ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்


பண் :

பாடல் எண் : 1

கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கையிரண் டெட்டும் பரந்தெழும்
தேடும் முகம்ஐந்தும் செங்கயல் மூவைந்தும்
நாடும் சதாசிவ நல்லொளி முத்தே.

பொழிப்புரை :

சதாசிவ வடிவம் இரண்டு திருவடி, பத்துக் கை, ஐந்து முகம், முகம் ஒன்றற்கு மூன்று கண்களாகப் பதினைந்துகண் இவற்றை உடையதாகும்.

குறிப்புரை :

கூடிய பாதம் - இணைந்து காணப்படும் பாதம். படி மிசை பாடிய - உலகத்தில் புகழ்ந்து போற்றப்படுகின்ற. கண் அருளைப் பொழிதலால் சத்தியாதல் பற்றி ``கயல்`` என்றார். `சதாசிவமாகிய நல்ல ஒளியும், முத்துமாய தன் வடிவம்` என்க. ஒளியும், முத்தும் ஆகு பெயர்கள். நல் ஒளி` என்றதனால் இம்மூர்த்தம் ஒளியுருவே யாதல் விளங்கும். முத்து, மாணிக்கம், வயிரம் என்பன உயர்த்துக் கூறும் சொற்களாதல் வழக்கு, நோக்கியறிக.
இதனால் சதாசிவ லிங்கத்தின் வடிவு கூறப்பட்டது.
``நாலுகொ லாம்அவர் தம்முக மாவன`` -தி.4 ப.18 பா.4
எனவும்,
``அஞ்சினாற் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னீரே``
-தி.4 ப.26 பா.5
எனவும் அப்பர் அருளிச் செய்தன இச் சதாசிவ மூர்த்தத்தை நோக்கியேயாம்.
``சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி`` -தி.6 ப.32 பா.6
``மனோன்மனியைப் பெற்ற - தாயிலான்`` -தி.5 ப.91 பா.1
என்ற அவரது திருமொழிகளையும் நோக்குக.

பண் :

பாடல் எண் : 2

வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.

குறிப்புரை :

ஆகவே, சதாசிவ மூர்த்தத்தை வழிபடவே சிவபேதம் அனைத்தையும் வழிபட்டதாம் என்பது பெறப்பட்டது.
சிவபேதம் ஒன்பது. அவை `நவந்தரு பேதம்` எனப்படும். அவை அனைத்தும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
விந்துவும், நாதமும், `விந்து, பரவிந்து - நாதம், பரநாதம்` எனத் தனித்தனி இரண்டாகும். அவற்றுள் சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை, `சத்தி, சிவம்` என்றும், சில இடங்களில் விந்து நாதங்களை, `சத்தி, சிவம்` என்றும் கூறும் வழக்கம் சிவாகமங்களில் உள்ளது. இங்குப் பரவிந்து பரநாதங்களே அவ்வாறு கூறப்பட்டன.
சதாசிவத்திற்கு மேல் உள்ள நான்கும் அருவம். கீழ் உள்ள நான்கும் உருவம். நடுவில் உள்ள சதாசிவம் அருவுருவம், அருவம், உருவம் என்னும் இருதன்மையையும் உடைமையால் சதாசிவ மூர்த்தம் அனைத்து மூர்த்தமாயும் உள்ளது. இஃதே பற்றிச் சேக்கிழார் நாயனார்,
``காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்``
-தி.12 சாக்கிய நாயனார் 8
என அருளிச் செய்தார். சாதாரணம் - பொது.
இதனால், சதாசிவ லிங்கமே அனைத்து லிங்கமும் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

பொழிப்புரை :

அறிவு மாத்திரமாய் நிற்கின்ற சிவத்தினின்றும் செயல் வடிவாய்த் தோன்றுகின்ற சத்தியின் ஒருகூறு தோற்றமுறையில் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளாகின்ற ஆதார சத்திகளாய் நிற்கும். அந்தச் சத்திகளினின்றும் `இலயம், போகம், அதிகாரம்`, என்னும் ஆதேய சத்திகள் ஏற்ற பெற்றியால் தோன்ற, அந்தச் சத்திகளிலே சிவம் அதுவதற்கு ஏற்றவாற்றால் பொருந்தி நிற்க, அதன்பின் அந்த இலயம் முதலிய சத்திகளாலே அனைத்துலகங்களும் தோன்றும்.

குறிப்புரை :

முதலடிக்கண் வருவித்துரைத்தன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.
சாந்தியதீதை முதலிய ஐந்து சத்திகளாவன, `சாந்தியதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்பன. இவற்றுள் முதல் இரண்டு கலைகளில் இலயசத்தி தோன்றும். நடுவில் உள்ள ஒன்றின் முற்கூற்றில் போகசத்தி தோன்றும். அதன் பிற்கூற்றிலும், ஏனை இரு கலைகளிலும் அதிகார சத்தி தோன்றும். சத்தியை, ``கதிர்`` என்றார். அவற்றுள் சிவன் இலய சத்தியில் `சத்தன்` எனவும், போக சத்தியில் `உத்தியுத்தன்` எனவும், அதிகார சத்தியில், `பிரவிருத்தன்` எனவும் பொருந்தி நிற்பான். அங்ஙனம் பொருந்தி நின்று அச்சத்திகளை அவன் தூண்டுதலினாலே உலகங்கள் தோன்றி நின்று விளங்கும். அனைத்துத் திசைகளையும் எண்ணியவழி அவை பத்தாம் ஆதலின் ``அத்திசை பத்து`` என்றார் `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அதன்பின் `ஆகும்` என்பது அவாய்நிலையாய் நின்றது, அமர்தலுக்கு, `சிவம்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.
இதனால், சதாசிவமே உலகிற்கு முதலாதல் கூறப்பட்டது. அஃதே சிவபேதம் அனைத்தும் ஆதலை முன்னை மந்திரத்துட் கூறியதனைக் கருதுக.

பண் :

பாடல் எண் : 4

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.

