ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்


பண் :

பாடல் எண் : 1

உடல்பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினைப் பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாங்கிக்
கடிய பிறப்பறக் காட்டினன் நந்தியே.

பொழிப்புரை :

எம் அருட்குரவராகிய நந்திபெருமான் எம் உடல், பொருள், ஆவி என்பவற்றை யாம் நீர் வார்த்து ஒப்புக் கொடுக்கச் செய்து அவை முழுவதையும் தம்முடையனவாக ஏற்றுக்கொண்டு, அதனால் விரிந்து கிடந்த எமது வினைப்பரப்பு முழுவதையும் ஒரு நொடியில் பற்றற்றொழியப்பண்ணி, அதன்பின் தமது திருக்கையை எம் தலைமேல் வைத்துத் தீண்டிப் பின்னும் தமது திருவடிகளை எம் தலைமேற் சூட்டி, இவ்வாற்றால் யாராலும் உரைப்படாதவற்றை யெல்லாம் உணரும் பேரறிவை எமக்குத் தந்து, வலிமை வாய்ந்த பிறவித் தொடக்கு அற்றொழியும்படி அருள்புரிந்தார்.

குறிப்புரை :

இதனால், `மக்கட்கு ஞானம் கிடைக்குமாறு இவ்வாறு` என்பது உணர்த்தப்பட்டது. நூல் சகலருக்கேயாதலால், இங்குக் கூறிய முறையும் சகலர்க்கேயாதல் தெளிவு.
ஞானம் இறைவனாலல்லது தரப்படாது. `அதனை அவன் சகலர்க்கு ஆசான் மூர்த்தியாய் நின்றே அருளுவான்` என்க. பிரளயா கலர்க்கு ஒருகால் தனது இயற்கை வடிவில் முன்தோன்றியும், விஞ்ஞான கலர்க்கு உயிர்க்குயிராய் உள்நின்றேயும் உணர்த்துவான்.
ஞான நெறியில் நிற்பவர் தமது உடல், பொருள், ஆவி மூன்றனையும் சிவனுடையனவாகவே உணர்ந்து அவற்றைக் குருவினிடத்தில் நீர் வார்த்து ஒப்புவிக்குமிடத்து, `பொருள்` எனப்படுவன பொன், மணிமுதல் பல்வேறு வகையான செல்வங்கள் மட்டும் அல்ல; `யான் இதனைச் செய்தேன்; என் செயல்கள் இவை` எனப் பற்றி நிற்கும் வினைகளும் `பொருள்` எனப்பட்டு, அவைகளும் நீர்வார்த்து ஒப்புவிக்கப்படும். முதல் நாள் ஒப்புவித்த அந்த உணர்வு எந்நாளும் நீங்காது நிலைத்திருத்தற்குச் சிவனை நாடோறும் வழிபடும் போதெல்லாம் வழிபாட்டின் முடிவில் அந்த வழிபாட்டின் பயனையும் ``சிவோதாதா, சிவோபோக்தா`` என்னும் மந்திரத்தை ஓதி நீர்வார்த்து அவனிடமே ஒப்புவிப்பர். அதுவும் இங்குச் `சம்பிரதாயம்` என்றதனால் பெறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியலார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே
உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

பொழிப்புரை :

சிவனை அடைய வேண்டினார்க்கு உடல் பொருள், ஆவிகளை அவனுடையனவாக ஒப்புவித்த பின்பும் மூச்சுக் காற்றினை இயக்கம் இடைவிடாது இயங்கியே நிற்கும் ஆதலின் அதுவும் அவர்கட்குச் சுமையாகும். அதனால், அதனையும் `ஆசிவன், ஆதிசத்தி` என்பவர்க்கு உரியன ஆகும்படி சிவகுரு நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்வார்.

