ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்


பண் :

பாடல் எண் : 1

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுதுயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தைசெய் யீரே.

பொழிப்புரை :

மண்மேல் உள்ள பிறவிகள் நிலையின்றிச் சின்னாளில் அழிந்தொழிவனவேயாம். ஆதலின் அவற்றுள் சில பிறவிகளை உயர்ந்தனவாகக் கருதி அப்பிறவியில் பிறக்க வேண்டும் என விரும்புதலை விட்டுவிடுங்கள். அங்ஙனம் விட்டு வீடுபெற விரும்பும் பொழுது அதன் பொருட்டுப் பிற நெறிகளை நாடாது, நெறிகள் அனைத்திலும் மிக மேலானதாகிய சிவ நெறியை நாடுங்கள். நாடி அதனை அடைந்து இறக்குங் காலம் உட்பட எக்காலத்தும் சிவனை இடைவிடாது நினையுங்கள். அவ்வாறு நினைந்தால் அவன் நலனடைதற் பொருட்டு அதற்கான வழிகளைத் தேடி எவ்விடத்தும் விரைந்து ஓடி அலையும் நம் அலைவை நீக்கியருளுவான்.

குறிப்புரை :

புதியன புகுதல் முறையில் புகுந்த முன்னிலைப் பன்மை ஏவல் விகுதியாகிய `உம்` என்பது ``மறந்தொழி`` என்பதன் ஈற்றில் தொகுத்தலாயிற்று. உலகத்தில் அரசரும், அவரோடொத்த பெருஞ்செல்வருமாய்ப் பிறக்கும் பிறவி இனிதானது என ஏனையோர் விரும்புதல் உண்டு ஆதலின், `அஃது ஒரு மயக்க உணர்வேயாதலின் அதனை விடுத்தல் வேண்டும்` எனவும், `விடுத்தவழி வீடுபெறுதலே விரும்பப்படும் ஆதலின் அதன் பொருட்டுப் பிறவி நீங்கப் பெறாத பிறர் பலரை முதல்வராகக் கொண்ட நெறிகளை நாடாது பிறப்பில் பெருமானாகிய சிவனை முதல்வனாகக் கொண்ட சிவநெறியையே நாடுதல் வேண்டும். `அதனை நாடி அடைந்தவழியும், அந்நெறியின் முறைமைகளை இடைவிடாது கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும்` எனவும் அறிவுறுத்தபடி. ஈற்றடியை இரண்டாம் அடியாகக் கூட்டி யுரைக்க. ``சிறந்த`` என்பது இயைபின்மை நீக்கிய விசேடணம். இனி பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாகக் கொண்டு, `சித்தாந்த சைவம்` என உரைத்தலுமாம். ஐந்தாம் தந்திரத்தில் நாயனார் சில சைவ வேறுபாடு குறித்தமையை நினைவுகூர்க.
இதனால், `உய்திவேண்டுவார்க்கு உரிய நெறி இது` என்பது உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிதுளன் எம்மிறை
நல்ல அரன்நெறி நாடுமின் நீரே.

பொழிப்புரை :

நாங்கள், `ஒருகாலத்திலும் பிறத்தலும், இறத்தலும் இல்லாதவன், எல்லாவற்றையும் அறிந்தவன், எல்லா உயிர்களிடத்தும் காரணம் இல்லாமலே இரங்குகின்ற பேரிரக்கம் உடையவன்\' என்பன போலச் சொல்கின்ற அப்படிப் பட்ட முதல்வன் ஒருவன் இல்லை; இருக்க இயலாது\' என்று சிலர் முரணிக் கூறுவராயினும் அப்படிப்பட்ட பேரதிசயமான தன்மைகளையுடைய சிவ முதல்வன் இருக்கவே செய்கின்றான். அதனை நம்பி அவனது நல்ல நெறியை நீங்கள்நாடி அடையுங்கள். அடைந்து எந்த அளவு உங்கள் மனம் சோர்வடையாது நினைக்க வல்லதாகின்றதோ அந்த அளவு அவனை நினையுங்கள். எந்த அளவு அவன் பொருள் சேர்ந்த புகழை உணர்ந்து உரைக்க இயலுமோ; அந்த அளவு உரையுங்கள்; பயனுண்டு.

குறிப்புரை :

`பயனுண்டு\' என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.
எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். -திருக்குறள், 416
என்றாற்போலும் முறை பற்றி, \"செல்லுமளவும் செலுத்துமின் சிந்தையை\" எனவும், \"வல்லபரிசால் உரைமின்கள் வாய்மையை\" எனவும் கூறினார்.
\"வாய்மை\" என்பது ஆகுபெயராய், அதனை யுடைய புகழைக்குறித்தது.
\"பெரிதுளன்\" என்றது `திண்ணமாக உளன்\" எனவும் , \"எம் இறை\" என்றது `சிவன்\' எனவும் கூறியவாறு. \"நாடுமின்\" என்றது அதன்காரியம் தோன்ற நின்றது. இதனால், `உண்மையை ஐயுறுதலை விடுத்து இயன்ற அளவு கடைப்பிடித்து ஒழுகுக\' என உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

பொழிப்புரை :

உலகத்தார் பல சாதிகளைக் கூறுவராயினும் உண்மையில் உள்ளது ஒரு சாதியே. அது சிவ சாதி. உலகத்தார் பல கடவுளர்களைக் கூறிக் கொண்டாடுவராயினும் உண்மையில் உள்ள கடவுள் ஒருவனே. அவன் சிவன். இவற்றை நீவிர் முதலில் நன்றாக உணருங்கள். உணர்ந்தால், நமனும் உங்களை அணுகான்; வெட்கமின்றி முன்முன் பிறந்து இறந்த பிறப்புகளிலே மீண்டும் மீண்டும் பிறக்கும் நிலையும் உங்களுக்கு இல்லையாகும். அப்பால் மேற்கூறிய உண்மைகள் உங்கள் உள்ளத்தில் அசையாது நிலைபெற, அதன்வழிப் பின்னர்ச் சிவனை இடையறாது நினைந்து உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

