எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்


பண் :

பாடல் எண் : 1

ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

பொழிப்புரை :

மேற்கூறிய அவத்தைகளில் மத்தியாலவத்தை ஐந்தும், கீழாலவத்தைச் சாக்கிரமும் நிகழும் இடம்புருவநடு, அவற்றுள் மத்தியா லவத்தைச் சாக்கிரமும் ஒன்றிலேதான் எல்லாக் கருவிகளும் குறை வின்றிச் செயற்படும். மற்றையவற்றில் சிற்சில கருவிகள் செயற்படாது நிற்கும். அவற்றைப் பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளாகக் கூறுவர். மத்தியாலவத்தையை விட்டு, ஆன்மாக் கீழாலவத்தையில் சாக்கிரத்தை அடைதற்குக் காரணம் ஆன்ம தத்துவங்களில் சிலவும், தாத்துவிகங் களில் சிலவும் குறைதலேயாகும். அந்நிலையில், கீழாலவத்தைச் சாக்கிரத்தில் செயற்படும் கருவிகள் முப்பத்தைந்து` என்று சொல்லப் படுகின்றது. `சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்` என்பது சிவஞான சித்தியார்.3 முப்பத்தைந்தில் தத்துவம் பதினைந்து; தாத்துவிகம் இருபது. ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று. இவை தத்துவங்கள், ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன் மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து. இவை தாத்து விகங்கள். `முப்பத் தைந்து` எனத் தொகை கூறி வரையறுத்தது பிரிந்தும், கூடியும் வரும் நிலைமையுடைய கருவிகளை நோக்கியேயாம். ஆகவே, பிரிவின்றி எஞ்ஞான்றும் கூடியே நிற்கும் கருவிகள் இந்த அவத்தை பேதங்களில் நீங்குவன அல்ல. அவை வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்துமாம். `புருடன்` என்பது ஒரு தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஐந்தும் கூடிய நிலையேயாம். இவை ஐந்திற்குக் காரணம் `மாயை` என்னும் தத்துவம். எனவே, புருடன்` என்றதனால், மேற்கூறியவற்றோடு சிவ தத்துவமும் பெறப்படும். ஆகையால் `முப்பத்தைந்து` எனச் சுருக்கமாகக் கூறியபோதிலும் `நாற்பத்தாறு` என்பதே உண்மையாம். எனவே, கீழாலவத்தை தொடங் குங்கால், தொண்ணூற்றாறு கருவிகளில், நீங்குவன ஐம்பதே` என்பது விளங்கும். ஐம்பதில் தத்துவம் பத்தும், தாத்துவிகம் நாற்பதும் ஆகும். தத்துவம் பத்தாவன மாபூதங்கள் ஐந்து; தன்மாத்திரை ஐந்து, தாத்துவிகம் நாற்பதவான. மேற்கூறிய சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து ஆகிய இருபது தவிர மற்றவையாம்.

குறிப்புரை :

