ஏழாம் தந்திரம் - 21. விந்து சயம்


பண் :

பாடல் எண் : 1

பார்க்கின்ற மாதரைப் பாரா தகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.

பொழிப்புரை :

தன்னைக் காதலோடு பார்க்கின்ற மகளிரைத் தான் அவர்க்கு இசைந்து பாராமல் விலகிச் சென்று யோகத்தில் நின்று புறப்பொருளைக் கண்ணால் பார்க்க எழுகின்ற ஆசையை மூலக் கனலை வளரப்பதில் சேர்த்து, மாதரைச் சிந்திக்கின்ற மனம் மாதேவனைச் சிந்தித்து உருகும்படி செய்கின்ற யோகியே சிவயோகியாதல் கூடும்.

குறிப்புரை :

`மனத்தில் எழுகின்ற மாதர் ஆசையை இங்ஙனம் யோக முயற்சியால் நீக்குதலே விந்து சயம் பெறுதற்குச் சிறந்த வழி யாகும்` என்பதாம். ``மூலத்தே சேர்க்கின்ற யோகி`` என்றமையால், அழல் என்றது மூலாக்கினியாயிற்று. `பொதுவான யோகத்தால் விந்து சயம் பெற்றவன் பின்பு சிவயோகியாய் விளங்குவன்` என்றபடி.
``மடவா ரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக
மாற்றி ... ... தனை நினைய வல்லோர்க்கென்றும் பெருந்துணையை`` l
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், விந்துயத்திற்கான சிறப்புமுறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும்உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடம்கெடும்
ஊனே அவத்துற் றுயிரோம்பா மாயுமே.

பொழிப்புரை :

தன்னியல்பால் திருவருள் வழியில் சென்று சிவயோகத்தில் நில்லாது காமம் முதலியவற்றிலே நிற்கின்ற கீழ் மகனும் அஞ்சும் அளவிற்கு `யோகி` எனப்படுவன் காம நெறியில் மிக்குச் செல்வானாயின் விந்து மிக அழிந்தொழியும். உடம்பும் உயிரைக் காக்க மாட்டாது வீணே கெட்டொழியும்.

குறிப்புரை :

``தான்`` மூன்றில் முதல் இரண்டும் நன்னெறியிற் செல்லாதவனையும், இறுதியொன்று அடயோகியையும் குறித்தன. காமம் முதலியனவாவன காமம், குரோதம் முதலிய அறு பகைகள். அதி காரம் - அதிகரித்தல்; மிகுதல். `காமநெறியில்` என்பது அதிகாரத்தால் வந்தது. `உட்கும் அதிகாரத்தில் தானே தங்கில்` என மாற்றியுரைக்க.
இதனால், விந்து சயம் பெறாத யோகியினது இயல்புகூறும் முகத்தால் மேற்கூறிய எதிர்மறை முகத்தால் வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மாயாள் வசத்தேசென் றாரிவர் வேண்டிடில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் ணாளின்பம் ஏற்பன மூன்றிரண்(டு)
ஆயா அபரத்(து) ஆதிநாள் ஆகுமே.

பொழிப்புரை :

மாமை நிறத்தால் வசீகரிக்கின்ற பெண்ணின் வசப் பட்டோராகிய இவர் அவளொடு கூட வேண்டின், என்றும் ஒழியாது மாறி மாறி வருகின்ற பூர்வ பக்க அபர பக்கங்களில் வளர் பிறையாகிய பூர்வ பக்கத்தில் முதல் எட்டு நாட்கள் போகத்திற்குப் பொருந்தா. (`விந்து சயத்தை விரும்புவோர் அந்நாட்களில் அதனைப் பெருதல் அரிது` என்பதாம்.) சோதிட நூலோரால் சிறப்பித்துச் சொல்லப்படாத அபர பக்கத்தில் முதல் ஆறு நாட்கள் வளர்பிறையின் இறுதி ஆறு நாட்களோடு ஒப்பனவாம்.

குறிப்புரை :

இவ் `வளர்பிறை, தேய்பிறை` என்பவற்றை மாதரது பூப்பிற்குப் பின்னர்ப் பதினைந்து நாளும், முன்னர்ப் பதினைந்து நாளுமாகக் கூறுதல் காம நூல் முறை. ஆகவே அம்முப்பது நாட்களில் இடைப்பட்ட பன்னிரண்டு நாட்கள் கலவிக் குரியனவாக அமைதல் காண்க. ``பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் - நீத்தகன்றுறையார் என்மனார் புலவர்``3 என்னும் தொல்காப்பியக் கட்டளையும் இதனோடு இயைந்து நிற்றல் காண்க.
இதனால், விந்து சயம் கைகூடும் காலம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆறைந்து பன்னொன்று மன்றிச் சகமார்க்கம்
வேறன்பு வேண்டுவார் பூவரின் பின்னைந்தோ(டு)
ஏறும் இருபத் தொருநா ளிடைத்தோங்கும்
ஆறின் மிகுத்தோங்கும் அக்காலம் செய்கவே.

பொழிப்புரை :

`பூப்பிற்குப் பின்னாட்களாகிய வளர்பிறையில் முதல் எட்டு நாட்கள் கூடதற்கு உரியன அல்ல` என மேல் விலக்கப்பட்டவற்றில் ஐந்தாம் நாளும், ஆறாம் நாளும் யோகியர்க்கு முற்றிலும் விலக்கத்தக்கன. (எனவே, `ஏனையோர்க்கு அந்நாட்கள் ஒருகாற் பொருந்தினும் பொருந்தலாம்` என்பதாம். பதினொன்றாம் நாள் யோகியர் அல்லார்க்கு ஆம்.) சக மார்க்கம் - யோக நெறி. வேறன்பு - மகளிரை விரும்புதல். ``சகமார்க்கத்தினிடையே வேறு அன்பை ஐந்து, ஆறு பதினொன்று அல்லாத நாட்களில் வேண்டுவர் நல்லோர்`` என்க. பூப்பிற்குப் பின் ஐந்து நாட்களில் அக்குற்றம் நீங்கியொழியும். (ஆயினும், `மேலும் `மூன்று நாட்கள் ஆகா` என முன் மந்திரத்தில் விலக்கப்பட்டன. அந்த ஐந்து நாட்களுக்கு மேல் இருபத்தொரு நாளில் பெண்மை சிறிது சிறிதாக மிகுந்து வரும் அந்த நாட்களில் இறுதி ஆறு நாட்களில் மிகவும் மிகுந்து நிற்கும். அதனால் இல்லறத்தில் நிற்கும் ஆடவர் அந்நாட்களில் கலவி செய்க.

குறிப்புரை :

இவ்வாற்றால் முப்பது நாட்களில் இறுதிமூன்று நாள் பெண்மையில்லா நாட்களாயின. இவையெல்லாம் நெறி பிறழா தோரை வைத்துக் கூறியனவாம். ``ஏறும், ஓங்கும்`` என்னும் பயனிலை கட்கு, `குற்றம், பெண்மை` என்னும் எழுவாய்கள் ``பூவரின்`` என்ற குறிப்பாலும், அதிகார இயைபாலும் வந்தியைந்தன. இடைத்து = இடையதாய். ``ஐந்து`` என்பது செய்யுள் நோக்கிப் பின் வைக்கப்பட்டது.
இதனால், யோகியர்க்கும், பிறர்க்கும் உரிய சில வரையறைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.

பொழிப்புரை :

கலவி செய்தற்குப் பொருந்திய காலம் இரவில் முதல் யாமமும், கடையாமமும் ஒழிந்த இடையிரு யாமமேயாம். அதனுள்ளும் காலத்தை, `சூரியகலைக் காலம், சந்திரகலைக் காலம்` என வரையறுத்தற்கு ஏதுவாகிய பிராண வாயுவின் இயக்கம் சந்திர கலையாகின்ற இடநாடியின் நீங்கிச் சூரிய கலையாகின்ற வலநாடிவழியே இயங்கும்பொழுது காமநூல் முறைப்படி கலவி செய்த பின்பு சூரிய கலையும், சந்திர கலையும் அல்லாத அமுத கலையாகிய நடுநாடியில் பிராணவாயு செல்லுங்கால் விந்துவை விடுக்க.

குறிப்புரை :

`இவ்வாறு செய்யின் விந்து சயம் கூடும்` என்பதாம். ``திரு`` என்றது `சிறப்பு` சிறப்புடையதனை, `சிறப்பு` என்றார். இரு முகூர்த்தம் ஓர் யாமமாகும். பகற்காலம் இயல்பாகவே விலக்கப் பட்டமையின், ``இருநான் முகூர்த்தம்`` என்றது இராக் காலத்திலே யாயிற்று. ``கலை காலம்`` என்பதில் ஒற்று மிகாமை வடநூல் முடிபு. `காலத்துள்` என ஏழாவது விரிக்க. `இந்து பருதி காலுள் நையுமிடத்து` என்க. ``கால்`` என்பது ``இந்து`` என்பதனோடும் கூட்டிக் கொள்ளப் படும். பிராண வாயு இங்குக் கூறிய முறையில் இயங்காவிடினும் யோகம் வல்லார் தாம் வேண்டுமாற்றால் அதனை இயக்கிக்கொள்வர். இனிப் பிராண வாயு நடுநாடி வழியிற் செல்லுதல் யோகத்தாலன்றிக் கூடாது.
இதனால், மேல் நாள் வரையறுத்த பின் அந்நாள்களில் காலம் வரையறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விடுங்காண் முனைந்திந் திரியங்களைப் போல்
நடுங்கா திருப்பானும் ஐயைந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டே.

