ஏழாம் தந்திரம் - 13. மாகேசுர பூசை


பண் :

பாடல் எண் : 1

படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின்
நடமாடக் கோயில் நம்பற்கங் காகா
நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின்
படமாடக் கோயிற் பகவற்க தாமே.

பொழிப்புரை :

கொடித் துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது எங்கும் இயங்குகின்ற உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கின்ற சிவனுக்குச் சேரமாட்டாது; அங்கேயே இருந்துவிடும். ஆனால், எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி யிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை ஏற்பித்தால் அஃது அந்தச் சிவனுக்கு ஆதலுடன், கொடித்துகில் ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற சிவனுக்கும் போய்ச் சேர்வதாகும்.

குறிப்புரை :

`ஆகவே, இருவரையும் வழிபடல் வேண்டுமாயினும், இயங்கும் கோயிலினுள் இருக்கும் சிவனை வழிபடுதல் தவிரத் தக்கதன்று` என்றபடி.
படம் - சீலை. ``ஆடும்`` என்றதனால், அது கொடிச் சீலையைக் குறித்தது. ``கட்டடமாக மக்களால் அமைக்கப்பட்ட கோயில்` என்பதை விளக்க. ``படம் ஆடு அக்கோயில்`` எனவும், ``உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்`` என்றபடி, ``உடம்பாகிய கோயில்`` என்பதை விளக்க. ``நடமாடு அக்கோயில்`` எனவும் கூறினார். நடமாடுதல் - உலாவுதல். நடம் ஆடுதல்` என்பது, `நடனம் ஆடுதல்` எனப் பொருள்தருமாயினும் உலகவழக்கில் `உலாவுதல்` என்னும் அளவாய் நிற்றலின் அஃதேபற்றி ``நடமாடும் அக்கோயில்`` என்றார்.
`திருக்கோயிலினுள் இருக்கும் திருமேனிகள் மந்திர சாந்நியத் தால் சிவனேயாய் விளங்குதல் போல, அடியார்களது ஆன்ம சைதன் னியமும் ஆழ்நிலைத் தியான சமாதிகளாலும், அருள்ஞான உணர் வாலும் சிவனேயாம் ஆதலின், இடவேறுபாடு பற்றி வேற்றுமை யில்லை` என்றற்கு இரண்டினையும், ``பகவன், நம்பன்`` என்றே குறித் தருளினார். இதனால் `மாகேசுரர் மகேசுரனே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. ``ஒன்று`` என்றது, `எடுத்துக்காட்டிற்கு ஒன்று` என்றவாறு.
இதனால், `இலிங்க பூசை இயலாதாயினும் சங்கமபூசை ஒழியாது செய்யத்தக்கது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தண்டறு சிந்தைத் தபோதனர் தாம்மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

பொழிப்புரை :

`சிவனிடத்தினின்று பிறிதொன்றால் நீக்கப்படாத உள்ளத்தினையுடைய மாகேசுரர்கள் மனமகிழ்ந்து உண்ட பொருள் மூன்றுலகங்களும் உண்ட பொருளாகும்; (அவற்றிற்கு அது பயனாகும்` என்பதாம்) அதுபோலவே அவர்கள் பெற்றுக்கொண்ட பொருளும் மூன்றுலகங்களும் பெற்றுக்கொண்ட பொருளாம், என்று நந்தி பெருமான் எங்கட்குச் சிறந்தெடுத்துக் கூறினார்.

குறிப்புரை :

`சிவன் இலிங்க பூசையை ஏற்று மகிழ்தலினும் தன் அடியவர் பூசையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி எய்துவன் ஆதலின், அம்மகிழ்ச்சியால் அவனை உயிராக உடைய உலகம் அனைத்தும் மகிழ்வெய்தும்` என்றபடி. `அத்துணை மகிழ்ச்சிக்குக் காரணம் அவரது உணர்வின் சிறப்பு` என்பதை உணர்த்த, ``தண்டறு சிந்தைத் தபோதனர்`` என்றார். தண்டல் - நீக்குதல். ``எண்டிசை`` என்பதன் பின் `புகழும்` என ஒரு சொல் வருவிக்க. ``மகிழ்ந்து உண்டது`` என்றதனால், `அவர் மகிழும்படி வழிபடல் வேண்டும்` என்றதாயிற்று. இனைத்துணைத் தென்பதொன்றில்லை; விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். -திருக்குறள், 97
என்னும் பொதுமறையை இது முதலாக வருகின்ற மந்திரங்களோடு ஒப்பிட்டுணர்க.