பொழிப்புரை :

பத்துத் திசைகளாய் அமைந்த அந்த உலகத்துள்ளே தான் வேதங்களின் ஆறு அங்கங்களும், அந்த அங்கங்கட்கு முதலாகிய நான்கு வேதங்களும், அந்த வேதங்களின் பொருளைச் சரியை முதலிய நான்கு பாதங்களாய் நின்று தெளிய உணர்த்துகின்ற சிவாகமங்களும் பொருந்தி நிற்கின்றன.

குறிப்புரை :

``திசை`` என்றதனால் அவற்றை உடைய உலகம் பொருளுலகமாதல் விளங்கும். ஆறங்கம் முதலியன சொல்லுலகம் ஆதல் வெளிப்படை. எனவே உலகம் இங்ஙனம் இருவகைத்தாதல் விளங்கும். இவை முறையே `அத்தப் பிரபஞ்சம், சத்தப் பிரபஞ்சம்` என வடமொழியில் சொல்லப்படும். `முன்னர்க் கூறிய உலகத்துள் பின்னர்க் கூறிய உலகம் விளங்குகின்றது` என்றதனால் அதனையும் சிவனே சத்தி வாயிலாகத் தோற்றுவித்தல் பெறப்பட்டது.
கீழ் நின்றும் கூறும் முறையால் ஆறங்கம் முதற்கண் கூறப் பட்டன. அவையாவை `சிட்சை, வியாகரணம், கற்பம், நிருத்தம், சோதிடம், சந்தோ விசிதி` - என்பன.
அவற்றுள் சிட்சை வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறையை விளக்கும். வியாகரணம் - வேத மொழிகளின் இலக்கணத்தைக் கூறும். நிருத்தம் - வேத மொழிபற்றிய பல விளக்கங்களைத் தரும். சோதிடம் - வேதத்திற் சொல்லப்பட்ட கருமங்களை இயற்றுதற்குரிய கால வகைகளைக் கூறும். கற்பம் - சூத்திர வடிவில் அமைந்து வேதத்தில் சொல்லப்பட்ட கருமங்களைச் செய்யும் முறைகளை விவரிக்கும். அவை ஆசுவலாயனர், போதாயனர், ஆபத்தம்பர் முதலிய முனி வர்களால் செய்யப்பட்டன. சந்தோவிசிதி - வேத மந்திரங்களுக்கு எழுத்துக் கணக்கில் சொல்லப்படுகின்ற சந்த வகைகளை விளக்கும். இவை வேதங்களை நன்கு உணர்தற்குக் கருவி நூல்கள் ஆகையால் இவற்றை உணராவிடில் வேதங்களால் பயனடைய இயலாது.
`சரியையாதியோடு கூடிய சமயம் அத்திசைக்குள்ளே அமர்ந்தன` என்க. இடை நின்ற சில பதங்கள் தொகுத்தலாயின, ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவத்தின் மேல் நின்று. ஆகு பெயராய் அதனை உணர்த்தும் ஆகமங்களைக் குறித்தன. `அவ் ஆகமங்களில் சொல்லப்பட்ட சரியை முதலிய நான்கும் மேற்கூறிய உலகத்திலே நிகழ்வன` என்பதை ``அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார்.
இதனால், சதாசிவமே மேற்கூறிய பொருளுலகம் போலச் சொல்லுலகங்களையும் தோற்றுவித்து உயிர்கட்குப் பயன்பட வைத்தல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சமயத் தெழுந்த அவத்தையீ ரைந்துள
சமயத் தெழுந்த இராசியீ ராறுள
சமயத் தெழுந்த சரீரம்ஆ றெட்டுள
சமயத் தெழுந்த சதாசிவந் தானே.

பொழிப்புரை :

முன்னை மந்திரத்தில் தலைமை பற்றி, `சமயம்` என்றே சொல்லப்பட்ட சைவ சமயத்தில் இறைவனுக்கு அவத்தைகள் பத்துச் சொல்லப்படுகின்றன. (அவத்தை - நிலை, அவை நவந்தரு பேதங்களுள் மேல் நிற்கும் நான்கொழிய ஏனை ஐந்தும் `அணுபட்சம், சம்புபட்சம்` எனத் தனித்தனி இவ்விரண்டாவனவாம்.)
உலகத்தில் சூரியன் முதலிய கோள்கள் இயங்கும் இராசிகள் பன்னிரண்டு சொல்லப்படுதல் போலச் சைவத்தில் இறைவன் தானங்கள் பன்னிரண்டு சொல்லப்படுகின்றன. (அவை பிராசாத கலைகள் இருக்கும் இடங்களாம்.)
சைவத்தில், `இறைவனுக்குத் திருமேனிகள் ஆறு` என்றும், `எட்டு` என்றும் சொல்லப்படுகின்றன. (அவை முறையே ஆறு அத்துவாக்களும், அட்ட மூர்த்தங்களுமாகும்.)
இவை அனைத்துமாய் நிற்பது சைவ சமயத்தில் சொல்லப் படும் சதாசிவ லிங்கம்.

குறிப்புரை :

சைவ சமயத்தில் சொல்லப்படுவன சைவாகமங் களில் சொல்லப்பட்டனவே யாதலின், `இவ்வாறெல்லாம் சைவா கமத்துள் சொல்லப்பட்டன` என்றபடி `இலிங்க மூர்த்தத்தில் இதனுட் கூறிய வாறெல்லாம் சிவன் நிற்றல் கருதி வழிபாடு செய்யப்படும்` என்பது உணர்த்தியவாறு.
இதனால் சைவ சமயத்தில், எல்லாம் சதாசிவ லிங்கமாகக் கொள்ளப்படுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நடுவு கிழக்குத் தெற்குஉத் தரம்மேற்கு
நடுவு படிகம்நற் குங்கும வன்னம்
அடைவுள அஞ்சனம் செவ்வரத் தம்பால்
அடியேற் கருளிய முகம்இவை அஞ்சே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துள், `சதாசிவ லிங்கத்திற்கு ஐந்து முகங்கள் உள்ளன எனக் கூறிய முகங்கள் ஒரு வரிசையில் இல்லாமல், நடுவு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு` என்னும் திசைகளில் பொருந்தியுள்ளன.
அவற்றுள் நடுவண் உள்ள முகம் படிகம் போன்ற நிறத்தையும், கிழக்கில் உள்ள முகம் குங்குமம் போன்ற நிறத்தையும், வடக்கில் உள்ள முகம் செவ்வரத்தம் பூப்போன்ற நிறத்தையும் மேற்கில் உள்ள முகம் பால்போன்ற நிறத்தையும் உடையன.
(கிழக்கில் உள்ள முகம் பொன் போன்ற நிறத்தை யுடையதாகச் சொல்லப்படுதலால், இங்கு, ``குங்குமம்`` என்பதற்கு, `கலவைச்சாந்து` எனப்பொருள் கொள்ளுதல் பொருந்தும்.)
இந்த ஐந்து முகங்களுடன் தோன்றியே சிவன் அடியேனுக்கு அருள்புரிந்தான்.