பொழிப்புரை :

மண் முதல் புருடன்காறும் உள்ள இருபத்தைந்து கருவிகளும் தன்னை வந்து வாதிக்கும் பொழுது அவற்றால் சலனம் உறுதல் இன்றி இருக்கின்ற யோகியும் ஒரோ ஒருகால் பெண்ணின்பால் காதல் கொள்கின்றவனாவான் ஆயினும் அப்பொழுதும் அவன் அவள் மேல் பற்றுக்கொள்ளாது, போக காலத்தில் மிகுதியாய் இயங்குகின்ற பிராண வாயுவின் இயக்கத்தால் மெலிவடைகின்ற அந்தக் கரணங்களை அகமுகப் படுத்தி, முன் பஞ்சேந்திரியங்களைத் தன் வசப்படுத்தியது போலவே விந்துவையும் தன் வசப்படுத்தியே விடுவான்.

குறிப்புரை :

`தன் வசப்படுத்தியே விடுவான்` என்றதனால், `விடாது நிறுத்தவும் செய்வான்` என்பது பெறப்பட்டது. விடுதல் மாதின் இன்ப நிறைவின் பொருட்டாம். பஞ்சேந்திரியங்களை வெல்லுதலாவது அவற்றைத் தன் வசப்படுத்தலேயாதல் போல, `விந்து சயம்` என்பதும் அதனைத்தன் விருப்பப்படி ஆளுதல் என்பதேயாம் என்றபடி. காண், முன்னிலையசை. ``ஐயைந்தும் நண்ண`` என்பதை மூன்றாம் அடியின் முதற்கண் வைத்து அங்கு நின்றும் நேரே சென்றுரைக்க. மெய்வருந்தித் தொழில் செய்யுங் கால் மூச்சுப் பெருமூச்சாய் இயங்குதல் போலக் கலவிக் காலத்திலும் அவ்வாறியங்குதல் பற்றி, ``கடுங்கால்`` - என்றார். உயிர்ப்பு நெட்டுயிர்ப்பாய காலத்தில் அந்தக்கரணங்கள் சோர்வடைதல் இயற்கை. அது பொழுது அவற்றை உலகர் செயலற்றனவாகவே இருக்கச் செய்வர். யோகியர் அது பொழுது அவற்றைத் தம் தியானப் பொருளிலே ஒடுங்கச் செய்தல் பற்றி, ``கடுங்கால் கரணம் கருத்துறக் கொண்டு`` என்றார். `காலால் என உருபு விரிக்க. கருத்து - தியானப்பொருள்.
இதனால், யோகிகள் விந்து சயம் பெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கொண்ட குணனே நலனேநற் கோமளம்
பண்டை யுருவே பகர்வாய்ப் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும்போதில்
கண்ட கரணம்உட் செல்லக்கண் டேவிடே.

பொழிப்புரை :

மாதர்பால் ஆடவரது மனத்தை ஈர்ப்பனவாய் உள்ளன அவருக்கு இயல்பாக அமைந்த நாணம், மடம், அச்சம், பயிப்பு` - என்னும் குணங்களும், மேனியழகும், இளமையும், வடிவமைப்பும், பேசுகின்ற வாயாகிய பவளமும், ஒன்றை ஒன்று நெருக்கும் வகையில் புடைபரந்து எழுகின்ற கொங்கைகளும் ஆகிய இவையாம். `இவை நேற்றுக் கண்டனதாம் இன்று காணப்படுகின்றன` என்னும் வகையிலே இருப்பன அல்லது அவ்வப்பொழுது புதிது புதிதாய்த் தோன்றுவன அல்ல ஆயினும் அவை அவ்வாறிருந்தே ஆடவரை வசீகரித்தல் வியப்பு. அம்முறையில், மாணவகனே, அவை உன்னைப் பற்றி நெருங்கியிருக்கும் பொழுது நீ விந்து சயம் பெற வேண்டினால் யோகியர் போல அவைகளைப் பொறிகளாற் பற்றி, அப்பற்றுதலானே திரிபெய்துகின்ற அந்தக் கரணங்களை அகமார்க்கத்தில் செலுத்தி அதனால் விந்துவை உன் வசப்படுத்தி விடு.

குறிப்புரை :

``பண்டை உருவே`` என உருவிற்குக் கூறப்பட்ட பழைமை ஏனையவற்றிற்கும் கொள்ளப்படுமாகலின் அதற்கு இவ்வாறு விரித்துரை கூறப்பட்டது. ஏகாரங்கள் எண்ணுப் பொருள. மிண்டுதல், மிடைதல், இவை `நெருங்குதல்` எனப் பொருள்தரும்.
இதனால், `விந்து சயத்திற் அந்தக்கரணங்களைத் தம் வசப்படுத்தல் இன்றியமையாதது` என்பது கூறப்பட்டது.
`வாசி யோகத்தால் பிராணன் வசப்படும்; பிராணன் வசப்பட்டால் அந்தக்கரணம் வசப்படும்; அந்தக்கரணம் வசப்பட்டால் விந்து வசப்படும்,` என்பது யோக நூல் முடிவு.

பண் :

பாடல் எண் : 8

விட்டபின் கற்பவுற் பத்தி விதியிலே
தொட்டுறுங் கால்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள்சா நாள்குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதென்றெண்ணுயும் பார்க்கவே.

பொழிப்புரை :

ஆடவன் பெண்டினிடத்து விந்துவை விட்டபின் கலவிக் காலத்துச் சரவோட்டம் முதலியவை பற்றி அவ்விந்து கருவாகித் தோன்றும் முறையில் அதன் தொடக்கம் முதலியவை களையும், பின்பு அதன் வாழ்நாள் சாநாள்களையும், பின்பு அதன் இழி குணம், உயர்குணம் என்பவற்றையும் `தனித்தனி இவ்வியல்பினது` என்று ஆராய்ந்தறிதலையும் செய்வானாக.

குறிப்புரை :

`அவை யாவும் நல்லனவாய் அமைதலும் ஒரு வகை விந்து சயமும் அவை தீயனவாதலும் ஒரு வகை விந்து அப செயமும் ஆம்` என்பது கருத்து. எனவே, யோகி தனது யோக வன்மையால் அவற்றையெல்லாம் நல்லனவாகச் செய்வான்` என்பதாம். ``காலங்கள்`` என்றது கரு முற்றும் பத்துத் திங்களை. ஒவ்வொரு திங்களிலும் புறத்தே ஒவ்வொரு சடங்கு செய்தலும் கருமேற்கூறிய எல்லா வகையிலும் நன்மையை எய்துதற் பொருட்டேயாம். ``வாழ் நாள் சாநாள்`` எனப் பட்டன, கரு வயிற்றிலிருக்குங் காலமாகிய பத்துத் திங்களுக் குள்ளேயும் அமைவனவாம். காலத்தில் நிகழ்வனவற்றை, ``காலங்கள்`` என்றார். தோன்றுதல் - ஆராய்பவனுக்குப் புலனாதல். ``தோன்ற`` என்னும் செயவெனச்சம். ``தோன்றியபின்`` என இறந்த காலப் பொருட்டாய் நின்றது. ``கருதிய, கட்டிய`` என்னும் பெயரெச்சங்கள் அடுக்கி, `வாழ்நாள், சாநாள்` என்னும் பெயர்களைக் கொண்டு முடிந்தன. ``கருவிற்பட்ட உயிரினது வினையை நோக்கிக் கட்டிய` என்றவாறு. கட்டுதல் - நியமித்தல், கருவிற் பட்ட உயிருக்கு அக்கருவில் தானே அஃது அடைதற்குரிய அனைத்தும் அமைக்கப்படுதல் என்பதை,
``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்க டென்னும் ஆறும்முன் கருவுட் பட்டது``
-சிவஞான சித்தியார் - சூ. 2. 9.
என்பதனானும் அறிக. கருதுதல், கட்டுதல் ஆகிய வினைகட்கு `பால் வரை தெய்வம்` என்னும் வினைமுதல் வருவிக்க. ``எண்ணியும்`` என்னும் உம்மை சிறப்பும்மை, அதனால் அஃது அங்ஙனம் எண்ணிப் பார்க்க வல்லாரை நோக்கிக் கூறியதாயிற்று. ஆகவே, `சர ஓட்டம் முதலியவற்றை அறிய வல்லார்க்கு இங்குக் கூறியவெல்லாம் புலனாகும்` என்பது விளங்கும்.
இதனால், கலவி செய்வோர் அக்காலத்து மேற்கொள்ளும் முறை முறையின்மையால் மக்கள் நல்லராயும், தீயராயும் - வாழ்நாள் மிக்கராயும், குறைந்தவராயும் தோன்றுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பார்த்திட்டு வையப் பரப்பற் றுருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற் றிருதிங்கள் சேரா தகலினும்
மூப்புற்ற பின்னாளில் எல்லாம்ஆம் உள்ளவே.

