ஏழாம் தந்திரம் - 12. குருபூசை


பண் :

பாடல் எண் : 1

ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.

பொழிப்புரை :

எனக்கு இனி வேறொரு துணையின்றாகத் தாம் ஒருவரே துணையாய் நிற்கின்ற நந்தி பெருமானது திருவடிகளைப் பற்றி நின்றே உயிர்கள் பற்றி ஒழுகுதற்குரிய இறைநூல், அவற்றின்வழி இறைவனை வழிபடும் வழிபாடு, அகக்கோயில்களாகிய ஆதாரங்கள், முப்பத்தாறு தத்துவங்கள், அத்தத்துவங்களைக் கடந்து அவையனைத் திற்கும் மேலே செல்கின்ற தூய்மை ஆகிய இவைகளை நான் கருத்தாக உணர்ந்து, உலகர்க்கும் உரைப்பேனாயினேன்.

குறிப்புரை :

`இது குருவருளால் கிடைத்த பேறு` என்பதாம். இறைவன் உயிர்களின் பொருட்டு அருளிச்செய்தன ஆதலான், அவனது நூலாகிய வேத சிவாகமங்களை ``உபதேசம்`` என்றார். ``போதம்`` இரண்டில், முன்னது நடத்தல்; அஃதாவது ஒழுகுதல். பின்னது, கடந்து செல்லுதல். வேதச் சிறப்பு. ஆகமச் சிறப்பு முதலி யவைகளை நாயனார் முதற்றொட்டுக் கூறிவருதல் வெளிப்படை. தமது வரலாற்றை உணர்த்துதற் பொருட்டுப் பாயிரத்துள், ``நந்தி யருளாலே நாதனார் பேர்பெற்றோம்`` எனக் கூறிய அதனை இங்குக் குருவருளின் பெருமையை உணர்த்துதற் பொருட்டுக் கூறினார். குருவருளால் தாம்பெற்ற பேற்றினையும், குருவை மறவாமையும் கூறியதனால், `நீவிரும் குருவை அடையின் இப்பேற்றினைப் பெறலாம். பெற்றபின் குருவருளை மறக்கலாகாது` என்பது குறிப் பாயிற்று, ``போகின்ற`` இரண்டில் முன்னதில் ஈற்று அகரம் தொகுத்த லாயிற்று. தூய்மையை, ``பொற்பு`` என்றார். வீட்டு நிலை, சுத்தநிலையாதலை அறிக.
இதனால், குருவருளின் சிறப்பும், அதனைப் பெற்றோர் அவரை நினைந்தே எதனையும் செயற்பாலர்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.

பொழிப்புரை :

சிவனது திருவருளை மிகப்பெற்ற நந்தி பெருமான், அப்பேறுடைமை பற்றியேயன்றிச் சிவனோடு மாறுபட்டுப் பகைச் செயலையே புரிகின்ற ஆணவ இருளுக்குப் பகலவனாய் இருத்தல் பற்றியும் அவரை முனிவரும், தேவரும் தம் இதயத்திலே எப்பொழுதும் வைத்துத் தியானிக்கின்றனர்.

குறிப்புரை :

சிவனது திருவருளினும் பெரியது வேறொன்றின் மையால் அதனையே, ``பெருந்தன்மை`` என்றார். ``பெருந்தன் மையை உடைய நந்தி`` என்க. நேமி சக்கரம் ஆதலின் அது `பரிதி` என்னும் பெயரைத் தோற்றுவித்துப் பகலவனை உணர்த்திற்று. `நேமியாம் இருந்தன்மை` என்க. இருந்தன்மை - சிறப்பு. உம்மை இறந்தது தழுவிற்றாகலின் அதற்கேற்ற பொருள் முன்பு வருவிக்கப் பட்டது. ``என் சித்தத்தே தன்னை வைத்தருளிய குருமூர்த்தி * ``என்னையிப் பவத்திற் சேராவகை`` என்றபடி ``வானவர்`` என்பதில், ``வான்`` என்பது, `உயர்வு` என்னும் பொருட்டாய் நிற்க. ``வானவர்`` என்பது, `உயர்ந்தோர்` எனப் பொருள் தந்தது. ``வானவர் தேவர்`` உம்மைத்தொகை. இதனை, ``தாங்கி நின்றார்`` என்பதற்கு முன்னே கூட்டியுரைக்க. `தாங்குதல் அறிவினால்` ஆகலின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது.
இதனால் `முனிவர், தேவர் என்பவரும் குருவின் வழியே ஞானம் பெறுகின்றனர்` எனக் குருவருளின் இன்றியமையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.

