ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை


பண் :

பாடல் எண் : 1

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

பொழிப்புரை :

ஞானம் முதிரப் பெற்றவர்க்கு இலிங்க பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கரு வறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.

குறிப்புரை :

எனவே, `அவர்க்கு இங்குக் கூறிய கருவறை முதலியன வேறு வேண்டா` என்பதாம் இங்ஙனமாகவே அவர் எஞ்ஞான்றும் இவற்றால் பூசை செய்து கொண்டேயிருப்பர் என்பதாம். வேறு கருவறை முதலியன புறத்தே நேரினும் அவற்றை அவர் இவ்வாறு பாவித்தே வழிபடுவர் என்பது உணர்க. \\\"தெள்ளத் தெளிந்தார்க்கு\\\" என்றதனால் இவ்வியல்பு ஞானியர்க்கு என்பது வெளிப்படை. பிறரெல்லாம் புறத்துக் காணப்படும் கருவறை முதலியவற்றையே அகத்தில் கற்பித்துக் கொண்டு வழிபட்டுப் பின்பு புறத்தே வழிபடுவர் என்க. அகத்தும், புறத்தும் ஞானியர் செய்யும் சிவபூசை `ஞான பூை\\\\u2970?` என்றும், ஏனையோர் செய்யும் சிவபூசை `கிரியா பூை\\\\u2970?` என்றும் சொல்லப்படும்.
\\\"ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்\\\" *
என்று அருளிச் செய்து இக்கருத்துப் பற்றியேயாகும்.
\\\"வள்ளற் பிரானார்க்கு\\\" என்றது `வள்ளற் பிரானாரைப் பூசித்தற்கு` என்றபடி. \\\"புலன்\\\" என்றது புலன் உணர்வை, அஃது இயல் பிலே மயக்கத்தைச் செய்வதாதல் பற்றி, \\\"கள்ளப் புலன்\\\" எனவும், `அஃது அங்ஙனமாயினும் ஞானியர்க்கு அது தெளிவையே தருவ தாகும்` என்றற்கு, \\\"காளா மணிவிளக்கே\\\" என்றும் கூறினார். `கலா` என்பது `களா` என்றாகிப் பின், \\\"காளா\\\" என நீண்டது. கலா - கதிர்.
இதனால், சிவபூசையின் ஞானப் பகுதியின் இயல்பு கூறப்பட்டது. இனி அடுத்து வருகின்ற மந்திரமும் இதனையே கூறும். சிறப்புப் பற்றி இதுவே முன்னர்க் கூறப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 2

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

பொழிப்புரை :

வேள்வித் தீயில் சிவனை வழிபடுவோர் அவனை நோக்கி அத்தீயில் இடும் உணவை அவன் உண்டு மகிழ்வதாகவே கருதுகின்றனர். ஆயினும் அவர் கருத்தை அவன் உடன் பட்டு நின்றே அவர்கட்கு அருள் புரிகின்றான். இனி இலிங்கத்தில் அவனை வழிபடுவோர் அவ்விலிங்கத்தின் முன் வைத்துக் கையை அசைத்துக் காட்டுகின்ற பொருளை அவன் காணும் அளவிலே மகிழ்வதாகக் கருதுகின்றனர். அவர்கட்கும் அவர் கருத்தை உடன்பட்டே அவன் அருள் புரிகின்றான். அம்முறையில் அவனை உள்ளத்தலே உயிராகிய இலிங்கத்தில் வழிபடுகின்ற நாம் புறத்திலே வழிபடுவாரைப்போலப் பூசாகாலங்கலில் காட்டுதற்கு அங்கு எதனையுடையோம்? ஒன்றையும் உடையேமல்லோம். அதனால் அங்கு அவனுக்குக் காட்டும் உணவாவன அவனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற தோத்திரப் பாடல்களே யாகும். அதனால் அந்த உணவையே அங்கு நாம் காட்டுவோம். அஃது உண்மையில் சொல் வடிவாகவே யிருப்பினும் நமது கருத்து வகையால் அவனுக்கு அது பாலடி சிலேயாய் மகிழ்ச்சியைத் தரும்.

குறிப்புரை :

`ஊட்டி மகிழ்வித்தலும், காட்டி மகிழ்வித்தலும், எனச்சிவனுக்கு உணவைத் தரும் முறை இரண்டு என்றற்கும், அவ்விரண்டில் எந்த முறையையும் அவன் உணவைப் படைப்பார் கருத்து நோக்கி அதற்கிசைந்து அருள்புரிதலன்றி அவரது செயலால் தன் குறை நிரம்புதல் பற்றி அருள்புரிகின்றிலன் என்றற்கும் வேள்வி செய்வாரது செயலினையும் இங்கு உடன் குறிப்பித்தார். உண்பிப் பாரது கருத்தை உடன் படுதலையே \\\"உண்ணும்\\\" என உபசரித்துக் கூறினார். ஞான நெறியினது சிறப்புணரமாட்டாதார் புறத்தே பொருள்களைக் கொண்டு செய்யும் வழிபாட்டினையே சிறந்ததாகக் கருதுவர் என்பது தோன்றச் சிவபிரானை, \\\"வேட்டவி உண்ணும் விரி சடை நந்தி\\\" எனவும், `அங்ஙனமாயினும் ஞானபூசையே சிறப் புடையது என்றற்கு, \\\"காலையும், மாலையும் ஊட்டு அவியாவன பாட்டு\\\" எனவும், `அதுவே அவனுக்கு மிக விருப்பத்தைத் தருவது` என்றற்கு, \\\"உள்ளம் குளிர்விக்கும் பாட்டு\\\" எனவும் கூறினார்.
\\\"பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே\\\" *
என்று அருளிச் செய்ததும் காண்க.
\\\"வேட்ட\\\" என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவ்வவி காட்டுதும்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. \\\"காலையும், மாலையும்\\\" என்றதனால் காலை நேரம், மாலை நேரம் என்னும் இருநேரமாவது சிவபூசை செய்யத்தக்கது என்பது உணத்தப்பட்டது.
\\\"காலையும் மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம் ஆரூர் அரனெறி யார்க்கே,\\\"*
என்று அருளிச் செய்தமை காண்க.
`நிவேதித்தல்` என்னும் வடசொற்குப் பொருள் `நன்றாக அறிவித்தல்` என்பது. அதுவே தமிழில் `காட்டுதல்` எனப்படுகின்றது
இதனால், ஞான பூசையின் இயல்பு மேற்கூறப்பட்டவற்றிற்கு மேல் இன்றியமையாது கூறற்பாலதொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.