பொழிப்புரை :

மேற்கூறியபடி கருவைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டியவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து உலகத்தில் பொதுவாக நிகழும் புலன் அடக்கம் இன்மையைத் தந்தை, தாயர் தவிர்த்து இருத்தலால் கரு மக உருப் பெற்று வளர்ந்து முதிர்ந்து பின்பு விதி அம்மகவைத் தாயின் வயிற்றிலிருந்து நீக்கி நிலத்தைச் சேரும்படி சேர்த்து, (தாய் தந்தையர் குழவிமாட்டுள்ள அன்பால் ஊக்கம் மிகுந்து செய்விக்கும் தெய்வக் காப்புக்களால்) மேல் கருவுட் பட்டனவாகக் கூறிய அவ்வினைப் பயன்கள் குழவியை வந்து பற்றதொழியினும் அதன்பின் குழவி வளர்ந்து வரும் பிற்காலத்தில் அவையெல்லாம் வந்து பற்றுவனவேயாகும். ஆகையால், மேற் கூறியவற்றையெல்லாம் ஆடவன் எண்ணிப் பார்ப்பானாக.

குறிப்புரை :

``அகலினும்`` - என்ற உம்மையால், `அகலுதல் அரிது` என்பதும், `மிகச் செய்தவழி ஒருவாற்றால் நீங்கும்` - என்பதும் பெறப் படும். `பரப்பற` என்பது ``பரப்பற்று`` எனவும், `உருப்பெற்றபின்` என்பது, `உருப்பெற்று` எனவும் திரிந்து நின்றன. ``சேர்த்தல், அகலுதல்`` என்னும் வினைகட்கு `வினைப் பயன்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது. இதன் ஈற்றடி இனவகையால் மூன்றாம் எழுத்து எதுகையாயிற்று.
இதனால், மேல், ``எண்ணியும் பார்க்க`` என்றது பயனில் செயலாகாமை விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

வித்திடு வோர்க்கன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கன்றி மிக்கோ ரறிவில்லை
வித்தின்இல் வித்தை விதற உணர்வோர்க்கு
மத்தில் இருந்ததோர் மாங்கனி ஆமே.

பொழிப்புரை :

உலகில் விதையை நிலத்தில் விதைப்பவர்க் கல்லது விளைவு ஏதும் கிடைக்க மாட்டாது. விதையை நன்முறையில் விதைப்பவர்க்கல்லது சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும். (அதுபோல விந்துவாகிய வித்தினை நன்முறையில் இடாதார்கக்ம் நன்மகப் பேறாகிய விளைவும் கிடைக்கமாட்டாது; அவர்க்குச் சிறந்த ஓர் அறிவும் இல்லையாகும்.) விந்துவாகிய வித்தினது இல்லற வித்தையை அமைந்து நோக்கி உணர்வாராயின், மரத்தில் தூங்கும் மாங்கனி போலும் பயன் கிடைப்பதாகும்.

குறிப்புரை :

முன்னிரண்டடிகள் ஒட்டணியாய் நின்றமையின் அவற்றிற்குரிய பொருள் வருவித்துரைக்கப்பட்டது. `மிக்க` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. மூன்றாம் அடியில் வந்த ``வித்தை`` என்பது `கல்வி` என்றவாறு. இல்லறத்தை ``இல்`` என்றார். விரைவினை உணர்த்தும் `விதுப்பு` என்பது முதனிலையளவாய், `விது` என நின்றது `வேதின வெரிநின் ஓதிமுது போத்து`` - என்பதில் `ஓந்தி` என்பது ``ஓதி`` என இடைக்குறைந்து நின்றது போல, `மரத்தின்` என்பது எதுகை நோக்கி, ``மத்தின்`` என இடைக் குறைந்து நின்றது. வாளா, `மாங்கனி ஆம்` எனின் குறித்த பொருள் விளங்கா தாகலின், ``மரத்திலிருந்தோர் மாங்கனி ஆம்`` என்றார். அதனால், வித்தினது விளைவே மாங்கனியாதல்போல், `விந்துவின் விளைவாக நன்மகவு உண்டாகும்` என்பது பெறப்பட்டது. இதுவும் ஒட்டணியே.
மாதொருத்தியை மணந்தவர்க்கு உளவாகிய இல்லறக் கடமைகளில் குடிவழியை நற்றவம் செய்தாயினும் நன்முறையில் தொடரச் செய்தலும் ஒன்றாகலின், `அது விந்து சயத்தால் கைகூடும்` என்றற்கு இவையெல்லாம் கூறினார்.
இதனால், விந்து சயத்தால் விளைவதோர் இம்மைப் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருவுயி ரோடும்
கருதத்து வித்தாய்க் காரண காரியம்
கருத்துறு மாறிவை கற்பனை தானே.

பொழிப்புரை :

இறைவன் கருவிற்பட்ட உயிரோடு அதன் அறிவுக் கறிவாய்க் கலந்து நிற்கின்றான். அதனால் அவ்வறிவிற்குப் பொருள்களை அறியும் ஆற்றலையும், ஆயுள் முதலானவற்றையும் அப்பொழுதே அமைக்கின்றான். அவன் அவ்வாறமைத்தற்கும் தந்தை தாயரது எண்ணமே காரணமாய் நிற்க, அவ்வமைப்பு அக்காரணத்தின் காரியமாகின்றது. ஆகவே, குழவியின் அறிவு, ஆயுள் முதலியவை தந்தை தாயரது எண்ணத்தினால் அமைவனவேயாம்.

குறிப்புரை :

இரண்டாம் அடியை முதலிற் கொண்டு, அதனுள்ளும் ``கருவுயிரோடும்`` என்பதை முதலில் வைத்து உரைக்க. ``கருத்து`` நான்கில் முதல் இரண்டு ஆகுபெயராய் அறிவைக் குறித்தன. பொரு ளுணர்வு அக்கர வடிவாதல் பற்றி, அதனை `அக்கரம்` என்றார். `நாதம்` என்றபடி. ``வித்தாய்`` என்றதனால், அவ்விடத்து, ``கருத்து`` என்றது, கருவின் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் காரணமான தந்தை, தாயருடை யனவாயின. கற்பனை - நினைவு. இவையும் அவ்வாற்றால் அவருடை யவாயின. ``மனந்தூயார்க்கு எச்சம் நன்றாகும்`` (திருக்குறள் - 456.) எனத் திருவள்ளுவரும் குழவியது அறிவு குணங்கட்குத் தந்தை தாயரது அறிவு குணங்கள் காரணமாதல் கூறினார்.
இதனால், `கலவிக் காலத்து இருவரும் நற்கருத்துடையராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றாதலும் ஒரு வகை விந்து சயமேயாம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 12

ஒழியாத விந்து உடல்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலம் சத்தி
ஒழியாத புத்திதபம் செபம் மோனம்
அழியாத சித்திஉண் டாம்விந்து வற்றிலே.

பொழிப்புரை :

யோக முயற்சியால் விந்து வீழ்தலின் நீங்கி உடற் குள்ளே நிற்குமாயின் பிராணனும், உடலின் மிக்க வலிமையும், அறிவின் ஆற்றலும் அழியாது நிலைபெறும். இனி விந்து மூலாக் கினியால் தன் இயல்பு வேறுபட்டு உடம்பினுள் ஒன்றாய்க் கலந்து விடுமாயின் இடைவிடாத ஞானம், தவம், செபம், மௌன நிலை, எட்டுச் சித்திகள் ஆகிய எல்லாம் உளவாகும்.

குறிப்புரை :

`அழியாது` என்பது ஈறு தொகுத்தலாயிற்று. `பிராணன் முதலியவை அழியாது நிற்கும்` என முடிக்க. உடல் வலியிழந்து மெலியுமாயின் அறிவும் சோர்ந்து, பிராணனும் வலிமை குன்றி நீங்கும். பிராணன் நீங்கவே உடல் சிறிதுபோதும் நிலைக்கமாட்டாது நீங்கியொழியும். எனவே விந்து சயத்தால் வாழ்நாள் நீட்டிப்பு உளதாதல் கூறப்பட்டதாம். வாழ்நாள் நீட்டித்தலால் உயிர் தான் எடுத்த உடம்பினால் ஆகிய பயனைப் பெறுதல் கூடும் என்பது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்டது. ஒழியாத ஞானமாவது, அறியாமையால் தவிர்க்கப்படாத மெய்யுணர்வு. ``அழியாத சித்தி`` என்றது சித்தியின் பெருமை கூறியவாறு.
விந்துவின் வாளா வலிந்து நிறுத்தின் அஃது உபாதியாய், உடற்குத் தீங்கு தரும். யோக முயற்சியால் நிறுத்தின் அது, தன்னியல்பு வேறுபட்டு நிற்கும் ஆதலின் அதனால் உடல் வலிமை முதலிய நலன்கள் உண்டாகும். ஆகவே, யோக முயற்சியால் நிறுத்துதலே இங்குக் கூறப்பட்டது. இனி அவ்வாற்றானே அதனை மேலும் திரிவுபடச் செய்த வழி அஃது உடம்பினுட் சுவறியோக நெறிக்கு மேலும் உதவும் என்பது பிற்பகுதியாற் கூறப்பட்டது.
இவ்வாறு இதனால் உண்மையான விந்து சயத்தால் விளையும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழுனைச் சொருகிச் சுடருற்று
முற்று மதியத் தமுதை முறைமுறைச்
செற்றுண் பவரே சிவயோகி யாரே.