பண் :

பாடல் எண் : 3

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்துறை
ஆத்தனுக் கீந்த அரும்பொரு ளானது
மூர்த்திகள் மூவர்க்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம தாம்அது தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :

இப்பாடலின் பொருள் பின்வரும் குறிப்புரையால் இனிது விளங்கும்.

குறிப்புரை :

`சீவன்` என்னும் பெயரின் முதலெழுத்து இரு மாத்திரையுடையதும், `சிவன்` என்னும் பெயரின் முதலெழுத்து ஒரு மாத்திரையுடையதும் ஆதல் பற்றி, `சீவன்` என்னும் நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைத்து நின்று அவனேயான அடியவனை. `மாத்திரை யொன்றின் மன்னியமர்ந்துறை - ஆத்தன்` என்றார். சிவனடியார்கள் மாகேசுரன் எனப்படும் காரணத்தை விளக்கியவாறு. `மகேசுரனுக்குள் அடங்கிநிற்பவன் மாகேசுரன்` என்றபடி. ஆத்தன் - நம்புதற்குரியவன். `தன்னை நம்பினவர்க்கு உறுதியையே சொல்லுதலும், செய்தலும் உடையவன்` என்பதாம். எனவே, `மாகேசுரர் அத்தகையினர்` என்பது பெறப்பட்டது. சிறப் புணர்த்த வேண்டிச் சாதியொருமையாற் கூறினார். `இப்பெயர் ஆசாரி யனையே குறிக்கும், என்பாரும் உளர். அங்ஙனமாயின் இம்மந்திரம் `குருபூசை` என்னும் அதிகாரத்தில் உளதாக வேண்டும் என்க.
மூர்த்திகள் மூவர் - அயன், அரி, அரன். குரவர் - முன்னோர். ஏழ்குரவர், தந்தை முதலாக முறையானே முன் முன் நோக்க வரும் எழுவர். மூவெழுவராவார், தந்தைவழி தாய் வழி மனைவி வழி என்னும் மூவழியிலும் உள்ள முன்னோர் ஓரோர் எழுவர். ``தீர்த்தம்`` என்றது, `நீர்` என்னும் பொருட்டாய் நின்றது. அஃது ஆகுபெயராய் நீர்வழியாகக் கொடுக்கும் பொருளை உணர்த்திற்று. முன்னோர்க்குப் பாவனையாற் கொடுப்பன யாவும் நீர் இறைக்குமாற்றால் கொடுக்கப் படுதலை நினைக. இதனைத் திருவள்ளுவர், `தென்புலத்தார் கடன்` (திருக்குறள், 53) என்றார்.
மாகேசுர பூசை பெரும்பான்மையும் இல்லறத்தாராலே செய்யப்படும் ஆதலின், `அவர்க்கே சிறப்பாக உரிய விருந் தோம்பலில் மாகேசுர பூசையே சிறப்புடையது` எனக் கூறுபவர், `தென்புலத்தார் கடனும் அதுவே` என்பதை இதனாற் கூறினார். இனி, `அவர்க்குத் தெய்வ வழிபாடாவதும் இதுவே என்பதை, ``மூர்த்திகள் மூவர்க்கும்`` எனத் தேவருள் தலையாயினாரைக் கூறினார்.
`விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பவற்றை அந்தணரை வழிபடுதலானே செய்தல் வேண்டும்` என்பது வைதிக நெறியே; அவைகளை மாகேசுரர் வழியாகச் செய்தலே சைவநெறி` என்பது இவ்வதிகாரத்துள் உணர்த்தப்படுதல் அறிக. இதனானே, `அந்தணர் பூசுரராயினும், மாகேசுரர் பூசிவர்` என்றதூஉமாயிற்று. இவர்களை, ``பராவுசிவர்`` (சிவஞான சித்தியார், சூ. 8. 35) என்றார் அருணந்தி தேவர்.

பண் :

பாடல் எண் : 4

அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்தே முடிக்கில்லென்
பகரு ஞானி பகலுண்பலத் துக்கு
நிகரிலை யென்பது நிச்சயந் தானே.

பொழிப்புரை :

அந்தணர் வாழும் வீதிகள் பலவற்றை அவர்கட்குத் தானம் செய்தலும், அவ்வீதிகளில் அவர்கட்கு உயர்ந்த மாட மாளிகைகள் பல கட்டித் தருதலும் ஆகிய இவற்றால் விளையும் பயன்கள் யாவும் மாகேசுரன் ஒருவனை வழிபட அவன் உண்டதனால் விளையும் பயனளவிற்கு ஒவ்வாது குறைவனவே என்பது உறுதி.