குறிப்புரை :

``பரமும்`` என்னும் உம்மையை, ``பிராணன்`` என்பதன்பின் கூட்டி, ``பரம்`` என்பதை அதற்கும் கூட்டுக. வியல் - பரப்பு. அஃது இங்குப் பெரிதாதலைக் குறித்தது. பரம் - பாரம்; சுமை.
பிராரத்த வினை உள்ள வரையில் உடம்பு நீங்காது ஆகையால் உடம்பு நிற்றற்பொருட்டுப் பிராணவாயு இயங்கியே நிற்கும். அஃது இயங்கி உடம்பும் நிற்கவே, உடலோம்புதற் பொருட்டுச் சிறிதளவாயினும் உணவு தேடுதல், வெயில் பனி மழை முதலியவற்றால் வாட்டமும், மகிழ்ச்சியும் கொள்ளுதல் முதலியன நிகழும் ஆதலின் அவை ஆகாமியமாகி விடுதல் பற்றி, ``பின் பிராணனும் பரம்`` என்றார். `ஆயினும் மேற்கூறியன நிகழுங்கால் அவற்றைத் தம் செயலாகக் கொள்ளாது சிவன், சத்தி இவர்களது செயலாக உணரின் அவை ஆகாமியமாய் முடியா ஆதலின் அவற்றை அங்ஙனம் உணர்தற்பொருட்டு, குருமூர்த்திகள் நாள்தோறும் வழி பாட்டில் அவற்றையும் நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்ளுதல் மரபு` என்றற்கு, ``உய்ய, உயல் ஆர் குருபரன் சிவன் சிற்சத்தி ஆதிக்கே கொண்டான்`` என்றார். ஆர் குருபரன் = ஆர்க்கின்ற - நிறைக்கின்ற குருபரன். `சிவகுரு` என்றற்கு, `குரு` என்று ஒழியாது, ``குருபரன்`` என்றார். சிவனும், சத்தியும் தொழில் செய்யாது வாளா இருக்குங்கால் `அனாதி` என்று சொல்லப்பட, ஐந்தொழில் செய்யுங் கால் `ஆதி` என்று சொல்லப்படுதல் பற்றி ``ஆதி`` என்பதன் பின், `ஆக` எந்பது வருவிக்க.
முன்னை மந்திரத்தில் சஞ்சிதத்தை ஒப்புவித்தல் கூறி, இம்மந்திரத்தில் ஆகாமியத்தை ஒப்புவித்தல் கூறினார்.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே`` *
எனவும்,
``இடை ஏறும்வினை - தோன்றில் அருளே சுடும்`` l
எனவும் கூறுதல் காண்க.
ஞானம் பெறுமாற்றினைத் தாம் பெற்றவாற்றில் வைத்து விளக்கியவாறு.

பண் :

பாடல் எண் : 3

பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன்
`நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதம்இது வாய்திற வாதே.

பொழிப்புரை :

தான் வடக்கு நோக்கி அமர்ந்திருந்து, என்னைக் கிழக்கு நோக்கிச் சிவனை தியானித்து இருக்கும்படி பணித்த என் ஞானாசிரியர், பின்பு, `சிவன் உன் சிந்தனைக்கு அகப்படவில்லை யாகையால் நீ என்னையே சிவனாகத் தியானம்செய்` என்று அருளிச்செய்தார். அவர் அங்ஙனம் அருளிச்செய்த அந்தத் தியானம் எனது உச்சிக்குக் கீழும், உள்நாக்கிற்கும் மேலும் ஆகிய புருவ நடுவில் நிகழ்வது. அவ்விடத்து நிகழ்வதாகிய அந்தத் தியானமானது சொல் நிகழ்ச்சியோடு கூடாது, மனத்தொழில் மாத்திரையாய் நிற்பதாகும்.

குறிப்புரை :

``பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியான்`` என்ற ஞானத்தை உணர்த்தும் முறை மரபினை எடுத்துக் கூறியவாறு, `வைச்ச இது பதம்` என மொழி மாற்றி யுரைக்க. இது பதம் - இந்த இடம். இஃது ஆகுபெயராய், இதன்கண் நிகழும் தியானத்தைக் குறித்தது. ``திறவாது`` என்பது, `திறக்கப் படாது` எனச் செயப்பாட்டு வினையாய் நின்றது. சொல் நிகழ்த்துதலை, `வாய் திறத்தல்` என்றது பான்மை வழக்கு.
மனத்தின் தொழில் சொல் நிகழ்ச்சியோடு கூடியும் நிகழும் ஆகலின் அவ்வாறு நிகழ்வது `தியானம்` எனப்படாது, - சொல் நிகழ்ச்சியின்றி நிகழ்வதே தியானமாம் - என்றற்கு ``வாய்திறாது`` என்றார். அசிந்திதனாகிய சிவனைச் சிந்திதனாகக் காண்பதற்கு உரிய குரு, லிங்கம், சங்கமம் என்னும் மூன்றனுள் குரு சிறந்து நிற்றல் இங்குப் பெறப்பட்டது.
இதனால், ஞானத்தைப் பெறு முறையும், பின் அதனை நிலை பெறுத்திக் கொள்ளும் முறையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