பொழிப்புரை :

விந்து வறளும்படி யோக முயற்சியால் மூல அனலை அதன்பால் சேர்த்து, அதனால் அது கீழ்நோக்கி வீழும் இயல்பை விட்டு மேல்நோக்கி ஏறும் இயல்பினதாகச் செய்து அவ்வாறு சுழுமுனை வழியாக மேல் ஏறி ஆஞ்ஞையை முட்டி அடையப் பண்ணி, அஃது அவ்விடத்துள்ள ஒளியோடு கலந்தபின்னர், மேலும் செல்கின்ற மூலக்கனலால் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிறைமதி மண்டலத்திலிருந்து ஊறி வழிகின்ற அமுதத்தை முறை முறையாகத் தமது பண்டை இயல்பு கெட உண்கின்றவர்களே சிவயோகியர் ஆவார்கள்.

குறிப்புரை :

`துற்ற அனலால் சுழியில் சொருகி` என்க. ``துற்ற சுழுமுனை`` என்பதில் சுழுனை ஆகுபெயராய் அதன் எல்லையைக் குறித்தது. விந்து ஆஞ்ஞை வரையிற் சென்று அங்குள்ள ஒளியோடு கலத்தலால் தானும் ஒளியாகி உடல் எங்கும் பரவும் என்க. உற்றபின், என்பது, ``உற்று`` எனத் திரிந்து நின்றது, பண்டையியல்பாவது, உலகருட் சிலராய் மனஞ்சென்றவாறே சென்று விந்துவை வீழ்ந்து அழிதல். மதிமண்டலத்து அமுது தச நாடிகளில் பாய்தலால் அதுவே உணவாயிட, வேறு உணவு வேண்டாமையை `உண்ணுதல்` என்றார். அது பலமுறையாக நிகழும் ஆதலின், `முறை முறை உண்டல்` என்றார்.
இதனால், உண்மை விந்து சயத்தின் மேல்நிலைப் பயனும், அதனை அடைவோரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 14

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தர னாவோனும்
மோக முறினும் முறைஅமிர் துண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

பொழிப்புரை :

மாதர்மேல் மையலை உற்றபோதிலும் அதனால் உண்டாகிய விந்து அவர்பால் சென்று வீழாத நிலைமையை எய்திய பெரியோன், யோகியும், மேலான சித்திகளைப் பெற்றவனும், அதே நிலையில் போகத்தை இழக்காதவனும், ஞான வேந்தனாய் விளங்குபவனும், யோக முறையில் உண்ணும் மதி மண்டலத்து அமுதத்தைப் பெற்று உண்பவனுமாவான்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது பொதுவும், ``ஞான புரந்தரன்`` என்றது அதன்கண் உயர்ந்து நிற்கும் சிறப்பும் பற்றியாம். உம்மை பெற்றுவந்த பெயர்களை எல்லாம் வேறுவேறு எழுவாயாக வைத்து உரைப்பவர்க்கு அவை, ``அண்ணல்`` என்னும் ஒருமைப் பயனிலை யோடு இயையாமை அறிக. இயைய வேண்டின், அப்பெயர்கள் யாவும் ஒருவனையே குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும்.
கு-ரை: இதனால், விந்து சயத்தால் விளையும் பயன்கள் அதனைப் பெற்றவனது சிறப்பை வகுத்துக் கூறும் முகத்தால் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணம் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்(து)
உண்ணில் அமிர்தாகி யோகிக் கறிவாமே.

பொழிப்புரை :

சிவோகம் பாவனையால் உயிர் சிவனாதலால், அது நின்ற உடம்பும் சிவனது உடம்பாகியபின், அவ்யோகியது விந்தும் நீர்த்தன்மை நீங்கிச் சிவனது விந்துபோல நெருப்புத் தன்மை எய்த அதனையும், உலகில் நாள்தோறும் வெளிவிடுத்துச் சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்ற பிராணவாயுவாகிய மூலப்பொருளையும் ஒற்றுமைப்பட ஒன்றாகக் கலந்து மூலாக்கினியால் சமைத்து உண்ணும் முறையை ஓர் யோகி வல்லனாயின், அவனுத விந்து தேவாமிர்தமாய் உடல் நலங்கள் பலவற்றைத் தருதலுடன், ஞானமும் நன்கு சிறந்து பிரகாசிக்கச் செய்யும்.

குறிப்புரை :

அண்ணல் - தலைவன்; சிவபிரான். `ஆகிய பின்` என்பது ``ஆகி`` எனத் திரிந்து நின்றது. அனல் விந்து - அனல் தன்மைத் தாகிய விந்து. ``அவ்வனல் விந்து`` என்னும் சுட்டு, `அது சிவவிந்து வின் தன்மை` என்பதைச் சுட்டிற்று. ஒவ்வொரு மூச்சிலும் சிறிது சிறிது பிராண வாயு அழிந்தொழிதலை ``மாய்க்கும் பிராணன்`` - என்றார். ``பிராணனாம் விந்து`` என்பதில் ``விந்து`` என்பது `மூலப் பொருள்` எனப் பொருள் தந்தது. கட்புலனாகாது கருதியுணருமாறு அகத்தே நிற்றல் பற்றி மூலாக்கினியை, ``கண்ணும் கனல்`` என்றார். கண்ணல், கருதல். ``எரித்து`` என்றது, `அவ்வாற்றால் பாகம் (பக்குவம்) செய்து` என்றபடி. ``உண்ணில்`` என்பது அவ்வாறு செய்து உண்ணுதலின் அருமை தோற்றி நின்றது.
இதனால், உண்மை விந்து சயம் பெறுமாறும், அதனால், உயர் ஞானமாகிய பயன் விளைதலும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 16

அறியா தழிகின்ற ஆதலால் நாளும்
பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருவிந்து சேரவே மாயுமே.

பொழிப்புரை :

உலக மாந்தரது விந்துக்கள் அவரது அறியாமை யாலேதான் வீழ்ந் தொழிகின்றன ஆதலால், அவ்வீழ்ச்சிக்கண் நாள்தோறும் அவர்ஐம்பொறி வழியில் அகப்பட்டுத்துயர் உறு கின்றனர். ஆகையால், பெரியோர் அறிவுடையராய்ச் சாக்கிரத்தில் தானே அதீத நிலையை அடைந்திருக்க, பிண்டத்திற்கு முதலாயுள்ள விந்துவாகிய சுக்கிலமேயன்றி, அண்டத்திற்கு முதலாயுள்ள விந்து வாகிய சுத்த மாயையும் ஒரு சேர அவர்க்கு அடங்கித் தம்மியல்பு கெட்டு நிற்கும்.

குறிப்புரை :

அறிவாவது, இங்கு விந்து சயம் பெறும் முறையை அறிதல். அதீதமாவது, சித்தத்தை வேறிடத்தில் வையாது, சிவன்பாலே வைத்திருத்தல். அது ஞானியர்க்கு இயல்பிலும், யோகியர்க்கு யோகமுயற்சினாலும் வாய்ப்பதாகும். ஆகவே, ஏனையோர்க்கு அது கூடாமை யறிக. செறிவு - அடக்கம். அதனை ``செறிவறிந்து சீர்மை பயக்கும்``* என்பதனாலும் உணர்க. தம்மியல்பாவது பிண்ட விந்துவிற்கு விரைய வீழ்ந்தொழிதலும், அண்ட விந்துவிற்குச் சொல்வடிவாய் நின்று, தன்னின் நீங்கித் தனித்து நிற்கவொட்டாது தளைத்து நிற்றலுமாகும்.
இதனால், விந்து சயத்திற்குச் சாக்கிராதீதம் புரிதல் வழியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மாதரை மாய வருங்கூற்றம் என்றுன்னக்
காதல தாகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி யாண்டினும்
சோதியி னுள்ளே துரிசறும் காலமே.

பொழிப்புரை :

விந்து இழப்பிற்குக் காரணம் பால் உணர்ச்சியே யாகலின், அதனை மகளிரை அந்தப் பாலினராகக் கருதாமல், அங்ஙனம் கருதுபவர்க்கு அதனால் வரும் அழிவுபற்றி அவரைக் கொல்ல வரும் கூற்றுவனாகவே கருதின் அவர்மேல் செல்கின்ற ஆசையும், அதனால் எழும் பால் உணர்ச்சியும் நீங்கிவிடும். அவை நீங்கவே விந்து இழக்கப் படாதாகலின், அதனால் மனித ஆயுள் அளவேயன்றி, மேலும் பல்லாண்டு செல்லினும் இறப்பு வாராது. இனி அந்நாட்கள் எல்லாம் பரம்பொருளின் உள்ளே குற்றமற்றிருக்கும் நாட்களாயும் அமையும்.

குறிப்புரை :

`மாய வரும்` என இயையாது, `மாயக் கூற்றம்` என்றியைத்து, `இஃது உண்மை வடிவில் வாராது, வேறொரு வஞ்ச வடிவில் வருகின்ற கூற்றம்` என்று உரைத்தலும் பொருந்தும். காதலது - காதலின்கண் உண்டாவது. ``காலமே`` என்பதன்பின் `உளதாகும்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், `விந்து சயம் பெற விரும்புபவன் மாதர் ஆசையை வெறுத்தலே சிறப்பு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

காலங் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலங் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே.