குறிப்புரை :

சைவாகமங்களில் சொல்லப்பட்டதனை நாயனார் தாம் அனுபவமாக உணர்ந்தமையை இங்கும் எடுத்துக் கூறினார். இதனானே பிறவும் உண்மையாதல் தெளிவித்ததாம், முதற்கண் கூறியவாறே ``நடுவு`` எனத் தொடங்கினமையால். ஏனை முகங்களும் மேற்கூறிய அம்முறையவாயின.
இதனால் சதாசிவ லிங்கத்து முகங்களின் இடமும், நிறமும் கூறப்பட்டன. ``நிறங்கள் ஓர் ஐந்துடையாய்`` எனத் திருவாசகத்துள் கூறப்பட்டது இங்குக் கூறிய முகங்களின் நிறம் நோக்கியேயாம். (தி.8 சிவபுராணம் - 49)

பண் :

பாடல் எண் : 7

அஞ்சு முகம்உள ஐம்மூன்று கண்உள
அஞ்சினொ டஞ்சு கரதலந் தானுள
அஞ்சுடன் அஞ்சுஆ யுதம்உள நம்பிஎன்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.

பொழிப்புரை :

இவ்வதிகாரத்து முதல் மந்திரத்துட் கூறிய வற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக்கலங்களையுடைய சதாசிவ லிங்கமாய்ச் சிவன் என் இருதயத்துள் வந்து புகுந்து நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

சதாசிவ லிங்கமே தமது தியானப் பொருளாதலைக் கூறுவார் மேற்கூறிய அவற்றுடன் பத்துக் கைகளிலும் பத்துப் படைக் கலங்கள் இருத்தலை இங்குக் குறித்தருளினார். ``உள`` என்னும் பெய ரெச்சக் குறிப்புக்கள், `உடைய என்னும் பொருளவாய் அடுக்கி, `நம்பி` என்னும் ஒருபெயர்கொண்டன. அப்படைகள் பத்தாவன வலக் கைகள் ஐந்திலும், `சூலம், வச்சிரம், வாள், மழு, அபயம்` என்பனவும், இடக்கைகள் ஐந்திலும் பாம்பு, பாசம், அங்குசம், நெருப்பு, வரதம்` - என்பனவுமாம். அபய வரதங்கள் ஆயுதம் அல்லவாயினும் பெரும் பான்மை பற்றி ``ஆயுதம்`` என்றார். புதிதாய்ப் புகுந்தது போலக் கூறினாராயினும், `முன்பு விளங்கா திருந்தது விளங்கிற்று` என்பதே கருத்தென்க. மக்களுட் சிறப்புடையாரைக் குறிக்கும் `நம்பி` என்பது, தேவர்கட்குத் தலைவனாகிய சிவபிரானுக்கும் சொல்லப் படுதல் நம்பி என்னும் திருப்பதிகத்தாலும் அறிக. (தி.7 ப.63)
இதனால் தமது தியானப்பொருள் சதாசிவ லிங்கமாதல் கூறப்பட்டது. அதனால், `பிறரும் அதுகொள்க` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 8

சத்தி தராதலம் அண்டம் சதாசிவம்
சத்தி சிவம்மிக்க தாபர சங்கமம்
சத்தி உருவம் அருவம் சதாசிவம்
சத்தி சிவம்தத் துவம்முப்பத் தாறே.

பொழிப்புரை :

அண்டலிங்கத்துள் பூமி பீடமாயும், வானம் பீடத்தின்மேல் உள்ள இலிங்கமாயும் அமையும். (எனவே, சதாசிவ லிங்கத்துள் பீடத்தில் பூமியும், இலிங்கத்துள் வானமும் அடங்கு வனவாம்.)
இனி இறைவன் உயிர்கள் பொருட்டுக் கொள்கின்ற `தாபரம், சங்கமம்` என்னும் இருவகை வடிவங்களுள் தாபரம் சிவக்கூறும், சங்கமம் சத்திக்கூறும் ஆகும். (தாபரம் - பெயர்ந்து நிற்பன; திருவுருப் படிமங்கள். சங்கமம் - உலாவுவன; அடியார்கள்.)
இறைவன் கொள்கின்ற திருமேனிகளில் உருவத் திரு மேனிகள் சத்திக் கூறும், அருவத் திருமேனிகள் சிவக்கூறும் ஆகும்.

குறிப்புரை :

`சிவக்கூறும், சத்திக் கூறும் சமமாக விரவியதே, சதாசிவம் ஆகையால், அது மேற்கூறிய அனைத்துமாய் நிற்கும்` என்றவாறு, `தத்துவம் முப்பத்தாறு` எனப் பொதுவகையால் சதாசிவ தத்துவமும் அடங்கக் கூறினாராயினும் அதனைச் சிறப்பு வகையால் வேறு வைத்து உணர்த்துதலே கருத்தென்க. ``சதாசிவம்`` - இரண்டில் முன்னது இலிங்கத்தைக் குறித்தது. பின்னது, சிவம்` என்னும் அளவாய் நின்றது.
`பருமை, நுண்மை என்னும் இருவகைப் பொருள்களில் பருமை யெல்லாம் சத்திக் கூறும், நுண்மை எல்லாம் சிவக்கூறும் ஆகும்` என்பது இதனால் உய்த்துணரக் கூறினமை காண்க.
``தாபர சங்கமம்`` - என்றது எதிர்நிரல் நிறை. `சங்கம தாபரம்` என்றே பாடம் ஓதுதலும் ஆம்.
இதனால் சதாசிவ லிங்கத்தினது சிறப்புக் காரண வகையால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

 தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவந் தானே.