இம்மந்திரத்தில், `மத்திமை` என்றது புருவ நடுவை. `சாக்கிரம் என்றது, அதிகாரத்தால் கீழாலவத்தைச் சாக்கிரமாயிற்று. `ஐயைந்து` என்றது, பிராணாதி வாயுக்கள் பத்தினையும் விடுத்து, அஃது, ஒன்று இடைவிட்டு வரும் மந்திரத்தால் விளங்கும். `ஐயைந்தால் என உருபு விரித்து மத்திமையில் ஐயைந்தால் சாக்கிரம் ஆனது` என இயைத்துக் கொள்க.
இனி, இரண்டாம் அடியில், `மேற்கூறிய ஐயைந்தில் விடயங் களாய் நிற்கும் கருவிகள் பதினான்கினால் கண்டத்தில் சொப்பனம் நிகழும் என்பர்` எனக் கூறினார் `விடயங்களாய் நிற்கும் கருவிகள்` என்றதனால், `அவ்விடயங்களை அறிகின்ற கருவிகள் சாக்கிரத் தோடே நின்றுவிடும்` என்பதாயிற்று. அவையாவன ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்துமாம், புருடன் கருவியாகாமை பற்றி அதனை நீக்கி, ``பன்னான்கு`` என்றார். ஆகவே, சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து, அந்தக் கரணம் நான்கு புருடன் ஒன்று என இருபத்தைந்து கருவிகளால் கண்டத்தானத்தில் சொப்பனம் நிகழும் என்றமை அறிக.
மூன்றாம் அடியில், `இதயம்` என்பது இரட்டுறமொழிதலாய், முன்னர்ச் சித்தத்திற்குப் பரியாயப் பெயராயும், பின்னர் இருதயத் தானத்தைக் குறிப்பதாயும் இருபொருள் தந்து நின்றது. ஆகவே, `புருடன், சித்தம்` என்னும் இருகருவிகளாலே இருதயத் தானத்தில் சுழுத்தி நிகழும்` எனக் கூறியது காண்க. சுழுத்தியைச் செய்யுள் நோக்கி, `சுழுனை` என்றார். முதற்றொட்டே வாயுக்களைக் கூறாமை யால், இங்கும் கூறிற்றிலர் ஆதலின் `பிராணன்` என்னும் ஒரு வாயு மட்டும் சுழுத்தியில் நிற்கும் என்பது அறிக. அவ்வாயுவைக் கூட்டக் கருவிகள் மூன்றாகும். `பொய் கண்டிலாத` என்றது, `விடயங்களை நன்கு உணர்ந்து வருகின்ற` என்றபடி. எனவே ஈற்றடியில் `மெய்கண் டவன் என்றது அப்புருடனை ஆயிற்று. ஆகவே, அஃது ஒன்றினாலே உந்தித்தானத்தில் துரியம் நிகழும்` என்றதாயிற்று. இங்கும் பிராணன் உண்டு. ஆகவே, சுழுத்தியோடு நீங்கியது சித்தம் ஒன்றுமேயாயிற்று.
துரியத்தைக் கடந்த துரியாதீதத்தில் தத்துவம் பற்றிக் கூறற் பாலது இல்லாமையால் அதனைக் கூறாதொழிந்தார். ஆகவே, புருடன் ஒரு காலத்தும் நீங்குதல் கூடாது ஆகையால், `அதீதம்` பிராணன் ஒன்றும் நீங்கப் புருடன் மட்டும் இருப்பதாயிற்று. அதற்கு இடம் மூலாதாரம் - என்பதும் கீழாலவத்தை இறுதியில் உந்தியைக் கூறியொழிந்ததனால் விளங்கும். `மெய்கண்டவனால் உந்தியில் துரியம் ஆகும்` என்க.
இதனால், கீழாலவத்தை ஐந்தன் இயல்பும் தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும்
செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களாலும் (எனவே, தாத்து விகம் அறுபதும் உளவாம் ஆதலின் தொண்ணூற்றாறு கருவிகளாலும்) நிரம்பிய அறிவாய்க் கீழாலவத்தைக்கு முன்னே உள்ள மத்தியா லவத்தையில் சாக்கிரம் நிகழும். அதுபொழுது சிவதத்துவம் ஐந்து உள்ளனவாம். அதன் பின் மத்திய சொப்பனம், மத்திய சுழுத்தி, மத்திய துரியம், மத்திய துரியாதீதம் - என்பவை முறையே சிவ தத்துவங்களில் ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு குறைய நிற்கும் தத்துவங்கள் நான்கு, மூன்று, ஒன்று, ஆகுமாற்றால் நிகழும் நீங்குவன சுத்த வித்தை முதலாகவாம் ஆதலின், இறுதியில் நிற்பது `சிவம்` என்பதொன்றுமே யாம். தத்துவங்கள் செலுத்துவனவும், கலை முதலிய ஐந்தும் செலுத்தப் படுவனவும் ஆதலின், செலுத்துவன நான்கும் நீங்கிய பொழுது செலுத்தப்படுவனவற்றிலும் நான்கும் நீங்கும். அவை, `அராகம், வித்தை, கலை, நியதி - என்பன. எனவே, எப்பொழுதும் நீங்காது நிற்பன `சிவம்` என்னும் தத்துவமும், அதனால், செலுத்தப்படுகின்ற காலமும் ஆம். ஆகவே, மத்திய துரியாதீதத்தில் நிற்பன அவை மட்டுமேயாம். இவற்றை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று` எனப்பட்டன சிவ தத்துவங்களின் எண்ணிக்கையே. வித்தியா தத்துவம் ஏழில் புருடன் தனித்தத்துவம் அன்று. மாயை காரணமாய் நிற்பதன்றிச் செயற் படாது. அவையொழிந்த ஐந்துமே செயற்படுவன ஆதலின் சிவ தத்துவம் ஐந்தும் அந்த ஐந்தையே செலுத்தி நிற்கும். செலுத்தும் முறை யாவது, சிவம் - காலம், சத்தி - நியதி. சாதாக்கியம் - கலை. ஈசுரம் - வித்தை. சுத்தவித்தை - அராகம் என்க. செலுத்துவனவற்றில் நீங்குவன சுத்தவித்தை முதலாகவும், அதற்கேற்பச் செலுத்தப்படுவன நீங்குதலும் அராகம் முதலாகவுமாய் நிகழும். தத்தவங்களை எண்ணுங்கால் தோற்ற முறை பற்றி எண்ணுதல் வழக்காதல் பற்றி `நியதி முதலாக` என்றாராயினும் நீங்கும் முறை அராகம் முதலாகவே என்க. செலுத் துவன செலுத்தப்படுவனவற்றின் இயைபை வேறு கூறுவாரும் உளர்.
`இரண்டொன்று` என்றது இரட்டுற மொழிதலாய், முன்னர் உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையாய் `மூன்று` எனவும், பின்னர் உம்மைத் தொகையாய் `இரண்டும், ஒன்றும்` எனவும் இருபொருள் தந்தது. நியதி முதல் - நியதி முதலிய தத்துவங்கள். `அவை ஆகும்படி சிவம் ஈறாய் அப்பதி ஆகும்` என்க. பதி - சிவ தத்துவம்.
கீழாலவத்தையில் நிகழும் சொப்பனம் முதலியவற்றை, `இஃது இத்தன்மையது` என யாவரும் தாமும் உணரவும். பிறர்க்கு உணர்த்தவும் கூடிய முறையில் அவை இனிது விளங்கக் கால நீட்டிப் புடன் அன்றாட அனுபவமாய் நிகழும். மத்தியாலவத்தை அவ்வா றின்றி நன்கு விழித்திருக்கும்பொழுதே மிக விரைவில் நினைப்பும், மறப்புமாய் மாறி மாறி நிகழ்வன ஆதலின் அவற்றை யாவரும் தாமும் இனிதுணர்தல் அரிது; பிறர்க்கும் உணர்த்துதல் அரிது. இதன் வேகத்திற்குக் கறங்கோலையை (கற்றாடி ஓலையை) உவமையாகக் கூறுவர். அதபற்றி அருணந்தி சிவாசாரியரும்,
``அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும்
செறிதரும்; கரணந் தன்னில் செயல்தொறும் கண்டுகொள்நீ``*
என்னும் அளவே கூறிச் சென்றார். ஆயினும் சிவாக்கிரர் முதலியோர் கைப்பொருளைத் தொலைத்துவிட்டவன் அத்துன்பமிகுதியாலும், மற்றும் புத்திர சோகம் முதலியவற்றாலும், மூர்ச்சை எய்துதலை `மத்திய துரியாதீதம்` - என வைத்து, அதினின்றும் சிறிது சிறிதாகத் தெளி வடைந்து பழைய நிலையை எய்தும் வரையிலான நிகழ்ச்சிகளை மத்திய துரிய, மத்தி சுழுத்தி, மத்திய சொப்பன, மத்திய சாக்கிரா வத்தைகளாக வகுத்துக் காட்டுவர். ஆயினும், அவையெல்லாம் ஓரளவு தரும் விளக்கங்களேயன்றி, `அவைதம் மத்தியாலவத்தை` எனக்கொண்டு விடுதல் கூடாது. மத்தியாலவத்தை விழிப்புநிலையில் நாம் பொருள் களை உணர்ந்து நிற்கும்பொழுதே நிகழ்வனவாம். அவற்றுள் நினைப்பு, `சகலத்தில் சகலம் என்றும், மறப்பு, `சகலத்தில் கேவலம்` என்றும் சொல்லப்படும். சகலம் `பகல்` எனவும், கேவலம் `இரவு` எனவும் உருவகித்து வழங்கப்படும். ஆகவே, நினைப்பும், மறப்பும் இல்லாத சுத்த நிலை `இராப் பகல் அற்ற இடம்` எனக் கூறப் படுகின்றது.
இதனால், மத்தியாலவத்தைகளின் இயல்பு தொகுத்துக் கூறப்பட்டது. `அவத்தைகளின் பொது இயல்புகள் முதற்கண் ஒருங்கு வைத்துக் காட்டப்படவேண்டும் என்னும் கருத்தினால் இவை இங்குக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.