குறிப்புரை :

``அகரம்`` என்பது `அக்கிரகாரம்` என்பதன் மரூஉ. `முதற் சுற்று` என்பது அதன் பொருள். `கோயிலைச் சூழ்ந்த முதற் சுற்று வீதிகளே அந்தணர் இருத்தற்குரிய இடம்` என்பது வைதிக முறைமையாதலின் அம்முறைமைபற்றி அவர்கள் வீதி எங்கிருப்பினும் அஃது `அக்கிரகாரம்` எனப்பட்டது. `அந்தணர்களை மாட மாளிகை களில்தான் வாழவைத்தல் வேண்டும், என்பதும் வைதிக நெறி யாகலின், அவர்கள் வாழும் முதற்சுற்று வீதி, `மாடவீதி` எனப்பட்டது.
`திருக்கோயிலை நடுவாக வைத்து அதனைச் சூழ ஏழு சுற்று அமைய மதில்களை எழுப்ப அவைகளில் அமையும் வீதிகள் யாவும் மாடவீதிகள்` எனவும், `அவ்வீதிகளில் பரத்தையர் தவிர மற்றையோர் யாவரும் கலந்தே வாழ்தல் வேண்டும்` எனவும், `அந்த வீதிகளைச் சுற்றிக் கடைத் தெருக்கள் இருத்தல் வேண்டும்` எனவும், `ஆக எல்லா வீதிகட்கும் புறத்திலே பரத்தையர் வீதி அமைதல் வேண்டும்` எனவும் சிவஞான யோகிகள் தமது காஞ்சிப் புராணத்தில் `நகர வருணனை` வாயிலாகப் புலப்படுத்தியுள்ளார்.
பகரும் ஞானி - இவ்விடத்தில் சொல்லப்படும் ஞானி; மாகேசுரன். ``பகல்`` என்றது `ஒரு பகல்` என்றபடி. இம்மந்திரத்தில் பாடம் திரிபு பட்டுள்ளது.
இதனால், அந்தணர்க்குச் செய்யும் தானங்களினும் மாகேசுரருக்குச் செய்யப்படும் தானம் பன்மடங்கு உயர்ந்ததாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஆறிடு வேள்வி அருமறை சாலவர்
கூறிடு மந்தணர் கோடிபேர் உண்பதில்
நீறீடுந் தொண்டர் நினைவின் பயன்நிலை
பேறெனில் ஓர்பிடி பேறது வாகுமே.

பொழிப்புரை :

ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்றவரும், வேதமாகிய நூலை ஓதுகின்றவரும், முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர்கள் கோடிபேர் உண்டு மகிழ் வதனால் உண்டாகின்ற பயனோடு திருநீற்றை யணிகின்ற சிவ னடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளைந்து நிலைக்கின்ற பயனை வைத்து எண்ணிப் பார்க்குமிடத்து, முன்னர்க் கூறிய பயன் பின்னர்க் கூறிய உணவில் ஒரு பிடியினால் விளையும் பயனளவேயாகும்.

குறிப்புரை :

`அருமறை கூறிடும் நூலவர்` என மொழி மாற்றி யுரைக்க. ``உண்பது`` என்பது ஆகுபெயராய், அதனால் விளையும் பயனைக் குறித்தது. ``உண்பதில்`` என்றது உருபு மயக்கம்.
இதனால், `தானங்களில் தலையாயதாய அன்னதானமும் அந்தணர்க்குச் செய்தலினும் மாகேசுரர்க்குச் செய்தலே கோடானு கோடி மடங்கு மிக்க பயனைத் தரும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஏறுடை யாய்இறை வாஎம் பிரான்என்று
நீறிடு வார்அடியார் நிகழ் தேவர்கள்
ஆறணி செஞ்சடை யண்ணல் இவரென்று
வேறணி வார்க்கு வினையில்லை தானே.

அத்தன் நவதீர்த்தம் ஆடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தார் பதத்தைச்
சுத்தம தாக விளங்கித் தெளிக்கவே
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :

`இடபத்தை ஊர்தியாகவும், கொடியாகவும் உடையவனே! இறைவா! எங்கள் பெருமானே` என்று சிவனை எப் பொழுதும் துதித்து அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனுக்கு அடியராவார்கள், அவர்களை `இவர்களே நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள்` என்றும், `சிவபெருமான்` என்றும் கருதி அவரை மக்களின் வேறாக வைத்து வழிபடுகின்றவர்கட்கு அவரால் முன்பு செய்யப்பட்டுக் குவிந்து கிடக்கின்ற வினைகள் கெட்டொழிதல் உறுதி.

