிப்புரை :

நிராதாரத்தையும் கடந்து மீதானத்தில் பாரசத்தியைத் தலைப்பட்ட வழி ஏகதேச உணர்வு நீங்கி வியாபக உணர்வு எய்தப் பெறும். அவ்வுணர்விலே சருவ வியாபகனாகி சிவன் இனிது விளங்கித் தனது எல்லையில் இன்பத்தை இனிது வழங்கி நிற்பன்.

குறிப்புரை :

``கீழென்று`` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. ``இரண்டறக் காணுங்கால்`` - என்பதை ``நானென்றும்`` என்பதன் பின்னர்க் கூட்டிப் பொருள் கொள்க. ``தன்மைகள்`` - என்றது, ஆதார நிராதாரங்களில் நிகழ்ந்த அனுபவங்களை, ``கார் ஒன்று`` - என்பதில் `ஒன்று` உவம உருபு. கார் - மேகம். கற்பகத் தருவை, `கார் போலும் கற்பகம்` எனச் சிறப்பிக்கும் முகத்தால் `கார்போலவும், கற்பகம் போலவும் நிற்பான்` - எனக் குறித்தார். ``கார் ஒன்றோ` - எனப் பாடம் ஓதி, `ஒன்றோ` - என்பதை `எண்ணிடைச் சொல்` என உரைப்பினும் பொருந்தும், ``ஆகி நின்றான்`` - என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆள்வாரிலி மா டாவேனோ``(தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 7) - என்பதிற் போல `நின்றான்`` - என எதிர்காலம் தெளிவு பற்றி இறந்தகாலமாகக் கூறப்பட்டது. இம்மந்திரமும் மேல் உள்ள மந்திரம் போல உயிரெதுகை பெற்று வந்தது.
இதனால் பிராசாத யோக முடிநிலைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆதார சோதனை யால்நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கரணம் புந்தி
சாதா ரணம்கெட்டாற் றான்சக மார்க்கமே.

பொழிப்புரை :

ஆதார யோகத்தால் எய்தும் பயன் நாடிகள் சுத்தியாகி, அமுதம் நிரம்பப் பெறுதலே, (அதனால் மனம் ஒருங்கிய தியான சமாதிகளே உண்டாகும்,) ஆகவே, பிராசாத யோகத்தில் பதினாறாவது கலைக்கு அப்பால் உள்ள மீதானத்திற்றான் மேல் உள்ள மந்திரத்தில் கூறியவாறு `சிதாகாசம்` எனப்படுகின்ற பராசத்தியின் விளக்கம் உள்ளது. ``போதாலயம்`` என மேற் கூறப்பட்ட அதனை அடைந்து ஐம்புலன்களும், நாற்கரணங்களும், சீவ போதமும் என்னும் இவற்றின் குறும்புகளாகிய பெத்தம் நீங்கினால் தான் `சகமார்க்கம்` - என்னும் யோகம் முற்றியதாகும்.

குறிப்புரை :

எனவே, `பிறவாறாக வரும் யோகங்கள் எல்லாம் நிறைவு பெறாத யோகங்களே` என்றபடி. ``சுத்திகள்`` - என்பதன் பின், `எய்தும்` என்னும் பயனிலையும் ``விண்ணொளி`` என்பதன்பின் `உளது` - பயனிலையும் அவாய் நிலையாய் நின்றன. `அப் போதா லயத்து` எனச் சுட்டு வருவித்துக் கொள்க. `ஆலயத்துக் கெட்டால்` என இயையும், அஃது ஏழாம் வேற்றுமைத் தொகை. சாதாரணம் - பொதுவியல்பு. உயிர்கட்குப் பெத்த நிலை பொதுவியல்பும், முத்திநிலை உண்மை யியல்பும் ஆதலை நினைவு கூர்க.
இதனால் பிராசாத யோக முடிநிலைப் பயனது சிறப்பு ஏனை யோகப் பயன்களின் சிறப்பின்மையோடு ஒருங்கு வைத்து உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேதாதி யாலே விடாதோம் எனத் தூண்டி
ஆதார சோதனை அத்துவ சோதனை
தாதார மாகவே தான்எழச் சாதித்தால்
ஆதாரம் செய்போக மாவது காயமே.

பொழிப்புரை :

மோதாதி கலைகளின் வழியே பிரணவ நினைவை இடைவிடாது வளர்த்து, அதனாலே ஆதார சோதனை அத்துவ சோதனைகளைச் செய்தால், உணர்வு மிகுதலே யன்றி, உடம்பும் விரைவில் வீழ்ந்தொழியாது சீவபோகத்தைத் தலைப்படுதற்குத் துணையாய் நெடிது நிற்கும்.