பொழிப்புரை :

கேவலம் வருமாறு செய்கின்ற அந்தச் சாக்கிரா வத்தையானது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அவற்றின் விடயங்கள் பத்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று - என்னும் முப்பத்தைந்து கருவிகளால் நிகழும்.

குறிப்புரை :

ஞானேந்திரிய விடயங்கள் முன்பு தன் மாத்திரை நிலையில் இருந்தமை பற்றி அவற்றை, `தன்மாத்திரை` என்கின்றவர், அவற்றோடொத்த கன்மேந்திரிய விடயங்களையும் ஒருங்கு கூட்டி, `தன்மாத்திரை` எனச் சுருங்கக் கூறினார். வாயுக்களில் பிராணனும், உதானனும் சொல்லொலியாயும் தோன்றுதல் பற்றி ஏனை வாயுக் களையும் `மந்திரமாகும்` என்றார். `பந்தம்` என்றது கேவல நிலையை. `சக்கரப்பாலது` என்பது, யாதும் அறியாதவர் தாம் அறிந்தவாறே திரித்துக்கொண்ட பாடமாகும். பால் - பகுதி அது, பகுதிப் பொருள் விகுதி. `ஆன்மாவும்` என்பதன் ஈற்றில், `ஆகிய முப்பத்தைந்தும்` என்னும் தொகைச் சொல் விரித்து, `முப்பத்தைந்தாலும் சாக்கிரப் பால் ஆகும்` எனமுடிக்க` `சாக்கிரமாவது இங்கு எடுத்துக்கொண்ட கீழாலவத்தைச் சாக்கிரம்` என்பது விளங்குதற்பொருட்டு, `பந்த அச்சாக்கிரம், என்றார்.
இதனால், முதற்கண், `மத்திமை யானது சாக்கிரம்` எனக் கூறி யதன்கண் செயற்படும் கருவிகளாவன இவை - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாரது பொன்மைப் பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை யுடையது
வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.

பொழிப்புரை :

(அவத்தைக்குக் காரணமான கருவிகளுள் மிக எளிதில் விளங்குவனவாகிய ஐம்பெரும் பூதங்களில்) நிலம் பசும் பொன்னிறத்தையும், நீர் வெண்மை நிறத்தையும், நெருப்புச் சிவப்பு நிறத்தையும், காற்றுக் கருப்பு நிறத்தையும், வானம் புகை நிறத்தையும் உடையன. இவற்றின் அதிதேவர்கள் இவைபோலப் புலனாகாது மறைந்து நிற்பார்கள்.

குறிப்புரை :

`அதிதேவர்கள்` என்பது ஆற்றலால்கொள்ளக் கிடந்தது. தத்துவங்களினின்றும் விடுபடுதற்கு அவற்றை வழிபடுதலும் ஒரு முறையாகும். அதன்பொருட்டு அவற்றிற்கு வடிவம் நிறம் முதலியன ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. அவ்வழிபாட்டிற்குப் பயன் தருபவர்கள் அவற்றின் அதிதேவர்களேயாதல்பற்றி அவர்களை இங்கு உடன் கூட்டி, `மறைந்து நின்றார்களே` என்றார். அதனானே, `இது வழிபாட்டு முறை` என்பது பெறப்படும். சித்தாந்த சாத்திரங்களில் நிறங்களோடு வடிவம் முதலியன கூறப்படுதல் காண்க. பசுமைப் பொன்மை` என மொழி மாற்றியுரைக்க. மூன்றாம் அடியில் தளை மயங்கி வந்தது. காரது மாருதம் - மேகங்களோடு சேர்ந்து வீசும் காற்று. ஈற்றடி உயிரெதுகை பெற்றது.
இதனால் கருவிகளுள் சிலவற்றிற்குக் கூறற்பாலன சிலகூறப்பட்டுள்ளன.