பொழிப்புரை :

காட்டில் பொருந்தியுள்ள கோடிக் கணக்கான சந்தன மரங்களின் கட்டைகளைத் தேய்த்தெடுக்கப்பட்ட நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தையும், அதுபோலவே ஆகாயம் அளாவக் குவிக்கபப்ட்ட பெருமை மிக்க மலர்கலையும் பயன்படுத்திச் சிவனை வழிபட்டாலும் உடம்பைத் தம்மின் வேறாக உணர்ந்து அதன்கண் உள்ள பற்றை விடுத்துச் சிவனையே பற்றாக உணர்பவர்க்கல்லது ஏனையோர்க்கு அவனது, தேன் நிறைந்த செந்தாமரை மலர்போலும் திருவடியைச் சேர இயலாது.

குறிப்புரை :

`அவனை அவ்வாறு உணரும் உணர்வைக் குருவினால் அன்றி அடைய இயலாது` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `மேற்கூறிய சிவபூசையும் குருவருள் பெற்றே செயற்பாலது ஆகலின், சிவபூசைக்கு முன்னே குருபூசை செய்தல் இன்றியமையாதது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயலறல் தானே.

பொழிப்புரை :

குருவருளால் கேள்வியாகப் பெற்ற ஞானத்தைப் பின் சிந்திதத்ல, தெளிதல் என்பவற்றின்பின் நிட்டையாக முதிரப் பெறின் அவ்விடத்தில் அந்த நிட்டையில் நிற்றலே பரசிவ பூசை யாகும். (ஆகவே அந்நிலையை அடைந்தவர்க்கு ஏனையோர்க்குக் கூறப்பட்ட சிவபூசைகள் வேண்டாவாம்) அந்நிலையை அடையாது கேள்வி முதலிய மூன்றில் நிற்போர்க்கு, ``உள்ளம் பெருங்கோயில்`` என்னும் மந்திரத்துட் கூறியவாறு செய்யும் ஞான பூசையே சாதனமும், அப்பூசையின் பயனாகத் தற்போதம் கழன்றிருத்தலே பயனும் ஆகும்.

குறிப்புரை :

`ஞானம் குருவருளாயன்றி வாராது` என்பது மேற் கூறப்பட்டமையால், இங்கு ``மேவிய ஞானம்`` என்றதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``மெய்ப்பரன்`` என்பது `உண்மைச் சிவன்` என்பதாய், பரவசிவனைக் குறித்தது. ஞானமாவது, அவனையறியும் அறிவேயாதல் அறிக. `நிட்டையே ஞானத்தின் நிறை நிலை` என்றற்கு அதனை `ஞானத்தில் ஞானம்` என்றும், ஏனைக்கேள்வி முதலிய மூன்றனையும், `ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம்` என்றும் சிவாகமங்கள் கூறுதல் காண்க.
இனி நிட்டை நிலையை அடைந்தோரும் அந்நிலையிலே மீட்சியின்றி நிற்கமாட்டாது மீள்வாராயின் ஞானத்திற் சரியை முதலிய வற்றில் உள்ளோர்க்குக் கூறப்பட்ட நெறியிற்றானே நிற்பர். அப் பொழுது அவையெல்லாம் `உபாயநிட்டைகள்` என, `நிட்டை` என்றே சொல்லப்படும். ஏனையோர் செய்வன எல்லாம் எவ்வகையாலும் `சரியை, கிரியை, யோகம்` என்றே சொல்லப்படும். நிட்டைக்குப் பயனே ஆனந்தமாக, உபாய நிட்டைக்குப் பயன் அருள்மயம் ஆதலே என்பதுபற்றி, `செயலறல் தானே சேவடி சேரல்` என்றார்.
இதனால், `நிட்டை நிலையை எய்தினோரும் அதனில் நிற்க மாட்டாது மீள்வாராயின் பின்னும் கிழ்நிலையை எய்தாமைப் பொருட்டு, குருபூசை சிவபூசைகளைச் செயற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.

