ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்


பண் :

பாடல் எண் : 1

அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

பொழிப்புரை :

உயிர் அடைந்த ஞான ஒளியினுள்ளே வந்து எழு கின்ற சிவத்தினது ஒளியால் அக ஒளியாகிய அறிவை மறைந் திருந்த அக இருளாகிய ஆணவ மலமும், அதனால் விளைந்த அறியாமையும் இராக்காலத்திலே பொருந்தி எழுகின்ற அருணோதயத்தால் அதற்கு முன் திணிந்திருந்த இருள் நீங்குதல் போல நீங்கியொழியும்.

குறிப்புரை :

``சென்றிடும்`` என்பது பெயரெச்சம். `ஞானத்துள் சென்றிடும் சிவத்தின் பிரகாசத்தால்` எனக் கூட்டியுரைக்க. `அருணோ தயத்தால்` என உருபு விரிக்க. தெளிவு பற்றி எதிர்காலத்தை இறந்த காலமாக்கி, ``தொலைந்தது`` என்றார். ஏகாரம் தேற்றம். பொருளில் ``அஞ்ஞானமும்`` என்றதற்கு ஏற்ப உவமையிலும் `குருட்டுத் தன்மையும்` என்பது வருவிக்க.
இதனால், அக இருளாகிய ஆணவ மலம் சிவாதித்தனது ஒளியாகிய அக ஒளியாலல்லது நீங்காமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்(து)
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

பொழிப்புரை :

நில உலகின்கண் நீர் நிரம்பிய குடங்களில் ஆதித்தனை நோக்கி வாயைத் திறந்துள்ள குடங்களில் தான் ஆதித்தன் விளங்குவான். அவ்வாறின்றி ஆதித்தனை நோக்காதவாறு மூடி வைக்கப்பட்ட குடங்களில் யாதொன்றன் நீரிலும் ஆதித்தன் விளங் குதல் இல்லை. சிவன் உடல்தோறும் உள்ள உயிர்களில் விளங்குதலும் ஆதித்தன் குடத்து நீரில் விளங்குதல் போல்வதுதான்.

குறிப்புரை :

`அஃதாவது, `சிவன், அவனை உணரும் பக்குவம் வாய்ந்த உயிர்களினுள்ளே விளங்குதல்லது, அவனை உணரமாட்டாது மூடமாய்க் கிடக்கின்ற அபக்குவமான உயிரினுள்ளே விளங்கான்` என்பதாம்.
ஆதித்தனது கதிரில் இருதன்மைகள் உள்ளன. ஒன்று வெம்மை; மற்றொன்று ஒண்மை. அதுபோல, சிவனது சத்தியிலும் இரு தன்மைகள் உள்ளன. ஒன்று மறைத்தல்; மற்றொன்று விளக்கல், இத்தன்மை பற்றி, சத்தி இரண்டாகச் சொல்லப்படும். ஒன்று திரோதான சத்தி; மற்றொன்று அருட்சத்தி. மூடி வைக்கப்பட்ட குடத்து நீரிலும் ஆதித்தனது வெம்மைச் சத்தி விளங்குவதேயாகும். ஆயினும் அந்நீரில் ஆதித்தனது ஒளிச்சத்தி விளங்காது. அதுபோலவே எல்லா உயிர்களிடத்தும் சிவனது திரோதான சத்தி விளங்கவே செய்யும், ஆயினும் அருட் சத்தி பக்குவம் வாய்ந்த உயிர்களில் மட்டுமே விளங்கும் என உணர்க.
இங்குக் கூறிய உவமையால் குடத்து நீருள் ஆதித்தன் தோன்றும்பொழுது அந்த ஆதித்தனுக்கும், வானத்தில் உள்ள ஆதித் தனுக்கும் இடையே தன்மை வேற்றுமை யாதும் இன்மையும், மூடி வைக்கப்பட்ட குடத்து நீருள் ஆதித்தன் சிறிதும் தோன்றாமையும் பெறப்படுதலால், பல வகையில் வேறுபட்ட தன்மையை உடைய உயிர்களையும் `சிவனது கூறுகளே; அல்லது சிவனது பிரதி பிம்பங்களே` என்பாரது கூற்றுப் பொருந்தாமையும் இங்குக் குறிக்கப் பட்டதாம். அடுக்குப் பன்மை தோற்றி நின்றது.
இதனால், சிவாதித்தன் ஞானாதித்தனுள்ளே விளங்குதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.