பொழிப்புரை :

`இவ்விடம், அவ்விடம்` என்பதில்லாமல் எங்கும் சென்று, எனது பிடிவாதக் கொள்கையையே வலிந்து கூறி வாயில் வந்தவற்றைப் பிதற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருந்த என்னைச் சிவகுரு எதிர்ப்பட்டு, எனது அகக்குற்றங்கள் எல்லாவற்றையும் ஒட்டடையை அடித்து நீக்குவது போல நீக்கி, அவைகளைத் தன் பக்கமாக எடுத்துக்கொண்டு, தன்னையும், என்னையும் ஒரு நிகராக வைத்துக் கொடுத்தும், கொண்டும் மாற்றிக்கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை முற்ற நீக்கினமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளாயினோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.

குறிப்புரை :

பெள்+டு=பெட்டு. `விரும்பப் பட்டது என்பது பொருள். அது விரும்பப்பட்ட கொள்கையைக் குறித்தது வலியுறுத்திப் பேசுதலை `அடித்தல்` என்பர். `அடித்து` என்றது `அடித்தது போன்று` எனப் பொருள்தந்தது. `ஒட்டு` என்னும் முதனிலைத் தொழிற்பெயர், அதனையுடைய பொருளைக் குறித்தது. வாங்குதல் - தனது ஆற்றலால் தன்னைக் கடந்து செல்லாது தன்பக்கமே நிறுத்துதல். மல மாயா கன்மங்கள் நீக்கப்படுமேயன்றி, அழிக்கப்படா ஆதலால், `வாங்கி` என்றார். தட்டு - துலைத்தட்டு. ஒதத்ல், நிறையால் ஒத்து நேர் நிற்றல். `மாறினன்` என்றொழியாது ``ஒக்க மாறினன்`` என்றது, ஒவ்வாததனை ஒக்கப்பண் மாறினன்` என்பது தோற்றுதற் பொருட்டு. மாறுதல் - விற்றல். ``தன்னை மாறி யிறுக்க உள்ள கடனஅகள்``l என்றாற் போல்வன காண்க. விற்றமை கூறவே, வாங்கினமை தானே பெறப்பட்டது. தன்னை விற்றமை, தன் தன்மையை சீவனிடத்துப் பதிவித்தமை. என்னை வாங்கினமை, சீவபோதத்தைத் தன்னிடத்து ஒடுக்கினமை - ``வாணிபம் வாய்த்து`` என்றதனால், `அது பொருந்தா வாணிபம்` என்பதும், `வட்டமதொத்தது`` என்றதனால், `அஃது அங்ஙனமாயினும் அதன்கண் உள்ள பொருந்தாமை நீங்கினமையால் அது தக்கதாயிற்று` என்பதும் போந்தன.
``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்`` 3
என்பதிலும், `சிவன் மேற்கொண்ட வாணிபம் பொருந்தா வாணிபம்` என்பது குறிக்கப்பட்டது. `வட்டம், வாசி` என்பன, தரக்குறைவை உணர்த்தும் ஒருபொருட் சொற்கள். `வட்டம தொத்தது`` என்றது `தரம் குறைவு நீங்கி நேரியதாயிற்று` என்றபடி. ``ஒத்தது`` என்பதன்பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், இறைவன் தானே குருவாய் நின்று உயிரைச் சீவத்தன்மை நீக்கித் தன்மையை எய்துவித்துத் தானாக்கிக் கொள்ளுதலாகிய ஞானச் செய்தி இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.

பொழிப்புரை :

உலகத்தார் உலக உணர்வைத் தருகின்ற நாதத்தின் புறப்போக்கினை நீக்கமாட்டாமையால் தன்னால் தாங்கப்படுகின்ற அனைத்துயிர்கட்கும் தலைவனாய் அவற்றின் உள்ளும் புறம்புமாய் உள்ள இறைவனது இருப்பையும், அவனது பெருந்தன்மையையும் சிறிதும் உணராது அல்லற்படுவர். யான் அவன் வந்து உண்மையை உணர்ந்தமையால் அந்த நாதத்தின் மாறுபாடாகிய புறநோக்கைப் போக்கி அவனது அருளையே கண்ணாகக் கொண்டு காணும் அக நோக்கினை எய்தினமையால் அவனது இருப்பையும், இயல்பையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.