பொழிப்புரை :

உலகீர், `காலை, நண்பகல், மாலை` - என்னும் மூன்று போதிலும் சிவனை வழிபட விரும்புங்கள். அவ்வழிபாட்டில் `நம` என்பதை இறுதியில் உடைய மந்திரம் சிறப்புடையனவாகும் ஆதலால் அவற்றையே மிகுதியாக உங்கட்குப் பயனை விளைக்கும் வித்துக்களாக விதையுங்கள். அவ்வாறு விதைப்பதற்குரிய நிலமாய் விளங்குவன `கதிர், மதி, தீ` - என்னும் முச்சுடர்களுமாம். (ஆகவே, அவ்விடத்து அவற்றை விதையுங்கள்) அச்சிவன் `நந்தி` என்னும் பெயருடைய குருமூர்த்தியாயும் விளங்குவன்.

குறிப்புரை :

தமக்கு நந்திபெருமான் குருவாயினமை பற்றி, ``நந்தி நாயகனாகும்`` என்றருளிச் செய்தாரேனும், `அவரவர்க்கு அருள் செய்த அவ்வக் குருமார்களாயும் அவன் விளங்குவான்` என்பதே கருத்தென்க. எனவே, `இங்கு விதிக்கப்பட்ட முறையிலே குருவை வழிபடுக` என்றதாம். `குருவருள் பெற்றோர்க்குக் குருவே சிவனாதல் பற்றி, முச்சுடர் முதலிய எவ்விடத்தும் அவர் குருவையே காண்பர்` என்பதாம். ``நாயகன்`` என்பது இங்குக் குருவைக் குறித்தது.
செய்யுள் நோக்கி ``உச்சி`` முதற்கண் வைக்கப்பட்டது. ஆன்மார்த்த வழிபாட்டிற்கு முப்போதே அமையும் ஆதலின் அவற்றையே கூறினார். காலையின் விரிவு விடியலும், மாலையின் விரிவு எற்பாடுமாக நள்ளிரவுங் கூட்டி ஆறுகாலம் பரார்த்த வழிபாட்டில் கொள்ளப்படுகின்றன. அவை முறையே உஷத்காலம், பிராதக் காலம், மாத்தியானிக காலம், சாயங்கால உபசந்தி (பிரதோஷகாலம்) சாயங்கால மகாசந்தி (இரண்டாம் காலம்) அர்த்த ஜாமம் எனப்படுகின்றன. மலர் தூவி அருச்சித்தல் முதலாகப் பெரும் பாலானவற்றிற்கு உரியவாகும் சிறப்புப் பற்றி, `நம` என்னும் மந்திரங்களையே குறித்தார்.
இதனால், குருவழிபாடு முப்போதும் செய்தற்குரியதாதல் கூறப்பட்டது.
இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் ``புண்ணிய மண்டலம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்திற்கு உரியது.

பண் :

பாடல் எண் : 6

இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

பொழிப்புரை :

`சந்திர கலை` எனவும், `சூரிய கலை` எனவும் சொல்லப்படுகின்ற இடநாடி மூச்சும், வலநாடி மூச்சுக் காற்று இயங்கின் மனம் புறத்தே ஓடுதலல்லது அகத்தே அடங்கி நில்லாது. ஆகவே, அது பொழுது செய்யும் வழிபாடு குற்றம் உடைத்தாம் ஆதலின், ``அஃது அசுரர்க்கு வாரியாம்`` என்றும், மூச்சுக்காற்று இயங்காது அடங்கின் மனமும் புறத்தே ஓடாது அகத்தே அடங்கி நிற்கும். ஆகவே, அதுபொழுது செய்யும் வழிபாடு குற்றமில்லாதாம் ஆதலின், ``அது நந்திக்கு மாபூசையாம்`` என்றும் கூறினார். சிவ பூசையே பெரிய பூசையாதல் பற்றி, ``மாபூசை`` என்றார். மூச்சுக் காற்றை மேற்கூறிய இருவழிகளிலும் செல்லாது அடக்குதலே பிராணாயாமமாம். அம்முறையால் பிராணனை அடக்கியவழி கும்பகமாம். அப்பொழுது மூச்சுக் காற்று நடுநாடியிற் செல்லும். அங்ஙனம் செல்லும்பொழுது தியானங்கள் இனிது கைகூடும். ``எந்நிலையில் நிற்போரும் `வழிபாடு` என்பதை மேற்கொள்ளும்பொழுது பிராணாயாமம் செய்து செய்க`` என்றபடி. வாரி - வருவாய் அறவே விலக்குதற் பொருட்டு ``அசுரர்க்கு வாரியாம்`` என்றாரேனும், `பயன் அற்பமாம்` என்றலே கருத்து என்க.