பண் :

பாடல் எண் : 5

பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும்
ஏதம் படச்செய் திருந்த புறநிலை
ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு)
ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

பொழிப்புரை :

தத்துவம் முப்பத்தாறனுள் பூதம் ஐந்து, ஞானேந் திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப்பதினைந்தும் புறக்குற்றங் களில் மூழ்கச் செய்கின்ற புறக்கருவிகளாம். ஆறு ஆதாரங்களும், ஒரு வகை மாயையாகச் சொல்லப்படுகின்ற பிரகிருதிகுணங்களும் அவத் தைக்கு ஏதுவாகும். அந்நிலையில் ஐந்தவத்தைகளுள் முதலாவதாகிய சாக்கிராவத்தையில் தொண்ணூற்றாறு கருவிகளும் தொழிற்படுவன வாம்.

குறிப்புரை :

எனவே, இது மத்தியசாக்கிராவத்தையாம் ஆறா தாரங்கள், முக்குணங்கள் இவையும் சில இடங்களில் தாத்துவிகமாகச் சொல்லப்படுகின்றன. `மலம்` என்றது மாயா மலத்தை, `கருவி தொண்ணூற்றாறு என்றது, எல்லாக் கருவிகளும் `குறைவின்றிச் செயற்படும்` என்றபடி.
இதனால், மத்தியாலவத்தையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை
படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை :

மேற்கூறிய மத்தியலாவத்தையின் இயல்பைக் கூறுமிடத்து உயிரினது செயற்பாடு, அனைத்துச் சுற்றங்களும் சூழ அரசன் உலாவருதல் போன்றதாகும். யானை இருபத்தைந்து, (இவை ஆன்மதத்துவங்கள்) குதிரை ஐந்து, (இவை காமம், வெகுளி, உலோபம், யோகம், மதம், என்னும் உணர்ச்சிகள்) அமைச்சர் நால்வர். (இவை நால்வகை வாக்குக்கள்) புறஞ் சூழ்ந்து வரும் சேனைகள் காலாட்படைகள் (இவை வித்தியா தத்துவங்களும், சிவ தத்துவங்களும்) சென்று சென்று நிற்கும் வாயில்கள் ஒன்பது. (இவை நவத் துவாரங்கள்) இங்ஙனமாக அறிக.

குறிப்புரை :

சொல்லாது விடுத்த தாத்துவிகங்களையும் உபலக் கணத்தால் ஏவலர் முதலியவராகக் கொள்ளல் வேண்டும். ஞானா மிர்தத்திலும்l கருவிகள் அரசச் சுற்றங்களாக உருவகித் திருத்தல் அறியத்தக்கது. இடம், அதன்கண் செயற்படும் கருவியைக் குறித்த ஆகுபெயர். படுதல் - பொருந்துதல். பரசேனை - வேறு நின்று சூழும் சேனை. `மத்திமை` என்பதின்பின் `ஆக` என்பது வருவித்து அதனை எண்களுடன் முடிக்க.
இதனால், மேற்கூறிய மத்தியாலவத்தையின் இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு உருவகமாக்கிக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

பொழிப்புரை :

அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம்மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்` எனமயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள் தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையாது` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியன வாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது அவர் அறியாமை இருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `தழுவி` என்னும் செய்தென் எச்சம் காரணப் பொருளில் வந்தது. இரண்டாம் அடியில் `அவ்வுடம்பிடை` எனச்சுட்டு வருவிக்க. `சாக்கிரம் முதலிய அவத்தைகளின் இயல்பை அறிவார்க்கு, உயிர் உடம்பின் வேறாதல் தெற்றென விளங்கும்` எனற்கு இம்மந்திரத்தை இங்கு அருளிச்செய்தார். `கனவில் தூல உடம்பு செயலற்றுக் கிடை யாய்க் கிடக்கவும் உயிர் சூக்கும உடம்போடு கூடிச் செயற்படுதல் அனு பவம் ஆதலின், அவ்வாறே உயிர் ஏனை உடம்புகளின் வேறானது என்பது ஏனையவத்தைகளையும் உணரின் விளங்கும்` - என்பதாம். சிவஞான போதம் மூன்றாம் சூத்திரத்திலும் அவத்தைகளின் இயல்பு பற்றியே உயிர் உடம்பின் வேறாய் உண்மை நாட்டப் பட்டது. `நின்ற உயிர்` என்றாரேனும் `உயிர் நின்றமை` என்றலே கருத்து.
``குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு``
என்னும் குறளில் 8 `நட்பு` என்றது நட்பு இன்மையைக் குறித்து நின்ற குறிப்பு மொழி என்பது அதன்கண் கூறப்பட்ட உவமையால் விளங்கும். அஃதே இங்கும் கூறப்பட்டது. மடத்திற்கும், நாய்க்கும் இயைபில்லையாயினும், ஏதோவொருவழியால் நாய் மடத்தினுள் புகுந்து விட்டதாயினும் அஃது அங்கு நிலையாது நீங்குதல்போல, சடமாகிய உடம்புகட்கும், சித்தாகிய உயிருக்கும் இயைபில்லை யாயினும், வினைகாரணமாக உயிர் உடம்போடு இயைந்து நின்றது ஆகலின், அவ்வியைபு நிலையாது நீங்குதல் இயல்பென்றவாறு. இங்ஙனம் உவமையை விரித்துரைத்துக்கொள்க.
இதனால், `மேற்கூறிய உடலின் பஞ்ச பேதத்திற்கு அனுபவம் அவத்தை பேதங்கள்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்
துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.