குறிப்புரை :

`இஃதே ஞானமாவது` என்பதாம். ஞானத்தினது இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு அஞ்ஞானத்தினது இயல்பை யும் உடன் எடுத்து ஓதினார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள்.
விந்து - சுத்த மாயை. அதுவே நாதமாய் நின்று புறப்பொருள் உணர்வைத் தருதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்துப் பிணக்கு`` என்றார். அகநோக்கால் சிவனைச் சார்தலும், புறநோக்கால் அவனின் நீங்கி உலகைச் சார்தலும் உயிர்க்கு உளவாதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்து`` என்றார். `விந்துவால் விளையும் ஞானம் பாசஞானம் என்பதையும், `அந்த ஞானம் பதிஞானத்திற்குத் தடையாய் நிற்கும்` என்பதையும்,
``வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்தறங்கள் மேலாம்
நாதமுடி வானவெலாம் பாசஞானம்`` *
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியினான்றன் சேவடி சேர லாமே`` *
எனவும் ஓதியவாற்றான் அறிக. `கருக்கொள்ளுதல்` என்பது, உயிர்களைத் தனது வியாபகத்துள் அடக்கி நிற்றல், உயிர்களுக்கு உயிராய் அவற்றின் உள்நிற்றல் ஆகிய இரண்டினையும் குறித்து. `தலைவன்` என்பதன்பின் `தலைவனாய்` என ஆக்கச் சொல் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வாளா, `தலைவனாய் இருக்கின்ற தன்மையை` என்றார். `கண்டேன்`, என்னாது, ``கண்டு கொண்டேன்`` என்றது நன்குணர்ந்தமை பற்றி.
இதனால், `ஞானம் ஒன்றே அஞ்ஞானத்தை நீக்குவது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கூடும் உடல்பொருள் ஆவிக் குறிக்கொண்டு
நாடி அடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினிற் பற்றற நீக்கியே
கூடியே தான்அவ னாம்குறிக் கொண்டே.

பொழிப்புரை :

சிவன் தன்னை அடையும் செவ்வி வாய்ந்த உயிரையும், அதனது உடல் பொருள்களையும் தன்னுடையனவாக ஏற்றுக்கொள்ளுதலையே குறிக்கோளாகக் கொண்டு, அவ்வுயிர் வாழும் இடத்தை நாடி அடைந்து, தனது திருவடிகளை அதனது திரு வடிகளை அதனது முடிமேற் சூட்டி, அதன்பின் வழங்கிய ஞானத்தின் துணையால் அவ்வுயிர் இழிவுடைய உடலில் முன்பு கொண்டிருந்த பற்றை அறவே விடுத்து, அச்சிவன் ஒருவனையே குறிக்களோகக் கொண்டு அவனை அடைந்து, தான் அவனேயாகிவிடும்.

குறிப்புரை :

``ஆவி`` என்பதை, ``கூடும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அருள் ஞானம்`` இறந்தகால வினைத்தொகை. `தனது ஞானம்` என்பது உணர்த்தற்கு. `ஞானம்` என்று ஒழியாது, ``ஞான சத்தி`` என்றார். பாடு - மேன்மை. அதனை, `பாடு பெறுதியோ நெஞ்ே\\\\u2970?`` l என்பத னானும் உணர்க. மேன்மையன்மை கீழ்மையை உணர்த்திற்று. `கூடிய` என்பதும், `குளிக்கொண்டு` என்பது பாடம் அல்ல.
இதனால், `ஞானம் பெற்றவரே வீடுபெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ள
கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினை
கொண்டான் பலம்முற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.

பொழிப்புரை :

சிவன், யான் அவனுக்கு அடிமையாதலை உண்மையாக உணரும்படி அவன் நேர் வந்து என்னை ஆட் கொண்டான். அதனால் என் ஆவி, உடல், பொருள் அனைத்தையும் தன்னுடையனவாக ஏன்று கொண்டான். அவையேயன்றி, யான் செய்யும் செயலால் விளையும் பயனையும் தன்னுடையனவாகக் கொண்டான். இங்ஙனம் அவைகளை அவன் கொண்டது புதிதாகாது முன்பே அவன் என்பால் கொடுத்து வைத்தவறஅறைத் திரும்பப் பெற்றுக்கொண்டதே யாகலின், `என்னுடையவைகளை அவன் கொண்டு போய்விட்டான்` என்று யான் எங்ஙனம் முறையிட முடியும்? முடியாது ஆகையால் யான் பேசாதிருந்துவிட்டேன்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளிலும் இரண்டாம் வேற்றுமை, தொடர்களின் இறுதிகளில் இறுதிகளில் தொக்கும். விரிந்தும் நின்றது. `அடியேன் குறிக்கொள்ள` என மாற்றி வைத்து உரைக்க.
இதனால், `ஞானமாவது, உள்ளதாய், முன்பு உணரப்படாது இருந்ததனை உணர்தலேயன்றிப் புதுவதாய் விளைகின்ற ஒன்றை உணர்தல் அன்றஉ` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில்
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