குறிப்புரை :

`சோதனை` எனினும், `சுத்தி` எனினும் ஒக்கும். பிராசாத யோகத் தானங்களில் ஆறத்துவாக்களும் அடங்கி நிற்கும் முறையைப் பிராசாத நூல்களிற் காண்க. தாதாரம் ஆக - அதுவே பற்றுக் கோடாக, தான் - ஆன்மா. அஃது எழுச்சி பெறுதல் உணர்வினாலேயாகலின் அவ்வுணர்வினது எழுச்சியை ஆன்மாவின் எழுச்சியாகக் கூறினார். `காயம் போகம் செய் ஆதாரம் ஆவது` - என மாற்றிக் கொள்க. போகம் - சிவபோகம்.
இதனால், `பிராசாத யோகம் ஏனை யோகப் பயன்களையும் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆறந் தமும்கூடி ஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலே
ஊறிய ஆதாரத் தோரெழுத் தாமே.

பொழிப்புரை :

`உடம்பு ஆறாதாரங்களோடே அமைந்தது` - எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் மேற் கூறிய ஏழாந் தானமும், அதற்குமேல் உள்ள நிராதாரமும் ஆகிய அவைகளையும் தரிசிக்கக் கடவீர். ஏனெனில், ஆறாதாரங்களில் அடங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் காரிய எழுத்துக்களேயாக, காரண எழுத்தாகிய பிரணவம் அந்தக் காரண நிலையிலே நிற்கும் இடம் அவைகளே யாகலின்.

குறிப்புரை :

எனவே அதனை உணராதவழி உயிருணர்வு பாச ஞானம் ஆகாது பதிஞானமாய் நிற்றல் கூடாது` என்றபடி. ``ஆதாரம்` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க, ஆறுதல், அடங்குதல். ஊறுதல் - அடிநிலையாய் நிற்றல். ``ஆதாரத்து`` என்பதனை ``மேல்`` என்பதன் பின்னர்க் கூட்டுக.
இதனால் பிராசாத யோகத்தின் மேல்நிலையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆகும் உடம்பும் அகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

பொழிப்புரை :

தூலதேகம் தோன்றுதற்கு முதலாயுள்ள சூக்கும தேகமும் இறுதியில் அழிவதேயாம். இனிக் காரியமாதல் பற்றி அநித்திய மாதல் தெளிவுற நிற்கின்ற தூல தேகம் சூக்கும தேகத்தோடு இயைந்து நின்று அறிவும் செயலும் உடையதாதல் காரிய எழுத்துக்களாகிய ஐம்பதனாலேயாகும். ஆகவே சூக்குமதேகத்திற்கும் ஆறாதாரங்களின் இயைபு உள்ளதே.

குறிப்புரை :

`அதனால், ஆதார யோகத்தை இகழற்க` - என்பது குறிப்பெச்சம். `காரணமாதல் பற்றியே - நித்தியம் - என மலையற்க` என்றற்கு அழிகின்ற அவ்வுடல்` என்பதனைக் கூறினார். `உடலே` என்னும் தேற்றேகாரம் தொகுக்கப்பட்டது. தத்துவம்` - என்பது இங்கு எழுத்தின்மேல் நின்றது. இதன்பின் `ஆதலின்` என்பது வருவிக்க. ``ஆம்`` என்றது, `உரியன` என்றவாறு.
இதனால், ஆதார யோகத்தின் இன்றியமையாமை வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆய மலர்இன் அணிமலர் மேலது
வாய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்த மாகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.

பொழிப்புரை :

ஆராய்ச்சிக் கருவியாகிய மனத்திற்கு இடமாய் உள்ள இருதய தாமரையாகிய இனிய அழகிய மலரின் மேல் உள்ள தாகிய ஓர் ஆதாரமாய் நிற்கும் இதழ்கள் பதினாறும் அவ்விடத்திலே உள்ளன. அதனை அடைந்த அறிவே மாசு நீங்கிச் சிவத்தோடு கூடி அதன் ஆனந்தத்தைப் பெற்று பின் அந்தச் சிவத்தின் வேறாய் நில்லாது ஒன்றாய் நிற்கும் முடிநிலையை எய்தும்.

குறிப்புரை :

இருதயத்திற்குமேல் உள்ள ஆதாரம் விசுத்தி. அதனை அடையும் யோகமே ஆதார யோகத்தின் முடிநிலைக்கு அணித்தாவது ஆதலின், அதற்குக் கீழ் நிற்கும் யோகமெல்லாம் `யோகம்` எனப் படாது என்றற்கு இவ்வாறு கூறினார். விசுத்தி பற்றிய விளக்கத்தைத் தந்து, அதன் பின்னர், ``தூய அறிவு`` என்றமையால், அதனை அடைந்த அறிவு` என்பது பெறப்பட்டது. முடிநிலையை அடைதலை `விளைதல்` - எனக் கூறினார். ``மேலது`` என்பதன் ஈற்றுக் குற்றிய லுகரம் கெடாது நின்று உடம்படு மெய்பெற்றது. உம்மை இரண்டனுள் முன்னது இறந்தது தழுவிய எச்சம். பின்னது முற்று.
இதனால், `யோகத்தைக் கடைபோகச் செய்யாவிடின் அஃது யோகமாய்ப் பயன் தராது என்பது கூறப்பட்டது.
சிற்பி