பொழிப்புரை :

`தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.

குறிப்புரை :

``அருவம், உருவம்`` என்பன இங்கு, `காரணம், காரியம்` என்னும் பொருளவாய் நின்றன. ``ஆவது`` இரண்டும் எழுவாய் உருபாய் வந்தன. அவை இனம் பற்றி வந்த ஒருமை. ``சராசரம், சுகோதயம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.
``தத்துவ ரூப மாகும் தரும்அரு உருவ மெல்லாம்;
... ... ... சகலமும் தத்துவங்காண்``
எனவும்,
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக்கென்னில், தொல்லாய கன்ம மெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின் நில்லாமை முற்று வித்து நீக்கவும், கூடி நின்ற
பொல்லாத ஆண வத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. -சிவஞான சித்தி சூ. 2. 71, 79
எனவும் போந்த சிவஞான சித்தி இங்கு நினைக்கத் தக்கது. ``ஆகும்`` என்பது முற்று.
இதனால், `சதாசிவ லிங்கம் சிறப்புடைத் தாதற்குக் காரணம் அஃது அனைத்துத் தத்துவமுமாய் நிற்றலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.

பொழிப்புரை :

சதாசிவனாய் நிற்பவனைத் துதியாது வேறு சொற்களைச் சொல்லிக் காலம் போக்குபவரும், அந்தச் சதாசிவமூர்த்தி அவரவர்க்கு ஏற்புடைத்தாக அளித்து ஏவுகின்ற தொழில்களைச் செய் பவரும் ஆகிய வானவரது நெறியோடு எனது நெறிமாறுகொளச் செய்தற் பொருட்டு அவன் எனது நெஞ்சத்தில் புகுந்தான். ஆதலின் அவனே நாம் வழிபடும் கடவுளாயினான். (என்வழி நிற்பீராயின்) நீங்களும் அவனது திருப்பெயர்கள் பலவற்றையும் கூறி அவனை வழிபடுங்கள்.

குறிப்புரை :

`சதாசிவன் எம் இறை; கூறுமின் நூறு எனமாற்றி இறுதிக்கண் வைத்துரைக்க, ``கூறுமின்`` என்றதனால், ``நூறு`` என்பது பெயர்களாயிற்று, `அவற்றைக் கூறுமின்` என வருதலால், ``வேறு`` அவையல்லாத பிறவாயிற்று. ``உரை செய்தல்`` இரண்டினுள் முன்னது `சொல்லுதல்` எனவும், பின்னது `ஏவுதல்` எனவும் பொருள் தந்தன. ``மிகைப் பொருள்`` என்றது, `பயனில் பொருள்` என்றவாறு. சிவனது திருநாமங்களைச் சொல்லாது பிறவற்றையே சொல்லுதலால் ஆன்ம லாபத்தையிழத்தல் பற்றி வானவரை, ``மிகைப்பொருள்`` என்றார். `நிற்கும் வானவர், தொழில் வானவர்` எனத் தனித்தனி இயையும், ஏறு - ஏறுதற்குரியன; பொருந்துவன. `உரை செய்த தொழிலைச் செய்யும் வானவர்` என்க. அவரது நெறியெல்லாம் பிறவி நெறியாகலின் வீட்டு நெறி அதனின் மாறும் நெறியாயிற்று. அதனைச் செய்தலாவது, தருதல். ``செய்வான்``, வானீற்று வினையெச்சம். மனம் புகுதலால் அந்நெறி எய்தினமை பற்றி, செய்வான் புகுந்தான் என்றார். பிறரெல்லாம் வந்த நெறியையே தருவாராக, சிவன் ஒருவனே வீட்டு நெறியைத் தருவோனாதல் பற்றி, ``சதாசிவன் எம் இறை`` என்றார்.
இதனால், `சதாசிவ வழிபாடொழிந்த செயல்களைச் செய்தலால் தேவரும் பந்தத்தின் நீங்காமையால், அதனின் நீங்க விரும்புவோர் சதாசிவ வழிபாடே செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.

பொழிப்புரை :

அருளே நிறைந்த உள்ளத்தை உடையவனாகிய கடவுளை யான் எனது உள்ளத்திலே, கறுத்த கண்டத்தையும், மழு ஏந்திய கையையும், சுருண்ட சடையாகிய முடியையும், ஒளியை யுடைய பிறையாகிய கண்ணியையும் உடையவனாக நன்கு காண்கின்றேன்.

குறிப்புரை :

`அருவுருவனாகிய சதாசிவன் உருவனாய் விளங்கும் பொழுது இத்தன்மையனாய் விளங்குதலை யான் அநுபவத்தில் காண்கின்றேன்` என்பதாம். அதனால், `கடவுளை இவ்வுருவத்தில் கண்டு வழிபடுதலும் சதாசிவ வழிபாடேயாகும்` என்பது உணர்த்தியவாறு. `கடவுள் உருவத்திருமேனியனாய் விளங்கும் பொழுது இவ்வாறே நிற்பன்` என்பதை,
அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என்னும் அப்பர் திருமொழியாலும் அறிக.
சந்திரசேகரர், பிட்சாடனர் முதலிய திருமேனிகள் அவ்வப் பொழுது கொண்டு விடப்பட்ட வடிவங்களாக அவற்றை `மாகேசுர பேதங்கள்` எனவும், இங்குக் கூறிய இவ்வடிவமே `மகேசுர இயற்கை வடிவம்` எனவும் எங்கும் கூறப்படுதலையும், `பிரளயாகலருக்கு ஞானத்தை முன்னின்று உணர்த்தும் பொழுது இவ் வடிவத்தில் நின்றே சிவன் உணர்த்துவன்` எனவும் எங்கும் கூறப் படுதல் காண்க.
கறைக் கண்டம், மழுப்படை, சடைமுடி, பிறைக் கண்ணி இவற்றைக் கூறியதனானே நாற்றோள், முக்கண் முதலிய பிறவும் கொள்ளப்படும். ``பிறையும்`` என்பதன் பின் `உடையவனாக` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், அருவுருவமாகிய சதாசிவ லிங்கம் உருவமாய் விளங்குமாறு கூறப்பட்டது. `அனைத்தும் சதாசிவ லிங்கமே` என மேற் கூறியதனை நினைக.