பொழிப்புரை :

இங்குக் கூறிவரும் சிவாதித்தன் தான் ஒருவனே யாயினும் சுடர்களை எங்கும் வீசுகின்ற ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களும் ஒன்று கூடினாற் போன்ற பேரொளியாய் இருப்பான்; தன்னை அழிப்பவனாகப் பலர் கருதினானுலும் அயனாய் நின்று படைப் பவனும், அரியாய் நின்று காப்பவனும் தானேயாகும். மேலும் அவன் உயிர்களில் மட்டுமன்றி, உடல்களிலும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்றான். இன்னும் தான் ஒருவனே ஆகாயமாயும், அதன் கண் விளங்குகின்ற ஒளிகளாயும் நிற்றலேயன்றி இருளாகவும் ஆகின்றான்.

குறிப்புரை :

`இஃது அதிசயம்` என்பது குறிப்பெச்சம். `சிவாதித்தன் உலகில் காணப்படுகின்ற ஒளிப்பொருள்களோடு ஒத்த ஒளியுடைய னல்லன்; அவற்றினும் பலமடங்கு மேம்பட்ட ஒளியினை உடையன்` என்பது கூறுமுகந்தான், `அவன் உதயஞ் செய்யப்பெற்ற உயிர்க்கு வேறு வேண்டத்தக்க பயன் யாதுமில்லை` என்பது முதலடியில் குறிக்கப் பட்டது. தாபித்தல் - நிலை நிறுத்தல். `நடாத்துதல்` என்றபடி. இதற்கு `உலகத்தை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. `உடல் உயிரின்கண்` என உருபு விரிக்க. இருள் முக்குணங்களும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் தாமத குணத்தின் காரியம் ஆகலின் அக்குணத்திலும் நிறைந்து நிற்றல் பற்றிச் சிவனை ``இருட்டுமாம்`` - என்றார்.
இதனால், சிவாதித்தனது ஒப்புயர்வில்லாத அதிசய நிலை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தெய்வச் சுடர்அங்கி ஞாயிறுந் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க் கிடம்மிடை ஆறங்க மாமே.

பொழிப்புரை :

தெய்வச் சுடர் அங்கி, வேள்வித் தீ ஞாயிறுமுதல் வானகம் ஈறாயினவும் ``பல்லுயிர்`` என்றதும் வெளிப்படை. ஐவர், பிரமன் முதல் சதாசிவன் ஈறானவர். அவர்க்கு இடம் ஆவன சுவாதிட்டானம் முதல் ஆஞ்ஞை ஈறாய் உள்ள ஐந்து ஆதாரங்கள். ஆறு அங்கம் ஆஞ்ஞையிலிருந்து கீழ்நோக்கி எண்ண ஆறாவதாகும் மூலாதாரம். சைவப் பெரும்பதி - இவை யாவும் சிவத் தலங்களாகும்.

குறிப்புரை :

``சைவப் பெரும்பதி`` என்றதை ``ஆம்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. `இவை சிவத்தலங்கள்` என்றது, `இவ்விடங்கள் சிவனைக் கண்டு வழிபடுதற்குரிய இடங்கள்` என்றபடி எனவே, இவ்விடங்களில் சிவனைக் கண்டு வழிபட அவன் ஆதித்தனாய் உயிரினுள் விளங்குவான்` என்பது கருத்து. மிடை ஆறு அங்கம் - அவ்வைந்தோடு சேர்ந்து ஆறாவதாகின்ற உறுப்பு.
இதனால், சிவாதித்தன் உதயம் செய்தற்கு வாயில் கூறப்பட்டது.
சிற்பி