``ஒன்றே, ஒருவனே`` என்னும் தேற்றேகாரங்களால் அவற்றிற்கு மாறாக அறியாதார் பல கூறுதல் பெறப் பட்டது. ``ஒன்று`` எனப் பட்ட குலம் இது என்பதும். ``ஒருவன்`` எனப்பட்ட தேவன் சிவன் என்பதும் முன் முன் மந்திரங்களின் வழிவரும் தொடர்பால் இனிது விளங்கின, ``சிவ சாதி`` என்றது. சிவன், சத்தி இவரையே அப்பனும் அம்மையுமாய்க் கொண்டு பிறந்தவர்கள் என்றதாம், முதற்கண் ``நினை மின்`` என்றது அதற்கு முன்கூறிய உண்மையைக் குறித்தும், பின்னர் ``நினைந்து`` என்றது, அவ்வுண்மை உள்ளத்து நிலைபெற்றதன் பயனாக நினைக்கும் பொருளைக் குறித்தும் என்க. முன்னர் ``நமன் இல்லை`` என்றதனால், பின்னர்க் கூறிய உய்தி துன்பம் நணுகாத எல்லையில் இன்பத்தை அடைதலாம். கதி - பிறப்பு.
இதனால், `பொது மக்களது பொதுநெறியிற் செல்லாமல் விடுத்து, மேன்மக்களது மேல் நெறியிற் செல்க என உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 4

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை.
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனைக்
காற்றிசைக் குங்கம ழாக்கையைக் கைக்கொண்டு
கூற்றுதைத் தான்றனைக் கூறிநின் றுய்மினே.

பொழிப்புரை :

இனி இங்கு நின்றும் இவ்வதிகாரத்தில் மேல் `` ஒருவனே தேவனும்` என ஒருதலைப் பட வலியுறுத்தி உணர்த்தி யருளிய, `சிவபிரானுக்கு ஆட்செய்வதையே நும் கடமையாகக் கொண்டு ஒழுகிப் பயன் பெறுங்கள்` என்பதையே பல்லாற்றானும் பன்னிப் பன்னி அறிவுறுத்துகின்றார்.
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

நடுவாதல் - தலைமையிடத்தனாதல். பலபொருட்கும் தலையாதலை `நடுநாயகம்` என்பர். ``திை\\\\\\\\u2970?`` என்றது ஆகுபெயராய் அவற்றில் வாழும் உயிர்களை. ``நடுவாய் நின்றநம்பன்`` என்றதனால், ``அவனே யாவராலும் வணங்கப்படுவோன்`` என்பது குறிப்பு. காற்று, பிராணவாயு. அதுவே உடம்பின் உட்கூறுகள் பலவற்றையும் தக்கவாறு இயைவித்து இயங்கச் செய்தல் பற்றி. ``காற்றிசைக்கும் ஆக்கை`` எனவும், அக்காற்று உள்ள பொழுது மெல்லவும், நீங்கியபின் மிகவும் புலால் நாற்றம் வீசுவது உடம்பு என அதன் இழிவு தோன்ற, ``கமழ் ஆக்கை`` எனவும் கூறினார். நறுமணம் வீசுதலை, `கமழ்தல்` என்றல் மரபாகலின், இங்கு தீ நாற்றம் வீசுதலை, ``கமழ்தல்`` எனக் கூறியது இழித்தற் குறிப்பு. `இசைக்கும் ஆக்கை, கமழ் ஆக்கை`` எனத் தனித் தனி இயைக்க. ``கொண்டு`` என்றது `கருவியாகப் பற்றி` என்றபடி. `அவனைத் துதித்தால் உய்தி பெறுதல் திண்ணம்` என்பதை நிறுவ, ``கூற்றுதைத்தான்றனைக் கூறிநின்று`` என்றார்.

பண் :

பாடல் எண் : 5

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று
அக்காலம் உன்ன அருள்பெற லாமே.

பொழிப்புரை :

`உயிராகிய நமக்கு உடல் எக்காலத்தில் வந்து பொருந்திற்று` என்று அக்காலத்தை ஆராய்ந்து உணரின், `அதனை நமக்குப் படைத்துக் கொடுத்ததலைவன் இவன்` என்பது புலனாகும். அது புலனாகவே, அவன் மீது அன்பு செல்ல அவனது அருளைப் பெறுதல் உண்டாகும். அவ்வாற்றால் இவ்வுடம்பைக் கழித்துவிட்டு, இனி மற்றோர் உடம்பில் புகுந்து பிறத்தல் இன்றி உய்ந்துபோம் வழியை நாடுங்கள்.

குறிப்புரை :

அனைத்தும் அழிந்தொழிந்த காலத்தில் உயிர்கள் உடம்பின்றியே இருக்கப் பின்பு அவற்றிற்கு உடம்பைக் கொடுத்தவன் அனைத்தும் அழிப்பவனாகிய சிவனேயாதலின், நமக்கு உடல் வந்த காலத்தை அறிந்தால், உடல் கொடுத்த தலைவன் இவன்` என்பதும் அறியப்படும் `ஆதலின் அக்காலத்தை ஆராய்ந்துணர்ந்து அருள் பெறுக` என்றும் அவ்வாறு அருள் பெறுதலே பிறவி நீங்கும் வழி யாகலின், `பிறவாமல் போம் வழி நாடுமின்`` என்றும் கூறினார். ``அந்தம் ஆதி என்மனார் புலவர்``l என்றார் மெய்கண்டதேவர். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி உரைக்க.