பண் :

பாடல் எண் : 12

சத்திதான் நிற்கின்ற ஐம்முகம் சாற்றிடில்
உத்தரம் வாமம் உரைத்திடும் சத்தி
பச்சிமம் பூருவம் தற்புரு டன்உரை
தெற்கில் அகோரம் வடகிழக் கீசனே.

பொழிப்புரை :

சிவனது சத்தி ஒன்றே ஐந்தாகி அவனுக்கு மேற் கூறிய பக்கங்கள் ஐந்திலும் உள்ள ஐந்து முகங்களாய் நிற்கும். அதனால் அம்முகங்களின் பெயரானே அச்சத்திகளும் குறிக்கப்படும்.

குறிப்புரை :

முகங்களின் பெயர்களை ஈண்டே கூறுகின்றார் ஆதலின், அவற்றது திசையை மறித்து ஈண்டும் கூறினார். இதனால், `ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம், என்பன முறையே மேலே, ``நடுவு கிழக்குத் தாம்மேற்கு`` என்னும் திசைகளில் உள்ளனவாகக் கூறப்பட்ட முகங்களின் பெயராதல் விளங்கிற்று.
சத்தி ஐந்தாதல், படைத்தல் முதலிய தொழில் ஐந்தனையும் செய்தற் பொருட்டு. படைத்தல் முதலிய தொழில்களைக் கீழே சத்தியோசாதம் முதலாக வைத்து, `சத்தியோசாதம், வாம தேவம், அகோரம், தற்புருடம், ஈசானம்` என எண்ணிப் பொருத்திக் கொள்க. சத்தி, `திருவடி` எனப்படுமாதலின். ``போற்றி யெல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்`` என்பன முதலிய ஐந்தும் இவ்வைந்து சத்திகளையே குறித்தல் அறிக.
இதனால், சதாசிவ லிங்கத்தின் ஐந்து முகங்களின் பெயர்களும் அவற்றது உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.

பொழிப்புரை :

கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவேயுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்க ளாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.

குறிப்புரை :

சத்தி சிவனுக்கு ஐந்து முகங்களாயும் `உச்சி, முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் உறுப்புக்களாயும் நிற்றல் மந்திர ரூபமாயும் என்க. அதனால் ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும், இன்னும் அடுத்த மந்திரத்துக் கூறப்படுகின்ற சிகை முதலிய உறுப்புக்களும் கருதுகோள் (பாவனை) வகையால் அமைதல் விளங்கும்.
சதாசிவலிங்க வழிபாட்டில் வாய் மந்திரத்தைச் சொல்ல, மனம் அவற்றிற்கு ஏற்ற பாவனையைக் கொள்ள, கை கிரியையினைச் செய்ய, இவ்வாறு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றானும் அது நிகழ்வதாகும்.
இதனுள் உயிரெதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 14

நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.

பொழிப்புரை :

பச்சை நிறத்தை உடையவளாய்ச் சிவனாகிய கதிரவனுக்கு அவனது மிகச் செப்பமாகப் பொருந்திய கதிராய் விளங்குகின்ற பராசத்தியாகிய பெண்டு சதாசிவனுக்கு மந்திர வகையால் (மேற்கூறிய ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களுமாய் நிற்றலேயன்றி,) இருதயம், சிகை, சிரம், கவசம், நேத்திரம், அத்திரம் என்னும் உறுப்புக்களாயும், அம்மூர்த்தியின் பத்துக் கைகளிலும் உள்ளனவாக மேற்கூறப்பட்ட பகலவன் போலும் ஒளியினையுடைய பத்துப் படைக்கலங்களாயும் நிற்பள்.

குறிப்புரை :

``பச்சையாம் ... ... மின்`` என்பதனை முதலிற் கொண்டு, ``ஆகும்`` என்பதனை ``தெசாயுதத்திற்``கும் கூட்டி, `மின், விந்து ஆகும்: தெசாயுதம் ஆகும்` என உரைக்க.
விந்து - சுத்த மாயை, அஃது ஆகுபெயராய் அதன் காரியமாகிய மந்திரத்தைக் குறித்தது. இவற்றை ``மந்திரம்`` எனக் கூறிய இதனானே மேற்போந்த ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும் மந்திரங்களே ஆயின. அவற்றைக் குறிக்கும் மந்திரங்கள் `பஞ்சப் பிரம மந்திரம்` என்றும், இங்குக்கூறிய மந்திரங்கள் `சடங்க மந்திரம்` என்றும் சொல்லப்படும். இப் பதினொன்றும் கூடிய தொகுதி. `சங்கிதா மந்திரம்` எனப்படும். சைவத்தில் சிவ மூல மந்திரம் தலையானதாய் நிற்க இப்பதினொரு மந்திரங்களும் இன்றியமையாத் துணை மந்திரங்களாய் நிற்கும். இவற்றுள் பிரம மந்திரங்கள் ஐந்தும் `நம` என்னும் முடிவினதாக, சடங்க மந்திரங்கள் `நம` என்பதனோடு வேறு முடிவுகளையும் ஏற்ற பெற்றியால் உடையனவாகும்.
பஞ்சப் பிரம மந்திரங்கள் ஐந்தொழிற் சத்திகளேயாதல் போலச் சடங்க மந்திரங்கள் சிவனது எண்குணங்களில் தூய உடம்பின னாதல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதலிலும், இயற்கையுணர்வு முற்றுணர்விலும் அடங்க ஆறாய் நிற்கும் குணங்களேயாகும். எண் குணங்களில் ஆறினைச் சிறப்பாக எடுத்து இறைவனை, `சுத்த சாட் குண்ணியன்` என்று கூறுவர்.
`செஞ்செவ்வுறு` என்பது குறைந்து நின்றது. செஞ்செவ் - மிக்க செப்பம். சேகரி மின் - தலைவியாய பெண்டு.
இவை இரண்டு மந்திரங்களாலும் முகமாய் நிற்கின்ற சத்திகள் பிறவாயும் நிற்றல் கூறப்பட்டது. இவற்றானே பிரம மந்திரம், அங்க மந்திரங்களது உண்மையும் கூறப்பட்டனவாம்.