பொழிப்புரை :

அறிவில்லாதவர்கள், `உலகத்தில் நாம் எவ் வாற்றால் உயிர் வாழ்கின்றோம்` என்பதைச் சிறிதும் உணர மாட்டார்கள். (உள்வாங்கியும், வெளிப்போக்கியும் பிராண வாயுவை ஓய்வின்றி இயக்குதலால்தான் அவர்கள் வாழ்கின்றனர். ஆகையால் அதனையறிந்து) பிறவியை அறுக்கின்ற அசபா மந்திரத்தால் பிராண வாயுவை மேற்சொல்லியவாறு இயக்கிப் பயின்று தூயராய்ப் பின் அவ்வாயுவை உள்ளே நிறுத்தி` அம்மந்திரத்தை, `சிவன் நான்` எனப் பொருள்படும் வகையில் மாற்றி நினைந்து அவ்வாற்றால், காமனை அழித்தோனாகிய சிவன் தம்மிடத்தில் பதிந்து பின் நீங்காது விளங்கும் படி செய்தலாகிய இம்முறையை உணர்ந்து, அதனால் அவன் அருளே தமது உடம்பாகச் செய்து கொள்வார்க்கு, அங்ஙனம் அமைந்த உடம்பு அழிந்தொழியாது; நிலைத்திருக்கும்.

குறிப்புரை :

`சிவன் நான்` எனப்பொருள்படும் மந்திரம், `சிவோகம்` என்பது. அம்ச மந்திரத்தை, `சோகம்` என மாற்றிய வழியும் அதன் உண்மைப் பொருள் `சிவோகம்` என்பதேயாதல் பற்றி, `அசபையை மாற்றி` என்றார். முகத்தல் - பிராணவாயுவைக் கும்பித்தல். இங்குக் கூறியவற்றையெல்லாம் கல்வி கேள்விகளால் அறிந்திருந்தும் அவ்வாறு செய்யாதாரை நோக்கியே, `ஏழைகள்` என்றும், `அறிகிலர்` என்றும் கூறினார். `அறிவினான் ஆகுவ துண்டோ`l எனத் திருவள்ளுவர் கூறியதனை இங்கு ஒப்பு நோக்குக. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மை தொகுத்தலாயிற்று.
இதனால் யாக்கை நிலையாதாயினும் அதனை நீட்டிக்கும் வழியை அறிந்தோர் அது செய்யாதிருத்தலின் குற்றம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள்
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

பொழிப்புரை :

அறிவுப் பொருளேயாயினும் ஆணவ மறைப் பால் அவ்வறிவை இழந்து நின்ற உயிரை இறைவன் கருவிக் கூட்டத்துள் மறைந்து நிற்கும்படி செய்தான். (பின்பு அவ்வுயிர் பக்குவம் எய்திய காலத்தில்) குருவாகி வந்து எனக்கு உபதேசித்த நூல்கள் வழியாக என் உடம்பினுள்ளே மறைந்திருந்த பிராசாத கலைகள் பதினாறையும் விளக்கினான்.

