ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்


பண் :

பாடல் எண் : 1

உருவும் அருவும் உருவோ டருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

பொழிப்புரை :

யாதோர் உருவும் இலனாகிய பரமசிவன், தன்னைப் போலவே நிலைபெற்ற பொருளாய் உள்ள பல உயிர்களின் பொருட்டு, `உருவம், அருவம், உருஅருவம்` என்னும் திரு மேனிகளைப் பொருந்தி நிற்பான். அஃதேயன்றிப் பக்குவான்மாக்கள் பொருட்டுக் குருவாகி வந்து அவர்களோடு உடன் உறையும் கொள்கையையுடைய, கற்பகத் தருவைப்போல அவர்கள் வேண்டியவற்றை வழங்குகினஅற சதாசிவ மூர்த்தியும் ஆவான்.

குறிப்புரை :

`பதிப்பொருளாகிய சிவனை இவ்வியல்பினனாக உணர்தலே சிவஞானம்` என அதன் இயல்பு உணர்த்தும் முகத்தால் ஞானலிங்கத்தின் இயல்பைத் தொகுத்துக் கூறியவாறு.
``குருவும்`` - என்னும் உம்மை இறந்தது தழுவியதனோடு உயர்வு சிறப்பு. இதனை, ``சதாசிவன்`` என்பதனோடு கூட்டுக. ``ஆகும், நல்கும்`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, ``சதாசிவன்`` என்னும் ஒருபெயரைக் கொண்டமையால், ``ஆகும்`` என்பதை வினையெச்சமாக்கி உரைக்கப்பட்டது. ஐந்தொழில்களில் அருளலைச் செய்தல் சதாசிவ மூர்த்தியாகியேயாதலால், ``குருவென நிற்கும் கொள்கையனாகும் சதாசிவன்`` என்றார். இதன்பின் `ஆம்` என்பது எஞ்சி நின்றது. தான், ஏ அசைகள்.

பண் :

பாடல் எண் : 2

நாலான கீழ உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகநாப்பண்
நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தனே.

பொழிப்புரை :

கீழும், மேலும் நான்கு நான்கு திருமேனிகளாய் உள்ள அவற்றிற்கு மிக நடுவிலே உள்ள ஒரு திருமேனி மட்டும் அருவுருவமும், அஃதொழிய அதற்குக் கீழ் உள்ள திருமேனிகள் நான்கும் உருவமும், மேல் உள்ள திருமேனிகள் நான்கு அருவமும் ஆக இவ்வாறு பொருந்துதலால், இவையாய் நிற்கின்ற பரமசிவன் ஒருவனேயாயினும் ஒன்பது பேதங்களாய் நிற்பன்.

குறிப்புரை :

