ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதி


பண் :

பாடல் எண் : 1

வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.

பொழிப்புரை :

இயன்ற அளவு யோக நெறியில் நின்ற யோகி அந்நிலையிலே தனது புற உடலை விட்டு நீங்கினால் நீங்கின காலம வளர்பிறைக் காலமாய் இருப்பின் முன்னர்த் தேவருலகை அடைந்து சில காலம் இருந்து, பின் சூரிய மண்டலத்தில் நுட்பமாய்ப் புகுந்து, அப்பால் பிதிரர்கள் உலகத்தில் தங்கி, இறுதியில் சந்திர மண்டலத்துள் தஹ்கி அங்குள்ள இன்பத்தை நுகர்வான்.

குறிப்புரை :

ஈற்றடியில் உள்ள ``யோகி உடல் விட்டால்`` என்பதனை முதலிற்கொண்டு உரைக்க. தான், ஏ அசைகள். ``வளர் பிறையில்`` என்றதனால், யோகி வளர்பிறையிற்றான் புற உடலை விட்டு நீங்குவான்` என்பது அமைந்து கிடந்தது. உளர் ஒளி - அசைகின்ற ஒளிக்கதிர். பிதிரராவார் மக்களுள் சிறந்தோரைத் தம்பால் வைத்துப் புரக்கும் கடவுளர். இவரே ``தென்புலத்தார்`` (திருக்குறள் - 43.) ஆவர்.
இதனால், யோக நிலைமுற்றப் பெறாத யோகிகளது வாழ்வின் நிறைவிற்குப் பின் உளதாம் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானிவை யொக்கும் சமாதிகை கூடாது
போனவி யோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.

பொழிப்புரை :

யோக நிலை முற்றப்பெறாது உடல்விட்ட யோகிக்கு மேற்சொல்லியன எல்லாம் பொருந்தும். அவன் அவ்வாறு மேற்சொல்லிய இடங்களிலெல்லாம் தங்கிப் பயன்களை நுகர்ந்தபின் அங்கு நின்றும் பூமியில் வந்து பிறந்து விட்ட குறையாகிய வினையைப் புசித்துத் தீர்ந்தபி திருவருளின் துணையைப் பெற்று இடைவிடாது யோகத்தின் முதிர்ந்த நிலைகளை எய்துவர்.

குறிப்புரை :

யோகத்தின் முடிநிலை சமாதி நிலையாகலின் யோகம் முற்றப் பெறாது உடல் விட்ட யோகியை, ``சமாதி கை கூடாது போன வியோகி`` என்றார். முதற்கண் ``தான்`` என்றது அவனையே யாகலின், அதனை, `தனக்கு` எனத் திரித்துக் கொள்க. `புகலிடத்தினின்றும்` என ஐந்தாவது விரிக்க.
இதனால், `யோக நிலை முற்றப் பெறாது உடல் விட்ட யோகிகள், மீண்டும் பிறந்து அது முற்றப் பெறுவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன்
ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.

பொழிப்புரை :

மேற்கூறிய யோகி மேற்கூறியவாறு உலக மக்கள் நெறியிலே தானும் நின்று, அதற்கு இடையிலே யோகம் முதிரப் பெற்றுச் சிவயோகியாவான். அங்ஙனம் அவன் சிவயோகி ஆவதற்கு வழி பிராசாத மந்திரம். அந்த மந்தித்தில் நின்று சிவயோகி ஆவதற்கு முன்பு அவன் பொதுவான யோகப் பயிற்சியால் கிடைக்கும் காய சித்தியைப் பெறுதலும் உண்டு.

குறிப்புரை :

``விந்து`` என்றது உபலக்கணமாய் ஏனைக் கலைகளோடு கூடிய பிராசாத மந்திரத்தைக் குறித்தது. `இம்மந்திர வழிச் செய்யப்படும் யோகமே சிவயோகம்` என்பது இங்கு இனிது விளக்கப் பட்டது. எனவே, முன் மந்திரத்தில் ``மாயோகம்`` என்றதும் இதுவேயாயிற்று. `வந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று.
`காயமும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால், `முன்மந்திரத்திற் கூறியவாறு மாயோகத்தைப் பெறுதற்குமுன் சிலர் காய சித்தியைப் பெற்று நெடுங்காலம் மண்ணிலே இருத்தலும் உண்டு` என்பது கூறப்பட்டது. காய சித்தியைக் கூறவே ஏனைச் சித்திகளையும் பெற்றிருத்தல் பெறப்பட்டது.
``தவமும் தவமுடையார்க் காகும்`` * என்றபடி, யோகம் முதிரப் பெறுதலும், சிவயோகம் கூடலும் முற்பிறவியில் பழகினோர்க் கேயாம் என்பதும் இதனால் பெறப்படுமாறு அறிக.

