ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி


பண் :

பாடல் எண் : 1

தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.

பொழிப்புரை :

சற்குருவே தன்னையடைந்த மாணாக்கர்க்குத் திரு வருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனையடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தை யாலும், திருவடி சூட்டலாலும் தன்னை யடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்துவிடுவான்.

குறிப்புரை :

`அத்தன்மைகளால் அவனது சற்குருவாம் தன்மையைத் தெளிக` என்பது குறிப்பெச்சம். திருவருளை, `திருவடி` என்றல் மரபு. தாள் முயற்சியும் ஆம் ஆதலின் அது `முயற்சி` என்னும் குறிப்பினையும் உடையது. திருவருள் எல்லாம் வல்லதாதலை நினைக. ``குருவே சிவன்`` (தி.10 மந்.6) `சற்குருவே தலைவன்` என மொழிமாற்றி யுரைக்க. தன்னை அறிந்தபின் தலைவனை அறியத் தடையில்லை ஆதலின் அதனையே கூறி யொழிந்தார். ``சீவன்`` என்றது, `பசு` என்றபடி, `அவன் வசனத்தாலும், தாள் தந்தும் தத்துவாதீதத்துப் பாசம் தணிக்கும்` என்க. முதலடி ஒழிந்த ஏனை அடிகளில் ``தாள் தந்து`` என வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி.
இதனால், `சற்குருவினது பெருமை அவனது செயலால் விளங்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

பொழிப்புரை :

(சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும் ஒன்பான் கோள்களின் தீங்கு நீங்கவும் யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.

குறிப்புரை :

இப்பொருட்கேற்ற கொண்டு கூட்டினை அறிந்து கொள்க. இதனுள்ளும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது. `சற்குரு` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. அஃது, ``ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வரும்`` (தொல். பொருள், பொருளியல்) முறைமையில் வந்ததாகலின் இம்மந்திரமும் சற்குருவினது பெருமை கூறியதாதல் அறிக.
இதனால், சற்குரு அருளால் வீடுபேறாகிய முடிநிலைப் பயனேயன்றி, இடைநிலைப் பயனாகிய இம்மைப் பயன்களும் உளவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கறுத்த இரும்பே கனகம தானால்
மறித்திரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பொருளில், ``குருவருள் பெற்றான்`` என்றதற்கு ஏற்ப உவமையில், `இரத குளிகை சேரப்பட்டு` என்பதும் உவமையில் ``கனக மதனால்`` என்றதற்கு ஏற்ப, `சிவமாகியவன்` என்பதும் வருவித்துக் கொள்க. ``குரு அருள் பெற்றான்`` என்பதை மூன்றாம் அடியில் முதற் கண் கூட்டியுரைக்க. குறித்தல் - சற்குரு தன் மாணவனைச் சிவமாகப் பாவித்தல். ``குரு`` என்றது, அதிகாரத்தால் சற்குரு மேலதாயிற்று.
இதனால், சற்குருவின் பெருமை மேலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்
ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப்
பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.

பொழிப்புரை :

உலகப்பற்றை ஒழித்து வீடுபேற்றில் விருப்பம் கொண்டு தன்னையும், தலைவனாகிய சிவனையும் ஆசிரியர் அருள் மொழியைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுமாற்றால் தனது அறி யாமையைப் போக்கித் தன்னை அடைந்தவரது அறியாமையையும் முற்றப்போக்க வல்லவனே குற்றம் அற்ற உண்மை ஞான குரு ஆவான். அவ்வாறன்றி, அனுபவ ஞானம் இன்றி, நூலறிவு மாத்திரையால் செய்யும் ஆரவாரத்தில் மயங்கித் தானும் அதனையே செய்பவன் உண்மை ஞான குரு ஆகான்.