பண் :

பாடல் எண் : 6

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வானுளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை யாகுமே.

பொழிப்புரை :

நீவிர் போகின்ற போக்கிலே உங்களைப் போக விட்டுத் தானும், அப்போக்கிற்குத் துணையாய் உடன் வருகின்ற முதற்பொருள் சிவனே. அவன் அவ்வாறு விடுதலும், உடன் புகுதலும் நீவிர் உண்மையை உணர்தற்கு உரிய காலம் வருவதை அறிதற்காகவே யாம். ஆகையால், வாழ்கின்ற பொழுது மட்டுமின்றிச் சாகின்ற பொழுதும் அவனை நினையுங்கள். ஏனெனில், அவனே பிறவியாகிய கடலுக்கு அப்பால் உள்ள கரையாவான்.

குறிப்புரை :

அரனை முன்னர், ``பொருள்`` என்றமையால் மீட்டும் அவ்வாறே கூறினார். ஆகின்ற போது - தக்க காலம். அது, `செவ்வி` என்றும், `பருவம்` என்றும் ``போதும்`` என்றும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். எனவே, போகின்றவாறே புகுதலும் அப்பொழுது உயிர்களின் நிலையை அறிதற் பொருட்டு என்பது போந்தது. அறிவான் - அறிதற் பொருட்டு. உளன் - உடன் இருக்கின்றான். `அவனே பிறவியாகிய கடலுக்குக் கரையாகலானும், அந்தக் கரையை அடைதல் அதனை நினையும் நினைவானேயாகலானும் அவ்வழியை இடையறாது பற்றி நிற்க, அவன் எந்த நேரத்திலும் உங்களைக் கரைசேர்ப்பன்` என்பது பற்றி, ``சாகின்ற போதும் நாடுமின்`` என்றார். ``தலைவன்`` என்பது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ஆகின்ற அப்பொருள், மேற்கூறியவாறுள்ள அப்பொருள்.

பண் :

பாடல் எண் : 7

பறக்கின்ற ஒன்று பயன்உற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.

பொழிப்புரை :

கூட்டில் சிறிது போது தங்கியிருந்து பின்பு இரையை நாடி அக்கூட்டைவிட்டுப் பறந்து போகின்ற பறவையைப் போல உடம்பில் சிறிது காலம் வாழ்ந்து பின்பு அவ்வாழ்வினும் வேறான பயனை நாடி அவ்வுடம்பை விட்டு ஓடுகின்ற உயிர், உண்மையாகவே தான் அடையத்தக்க பயனை அடைய வேண்டின் உடம்பை விட்டுப் பிரிகின்ற காலத்திலும் சிவனை மறவாமல் நினைக்கும். அவ்வாறு நினைத்தால் எல்லாச் சிறப்பினும் மேம்பட்ட சிறப்பாகிய, சிவ ஞானத்தின்வழி சிவகதியைச் சேரும் இனி அச்சிவகதிதான், ஏனையுலகங்கள் எல்லாவற்றையும் விடப் பெரியதாகிய உலகமும், அதனையும் கடந்த நிலைமையும் ஆகும்.

குறிப்புரை :

``பறக்கின்ற ஒன்று`` என்பது அடையடுத்த உவம ஆகு பெயர். ``கூட்டைவிட்டுப் பறக்கின்ற` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. ``வேண்டின்`` என்றது `உண்மையாக விரும்பினால்` என்றபடி, உண்மையாக விரும்புதலாவது தப்பாது பெறக் கருதுதல். தப்பாது பெறக்கருதினால் உள்கும்` என்றமையால், ``உள்கா தொழியின் பயனில்லை` என்றாயிற்று. ``பின்னைப் பிறப்பொன் றிலாமை, பேருலகு`` என்பவற்றைப் பின்முன்னாக மாற்றிவைத்து உரைக்க. செய்யுள் பற்றி முறை பிறழ வைக்கப் பட்டன. சிவலோகம் சுத்தமாயாகாரியம் ஆதலின், அஃது அசுத்த மாயா காரியமாகிய ஏனை உலகங்களை வியாபகமாய் நிற்றல் பற்றி, ``பேருலகு`` என்றார். ``பேருலகும்`` எனத் தொக்கு நின்ற எண்ணும்மையை விரிக்க. முன்னர்ப் பதமுத்தி, அபர முத்திகளை அடைந்து, பின்னர்ப் பரமுத்தி அடையப்படும் ஆதலின் பேருலகும், பிறப்பிலாமையும் ஆம்` என்றார். ஆம் - வாய்க்கும்.

பண் :

பாடல் எண் : 8

கூடியும் நின்றும் தொழுதெம் இறைவனைப்
பாடி உளேநின்று பாதம் பணிமின்கள்
ஆடி உளேநின் றறிவுசெய் வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுவது வாமே.

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமானை அவன் அடியவரோடு கூடியும், தனித்தும், பாடியும், ஆடியும் வணங்குவதுடன் உள்ளத்திலே யும் அவனது திருவடிகளை நினைந்து அடிபணியுங்கள். ஏனெனில், உள்ளத்திலே நினைந்து பணிபவர்கட்குக் கன்றையீன்ற பசு அக் கன்றைவிட்டுப் பிரியாதது போலக் கரவாது விளங்கி அருள் செய்வான்.