பொழிப்புரை :

பெருமையுடைய சதாசிவ மூர்த்தி அருவுருவத் திருமேனியனாயினும் அவன் அருவருமுங் கடந்த பரசிவனே என்பது தேற்றம், ஆதலால் இலிங்க வழிபாட்டில் சதாசிவ மூர்த்தியையே முறைப்படி ஆவாகனம் முதலியன செய்து ஒருவன் வழிபடு வானாயின், அவன் சிவனாம் தன்மைப் பெரும் பயனைப் பெறுவான்.

குறிப்புரை :

`வடிவம் யாதும் இன்மையால் அசிந்திதனாய் உள்ள சிவன் ஆன்மாக்களின் பொருட்டு வடிவங்கொண்டே சிந்திதனாய் நிற்றலால் பரசிவனைச் சதாசிவனாகக் கொண்டே வழிபட்டுப் பயன்பெறுதலே முறை என்றற்கு, \\\"பராபரன் ஆகும் சதாசிவன் றன்னை\\\" என்றார். \\\"ஆவாகித்து\\\" என்றது உபலக்கணம் ஆதலின், `ஆவாகணம் முதலியவற்றைச் செய்து` என்றதாம். ஆவாகனம் முதலியவாவன ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், நியாசம், அர்க்கியம், பாத்தியம், ஆசமனம், அபிடேகம், அலங்காரம், தூபம், தீபமம், நைவேத்தியம், ஆராத்திரிகம், பிரதட்சிணம், நமஸ்காரம், தோத்திரம், பிரார்த்தனை என்பன. இவற்றின் இயல்பெல்லாம் பத்ததிகளிலும், சிவபூசா விதி நூல்களிலும் அறிக; இங்கு விரிப்பின் பெருகும்.
\\\"மேன்முகம் ஈசானமாகவே கைக்கொண்டு\\\" என்றது, `மேல் சதாசிவலிங்கத்தின் இயல்பாகக் கூறியவற்றை அவ்வாறே உணர்ந்து செய்க` என அவற்றை இங்கு மீள நினைவுறுத்தியவாறு. `சீலம்` என்பது கடைக் குறைந்து, \\\"சீல்\\\" என நின்றது. சீலத்தை முகம் செய்தலாவது விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல்.
இம்மந்திரம் முதலாக வருவன எல்லாம் ஞானபூசை கிரியா பூசை இரண்டற்கும் பொதுவாவனவாம்.

பண் :

பாடல் எண் : 4

நினைவதும் வாய்மை மொழிவது மல்லால்
கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும்
கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

பொழிப்புரை :

சிவனை இலிங்கத்தின்கண் சதாசிவ வடிவில் வைத்து மேற்கூறியவாரெல்லாம் நினைதலும், அந்நினைவுகட்கு ஏற்ற மறை மொழிகளை அவ்வப்பொழுது முறையாகச் சொல்லுதலும், அவற்றோடு அவ்வவ்வுறுப்புக்களைப் பூவும், நீரும் கொண்டு போற்றுதலும் தவிர அவனைக் காண்பதற்கு வழி வேறில்லை. ஆகையால் அவனைக் காண வேண்டுவோர் பலரும் அவற்றையே செய்வர்.

குறிப்புரை :

`அதனால் நீவிரும் அவற்றையே செய்மின்` என்பது குறிப்பெச்சம். சொல் சுருங்க வேண்டி வேறு வேறாக ஓதினாரேனும் இவ்வாறு ஒன்றாக வைத்துரைத்தலே கருத்தென்க. `இலிங்கத்தில்` என்பதும், `சதாசிவவடிவில்` என்பதும் அதிகாரத்தால் வந்தியைந்தன. தாம் தம் பயனைத் தப்பாது தருதல் பற்றி மந்திரங்களை \\\"வாய்மை\\\" என்றார். நினைதல் முதலிய மூன்றும் முறையே மனம், மொழி, மெய் இவற்றின் செயலாதல் தெளிவு. எனவே முப்பொறிகளும் பூசையில் ஒருங்கு இயைதல் வேண்டும் என்பது பெறப்பட்டது. ஞான பூசையில் மொழி மெய் இவற்றின் செயல்களும் அவ்வாறே பாவிக்கப்படும் என்க.
இதனால், சிவபூசை முப்பொறிகளாலும் இயற்றற்பாலதாதல் கூறப்பட்டது. இடையே சிவபூசையின் சிறப்பும் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்தற்சித் தார்களே.

பொழிப்புரை :

தத்துவங்களில் ஒவ்வொன்றன் எல்லை காறும் அவற்றிற்குத் தலைவராக வைத்துப் பலராலும் திருமஞ்சனம் ஆட்டித் திருமாலை சூட்டி வழிபடப்படும் கடவுளர்களது உள்ளங்களில் சிவன் நிலைபெற்று நின்று அவ்வழிபாட்டின் பயன்களை அவரவர்க்கு வழங்கி நிற்றற்குக் காரணம் அவரெல்லாம் முன்பு சிவனைப் பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிடேகித்துப் பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து, கைகூப்பிக் கும்பிட்டு மனம் பொருந்தி வழிபட்டார்கள் என்பதே.