குறிப்புரை :

`அதனால் நான் கருவிக் கூட்டத்தினின்றும் வெளி யேறினேன்` என்பது குறிப்பெச்சம்.
`ஆரியன் ஒடுங்கிய சித்தினை அறுபத்துள் ஒளித்திட்டு வைத்தான். (பின்பு அவனே) வந்து அளிக்கும் கலைகளினால் என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறை அளித்தனன்` என இயைத்துக்கொள்க.
`ஆரியன்` என்பது இரட்டுற மொழிதலாய் முன்பு `பெரி யோன்` எனவும், பின்பு, `ஆசிரியன்` எனவும் இருபொருள் தந்தது. இரண்டாவது பொருட்கு `ஆகி என ஆக்கச் சொல் விரித்துரைக்க.
`ஒரு பதினாலை` - என்பது பாடம் அன்று. ஒரு பதினாறு - பிராசாத கலைகள் பதினாறு. அவற்றை உபதேசமுறையான் அன்றி அறிதல் கூடாமையின், `என்னுள்ளே ஒளித்திட்டிருக்கும் ஒரு பதினாறு` என்றும், அவற்றை அறிந்து அவ்யோகத்தை (பிராசாத யோகத்தை)ச் செய்யவே உடற்கூறுகள் அனைத்தும் இனிது விளங்கி, உயிரினது நிலையும் புலப்படுதல் பற்றி, `ஆரியன் வந்து அளித்தனன்` - என அப்பேற்றினது சிறப்பையும் கூறினார்.
இதனால், யோகிகட்கு அவத்தை பேதங்கள் யாவும் இனிது விளங்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்த தொருபூ தசயமே.

பொழிப்புரை :

மண்ணிலிருந்து தோன்றிய பல மலர்களை உடைத் தாய் விளங்குகின்ற நீர், பொன்னிறத்தை உடைத்தாகிய தீயினின்றும் அதற்குப்பின் தோன்றியதாம். இனி அத்தீக் காற்றி லிருந்தும், காற்று ஆகாயத்திலிருந்தும் தோன்றினவாம். புத்தியினின்றும் தோன்றிய தாகிய அகங்காரத்திலிருந்து தோன்றியது மனம். இவ்வாறு தூல சூக்கும தேகங்களின் உற்பத்தியைப் பகுத்துப் பகுத்து உணர்ந்தால், அவற்றை ஒடுக்கி, ஆன்மாத் தூய்மை அடைகின்ற நிலை கைகூடும்.

குறிப்புரை :

`நீரில் உள்ள மலர்கள் மண்ணில் தோன்றியன` என்றதனால், `நீர் மண்ணில் தோன்றவில்லை; மண்ணே நீரில் தோன்றியது` என்பது குறிக்கப்பட்டது. யாப்புக்கு ஏற்பச் சொற் சுருங்கி வருதற்பொருட்டுத் தனித் தனியாகக் கூறாமல், தொடர்ப் படுத்திக் கூறினார். பொன், உவம ஆகுபெயராய்த் தீயைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப்பகுதியைக் குறித்தது. `மருங்கு` என்றது `பின் என்னும் காலப் பகுதியைக் குறித்தது. `வளியின், ஆகா யத்தின்` - என அவ்விடங்களில் தொகுக்கப்பட்ட நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபை விரித்து, `வளி` - என்பதை இரண்டாம் முறையும் ஓதுக. `புத்தி ஆங்காரம், என்பது, `புத்தியினின்றும் தோன்றிய ஆங்காரம்` என ஐந்தாவதன் உருபும் பயனும் உடன் தொக்கதொகை. அதன்பின் இன்னுருபு விரித்து, `மன்னும்` என்பதனைப் பின்னுங் கூட்டி, `புத்தி ஆங்காரத்தின் மனம் மன்னும்` என்க. அனைத்தும் நான்கடிகளுள் அடங்கு மாறெல்லாம் கருதி இவ்வாறு அடக்கி ஓதினார்.
பூத சயம் - பூத காரியமாகிய உடம்பை வென்று மீளும் வெற்றி. `பூத சயம் கூடும்` என்பதில் `கூடும்` என்பது அவாய் நிலையாய் நின்றது. அகங்காரத்தினின்றும் மனத்திற்குப்பின் தோன்றிய ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் உளவாயினும் அவை ஓராற்றால் பூதங்களின் அடங்குதல் பற்றி ஓதாது விடுத்தார். `ஒருபூ சயமே` என்பதை `ஒருபூத தசயமே` - என வகையுளியாக்குக.