குறிப்புரை :

செய்யுளுக்கேற்ப ``ஆடி`` என்பதனை வேறு வைத்து ஓதினாராயினும், முன்னர் கூறிய கூடுதல் முதலியவற்றுடன் ஒருங்கு வைத்து ஓதுதலே கருத்து என்க. நிற்றல் - தனித்து நிற்றல். உள்ளே நிற்றல் - ஒருங்கிய மனத்தோடு கூடி நிற்றல். பணிதல், அறிதல்களைச் சுருக்கம் கருதி வேறு வேறு வைத்தாராயினும் அவற்றையும் ஒருங்கு வைத்து இருமுறை ஓதுதலே கருத்தாம். அறிதல், இங்கு நினைத்தல், நீடுதல், பிரியாது உடன் இருத்தலைக் குறித்தது. அறிவு - அறிதல். அது பகுதிப் பொருள் விகுதி.

பண் :

பாடல் எண் : 9

விடுகின்ற சிவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் நும்மை இமையவ ரோடே.

பொழிப்புரை :

எப்பொழுதாயினும் உடம்பை விட்டு நீங்குவதே யன்றி அதில் நிலைத்திராததாகிய உயிர் அவ்வாறு எப்பொழுதாயினும் உடம்பைக் கீழே வீழ்த்தி விட்டுத் தான்மேலே செல்கின்ற பொழுது வாழ்விற்கும், சாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் சிவனது திருவடிகளை நினையுங்கள். நினைந்தால் உங்கள் வினைகள் கெட்டொழிவன. தான் மறைந்திருப்பினும் தனது செயல் எஞ்ஞான்றும் நிகழ்வதால் அதுபற்றி முடிவின்றி வருகின்ற புகழை உடையவனாகிய சிவன் உங்களைத் தேவர்களோடு தேவர்களாய்ச் சேர்ப்பான்.

குறிப்புரை :

``விடுகின்ற`` என்றது அதன் இயல்பு கூறிய வாறு, ``சீவனார்`` என்றது நிலைநில்லாமையைக் குறிக்கும் இழிவுக் குறிப்பு. உயிர் உடம்பை இயக்குதலும், இயக்காது விட்டு நீங்குதலும் இல்லாத நேரத்தை ``நடு`` என்றார். நாதன்றன் பாதத்தை முன்பெல்லாம் துணை யாக நினைந்து வந்தவர்கட்கே அந்த நேரத்தில் அவற்றை நினைதல் கூடும் என்க. ``கெடுகின்ற`` என்பது அன்பெறாது வந்த அஃறிணைப் பன்மை வினைமுற்று. தெளிவு பற்றி எதிர்காலம் ``கெடுகின்ற``, ``இடுகின்றான்`` என நிகழ்காலமாகச் சொல்லப்பட்டது. ``இமையவர்`` என்றது அவரது தகுதிக் கேற்ப மால், அயன், இந்திரன் என்னும் இவர் உலகத்தவரையும், சிவலோகத்தவரையும் குறிக்கும். பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் ``ஏறுடையாய்`` என்னும் மந்திரம் மேல் `மாகேசுர பூசை` அதிகாரத்தில் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

இன்புறு வீர்அறிந் தேஎம் இறைவனை
அன்புசெய் வீர்தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்துப்
பண்புறு வீர் பிறவித்தொழி லேநின்று
துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.

பொழிப்புரை :

மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து உழல்வதாகிய அந்தத் தொழிலிற்றானே நின்று, அத்துன்பத்தை அடைதற்கு ஏதுவான வினைகளில் கிடந்து உழைத்துக் கெட்டவர்களே, கேளுங்கள். எம் இறைவனாகிய சிவன் எல்லா உயிர்கட்கும் என்றும் உறுதுணையாய் இருந்து உதவி வருதலை உணர்ந்து அவனிடத்திலே அன்பு செய்யுங்கள்; அதன் மேலும் தவத்தைச் செய்யுங்கள்; அப்பொழுது உண்மை ஞானத்தைப் பெற்ற சிறப்பை உடையவராவீர்கள். அச்சிறப்பால் நிலையான இன்பத்தை எய்துவீர்கள்.

குறிப்புரை :

``பிறவித் தொழிலே நின்று`` என்பது தொடங்கி, `இன்புறுவீர்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தவமாவன சரியை கிரியா யோகங்கள். அது சிவநெறி நூல்களால் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 11

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.

பொழிப்புரை :

`யாவரும் மேற்கொள்ளத்தக்க நல்ல முறை எது` என்று அறிந்து அதனை மேற்கொள்ள விரும்புபவர்க்கு அம்முறை குறிப்பிடுகின்ற ஒப்பற்ற உண்மையான தவமும், ஒப்பற்ற அரு ளாற்றாலும், ஒப்பற்ற வீட்டு நெறியும் உள்ளன.

குறிப்புரை :

`அவற்றை அறிந்து மேற்கொள்ளுதல் அறிஞர் கடனாகும்` என்பது குறிப்பெச்சம். `அத்தவம் சிவபுண்ணியமும்` சிவன் அருளும், சிவநூல் கூறும் பொருள்களின் மெய்ம்மையுமாம். என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு, தாள் - முயற்சி. அஃது அதற்கு ஏதுவாகிய ஆற்றலைக் குறித்தது. ஈற்றடியை முதலில் வைத்து உரைக்க. இதன்கண் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.

பண் :

பாடல் எண் : 12

சார்ந்தவர்க் கின்பங் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

பொழிப்புரை :

பொதுவாக, `தேவரைச் சேர்தல்` என்பது தேவரை அவரை உணரும் நெறியிற் சென்று உணர்தலே யாகும். அம்முறையில் சிவபெருமான் தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்ப நிலையாகிய வீட்டையும், சாராது நீங்கினவர்கட்குத் துன்ப நிலையாகிய பிறப்பையும் கொடுப்பான். இதனை உணர்ந்து அவனிடத்தில் அன்பு மிகப் பெற்றவர்கட்கே அவன் தனது திருவடி நிழலைத் தருவான்.