பொழிப்புரை :

வினைக்கீடாகக் குறிக்கப்பட்ட உடம்பும், அவ் வுடம்பைத் தன்னுடையதாகக் கொள்ளும் உயிரும் ஒன்று சேர்ந்தவுடன், பிராணவாயுவும் நெறிப்பட்டு இயங்கத் தொடங்கும். (அங்ஙனம் இயங்குதல் உயிர் அவ்வுடம்பில் நிலைத்திருத்தற்குத் துணையாகவேயாம்) ஆகவே, அந்தப் பிராணவாயுவின் இயக்கத்தால் அந்த உடம்பில் நிலைபெற்றிருக்கின்ற அந்த உயிரிட மிருந்து அந்த உடம்பு ஒருகாலத்தில் பறிக்கவேபடும். அதனால், உயிர் உடம்பின் வேறாயினும், அஃது அதனைப்பற்றி நிற்றற்குரிய காரணத்தை உணர்ந்து அவ்வுணர்வால், தம்மை உடம்பின் வேறாக உணராது, உடம்பாகவே மயங்கி உலக வாழ்வில் இச்சை கொண்டு அலைபவர் பேயோடு ஒப்பர்.

குறிப்புரை :

`இவாவுயிருக்கு இஞ்ஞான்று இவ்வுடம்பு உரியது` எனக்குறிப்பதும், இவ்வுடம்பில் பிராணவாயுவை இயங்கச் செய்த அதனால் அவ்வுயிரை அவ்வுடம்பில் சிலகாலம் நிலைப்பிப்பதும், பின்பு அவ்வுடம்பை அவ்வுயிரிடமிருந்து பறித்துவிடுவதும் எல்லாம் இறைவனது ஆணையேயாதலும், அந்த ஆணை அவ்வாறெல்லாம் செய்தற்குக் காரணம் உயிர்களின் வினையே ஆதலும் ஆகிய வற்றையே இங்கு ``நேர்மை`` என்றார். `நீர்மை` எனப்பாடம் கொள்ளுதலும் பொருந்தும்.
`பிராணன், நேர்மை` - என்பவற்றில், `ஆல்` உருபு விரித்துக் கொள்க. ``நேர்மையால்`` என்றது, `நேர்மையை உணருமாற்றால்` என்றபடி, பேய்க்கு வயிற்றுக்குத் தேடுதல் ஒன்றன்றிப் பிறிது குறிகோள் இல்லாமை பற்றி அத்தன்மையரைப் போயோடு ஒப்பிட்டார்.
இதனால், `ஞானம் பெறாதார் தம்மையும், தமக்கு உறுதியானவற்றையும் உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

உணர்வுடை யார்கட் குலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்
உணர்வுட யார்கள் உணர்ந்துகண் டாரே.

பொழிப்புரை :

குருவருளால் ஞானத்தை உணர்வாட்கு உலகத்தின் இயல்பும் தோன்றும். (உம்மையால், உலகத்தைச் செயற்படுத்தி நிற்கின்ற முதல்வனது இயல்பும் தோன்றும்) ஆகவே, உலகத்தைப் பற்றாது விடுத்து முதல்வனையே பற்றி நிற்பர் ஆகையால் அவர்கட்கு உலகத்தால் ழிளக்கப்படும் துன்பம் இல்லையாகும். (முதல்வனால் தரப்படும் இன்பமே விளயும்.) குருவருளால் ஞானம் பெற்றவர்கள் அதனை முதற்கண் கேள்வியளவாகவே உணர்ந்தாராயினும், பின்பு சிந்தித்துத் தெளிந்து கொள்வார்கள்.

