ஏழாம் தந்திரம் - 24. மனவாதித்தன்


பண் :

பாடல் எண் : 1

எரிகதிர் ஞாயிறும் இன்பனி சோரும்,
எறிகதிர் சோமன் எதிர்நின் றெறிப்ப;
விரிகதி ருள்ளே விளங்கும்என் ஆவி
ஒருகதி ராகில் உவாவது தானே.

பொழிப்புரை :

பூர்ணிமை நாளில் மிக விளங்குகின்ற சந்திரன், தெறும் இயல்பினையுடைய கதிர்களையுடைய சூரியனுக்கு எதிரே நின்று தன் கதிர்களை வீசும் இயல்பு அமைந்திருக்குமாயின், அந்தச் சூரியனும் குளிர்ந்த கதிர்களை வீசுவோன் ஆகிவிடுவான். (அந்த அமைப்புத்தான் இல்லையே!) பிண்டாதித்தனுக்குள்ளே விளங்கு கின்ற எனது மனம் அவனால் ஓர் ஆதித்தனாயின், அது பின்பு பிண்டத் துள்ளே விளங்கும் சந்திர மண்டல்தினது அமுத தாரையால் பூர்ணிமை நாளில் தோன்றுகின்ற சந்திரனாகிவிடும்.

குறிப்புரை :

`அப்பொழுது எனதுமனம் அந்தப் பிண்டாதித் தனையும் வென்றுவிடும்` என்பதாம். `மனம் ஆதித்தனால் தூய்மை பெற்றதற்குப் பின் சந்திர மண்டலத்து அமுதத்தினாலும் தூய்மை பெறல் வேண்டும்; %E

பண் :

பாடல் எண் : 2

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனை
முந்திய பானுவில் இந்துவந் தேய்முறை;
அந்த இரண்டும் உபய நிலத்தினில்,
சிந்தை தெளிந்தார்; சிவமாயி னாரே.

பொழிப்புரை :

`சந்திர கலை` எனப்படும் இட நாடியில், `சூரிய கலை` எனப்படும் வல நாடிக் காற்று ஒடுங்கி இட நாடிக் காற்றே இயங்கினும் பின்னர் மாறி இயங்கும் காலமே சிவனைப் பூசித்தற்கு உரிய காலமும். (`ஆகவே, பூசை செய்வோர் அவ்வாறு செய்து கொள்க` என்பதாம்.) இனி அந்த இருவழியிலும் யோகம் ஆதலின், அவ்வாறு யோகம் செய்பவரே அந்தக்கரணம் தூய்மையாகப் பெற்றவர் ஆவர். அவரே பின்பு சிவயோகத்தால் சிவமாகி நிற்பர்.

குறிப்புரை :

பின்னர், ``பானுவில்`` என்றதனால் முன்னர், `சந்திரனில்` என அவ்விடத்தே ஏழாவது விரிக்கப்படும். `வரினும்` என்னும் எதிர்மறை உம்மை தொகுத்தலாயிற்று. அவ்வும்மையால், `சிவபூசையின்பொழுது பிராணன் அவ்வாறு இயங்குதல் கூடாது` என்பது பெறப்பட்டது. `ஏய் முறையில் ஆகும்` என இரண்டாம் அடி இறுதியில் உருபும் பயனிலையும் விரிக்க, ``உபய நிலம்`` என்றது, `இரண்டற்கும் பொதுவான இடம்` என நடு நாடியைக் குறித்தது. வருதல் வினையை மூன்றாம் அடியின் ஈற்றிலும் `வரின்` எனக் கூட்டுக. ``சிந்தை`` என்ற உபலக்கணம்.
இதனால், மனம் ஆதித்தன் ஆகும் முறை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.

பொழிப்புரை :

யோக முறையில், சூரியன், அக்கினி, சந்திரன்` எனச் சொல்லப்படுகின்ற கலைகளோடு, அக்கினி செல்லும் வழியாகிய நடு நாடியும் `கலை` என்று சொல்லப்படும். ஆகவே, கலைகளாவன நான்காம். அவற்றுள் சூரிய கலை, நடு நாடி வழியாக மேற்செல்கின்ற அக்கினியோடு சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையின் அந்நிலையே யோகியர்க்கு, மேல், `உவா` எனக்குறித்த பூரணையாகும் என்று அறிமின்கள்.