இவற்றை `நவந்தரு பேதம்` - என்பர். மூன்றாம் அடியில் ``நாலான`` என்றது, முன்னர், கீழே. மேல் - எனக் குறித்த இடம் ஒவ்வொன்றிலும் நாலான` - என்றதாம். அதனை முதற்கண் எடுத்து, நாலானவற்றின் மிகநாப்பண் ஒன்றும் அருவுரு, என இயைத்துரைத்து வைத்து, அதன்பின் ``நடுநிற்க`` என்பதனை வைத்து, அதன்பின் முதற்றொட்டு உரை்க. நடுண் நிற்கும் திருமேனி, ``நடு`` எனப்பட்டது. ``நிற்க`` என்றது, `ஒழிய` என்றபடி ``நண்ணலால்`` என்பதற்குமுன், `இவ்வாறு` என்பது எஞ்சி நின்றது, ``நாலான கீழ், மேலான நான்கும், மிகநாப்பண் ஒன்றும்`` என்றதனானே `ஒன்பது` என்னும் தொகை பெறப்படுதலால் வாளா, ``பாலாம்`` என்றார். `இவையாம் பரசிவன்தான் ஒருவனே` பாலாம்` என இயைத்துக் கொள்க.
மேல் நான்கு, `சிவம், சத்தி, நாதம், விந்து` என்பன. நாப்பண் ஒன்று சதாசிவ மூர்த்தம். கீழ்நான்கு, `மகேசுரன், உருத்திரன், மால், அயன்` - எனப்படும் மூர்த்தங்கள். இவற்றின் இயல்பு சிவஞான சித்தியார் இரண்டாம் சூத்திரத்தில் கூறுமாற்றாண் அறிக.
உருவத் திருமேனிகளை இவ்வாற்றால் உணரும் ஞானமே சரியை` என்றும், அருவுருவத் திருமேனியை இவ்வாறு உணரும், ஞானமே `கிரியை` என்றும், அருவத் திருமேனிகளை இவ்வாறு உணரும் ஞானமே `யோகம்` என்றும், `இம்மூவகைத் திருமேனிகளுள் யாதொன்றும் இன்றி அறிவுத் திருமேனியே பரசிவம்` - என உணரும் ஞானமே `ஞானம்` என்றும் சொல்லப்படுகின்றன. `இந்த நான்கும் ஞானத்தின் அரும்பு, மலர், காய், கனிபோலும் நிலையவாம்` என்பதை,
``விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
அரும்புமலர் காய்கனிபோ லன்றோ பராபரமே``
என்னும் தாயுமானவர் பாடலால் அறியலாம்.
இதனால், ஞான லிங்கங்கள் நால்வகையின ஆதலும், அவற்றின் படிநிலை உயர்வுகளும் ஞானத்தால் உணரப்படுகின்ற ஞேயங்களைக் கூறும்முகத்தால் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 3

தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.

பொழிப்புரை :

மேற்கூறிய நவந்தரு பேதங்களில் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் பேதங்களை ஏனைத் தேவர்போல எண்ணுதல் கூடாது` என்றற்கு அவற்றது சிறப்புணர்த்துவார், `அருவுருவத் திருமேனியும் தனியொரு நிலையது ஆனமை பற்றி இகழ்தல் கூடாது` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.

குறிப்புரை :

``தேவர்பிரான்`` என்றது உருத்திரனை. என்னை? அவனோடு ஒத்த உருவும், பெயரும், தொழிலும் உடையவன் தேவர்கட்குப் பிரானாய் நிற்றல் வெளிப்படையாதலின், திசைமுகம் - திக்கின் பகுதி. அவை எட்டாதலின் அவை போல எண்மராய் நிற்கும் வித்தியேசுரரை, ``திசைமுகர்`` என்றார். இவருக்குத் தலைவன் மகேசுரன். சதாசிவ மூர்த்தி தனக்குக் கீழ் உள்ள நால்வர்க்கும் மேலானவன் ஆதல் பற்றி ``நால்வர் பிரான்`` என்றும், அவன் காணாத அருவினர்க்கும், காணப்பட்டே நிற்கும் உருவினர்க்கும் நடுநிற்கும் சிறப்புப் பற்றி ``நடுஉற்ற நந்தி`` என்றும் கூறினார்.
`அவ்வழியால்` என `ஆல்` உருபும், `அடிக்கண்` எனக் `கண்` உருபும் விரிக்க. `அண்ணலும் அவர் ஆம்` என ஒரு சொல் வருவிக்க. `பிரான் என்று யாவர் இறைஞ்சுவார்` என்பதனை முன் இரண்டோடும் தனித் தனிக் கூட்டிப் பின்பு, நேரே உரைக்க.
இதனால் `ஆன்மாவினது ஞானம் உண்மைப் பதிஞானம் ஆமாறு கூறும் முகத்தால், அஃதே உண்மை ஞான லிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கண்ணி யுணரினும்
ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.