பொழிப்புரை :

விந்து சயம்பெற்றவன் பல்லாண்டுகள் வாழ்தலால் காலத்தைக் கடந்து நிற்பவனாவன். விந்துவை அழித்துவிட்டவன் குறிப்பிட்ட சிலகாலம் வரையில் எவ்வகையிலோ வாழ்ந்து மறைந்தவனாவான். இவ்விருவரும் முறையே கலவிக் காலம் உட்பட எந்தக் காலத்திலும் விந்துவைத் தன் உடலில் வற்றியிருக்கச் செய்தவனும், மாதி னொடு பிராணாயாம முறையில் அமைந்த கலவியை அறியா தவனும் ஆவர்.

குறிப்புரை :

செறுதல் தடுத்தலும், அழித்தலும் ஆகிய இரு பொருளும் தருவதாகலின் அதனை இங்ஙனம் `பொருட்பின் வருநிலையணி` என்னும் நயம் தோன்ற இவ்வாறு கூறினார். ``காலங்கள்`` என்ற பன்மையால் எல்லாக் காலங்களும் கொள்ளப் பட்டன. `காரிகையொடு` என ஒடு உருபு விரிக்க. ஐயுருபு விரிப்பினும் ஆம். ``காலின்கண் வந்த கலப்பு`` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றது `யோக முறையில் செய்யும் கலவி` என்றபடி.
இதனால், விந்து சயம் பெற்றாரது உயர்வும், பெறாதாரது இழிவும் ஒருங்கு தொகுத்தக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

கலக்குநாள் முன்னாள் தன்னடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாளி உதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேல்அணை வீரே.

பொழிப்புரை :

மாதினொடு கூடுவீர், நீவிர் அக்காதல் வாழக்கை இருவரிடத்தும் நலமாக அமைய வேண்டின் மேலெல்லாம் கூறிவந்த முறையில் குறித்த நாட்கு முன்னாளே அவளது உடம்பில் மலமும், சலமும் ஆகிய உபாதிகளும், வாதம், பித்தம், ஐ என்னும் அவற்றின் மிகை குறைகளும் இல்லாதபடி நீக்குதற்கு உரியவற்றைச் செய்து அதன்பின்னர்க் கூடுவீராக.

குறிப்புரை :

`உடல் நலம் கெட்டிருப்பவளொடு கூடுதல் கேடு பயக்கும்` என்பதாம். ``மலம்`` என்றதனால் சலமும், `சீதம், பித்தம்` என்பவற்றைக் கூறியதனால் ஏனை வாதமும் கொள்ளப்பட்டது. இரண்டாம் தந்திரத்தில், ``மாதா உதரம் மலம்மிகில்`` என்னும் மந்திரம் கரு உற்பத்தி யின் வகையுணர்த்தற்குக் கூறினார்; இதனை விந்து சயம் பெறுவார்க்கு ஆவதுணர்த்தக் கூறினார் என்க. எனவே, இதன் கருத்து வகையும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

மேலாம் நிலத்தெழும் விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமுதுண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.

பொழிப்புரை :

விந்து ஆறு ஆதாரங்களில் மேல் ஆதாரமாகிய ஆஞ்ஞையில் தோன்றும்; அதற்கு மூலமாகிய பொருள் ஏழாம் தானமாகிய மதி மண்டலத்தில் தோன்றும். ஆகையால், பிராண வாயுவையும், அதனால் எழும் மூலாக்கினியையும் சுழுமுனை வழியாகச் செலுத்தி ஒவ்வோர் ஆதாரமாகக் கடந்து மதி மண்டலத்தை அடைந்து அங்கே உண்டாகின்ற அமிர்தத்தை உண்டு கொண்டே மாதினை ஆசையின்றித் தழுவினால், மையல் உண்டாகாது. அஃது உண்டாகாதாகவே விந்துவும் வெளிப்படாது அகத்திலே நிற்கும்.

குறிப்புரை :

விந்துவிற்கு மூலமாதல் பற்றி அங்ஙனம் ஆகின்ற அப்பொருளை ``நாதம்`` என்றார். சுழுமுனையை, `தண்டு` என்னும் வழக்குப்பற்றி, ``கோல்`` என்றார். நடத்துதற்குச் செயப்படுபொருள் மேலெல்லாம் கூறியவாற்றால் வந்தியைந்தன. பால் - இடம். `உரிய இடத்தில்` என்றபடி. ``உண்டு`` என்னும் வினையெச்சம் `நோக்கிச் சென்றான்` என்பது போல உடன் நிகழ்ச்சிகண் வந்தது. பற்றுதற்குச் செயப்படுபொருள் முன்னை மந்திரத் தொடர்பால் வந்து இயைந்தது.
இதனால், மேல், ``காலின்கண் வந்த கலப்பறியாரே`` எனக்கூறிய கலப்பு இத்தன்மையது என்பது அறிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

விந்து விளையும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழியும் அடக்கத்தின் ஆக்கமும்
நந்திய நாசமும் நாசத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

பொழிப்புரை :

விந்து உண்டாகும் முறையும், அஃது உண்டாகி முதிர்வதனால் விளைகின்ற பயனும், அதனை வீண்போகாது அடக்குதற்குரிய வழியும், அவ்வழிப்படி அதனை அடக்குதலால் வரும் ஆக்கங்களும், விந்து கெடுவதாகிய கேடும், அக்கேட்டினால் விளையும் விளைவுகளின் வகையும் ஆகிய இவற்றையெல்லாம் முறையாக மனத்திற் கொணர்ந்து, ஆய்ந்து உணர்பவர்க்கு விந்து சயம் உண்டாக வழி ஏற்படும்.

குறிப்புரை :

``அந்த`` என்பது பின்வரும் அடக்கத்தைச் சுட்டிற்று. ``நாசத்தால்`` என்பதன்பின் `விளையும்` என ஒரு சொல் வருவிக்க. பேதம் உடையவற்றை, ``பேதம்`` என்றார். காரணம் உண்டாய விடத்துக் காரியம் நிகழ்தல் எளிதாதல் பற்றி, ``சயமாகும் விந்துவே`` என்றாராகலின், அதற்கு இதுவே பொருளாயிற்று.
விந்து உண்டாகும் முறை முதலிய பலவும் மேலெல்லாம் கூறப்பட்டமை காண்க.
இதனால், `அறிவுடையோர், பிண்டத்திற்குக் காரணமான விந்துவைப் பற்றி அறியற்பாலனவற்றை எல்லாம் அறிதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரிந்(து)
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

பொழிப்புரை :

[இமந்திரத்திலும் மேல், ``அண்ணல் உடலாகி`` என்னும் மந்திரத்துட் கூறப்பட்ட பொருளே, `அண்ணல் உடலாதல்` ஆகிய அவ்வொன்றொழியக் கூறப்பட்டது.]

குறிப்புரை :

அது சிவயோகியர்க்கு ஆகும் சிறப்புமுறை. இது யோகியர் எல்லோர்க்கும் ஆகும் பொதுமுறை. அதனால் `அறிவாதல்` நீக்கி, `அமுதாதல்` மட்டும் கூறப்பட்டது. வீசம் - (பீசம்) வித்து. நந்திய - வளர்ந்த.
யோக முறையில் மூலாதாரம் முதல், கொப்பூழ் வரையுள்ள பகுதி அக்கினி கண்டமாகவும், கொப்பூழ் முதல் இருதயம் முதல் கண்டம் வரையுள்ள பகுதி சூரிய கண்டமாகவும், அதற்குமேல் உள்ள பகுதி சந்திர கண்டமாகவும் சொல்லப்படும். அதிகண்டர் - அக்கினி கண்டத்திற்கு மேல் உள்ள கண்டம். ``சந்திரன்`` என்றதும் சந்திர கண்டத்தை.

பண் :

பாடல் எண் : 23

அமுதச் சசிவிந்து ஆம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவபோகம் ஆதலால் சித்தி
அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

பொழிப்புரை :

சந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதமாகிய துளிகளில், யோகியினது உடம்பில் உண்டாகின்ற விந்து முன் மந்திரத்தில் கூறிய முறையில் சென்று ஒடுங்க, மற்று உடம்பைக் காக்கின்ற அமுதமாய் நீர்க்கூறுகள் விரையச் சுழன்று மூலாக்கினியால் வற்ற, அவ்வாற்றால் அமுதம் போலும் இனிய சிவபோகம் விளையும் ஆதலால், அவ்யோகிக்கு அப்பொழுதுதான் அடைந்தபேறு அமுத மழை பொழிதல் போல அமையும்.

குறிப்புரை :

`சசி அமுத விந்து` என மாற்றி, `உள்` என்னும் உருபு விரிக்க. ``அமுதப் புனல், அமுதச் சிவபோகம்`` என்பன உவமத் தொகை. பிலாவனம் - ஒழுகுதல். அது மழைத்தாரை வீழ்தலைக் குறித்தது.
இதனால், `மகளிர் இன்பமாகிய குளப்படி நீரை விடுத்து விந்து சயம் பெற்றார் சிவயோகியாராயின் சிவபோகமாகிய பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைப்பர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து)
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.