குறிப்புரை :

`அதனைப்பெற முயலுங்கள்` என்பது கருத்து, முதல் இரண்டு அடிகளில் சிவனது இயல்பையும், மூன்றாம் அடியில், `அவ் வியல்பினை மக்கள் உணர்தல் வேண்டும்` என்பதையும் கூறினார். ஆதலின், அது `கூறியது கூறல்` ஆகாமை யறிக. `சிவபெருமானைச் சார்தலாவது இது` என்று உணர்த்துவார் பொதுவாகத் தேவரைச் சாருமாறு கூறினார். அங்ஙனம் கூறிய ஈற்றடியை முதலிற் கூட்டியுரைக்க.
``சலம்இலன் சங்கரன்; சார்ந்த வர்க்கலால்
நலம்இலன்; நாடொறும் நல்குவான் நலன்`` -தி.4 ப.11 பா.6
என்று அருளிச் செய்ததும் காண்க. பிறவியை ``இன்னாமை`` என்றமையால், இன்பமாவது வீடாயிற்று.

பண் :

பாடல் எண் : 13

முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனைக் காலமும் ஏத்துமின் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே.

பொழிப்புரை :

வீடாகிய முடிநிலைப் பயனாயும், அப்பயனுக்கு நேர்வாயிலாகிய ஞானமாயும், அந்த ஞானத்தை முதற்கண் கேள்வி யால் உணர்த்தும் முத்தமிழின் ஒலியாயும் உள்ள சிவபெருமானையே அறிஞர் எத்துணைக் காலமாயினும் ஒழியாது துதித்து நிற்பர். அங்ஙனம் துதிக்கின்ற துதியில் அவன் தன்னுள்ளே நெய்யைக் கொண்டிருத்தலால் தன்னைப் பருகுகின்றவர்கட்கு இனிக்கின்ற பால்போல அவன் இனிப்பான். ஆகவே அறிவில் இனிக்கின்ற அறிவாயுள்ள அவனை அறிவுடையோர் விரும்பாமல் இருப்பரோ?

குறிப்புரை :

`விரும்பவே செய்வர்` என்பதாம், ``ஈசனை`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டுக. அங்ஙனம் கூட்டவே, முத்தி முதலிய மூன்றும் ஈசனையே குறித்தனவாம். தலை - இடம். இங்கு உள்ளிடம். பால் இனித்தலைக் குறித்தற்கு, ``நெய்த்தலைப் பால்`` என விதந்தோதினார். ``அங்கு`` என்றது துதியை. ``அது`` பகுதிப் பொருள் விகுதி. ஏகாரம் வினாப் பொருட்டாய், அதன் எதிர்மறையைக் குறித்தது. விரும்புதலுக்கு `அறிஞர்` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. அறிஞர் விரும்பாதொழியார்` என்றதனால் `நீவிரும் அதனையே செய்மின்கள்` என உலகர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று.

பண் :

பாடல் எண் : 14

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகமெத் தனையென் றொருவருந் தேறார்
பவமத்தி லேநின்று பாய்கின்ற தல்லால்
சிவமத்தை ஒன்றும் தெளியகில் லாரே.

பொழிப்புரை :

`ஒவ்வொரு பொருளையும் அதனதன் தன்மையில் நிற்குமாறு நிறுத்தி நடத்துபவனாகிய சிவபெருமான் அனைத்து உயிர்களையும் வீடு பெறுவிக்க எத்தனை யுகங்களை வரையறுத் திருக்கின்றான்` என்பதை அறிய வல்லவர் ஒருவரும் இல்லை, இந்நிலையில் அவரவரும் அச்சிவபரம் பொருளை உள்ளவாறு உணரும் நெறியால் உணர்ந்து பிறவியினின்றும் நீங்குதலையே ஒவ்வொருவரும் செய்தலே தக்கதாய் இருக்க, ஒருவரும் அதனைச் சிறிதும் செய்யாது, பிறவிக் கடலிலே குதித்து அதன் கரையைக் காணாது அமிழ்கின்றனர்.

குறிப்புரை :

`அதனை அவர்கள் விட்டொழிதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். வலியுறுத்தற் பொருட்டுப் பின்னிரண்டு அடிகளில் எதிர் மறையாற் கூறப்பட்டது. தெளிவின் பொருட்டு உடன்பாட்டால் உரைக்கப்பட்டது. `பாய்தல்` என்றது குறிப்புருவகம். ``பவமது, சிவமது`` - என்ற `அது` இரண்டும் பகுதிப் பொருள் விகுதிகள். `பவ மதிலே, சிவமதை` என்பன இடையே ஒற்று விரித்தல் பெற்றன. இம் மந்திரம் உயிரெதுகை பெற்றது.

பண் :

பாடல் எண் : 15

இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை
நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.

பொழிப்புரை :

இவ்வுலகில் தமக்கு வருகின்ற நன்மை, தீமை இரண்டினையும் அவை ஒரு நிகரனவாக நிற்க வைக்கும் காலத்தில் மாணிக்க வண்ணனாகிய சிவபெருமானை, அவனது ஞானத்திலே விளங்கும் தனியொரு பொருளாக உணர்ந்து அவ்வாறான அவனது பெருமையைச் சொல்லி நினைக்கின்ற தூய மனம் உடையவர்க்கன்றி, அவனை உணர இயலாது.