குறிப்புரை :

`என்பதே\' என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. அங்ஙனம் வழிபடப்படுவார் பிரமன், விட்டுணு என்னும் காரணக் கடவுளரும், பிறரும் ஆவர்.
\"அயன்றனை யாதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்\"
என்னும் சிவஞான சித்தியை இங்கு உடன் நோக்குக. இங்குக் கூறப்பட்ட மஞ்னம், மாலை, அஞ்சமுது என்பன உபலக்கணம். அவற்றால் சிவபூசைக்கு வேண்டப்படும் பொருள்கள் குறிக்கப்பட்டன. இதனால், சிவபூசையால் பெறப்படும் பயன்களுள் சிறப்புடையது ஒன்று எடுத்துக்கூறப்பட்டது. அதனானே `வழிபடப் படுபவன் சிவன் ஒருவனே\' என்பதும் `ஏனையோர் யாவரும் அவனை வழிபடுபவரே\' என்பதும் உடன் உணர்த்தப்பட்டன. வேதம், சிவன் ஒருவனையே \"விசுவ சேவியன்\" என்றும், \"தேயப் பொருள்\" என்றும் கூறும்.

பண் :

பாடல் எண் : 6

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே

பொழிப்புரை :

`சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவவிடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள்புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

\\\"இஃது அவர் வினையிருந்தவாறு\\\" என்பது குறிப் பெச்சம். \\\"உண்டு, உண்டு\\\" என்றது, அவற்றின் எளிமையும், முட்டின்மையும் கூறியவாறு.
\\\"கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள; நீருள;
கற்றைச் செஞ்சடை யானுளன்; நாமுளோம்;
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே\\\"l #
என்றதிலும் `எம் வினையே காரணம்` என்பதே குறிப்பு.
இதனால், சிவபூசை செயலால் எளிதாய்ப் பயனாற் பெரிதாயினும் அது நல்லூழ் உடையார்க்கன்றி ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

பொழிப்புரை :

(இங்கு இருக்க வேண்டிய இப்பாடல் பதிப்புக் களில் `மாகேசுர பூை\\\\u2970?` என்னும் அதிகாரத்திலும் அங்கு இருக்க வேண்டிய பாடல் இங்குமாக மாறியுள்ளன.)
புகழ்மிக்க நந்தி பெருமானாகிய எம் ஆசிரியர் எம்மை ஆளாக ஏற்றுக் கொண்டுபோய்த் திருமுன்பு சேர்ந்த, `நந்தி` என்பதையே தன் பெயராக உடைய சிவபெருமானை என்னால் ஆம் அளவும் துதிப்பதற்கு அந்த `நந்தி` என்னும் பெயரையே எப்பொழுதும் சொல்வேன்.

குறிப்புரை :

`இஃது எம் ஆசிரியர் ஆணை` என்றபடி, சிவபெரு மானுக்கு அவனது மூலமந்திரத்தில் உள்ள `சிவன்` என்பதே மெய்ப் பெயராயினும், அஃது அவனை வழிபடுவோர் யாவர்க்கும் பொதுவாய் நிற்க, அவரவரும் தம் தாம் தனித் தனிச் செய்யும் வழிபாட்டில் தம் பெருமானது மெய்ப்பெயராக ஒரு பெயரைக் கொள்ளுமாறு ஆசிரியர் பணிப்பர். அம்முறையில் நாயனார்க்கு அவர் வழிபடும் பெருமானது பெயராக `நந்தி` என்பதையே நந்தி பெருமான் அருளிச் செய்தார் என்க. இதனை நாயனார் எடுத்துக் கூறியதனால் சிவனைச் சிறப்பு வகையில் தமக்கே உரிய பெருமானாகக் கொண்டு வழிபடும்பொழுது அவனுக்கென்று ஒரு பெயரை அவரவரும் கொண்டு வழிபடல் வேண்டும் என்பது பெறப்பட்டது.
\\\"விட்ட\\\" என்பது, `அரசன் ஆக்கொடுத்த பார்ப்பான்` என்பதிற்போல, `சடையன்` என்னும் கோடற் பொருட் பெயர் கொண்டது. வருமளவும், ஆமளவும், \\\"நொந்து\\\" எனச் சினைவினை முதல்மேல் நின்றது. `வருந்தியேனும் செய்வேன்` என்றதாம். `நந்தி யென்னும்பேர் பிதற்றொழியேன்` என்க.
இதனால், சிவபூசையில் இன்றியமையாது கொளற்பால தொன்று கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

பொழிப்புரை :

தேவர்கட்கெல்லாம் தேவனாகிய சிவபெருமானே! யான் இப்பிறப்பினின்று நீங்கி எப்பிறப்பை அடைந்து எங்கேயிருந்து எதனை மறந்து போனாலும் திருத்தமான பூ, நீர் முதலியவற்றைக் கொண்டு உன்னைச் சிறப்புடன் பூசிக்கின்ற இந்த வழக்கத்தை மட்டும் மறவாமல் கடைப்பிடித்து நிற்கும் வரத்தை அடியேன் முற்றாகப் பெறும்படி அருள் செய்யவேண்டும்.

குறிப்புரை :

`அஃது ஒன்றே யான் உன்பால் வேண்டுவது` என்பது குறிப்பெச்சம். தம் அன்பு மீதூர்வால் இவ்விண்ணப்பத்தினை நாயனார் சிவபிரானிடம் செய்து நின்றைமையால், `சிவபூசை செய்வார் அப்பூசையில் இதனையே அவன்பால் வேண்டுக எனக் கூறி, அதனானே, சிவபூசையை மேற்கொண்டவர் அதனை ஒரு ஞான்றும் கைவிடுதல் கூடாது` என்பதனையும் உணர்த்தியவாறு. சொற்கிடக்கை முறை வேறாயினும் கருத்து நோக்கி இதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது. `நின்னை வழிபடும் வண்ணம் மறப்பின்மை பெறவேண்டும் என்க.
\\\"புழுவாய்ப் பிறக்கீனும் புண்ணியா உன்னடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\\\"l
என வேண்டினமையை நினைக.