குறிப்புரை :

எனவே, `கேட்டல் அடிப்படை` என்பதாம். உயிர்கள் ஞானத்தைப் பெறும் முறைமையை இவ்வதிகாரத்து முன் மந்திரத்திற்கு முன்மந்திரங்காறும் விரித்தருளிச் செய்தமையால் மீட்டும் அதனை எடுத்துக் கூறாராயினார்.
இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், ஞானம் படிநிலையான் முற்றுமாறும், அதன் பயனும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

காயப் பரத்தின் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத்
தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

பொழிப்புரை :

உடம்பாகிய சுமையைச் சுமந்து கொண்டே உலகெங்கும் திரிந்து, அவ்வுடம்பால் துரிய நிலையில் உணர்வு ஒடுங்கியும், சகல நிலையில் உணர்வு மிகவிரிந்தும் கருவிகள் முப்பத்தாறின் சேர்க்கையால் இவ்வாறெல்லாம் அலமந்து கிடந்த அடியேனுக்கு அக்கருவிகளில் ஒன்றோடும் படாது தூய்தாய் உள்ள திருவருளை வழங்கி அமைதியைக் கொடுத்தருளிய நந்தி பெருமானது கருணைக்கு நான் நன்று சொல்வது எவ்வாறு!

குறிப்புரை :

பரம் - சுமை. `இன்` ஒடுவின் பொருளில் வந்த `ஆள்` உருபின் மயக்கம். இனி இதனைச் சாரியையாக்கி `ஒடு` உருபு விரிக்கினும் ஆம். `துரியத்துக் குவிந்து` எனக் கூட்டுக. `சாக்கிரம்` என்னின் கேவல சாக்கிரமும் ஆம் ஆதலின் அதனை விலக்கிச் சகல சாக்கிரத்தைக் குறித்தற்கு, ``சகலத்தில்`` என்றார் துரியத்தை அங்ஙனம் கூறாது வாளா ``துரியம்`` என்றமையால் அது கேவல துரியமே யாயிற்று. மக்களுடம்பையே பெற்றபோதிலும் உணர்வு இவ்வா றெல்லாம் கணந்தோறும் மாறி மாறஇ நிகழ்தலால் உயிர்க்கு உளதாகும் அலமரலைக் குறித்தவாறு. இவ்வலமரலையே நாயனார் முதல் தந்திரத்தில் ``உயிர் நிலையாமை`` - என அருளிச் செய்தார்.
இதனால், அஞ்ஞானம் காரணமாக அலமரும் உயிர்கட்குக் குருவாகி வந்து ஞானத்தை அருளி அமைதியைத் தரும் சிவபெரு மானது பேரருட்கு அவ்வுயிர்கள் செய்யும் கைம்மாறு யாதும் இன்மை கூறப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 11

நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

குருவருளால் ஞானத்தைப் பெற்ற சகல வருக்கத் தினர் பின்பு சிவன் ஆகாயம் போல வியாபகனாய் விளங்குதலை உணர்ந்து அதனால் சுட்டறிவை விட்டு எங்கும் வியாபகமாய் அவனை உணருமாற்றால் தேன் சுவையை நுகர்தல் போல அவனது தூய இன்பத்தை நுகருங்கால் அந்தச் சிவன் இவர்கட்குக் காட்சிப் படுதல், `நான் இன்பத்தைத் தருகின்றாய்` என இவ்வாறு வேறு நின்று நுகருமாறு அவன் இவரின் வேறாய் நிற்றல் அன்று. மற்று, இவர் உடம்பு போலவும், அவன் அவ்வுடம்பினுள் உள்ள உயிர் போலவும் உடனாய் நிற்கவேயாம்.

குறிப்புரை :