பொழிப்புரை :

மாதும், ஆடவனும் ஒருங்கு கூடி, இருவர் உடலும் `ஓர் உடலே` எனும்படி இறுகப் புல்லிய விடத்தும் ஆடவனுக்கு அப்புல்லுதல் காரணமாக வெளிப்படுதற்குரிய விந்து வெளிப்படா திருக்கப் பெறுதலே உண்மை யோகமாகும். ஆயினும் அவ்விடத்து இன்ப நுகர்ச்சி இல்லா தொழியாது; உள்ளதேயாகும். அவ்வின்ப நுகர்ச்சி உடலின்ப நுகர்ச்சியாகாது சிவ இன்ப நுகர்ச்சியாகவே அமையும். அதுவே இன்ப நுகர்ச்சியை உடையவனுக்குத் தீங்கினை விளையாது, நன்மையையே விளைக்கும் இன்ப நுகர்ச்சியாம். இந்நுகர்ச்சியைப் பெறும் வகையில் மாதரைப் புணர அறியாதார் புணர்ச்சிக் காலத்தில் அவரை உடல் இன்ப மயக்கமின்றிப் புணர மாட்டார்.

குறிப்புரை :

`அம்மயக்கத்தில் மூழ்கிப் புணர்ந்து கெடுவர்` என்பதாம். `புணர்ந்து ... ... கலந்தாலும் அவ்விந்து ஒழியா வகை யோகம்` எனக் கூட்டியுரைக்க. `போகிக்கு` என நான்கண் உருபு விரிக்க. ``நற்போகமாம்`` என்னும் பயனிலைக்கு, `அதுவே` என்னும் எழுவாய் வருவிக்க. தீங்காவது, போகம் வினைப்போகமாய், மேலும் வினையைப் பெருக்குதல். நன்மையாவது இன்பப்பேற்றைப் பலவாகத் தருகின்ற திருவருளை நினைத்தலால் அதனிடத்து மேலும், மேலும் அன்பு மீதூர்தல்.
``மாழை ஒண்கண் பாவையைத் தந்து ஆண்டானை`` எனவும், ``நொய்யேனைப் பொருட்படுத்துச் - சங்கிலியோடு எனைப்புணர்த்த தத்துவனை`` (திருமுறை - 7. 51-10, 11. )எனவும், ``மான் திகழும் சங்கிலியைத் தந்து வருபயன்களெலாம் - தோன்ற அருள் செய்தளித்தாய்`` l எனவும், ``பண்மயத்த மொழிப் பரவே சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே`` 3 எனவும் நினைந்து, நினைந்து உருகியவாறும்,
``ஓர்ந்தனன், ஓர்ந்தனன் உள்ளத் துள்ளே உள்ள ஒண்பொருள்;
சேர்ந்தனன், சேர்ந்தனன்; சென்று திருவெற்றி யூர்புக்குச்
சார்ந்தனன், சார்ந்தனன் சங்கிலி மென்தோள்; தடமுலை
ஆர்ந்தனன்; ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே`` 8
என அருளிச்செய்தவாறும் அறிக. ``மோகங் கெட`` எனப் பொதுப்பட அருளினமையால் இவ் யோகம் வல்லார் தம்மால் கூடப்பெறும் மகளிரையும் மோகம் இலராகச் செய்வர் என்பதும் பெறப்படும். விந்து ஒழியா வகை புணரும் யோகம் வச்சிர `குலியோகம�%8

பண் :

பாடல் எண் : 25

மாத ரிடத்தே செலுத்தினால் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாகுவார்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

பொழிப்புரை :

யோகத்தைப் பொருந்தியவர் மாதரிடத்தே அவர் விழைவு நோக்கி விந்துவை விடுத்தாராயினும் அவர்மேல் கொண்ட மோகத்தால் விடுத்தாரல்லர். ஏனெனின், அவர் மாதர்பால் காட்டுகின்ற மோகத்தைச் சொல்லுமிடத்து ஏனையோர் மோகம் போன்றதாயிருப்பினும் அது வேறேயாம். (`பொதுவாக யாவர்மீதும் உளதாகிய அருளேயாம்` என்பதாம்.) இனி, யோகத்தில் பொருந்தாதவர் மாதர்மேல் தம் உயிர்மேல் வைத்திருக்கும் ஆசையைப்போலும் ஆசையை வைத்து அதனால் மெலிவெய்துவர்.

குறிப்புரை :

காதல், இங்கு மோகத்தைக் குறித்து நின்றது. `யோகியர் மோகம் இன்மையால் அப்பொழுது விந்து சயம் பெறுதலும், பின்னரும் பல இன்னலுக்கு ஆளாகாது உய்தலும் உடையர்` என்பதும், `ஏனையோர் அவற்றிற்கு மாறான நிலைலையுடையராவர்` என்பதும் கருத்து. மூன்றாம் அடியை இறுதிக்கண் வைத்து உரைக்க. ``யோகம் கலந்தவர்`` என்றதனால். ``அதனைக் கலவாதவர்`` என்பது பெறப்பட்டது. ஈற்றடி. `அங்ஙனம் காதலைச் சாற்றில், காதலர் காதல் போன்றதாம் என மாற்றியும். ஒரு சொல் வருவித்தும் உரைத்தற்கு உரியது ``அங்ஙன்`` என்றது, `அவரிடத்து` என்றபடி.
இதனால், யோகம் வல்லவரும், அல்லவரும் இன்பம் நுகருமாறு கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோ(டு)
ஆற்றி அமுதம் அருந்தவிந் தாருமே.

பொழிப்புரை :

[இம்மந்திரத்திலும் மேல் ``வற்ற அனலை`` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட முறையே ``சுழி அனல் சொருகிச் சுடருற்று`` என்பதொழியச் சொல்லப்பட்டது.]

குறிப்புரை :

விந்து ஆரும் - விந்து பெருகும், பின்பு, ``சத்தியால் சயமாகும்`` என முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. ``சத்தியால்`` என்பது இரட்டுற மொழிதலாய், `திருவருளாகிய சத்தியின் வழிச் செயற்படும் தனது சத்தியால்` எனப்பொருள் தந்தது. `செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போத்வதாகிய திருவருள்`* யோக முயற்சியுடையார்க்கு அதற்கு ஏற்றவாறு அருள்செய்யும் என்பதற்கு. திருவருட் சத்தியும் உடன் கூறப்பட்டது. `ஓடாது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று நாதம் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள இடத்தில் தோன்றுவது என்பது மேல் ``மேலாம் நிலத்து எழு`` என்னும் மந்திரத்து உரையிலும் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் கூறியபடி யோகியர்க்கு விந்து சயம் கூடுதல் திருவருட் குறிப்பால் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

விந்துவும் நாதமும் மேவக் கனல்மூலம்
அந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடைச்
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு செய்யும் யோகத்தால் மூலாக் கினியால் விந்துவும், நாதமும் கலந்த ஒன்றாதலும், அவ்வக் கினியின் வெம்மை உடம்பின் மயிக்கால்தோறும் பரவி நிற்றலும் நிகழ, அவ் வாற்றால் உள்ளம் உலகை வெறுத்துச் சிவத்தினிடத்தே செல்ல, பின்பு, `சிவம் நான்` என்பதாகிய சிவோகம் பாவனை உண்டாக, அதனால் விந்து அழியா உடம்பில் அதற்கு வித்தாய், அதனுள்ளே சுவறி நிற்கும்.

குறிப்புரை :

அகம் - நான். `விந்து, உடம்பு அழியாமைக்கு வித்தாய் அதனுள்ளே மாளும்` எனக் கூறற்பாலதனை இங்ஙனம் கூறினார். ``வித்தில்`` - வித்துப்போல.
இதனால், விந்து சயத்தின் பொருட்டுச் செய்யப்படும் யோகம் சிவ யோகத்தையும், காய சித்தியையும் உண்டாக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

வித்தக்குற் றுண்பான் விளைவறி யாதவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்தச்சுட் டுண்பவன்
வித்துக்குற் றுண்பானில் வேறலன் நீற்றவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்துவிற் றானன்றே.

பொழிப்புரை :

விதைக்கு வைத்திருக்கும் நெல்லைக்குற்றி உண வாக்கிக் கொள்பவன் வித்தினால் விளையக் கூடிய பெரும்பயனை இழந்தவனாவன். இனி, விதை நெல்லைக்குற்றி உண்ணாமல், பொரி யாக வறுத்து உண்பவனும் முன் சொல்லப்பட்டவனைவிட அறிவுடை யவன் ஆகமாட்டான். (ஏனெனில், அவனும் விளைவை இழக்கின்றா னன்றோ!) ஆகையால் சிவயோகி விதையைக் குற்றி, அல்லது வறுத்து உண்ணாமலும், பலரும் செய்கிறபடி நிலத்தில் விதைத்தலைச் செய்யா மலும் பொன்னுக்கு விற்பவனைப் போன்றவன் ஆவான்.