குறிப்புரை :

இன்று சில இடங்களில் `அங்கு, இங்கு` என்பன அங்கிட்டு, இங்கிட்டு, என வழங்குதல் போல் முற்காலத்தில்` இங்கு` என்பது` இங்கித்தை` எனச் சில இடங்களில் வழங்கிற்று என்பது, ``எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும்`` என்னும் சிவஞான சித்தி (சூ. 10.6)ஆட்சியாலும் விளங்கும். பின்னர், ``அகிதம்`` என வருதலால் ``வாழ்வு`` என்றது இதத்தையாயிற்று. துஞ்சுதல் - தங்குதல். முதனிலைத் தொழிற் பெயர். `ஒப்பத் தங்கிய காலத்து` என ஓதற்பாலதனை, `தங்குதல் ஒத்த காலத்து` என்றார். நன்மையையும் தீமையையும், ஒருபடித்தாக நோக்குதல் இருவினையொப்பு வந்த காலத்தன்றிக் கூடாது. இருவினை ஒப்போடு உடன் நிகழ்வன மல பரிபாகமும் சத்திநிபாதமும். இம் மூன்றும் எய்தப் பெற்றவர் இறைவனைத் துதித்தலே உண்மையுணர்ந்து துதித்தலாக ஏனையோர் துதிப்பனவெல்லாம் ``ஊரா மிலைக்கக் குருட்டா, மிலைத்த`` (தி.8 திருச்சதகம், 87)வாறாம் ஆதலின், இருவினையொப்பு வாய்த் தோர்க்கன்றித் தூய்மணி வண்ணனை ``நாட ஒண்ணாது`` என்றார். எனவே, `முன் மந்திரத்திற் கூறிவயாறு ஏனையோரைச் சொல்லி என்ன பயன் `என்றதாயிற்று. ``என - என்று சொல்லி என்க. `விஞ்ஞானத்து` என்பது, `விஞ்சானத்து` என மருவிப் பின் எதுகைக் கேற்பத் திரிந்து நின்றது. விஞ்ஞானம் - மேலான ஞானம்; பதி ஞானம். விகிர்தன் - ஏனை எல்லாப் பொருளினும் வேறுபட்ட தன்மையுடைவன். அத்தன்மை யாவது பாச, பசு, ஞானங்களால் பற்றவாராமை. ``நினை நஞ்சற்றவர்`` என்பது வினைத்தொகை. நஞ்சு - தீமை. அஃது இங்கு மனக்குற்றத்தைக் குறித்தது. `மணி` என்பது நீலமணியையேயன்றி மாணிக்கத்தையும் குறித்தல் வழக்காதல் அறிக. இதன் கண் இன எதுகை வந்தது.
முதற்றொட்டு இதுகாறும் வந்த பதினைந்து மந்திரங்களாலும் யாவர்க்கும் பொதுவாகச் சிவவழிபாட்டினையே வலியுறுத் துணர்த்தினார். இனிவரும் நான்கு மந்திரங்களால் அச்சிவன் குருவாகி வந்து தன்னைக் காட்டப் பெற்றார்க்கு அவன் அக் குருவாய் நின்றே அருள்புரிவன் ஆதலின் அவரை நோக்கி, அக் குருவழிபாட்டினை வலியுறுத்துணர்த்துகின்றார். யாவருக்கும் சிவன் பொதுவாய்த் தாபர சங்கமங்களில் நின்று அருள்புரியினும் சிறப்பாக அவன் யார் யார்க்கு எவ்வெவ்வுருவில் நின்று அருள் புரிந்தானோ அவர்க்கு அவ்வுருவே சிவவடிவாம் என்பது உணர்க. ஆளுடைய பிள்ளையார் எங்கும் சென்று சிவனைக் கண்டு வழிபட்டாராயினும் திருக்கழுமலத் திருத்தோணி வீற்றிருந்தருளும் பெருமானையே தாம் சிறப்பாகக் கொண்டு வழிபட்டமை முதலியன இதற்குச் சான்றாகும். இவ்வாறான சிறப்பு வடிவங்களே அவரவர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி என்க.

பண் :

பாடல் எண் : 16

பஞ்சமும் ஆம்புவி சற்குரு பால்மன்னி
வஞ்சக ரானவர் வைகில் அவர்தம்மை
அஞ்சுவன் நாதன் அருநர கத்திடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

பொழிப்புரை :

தமக்கு ஞானத்தை அளித்த நல்லருள் ஆசிரியரிடத்து அவரையும் ஏனைப் பலரொடு ஒப்ப நினைக்கும் நேர்மையில்லாத மனத்தையுடைய மாணாக்கர் நன்மாணாக்கருள் தாமும் ஒருவராய் இருந்து அவர்கள் போல ஒழுகிவருவாராயின் அவரது கரவொழுக்கத்தால் நாடு பஞ்சத்தை எய்தும். அவரை அணுகச் சிவனும் அஞ்சுவான். அதனால் அவரைப் பின்பு அவன் மீளுதற்கரிய நரகத்தில் இடுவான். நேர்மையான மாணாக்கரைக் கண்ணால் கண்டவர்கட்கும் நற்பேறு உண்டாம்.

குறிப்புரை :

``ஆம்புவி`` என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. ``பஞ்சமும் ஆம்`` என்பதனை, ``வைகில்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. உம்மை, `ஏனைத் தீங்குகளே யன்றி` என இறந்தது தழுவி நின்றது. ஈற்றடி, இதற்கு ஏதிராக, நன் மாணாக்கர் உள்ள நாடு நலம் பல எய்துதலை உணர்த்தியவாறு எனவே, இதனால் குருவை நம்மனோரில் ஒருவராக எண்ணுதலின் குற்றமே இனிதுணர்த்தப் பட்டதாம். `செஞ்செவே நிற்போர், என்பது, ``செஞ்ச நிற்போர்`` என மருவி நின்றது. செஞ்செவே நிற்றல், மிக நேர்மையாக நிற்றல்.

பண் :

பாடல் எண் : 17

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலும் ஆமே.