பொழிப்புரை :

யாண்டும், திங்களும், நாளும் என்று இன்ன வகையாகக் காலத்தை வரையறை செய்கின்ற, ஒவ்வொரு வரும் காலை, நண்பகல், மாலை என்னும் காலங்களில் தவறாது கண்டு வணங்கத் தக்க பகலவனிடத்துக் கருதியுணரினும், உணவு முதலிய உலகியல் ஒழுக்கத்தின் நீங்கி யோகத்தின் நின்று உணரினும் அவ்விடங்களில் உணரப்படும் பொருள் ஒப்பற்றதாகிய அந்தத் தனிமுதற் பொருளே யாகும். அதனால் நான் எனது வினைக்கட்டு நீங்கி அழியுமாறு எவ் விடத்தும் அந்தத் தனிமுதற் பொருளையே விரும்பித் தொழுகின்றேன்.

குறிப்புரை :

`கன்னி யுணரினும்` - என்பது பாடமன்று. முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. கண்ணல் - கருதல். பாவித்தல். ``மாறினும்`` என்றது, `மாறி யோக ஒழுக்கத்தில் நிற்பினும்` என்றவாறு. ``காண் தகையானொடும்`` - என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத் திரிக்க. ஒன்று - ஒப்பற்றது. முதற் பொருளை `அது` என்றல் உபநிடத வழக்கு.
`யார் எவ்விடத்து எவ்வாறு வணங்கினும் அவ்வணக்கம் தனி முதலாகிய பரசிவத்தையே சாரும் - என உணரும் உணர்வே ஞான லிங்கமாய்ப் பயன்தரும்` என்பது இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

பொழிப்புரை :

மெய்யுணர்வினை உடைய அடியவர்களால், `யாவர்க்கும் முன்னே மேலே உள்ளவன்` எனவும், அனைத்து உலகங்கட்கும் முதல்வனாகிய முழுமுதற் றன்மை உடையவன்` எனவும், `நீதியின் உள்ளே விளங்குகின்ற பெரியோன்` எனவும், `இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன்` எனவும் கொண்டு வழிநின்று போற்றுகின்ற பெருமையை உடையவன் எங்கள் கடவுள். அவனை அறிதற்கு உரிய அடையாளம் மாதொரு பாகனாய் இருத்தல்.

குறிப்புரை :

`இவ்வாறு உணரும் உணர்வே ஞான லிங்கமாம்` என்றவாறு. ``சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்`` என்பதை அதற்குரிய காரணங்களுடன் விளக்கி, `அத்தெய்வமாவான் சிவபெருமானே` எனக் கூறுதலே கருத்தாகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
``அண்டம்`` என்றது, `அகிலாண்டம்` என்றவாறு ``அண்டத்துக்கு`` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. ஓரிடத்தும், `தெய்வம்` என வாளா கூறாது, ``பரதெய்வம், நற்றெய்வம், பெருந்தெய்வம், மாத்தெய்வம்`` - எனச்சிறப்பித்தே ஓதியது `தெய்வம்` என்பது முதற் கடவுளையே உணர்த்தி நிற்றற் பொருட்டு. ஈற்றடியில் உள்ள சொற்களை, `தன்பாதியுள் பராசத்தி மன்னும் ஆம்` என இயைத்து `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க. ஆம், அசை.

பண் :

பாடல் எண் : 6

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபேதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.

பொழிப்புரை :

ஆதிசத்திக்குமேல் உள்ளதாகிய பராசத்தியில் விளங்குவதே வாக்கும், மனமும் எட்டாது நிற்கும் தூய ஒளியாகிய சுத்தசிவ நிலை. அதனால், சிவன் பிறிதொன்றோடும் படாது தானேயாய் நிற்கின்ற அவனது உண்மைநிலை, ஞானசத்தி கிரியா சத்திகட்கு முதலாய் உள்ள ஆதி சத்திக்கு அப்பால் உள்ள பராசத்தியின்கண் நிற்பதே யாகும். எனினும் அவனது நிலைகள் ஆதிசத்தி. ஞானசத்தி, கிரியா சத்திகள் ஆகிய அவைகளோடும் இயைந்து நிற்பனவேயாம்.