குறிப்புரை :

நீற்றவன் - முழுநீறு பூசியவன். சிவயோகி இம்மந்திரம் ஒட்டணியாகச் செய்யப்பட்டமையால், இதன் பொருள் வருமாறு:-
`விந்துவை உபாதியாக்கிக் கொண்டு அதனை எவ்வாற்றா லேனும் போக்குபவன் அதனால் எந்தப் பயனையும் பெறாமல் இழப்பவனாவன். இனி யோகத்தால் விந்துவை உடம்பினுள் வற்றச் செய்பவனும் விந்துவால் பெறக்கூடிய பெரும்பயனைப் பெற்றவன் ஆகமாட்டான். ஆகையால் சிவயோகி இந்த இரண்டு வகையிலும் இல்லாமலும் பெரும்பாலோர்போல விந்துவை மாதர்பால் விடாமலும் விந்து சயத்தால் சிவோகம் பாவனையை அடைந்து நலம்பெறுவான்`
விதை நெல் மிக்க விலையுடையது. அதனைப் பொன்னுக்கு விற்றால், அந்த அளவு உணவு நெல்லை மலிவான விலைக்கு வாங்கி உண்ணவும் செய்யலாம்; பொன்னும் இலாபமாகும். அதனால், `அதனை ஒப்பது சிவயோகியின் செயல்` என்றார்.
இதனால், `விந்து சயத்தால் பெறத்தக்க சிறந்த பயன் சிவோகம் பாவனையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.

பொழிப்புரை :

உணவிலே விந்து காரண ரூபமாய் அடங்கி யிருத்தலை அறிந்து உணவை நன்முறையில் ஒழுங்காக உண்டு வருதலாலும், பின்பு பிராணனின் அவ்வாறுள்ள விந்துவை அந்தப் பிராணனை ஒழுங்கான முறை இயக்குதலால் ஒளிவடிவாக எழச் செய்து ஒலிவடிவாகிய விந்துநாதத் தானங்களில் ஏற்றி அதற்கு மேலும் செலுத்துதலாலும் அக்கர வடிவாய் நின்று அறிவைத் தோற்றுவிக்கின்ற பெரிய சுத்த மாயையும் உடம்பினுள்ளே அடங்கி நேரிதாம்.

குறிப்புரை :

`உணவையும், பிராண வாயுவையும் ஒழுங்கான முறையில் கொண்டிருக்கும் யோகிக்கு வாக்குகள் நேரியவாக, அதனால் மனம் தன்வழிப்பட்டுச் சிவ சிந்தனை உண்டாகும்` என்பது கருத்து. மறித்தல் - அடக்குதல். `மறித்தலால் மின் ஒத்த விந்து` என் றதனால், விந்து மின்னல் போல ஒளிவடிவாதல் அனுவாத முகத்தால் பெறப்பட்டது. வன்னம் - சக்கரம். வன்னத்து இருவித்து`` என்பது, `கடிசூத்திரப் பொன்` என்பதுபோலக் கரும காரகத்தின்கண் வந்த ஆறாவதன் தொகை. நான்காவதன் தொகை` எனினுமாம்.
இதனால், விந்து சயத்தால் மேற்கூறியவாறு சிந்தனை மாறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம்
அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

பொழிப்புரை :

ஆடவர் எல்லோர்க்கும் அன்ன விந்து, பிராண விந்து` என இரு விந்துக்கள் உள்ளன. அந்த உண்மையை உணர்ந்து, அன்னத்தையும், பிராணனையும் நெறிபடுத்தி நிற்க வல்லவர்க்கு மேனி பொன்போல விளங்கும். அட்டமா சித்திகள் கூடும். மேலும் அத்தன்மை யுள்ள யோகிகள் யாவரும் நீண்ட காலம் வாழ்ந்தமை வெளிப்படை.

குறிப்புரை :

பிராண விந்துவாவது பிராணன் நெறிப்பட்டு இயங்கு தலால் விந்து வலுப்படுதலும், நெறிப்பட்டு இயங்காமையால் விந்து மெலிவடைதலும் ஆகும். ``தன்னை`` என்றது. அந்த உண்மையைச் சாதிக்க வல்லார் அடையும் பயன்களாக இங்குக் கூறப்பட்டவை மூன்றாந் தந்திரத்திலும் கூறப்பட்டன `இரு விந்து` என்பதன் பின் `உள` என்பதும், ஈற்றில் `வெளிப்படை` என்பதும் எஞ்சி நின்றன. `உருவும் சொன்னமாம்` என உம்மையை மாற்றி வைத்து உரைக்க.
இதனால், `விந்து சயம் வேண்டினார் உணவையும், பிராணனையும் நெறிப்படுத்திக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 31

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை
சென்று பராசத்தி விந்துசயந் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசந் தானே.

பொழிப்புரை :

(நீயே விந்து சயத்தைப் பெற்று விடலாம் என்று நினையாமல்) திருவருளும் அம்முயற்சியில் தலைப்பட்டு உடன் நிற்றற்பொருட்டுத் திருவைந்தெழுத்தில் உயிராய் உள்ள சிகாரத்தின் பொருளாகிய சிவனை அகார உகார மகாரங்களோடு உடன் வைத்துத் தியானிக்க விந்து சய மார்க்கத்தைப் பிறருக்கு உபதேசிக்கும் பொழுதும் இவ்வாறே உபதேசிப்பாயாக.

குறிப்புரை :

`பிரணவ யோக முறையால் விந்து சயம் எளிதில் பெறலாம்` எனக்கூற வந்தவர் `அதனைச் சிவத்தியானத்தோடு செய்யல் வேண்டும்` என்பதை இவ்வாற்றால் கூறினஆர். ``சிகாரம்`` என்றது அதனால் குறிக்கப்படும் பொருளை. ``நினைக்கும்`` என்றது `நினைக்கப் படும்` என்றபடி. `பிராணனாய் நினைக்கும்` என முடிந்து, அதன்பின் `அதனை` என்பது வருவித்து `ஒன்றவை` என முடிக்க. `பராசத்தி சென்று விந்து சயந்தன்னை ஒன்ற` என முதலிற்கூட்டியும், உபதேசம் ஒன்று உரைக்க` என இறுதியில் மாற்றியும் பொருள் கொள்க.
இதனால், சிவத்தியானத்தோடு கூடிய பிரணவயோகம் விந்து சயத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 32

தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை
வானேய் உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :

முன்மந்திரத்தில், `அகாரம் முதலிய மூன்றோடு உடன் வைத்துத் தியானிக்க` எனக் கூறிய கூற்றில் சுட்டப்பட்ட சிவத்தை உபதேசிக்கும் உபதேசமே உண்மை உபதேசமாகும். ஏனெனில், சிவம் இன்றி யாதொரு பொருளும் இல்லை. இனி ஆகாயம் போல் எப்பொருட்கும் வியாபகமாய் உள்ள சுத்தமாயை யினின்றும் பிரணவ வடிவாய்த் தோன்றுகின்ற வாக்குக்கள் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கப்படும்பொழுது ஆதார யோகத்தில் ஏழாம் தானத்துடன் உலகியல் உணர்வோடு நிகழும் முதற் பதினான்கு கலைகள் ஆதார சத்திகளோடு அடங்கிவிடும். உலகியல் நீங்க சிவ உணர்வோடே நிகழும் எஞ்சிய ஏனை இருகலைகள் நிராதார யோகத்தில் நிராதார சத்திகளோடு அடங்கிவிடும். அந்நிலையே சிவத்துவ நிலையாம்.

குறிப்புரை :

`பிராசாத யோகத்தால் விந்து சயம் பெறுவார்க்குச் சிவோகம் பாவனை கைவரும் வகையில் யோகம் சிவயோகமாய் நிகழும்` என மேல், `விந்துவும் நாதமும் மேவக்கனல்மூலம்`` என்னும் மந்திரத்திற் கூறியதை அஃது இவ்வாற்றால் நிகழும் என்பது இதனுட் கூறப்பட்டது. உபதேசப் பொருள், ``உபதேசம்`` எனப்பட்டது.
`பிரணவத்தைப் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கு மிடத்து அவை எவ்வாறு அமையும்` என்பது மூன்றாம் தந்திரத்தில், ``கலைநிலை`` என்னும் அதிகாரத்தில் விரிவாக விளக்கப்பட்டது.
பூதாகாயம் ஏனை எல்லாப் பொருள்கட்கும் வியாபகமாய் நிற்றல் யாவராலும் அறியப்பட்டதாகலின் அதனைச் சுத்த மாயையின் வியாபகத்திற்கு உவமையாகக் கூறி விளக்கினார். ``வான் ஏய்`` என்பதில் `ஏய்` உவம உருபு. ``விந்துவின் வந்த`` என ஐந்தன் உருபு விரிக்க. புத்தி - ஞானம்; சிவஞானம். இந்த ஞானம் சிவத்தைத் தன்னின் வேறாக உணரும் ஞானம். இது, நீங்கினால் ஆன்மாச் சிவத்தைத் தன்னுள்ளே உணர்ந்து சிவமாம் ஆகலின் அதனை, ``சிவகதித் தன்மை`` என்றார்.
இதனால் விந்து சய உபாயங்களில் பிராசாத யோகம் சிறப்புடையதாதல் அது நிகழுமாறு கூறிய முகத்தால் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

விந்துவுள் நாதம் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

பொழிப்புரை :

சுத்த மாயையினின்றும் தூலமாகவும், சூக்கும மாகவும் தோன்றுகின்ற வாக்குக்களால்தான் இங்குக் காணப்படுகின்ற பலவாகிய உயிர்களும் உளவாயின. அதனால், மந்திரங்களின் தோற்ற முடிவுகளே உயிர்களின் தோற்ற முடிவுகளாய் அமைகின்றன. ஆகவே அவ்வாக்குக்கள் பிராசாத யோகத்தால் தம் சத்திகள் அடங்கப் பெறுமாயின், சிவோகம் பாவனை உண்மையாய்ப் பயன் தரும்.