பண் :

பாடல் எண் : 15

எண்ணில் இதயம் இறைஞான சத்தியாம்
விண்ணிற் பரைசிரம்மிக்க சிகைஆதி
வண்ணக் கவசம் வனப்புடை இச்சையாம்
பண்ணும் கிரியை பரநேத் திரத்திலே.

பொழிப்புரை :

இருதயம் முதலாகக் கூறிய சடங்க மந்திரங்கள் ஆறனுள் அத்திரம் ஒழிந்த ஏனைய ஐந்தில் சிவனது ஞான சத்தியே இருதய மந்திரமாயும், பராசத்தியே சிர மந்திரமாயும், ஆதி சத்தியே சிகா மந்திரமாயும், இச்சா சத்தியே கவச மந்திரமாயும், கிரியா சத்தியே நேத்திர மந்திரமாயும் நிற்கும்.

குறிப்புரை :

அத்திர மந்திரம் மேற்கூறிய குணங்களுள் ஒன்றேயாம். எண்ணில் - ஆராய்ந்து உணரின்.
இதனால் அங்க மந்திரங்களாய் நிற்கும் சத்தியின் வகைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

சத்தி நாற்கோணம் சலம்உற்று நின்றிடும்
சத்தி அறுகோணம் சயனத்தை உற்றிடும்
சத்திநல் வட்டம் சலம்அற் றிருந்திடும்
சத்தி உருவாம் சதாசிவன் றானே.

பொழிப்புரை :

இலிங்கத்தின் பீடம் நாற்கோணமாயிருப்பின் அது சிவனது இயக்கச் சத்தியாகும். அறுகோணமாய் இருப்பின் அது கிடத்தற் சத்தியாகும். வட்டமாய் இருப்பின் அது இருத்தற் சத்தியாகும். இதனால் சதாசிவன் சத்தி வடிவாய் நின்றே அருள்புரிவான் ஆகலின், சதாசிவ லிங்கமும் அத்தன்மையதேயாம்.

குறிப்புரை :

இலிங்கத்தில் சத்தியே பீடமாதல் பற்றி அதனை வேறு கூறாது ``சத்தி`` என்றே போயினார். கிடத்தல், இருத்தல், இயங்கல் என்னும் மூன்றும் இலயம், போகம், அதிகாரம் என்க. சலம் - அசைவு.
இதனால், சதாசிவலிங்கத்து வேறுபாடுகளும், அவற்றது உண்மையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

மானந்தி எத்தனை காலம் அழைப்பினும்
தானந்தி அஞ்சில் தனிச்சுட ராய்நிற்கும்
கானந்தி உந்தி கடந்து கமலத்தின்
மேனந்தி ஒன்பதின் மேவிநின் றானே.

பொழிப்புரை :

பெரியோனாகிய சிவனைக் கிரியையாளர்கள் எத்தனை முறை தம்பால் வருமாறு அழைப்பினும் அத்தனை முறையும் அவன் ஐந்து முகங்களையுடைய சதாசிவ லிங்கத்திடத்தே வந்து, ஒப்பற்ற ஒளிவடிவாய் நிற்பான். யோகிகள் சுவாதிட்டானத்தினின்றும் பிராண வாயுவை மேல் எழத்தூண்டி, மேலும் உள்ள ஆதாரங்களைக் கடந்தவழி, ஏழாந்தானமாகிய ஆயிர இதழ்த் தாமரையிடத்தும், அதற்குமேல் எட்டாந் தானமாகிய நிராதாரத்திடத்தும், அதனையும் கடந்த ஒன்பதாவதாகிய மீதானத்திடத்தும் விளங்குவான்.

குறிப்புரை :

`யோகிகட்கே சிவன் அகத்தில் விளங்கி, ஏனைக் கிரியையாளர்க்குச் சதாசிவலிங்கத்திலே விளங்குவான்` என்பதாம். எனவே, `கிரியையாளர்கள் சதாசிவ லிங்கத்திலே வழிபடுமாற்றால் அவனைக் காண்க` என்றதாயிற்று. ``நந்தி`` நான்கில் முன்னது பெயராயும், ஏனைய வினையெச்சமாயும் நின்றன. நந்துதல், இங்கு ஆக்கத்தின் மேற்று. கால் - காற்று, `கடந்தவழி` என்பது, ``கடந்து`` எனத் திரிந்து நின்றது. ``மேல் நந்தி ஒன்பதின் மேவி நின்றான்`` என்றதனால், கமலம், ஆயிர இதழ்க் கமலமே ஆயிற்று.
இதனால், சதாசிவ லிங்கம் கிரியை யாளர்க்கு இன்றி யமையாததால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஒன்றிய வாறுஉம் உடலி னுடன்கிடந்து
என்றும்எம் ஈசன் நடக்கும் இயல்பது
தென்றலைக் கேறத் திருந்து சிவனடி
நின்று தொழுதேன்என் நெஞ்சத்தி னுள்ளே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான் தக்க முறையில் உங்களுடைய உடலின் உள்ளே பொருந்தி என்றும் விளங்குகின்ற முறை முன்னை மந்திரத்தின் பிற்பகுதியிற் கூறியவாறாகும். அதனால் நான் சிவனது திருத்தமான பாதங்கள் எனது அழகிய தலையிலே பொருந்துதற் பொருட்டு உள்ளத்துள் நின்றே வணங்கினேன்.