பொழிப்புரை :

அளவற்ற தேவர்கள் சிவனையை நேராகச் சென்று கண்டு வழிபட்டனர். ஆயினும் அவர்கள் பின்பு துன்பம் இன்றி வாழ்ந்ததாக வரலாறில்லை. பின்பும் துன்பம் எய்தியதாகவே வரலாறுகள் உள்ளன. ஆகையால், என்றும் துன்பமில்லா வாழ்வைப் பெறும் வகையில் சிவனை வழிபடும் முறையைத் தெரிவிக்கின்ற குருவை வழிபட்டால், அவரது அருளால் அவ்வழிபாட்டில் நின்று துன்பம் இல்லாத நிலையை அடைதல் கூடும்.

குறிப்புரை :

``புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மே;இந்தப் பூமி
சிவன்உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
... ... ... ... ... திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்``
-8 திருப்பள்ளியெழுச்சி, 10
எனவும்,
``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்``
-சிவஞானசித்தி. சூ. 2-92
எனவும், பிறவாறும் போந்த திருமொழிகளால், `தேவரும் நிலையான இன்ப வாழ்வை எய்துதற்கு மண்மேல் மானுடராய்ப் பிறந்து ஞான குருவால் ஆட்கொள்ளப்பெறல் வேண்டும்` என்பது தெளிவாதல் போலவே இந்நாயனாரும் தேவர், குருவை வழிபடாமல் சிவனை வழி பட்டுப் பெரும்பயன் எய்தாமையை எடுத்துக் காட்டிக் குரு வழிபாட்டினை வலியுறுத்தினார். `குரு வழிபாடே ஞான வழிபாடாம்` என்பது கருத்து.
``அங்கு`` இரண்டில் முன்னது `அத்தேவர்பால்` எனவும், பின்னது, `வழிபட்ட இடத்து` எனவும் கூறியபடி. ஆமாறு - பயனால் உயர்ந்த நிலை. ஒன்றில்லை - சிறிதும் இல்லை. பின்னர் வந்த ``ஆமாறு`` என்பதற்கு, `பயனால் உயரும் முறை` என உரைக்க. உம்மை உயர்வு சிறப்பு.

பண் :

பாடல் எண் : 18

நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலின் கண்டு
குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால்
பரம் என்றல் அன்றிப் பகர்வொன்று மின்றே.

பொழிப்புரை :

மக்களே யாகுக; அவரினும் மேற்பட்ட தேவரே யாகுக; எல்லோரும் பாசத்துட்பட்ட பசுக்களேயாய் வினைவழிவந்து நீங்கிப் போதலின், `குரு` எனப்படுபவன் அந்நிலையை உணர்ந்து பாசத்தின் நீங்கி நிற்றலால், `ஞானி` என வேறுவைத்து எண்ணப் படுதலால், அவனை, `பதி` எனவே கூறுதல் வேண்டுமன்றி, வேறு சொல்லுதற்கில்லை.

குறிப்புரை :

அஃதாவது, `பசு` என்பதற்கில்லை என்பதாம். எழுவகைப் பிறப்புக்களுள் உயர்ந்தவை மக்கட்பிறப்பும், தெய்வப் பிறப்புமே யாகலின் அவற்றையே சிறந்தெடுத்துக் கூறினார். கூறவே, ஏனைப் பிறப்புக்களும் அவற்றுள் அடங்கின. எனவே, உயிர் வகைகளாக நாம் அறிவன யாவும் பசுக்களேயாதலால் அவை நிலை யான இன்பத்தைப் பெறவிரும்பும் தமது விருப்பம் நிறைவேறாமல் துன்பப்பட்டு உழலவே காண்கையாலும், `குரு` எனப் படுபவன், அவ்வாறன்றி, ``நாம் ஆர்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் ஏமாப்போம்; பிணியறியோம்; இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை`` (தி.6 ப.98 பா.1) என்று சொல்லிச் செம்மாந்து இன்புற்றிருக்கக் காண்கையாலும், அவனை ஏனையோரில் ஒருவனாக வைத்து, ``பசு`` எனல் கூடாமையும், அவ்வியல்பு பதிக்கன்றிப் பிறர்க்கு இன்மையால் ``பதி`` என்றலே ஏற்புடையதாதலும் விளங்கும் என்றவாறு. `கழிதலின் குரு என்பவன் (அவற்றைக்) கண்டு கோதிலன் ஆனால் ஞானியாதலின் பதி என்றல் அன்றிப்பகர்வு ஒன்றும் இன்றே` என இயைக்க, `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, நீ இப்படிச் செய்வதனால், நான் உன்னுடன் இருக்க இயலாது` என்பது போல. இதனால், `குரு சிவனே` எனப்படுதற்குக் காரணத்தை விளக்கியவாறு, இதனானே ``குருவே சிவம்`` என்றல் மலம் நீங்கித் தூயராய்ச் சிவன் அவரெனத் தானென வேறாகாது அவரே தானாய் அவரிடத்துத் தயிரில் நெய்போல விளங்கி நிற்கப் பெற்ற நிறைஞானியரை நோக்கியன்றி, வேடமாத்திரத்தால் `குரு` என நிற்பாரை நோக்கியன்று என்பதும் இனிது விளங்கும்.

பண் :

பாடல் எண் : 19

ஆட்கொண் டவர்தனி நாயகன் அன்புற
மேற்கொண் டவர்வினை போயற நாடொறும்
நீர்க்கின்ற செஞ்சடை நீள்தன் உருவத்து
மேற்கொண்ட வாறலை வீவித்து ளானே.

பொழிப்புரை :

ஒப்பற்ற தலைவனாகிய சிவன் தான் குருவாகி வந்து ஆட்கொள்ளப் பெற்றவர்களுள் பின்னும் நாள்தோறும் அக்குரு வடிவின்கண் அன்பு மேலும், மேலும் மிகச் செய்கின்றவரது வினைகள் சேய்மைக்கண் விலகிக் கெடும்படி, தனது இயற்கை உருவத்தில் நீண்டசடையினிடத்தே கங்கையை அடக்கி வைத்திருப்பது போல் அவற்றின் ஆற்றலை அடக்கி அவரிடத்தே விட்டு நீங்காதிருப்பான்.