குறிப்புரை :

``அறிவு`` என்றது, அனுபவ ஞானத்தை. இதனுள் பன்மையாக ஓதுவன பாடம் ஆகாமை அறிக.
இதனாலும் சற்குருவின் இலக்கணம் உடன்பாட்டானும், எதிர்மறையானும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற
நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே
ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற
நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.

பொழிப்புரை :

நித்தியனாகிய சிவன் நின்மலன் ஆகலின், அவன் மலம் நீங்கித் தன்பால் மெய்யன்பு செலுத்துவோரது அறிவிலே விளங்கி நின்று அம்மெய்யன்பினை மேலும் மேலும் பெருக்க வல்லவ னாவன். ஆகையால், மலம் நீங்கிச் சுத்தான்மாவாய் நிற்கின்றவனே தன்னை அடைந்த மாணவக் கூட்டத்தாரது உண்மை நிலையை உணர்ந்து, அவர்களில் பாசப் பற்று அறும் பக்குவத்தை எய்தி னோர்க்கே ஞானத்தை உணர்த்துவன். ஆதலால் அவனே நிலைபெற்ற சற்குரு ஆவன்.

குறிப்புரை :

`சுத்தான்ம சைதன்னியத்திலே சிவன் தான் அதுவே யாய் ஆவேசித்து நிற்றல் பற்றியே குரு சிவனாகின்றான்` என்பதை உணர்த்தற் பொருட்டு அவ்வியல்பை முதல் இரண்டு அடிகளில் கூறி, பின்பு, `சுத்தன்` என எடுத்துக்கொண்டு, ``சுத்தனே நீடும் குரவன்`` என்றார். `நித்தன் நிமலன் ஆதலின் மலம் அற்ற நேயத்தே நிற்கும்; நேயத்தை நல்க வல்லோன்` எனக் கூட்டுக. அறும் பக்குவத்தை எய்திய நிலையைத் தெளிவு பற்றி, ``அற்ற`` என இறந்த காலத்தாற் கூறினார். குரவரல்லா தாரைக் `குரவர்` என மயங்கிய மாணாக்கர் பின்பு அவரின் நீங்கி உண்மைக் குரவரை யடைவர் ஆகலின் அவர் அங்ஙனம் ஆகாமைக்கு ஏதுவாய் நிற்பவனை `நீடும் குரவனை` என்றார்.
இதனால், `பெத்தத்தின் நீங்கிய சுத்தனே சிவமாய் நிற்கும் சற்குரு` என்னும் உண்மை எடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரிசன வேதி பரிசித்த எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.

பொழிப்புரை :

இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

வேதித்தல் பற்றி இரச குளிகை `வேதி` எனப் பெயர் பெற்றது. வேதித்தல் - மாற்றுதல். பரிசனம் - பரிசித்தல்; தீண்டுதல். தீண்டிய மாத்திரத்தில் பொன்னாக மாற்றுவது பரிசன வேதி. வரிசை - மேன்மை. குவலயம் - நிலவட்டம். அஃது ஆகுபெயராய் அதன்மேல் வாழும் உயிர்களை உணர்த்திற்று. உயிர்களுள்ளும் சிறப்புப் பற்றி மக்கள் உயிரையே உணர்த்திற்று. ``குரு பரிசித்த எல்லாம்`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், `சிவோகம் பாவனையோடு பரிசித்த எல்லாம்` என்பதே கருத்து. `தீர` என்பது. `தீர்ந்து` எனத் திரிந்து நின்றது. ஆம் - உண்டாம்; கிடைக்கும்.
முன்பு, ``கறுத்த இரும்பே வகையதுபோல`` என்றது மாணவன் அடையும் பேற்றின் சிறப்பை உணர்த்தற்கும், இங்கு ``பரிசன வேதி ... பொன்னாகுமாபோல்`` என்றது சற்குருவினது திருவருள் ஆற்றலின் சிறப்பை உணர்த்தற்கும் கூறப்பட்டன ஆகலின் கூறியது கூறல் அன்றாம்.
இதனால் சற்குருவினது அருளாற்றலின் சிறப்பு உவமையில் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