பண் :

பாடல் எண் : 9

ஆரா தனையும் அமரர் குழாங்களும்
நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமே
ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :

தெய்வ வழிபாடுகளும், வழிபடப்படும் தேவர் கூட்டங்களும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நிலத்தில் எங்கும் அளவின்றி உள்ளன. உண்மையாக ஆராய்ந்தால், அவ்வழிபாடுகளில் வேறு வேறாகச் சொல்லப்படுகின்ற அளவற்ற பெயர்களும் சிவன் பெயர்களே என்பதும், `அனைத்துத் தெய்வங்களும் சிவனே` என்பதும் விளங்கும்.

குறிப்புரை :

`அதனால், சிவனையே நேராகப் பெரியோர் வழிபடுவர்` என்பதாம்.
\\\\\\\"காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை
மாண்பறம்; அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்க ளெல்லாம்
வீண்செயல்\\\\\\\"
எனவும்,
\\\\\\\"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்;மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும்; பிறக்கும்; இறக்கும்; மேல் வினையும் செய்யும்;
ஆதலால் அவையிலாதான் அறிந்தருள் செய்வனன்றே\\\\\\\"
எனவும்,
\\\\\\\"இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோ வந்து
அங்குவான் தருவர்? அன்றேல், அத்தெய்வம் அத்தனைக்காண்\\\\\\\" 8
எனவும் விளக்குதல் காண்க. (தெய்வப் பெயராய் வரும்) \\\\\\\"எல்லாப் பெயரும் பரமசிவன் பெயர் என்பதே வேதநூல் துணிபு என்பது ஆண்டுக் (சுவேதாச் சுவத உபநிடதத்தில்) காண்க\\\\\\\" என்னும் சிவஞான மாபாடியமும் 3 இங்கு நினைக்கத் தக்கது.
இவ்வாறெல்லாம் கூறுதல், `சிவபிரான் தவிர ஏனைத்தேவர் பலரும் பசு வருக்கத்தினரே` என்பதும், `சிவபிரான் ஒருவனே பதி` என்பதும் விளங்குதற் பொருட்டாம். ஆகவே, `பசு வருக்கத்தினரைப் பதியாகக் கருதிச் செய்தும் வழிபாடுகள் யாவும் நல்வினைகளாய்ப் பிறவியைத் தருதல் அன்றிப் பிறவியை நீக்கமாட்டா` எனவும், `சிவபிரானைப் பதியாக உணர்ந்து செய்யும் வழிபாடே தவமாய் ஞானத்தைப் பயந்து, அது வழியாக வீட்டைத் தரும்` எனவும் உணர்ந்து கொள்க. இம்மந்திரத்தல் பலவிடத்துப் பாடங்கள் திரிபெய்தன.
இதனால் சிவ பூசையின் தனிச் சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.

பொழிப்புரை :

பசுவினின்றும் பெறப்படுகின்ற அரிய பொருள் ஐந்தினாலும் திருமுழுக்காட்டித் தேவர் கூட்டம் வழிபட, ஆதியும், அந்தமும் இல்லாதவனாகிய சிவனது திருவருள் அவர்கள் உள்ளங்களில் மலர்ந்த தாமரை மலரில் தோன்பேல வெளிப்பட்ட விளங்கிற்று. (அதனால் அவர்கள் பேரின்பம் பெற்றனர் என்றபடி.) இங்ஙனம் தன்னை வழிபட்டு உய்தற்காகவே ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப் பத்து இந்திரியங்களையும் அவை செயற்படுதற்கு ஆற்றலைத் தருகின்ற தன்மாத்திரைகள் ஐந்தினையும் சிவன் உயிர்கட்குப் படைத்துக் கொடுத்தான்.

குறிப்புரை :

`அதனை உணர்ந்து அக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்` என்பதாம். பசுவினின்றும் பெறப்படும் அரும் பொருள் ஐந்தும், `பஞ்ச கௌவியம்` எனப்படும். அவை பால், தயிர், நெய் கோசலம், கோமயம் என்பன. இவை ஐந்தும் ஒன்றாகக் கலந்த பொழுதே `பஞ்ச கௌவியம்` எனப் பெயர்பெறும். அவற்றைக் கலத்தற்கு அளவுகள் உண்டு. கோசலம் - பசுவின் நீர். கோமயம் - சாணம். இவை தூய்மையின் பொருட்டு மிகச் சிறிதளவிலே சேர்க்கப் படும். இவற்றது சிறப்புணராது இக்காலத்துப் புத்தறிஞர் சிலர், இவற்றை நீக்கி, வெண்ணெய், மோர் இவற்றைக் கொள்ளல் வேண்டும்` என்பர். வெண்ணெய், நெய் இவற்றை வேறு வேறாகவும், தயிர், மோர் என்ப வற்றை வேறு வேறாகவும் வைத்து எண்ணிக்கை காட்டும் இவரது செயல் வியப்பிற்குரியதே. இவர்க்குச் சாத்திரமும் வேண்டா; சம்பிரதாயமும் வேண்டா ஆகலின் இழரைத் தெருட்டல் அரிது.
\\\"இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலம் அனைத்து நீக்குவது\\\"l
என்பன முதலிய மெய்ம் மொழிகளை இவர்கட்குக் காட்டிப் பெருவதென்?
தனித்தனியாக ஆட்டும்பொழுது பால், தயிர், நெய் என்னும் மூன்றுமே ஆட்டப்படும். அவைகளை எவ்வளவும் ஆட்டலாம். அதனால் சிறிதளவே கொள்ளுதற்குரிய கோசல கோமயங்கள் தனித் தனியாக ஆட்டப்படா.\\\"ஓர் பான் ஐங்குணனும்\\\" என்பதை ஓர்பானும், ஐங்குணனும்` என்க. பூதங்களின் குணமாகிப் புலப்படுத்தல் பற்றித் தன்மாத்திரைகளை, `குணம்` என்றார்.
இதனால், சிவபூசையில் கொள்ளத்தக்க ஒன்று கூறப்பட்டது. சிவபூசை செய்த மானுடப் பிறப்பின் பயன் என்பதை இடம் வாய்த்துழி உடன் கூறினார்.
\\\"மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காகஅன்றோ!
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ\\\" 3
என்றது காண்க. இச்செய்யுளிலும்.
\\\"பாவமும் பழி பற்றற வேண்டுவீர்,
ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்
மேவ ராய்மிக வும்நினைந் துள்குமின்\\\" *
என்னும் திருமொழியிலும் `சிவன் ஆவிவ் அஞ்சினை உகந்து ஆடுபவன்` என்பது உணர்த்தப்பட்டது. அஃதே, \\\"ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்\\\" * என்று அருளிச்செய்யப் பட்டது. \\\"அரன் அஞ்சு ஆடுதல்\\\" என்பதை, `அரன் ஆடும் அஞ்சு` என மாற்றிப் பொருள் கொள்க.