குறிப்புரை :

அருக்கன் அனல் மதி ஆகும் கலையோடு இடை ஆகும். ஆகவே, `கலை நான்கு` எனலாம் என்பர்` என இயைத்துக் கொள்க. `அனலோடு கூடி` என உருபும் பயனும் உடன் விரிக்க. `மேற்கூறிய உலாவாம்` என்றதனால், `அந்நிலையை அடைந்தோரது மனம் ஆதித்தனாய்ப் பிண்டாதித்தனை வெல்லும்` என்பதுதானே பெறப், பட்டது, ``அறியும்`` என்பது முன்னிலைப் பன்மை ஏவல் வினை முற்று.
இதனால், மேல் `உவா` எனப்பட்ட நிலை உளதாகுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஈரண்டத் தப்பால் இலங்கொளி அவ்வொளி
ஓரண்டத் தார்க்கும் உணரா உணர்வு; அது
பேரண்டத் துள்ளே பிறங்கொளி யாய்நின்ற
ஆரண்டத் தக்கார்? அறியத்தக் காரே.

பொழிப்புரை :

கீழ்ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும், மேல் ஏழ் உலகங்களை உள்ளடக்கியுள்ள அண்டமும் ஆகிய இரண்டு அண்டங்களையும் கடந்து அவற்றிற்கு அப்பால் விளங்குகின்ற ஓர் ஒளி பரமசிவன். அவ்வொளி எந்த உலகத்தார்க்கும் உணர இயலாத உணர் வாய் இருப்பது. எனினும் அஃது எல்லா உலகங்களிலும் விளங்குகின்ற எல்லா வகையான ஒளிகளிலும் உள்ளொளியாய் நிற்றலை அறியத் தக்கவர் யார்? அணுகத்தக்கவர் யார்? ஒருவரும் இலர்.

குறிப்புரை :

`இலங்கொளியாகிய அவ்வொளி` என்க. இரண்டாம் அடியிறுதியில் உள்ள `அது` என்பதை வேறுபிரித்து, ``நின்றது`` என்னும் பயனிலைக்கு எழுவாயாக்குக. ``நின்றது`` என்பது அத்தொழில்மேல் நின்றது. அண்டுதல் - அணுகுதல். முடிவில், மனம் ஆதித்தன் `ஆகப் பெற்றவரே அறியத் தக்கார்; அணுகத் தக்கார்` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
``அண்டம் ஆரிரு ளூடு கலந்தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்`` l
என அருளிச் செய்ததையும் இங்கு நினைவு கூர்க.
இதனால், பரமசிவனது அருமையும், மன ஆதித்தனுக்கு ஆகின்ற அவனது எளிமையும் உணர்த்து முகத்தால் மன ஆதித்தனது பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஒன்பதின் மேவி உலகம் அலம்வரும்;
ஒன்பதும் ஈசன் இயல்பறி வார்இல்லை;
முன்பதின் மேவி முதல்வன் அருள்இலார்
இன்பம் இலார்; இருள் சூழநின் றாரே.

பொழிப்புரை :

உலகம் ஒன்பது கோள்களில் உளம்பொருந்தி, அதனால் அமை காணாது அலமருகின்றது. (``வேரண்டத் துள்ளே பிறங்கொளியாய் நின்றது`` என மேற்கூறியபடி) `ஒன்பது கோள்களின் ஆற்றலும் சிவனது ஆற்றலே` என்னும் உண்மையை உணர்ந்து அவனையடைந்து அமைதிகாண்பவர் ஒருவரும் இல்லை. முதலில் அந்நிலையில் நிற்பினும் பின்பாவது அருளாளரது அருள் மொழிகளைக் கேட்டுச் சிவனது அருளைப் பெறாதவர் ஒரு ஞான்றும் இன்பம் இல்லாதவரேயாய்த் துன்பத்தையே உடையவராய் இருப்பர்.

குறிப்புரை :

`வலம் வரும்` - என்பது பாடமன்று. இருள், இங்குத் துன்பம். இதனுட் கூறப்பட்டாரெல்லாம் அண்டாதித் பிண்டாதித் தர்களால் மனம் ஆதித்தனாகப் பெறாதவர் என்க.
இதனால், மனம் ஆதித்தனாகப் பெறாதவர் எய்தும் குற்றம் கூறப்பட்டது.
சிற்பி