பொழிப்புரை :

`யான் சிவனே` என மாணாக்கற்கு அறிவுறுத்து கின்ற அந்தக் குருவின் சந்நிதியில் அவன் சிவனே ஆன தன்மை எவ்வாற்றா லேனும் மாணாக்கனுக்கு இனிது புலப்படுமாயின், அவனது மனித உடம்பைச் சிவனது அருள் திருமேனியாகவே உணர்ந்து, தான் அவனால் சிவமாந் தன்மையைப் பெறல் வேண்டும். (பின்னர் வேறு நினைத்தல் கூடாது.) இதனை உன் உள்ளத்திற்குள்ளே ஆராய்ந்து கொள்க.

குறிப்புரை :

சிவமாம் தன்மை புலப்படுதல், அருணந்தி தேவர்க்கு மெய்கண்ட தேவர் நோக்கின மாத்திரத்தே மலச்செருக்கு முழுவதும் அற்றொழிய, உள்ளம் அனலிடை மெழுகு போல உருகப் பெற்றமை போல்வது. அதன் பின்னர் அவர் தம் ஆசிரியரை, ``கண்ணுதலும் கண்டக் கறையும் கரந்தருளி - மண்ணிடை`` (இருபா இருபஃது - குருவணக்கம்) வந்த சிவனாகவே உணர்ந்தமை அறிக. அதன் பின்னரும் வேறு நினைவாராயின் அவர் உய்யும் வழி இல்லை என்றபடி. ஆசிரியனது தன்மையை மாணவன் வெளிப்பட ஆராய்தல் கூடாமையின். ``உன்னிலே தேர்ந்துகொள்`` என்றார். இதனுள் `குரு` எனப் பொதுப்படக் கூறாது ``சற்குரு`` என்றது உணர்த்துவோனது சொற்பற்றி, சதுர்பெறல் - `அருள்உரு` எனப்படும் பெருமையை அடைதல். `ஊனே சதுர்பெறல் என நினைந்து தானே தனைப்பெறவேண்டும்` என்க.
இதனால், சற்குருவைத் தெளியுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

வரும்வழி போம்வழி மாயா வழியே
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலும் ஆமே.

பொழிப்புரை :

பிறப்பும், இறப்பும் ஆகிய மாயையின் வேறு பாடுகளே `பிறவி நெறி` எனப்படும். அதனையே கண்டு அவ்வழியே உழல்பவர் கண்டறியாத பெருவழியாக எங்கள் நந்தி பெருமான் தம்மை யடைந்தவர்க்குக் காட்டியருள்கின்ற வீட்டு நெறியை அவரைப்போலும் சற்குரு காட்டும் வழியிலே சென்று பிறரும் பெறுதல் கூடும்.

குறிப்புரை :

`அதனைக் கண்டவர்` என வேறு எடுத்துக் கொண்டு உரைக்க. உம்மை, உயர்வு சிறப்பு.
இதனால் `உண்மைக் குரவர் வழியாக யாவரும் வீடுபெறுதல் கூடும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

குருஎன் பவன்வேத ஆகமம் கூறும்
பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித்
தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி
வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.

பொழிப்புரை :

`குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.

குறிப்புரை :

ஆகவே, அவன் வழியாகவே பக்குவிகள் சிவனை அடைதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம்.
இதனால் குருவினாலன்றி ஞானம் எய்துதல் கூடாமையால் `குருவினாலன்றி வீடடைதல் இயலாது` என்பது கூறப்பட்டது. சகல வருக்கத்தினருள் முன்னைத் தவமிகுதியால் பிரளயாகலர் விஞ்ஞான கலரோடு ஒப்போர் மிக அரியர் ஆதலின் பொதுநிலை இதுவாதலைக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 10

சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.