பண் :

பாடல் எண் : 11

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

பொழிப்புரை :

`தேவர்` என்பார் யாவரும் ஒவ்வொரு பொருட்கு அதன் எல்லையளவும் உரிமை பூண்டு நிற்பவரே. அவ்வுரிமையை அவரெல்லாம் நல்ல இடத்திலிருந் எடுக்கப்பட்ட பூவையும், அவ்வாறே நல்ல இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரையும் கையில் ஏந்திக் கொண்டு நீரை முகந்து வரும் கரிய மேகங்கள் போல ஓரோர் தலத்தில் சென்று மிக்க அன்புடன் சிவபெருமானைப் பூசித்து அவன் பெரிதும் அருள் செய்யவே பெற்றனர்.

குறிப்புரை :

`அதனால் நற்பேறுகள் யாவும் சிவபூசையின் வழிப்பெறும் பயனேயாம் என்றபடி, `முன் செய் பூசா பலம்` என்னும் வழக்கினை நினைக.
``வண்டுளரும் தண்டுழாய் மாயோன் இறுமாப்பும்,
புண்உரிகப் போதுறையும் புத்தேள் இறுமாப்பும்,
அண்டர்தொழ வாழ்உன் இறுமாப்பும் ஆலாலம்
உண்டவனைப் பூசித்த பேறென் றுணர்ந்திலையால்`` *
எனவும் ஆன்றோர் அருளினமை அறிக. இன்னும்,
``உலகா ளுறுவீர், தொழுமின்; விண் ஆள்வீர், பணிமின்; நித்தம்
பலகா முறுவீர், நினைமின்; பரமனோ டொன்ற லுற்றீர்,
நல்காமலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும்
அல காமுறுவீர், அரனடி யரை அலைமின்களே`` 3
என்றற்றொடக்கத்தனவும் காணத் தக்கன. `பிழைப் பின்றிப் பெற்ற பேரருள்` என்க. அருளால் பெற்றவற்றை ``அருள்`` என்றே உபசரித்துக் கூறினார்.
இதனால், `சிவபூசையே யாவராலும் செயற்பாலது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :

உள்ளே ஓட்டத்தையுடைய கடலாகிய கங்கை விரியப்பெறுகின்ற சடைமுடியை உடைய சிவபெருமான் பொருட்டு உள்ளத்திலே நிறைவதாகிய அன்பு என்னும் கடலுள் மூழ்கிப் பூவை நிறையப் பறித்துச் சுமந்துகொண்டு போய் போலியாகிய நற் குணங்களை ஒழித்து உண்மை நற்குணங்களை உடையவராய் வழிபட நினையாதவர்கள் துன்பமாகிய கடலுள் மூழ்குகின்றனர்.

குறிப்புரை :

இதனை மேற்காட்டிய `கால் நகம் தேயத் திரிந்திரப் போர்`` என்றது திருமொழிகளில் அறிக. ``வெள்ளம்`` பெருக்கெடுத்து ஓடுதலைக் குறித்தது கடலுக்கு ஓட்டம் இன்மையால் ஓடுகின்ற கடல் கங்கா நதியாயிற்று. நீர்க்கடல் புறத்தே உளதாகலின், உள்ளக் கடல்`` என்றது பேரன்பினையாயிற்று. ``ஓர்சுமை`` என்றது மிகுதியைக் குறித்தது. கள்ளம் - பொய்மை. `கள்ளக் கடல், அள்ளற் கடல்` என்பன உருவகங்கள், `அல்லல்` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. இனி, ``அள்ளல், ஒருவகை நாகம்`` என்றலும் ஆம்.
மேல் சிவபூசை செய்தார் எய்தும் பயன்களைக் கூறியதனால், இதனால் அது செய்யாதார் எய்தும் துன்பங்களைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 13

கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.

பொழிப்புரை :

`தம் பிறவியை கழிக்கின்றார்கள்` எனக் கூறப் படும் பழியைப் பொருட்படுத்தாது அதனுள் அகப்பட்டு நிற்கின்ற உலகர் பலரும், கழி பொருந்திய கடலின் ஆரவாரம் போலும் உலகியல் ஆரவாரங்களை ஒழித்துச் சிவனை வழிபடுகின்றவர்கள் இட்ட பூக்களும், போதுகளும் நிரம்பக் கிடத்தைப் பலகால் கண்டா ராயினும் அவை விளைக்கும் பயனை அறியமாட்டார்கள். ஆயினும், அப்பழி நீங்க அவரது கூட்டத்தினின்றும் வேறுபட்டு நின்று வழிபடுவோரைத்தான் சிவன் தனது திருவருள் வியாபகத்துள் வைத்துப் பாதுக்காக்கின்றான்.

குறிப்புரை :

`கடற் கௌவைபோலும் கௌவை` என்க. கௌவை - ஆரவாரம் உடைத்தல் - அழித்தல். வழிபடுவார்` என்பது எதுகை நோக்கி விரித்தல் பெற்றது `வழிபடுவார்` என்புழி, `சிவனை` என்பதும், ``மேவி நின்றான்`` என்புழி, `சிவன்` என்பதும் அதிகாரத்தால் வந்தன. வழிபடுவாரது மலரும் மொட்டும்` என ஆறன் உருபும், எண்ணும்மையும் விரித்துக் கொள்க பலரும் அறியார்கள்` என்க. இனி, `பலரும் அறியார்களாய்ப் பழிப்படுவார்` என முடிப்பினும் ஆம். வெளிப்படுதல் - விட்டு நீங்குதல் - தனது திருவடி வியாபகத்துள் அடக்குதலே `உச்சி மேவுதல்` எனப்படுகின்றது.
இதனால், சிவபூசை செய்வாரது உயர்வு, செய்யாதாரது இழிவும் ஒருங்கு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

பொழிப்புரை :

`பயனுடைய செயலாவது இது` என அறியும் அறிவு ஒன்றே ஒன்றுதான் இவ்வுலகில் உள்ளது. அஃது யாதெனின், பலவகை மலர்களைத் தூவி வழிபட்டு, அதனால் விளையும் பயனை அறிந்து அதனையே மேலும் மேலும் செய்பவர்க்குச் சிவன் தானே பலகாலும் வலியவந்து அருள் செய்தலை அறிதலேயாகும். ஆகையால் அவ்வறிவின்வழி ஒழுகுவார்க்குச் சிவன் அவர் சொல்லியவாறெல்லாம் என்றும் எளிவந்து அருளுவன்.

குறிப்புரை :

அவ்வாறு அருளுதலை, பொதிசோறு சுமந்து வந்தளித்தமை, இரந்துவந்து சோறிட்டமை, வற்கடம் வருத்தாது படிக்காசு தந்தமை, காசி வாசி தீர்த்து வழங்கினமை, துணைவிபால் தூது சென்று ஊடல் தீர்த்தமை முதலிய பலவற்றிலும் வைத்து உணர்க.
`பயனை அறியும் அறிவு` என்க பயன் தரும் செயலை, `பயன் என்றார் இரண்டாம் அடியின் இறுதியில் `அதனை யறிதல்` என்பது எஞ்சி நின்றது. ``அரன்`` என முன்னர்க் கூறினமையால், ``நயனங்கள் மூன்றுடையான்`` என்றது, `அவன்` என்னும் சுட்டளவாய் நின்றது. `வசனம்` என்பது `வயனம்` எனத் திரிந்தது.
இதனால், சிவன் தன்னை வழிபடுவார்க்கு இம்மையிலும் இனிதருள் செய்தல் கூறப்பட்டது.
``வேதன் நாரணன் ஆரணம் அறியா விழுப்பொருள்
பேதைபால்
தூதனாய் இருகால் நடந்திடு தோழன்
வன்மைசெய் தொண்டனுக்(கு)
ஆதலால் அடியார்களுக் கெளியான்
அடிக் கமலங்கள் நீ
காதலால் அணை; ஈண்டன வேண்டின
இம்மையே தரும கண்டிடே`` l
என அறிவுறுத்தினமை காண்க.

பண் :

பாடல் எண் : 15

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.

பொழிப்புரை :

சிவனைக் காணலுறுவார் யாவரும் அவனது திருவருள் வடிவாகிய அவனது திருவடியின் கீழ்த்தம்மைத் தாமே கட்டி வைத்து, அவனை மிக்க மலர்களைத் தொழுது துதித்தலையே செய்வர். அங்ஙனமன்றி, எனக்கு எதிர் தோன்றிக் காட்சி வழங்கியவனும், என்றும் கெடுதல் இல்லாத முதற்பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனை யாரும் தாம் இருந்த நிலையிலேயிருந்து காணமாட்டார்கள்.

குறிப்புரை :

பின்னர், ``யாரும் உணரார்`` என்றதனால், முன்னர் ஏத்துதல் முதலியவற்றைச் செய்பவர் உணர்வோராதல் பெறப்பட்டது. ஆர்த்தல் - பிணித்தல். ``அருட் சேவடி`` என்பதன் பின் `கீழ்` என்னும் பொருள்பட வந்த கண்ணுரு இறுதிக்கண் தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு தொக்கது. `சேவடிக்கண் தம்மை ஆர்த்து` என்றது, `தொண்டு பட்டு என்றபடி. துதித்தல் நிலை பெற்றிருத்தல்; என்றது, ஆட்படாது தனிநிற்றலைக் குறித்தது.
``தொழுவார்க்கே யருளுவது சிவபெருமான்`` 3
என்று அருளிச் செய்தமை காண்க.
இதனால், `சிவனை இலிங்கத் திருமேனியில் மலர்தூவி வழிபடாதார் காணமாட்டார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

பொழிப்புரை :

தேவர்கள் தத்தமக்கு வாய்ப்பான ஓரோர் இடத்தை அடைந்து நிலத்தல் நால்வகையாகத் தோன்றுகின்ற பூக்களையும், நீரையும் சுமந்து சென்று சிவனைத் திருவுருவங்களில் வழிபட்டு, அதனாலே மூவரில் ஓரோரொருவராயும், அவர் தவிர ஏனைத் தேவரில் ஓரொருவராயும் தலைமை பெற்ற அத்திருவருட் சிறப்பினை யறிந்து அவ்வாறு அவனை வழிபட வல்லார் யாவர்!