குறிப்புரை :

தீவிர சத்தி நிபாதர்க்கன்றி ஏனையோர்க்குச் சிவனை யொழித்தொழிந்த தேவரை வழிபடாத நிலை உண்டாகாதாகலின் அவரை நோக்கி, `இவரே தேவருமாவர்` என்றார். முன்பு ``மூர்த்திகள் மூவர்க்கும் ஆம்`` என்றதும் அவரை நோக்கி. மந்த சத்தி நிபாதத்திற் செய்யும் வழிபாடு தீவிர சத்தி நிபாதத்தைத் தந்து அதன்வழி நிகழும் வழிபாட்டினால் வினையை ஒழிக்குமாதலின் `அவருக்கும் வினையில்லையாம்` என்றார். ``தேவர்கள், அண்ணல்`` என்பன செவ்வெண்.
இதனால், மாகேசுர பூசையும் சிவபூசையேயாய்ப் பிறப்பையறுத்தல் கூறப்பட்டன.
இங்கு இருக்கவேண்டிய இப்பாடல் `சிவபூை\\\\\\\\\\\\\\\\u2970?` அதிகாரத்திலும், அங்கு இருக்கவேண்டிய பாடல் இவ்வதிகாரத் திலுமாகப் பதிப்புக்களில் மாறியுள்ளன. எனினும் இப்பாடல் நாயனார் வழிவந்த ஒருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. சில பிரதிகளில் இது காணப்படவும் இல்லை.
மிகைப் பாடல் தெ-ரை: சிவன் உயிர்கள் பொருட்டாக உண்டாக்கிய நவ தீர்த்தங்களில் சென்று முழுகும் பயன்பற்றிச் சொல்லுவோம் கேள்; `உயர்ந்தோர் யாவர்க்கும் ஒத்ததாகிய மெய்ஞ்ஞானத்தினாலே உயர்ந்து நிற்கின்ற மாகேசுரரது திருவடிகளைத் தூய்மையாக விளக்கி, அந்த நீரை உடல் முழுதும் படும்படி தெளித்துக் கொண்டாலே முத்தி கிடைக்கும் என்பது நமக்கெல்லாம் குருவாகிய திருமூலர் அருளிச் செய்தது.
கு-ரை: `எனவே, அது நவதீர்த்தங்களில் மூழ்குதலாம்` என்றபடி.

பண் :

பாடல் எண் : 7

அழிதக வில்லா அரன்அடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கிருள் நீங்கும்
பழுது படாவண்ணம் பண்பனை நாடித்
தொழுதெழ வையகத் தோரின்ப மாமே.

பொழிப்புரை :

இறைமைக் குணங்களையுடைய சிவபெரு மானை விரும்பி அவனை நாள்தோறும் தொழுது துயிலெழுதலை மட்டும் செய்தால், இவ்வுலகத்தில் உலகின்பத்தோடு சிறிது இறையின்பமும் உண்டாகும். ஆனால், தம் நிலையில் கெடுதல் இல்லாத மாகேசுரரை வழிபடுதலால், இவ்வுலகத்தில் நீங்குதற்கரிய அஞ்ஞானம் நீங்கி இறையின்பமே மிகக் கிடைக்கும்.

குறிப்புரை :

எனவே, `மாகேசுர பூசையைப் புறக்கணிப்பார் செய்யும் மகேசுர பூசையும் சிறிதளவே பயன் தரும்` என்பதாம். ``அடியவர்க்கன் பில்லார் ஈசனுக்கன் பில்லார்`` (சிவஞான சித்தயார், சூ.12-2) என்றார் அருணந்தி தேவரும். மாகேசுரபூசை செய்யாத வழி மகேசுர பூசை நிரம்பாமை நோக்கியன்றோ பெரியார் பலரும் அடியார்க்கடிமை செய்தலை ஆண்டவனை வேண்டியும் பெற்றனர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கியுரைக்க. `தொழுதைகையால்` என உருபு விரிக்க. பழுதுபடாமைக்கு `நாள்` என்னும் வினைமுதல் வருவிக்க.
இதனால், `எத்தகையோர்க்கும் மாகேசுர பூசை இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பகவர்க்கே தாகிலும் பற்றில ராகிப்
புகுமத்த ராய்நின்று பூசனை செய்யும்
முகமத்தோ டொத்துநின் றூழிதோ றூழி
அகமத்த ராகிநின் றாய்ந்தொழிந் தாரே.