பொழிப்புரை :

சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவன் தன் மாணாக்கர்க்கு ஒரு வார்த்தையைச் சொல்வானாயின் அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச்செய்து, ஏனை எல்லாப் பொருளும் சிவ வியா பகத்தை விட்டு வேறு நில்லாமையைப் புலப்படுத்தி, சுத்தம், அசுத்தம் என்னும் இருவகைப் போகங்களும் அல்லாத வேறு ஒரு தனிப் போக மாகிய பரபோகத்தை விளைத்து நிற்கும் வார்த்தையாய் இருக்கும்.

குறிப்புரை :

`அதனால் அத்தகைய குருவை அடைந்த மாணாக்கர் ஞானத்தை எய்தி, வீடு பெறுதல் உறுதி` என்பது கருத்து. நான்காம் அடியை முதற்கண் வைத்து, கூறுதலுக்குச் செயப்படுபொருள் வருவித் துரைக்க. `ஒருவார்த்தை, மகா வாக்கியம், பெரும்பெயர்` என்பன ஒரு பொருட் சொற்கள். ``மன்ன என்னை ஓர் வார்த்தையுட்படுத்துப் - பற்றினாய்`` (தி.8 செத்திலாப் பத்து, 2) என்றதனால் அவ்வார்த்தை இத்தன்மைத்தாதல் விளங்கும். இது பற்றியே,
``சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தின் வாய்க்கும்நலம் வந்துறுமே``
-திருக்களிற்றுப்படியார், 6
எனச் சொல்லப்பட்டது. சத்து பதி; அசத்து பாசம்; சதசத்து பசு. சித்து - சேதனப் பிரபஞ்சம்; உயிர்கள். அசித்து - அசேதனப் பிரபஞ்சம்; உயி ரல்லன. ஆணவமும், கன்மமும் உயிரோடு, ஒற்றித்து நிற்பன. சேர்ந்து நிற்றலை விளக்குதலைச் சேர்த்தலாக. உபசரித்துக் கூறினார். `சுத்தம், அசுத்தம்` என்பன ஆகுபெயர். சுத்த போகம் சுத்தப் பிர பஞ்சத்திலும், அசுத்த போகம் அசுத்தப் பிரபஞ்சத்திலும் உள்ளன வாம். சிவபோகம் இவற்றின் வேறாய், மேம்பட்டதாய், எல்லையின்றியிருத்தலை அறிக. சுகத்தை ஆக்கும் சொல்லை, ``சுகம் ஆனசொல்`` என்றதும் உபசாரம். இதன்பின் `ஆம்` என்னும் பயனிலை எஞ்சிநின்றது.
இதனால், குருவினால் ஞானம் எய்தி, வீடுபெறுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறும் நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதக ராமே.

பொழிப்புரை :

பக்குவம் இன்மையால் உயிர் பாச ஞானத்தையே உண்மை ஞானமாகக் கருதி நிற்றலால் அனாதியே அதனைப் பற்றிய ஐம்மலங்களும் அதனை விட்டு நீங்காது அதனைப் பற்றியே நிற்கும். பக்குவம் வந்தபொழுது பாச ஞானத்தை வெறுத்துப் பதியாகிய சிவனை நோக்கி நின்று அவனைப் பல முறையால் வணங்குதலால் முன் கூறிய ஐம்மலங்களும் அற்றொழியும். ஆகவே, தம்மைக் கட்டி யுள்ள பாசக் கூட்டத்தால் தாம் சிவனை விட்டு நீங்கியிருக்கும் நிலையை முத்துரிய நிலைகளால் முறையே போக்கிச் சிவனை அடைய முயல்பவரே சற்குருவின் அருள்வழி நிற்கும் சாதகர் ஆவார்.