குறிப்புரை :

நீவிர் அது மாட்டீர் ஆகலின், மேற்கூறியவாறு சதாசிவ லிங்கத்தில் சிவனைக் கண்டு வழிபடுங்கள்` என்பதும், `அவ்வாறு வழிபட்டுவரின் என்னைப் போல நெஞ்சத்தினுள்ளே நின்று தொழும் நிலையை எய்துவீர்` என்பது குறிப்பெச்சம். ஒன்றியவாறு - தக்கவாறு. `அந்த அந்த ஆதாரங்கட்கு ஏற்ப` என்றபடி. யோகத்தால் `தூய்மை பெற்ற தலை` என்பர், ``தென்தலை`` என்றார். தென் - அழகு. `சிவனது திருவடி தலைமேல் ஏற` என்றது, `ஞானம் உண்டாக` என்றபடி.
இதனால், `சதாசிவலிங்க வழிபாடு பின்னர் உளதாகும் ஆன்மலிங்க வழிபாட்டைத் தரும்` என்பது கூறப்பட்டது. இனி இங்கு நின்றும் ஆன்மலிங்க வழிபாட்டின் சிறப்பையே கூறுகின்றார். `அதனைப் பெறுதற்குச் சதாசிவலிங்க வழிபாட்டைக் கடைப்பிடிக்க` என வலியுறுத்தற் பொருட்டு. இவ்வாற்றால் இனிவரும் அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் அமைகின்றது.

பண் :

பாடல் எண் : 19

உணர்ந்தேன் உலகினில் ஒண்பொரு ளானைக்
கொணர்ந்தேன் குவலயம் கோயில்என் நெஞ்சம்
புணர்தேன் புனிதனும் பொய்யல்லன் மெய்யே
பணிந்தேன் பகல்அவன் பாட்டும் ஒலியே.

பொழிப்புரை :

ஒளிப் பொருளாகிய சிவனை நான் அத் தன்மையனாக இவ்வுலகிற்றானே உணர்ந்தேன். பின்பு அவனை இவ்வுலகத்திற்கே வருமாறு கொணர்ந்தேன். பின் என் மனமே கோயிலாக அவனைக் கூடினேன். அதனால் அவன் இல்லாதவன் அல்லன்; உண்மையாக உள்ளவனே. நாளெல்லாம் நான் பாட்டும், ஒலியுமாக அவனைப் பணிதலையே செய்கின்றேன்.

குறிப்புரை :

உணர்ந்தது, ஆசிரியர் மொழியாற் கேள்வியினால் ஆகும். பின்பு முன் உணர்ந்தவாறு உள்ளத்தே வைத்து நினைக்க, அவன் நினைவிலே விளங்கிநிற்றலால், ``குவலயம் கொணர்ந்தேன்`` எனவும், ``என் நெஞ்சம் கோயிலாகப் புணர்ந்தேன்`` எனவும், `இங்ஙனம் அவன் எனக்கு அனுபவப் பொருளாகவே இருத்தலால் ``பொய்யல்லன் மெய்யே`` எனவும் கூறினார். ``பொய்யல்லன்; மெய்யே`` என்றது, `இறைவன் என்று ஒருவன் உளனோ` என ஐயுறுவாரை நோக்கிக் கூறியது. ``நெஞ்சம்`` என்பதன் பின் `ஆக` என்பதும், ``ஒலி`` என்பதன்பின் உம்மையும், `ஆக` என்பதும் விரிக்க. ``பகல்`` என்பதன்பின் `எல்லாம்` என்பது எஞ்சி நின்கின்றது.

பண் :

பாடல் எண் : 20

ஆங்கவை மூன்றினும் ஆரழல் வீசிடத்
தாங்கிடும் ஈரேழுள் தான்நடு வானதில்
ஓங்கிய ஆதியும் அந்தமும் ஆம்என
ஈங்கிவை தம்முடல் இந்துவும் ஆமே.

பொழிப்புரை :

உடம்பின்கண் ஒன்றின்மேல் ஒன்றாய் உள்ள அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் என்னும் மூன்றிலும் நெருப்புப் போன்ற ஒளி வீச, `சிவனது பேதம் ஒன்பதுள் நடுவணதாகிய சதாசிவ மூர்த்தத்தில் உலகத் தோற்றமும், ஒடுக்கமும் நிகழ்வன` என்று உணர்ந்து நின்றால், அந்தச் சதாசிவ மூர்த்தமும், உலகத்தோற்றமும், ஒடுக்கமுமாய் நிற்கின்ற சத்தி, அவ்வுணர்ச்சியை உடையவனது உடலில் சந்திரன் போல ஒளிவிட்டு நிற்கும்.

குறிப்புரை :

``உடல்`` எனப் பின்னர் வருதலின் ``ஆங்கு`` என்னும் சுட்டுச் செய்யுளின் முதற்கண் நின்றது தாங்குதலுக்கு, `சிவன்` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க. ``வீசிட`` என்னும் எதிர்கால வினை யெச்சம். ``என`` என்பதின் சொல்லெச்சமாய் நிற்கும் `உணர` என் பதனோடு முடிந்தது. உணர்தல், இங்கு, தியானித்தல். இவற்றை உடைய சத்தியை ``இவை`` என்றது பான்மை வழக்கு. `இவற்றால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. ``இந்துவும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 21

தன்மேனி தற்சிவ லிங்கமாய் நின்றிடும்
தன்மேனி தானும் சதாசிவ மாய்நிற்கும்
தன்மேனி தற்சிவன் தற்சிவா னந்தமாம்
தன்மேனி தானாகும் தற்பரன் றானே.