குறிப்புரை :

`அஃது அவனது பொதுநிலை` என்றபடி. `அந்தப் பொதுநிலையை அவன் அடைதற்குக் காரணம் உயிர்களிடத்து வைத்த கைம்மாறு கருதாத கருணையே` என்பது கருத்து. ``ஈசன்`` எனப் பின் வருதலால், ``அத்தன்`` என்றது, `தன்` என்னும் அளவாய் நின்றது.
``தோயாத தூவொளி`` என்பதை, ``சுத்த சிவபதம்`` என்பதற்கு முன்னேயும், ``ஒத்தவும் ஆம்`` என்பதை இறுதியிலும் கூட்டியுரைக்க. `தடத்த நிலைகள் பல` என்பது உணர்த்துதற்கு அதனைப் பன்மையாக ஓதினார்.
இதனால், முதற்பொருளை இவ்வியல்பினதாக உணரும் உணர்வே ஞானலிங்கம் ஆதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும்
எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும்
பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.

பொழிப்புரை :

`எல்லாப் பொருள்களின் முடிவுக்கும் முடிவாய் உள்ள` ``போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``3 பரமசிவனது உண்மையை உணரின் `அவனே உலகம் அனைத்திற்கும் முதல்` என உலகத்தின் முடிநிலைக் காரணம் விளங்கும். பின் அந்தப் பரமசிவன் முதற்பொருளாய் எழுதற்கு காரணமான அவனது குணமாம் பராசத்தியை உணரின் அஃதே எல்லையில் இன்ப வெள்ள மாய் விலைதலால், அப்பால் அலைவுயாதும் இன்றி, அந்த இன்ப வெள்ளத்திலே அமைதியுடன் இருத்தல்கூடும். எப்பொருள் எத் தன்மைத்தாயினும் அப்பொருளில் மெய்ப்பொருளாகிய பரம சிவனைl அலைவின்றிக் காணும் மெய்யுணர்வைப் பெற்றால் அவ் வுணர்விலே முன்னே அருள்நிலை தோன்ற, அதன்பின் அதற்கு மேலாகப் பொருள் நிலையாகச் சிவன் விளங்குவான். அங்ஙனம் விளங்கக் கண்டவனது உள்ளத்தில்தான் அந்தச் சிவன் என்றும் இருக்கின்றான்.

குறிப்புரை :

`ஆகவே, அங்ஙனம் காணுதலாகிய உணர்வே ஞான லிங்கமாம்` என்பது கருத்து. முடிவில் உள்ளதை, `கொழுந்து` என்றல் வழக்கு. குவலயம் - குவலயத்தின் உண்மை, `எழுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. ``இருக்கலும்`` என்னும் உம்மை உயர்வு சிறப்பு. பரம் - மேல். மேல் உள்ளவனை `மேல் என்றது ஆகுபெயர்; திடமாக என ஆக்கம் விரித்துரைக்க. ``பார்ப்பதி`` - என்றது `சிவ சத்தி` என்னும் பொருளதாய்த் திருவருளைக் குறித்தது. ``திரண்டு எழ`` என்றதனாலே, திரண்டு எழுதலும் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. உளனாதற்கு `அவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், சொரூப ஞானமாகிய ஞானலிங்கம் உளதாமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.

பொழிப்புரை :

தன்னையே அடைக்கலமாக அடைந்த எனக்குத் தந்தையாய் நிற்கும் பரமசிவனையும் அவன் எனக்குத் தாயாய் நிற்கும் சத்தியோடு கூடிய கூட்டு நிலையையும், ஞானாசிரியர் தம் மாணாக் கர்க்கு முதற்கண் சுட்டளவாக உணர்த்திப் பின்பு அவ்விருவரது முறைமையை எல்லாம் விளங்க உணர்த்துவாராயின், மாணாக்கர்க்கு உண்மை ஞானம் பிறக்கும். எனவே, (`அதுவே அவர்க்கு ஞானலிங்கமாய்ப் பயன் தரும்` என்றபடி) இனி என் அப்பன் என் அம்மையை மக்களது இருதய கமலத்தில் இருக்க வைத்துத் தானும் அந்த இடத்தையே விரும்பி அவளோடு கூடி யிருக்கின்றான். ஆகவே, அவ்விருவரும் வீற்றிருக்கின்ற இடம் அதுவே.