குறிப்புரை :

`சற்குருவின் அருளைப் பெற்றும் அங்ஙனம் முய லாதவர் சாதகர் ஆகார்; அஃதாவது பயன்பெற்றவர் ஆகார்` என்பதாம். `பாச உணர்வினால் ஐம்மலம் உற்றிடும் எனவும், `நாதன் அடியில் பணிதலால் பற்றறும்` எனவும் கூட்டுக`. `நாதன் அடியில் பணிதலாகிய செயலில் நிற்றலே சாதனையில் நிற்றலாம்` என்பது உணர்த்துதற்கு அதனையும், அதற்கு மறுதலையானதையும் முதற்கண் எடுத்துக் கூறினார். உறுதல், இங்கு நீங்காது நிற்றல். மூன்று துரியம் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்பன. இவை பற்றி அடுத்த தந்திரத்தில் காண்க.
இதனால், `சற்குருவை அடைந்து அவனால் ஆட்கொள்ளப் பெற்றோர் செயற்பாலன இவை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.

பொழிப்புரை :

ஞானம் வரும்பொழுது ஆன்ம இயல்பு உள்ளவாறு விளங்கப்பெற்று, ஐந்து மலங்களும் சத்தியடங்கி நிற்க அவற்றைக் கடந்து மோனம் உடையராய் நிலைபெயராத வீட்டு நிலையை அடைதல் எளிதாகும். அந்நிலை சிவானந்தமே. ஞானியர் எல்லாரும் அதனைப் பெறவல்லவராவர்.

குறிப்புரை :

புலன் - ஞானம். அது முதலாகத் தொடங்கி, ``விளையாட்டே`` என முடித்துப் பின், `இறைவன் இறைவியுடன் இன்பம் எல்லாம் வல்லார்` என வேறு முடிபு செய்க. `எல்லாம்` என்னும் பொதுப்பெயர் இங்கு உயர்திணையாய் நின்றது. இறைவன் மெய்ப் பொருளும், இறைவி அதனது ஆனந்தமும் ஆதலின், `இறைவன் இறைவியுடன் ஆன இன்பம்` என்றார். `ஆன` என்பது தொகுத்த லாயிற்று. `சொல்லாது` என்பதன் ஈறு குன்றிற்று. `இப்பயனுக்குரிய ஞானத்தை அருளுபவன் சற்குருவே` என்பது கருத்து.
இதனால், மேற்கூறிய சாதகர் எய்தும் பயன்கள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.

பொழிப்புரை :

இழிவான பிறப்பு நிலையில் அதன் இழிவு தோன் றாதவாறு மறைத்து மீள மீள அதிலே நின்ற கருவிக் கூட்டத்தின் இயல்பை உணர்த்தி, அதனின்றும் பிரித்து உயிர் தனது இயல்பினைத் தான் உணருமாறு செய்து அவ்வுணர்விலே சிறிது காலம் நின்று தாமதிக்கச் செய்தலும், பின்பு இறைவன் இயல்பை உணர்த்தி உயிருணர்வினின்றும் பிரித்து இறை உணர்விலே நிலைத்திருக்கச் செய்தலும், பின் இறையின்பத்திலே தோய்ந்து பேச்சற்றிருக்கச் செய்தலும் ஆய இவையெல்லாம் முத்தான்மாவாய் நின்ற சற்குருவின் செய்கைகளாய் விளங்கும்.

குறிப்புரை :

``இட்டது`` என்பது கருவிக் கூட்டத்தைக் குறித்த காரணப் பெயர். ஊட்டுதல், அறிவு புகட்டல். `ஊட்டி மீட்டு` என மொழி மாற்றி, ஊட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்க. `அத்தானத்து` எனச் சுட்டு வருவிக்க. ``தன்`` என்றது, தனது இயல் பினைக் குறித்த ஆகுபெயர். `கருவியுணர்வு` மெய்யுணர் வாகாமை எளிதில் விளங்குதல்போல, உயிருணர்வு மெய்யுணர் வாகாமை எளிதின் விளங்குவதன்றாகலின் `அதனினின்றும் நீக்குதல் தாழ்த்து நிகழும் என்றார். ஞானம் - மெய்யுணர்வு, இறையுணர்வே அது என்க. கருவியுணர்வு - பாச ஞானம். உயிருணர்வு - பசுஞானம். இறை யுணர்வு - பதி ஞானம்` கருவிக் கூட்டத்தை `இது நானன்று` எனக் கழித் தவுடன் தோன்றுவது `சித்தாகிய யானே முதற்பொருள்` என்னும் உயி ருணர்வாம் என்பதை, ``ஆன்மா இவை கீழ் நாடலாலே - காதலினால் நான் பிரமம் என்னும் ஞானம் கருது பசுஞானம்` என்பதனான் அறிக. ``மோனத்துள்`` என்பதன்பின் `இருக்க` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது என்பதனால் அறிக. ஏகாரம் பிரிநிலை. அதனால் உணர்த்தப்பட்டது. `இவை தன் செயலால் ஆவன அல்ல` என்பது.
இதனால், சற்குருவின் அருளாற்றல் திறம் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.

பொழிப்புரை :

சிவன் தனது கருணை காரணமாகச் செய்யும் முத் தொழில்களாகிய விளையாட்டு நிகழும் இடம் சடமாய மாயை யினிடத்திலாம். ஆயினும் அவ்விளையாட்டிற்குப் பயன் அறிவுடைப் பொருளாகிய உயிரை, `சித்து இவை, அசித்து இவை` என்பதை அறியச் செய்து மும்மலங்களைத் துடைத்துத் தூய்மையுறப் பண்ணி வேறு இரு தொழில்களால் மெய்ப்பொருளை அடையச் செய்தலேயாகும்.

குறிப்புரை :

முத்தொழிலுக்கு வேறாய இருதொழில்களாவன மறைத்தலும், அருளலும். எனவே முத்தொழில்களின் வழி முன்னர் மறைத்தலை அடையப் பண்ணிப் பின்பு அதன் பயனாகப் பக்குவத்தை வருவித்து அருளலை அடையப் பண்ணுதலே சடத்தின்மேல் செய்யும் முத்தொழிற்குப் பயனாதல் விளங்கும்` ``இடம் சடம்`` என்றதனால் முதற்கண் ``விளையாட்டு`` என்றது படைத்தல் முதலிய முத்தொழில் களையே குறித்தன. என்னை? ஏனை இரண்டிற்கும் இடம் சடம் ஆகாமையின். `முத்தொழில்` என்பதை முதற்கண் வெளிப்படையாகக் கூறாமை பற்றி அவையும் அடங்க இறுதியில் ``ஐங்கருமம்`` என்றா ராயினும் அதனால் குறிக்கப்பட்டன எஞ்சிய இரு தொழில்களேயாம். சத்தாகின்றவனும் அத்தனேயாயினும் அதனை வேறு போலக் கூறினார், `முடிந்த பயனான பரமுத்தி நிலை அது` என்பது உணர்த்துதற்கு.
இதனால், `இறைவன் செய்யும் தொழில்களில் முடிவானது சற் குருவாய் வந்து ஞானத்தை அருளுதலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.

பொழிப்புரை :

உலகீர், எங்கள் சிவபெருமான் `தனக்கு வேறாய் விலகி நிற்கும் பொருள் எதுவும் இல்லை` என்று அறிந்து தன்பால் செலுத் தப்படும் அன்பிலே விளங்கி நிற்பவன். அத்தகைய அன்பர்க்கு அவன் அனைத்துப் பொருளின் உண்மைகளையும் தெளிவாக உணரக் காட்டி னான். ஆதலால் நீங்கள் `அவனது வியாபகத்தைக் கடந்து அவனின் வேறாக யாதொரு பொருளும் இல்லை` என உணர்ந்து உடம்பில் உள்ள பொழுதும் அவனை எவ்வகையிலேனும் உணர்ந்து போற்றுங்கள்.