பொழிப்புரை :

அகவழிபாடு செய்பவனுக்கு அவனது உடம்பே சதா சிவமூர்த்தியாயும், அம்மூர்த்தி மானாயும் நிற்கும். இன்னும் அது சுத்த சிவனாயும், அச்சிவனது ஆனந்தமாயும் நிற்கும். அஃது இவ் வாறெல்லாம் ஆகும்படி சிவன் அவனது உடம்பே தானாய் விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

`அகவழிபாடு செய்வான்` என்பது அதிகாரத்தால் கொள்ளப்பட்டது. சதாசிவனையும், சுத்த சிவனையும் உணர்ந்து, அவ் வுணர்வானே சுத்த சிவனது ஆனந்தத்தைப் பெறுதற்கு வாயிலாதல் பற்றி உடம்பை அவையெல்லாமாகப் பாற்படுத்து அருளிச் செய்தார். மானுடராக்கை வடிவு சிவலிங்கம்`` என்னும் மந்திரத்துட் கூறியன பிண்டம் இலிங்கமாதலைக் குறித்தற்கும் இங்குக் கூறியன அகவழி பாட்டின் சிறப்பினை உணர்த்துதற்கு கூறப்பட்டன ஆகலின், இவை கூறியது கூறல் ஆகாமை அறிக. தற்பரன் - தனக்கு மேலே உள்ளவன்.

பண் :

பாடல் எண் : 22

ஆரும் அறியார் அகாரம் அவன்என்று
பாரும் உகாரம் பரந்திட்ட நாயகி
தாரம் இரண்டும் தரணி முழுதுமாய்
ஊறி எழுந்திடும் ஓசைய தாமே.

பொழிப்புரை :

சிவன் அகாரமாயும், சத்தி உகாரமாயும் நிற்க, அவ்விரண்டும் கூடி ஓகாரமாகும். அந்த ஓகாரம் உலக முழுதும் பரவி, உள்ளத்தினின்றும் எழுகின்ற எல்லா எழுத்துக்களுமாய் ஒலிக்கும்.

குறிப்புரை :

`அதனால் அந்த ஒகாரத்தை உன்னலே சிறப்புடைய வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். `பீசாக்கரங்கள் அனைத்திலும் மகாரம் சேர்ந்து வருதல் இயல்பாகலின், அனைத்து மந்திரங்கட்கும் பொதுப் பீசமாகிய ஓகாரத்தோடு அது சேர்ந்து நிற்றல் சொல்ல வேண்டா` என்று போயினார். பாரும் - அறிமின். இதனை ``நாயகி`` என்பதன் பின்னர்க்கூட்டுக. `தாரகம்` என்பது இடைக் குறைந்து நின்றது. தாங்குவது, என்னும் பொருட்டாய்ப் பிறமந்திரங்கள் அனைத்திற்கும் அடிநிலையாவது` என்னும் கருத்தினைத் தருவது `இரண்டும் தாரகம்` என மாற்றியுரைக்க. `எழுத்து` என்பது, `எழுது` என்பது அடியாகப் பிறக்குமாயினும் உள்நின்று, `எழு` என்பது அடியாகப் பிறப்பது - என்றலும் பொருந்தும் ஆகலின், ``எழுந்திடும்`` என்றது எழுத்துக்களின் பிறப்பைக் குறித்து நின்றதாம். ``மாறி எழுந்திடும்`` என்பது பாடம் அன்று. இதனுள் ரகரத்திற்கு றகரம் ஓராற்றால் இன எதுகையாயிற்று.

பண் :

பாடல் எண் : 23

இலிங்கநற் பீடம் இசையும்ஓங் காரமாய்
இலிங்கநற் கண்டம் நிறையும் மகாரம்
இலிங்கத்துள் வட்டம் இறையும் உகாரம்
இலிங்கம் அகாரம் நிறைவிந்து நாதமே.

பொழிப்புரை :

(முன்னை மந்திரத்தில், `ஓங்காரத்துள் சிவமும், சத்தியும் முறையே அகாரமும், உகாரமுமாய் நிற்பர், என்றதனால், அவ்விருவரது வடிவமுமாகிய இலிங்கம் ஓங்காரமாய் நிற்றல் எவ்வாறு` எனின்,) பீடம் சமட்டியான ஓங்கார வடிவேயாய் இருக்கும் இலிங்கம். ஒவ்வொரு கூற்றில் ஒவ்வோர் எழுத்தாய் வியட்டியாய் இருக்கும். அவற்றுள் பீடத்தின் உள்ளே மறைந்து நிற்கும் பகுதி மகாரமாயும், பீடத்தோடு இணைந்து வெளியே புலனாகி நிற்கின்ற பொருத்துவாயாகின்ற வட்டம் உகாரமாயும், இலிங்கம் கீழ் நின்று முக்கூறுபட்டு முறையே அகாரமும், விந்துவும், நாதமுமாய் இருக்கும்.

குறிப்புரை :

`இலிங்க நற் கண்டம் மகாரமாய் நிறையும்; இலிங்கத்து உள்வட்டம் உகாரமாய் நிறையும்` என ஆக்கச் சொல்லை ஏனையிரண்டிற்கும் கூட்டி, மொழிமாற்றி உரைக்க. பின்பு, `இலிங்கம் அகாரம், நிறைந்து விந்து, நாதம் ஆம்` என்க. கண்டம் - கூறு, பீடத்துள் மறைந்து நிற்பது தனி ஒருபகுதியாய்ப் புலனாகாது நிற்றல் பற்றி அதனை, ``கண்டம்`` என்றும், பீடத்தின் விளிம்பு வெளிவட்டம் ஆதலின், அதன் நடுவில் இலிங்கம் பொருந்தி நிற்கின்ற பொருத்து வாயை ``உள்வட்டம்`` என்றும் கூறினார்.
இறைவனது உபசார வடிவங்களில் மந்திர வடிவம் சிறந்த தாதல் பற்றி அதனை முன்னை மந்திரத்துட் கூறி, அவ்வாற்றானே இலிங்கமும் மந்திர வடிவாதலை இம்மந்திரத்துட் கூறினார். புறத்து உள்ள இலிங்கம் இவ்வாறு மந்திர வடிவாதலைக் கூறியதனானே அகத்திலும் இலிங்கம் அவ்வாறே கொள்ளப்படுதல் பெறப்பட்டது. படவே, இவ்விரண்டு மந்திரங்களும் வருகின்ற அதிகாரத்திற்குச் சிறந்த தோற்றுவாய் ஆயினமை காண்க.
சிற்பி