குறிப்புரை :

`ஆதலின் மக்கள் அவ்விடத்து அவனை ஞான லிங்கத்தில் காண்க` என்பது குறிப்பெச்சம். `பரமனையும், கூட்டத்தையும்` என இரண்டாவது விரித்துரைக்க. ``என் அம்மை கூட்டம்`` எனப்பின்னர் வருதலால், முன்னர் ``பரமன்`` என்றது அவன் தனித்து நிற்கும் நிலையையாயிற்று. அஃது அவனது சொரூப நிலையும், அம்மையோடு கூடிய கூட்டம் அவனது தடத்த நிலையும் ஆகும் சொரூப சிவனே `பரசிவன்` என்றும் சொல்லப்படுவான். தடத்த சிவன் `சிவன்` என்றும், `ஆதிசிவன்` என்றும் சொல்லப்படுவான். சத்தியை விட்டுச் சிவன் ஒருபோதும் தனித்து நிற்றல் இல்லை யாயினும், செயல்யாதும் நிகழாதபோது சத்தி இருந்து இல்லாதது போல நிற்றலின் அந்நிலை `சிவனது தனிநிலை` என்றும், செயல் நிகழும் போது சிவன் செய்பவனும், சத்தி அவன் செயலுக்குத் துணையுமாய்ப் பிரிப்பின்றி நிற்றலின் அந்நிலை, `சிவனும், சத்தியும் கூடிய கூட்டு நிலை` என்றும் சொல்லப்படுகின்றன.
``ஓருரு வாயினை; மானாங் காரத்(து) ஈரியல் பாய்`` *
என்று அருளிச் செய்தது இவை பற்றியே.
சிவன் பரசிவனாய் நிற்கும் பொழுது சத்தி பராசத்தியாய் நிற்பாள். அவளே அருட்சத்தி. சிவன் ஆதிசிவனாய் நிற்கும்பொழுது சத்தி ஆதிசத்தியாய் நிற்பாள். அவளே திரோதான சத்தி. அவள் வழியாகவே இறைவனது ஐந்தொழில்கள் நிகழும். இதுபற்றி அருணந்தி தேவர்,
``அவளால் வந்த ஆக்கம் இல்வாழ்க்கை யெல்லாம்`` l
என அருளிச் செய்தார். இவற்றையெல்லாம் இனிதுணர்த்தலே ஞானோபதேசமும், அங்ஙனம் உணர்த்தியவாறே உணர்தலுமே ஞானம் ஆகலின், ``முந்த உரைத்து முறை சொல்லின் ஞானமாம்`` என்றார். உரைத்தற்கும் சொல்லுதற்கும் உரியவராகிய `ஞானாசிரியர்` என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. ``சந்தித்திருந்த இடம்`` என்பதற்கு, எஞ்சிநின்ற `அது` என்னும் பயனிலையை வருவித்து இறுதியில் கூட்டியுரைக்க. ``உந்திக்கு மேல் என்றது இருதயத்தை. இதனை மூன்றாம் தந்திரத்துள்,
``நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்`` 3
என்றார். `உந்தியின் மேல்` என்பது பாடம் அன்று.
இதனால் ஞான லிங்கத்தின் இயல்பும், அந்த இலிங்கத்தைப் பெறும் முறையும், பெற்றுப் பயன் அடையும் முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 9

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில்
ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

பொழிப்புரை :

`உயிரின் இருப்பு, சத்தயோடு கூடிய சிவனது விளையாட்டே` என்றால், அச்சிவன் அவ்வுயிரை யாதாக்குவான் எனில், ஆணவத்தைப் போகக்தற்கண் தம்மில் ஒரு தன்மைப்பட்ட, `சுத்தம், அசுத்தம்` என்னும் இருமாயையால் ஆகிய கருவிக் கூட்டத்துள் அவ்வுயிரை முதற்கண் புகுவித்து அந்நிலையில் அவற்றின் வினைகளை அவை நுகரச் செய்து, அக்கருவிகள் கூடுதல் குறைதல்களால் உளவாகின்ற கேவல ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை கட்குப் பின் திருவருளால் உளவாகின்ற சுத்த ஐந்தவத்தையை அடை வித்து இறுதியாகத் துரியத்தையும் நீக்கித் துரியாதீதத்தில் சேர்த்து, அங்ஙனம் சேர்க்கப்பட்ட அந்நிலையில் அதன் அறிவினிடமாகத் தான் விளங்கி, அதனாலே, தனது இன்ப வெள்ளமே அவ்வுயிர்க்கு என்றும் உறைவிடமாகச் செய்வான்.

குறிப்புரை :

`சத்தியோடு கூடிய சிவன்` என்றதனால், ஆதிசிவன்` என்பது பெறப்பட்டது. உயிரினது நிலைபேற்றை `உயிர்` என்றது ஆகு பெயர். விளையாட்டால் ஆவதனை, ``விளையாட்டு`` எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. ``ஆகில்`` என்னும் `செயின்` என் எச்சம் தெளிவின்கண் வந்தது. `சுத்தம், அசுத்தம்` என்பவற்றால் தம்மில் வேறுபாடு உடையவேனும், ஆணவத்தை நீக்குதற்கண் ஒரு தன்மைய ஆதல் பற்றி இரு மாயைகளையும் ``ஒத்த இரு மாயை`` என்றார். மாயை, ஆகுபெயராய் அதன் காரியத்தை உணர்த்திற்று. ``இடை`` என்பதன்பின், `புகுவித்து` என்பது எஞ்சிநின்றது. இறுதி யாதல் பற்றி, சுத்த துரியத்தினின்றும் பிரிவித்தலை மட்டுமே கூறினாராயினும், அதற்கு முன் நிகழ்வனவாகிய அனைத்து அவத்தைகளினின்றும் பிரிவித்தல் ஆற்றலால் விளங்கிற்று. அறிவை, `சித்தம்` என்றல் வழக்கு. `சிவம்` என்பது, இங்கு, `இன்பம்` என்னும் பொருளதாய் நின்றது. `சிவத்தை` என இரண்டாவது விரிக்க.
இதனால், மேலை மந்திரத்தில் ``முறைசொல்லின்`` எனக் குறிக்கப்பட்ட `முறை` இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும்
சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.

பொழிப்புரை :

உலகமே ஆதி சிவனது விளையாட்டாம். அவன் ஆதி சத்தியைக் கொண்டே அனைத்தையும் செய்வனாயினும் அச் சத்தியும், அவனும் உலகத்துத் தலைவியரும், தலைவரும் போல வேறு வேறானவர் அல்லர். சத்தியே `சிவனும்` சிவனே சத்தியும் ஆவர். எனினும் சில வேறுபாடு பற்றி, சத்தி எனவும், `சிவன்` எனவும் பிரத்து வழங்கப்படுகின்றார்கள். அதனாலே இலிங்கத்திலும் அவ்வேறுபாடு காணப்படுகின்றது. அஃதே பற்றி, அதனை, `உலகத்தாரது உருவம் போல இருவேறு பொருள்களின் கலப்பு` என மயங்கற்க. இனி உண்யைாக உணர்ந்தால், சத்தியே அனைத்துத் திருமேனிகளுமாய் நிற்கும்.