வித்தக மாகிய வேடத்தர் உண்டஊண்
அத்தன் அயன்மால் அருந்திய வண்ணமாம்
சித்தந் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியாம் என்றுநம் மூலன் மொழிந்ததே.

பொழிப்புரை :

சிலர் மாகேசுரரிடத்துச் சிறிதளவும் அன்பில்லா தவராய் மாகேசுரனிடத்துச் சரண் புகுகின்ற பித்துக் கொள்ளிகளாய் அவனை மட்டும் பூசித்தலாகிய அந்த வழியிலே நெடுங்காலம் நின்று, அவனது அருள் மிகக் கிடையாத காரணம் யாதென்று ஆராய்ந்து, முடிபு காணாது இளைத்து விட்டார்கள்.

குறிப்புரை :

``முக்கோற் பகவர்`` (அகப்பொருள் விளக்கம்) என்பது போல, ``பகவர்`` என்பது மாகேசுரரைக் குறித்தது. பண்பு - அன்பு. `பண்பு ஏதாகிலும் இலராகி` என்க. ``பூசனை`` என்றது சிறப்புப் பற்றி சிவபூசையையே குறித்தலின், புகுதல் அவனிடத்தேயாயிற்று. மத்தர் - உன்மத்தர். உண்மையை உணராது செய்தலின் ``மத்தர்`` என்றார். ``முகம்``, `வாயில்` எனப்பொருள் தந்தது. `அதனோடு` என்பது, ``அத்தோடு`` என மருவிநின்றது. `ஆகமத்தர்` என்பது, ``அகமத்தர்`` எனக் குறுகி நின்றது. ``ஒழிந்தார்`` என்றதனால் முடிவு காணாமை பெறப்பட்டது.
இதனால், `மகேசுரனை அடையவேண்டுவார் மாகேசுரரை வழிபடல் இன்றியமையாதது என்பதே ஆகமங்களின் கருத்து` என்பது கூறப்பட்டது.
இதனை அடுத்து நிற்கும் ``வித்தகமாகிய`` என்னும் பாடலும் மேற்காட்டிய, ``அத்தன் நவதீர்த்தம்`` என்னும் பாடல்போலப் பிற ரொருவரால் செய்யப்பட்டதாகவே தெரிகின்றது. இதுவும் ஒரு பிரதி யில் இல்லை. இதன் பொருள் வெளிப்படை. இது மாகேசுரர் உண்ட பின் எஞ்சிய சேடத்தை யுண்ணுதலின் சிறப்பை உணர்த்துகின்றது.

பண் :

பாடல் எண் : 9

தாழ்விலர் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை ஆழ அவர்க்கே அறம்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னோடு
போழ்வினை தீர்க்கும்அப் பொன்னுல காமே.

பொழிப்புரை :

உலகீர், பின்னும், பின்னும் நீர் மிக அழுந்த வருகின்ற எதிர் வினைகள் தோன்றாமல் ஆழ்ந்தே போகும்படி, பாசக் கட்டாகிய இழிநிலையினின்றும் நீங்கி உயர்நிலையை எய்தினா ராயினும், மீட்டும் அந்த இழிநிலையில் பாசங்கள் வந்து வீழ்த்தாதபடி முன்பு செய்துபோந்த அந்தச் சரியை முதலிய அரிய தவங்களைப் பின்னும் மாகேசுரர் விடாது செய்வர். அத்தகையோர்க்கே நீவிர் தானத்தையும், தருமத்தையும் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் அச்செயல்கள் உங்களுடைய எதிர்வினை, பழவினை, பயன்வினை என்னும் மூவகை வினைகளையும் அறவே அழிக்கும். அவ்வினைகள் அழியவே, மீளப் பந்த உலகில் வரும் பிறப்பு இன்றி, வீட்டுலகமே கிடைப்பதாகும்.

குறிப்புரை :

எதிர் வினை - ஆகாமியம். ``ஆழ்ந்தவினை`` - எதிர் கால வினைத்தொகை. பழவினை - சஞ்சிதம். அதனை அழித்தல் அரிது ஆதலின் ``அருவினை`` என்றார். போழ்தல் - இப்பொழுது வந்து தாக்குதல். அங்ஙனம் தாக்கும் வினை பிராரத்தமாம். ``பொன்னுலகம்`` என்றது `உயர்நிலை` என்னும் அளவாய் நின்றது. ``ஆழ்வினை ஆழ`` என்பதை முதலிற் கூட்டியுரைக்க.
இதனால், மாகேசுர பூசை வீடு பயத்தல் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி