ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்


பண் :

பாடல் எண் : 1

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர் `தங்களை உடன் இருந்து காவல் புரிபவன் எவனும் இல்லை` என்று தவறாகக் கருதிக் கொண்டு தவறான செயல்கள் பலவற்றைச் செய்கின்றனர். உண்மையை உணர்ந்தால் யாவரையும் உடன் இருந்து காவல் புரிகின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். அவன் இல்லாத இடம் இல்லை. (எனவே தவறு செய்பவர் அவனால் ஒறுக்கப்படுதல் திண்ணம்) எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்ற அவனை அங்ஙனம் காவல் புரிபவனாக அறிந்தோர் யாவரும் தவற்றை ஒரு ஞான்றும் செய்யாது ஒழிந்திருக்கின்றனர்.

குறிப்புரை :

`அவரைப் பின்பற்றி ஒழுகுதலே அறிவுடைமை யாகும்` என்பது குறிப்பெச்சம். இம்மந்திரப் பொருளையே,
வஞ்சித் தொழுகும் மதியிலிகாள், யாவரையும்
வஞ்சித்தோம் என்றுமகிழன்மின் - வஞ்சித்த
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொ லென்றஞ்சி
அங்கங் குலைவ தறிவு. -நீதிநெறி விளக்கம் - 93.
எனப் பின்வந்த பெரியார் ஞானப் பகுதியில் எடுத்தருளிச் செய்தார். மெய்கண்ட தேவரும்.
தன்னை யறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது. -சிவஞானபோதம் சூ. 12- அதி, 4
என ஞானியரை நோக்கியே அறிவுறுத்தமை காண்க. ``கண்காணி`` என்பது நேரே நோக்கிக் காவல் புரிபவனைக் குறிக்கும் பெயர். ``ஆக`` என்பதைப் பின்னரும் கூட்டுக.
இதனால், `ஞானியர் தாம் அறிந்து மேற்கொள்ளும் கூடா ஒழுக்கத்தை இறைவன் பொறான்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன்
மைதாழ்ந் திலங்கு மிடறுடை யோனே.  

பொழிப்புரை :

`செழுங்கடல் வட்டத்து நிகழ்வனவற்றை அவற்றைச் செய்தான் அறியும்` எனக் கூட்டுக.
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

`நிகழ்வனவற்றை` என்பது சொல்லெச்சம். பொய்யினது இழிவைப் புலப்படுத்தற்கு, `பேசும் மனிதர்கள்` என்னாது, ``புலம்பும் மனிதர்கள்`` என்றார். ``செய்தான்`` என்றது, `எதன் பொருட்டுப் படைத்தானோ அதன் பொருட்டாகவே ஒழுகு வோரையும் அவ்வாறின்றி யொழுகுவோரையும் அவன் நோக்கி யிருந்து அவரவர்க்குத் தக்க பயனைத் தருவான்` என்னும் குறிப்பினது. பின்னர், ``மைதாழ்ந்திலங்கு மிடறுடையோன்`` என்றமையால், முன்னர், ``செய்தான்`` என்றதும் அவனையேயாயிற்று. `நல் லொழுக்கத்தினாலே நற்பயன் பெறுதல் கூடுவதாய் இருக்க அதனை விடுத்துத் தீயொழுக்கத்தில் ஒழுகுதல் அறியாமை` என்பது கருத்து. மெய்யுரைப்பார்க்குச் சுவர்க்கத்தைத் தருதல் கூறுமுகத்தால் பொய்யுரைப்பார்க்கு நரகத்தைத் தருதல் உணர்த்தப்பட்டது.
இதனால், `ஞான நெறியில் நிற்பார்க்குப் பொய்யுரைத்தல் சிறிதும் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்
மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது
வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

பொழிப்புரை :

சற்குரு அருளால் ஞானம் பெற்றவர்கட்கும் மறு பிறப்பு உண்டு` எனக் கூறுதல் அதன் பின்பும் பத்திச் செய்கைகளைத் தமக்கு விருப்பமின்றி உலகத்தார் பாராட்டுதற் பொருட்டே செய்து அதனால் புகழும் பொருளும் பெற்றுக் காலத்தைக் கழிக்கின்ற அந்தப் பித்தர்களுக்கேயாம். அவ்வாறின்றிப் புகழ் பொருள் முதலியவற்றுள் ஒன்றையும் விரும்பாது பத்திச் செய்கைகளைத் தமது அன்பானே செய்து ஒழுகுமாற்றால் மறுபிறப்பாகிய பயிருக்கு வித்தாய் அமைகின்ற ஆகாமிய வினையை வித்தைக் குற்றியுண்பார்போல வலுத்து நில்லாதபடி அழித்து, மறுபிறப்பாகிய பயிர் விளைக்கின்ற நெறியைப் பாழாய்க் கிடக்கும்படி செய்கின்ற அந்தப் பித்தர்களுக்கு ஒருஞானறும் மறுபிறப்பு உண்டாதல் இல்லை.

குறிப்புரை :

``ஞானத்திற்கு உலகம் பேய்; உலகத்திற்கு ஞானம் பேய்`` என்பது ஒரு பழமொழி. அதன்படிஞானிகளும், அஞ் ஞானிகளும் ஒருவரையொருவர் பேய் பிடியுண்டவர்களாக, அல்லது பித்தர்களாகக் கருதுதல் தெளிவு. அம்முறையில் இம்மந்திரத்தில் இருவகைப் பித்தர்களைக் குறிப்பிட்டு, ஒருவகைப் பித்தர்கட்கு மறு பிறப்பு உண்டாதலையும் மற்றொருவகைப் பித்தர்கட்கு மறுபிறப்பு உண்டாகாமையையும் வலியுறுத்தினார், ``பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் அடி`` (தி.6 ப.6 பா.4) எனமறுபிறப்பில்லாத பித்தரை, ``பெரும் பித்தர்`` என அருளிச் செய்தமை அறிக.
``தென்பாலுகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்; பெரும்பித்தன் காணேடி``
-தி.8 திருச்சாழல் 9
எனப்பட்ட அந்தப் பெரும்பித்தனுக்கு ஆட்பட்டோர் தாமும் பெரும் பித்தர் ஆதலல்லது, வேறு என் ஆவர்? `கழிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மத்தகர் - மத்தச் செயலைச் செய்பவர். மத்தம் - உன்மத்தம்; பித்து. ``அன்றோ`` என்றது தேற்றமாதல் குறித்தது. ``வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்`` என்றது ஒட்டணி.
இதனால், `ஞானம் பெற்றோர் அந்நெறியில் உறைத்து நின்று நிட்டை கூடாது, கூடாஒழுக்கம் உடையராயின் ஞானம் பெறாதவ ரோடு ஒத்தவரேயாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வடக்கு வடக்கென்பர் வைத்ததொன் றில்லை
நடக்க உறுவரே ஞானம் இலாதார்
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.  

பொழிப்புரை :

குருவருளைப் பெற்றபின்னும் இறைவனை எவ்விடத்தும் ஒருபெற்றியாகவே உணர்ந்து அவனது திருவருளில் மூழ்கி நிற்றலாகிய ஞானத்தில் ஞானமாம் அசைவிலா நிட்டை நிலையை எய்த மாட்டாதவரே அவனைக் காலம், இடம் முதலிய, சிறப்புக்கள் காரணமாக ஏகதேசமாக உணர்ந்து அவ்வாற்றான் வழிபடும் வழிபாடுகளை நிறைவேற்ற முயல்வர். மேற்கூறிய அந்த நிட்டை நிலையை எய்தினார்க்கு எவ்விடத்தும், எக்காலத்தும் இறை யருட் சிறப்பு அவரது ஞானத்தினுள்ளே இனிது விளங்கியே நிற்கும்.

குறிப்புரை :

தமிழ் மக்கள் பொருட்டுத் தமிழ்நூல் செய்கின்றார் ஆகலானும், அம்மக்கட்கு இடம் தென்றிசை ஆகலானும், `அவர் வட திசையைச் சிவனது திருவருட்சிறப்பு இனிது விளங்கும் திசையாகக் கொண்டு முயன்று பயன்பெறும் மரபு நிலை அவருள் நிட்டை எய்தினோர்க்கு வேண்டா` என்றார். எனவே, `நிட்டை கூடப் பெறாது, ஏனைச் சிந்தித்தல் தெளிதல்களில் நின்றோர் அதனை இகழலாகாது` என்பதும் கூறினாராயிற்று. `வேண்டா` என்றது, `அவர் அது செய்யாமை குற்றம் அன்று` என்றபடி. இஃது இம் மந்திரத்தின் கருத்துரை. இதன் சொற்பொருள் வெளிப்படை. ``ஞானம்` என்றது ஞானத்தில் ஞானத்தை. ``அறிவு`` என்றதும் அதனையே. ஒன்று - ஒருசிறப்பு. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``இல்லை`` என்றது பொதுமை நோக்காது உண்மை நோக்கிக் கூறியது. வையகம் - புண்ணியத் தலங்களும், தீர்த்தங்களும். ``அகத்தில்`` என்றது, `இருந்த இடத்தில்` என வேறொரு பொருளையும் தோற்றுவித்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
இதனால், `ஆவன இவை, ஆகாதன இவை` என்னும் வரை யறை அவற்றை மேற்கொள்வாரது நிலை பற்றியதாதல் கூறப்பட்டது.
ஏதேனும் காலமுமாம், ஏதேனும் தேசமுமாம்;
ஏதேனும் திக்கா சனமுமாம் - ஏதேனும்
செய்வான் ஒருவனுமாம்; செய்யாச் செயலதனைச்
செய்யாமை செய்யும் பொழுது.
-திருக்களிற்றுப்படியார் - 60.
எனவும்,
``தேசம் இடம் காலம்திக் (கு) ஆசனங்கள் இன்றிச்
செய்வதொன்று போற்செய்யாச் செயலதனைச் செய்து``
-சிவஞானசித்தியார், சுபக்கம், 285
எனவும் வரும் சாத்திர மொழிகளையும் காண்க.

பண் :

பாடல் எண் : 5

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேஎங்கும் தேடித் திரிவார்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

பொழிப்புரை :

காயக் குழப்பன் - உயிர்களின் உடம்புகளை அவற்றின் வினைக்கேற்ப உழல் விப்பவன். காயநன்னாடன் - உயிர்க்கு உயிராய் நிற்றலால் உயிர்களின் உடம்புகளைத் தனது இடமாக உடையவன். காயத்தினுள்ளே கமழ்தல் - ``உற்ற ஆக்கையின் உறுபொருளாய் நறுமலர் எழுதரு நாற்றம்போல்`` (தி.8 அதிசயப்பத்து, 9) உள்நோக்கி உணர்வார்க்கு நுண்ணிய இனிய பொருளாய் வெளிப்படுபவன்.
ஏனைய வெளிப்படை.

குறிப்புரை :

`கருத்து அறியார் தேடித் திரிவர்கள்` என்பதன் பின், அவர்க்கு அது வேண்டுவதே` என்னும் குறிப்பெச்சம் வரு வித்துரைக்க. அதனானே, `கருத்தறிந்தார்க்கு அது வேண்டுவதின்று என்பது போந்தது போதரவே அவர் அங்ஙனம் திரியாமை அவர்க்குக் குற்றமாகாதாயிற்று. ஆகவே, அறியதார் அறிந்தார் போன்று ஒழுகுதல் கூடா ஒழுக்கம் ஆதல் அறிக.
இதனால், `கீழ் நிலையில் உள்ளோர் மேல்நிலையில் சென்றோர் போல ஒழுகுதல் கூடாது` என விலக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கண்காணி யாகவே கையகத்தே எழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் றானே.

பொழிப்புரை :

உயிர்களின் கண்ணைத் தன் இடமாகக் கொண்டு அவற்றிற்கு அக்கண்போலச் சிறந்து நிற்கின்ற இறைவன் ஞானிகட்கு அவர்தம் புறக் கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான்.அகக்கண்ணிற்குப் புலனாகின்றவனாகியும் இனிது விளங்கு வான். ஆகையால் அவர்களது செயல்திறங்களை இடைவிடாது நோக்கி அவற்றிற்கு ஏற்ற பயனை அருளுதல் அவனுக்கு இயல்பாகும்.

குறிப்புரை :

``காணி`` நான்கனுள் முன்னைய மூன்றும் பகுபதம்; இறுதி ஒன்றும் பகாப்பதம். பகுபதங்களில் வந்த இகர விகுதி மூன்றனுள் முன்னைய இரண்டிலும் செயப்படுபொருண்மையிலும், இறுதி ஒன்றும் வினைமுதற் பொருண்மையிலும் வந்தன. காணி - தனக்குரிய இடம். காணி உடையவனை, ``காணி`` என உபசரித்துக் கூறினார். `உயிர் தனது வலக்கண்ணில் சிறந்து விளங்கும்` என்றும் `அவ்விளக்கத்தில் இறைவனும் சிறந்து விளங்குவான்` என்றும் கூறும் உபநிடத வழக்குப் பற்றி(பிருகதாரணியம், அத்தியாயம் 5) இறைவனை, ``கண்காணியாகிய காதலன்`` என்றார். ``கண்ணே! கண்ணிற் கருமணியே! மணியாடுபாவாய்`` (தி.6 ப.47 பா.1) என்னும் திருத்தாண்டகமும் இங்கு நோக்கத் தக்கது. ஈற்றடியை முதலில் கூட்டியுரைக்க. புறத்து விளங்குதலை, `கையகத்தே எழும்` என்றும் அகத்து விளங்குதலை ``கருத்துள் இருந்திடும்`` என்றும் கூறினார். வழி - தீரும் வாயில். ஞானியர் தற்போதம் நிகழ்ந்து செய்யின் அவற்றை அவர் செயலாகவும், தற்போதம் இழந்து செய்யின் அவற்றைத் தன் செயலாகவும் கொண்டு அவற்றிற்கு ஏற்ற பயனைத் தருதலையே இங்கு, ``வழி செய்யும்`` என்றார்.
இதனால், `ஞானியரும் தற்போதம் நீங்காநிலையில் அற நெறிபிழைப்பாராயின் அஃது அவர்க்கு ஏனையோர்க்குப் போலவே கூடா ஒழுக்கமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை
தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்பறி யாரே.

பொழிப்புரை :

திருவருட்சத்தி பதிவு எல்லோர்க்குமன்றி ஒரு சிலர்க்கே உண்டாவதால் உண்மை நூல்களை ஓதுதலை சிலர் செய்தும், மற்றும் சிலர் சிவனைக் கிரியா முறையில் வழிபடுதலைச் செய்தும், மற்றும் சிலர் யோகம் புரிதலைச் செய்தும் மற்றும் சிலர் சிவனது உண்மை நிலையைக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல்களால் உணர் தலைச் செய்தும் நிற்கின்றனர். ஆகவே, மிகப்பலர் இவற்றுள் ஒன்ற னையும் செய்யாது சிவவேடத்தை மட்டும் புனைந்து கொண்டு திரி கின்றனர். இஃது என்ன முறைமை!

குறிப்புரை :

முதற்கண் `ஒரு சிறையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. மூன்றாம் அடியிறுதியில் `ஆகின்றனர்` என்னும் பயனிலை அவாய் நிலையான் வந்து இயைந்தது. எதிர்காலத்தாற் கூறாது. இறந்தகாலத்தாற் கூறியது அவர் அந்நிலையில் முற்றினமை குறித்தற்கு. ``என் இது`` என்ற குறிப்பால், `வேடத்தை மட்டும் புனைந்துகொண்டு திரிகின்றனர்` என்பது இசையெச்சமாய் வந் தியைந்தது. `சத்திநிபாதம் தானும் ஒரு வகையாகாது பலவகையாய் நிகழ்தலின், சிவநெறியில் நிற்போரும் பலதிறத்தராயினர். அது முறைமையே, சத்திநிபாதம் வாயாதவரும் வாய்ந்தார்போல நடித்தல் என்னமுறை` என்றபடி. `அது முறைமையன்றாகவே அதன் விளைவை அவர் பெறுவார்` என்பது கருத்தாயிற்று. அதிகாரம் சத்தி நிபாதர்களைப் பற்றியதாகவும் இடையே பிறரைப்பற்றியும் கூறினார், `சத்திநிபாதரும் தற்போதத்தால் ஏலாத செய்யின் சத்தி நிபாதர் அல்லாதவரோடு ஒருங்கொத்தவராவர்` என்பது உணர்த்துதற்கு, இதுவே இம்மந்திரத்தின் திரண்ட கருத்து என்க.

பண் :

பாடல் எண் : 8

காணா தவர்கண்ணில் படலமே கண்ணொளி
காணா தவர்கட்குக் காணாத தவ்வொளி
காணா தவர்கட்கும் கண்ணாம் பெருங்கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

பொழிப்புரை :

முகக்கண்கள் புறப்பொருளைக் காணுதல் இயல் பாயினும் சில கண்கள் அப்பொருள்களைக் காணமாட்டாதன ஆதற்குக் காரணம் அக்கண்ணில் ஒளிக்கு மாறாகப் படலம் இருப்பதே யாகும். இனி முகக்கண் உடையார்க்கே யன்றி அக்கண் இல்லா தவர்க்கும் அகக்கண்ணாகிய அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாம் சிவ ஒளியைத் தற்போத வழியாற் காணாது அருள் வழியாகக் கண்டவரே கள்ளத்தனமாகச் செய்யும் செயல்களைச் செய்யாது ஒழிவர். அந்தச் சிவ ஒளி அகக்கண்ணாகிய ஞானக் கண் இல்லா தவர்க்குக் காணப்படாத ஒன்றேயாய் இருக்கும்.

குறிப்புரை :

`அதனால் அவர்கள் வினை விட்டொழியாது செய் பவரேயாவர்` என்பது குறிப்பெச்சம். `வறியவர்கட்கு அடகுதான் சோறு` என்றல் போல, ``காணாத கண்ணில் படலமே கண்ணொளி`` என்றார். அங்ஙனம் கூறியது, காணுதற்குரிய கண் காணாதொழிதற்குக் காரணங் கூறியவாறு. புறக்கண் பற்றிய இக் கூற்று உவமையாய், அகக்கண்ணை மறைத்து நிற்கும் மலம் காரணமாச் சிவ ஒளியைக் காண்டல் இயலாமையை விளக்கிற்று. இரண்டாம் அடியில் ``காணாதவர்`` என்றது அகக்கண்ணால் காணாதவரையேயாம். இரண்டாம் அடியை இறுதியில் கூட்டியுரைக்க.
இதனால், `கூடா ஒழுக்கம் உடையார் ஞானியர் ஆகார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.

பொழிப்புரை :

பித்துக் கொண்டவன் அதற்காக மருத்துவன் தரும் மருந்தால் பித்து நீங்கித் தெளிவுற்று உடம்பை முன்போலத் தறிகெட்ட நிலையில் செலுத்திக் கெடுக்காமல் இயற்கை நிலையில் செலுத்தி ஏனையோர் குழாத்தில் தானும் ஒருவனாய் ஒன்றுபடுதலைப் போலவும், படலத்தால் மறைக்கப்பட்ட கண்ணும் அவ்வாறே மருத்துவன் செய்யும் சிகிச்சையால் படலம் நீங்கித் தனது ஒளி கிடைக்கப் பெறும் அத்தன்மையைப் போலவும் அஞ்ஞானத்தால் அறிவு மயங்கி, `யான், எனது` எனச் செருக்கித் திரிந்த யான் எம் ஆசிரியாராகிய நந்திபெருமான் ஞானத்தை அருளியதனால் அறிவு தெளிந்து செருக்கொழிந்து அருள் வழியில் ஒழுகி ஏனைய அருளாளரது குழாத்தில் சேர்ந்து அவர்களில் ஒருவன் ஆயினேன்.

குறிப்புரை :

`அதனால் யான்எனது என்னும் செருக்கால் கூடா ஒழுக்கத்தை மேற்கொள்ளுதலை இலன் ஆயினேன்` என்பது குறிப் பெச்சம். `ஆகவே, இப்பேற்றினைப் பெறாதவர் கூடாவொழுக்கத்தை ஒழிதல் இயலாது` என்பது கருத்தாயிற்று, உவமையில், `பிரகிருதி உய்த்து ஒன்றுமாபோல்`` எனக் கூறினமையால், பொருளிலும் அதற்கு ஏற்புடையன கொள்ளப்பட்டன. ``பிரகிருதி`` என்றது உடம்பை; சிவஞான போதத்திலும் (சூ. 3 அதி.5), ``ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பம் சீவனம் பிரகிருதிக் கின்மையின்`` என உடம்பு ``பிரகிருதி`` என்றது காண்க.
இதனால், `தற்போதத்தால் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளு தற்குக் காரணம் திருவருளின்மையே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பிரான்மய மாகப் பெயர்ந்தன எட்டும்
பராமய மென்றெண்ணிப் பள்ளி உணரார்
சுராமய முன்னிய சூழ்வினை யாளர்
நிராமய மாக நினைப் பொழிந் தாரே.

பொழிப்புரை :

கள்ளை மிக உண்டலால் உடல் அக்கள்மயமே யாய் இருத்தலை விரும்பும் வஞ்சமனத்தவர் ஞானிகட்குச் சிவமயமாகத் திகழ்கின்ற உலகப் பகுதி எட்டினையும் அருள்மயமாக எண்ணி அடங்குதலாகிய ஞானவிழிப்பைக் கொள்ளாது அஞ் ஞானத்தில் உறங்குவோராய்த் தாம் குற்றம் சிறிதும் இல்லாத தூயராய் இருத்தல் வேண்டும் என்பதைச் சிறிதும் நினையாதே கெடுகின்றனர்.

குறிப்புரை :

மூன்றாம் அடியை முதலில் வைத்துரைக்க. பெயர்தல் - விளங்குதல். உலகப் பகுதி ஐம்பெரும் பூதமும், `ஞாயிறு திங்கள்` என்னும் இருசுடர்களும், உயிர்களும் எட்டுப் பகுதியுள்ளே அடங்குதலின், ``எட்டும்`` என முற்றும்மை கொடுத்து ஓதினார். உடலை உயிர் இயக்குதல்போல் இவற்றை இறைவன் இயக்கி நிற்றலின் இந்த எட்டும் அவனுக்குத் திருமேனிகளாகச் சொல்லப் படுதல் பற்றி இவற்றை, ``பிரான் மயமாகப் பெயர்ந்தன`` எனவும், அதனானே அவை அருள்மயம் ஆதல் பற்றி, `பராமயம் என்றெண்ணி உணரார்`` எனவும் கூறினார். பரா - பரை; சத்தி; அருள். ``உணரார்`` என்பது முற்றெச்சம். நிராமயம் - நோய் இன்மை; அஃது இங்குக் குற்றம் இன்மையைக் குறித்தது. நிராமயம் ஆகும்படி நினைத்தலை ஒழிந்தனர்` என்க. இது ஞானிகட்கு ஆகாமைபற்றி இவ்வாறான நிலையில் நிற்பவர்கள் ஞானத்தில் விழியாது அஞ்ஞானத்தில் உறங்குபவராகவே கூறினார். கள்ளால் களிப்பெய்தினார் நன்று தீது அறியாது மயங்கிக் கெடுவர் ஆதலின், கள்ளுண்டல் மற்றும் பலகுற்றங்கள் விளைதற்கு வழியாகும் என்பது கருத்து.
இதனால், `கள்ளுண்பார் ஞானியராகாது அஞ்ஞானியரே யாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

ஒன்றிரண் டாகிநின் றொன்றிஒன் றாயினோர்க்(கு)
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா
ஒன்றிரண் டென்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்றிரண் டாய்நிற்கும் ஒன்றோடொன் றானதே.

பொழிப்புரை :

`பலவாய் உள்ள உயிர் ஒன்றாய் உள்ள சிவத்தோடு இரண்டறக் கலத்தலே முடிநிலைப் பயன்` என்பது எல்லோர்க்கும் உடன்பாடு. ஆயினும், ஒரு பொருளாய் உள்ள பிரமமே அவிச்சை யால் பலவாய் உள்ள உயிர்களாக மயங்கி அறியப்பட்டு, அவிச்சை நீங்கியவுடன் உயிர் முன்போல ஒரு பொருளாகிய பிரமத்தோடு ஒன்றாய்விடும் எனக் கூறுகின்றவர்கள் அவிச்சைக்குக் காரணம் கூறாமையால் உயிர் பிரமமேயான நிலைநிலைத்தல் இன்றிப் பிரமமும் உயிரும் வேறு வேறாய் நிற்கும் அவிச்சை நிலையே நிலைபெறுவ தாகும். ஆகவே அவர்கட்கு இரண்டும் ஒன்றாகும் நிலை என்றும் கிட்டுவதின்றாம் இனி `ஒன்றாகிய பரமனும், பலவாகிய உயிர்களும் என்றும் வேறு வேறாக இருத்தல் அன்றி, ஒன்றாதல் இல்லை` எனக் கூறுவார்க்கு அவ்வாறு நிற்றலே பயனாவதன்றி, முதற்கண் கூறிய முடிநிலைப் பயன்கிட்டாதாம்.

குறிப்புரை :

அதனால் `அவ்வாறெல்லாம் கூறுவாருடன் எதிர்வாதம் செய்து பொழுதைப் போக்குதலும் ஞானியர்க்குக் கூடா ஒழுக்கம்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியில் ``ஒன்று, இரண்டு`` என்றது, `முதலாவது, இரண்டாவது` எனவும், ஏகாரம் தேற்றம். அது ஈற்றடியிலும் சென்று இயையும். ஆகவே, இரண்டிடத்தும் ``ஒன்றிரண்டு`` என்பன பயனிலையாம் ஆகலின், அவற்றிற்கு எழுவாய் வருவித்து, `ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே என்று உரைதருவார்க்கு எலாம் ஒன்றும் இரண்டும் ஒன்றும் இரண்டுமே (அவை ஒன்றாதல் இல்லை) என்க. ``ஒன்றோடொன்றானதே`` என்பதில் முதற்கண் நின்ற ஒன்று சிவம். ஒன்றாதலுக்கு உயிர் என்னும் எழுவாயும், `ஆனதே முடிநிலைப் பயன்` என்னும் சொல்லெச்சமும் வருவித்து முதலில் கூட்டியுரைக்க.
இதனால், உண்மை ஞானியர்க்குப் பிற மதத்தவரோடு தருக்க வாதம் செய்து பொழுதை வீண்படுத்துதலும் குற்றமாதல் கூறப்பட்டது. சாத்திரங்களில் சொல்லப்படுகின்ற பிற மத மறுப்புக்கள், அம்மதம் பற்றி மயங்கும் மாணாக்கரை நோக்கி விளக்கம் தருவனவேயாகும்.

பண் :

பாடல் எண் : 12

உயிரது நின்றால் உணர்வெங்கு மாகும்
அயரறி வில்லையால் ஆருடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்துள்ளப் பாங்கறி யாரே.

பொழிப்புரை :

உயிர் உடம்பில் இருப்பதனால்தான் அந்த உடம்பு முழுதிலும் அறியுந்தன்மை காணப்படுகின்றது. (அத் தன்மையால் உடல் வீழ்ந்தொழியாது வாழ்ந்து செயற்படுகின்றது) உயிர் உடலை விட்டு நீங்கினால் உடலைச் செயற்படுத்துகின்ற அந்த அறிவு இல்லையாய்விடும். அறிவு இல்லையானால், வேறு எல்லா அமைப்புக்களும் நிறைந்துள்ள உடம்பு அவ்வமைப்பால் பயனின்றி வீழ்ந்து அழியும். ஆகவே `உயிர்` எனப்படுவது உடம்பிற்கு வேறாதல் தெளிவாகலின் அத்தகைய உயிரும் உடம்பும் ஒன்றி நிற்கும் பயப்பாடு வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடக்கவும் சிலர் உடம்பையே தாமாக மயங்கிக் கூடா ஒழுக்கத்தினை மேற்கொள்கின்றனர்.

குறிப்புரை :

`இஃது ஓர் அறியாமை` என்பது குறிப்பெச்சம். ``நின்றால்`` என்றமையால், `நில்லாவிடில்` என்பது வருவிக்கப் பட்டது. அயர்தல் - செயலாற்றுதல்; விருந்தயர்தல், விழா வயர்தல் முதலியன காண்க பயிர் - `பயனைத் தருவது` என்னும் பொருட்டாய் நின்றது. ``கிடந்து`` என்னும் எச்சத்தைத் திரித்து, உம்மையை மாறிக் கூட்டி, ``கிடக்கவும்`` என உரைக்க. உள்ளம் - ஆன்மா. பாங்கு - அதன் தன்மை.
இதனால், `குருவருளால் தம்மையும், தலைவனையும் உணர்ந் தாராயினும் கூடா ஒழுக்கத்தைக் கொள்ளின் உணராதவரேயாவர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

உயிரது வேறாய் உணர்வெங்கு மாகும்
உயிரை அறியின் உணர்வறி வாகும்
உயிரன் றுடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கறி யாரே.

பொழிப்புரை :

உயிர் உடம்பு போல அன்றி அதனின் வேறாய் இருத்தலால்தான் அந்த உடம்பு முழுதும் அறிவுத் தன்மை காணப் படுகின்றது. இதனை ஆய்ந்தறியும் அறிவே மெய்யறிவாகும். உயிர் தான் உடம்போடு சேர்ந்த அன்று முதலாக உடம்பு முழுவதையும் தனது அறிவால் அகப்படுத்தி ஆண்டு வருகின்ற அந்தச் செயலை அவ் வுயிர்க்கு உயிராய் நின்று செய்து வருகின்ற ஒரு பெரும் பொருளை அறிபவர் உலகத்தில் ஒரு சிலரே.

குறிப்புரை :

``வேறாய்`` என்பது, `வேறாக` என்பதன் திரிபு. ``அன்று`` என்பதன் பின் `முதலாக` என்பது எஞ்சி நின்றது. உணர்வை அயர்தல், அறிவைச் செயற்படுத்துதல். ஆங்கு - அவ்வாற்றால் என்றது, `அவ்வுண்மையை` என்றபடி. அறியாமை` சிறிதும் அறியாமையேயன்றி, முற்ற அறியாமையையும் குறித்தது; `முற்ற அறியாதவரே கூடா ஒழுக்கத்தினை உடையராகின்றனர் என்பது கருத்து.
இதனால், முன்னை மந்திரத்திற் கூறிய பொருள் வேறோ ராற்றான் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

உலகாணி ஒண்சுடர் உத்தம சித்தன்
நில ஆணி ஐந்தனுள் நேருற நிற்கும்
சிலஆணி யாகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்வது தன்னை யறிவதே.

பொழிப்புரை :

அனைத்துலகங்களின் தொகுதியாகிய தேரினை நிலைபெறச் செய்கின்ற அச்சாணியாய் உள்ளவன் ஒளியாய் உள்ள அனாதி முத்தனாகிய சிவனே. அவன் நிவிர்த்தி முதலிய ஆதார கலைகள் ஐந்திலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்றான். அவ் வைந்து கலைகளுக்கு உட்பட்டுள்ள இடங்களில் சிற்சிலவற்றிற்குத் தலைவராய், `தேவர்` எனப்பெயர் பெற்று விளங்கும் அனைவர்க்கும் தலைவனாய் உள்ள அந்தப் பெருமானையே ஒருவன் தன் தலைமேல் வைத்து ஒழுகுவானாயின், அவன் அவ்வாறு ஒழுகுதலே தனது இயல்பை உள்ளவாறு அறிந்துஒழுகும் ஒழுக்கமாகும்.

குறிப்புரை :

`சித்தன், முத்தன்` என்பன ஒருபொருட்சொற்கள். ஆதிமுத்தர் அனைவர்க்கும் முன்னே முத்தனாய் உண்மைபற்றி அவ்வானாதி முத்தனை, ``உத்தம சித்தன்`` என்றார். நிலம் - ஆதாரம். அஃது ஏனை ஐந்து அத்துவாக்களுக்கும் ஆதாரமாய் உள்ள கலைகளைக் குறித்தது. நேர்மை - நுண்மை. `அத்தேவர் பிரானை` எனச் சுட்டுவருவித்துக்கொள்க. வாணி, `மொழி` எனப் பொருள்தரும் வடசொல். அது மொழிவடிவாய் விளங்கும் தியானத்தைக் குறித்தது. இவ்வாறு ஒழுகுவோர் கூடாவொழுக்கத்தைக் கொள்ளார் என்பதாம்.
இதனால், `எந்நிலையிலும் கூடா ஒழுக்கம் திருவருள் நெறிக்கு ஏலாததே` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

தானந்த மாமென நின்ற தனிச் சுடர்
ஊனந்த மாய்உல காய்நின்ற ஒண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்பம் நீஒழி
கோனந்த மில்லாக் குணத்தரு ளாமே.

பொழிப்புரை :

மாணவகனே, நீ `எல்லாவற்றையுங் கடந்துவிட்ட எனக்கு இனி அறம் பாவங்கள் எங்குள` எனச் செருக்கி, தேன் துளியால் வரும் இன்பம்போல மிகச்சிறியனவாய்ப் பெறப்படுகின்ற சிற்றின்பத்தைப் பெறும் செயலை அறவே ஒழி. அவ்வாறு ஒழித்தால்தான் சிவனது அளவில்லாத இன்பத்திற்கு ஏதுவாகிய அவனது அருள் முற்றக் கிடைக்கும்.

குறிப்புரை :

இது பின்னிரண்டடிகளால் சொல்லப்பட்ட பொருள், கோன் - தலைவன்; பதி; சிவன். முன்னிரண்டடிகளில் அவனது பெருமை சொல்லப்பட்டது. அஃதாவது, உலகம் அனைத்திற்கும் தானே முடிவிடம்` என வேதம் முதலிய பல உண்மை நூல்களாலும் சொல்லப்பட நின்ற விளக்காயும் எல்லாப் பொருட்கும் பின்னும் முன்னுமாய் விளங்கும் ஒளியை யுடைய விளக்காயும் உள்ளவன் என்பது. ``ஊன்`` என்றதும் உடம்பு முதலாய உலகங்களையே, `அவற்றிற்கு அந்தமாய்ப் பின் ஆதியாகி உலகமாயினான்` என்க. `எஞ்ஞான்றும்தான் சுதந்திர அறிவனே யாவதல்லது பிறிதொன்று விளக்க விளங்கும் பரதந்திர அறிவினன் அல்லன்` என்றற்கு `சுடர்` என்பதனை இருகாற் கூறினார். ``தேன் அந்தம்`` என்பதில் ``அந்தம்`` என்றது, `விரைய முடியும் துளி` என்றபடி. அவ்விடத்தும் ஆக்கம் உவமை குறித்து நின்றது. இங்கு ``குணம்`` என்றது ஆனந்தத்தையே, ``உணர்ந்தார்க் குணர்வரியோன்தில்லைச் சிற்றம்பலத்தொருத்தன் - குணந்தான் வெளிப்பட்ட ... ... ... ... இக்கொடியுடை தோள்`` (தி.6 ப.1 பா.5) என்பதில் ``குணம்`` என்றது போல்,
இதனால், `எஞ்ஞான்றும் சிற்றின்பத்தில் இச்சை செய்பவர் திருவருளை முற்றப் பெறார்` என்பது கூறப்பட்டது. ``வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும் - பொருந்தணைமேல் வரும் பயனைப் போக மாற்றி`` (தி.8 திருக்கோவையார் , 9) என்பதிலும் இக்கருத்தே அருளிச் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

உன்முத லாகிய ஊன்உயிர் உண்டெனும்
கன்முதல் ஈசன் கருத்தறி வார்இல்லை
நன்முதல் ஏறிய நாமம் அறநின்றால்
தன்முத லாகிய தத்துவம் ஆமே.

பொழிப்புரை :

``காட்சியால்`` உணரப்படும் உடம்பேயன்றிக் கருதலால் உணரப்படும் உயிரும் உடம்பினுள்ளே உண்டு என்னும் உண்மையையும், `அவ்வுயிருக்குத் தலைவராகச் சொல்லப் படுவோர் பலருள்ளும் கயிலைக் கடவுளாகிய சிவனே முழுமுதல் தலைவன்` என்னும் உண்மையையும் அறிகின்றவர் உலகத்து அரியர். இனி அவ் வுண்மையை உணர்ந்தவர்களும் அவற்றை உணர்வதற்குமுன் கொண்டிருந்த ஆசை வழிப்பட்ட செயல்களை முற்றவிடுத்தால்தான், ஓர் உயிரும் எஞ்சாதபடி ஒவ்வொன்றிற்கும் முதலாய் உள்ள மெய்ப் பொருளின் விளக்கம் நிரம்ப உண்டாகும்.

குறிப்புரை :

உயிரை, `உன்னியுணரப்படும் முதல்` என்றமையால், `ஊன் - உடம்பு - கண்டுணரப்படும் முதல்` என்றது பெறப்பட்டது. உன்முதல், வினைத்தொகை. கல் - மலை, `எனும்` என்பதை ``ஈசன்`` என்பதனோடும் கூட்டுக. படிமுறையால் உணர வேண்டுதல் பற்றி இரு தொடராக ஓதினார். ஏறிய - ஏறியன. அஃதாவது `பழகிப்போன செயல்கள்` என்றபடி. `நன்குஏறிய` என்க. `நன்கு` என்பது கடைக் குறைந்து நின்றது. `நாமமும்` என்னும் உம்மை தொகுத்த லாயிற்று. நாமம் - பெயர்.
இதனால், `அறிதற்கரிய உண்மைகளை அறிந்தவராகிய மெய் அறிவாளரும் கூடா ஒழுக்கம் உடையாராயின் அவ்வறிவால் பயன் எய்தார்` என்பது கூறி முடிக்கப்பட்டது.
[இம்மந்திரத்திற்குப் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற ``இந்தியம் அந்தக் கரணம் இவை`` எனத் தொடங்கும் மந்திரம் அடுத்த தந்திரம் முதல் அதிகாரத்தில் இருந்ததாகும்.]
சிற்பி