``மனிதர்கள்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் சுட்டி, அது முதலாகத் தொடங்கி ``நண்ணுதல்`` என்பதன் முதற்கண் வைத்து உரைக்க. ``வானவர்`` என்றது சிவனை உயர்வுப் பன்மையாற் குறித்தவாறு. ``நின்று`` இரண்டில் பின்னது `நிற்றலால்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. முன்னது அப்பொருளில் வந்த செயவென் எச்சத் திரிபு. `நண்ணுதல், நின்று` இவற்றிற்கும் வினைமுதல் பின்னர் வந்த ``வானவர்`` என்பதே. `திளைக்கின்ற வாற்றில்` என ஏழாவது விரிக்க.
``ஊன்`` என்றது. `உடம்பு` எனப் பொதுப்படவே அருளிச் செய்தாராயினும் அஃது அறிவுக்கருவிகளாகிய, உடம்பின் புறத்தில் உள்ள ஞானேந்திரியங்களையும், அகத்தில் உள்ள அந்தக் கரணங்களையுமே சுட்டி நின்றது. இவ் அறிவுக் கருவிகள் அறியுந் தன்மை யுடையனவாயினும் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தாலன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவுடையன வாயினும் சிவன் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தா லன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவடையனவாயினும் சிவன் அவற்றோடு உடனாய் நின்று அறிந்தாலன்றி அவை அறியமாட்டா. இந்நிலை பெத்தத்தில் மட்டுமின்றி முத்தியிலும் ஆதலை, ``ஊன் என, (வானவர்) ஊன் உயிர் என்ன உடன் நின்று`` என்றார். குருவருளை நினைப்பித்தற்கு மனித உயிரையே குறித்தார்.
இதனால், ஞானத்தின் முடிநிலைப் பயனாகிய பரமுத்தியின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன்இவன் ஆமே.

பொழிப்புரை :

உயிர்க்கு உறுதியறியாமை பற்றி மெய்ந்நெறி யாளனால் `அவன்` என அயலவனாகக் குறிக்கப்படுபவனும், தன்போன்றாரால் அடையலாகாத மேல் நிலையை அடைந்தமை பற்றி உலகியலாளனால் `அவன்` என உயர்த்துக் கூறப்படும் மெய்ந்நெறி யாளனும் ஆகிய இருவருமே சிவனை அறிந்திலர், அஃது எவ்வா றெனில், சிவனை ஆன்மா உண்மையாகவே அறிவுமாயின் அதன் அறிவில், அறிபவனும், (உம்மையால் அறியும் அறிவும்) இல்லை யாகும். (மேற்கூறிய இருவர் அறிவிலும் அறிபவராகிய தம்மை அறியும் `யான்` என்னும், தமது அறிவை அறிகின்ற `எனது` என்னும் அறிவும் இருத்தலால் அவர் சிவனை அறிந்தாராதல் எங்ஙனம்?) அவ் விருவரும் `யான், எனது` என்பன முற்றும் அறும்படி சிவனை அறிந்தா ராயின் அவருள் ஒவ்வொருவனும் ஒவ்வொருகாரணம் பற்றி மற்ற வனை, `அவன்` என வேற்று நிலையில் வைத்து எண்ணும் நிலைநீங்கி, `இவன்` என ஒருநிலையில் வைத்து எண்ணும் நிலை உண்டாய்விடும்.

குறிப்புரை :

``அவனை`` என இரண்டன் உருபேற்று நின்றவை மூன்றும் பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்து நின்றன. ஏனையவை, `அவன்` என்று சுட்டப்படுபவன் எனப்பொருள் தந்தன. ``அவனும், அவனும்`` என இருவரைக் கூறி, `அவர் இருவரும் சிவனை அறியார்` என்றமையால் `அவர் இருவரும் வேறு வேறு நிலையினர்` என்பதும், `ஆயினும் அவர் அறியாராயினமைக்குக் காரணம் ஒன்றே என்பதும் போந்தன ஆதலின், `அவ்இருநிலை` இவை என்பதும், `ஒன்றாகிய காரணம் இது` என்பதும் ஆற்றலால் கொள்ளப்பட்டன.
`உலகியலான் சிவனை அறியான் - என்பது வெளிப்படை; ஆயினும் மெய்ந்நெறியாளன் சிவனை அறியானாதல் எவ்வாறு என வியக்கத் தோன்றும், அங்ஙனம் வியப்புத் தோன்றக் கூறியது சொல் நயமாகும். முத்தி நிலையிலும் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகள் உள; அவற்றுள் துரியம், துரியாதீதம் என்பவையே சிறந்தவை. அவற்றுள் துரியாதீதமே முடிநிலை. அதன்கண் அறிவானும், அவனது அறிவும் உணரப்படாமல் அறியப்படும். பொருள் ஒன்றே உணரப் படும். அவ்வாறன்றி, மூன்று பொருள்களும் உணரப்படுதல் துரிய நிலையேயாதல் பற்றி, அந்நிலையில் நின்றானையும் சிவனை யறியாதவனாகக் கூறினார். துரிய நிலை அருள் விளக்க நிலையும், துரியாதீதநிலை ஆனந்த விளக்கமும் ஆதல் அறிக. இம்மந்திரத்திலும் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால் ஞானத்தின் பயனாகிய முத்தியின் முடிநிலை இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

நான்இது தான்என நின்றவன் நாடொறும்
ஊன்இது தான்உயிர் போல்உணர் வான்உளன்
வான்இரு மாமழை போற்பொழி வான்உளன்
நான்இது வாம்பரன் நாதனும் ஆமே.