குறிப்புரை :

`ஆட்கொண்டவர்`` என்றது, `ஆட்கொள்ளப் பட்டவர்`` எனச் செயப்பாட்டு வினைப்பொருள் தந்து நின்றது. ``அங்கணர் ஒலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு`` (தி.12 தடுத்தாட்கொண்ட பு.1) என்பதிற் போல, `ஆட்கொண்டவருள்` என `உள்` என்னும் உருபு விரிக்க, ``தனிநாயகன்`` என்பதை முதலிற் கொள்க, நாள்தொறும் உற மேற்கொண்டவர். நீர்போல நெகிழ்ந்துபோதலை, நீர்த்துப் போதல்` என்னும் வழக்குப் பற்றி, ``நீர்ததும்புகின்ற சடையை நீர்க்கின்ற செஞ்சடை`` என்றார் ``ஆறு`` என்பது உவம உருபாய் நின்றது. சிவனது உருவத்தை இங்கு ``நீர் உருவம்`` என்றது, பகீரதன் பொருட்டு ஆகாயத்தினின்றும் குதித்த கங்கையை உடனே தாங்கி நின்ற கோலம் நோக்கியாம். உயிர்களைத் தாக்கி மெலியச் செய்கின்ற வினைகளது ஆற்றல் கரையை மோதிக் கரைக்கின்ற கடல் அலையோடு ஒத்தல் பற்றி அவையாக உருவகம் செய்தார். ``ஆகாய கங்கையைத் தனது சடைகளுள் ஒன்றின் உரோமத்தின் நுனியில் புல்நுனியில் நீர்போல நிற்குமாறு அடக்கிய பெருமானுக்கு வினையின் ஆற்றலை அடக்குதல் அரிதன்று` என்றற்கு `நீள்தன் உருவத்தின் நீர்க்கின்ற செஞ்சடை மேற்கொண்டவாறு வீவித்துளான்` என்றார். வீதலுக்குப் பிற வினை வீவித்தல், வீவித்தான்` என்றே ஒழியாது ``வீவித்துளான்`` என்றார் உடம்புள்ள துணையும் பிராரத்தம் விளைந்து கொண்டே விருத்தலின் அதனை மெல்வித்தற் பொருட்டு அவன் இமைப் பொழுதும் நீங்காது உடன் நிற்றல் பற்றி, சிவன் குருவாகி வந்து அருள்செய்யும் பொழுதே சஞ்சிதம் வறுத்த விதைபோலக் கெட்டொழியினும், பிராரத்தம் உடம்போடு ஒட்டி நிகழ அந்நிகழ்ச்சி உடல் ஊழாய் நிற்றல் அல்லது வரும் பிறவிக்கு வித்தாக ஆகாமியத்தைத் தோற்றுவியாது கழிதற் பொருட்டுத் தன்னால் ஆட்கொள்ளபட்டவருள் தொடர்ந்து அன்பு செய்பவரிடம் விளங்கி முன் நிற்பான் என்பது உணர்க. இங்ஙன மாகவே, சிவன் குருவாகி வந்து ஆட்கொள்ளப்பட்ட பின்பும் குருவையே சிவனாகக் கண்டு அன்புசெய்து வழிபடுவார்க்கன்றி ஏனையோர்க்கு முன்போல ஆகாமியவினை விளைந்து அது சஞ்சிதம் ஆக, மீட்டும் பிறவியே விளையும் என்பது விளங்கும். இதுபற்றியே,
தன்னை அறிவித்துத் தான்தானாச் செய்தானைப்
பின்னை மறத்தல் பிழையலது.
என்றார் மெய்கண்ட தேவரும் (சிவஞானபோதம், இறுதி வெண்பா). பிழையலது - தப்பமுடியாத குற்றம்; உய்தியில் குற்றம். பிழைத்தல் - தப்புதல் இதனால், ``குருவான் ஆட்கொள்ளப்பட்டார் அதன்பின் குருவையே சிவமாகத் தேறி வழிபட்டு வருதல் இன்றியமையாதது` என்பதும் ``அங்ஙனம் வழிபடாதவழிப் பழையே நிலையே ஆய்விடும்`` என்பதும் கூறப்பட்டன.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்
பிறிவினை யறியா நிழலது போல
முன்பின் னாகி முனியாது அத்திசை
என்பு நைந் துருக, நெக்குநெக் கேங்கி
அன்பெனும் ஆறு கரையது புரள,
நன்புலன் ஒன்றி, ``நாத`` என் றரற்றி

உரைதடு மாறி, உரோமஞ் சிலிர்ப்பக்
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்,
கண்களி கூர, நுண்துளி அரும்பச்
சாயா அன்பினை நாடொறுந் தழைப்பவர்
தாயே யாகி வளர்த்தனை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல் - 75-87
என்னும் திருமொழியும் இங்குக் கூறிய வழிபாட்டு அநுபவ வழி எழுந்தது என்க.
குருலிங்க சங்கமம்` என்னும் மூன்றன் வழிபாடு ஞானத்தைப் பெறுமுன்னர் அதற்குச் சாதனமாயும் பெற்றபின்னர் அதனைநிலை பெறுத்துவனவாயும் இருத்தலின் அவையே யாவராலும் செயற்பாலன என்பதை வலியுறுத்தியவர், அவற்றுள் குருவழிபாடு ஞானியர்க்குத் தலையாதலை எடுத்துக் கூறி, இத்தந்திரத்தை முடித்தார். இதனுள் இன எதுகையும், ஆசெதுகையும் வந்தன.
சிற்பி