பண் :

பாடல் எண் : 4

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன்
புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

பிராசாத யோகமாகிய சிவயோகத்தில் நின்றவன் ஞானம் பெற்றவனோடு ஒத்தவனேயாவன். அவன் ஞானம் பெறுதற்கு முன் உடலை விட்டு நீங்கினானாயினி நேரே சிவலோகத்தையே அடைந்து அங்கு இன்பம் துய்த்தபின் மீளப் பிறந்து அந்தச் சிவ யோகத்தின் வழியே பெற்ற ஞானத்தால் மேன்மை எய்தி அத்தன்மை யாரோடே இருப்பன். அவ்வாறன்றிச் சிவலோகம் முதலியவற்றிற் செல்வோர் பசு புண்ணியம் செய்தவரே யாகையால் சிவயோகி ஆங்கெல்லாம் புகான்.

குறிப்புரை :

சிவயோக ஞானம் - சிவயோகத்தால் பெற்ற ஞானம். `பெற்ற ஞானம்` எனவே, பெறுதல் தானே பெறப்பட்டது. `பெற்ற ஞானம்` எனவே பெறுதல் தானே பெறப்பட்டது. சேர்தற்குச் செயப்படுபொருள் வருவிக்க. `நிற்பர்` என்பது பாடம் ஆகாமை அறிக. `அவரொடு` என உருபு விரிக்க.
இதனால், மாயோகத்தைப் பெற்றவரது வாழ்வு நிறைவின் பின் நிகழ்வது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவ னாகும் பரகாயஞ் சாராதே
ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.

பொழிப்புரை :

குறைவில்லாத ஞானத்தைப் பெற்றவன் `குறை வற்ற யோகி` என்றும் சொல்லப்படுவான். (அதற்குக் காரணம், உடம்புள்ள வரையில் அவன் உடலை விட்டு நீங்கியபின் வேறோர் உடலை எடுத்தல் இன்றியே, உடம்பில் மோன சமாதி நிலையில் தான் வேறின்றி இருந்தவாறே உடனே தான் சிவமேயாவன் ஆகவே, அவன் பரமுத்த னாதலன்றி, உலகியல் உணர்வைப் பொருந்திப் பிறப்பில் மீளான்.

குறிப்புரை :

`தங்கி ஆகும்` என்பதில் செய்தெனெச்சம், `ஓடி வந்தான்` என்பது போல முடிக்கும் சொற்கு அடையாய் நின்றது. ``பரகாயம் சாராதே`` என்பதை முதலடியின் இறுதியில் கூட்டியுரைக்க. இவ்வேகாரம் பிரிநிலை `முத்தராய்` எனவும், `மீளார்` எனவும் பன்மைச் சொல்லாக ஓதுவன பாடம் ஆகாமையறிக. `உணர்வுற்று மீளான்` என்க.
இதனால் ஞானம் முற்றப் பெற்றோர் தம் வாழ்வின் பின்னர் எய்தும் நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.

பொழிப்புரை :

`பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறை யிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம்முறை யில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை. (என்றதில், `அவர் சிறப்பாக அடையும் பயன் வேறில்லை` என்றபடி) இனிப் பொதுவான யோகத்தைச் செய்து அதன் பயனாகச் சித்திகளைப் பெற்றவர் இறந்தாரானால், அவரது புகழ் உலகில் இறவாதிருக்கும். ஆகவே, மும்மலங்களும் கெடப்பெற்றோரே வாழ்விலும், வாழ் விற்குப் பின்னரும் சிவமாய் நிற்கும் சிறந்த பேற்றை உடையராவர்.

குறிப்புரை :

``செத்தார்`` என அமங்கலமாகவே கூறியதனால், அது பிறந்த பல உயிரும் இறக்கும் இறப்பினை எய்திநின்றோரையே குறித்தது. வினாவியவருக்கு இறுக்கப்படும் விடையை வெகுளியால் அவர்மீதே வைத்து, ``நீர்`` என முன்னிலையாற் கூறினார். வெகுளி, வாளாதே பயன்பெற விழைதல் பற்றி எழுந்தது. சேர்வு+அது` என்க, சேரப்படும் பயனைச் சோர்வு என்றார். `அதுவே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. சித்தி, `சித்து` எனவும் படும். புகழுடம்பு நிலைத்து நிற்க இறத்தலை, ``உளதாகும் சாக்காடு``l என்ப ஆதலின், ``இருந்தார்`` என்றார். `இருந்தாரே` என்னும் தேற்றேகாரமும் தொகுத்தலாயிற்று. `செகத்தில் இருந்தாரே` என்க. `வாளா இறந்தார் பெறும் பயன் யாது` என வினாவினார்க்கு, `பிறந்தோர் யாவரும் புகழோ, ஞானமோ இரண்டில் எதனையாவது எய்தல் வேண்டும்` என்றற்கு, யோகியரும், ஞானியரும் பெறும் பயனை உடன் எடுத்துக் கூறினார். சிறந்த சித்தியாவது முத்தியே யாதல் பற்றி, முத்தியும் சில விடத்து, `சித்தி` எனப்படுதல் பற்றி, முத்தி எய்துவோரை, `சித்தர்` எனக் கூறுகின்றவர் ``திண்சித்தர்`` எனச் சிறப்பித்துக் கூறினார்.
இதனால், வாளா வாழ்ந்து நாள் கழிப்பவர் வாழ்வு முடிந்த பின்னர் யாதொரு பயனும் எய்தாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள்
பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி
தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.