குறிப்புரை :

`அத்தன்மையோர் மிக அரியர்` என்றபடி, `திசை` என்பது `இடம்` என்னும் பொருட்டாய் நின்றது. நால்வகைப் பூக்களாவன - `கோட்டுப் பூ, கொடிப்பூ, நீர்ப்பு, புதர்ப்பூ` என்பன. இவை யாவும் நிலத்திலே தோன்றுதலின் அவை யாவும் அடங்க, `மண்ணோடுறும் பூ`` என்றார். ``மூவரிலும் பன்மையிலும் முதல்வராய்`` என்க. `பலர்` எனற்பாலதனை, ``பன்மை`` என எண்ணின்மேல் வைத்துக் கூறினார். ``நின்ற`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
மேல், `உழைக்கொண்ட பூநீர்`` என்னும் மந்திரத்துள் `எல்லா நலங்களும் சிவ பூசையின் பயனேயாதலை விளக்குதற்குக் கூறிய அதனை, அஃதுணர்ந்து பயன் பெறுபவர் உலகத்து அரியர்` என்ப துணர்த்துதற்கு இங்குக் கூறினார் என்க. இதன் ஈற்றடி எதுகை பெறாது வந்தது.

பண் :

பாடல் எண் : 17

உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

பொழிப்புரை :

நீரும், பூவும் சுமந்து சென்று நோற்க வல்லவர் நடுவிலே நீவிரும் அமர்ந்திருந்து அவரைப்போல நீவிரும் சிவனிடத்தும் பெரிய தவத்தைச் சிறிதும் குற்றமறச் செய்தலில் கருத்துடையீராய் அவனது திருவடிகளில் பலவகைப் பட்ட மலர்களைத் தூவி, அன்புக் கண்ணீரைப் பொழிதலால் மழையைப் பெய்யும் மேகத்திற்கு ஒப்பாகும்படி அச்செயலில் நிலைத்து நில்லுங்கள்.

குறிப்புரை :

`மலர் ஏந்தி, மலர் தூவி`` என இருகாற் கூறினமையால் இதற்கு இவ்வாறுரைத்தலே கருத்தென்க. மெய்யன்பர் மெய்யன் பரையே ஏற்றுக்கொள்ளுதல் பற்றி, அவர் நடுவில் இருந்து பூசை செய்க` என்றார். அணிகலத்தை உணர்த்தும் `இழை` என்பது இங்குச் சிலம்பினைக் குறித்து நின்றது.
இதனால் `மெய்த் தொண்டரின் உடன்படும் பூசையே பூசையாம்` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

வென்று விரைந்து விரைபணி என்றனர்
நின்று பொருந்த நிறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.

பொழிப்புரை :

உலகியலை அது மயக்காதவாறு வென்று போக்கி, `இனியாம் விரைந்து செய்யத்தக்க பணியாது` என எண்ணி நின்றவர் யவரும், என்றும் நல்லதொரு பணியில் நின்று சிவனை அடை வதற்கும், சிவனுக்கு மன நிறைவான பண தமக்குக் கிடைத்தற்கும் மிகுந்த நீலையும், பூவையும் கொண்டு ஆட்டியும், தூவியும் வழி பட்டால், சிவன் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வான். இது படைப்புக் காலத்திற்றானே அப்பெருமானால் சொல்லப்பட்டது.

குறிப்புரை :

``எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம்விரும்பும்
உண்மை யாவது பூசனை`` 8
என உரைத்தருளினமையை நோக்குக.
``என்றனர்`` என்பது வினையாலணையும் பெயர். `என்றனர் தொழுதிடில் நித்தனும் கொண்டிடும். இஃது அன்றே கூறியது` என முடிக்க மலருக்குரிய தூவுதல் கூறினமையின், சலத்திற்குரிய சுட்டுதல் வருவிக்கப்பட்டது. `நித்தலும்` என்பது பாடமாயின் `சிவன்` என்பது வருவிததுக் கொள்க. ``கூறியது`` என்னும் பயனிலைக்கு `அவன்` என்னும் எழுவாய் தோன்றாது கூறியது சிவாகமங்களில்` என்க.
இதனால், துறந்தார் சிவபூசையைக் குறவின்றி நிறைவாகச் செய்து சிறந்த பயனைப் பெறற் பாலர்`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.

பொழிப்புரை :

சிவனை நாள்தோறும் இலிங்கததில் வைத்து, `சுயம்பு` முதலிய பெயர்களை மிகவும் சொல்லி மலர்களைச் சாத்தியும். திருப்பாடல்கள் பலவற்றால் மிகத் துதித்தும் நின்றால் காணுதல் கூடும். அஃது இயல்வதொன்றுறாய் இருக்கவும் அதனைச் செய்யாது புறக்கணித்துப் போவதால் உலகத்தார் சிவனைக் காண்கிலர். ஆயினும் இங்குக் கூறியவாறு ஆத்தி முதலிய மலர்களைத் தூவி அருச்சித்தலே அக அழுக்காகிய மும்மலங்களும் நீங்குதற்குரிய வழி. மும்மலங்களும் நீங்கினால் பெருந்திசையாகிய வீட்டு நிலையிற் செல்லுதல் எளிதாகும்.

குறிப்புரை :

``வைத்தும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. வைத்தல் - தாபித்தல். `இலிங்கத்தில்` என்பது அதிகாரத்தால் வந்தது. ஏற்றுதல் - மிகுவித்தல். சிவனுக்கு ஆத்தியும், கொன்றையும் சிறப்பாக உரியன ஆதலின் அவற்றுள் ஒன்றை விதந்து கூறினார்.
இதனால், `மலம் நீங்கி வீடு எய்துதற்கு வழி சிவ பூசையே` என்பதும்கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆவிக் கமலத்தின் அப்புறத் தின்புறம்
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.