குறிப்புரை :

`உங்கட்கும் அனைத்துப் பொருள்களின் உண்மை களையும் தெளிய உணர்த்துவான்` என்பது கருத்து. ``இல்லை`` என்பதற்கு, `எப்பொருளும்` என்னும் எழுவாய் வருவிக்க. `அப்புறம் இல்லை` என்க. `பாசத்துளேயும்` என்னும் எதிரது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. ``பாசம்`` என்றது உடம்பை. ஏன்? சீவன் முத்த நிலையில் கூறப்படுதலின். ``தேசம்`` என்பது இட ஆகுபெயராய் அதன்கண் உள்ள பொருள்களைக் குறித்தது.
இதனால், சற்குருவின் அருளால் பெற்ற அறிவிற்குப் பயன் இறைவனிடத்தில் அன்பு செய்தலே என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

பொழிப்புரை :

மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு வடத்தைத் தூங்கவிட்டது போல உடம்பினுள்ளே ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்து ஒளிவிட்டு விளங்கும் ஏழு மண்டலங்கள் உள்ளன, அங் கெல்லாம் அவற்றுக்கு மேல் உள்ள மாற்றுயர்ந்த பொன் போல்வ தொரு நற்பொருளினின்றும் ஓர் அமுதம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. அதனையறிந்து போற்றிக்கொண்டு உண்டவர்களே பிறப்பற்றிருக் கின்றார்கள். அதனை அறியாதவரெல்லாம் விலங்கொடொத்து உணவை உண்டு வயிறு வளர்ப்பதற்காகவே வாழ்கின்றனா.

குறிப்புரை :

`அவர் பிறவிக் கடலினின்றும் ஏறமாட்டார்` என்பது கருத்து. `மலர்ந்தன` என அன்பெறாது `மலர்ந்த` என நின்ற வினை முற்றின் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``மலர்ந்த`` என்றது, `மலர்ந்தன போன்றுள்ளன` என்னும் பொருளைத் தந்தது. ஏழு மண்டலமாவன மூலாதாரம் முதலாக உச்சி ஈறாக உள்ளவை. அவை தாமரை மலர் வடிவின ஆதல் பற்றி, `மாணிக்க மாலை மலர்ந்தன போன்றுள்ளன`, என்றார். ஏழாந் தானத்திற்கு மேல் நிராதாரமான பன்னிரண்டங்குலத்தைக் கடந்த மீதானத்தில் உள்ள செம்மேனி யனாகிய சிவனை ``ஆணிப் பொன்`` என உவமையாகு பெயரால் கூறினார். ஏழாந்தானத்திற்றானே அமுதம் ஊறுவதாயினும் அஃது அருள் மயமாதல் சிவனாலேயாதல் பற்றி அவனிடத்தினின்றே அமுதம் ஊறுவதாகக் கூறினார்.
இதனால், `சற்குரு அருளால் சிவஞானத்தைப் பெற்றோர் பின் இச்சிவயோக சாதனாத்தால் நிட்டை கூடல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே
அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.

பொழிப்புரை :

சத்தோடு கூடியவழிச் சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியவழி அசத்தாம் தன்மையும் உடைத்தாதல் பற்றி, `சதசத்து` எனப் பெயர் பெற்ற உயிரை அநாதியில் சத்தோடு சேராது நீங்கச் செய்து, அசத்தோடு சேர்த்த ஆணவ மலத்தொடர்பு இப்பெத்த காலத்தில் அற்றொழிதற் பொருட்டு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இருமாயைகளைச் செயற்படுத்தி, உயிரையும் அச்செயற் பாட்டிற்கு உள்ளாக்கியவனும், பின் என்றும் திரிபின்றி ஒருபடித்தாய் நிற்பதாகிய உண்மையை உணர்த்தி, அவ்வுயிரை உய்யக் கொள்கின்ற வனும் இறைவனேயன்றிப் பிறர் இல்லை.

குறிப்புரை :

`அசற்சத்து சத்தினின்றும் நீங்கச் செய்து அசத்தோடு இசைத்திடு பாசப்பற்று` என இயைத்துக் கொள்க. `சதசத்து` என்பதே வழக்காயினும் செய்யுள் நோக்கி அதனை முன் பின்னாக மாற்றி `அசற்சத்து` என்றார். ``நீங்க`` என்பதன் பின், `செய்து` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது. ``ஈங்கு`` இசைத்திட்டபின் உளதாகிய பெத்த நிலையை. ``அணு`` என்பது இரண்டாவதன் பொருள்மேல் ``இசைத்தான்`` என்றதனோடு தொக்கது. தான், அசை. உம்மை, மாயையை அசைத்ததேயன்றி என இறந்தது தழுவி நின்றது. அறிவித்தாய் அறிவிப்போனும் என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. அதன் காரியத்தையும் உடன் தோற்றி நின்றது. ஏகாரம், பிரிநிலை. எனவே, `ஒன்றை அறிவித்த சற்குரு, இதற்கு முன்னுள்ளவற்றை யெல்லாம் செய்த இறைவனே` என்றபடி.
இதனால், சற்குரு சிவனே யாதல் அருளல் தொழில் அவனுடையதேயாதலை ஏனைத் தொழில்கள் நிகழுமாற்றின் வைத்து உணர்த்தும் முகத்தால் தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

பொழிப்புரை :

சத்திநிபாதம் படிமுறையால் நாளும் நாளும் மிகுந்து வரும் வகையால் ஆணவத்தைச் சிறிது சிறிதாக முறையே நீக்கி வருதலாலும், முடிவில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் உப தேச மொழியால் அவ்வாணவங் காரணமாக இருந்து வந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தருதலாலும், பின்னும் பண்டை வாசனையால் பாச உணர்வு தோன்றுமாயின் அதனைத் தோன்றும் பொழுதே பசையின்றி உலர்ந்து கெடும்படி வாட்டி விடுதலாலும், ஆராய்ந்து சொல்லுமிடத்து எல்லா முதன்மையும் உடையவனாக உண்மை நூல்களில் கூறப்படுகின்ற இறைவனே உயிர்கட்கு வீடுபேறு கிடைக்கும்படி குருவாய் வருபவனாவான்.

குறிப்புரை :

இறைவன் தனது அருட்சத்தியால் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவ மலத்தைப் படிப்படியாய் நீக்குதலை,
மன்னும் இருளை மதிதுரந்த வாறன்பின்
மன்னும் அரனே மலம் துரந்து.
-சிவஞானபோதம், சூ. 11. அதி.2
எனக் கூறியதானானும் உணர்க. மாறுதல் - ஞான நெறியினின்றும் விலகல். ``ஏறு நெறியால்`` எனவும், `ஈறில் உரையால்` எனவும் கூறியவற்றிற்கு ஏற்ப, `தனது அருள் ஞானத் தீயால் வாட்டலால்` என ஏது வருவித்துக் கொள்க.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே``
-சிவப்பிரகாசம், 9-8
எனவும்
`` ... ... ... ... இடை ஏறுவினை
தோன்றில் அருளே சுடும்`` -திருவருட்பயன் - 98.
எனவும் பின்னோர் கூறுதல் காண்க. `இங்குக் கூறப்பட்டன பிறரால் இயல்வன அன்மையின், இறுதிக்கண் கூறிய செயலும் சிவன் செய்யும் செயலேயாம்` என்பது கருத்து. `வீடுறக் குருவாம்` என இயையும்.
இதனால், மேற்கூறிய பொருள் தக்கதோர் ஏதுக்களால் வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
சிற்பி