பொழிப்புரை :

ஞானத்தைப் பெற விரும்பும் உறுதியுடையவன், `சிவனையன்றி வேறொன்றையும் நினைத்தல் கூடாது` என்னும் எண்ணமாகிய விதையை முதலிலே தனது உள்ளமாகிய நிலத்தில் ஊன்றி, (அந்த எண்ணம் சத்திநிபாதத்தால் உண்டாகும்) அங்ஙனமே சிவனையே பலகாலும் நினைத்தும், போற்றியும் வருவானாயின், அந்தச் சிவனே அவனுக்கு ஞானியர் குழாத்தை அவனுக்கு அருள் புரியும் வண்ணம் கூட்டுவிப்பான். (சேரமான் பெருமாளுக்கு வன் றொண்டரைக் கூட்டுவித்ததுபோல.) அங்ஙனம் கூட்டுவிக்கப்பட்ட பின் அவன் தானும் அக்குழாத்து ஞானியர் போல உலகத்தார் அனைவரையும் தன் மக்கள் போலக் கருதி, `அவர்களும் தான் பெற்ற பேற்றைப் பெற வேண்டும்` என விரும்புவான். அத்தகையோனுக்குச் சிவன் அவன் விரும்பியவாறெல்லாம் காட்சி தருவான்.

குறிப்புரை :

`அவ்வாறு நீவிரும் செய்து ஞானத்தோர் பெறும் பயனைப் பெறுவீராக` என்பது குறிப்பெச்சம். `வாளா செத்தார் பெறும் பயன் யாது` என வானாவியவரை வெறுத்து, `அவர் பெறும் பயன் யாதுமில்லை` எனவும், `பயன்பெறும் வழிகள் இவை` எனவும் கூறிய நாயனார், `அவற்றுள் சிறந்ததாகிய ஞானத்தைப் பெறுதல் எவ்வாறு` என அறிய விரும்புவார்க்கு அதனை இம்மந்திரத்தாற் கூறினார்.
``கரு`` என்றது எண்ணத்தை. உரவோன் - திட்பம் உடையவன். குலம் - குழாம். `என்ன புதல்வர்க்கும்` என வரற்பாலது எதுகை நோக்கி, ``என்னப் புதல்வர்க்கும்`` என வந்தது. வேண்டுதல், தான்பெற்ற இன்பத்தை அவரும் பெறுதலை. ``ஞானி`` என்றது முன்பு உரவோனாய் இருந்து பின்பு ஞானம் பெற்றவனை. `இம்மையிலும் தான் வேண்டியவாறே ஈசனைப் பெற்று நிற்பான்` எனவே, உடல் விட்டபின் அவன் ஈசனைப் பெறுதல் சொல்லவேண்டாவாயிற்று.
இதனால், முன் மந்திரத்து வினாவியவர்க்குப் பயன்பெறும் வழி காட்டப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம்
அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல்
இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.

பொழிப்புரை :

ஓரோரிடத்தில் மட்டுமே உள்ளது போலக் கட்டடங் களுக்கு உள்ளதுபோலக் காணப்படுகின்ற ஆகாயம் உண்மையில் அவ்வாறின்றி எங்கும் நிறைந்திருத்தல் போல இறைவன் ஓரோ ரிடத்தில் மட்டும் இருப்பவன் போல அங்கங்குள்ள குருலிங்க சங்க மங்களிலே இருப்பினும் உண்மையில் அவன் அந்த இடங்களை யெல்லாம் கடந்து எங்கும் இருக்கின்றான். இந்த உண்மையைத் திருவருளால் உணர்ந்து அந்தத் திருவருள் வியாபகத்திலே நிற்பவனே சிவஞானியாவான். அவன் உடல் விட்டால் அவனுக்கு சிவன் தனது எங்கும நிறைந்த நிறைவு நிலையை அனுபவமாகச் செய்து எல்லை யில்லாத இன்பத்தையும் அருளுவான்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க. `தோய்தல் போல` என உவம உருபு விரிக்க. `சிவஞானிகளுக்குத் தற்பரம் எங்குமாய்` என்பதில் `உடல் விட்டபின்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது.
இதனால், இவ்வுலகிற்றானே சீவன் முத்தி நிலையைப் பெற்றவன் உடலை விட்டபின் பரமுத்தனாய் விளக்குதல் கூறிமுடிக்கப்பட்டது.
சிற்பி