குறிப்புரை :

இதனால், எவ்வகை வழிபாடும் பெரும்பயன் தருதற்கு ஆவதொரு வழி கூறப்பட்டது இதனை எந்த வழிபாடு கூறுமிடத்திலும் கூறலாமாயினும் குருவழிபாடு சிறந்தமை பற்றி இங்கே கூறினார்.

பண் :

பாடல் எண் : 7

இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

பொழிப்புரை :

சந்திர கலையும், சூரிய கலையுமாகச் சொல்லப் படுகின்ற மூச்சுக்காற்று அடக்கப்பட்டபொழுது நடுநாடி வழியாக மேல் ஏறி விந்துத்தானமாகிய ஆஞ்ஞையையும், நாதத்தானமாகிய ஏழாந்தானத்தையும் கடந்து அதற்குமேல் பிரம ரந்திரம் வழியாகப் பன்னிரண்டங்குல அளவுள்ள நிராதாரத்தே செல்லின் அந்நிலை `சாக்கிரத்தில் துரியம்` எனப்படும். அதனையும் கடந்திருப்பது மீதானம். அது சாக்கிரத்தில் அதீதத்தானம். அந்நிலையில் சிந்தனையைச் செலுத்திச் சிவனை வழிபடுதலே எல்லாவற்றிலும் மேலான வழிபாடாம்.

குறிப்புரை :

``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` *
என்னும் திருவுந்தியார் இங்கு நோக்கத் தக்கது.
மீதானமே, ``துவாதசாந்தப் பெருவெளி`` என்றும், துரியங் கடந்த பரநாத மூலத்தலம்`` * என்றும் சொல்லப்படுகின்றது. ``சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் இந்நிலையினரே`` எனச் சேக்கிழார் விளக்குதல் காண்க. 8
என்று - எனப்பட்டு. எழுகின்றது - எழுகின்ற மூச்சுக் காற்று. ஓர் - சிந்திக்கின்ற; வினைத்தொகை. ஆகி - இடத்தால் அவையேயாய். ``சென்றிட்டு`` என்பதை ``மீதானத்தே`` என்பதன் பின்னர்க் கூட்டுக. `அதீதத்ததே` என்பது இடைக் குறைந்து ``அதீதத்தே`` என நின்றது.
இதனால், `எல்லா வழிபாட்டிலும் மேலான வழிபாடு இது` என அதன் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

மனபவ னங்களை மூலத்தின் மாற்றி
அநித உடல்பூத மாக்கி யகற்றிப்
புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத்
தனிஉறு பூசை சதாசிவற் காமே.

பொழிப்புரை :

மனத்தின் ஓட்டத்திற்குக் காரணமாயுள்ள இட ஓட்ட வல ஓட்ட மூச்சுக் காற்றுக்களை அவ்வழியே ஓட விடாது தடுத்து நடு நாடி வழியாக ஓடும்படி மாற்றி, பூத காரியமாய் நின்று அழிகின்ற உடலை அவ்வாறு அழியாது நிலைத்திருக்கின்ற உடலாகச் செய்தற் பொருட்டு அதன் காரணமாகிய பூதங்களில் ஒடுக்கி அவையாகச் செய்யுமாற்றால் போக்கி, மீண்டு அது திருவருளினின்றும் தோன்றச் செய்யுமாற்றால் திருவருள் உடம்பாக ஆக்கி அதனுள் தான் புகுந்து சிவமாகி அதனானே சிவானந்தம் மேலிட நின்ற வழிபடும் வழிபாடே ஒப்பற்ற வழிபாடாகும். அதனையே சதாசிவ மூர்த்தி ஏற்பர்.