குறிப்புரை :

பயன் வகையில் இவ்வுலகத்தார்க்குத் தூலம் சிறந்த தாகலின் அதனை முன்னர்க் கூறினார். உடலினிடத்து உயிர் உளதாதல் அதன் உணர்வு பற்றியே அறியப்படுதலாலும், அவ்வுணர்வு வாக்குகளாலன்றி நிகழாமையாலும் `அவற்றது தோற்றத்தினாலே உயிர்களின் தோற்றம் உளதாயிற்று` என்றார். தோற்றத்திற்கு உள்ளது முடிவிற்கும் ஒக்கும் ஆதலின் `மந்திரங்களின் தோற்றமும் முடிவுமே உயிர்களின் தோற்றமும், முடிவுமாம்` என்பது பெறப்படும். மந்திர மொழியால் உண்டாகும் உணர்வே இறையுணர்வு ஆதலின் அதனது தோற்ற முடிவுகளையே உணர்வினது தோற்றமுடிவுகளாகக் கூறியது பொருந்துவதாயிற்று. இவற்றால் வாக்குக்களின் நீங்குதலே பந்தத்தின் நீங்குதலாம் ஆதலின், `விந்து அடங்கச் சிவோகம் விளையும்` என்றார்.
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம உண்டேல்
சேவுயர் கொடியி னான்றன் சேவடி சேர லாமே`` l
என்னும் சிவஞான சித்தி இங்கு நினைக்கத்தக்கது. எனவே வாக்குச் சயமும் ஒரு வகை விந்து சயம் ஆயிற்று.
இதனால், சிறப்புடைய ஒரு விந்து சயம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 34

வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும்அந் நீள்வரை யெட்டில்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்தப் பழமே.

பொழிப்புரை :

விந்துவை வற்றச் செய்யும் முறையும், மனம் எங்கும் உலாவருவதில் அடைகின்ற வெற்றியைத் தடுத்து நிறுத்தும் முறையும், அந்த வெற்றியை எட்டுத் திக்கிலும் உயர்ந்து நிற்கின்ற மலைகளில் எழுதிப் புகழ் பெறுதலும் ஆகிய எல்லாம் உடம்பு வினைத் தொடர்பை அறுத்துக்கொள்கின்ற காலத்திலேதான் ஒருவனுக்குக் கைவரும்.

குறிப்புரை :

வறுத்தலுக்குச் செயப்படு பொருளாகிய `விந்து` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. மனோலயம் எய்தப் பெற்றாரது புகழ் எட்டுத்திக்கும் பரவுதல்.
``இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு`` 3
என்பதனாலும் விளங்கும். `அஸ்தி` என்னும் வடசொல் தமிழில் `அத்தி` எனத்திரிந்து வரும் ஆதலின் அதனை நாயனார் உடம்பைக் குறித்தற்குச் சிலேடை நயம்தோன்ற வழங்குவர். `அத்திப் பழமும், அறைக்கீரை நல்வித்தும்`` என்னும் மந்திரஉரை பார்க்க உடம்பை எடுத்து உழல்கின்ற உயிரினது செயலை உடம்பின்மேல் ஏற்றி, ``அத்திப்பழம் வினையை அறுக்கின்ற நாள்`` என்றார்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய விழுப் பயன் வினை நீங்கப் பெற்றார்க்கே கூடுவதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 35

விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம்அக் காமத்தை நாடிலே.

பொழிப்புரை :

மேல், ``மேலாம் நிலத்தெழும் விந்துவும்`` என்னும் மந்திரத்திலும், ``விந்துவின் வீசத்தை`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டபடி விந்துவும், நாதமும் ஒன்றாகிச் சந்திர மண்டலத்தை அடைந்த பொழுது அங்கு நின்றும் அமுதம் ஒழுகும் காலத்தில் அதனுடன் கலக்கத்தக்க அவிசு `நின்ற சிகாரம்` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட பிரணவ மந்திரமேயாகும்.

குறிப்புரை :

என்றது, `பிரணவ கலைகளை அவ்வவற்றிற்கு உரிய அதிதேவர்கள் ஏற்ற மகிழ்ந்து, அவற்றின் வலியை அடக்குவர்` என்றபடி. மேற்குறிக்கப்பட்ட மந்திரங்களில் சொல்லியவற்றை மீட்டும் அனுவதித்தது வாக்குச் சயமாகிய விந்து சயம் இவ்வாற்றால் உளதாம் என்பதை உணர்த்துதற் பொருட்டு. இதனுள் ஈற்றடி இனவெதுகை.
இதனால், ``விந்துவுள் நாதம் விளைய விளைந்தது` என்னும் மந்திரத்துள் கூறப்பட்ட அவ்விந்து சயம் அமையுமாறு கூறப்பட்டது.
பதிப்புக்களில் இம்மந்திரத்தை அடுத்துக் காணப்படும், ``மனத்தொடு சத்து`` என்னும் பாடல் அதனை அடுத்து வரும் மந்திரத் திற்கு முன்னோடி போன்றுள்ளது. ஆயினும் பொருளற்றதாய் உள்ளது. அதனால் அதனை, `நாயனார் வாக்கு` எனக் கொள்ளுதற்கில்லை.

பண் :

பாடல் எண் : 36

சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து)
ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.

பொழிப்புரை :

சூக்குமை முதலிய வாக்குக்களும், அவ்வாக்குக் களால் இயக்கப்படுகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களும், அந்த அந்தக்கரணங்களால் உண்டாகின்ற உணர்வுகளும் ஆகிய இவை ஒருங்கு தொக்க நிலையாகிய அறிவின் நிலையை உலகர் அறிய மாட்டார். அதனை உள்ளவாறு அறிய வல்லவர் ஆசான்ம மூர்த்தியின் அருள் பெற்றவரே ஆவர். அவர்க்கு அந்த நிலையே சிவனது இருப்பிடமாதல் விளங்கும்.

குறிப்புரை :

இங்குக் கூறப்பட்ட மூன்றனுள் முதலாவதாகிய வாக்கும் இறைவன் இயக்கவே இயங்கும் ஆகவே இறைவன் வாக்கினை நேராகவும், அந்தக் கரணங்களை வாக்கு வழியாகவும் இயக்கவே உயிர்கட்கு உணர்வுகள் உண்டாகின்றன. ஆகவே, `இவ்வுண்மை உணருமிடத்து வாக்கே இறைவனுக்கு இடம்` என்பது விளங்கும். வாக்குப் பிரணவ வடிவாகலின் பிரணவம் இறைவனுக்கு இடமாதல் விளங்கும். அது விளங்கவே விந்து சயம் பெறுதற் பொருட்டு, பிரணவ யோகத்தில் மனம் செல்லும் என்பதாம்.
``மனம்`` என்றது உபலக்கணம் ஆதலின், ஏனைக்காரணங்களும் கொள்ளப்படும்.
இதனால், `சுத்தமாயை யாகிய விந்துவின் சயத்திற்குப் பிரணவ யோகத்தை விரும்பிச் செய்தல்வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 37

உரவடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய நன்முலை மேவியகீழ் அங்கி
கருமுலை மீமிசைக் ககை்கீழிற் காலாம்
விரவிய கந்தர மேல்வெளி யாமே.

பொழிப்புரை :

மனித உடம்பில் எல்லாவற்றையும் தாங்கும் வலிமையுடைய கலில் (இடைக்குக் கீழ் உள்ள பகுதியில்) `நிலம்` என்னும் பூதமும், அதற்கு மேல் கொப்பூழ்வரை உள்ள பகுதியில் `நீர்` என்னும் பூதமும், கொப்பூழ் முதல் முலையிருக்கும் பரந்த இடமாகிய மார்பு பகுதியில் `தீ` என்னும் பூதமும் (இதனுள் முலையும் அடங்குதல் அறிக.) மார்பிற்குமேல் கைகளுக்கு ஆதாரமாய்க் கழுத்து வரையில் உள்ள பகுதியில் `வளி` என்னும் பூதமும், (இதனுள் கைகளும் அடங்குதல் அறிக.) கழுத்திற்கு மேல் உள்ள பகுதியில் `வெளி` என்னும் பூதமும் நிற்கும்.

குறிப்புரை :

`இஃது அறிந்து, பிண்டமும் அண்டத்தோடு ஒத்தலை உணர்ந்து கொள்க` என்பது குறிப்பெச்சம். இவ்வாறு உணர்தல் விந்து சயம் முதலியவற்றைத் தரும் யோகத்திற்கு வேண்டப்படுதல் பற்றி இதனை இங்குக் கூறினார்.
இதனானே வருகின்ற அதிகாரத்திற்கும் இயைபு தோற்று விக்கப்பட்டது. ஏனையவற்றோடு ஒப்ப, `அடியில் கீழில்` என உருபு விரிக்க. `மிசையும் கீழும் ஆகிய இடத்தில் கால்ஆம்` என்க. இவ்வதிகாரம் பெரும்பான்மை அந்தாதியாய் வந்தது.
சிற்பி