பொழிப்புரை :

உயிர் என்றும் உடம்பு போல இருக்க அதன்கண் உயிர்போல நின்று அறிகின்ற ஒருவன் இருக்கின்றான். அவன், `இவ்வுயிர் நானே` எனத் திருவுளம் செய்து, அவ்வுயிரின் உள்ளத்தில் தனது கருணையை வானத்தில் உள்ள கரிய, பெரிய மேகம் மழையைப் பொழிவது போலப் பொழிவான். `இவ்வுயிர் யான்` எனத் திருவுளம் செய்கின்ற அவன் குருவுமாய் வந்து அருள்பவனாவான்.

குறிப்புரை :

``தான்`` இரண்டில் முன்னுத தேற்றப் பொருளிலும், பின்னது எழுவாய்ப் பொருளிலும் வந்தன. ``இதுதான்`` என்றது, `இந்த உயிர்தான்` என்றபடி. ``ஊன்`` என்பதன்பன் `ஆக` என்பது தொகுத்தலாயிற்று.
`இதுதான் ஊன் ஆக, உயிர்போல் உணர்வான் உளன்; அவன், - இது நான்தான் - என நின்று, உளன், வான் இருமாமழை போல் பொழிவான்` - எனக் கூட்டியுரைக்க.
உளன் - உளம்; போலி. `உளனில் பொழிவான்` என்க. ஈற்றடியில், ``நான் இதுவாம்`` என்றது, முதல் அடியில் கூறியதனை மீட்டும் அனுவதித்ததாம். ``நாதன்`` என்பது குருவை உணர்த்துவதொரு பெயர்.
``இது நானே`` - என்றது ``சிவோதயம் அஸ்தி`` என்னும் சித்தாந்த மகாவாக்கியப் பொருளைக் கூறியவாறு, ஆசிரியன் மாணவனது உயிரை இவ்வாறு பாவிக்கும் பாவனையால் அவனைச் சிவமாகச் செய்வன் என்க. `குரு சிவனே` என்றற்கு, ``நான் இது வாம் பரன் நாதனும் ஆமே`` என்றார்.
இதனால் ஆசாரியனால் சீவன் சிவன் ஆதலாகிய ஞானச் செய்தி மரபு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

பெருந்தன்மைத் தான்என யான்என வேறாய்
இருந்ததும் இல்லைஅ தீசன் அறியும்
பொருந்தும் உடல்உயிர்போல் உண்மை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

பொழிப்புரை :

உண்மையை உண்மையாக உணர்ந்து உயிர்கள் செம்மை எய்தும் வண்ணம் செய்கின்ற சிவன், `தீர உயர்ந்த பெருந் தன்மையை உடைய தான் அங்கே` எனவும், `தீர இழிந்த சிறு தன்மையை உடையயான் இங்கே` எனவும் இவ்வாறு வேறு வேறாய் முன்பு இருந்ததும் இல்லை. (உம்மையால், இனி இருக்கப் போவதும் இல்லை) மற்று, உடலில் உயிர் வேறறக் கலந்திருப்பது போல அவன் என்றும் என்னுள் ஒன்றாய்க் கலந்தேயிருக்கின்றான்; ஆயினும் அவன் அறிவான்; யான் அறிந்திலேன்.

குறிப்புரை :

`இது பொழுது அவன் அருளால் யானும் அதனை அறிந்தேன்` என்பது குறிப்பெச்சம். `இவ்வாறு அறிந்த இதுவே ஞானம்` என்றபடி.
இதனால், படலத்தால் மறைக்கப்பட்டிருந்த கண்ணை யுடையவன் அப்படலம் நீங்கியவுடன் முன் தான் காணாதிருந்த பொருள்களைக் காண்பது போன்றதே ஞானத்தைப் பெறுதல்` என்பதும், அங்ஙனம் கண்பெற்றவன் தன்முன் உள்ள பொருள்களைக் கண்டு மகிழ்தல் போன்றதே முத்திநிலையை எய்துதல்` என்பதும் கூறப்பட்டன.
சிற்பி