குறிப்புரை :

``மூலம்`` என்பது ஆகுபெயராய் அதற்கு மேலுள்ள சுவாதிட்டானத்தையும், பின் அங்குள்ள சுழுமுனை நாடியையும் குறித்தது. ``மூலத்தான்`` என்பது பாடமாயின், `மூலமாகிட அவ் விடத்து` என உரைக்க. `அநித்தம்` என்பது, ``அநிதம்`` என இடைக் குறைந்து நின்றது. ``புக்கு`` என்றதனால் முன்பு வெளியே சென்றிருந் தமை பெறப் பட்டது. சிவபூசையைத் தொடங்குதற்கு முன்னே யோக பாவனையால் பூதசுத்தி செய்யுமாற்றால் பௌதிக உடலை அழித்துத் திருவருள் உடம்பை உண்டாக்கி அதில் தான் புகுந்து சிவோகம் பாவனையால் சிவமாகியே பூசையைத் தொடங்குதலும், அதன் பொருட்டு பூத சத்திக்கு முன்னே தன்னைப் பௌதிக உடம்பினின்றும் பிரித்துத் துவாத சாந்தமாகிய மீதானத்திலுள்ள சிவத்தின்பால் சேர்த்து நிறுத்திப் பின்பு மீட்டும் முன்ரே் கொணர்ந்து திருவருள் உடம்பிற் சேர்த்துச் சிவமாகின்ற முறை இம்மந்திரத்தால் உணர்த்தப்பட்டது. இவ்வாறு செய்தலே உண்மைச் சிவபூசையாகலானும், இதனைக் குரு முகமாக அன்றி அறிதல் கூடாமையால் `அவ்வாறு அறியாது தாம் தம் அறிந்தவாறே செய்யும் பூசைகள் எல்லாம் பொதுச் சிவ பூசைகளே` என்று சிவாகமங்கள் கூறுகின்றன. அதனையே இங்கு நாயனார் உணர்த்தினார் என்க.
இதனால், சிவபூசை உண்மைப் பூசையாக அமையுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பகலு மிரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை யீசற் கிணைமல ராகா
பகலு மிரவும் பயிலாத பூசை
சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

பொழிப்புரை :

பகலும், இரவும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றுகின்ற பூசைகள் காலத்தைக் கடந்தவனாகிய சிவனுக்கு முற்றிலும் நேர்படும் பூசைகள் ஆகா. மற்று, அவ்வேறுபாடு தோன்றாத பூசைகளையே சிவன் முழுமையாக ஏற்பான்.

குறிப்புரை :

`உலகியல் முற்றும் மறக்கப்படாத வரையில் பகலும், இரவுமாகிய காலவேறுபாடுகள் தோன்றாமற் போகமாட்டா. அதனால் அவை சிவன் ஒருவனையே நினைந்து செய்யும் பூசைகள் ஆதல் இல்லை. உலகியல் முற்றும் மறக்கப்பட்ட பொழுது மேற்கூறிய வேறுபாடுகள் தோன்றமாட்டா ஆதலால் அந்நிலையில் நின்று செய்யும் பூசைகளே சிவனேயன்றி வேறொன்றையும் நினையாத பூசையாம்` என்றபடி.
சண்டேசுர நாயனார் சிவபூசை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்தம் தந்தை வந்து அவரை வைததையும் தண்டால் பலமுறை முதுகிற் புடைத்ததையும் அவர் சிறிதேனும் அறியா திருந்ததையும், பின்பு அவன் சிவபூசைக்கு அழிவை உண்டாக்கியதை உடனே அறிந்ததையும் இங்கு நினைவு கூர்க. அதுபோலும் சிவபூசையே முழுமையான சிவபூசை யாகும்.
``கையொன்று செய்ய விழியொன்று நாடக்
கருத்தொன்றெண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப்
புலால்கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே``l
எனப் பிற்காலப் பெரியார் அருளிச் செய்தது இக்கருத்துப் பற்றியேயாம். மலரால் செய்யப்படுவதனை ``மலர்`` என்று உபசரித்தார். சகலமும் - முற்றிலும்.
இதனால், சிவபூசை நிரம்பாவாறும், நிரம்புமாறு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

இராப்பக லற்ற இடத்தே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்(து)
இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.

பொழிப்புரை :

இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையேயிருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி தேனை வேறுநினைவின்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.

குறிப்புரை :

``தேறல்`` என்றது `தேன் துளி` என்னும், பொருட்டாய்ச் சிவானந்தத்தை ஓரளவே சுவைத்ததையும், ``இன்பம்`` என்றது `இன்ப வெள்ளம்` என்னும் பொருட்டாய் அதில் மூழ்கித் திளைத்ததையும் குறித்தன. யோகாவத்தையில் தியானம் துரியமும், சமாதி துரியாதீதமும் ஆதலை விளக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
இதனால், சிவ பூசையைத் தாம் நிரம்பச் செய்து பெற்ற அனுபவத்தை விளக்கி முடித்தவாறு.
சிற்பி