பொழிப்புரை :

உடம்பில் கீழாக உள்ள மூலம் முதலிய ஆறும், அதற்குமேல் ஏழாவதாக உச்சியில் உள்ளதும் ஆக ஏழு உறுப்புக்களும் தாமலை மலர் வடிவின அவை, ``ஆதாரங்கள்`` எனப்படும். ஏழாம் தானத்திற்குமேல் பன்னிரண்டங்குல அளவு அருவமாய் நிற்றலால் அது `நிராதாரம்` எனப்படும். அந்த நிராதாரத்தையே, ``ஆவிக் கமலத்தின் அப்புறம்`` என்றார் இனி, அப்பன்னிரண்டங்குலத்திற்கு அப்பால் உள்ளது ``மீதானம்`` எனப்படும். `துவாதசாந்தம்` என்பதும் இதுவே. இதனையே, ``அப்புறத்தின் புறம்`` `மீதானமே பரமசிவனுக்கு இடமாவது` எனக் கூறப்படுதலால், அவ்விடத்தில், ``மேவித் திரியும் விரிசடை நந்தியை`` என்றார்.
``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 3
என்றது காண்க. கூவி - அழைத்து. ஆதாரங்களையும், நிராதாரங் களையும், அதற்கு மேலேயுள்ள மீதானத்துயம் கடந்து அப்பால் உள்ள பரமசிவனை அழைக்க வேண்டுதலால், அதன் பொருட்டடு மலர்களை இருகைகளையும் தாமரைப் போது வடிவமாகக் குவித்தலும், மலர்த்தலும் இன்றி இடைப்பட்ட வடிவமாக வைத்து அதனுட் கொண்டு, இருதயம் முதலாக மேலுள்ள ஆதாரங்களில் பிராசாத மந்திர உச்சாரணத்துடன் முறையே மீதானம் மட்டும் உயர்த்துவர். அதன்பின்பு அங்கு இருகைகளையும் மலர்த்தி அவற்றுள் பரமசிவன் அளவிடற்கரிய ஒளிவடிவாய் வந்ததாகக் கருதி, கைகளை உயர்த்திய முறையிலே மீள இறக்கிக் கொணர்ந்து சிவலிங்கத்தின் உச்சியில் அம் மலர்களைச் சொரிந்து முன்னமே சதாசிவ மூர்த்தமாகப் பாவித்து நிறுத்தப்பட்ட அம்மூர்த்தியின் இருதயத்தில் இருகைகளையும் கவிழ்த்து அமைக்கும் முறையால் இருக்கப் பண்ணுவர். அழைத்தல், அல்லது கொணர்தல் `ஆவாகனம்` எனவும், இருத்துதல் `தாபனம்` எனவும் சொல்லப் படும். அவற்றையே, ``கூவிக் கருதி`` எனவும் ``கொடுபோய்ச் சிவத்திடைத் தாபித்தல்`` எனவும் கூறினார்.

குறிப்புரை :

``தாவிக்கும் மந்திரம் தாம் அறியார்`` என்றாரியினும், `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றலே கருத்தென்க. ``கூவிக் கருதிக் கொடுபோய்த் தாவித்தலை அறியார்`` என்றதனால், `இவற்றுள் ஒன்றையும் அறியார்` என்தாயிற்று. இனி, `மந்திரத்தால் தாவித்தலை அறியார்` என்றதனால், `சிலர் சிவ பூசை செய்யினும் முறைப்படி ஆசிரியரை அணுகி அவர் அருளிச்செய்தபடி செய்தலை அறியார்` என்றதும் ஆயிற்று. ஆவி - உயிர். அஃது ஆகுபெயராய் அஃது இருக்கும் இடமாகிய உடம்பைக் குறித்தது. ``ஆவி`` குளமுமாம் ஆதலின், குளத்தின் கண் உள்ள தாமரை` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது.
இதனால், சிவபூசை செய்யத்தக்கது` என்பதும், `செய்யுங்கால் முறைப்படி செய்தலே சிறப்பு` என்பதும் கூறப்பட்டன.
இம்மந்திரத்தின் பின் சில பிரதிகளில் காணப்படுகின்ற ``சாணகத் துள்ளே`` என்னும் பாடல் சில பிரதிகளில் இல்லை. அது நாயனார் வாக்காகத் தெரியவில்லை.

சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணு மளவும் கருத்தறிவா ரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

அதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``பெருந்தன்மை நந்தி`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்கு உரியது.

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றோரே.

அதனை அடுத்துக் காணப்படும் ``சமைய மலசுத்தி`` என்பது ஐந்தாம் தந்திரத்தில் ``சரியை`` என்னும் அதிகாரத்தில் வந்தது.

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆமந் திரசுத்தி
சமையுநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமா னார்க்கபி டேகமே.


பண் :

பாடல் எண் : 21

ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே.

பொழிப்புரை :

பாற்கடலில் பள்ளி கொள்பவனாகிய திருமாலும், மற்றும் பிரமனும் எத்துணையோ யுகங்கள் வாழ்பவராயினும் சிவபெருமான் அவர்கட்கு எட்டாதவனாகவே யிருக்கின்றான். அதனால், அளவற்ற பிறவிகளில் அளவற்ற யுகங்களில் சிவனைப் பொது நீக்கியுணர்ந்து வழிபடுபவர்கட்கல்லது ஏனையோர்க்கு அவரது வினை அவனை அடைய ஒட்டாது.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. யாதொரு பிறப்பும் நிலையாததே ஆகையால், `ஊழிதோறும் உணர்தல் வேறு வேறு பிறப்பை எடுத்து` என்பது வெளிப்படை. உணர்தற்குச் செயப்படு பொருளாகிய `சிவனை` என்பது அதிகாரத்தால் வந்தது. அதனால், ``உணர்தல்`` என்றது சிவனை உணர்தலேயாகையால், பொது நீக்கி உணர்தலாயிற்று. ``உணர்வும்`` என்ற உம்மையால் பின்னின்ற உணர்தல், உணர்ந்து அடைதலைக் குறித்தது.
``பல்லூழி காலம் பயன்றரனை அற்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இவ்வுயிர் - இவ்வுலகத்துயிர்.
இதனால், `சிவனை உரை அடைதல் சிவஞானிகட்கே கூடும்` என்பதும், `சிவஞானம் சிவபூசையாலன்றி வாராது` என்பதும் முடித்துக் கூறப்பட்டன.
சிற்பி