குறிப்புரை :

`தாரணி` என்பது `தாங்குவது` என்னும் பொருட்டாய் நிலத்திற்கு, பெயராகும். அத்தகைய நிலமாவது மண்ணிலம் மட்டு மின்றிப் பொன்நிலம் முதலியனவும் நிலமேயாதலின், ``தாரணி`` என்றது எல்லா உலகங்களையும் குறித்தது. அவற்றைச் சிவனது விளையாட்டு என்று, மேலைமந்திரத்திற் கூறியவாறே உபசாரமாம், ``விளையாட்டாம்`` என மேற்கூறியதனையே இங்கு மீட்டுங் கூறியது, மேற்கூறிய உயிரேயன்றி, `ஏனைப் பொருள்கள் பலவும் அத்தகை யனவே` என்பது உணர்த்துதற்கு. மேல், சிவனை, ``எந்தை`` எனவும், சத்தியை, ``என்னம்மை`` எனவும் கூறியதனால், அவ்விருவரும் `உலகத்துத் தந்தை தாயரைப் போல வேறுவேறானவர் போலும்` என மலையாமைப் பொருட்டு, சத்தியே சிவனும் ஆவாள்; சிவனே சத்தியும் ஆவான்` என விளக்கிக் கூறினார். `விந்துவதே பீடம்; நாதம் இலிங்கமாம்`` என ஆத்துமலிங்க அதிகாரத்தில் கூறிய குறிப்பின்படி இலிங்கமும் ஒருபெற்றித்தாய் இராமல் இருவேறு வகையாய்க் காணப் படுதலால் அதுபற்றியும் மேற்கூறியவாறு மலையாமைப்` பொருட்டு, ``தாபரம் வேறில்லை`` என்றார். `இச்சத்தி சிவனன்றி` எனச்சுட்டு வரு வித்து, `தாபராம் இத்தன்மையராகிய சத்தியும் சிவனுமேயன்றி வேறில்லை` என உரைக்க. `தாபரமும்` என்னும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `திருமேனிகள் எல்லாவற்றிலும் சத்தி மூர்த்தியாய் நிற்கச் சிவன் மூர்த்திமானாய் நிற்பன்` என்றற்கு, `திரு மேனிகளில் சில சிவனது வடிவமே` என்றும், சில இருவரும் ஒன்றாய் இயைந்த வடிவம் என்றும் எண்ணுமாறு நிற்றல், கடவுட் பொருள் ஒன்றேயாயினும், அஃது இருதன்மையை உடையது` என்பதைக் குறித்து நிற்கும் அடையாளம் ஆதலேயனஅறிப் பிறிதில்லை` என்றதாயிற்று.
``வேர்த்து வெகுளார்`` * என்பதனை, `வெகுண்டு வேரார்` என முன்பின்னாக மாற்றிப் பொருள்கொள்ளுதல் போல, ``சமைந்துருவாகும்`` என்றதை, `உருவாகிச் சமையும்` என மாற்றிக் கொள்க. இதற்குப் பகலவன் ஒருவனே `கதிரவனும், கதிரும்` என இருதன்மையை உடையனாய் இருத்தலை உவமையாகக் கூறுவர்.
சத்தி சிவனது இயல்பினை இங்குக் கூறியவாறே,
``அருளுண்டாம் ஈசற்(கு) அதுசத்தி, அன்றே;
அருளும் அவனன்றி யில்லை - அருளின்(று)
அவன்அன்றே யில்லை; அருட்கண்ணார் கண்ணுக்(கு)
இரவிபோல் நிற்கும்அரன் ஏய்ந்து`` *
எனவும்
``அருளது சத்தியாகும் அரன்றனக்(கு) அருளையின்றித்
தெருள்சிவம் இல்லை; சிவம்இன்றிச் சத்தி யில்லை``
``சத்திதான் நாதமாதி தானாகும்; சிவமும் அந்தச்
சத்திதா னாதி யாகும்; தரும்வடி வான வெல்லாம்
சத்தியும் சிவமுமாகும்`` l
எனவும் கூறப்பட்டன.
இதனால், மெய்ப்பொருளது தன்மையினை இங்ஙனம் உள்ளவாறுணர்தலே ஞானலிங்கமாதல் கூறப்பட்டது.
சிற்பி