பண் :

பாடல் எண் : 11

முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

பொழிப்புரை :

ஐவர் சத்திகளில் முன்னவளாகிய மனோன் மணிக்கு மகன் ஒருவன்தான். அவளிடத்தினின்றும் தோன்றிய மகேசுரனுக்கு மக்கள் இருவர். நெருப்புப்போலும் உருவத்தையுடைய உருத்திரனுக்கு மக்கள் மூவர். மணமகள் போல அழகு மிக உடைய திருமகளுக்கு மக்கள் நால்வர். கணவனது இயல்பு நோக்கிக் கன்னி யாகச் சொல்லத்தக்க வாணிக்கு மக்கள் ஐவர். இவையெல்லாம் அநாதியில் யில்லை. ஆயினும் அநாதியாகிய சிவன் அவ்வாறாகிய தனது சத்தியை அநாதியே தாய்மை அடையுமாறு கருதினான்.

குறிப்புரை :

`அதனால் இவைகள் எல்லாம் உளவாயின` என்பது குறிப்பெச்சம் `உலகம் சிவம் சத்திகளின் விளையாட்டே` என்பது பற்றிச் சிலவற்றைச் சத்தியின் மேலும், சிலவற்றைச் சிவத்தின்மேலும் வைத்துக் கூறினார். மகேசுவரன் அருவனும், அருவுருவனும் ஆகாது உருவன் ஆதலின், `மூர்த்தி` - என்றார். ஆகாயம் முதலிய பூதங்கள் ஐந்திற்கும் சதாசிவன் முதலிய ஐவர் அதிதேவர் ஆதல் பற்றி, அவற்றில் உள்ள குணங்கள் அவர் ஈன்ற மக்களாக உவமித்து ஓதினார். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் - என்பன ஆகாயம் முதலியவற்றில் ஒன்று தொடங்கி, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என இத்துணையவாகப் பொருந்தியிருத்தலை அறிந்துகொள்க. ஐம்பூதங்களை வழிபடுதற்கண் அவை அவற்றின் அதிதேவராலே செயற்படுதலை அறிந்து வழிபட்ட வழியே பயன் விளையும் ஆகலின், அவற்றை அவ்வாறறிதற் பொருட்டு இம்மந்திரத்தை ஓதினார். பஞ்ச பூதங்களின் முறைமையே பஞ்ச கலைகட்கும் ஆதலை உணர்க. வது - மணத்திற்கு உரிய பெண். விட்டுணு போகத்தையே தருதல் பற்றி, அவனது சத்தியைக் `கன்னி` என்றுங் கூறினார். பின்னர் வந்த கன்னி, சத்தி உலகத்தை நோக்குதல் இன்றித் தன்னிலையில் நின்ற நிலைமையைக் குறிப்பால் உணர்த்திற்று. கன்னியின்கண்ணே காதலித்தான்` - என ஏழாவது விரிக்க காதலித்தல், இங்கு உலகத்தைத் தோற்றுவிக்க விரும்பி நின்றது. காதலித்தற்கு வினைமுதல் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், மேற்கூறப்பட்ட பூத சயத்திற்கு அறியற்பாலன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :

சுழுத்திக்குப் பின் கண்ட கனவிலே செயற்பட்ட ஓசை முதலிய புலன்கள் ஐந்தும், பின்னர்ச் சென்று கலந்த பொறிகள் ஐந்தோடும் கூடியிருக்கும் நிலையில் அப்பொறிகளின் வழியாகப் புறப்பொருள்களை அந்தக்கரணங்கள் நான்கும் உணர்வுறும் நிலைமையை ஒருங்கே அடைந்தபின் புருடன் முன்னை நிலையை அடைந்து, விரிந்த பரந்த சிறந்த சாக்கிராவத்தையையுடையனாய், உலகமே தானாயது போன்ற வியாபக நிலையைப் பெற்று, வினைகளை நுகர்தலும் ஈட்டலும் செய்திருப்பான்.

குறிப்புரை :

ஐந்து, ஐந்து, நான்கு என்னும் எண்கள் அவ்வவ்விடம் பற்றி அவ்வக் கருவிகளை உணர்த்தின. சிறப்புப் பற்றி ஞானேந்திரிய விடயங்களையே கூறினாராயினும் இனம் பற்றிக் கன்மேந்திரிய விடயங்களும் அவற்றிற்குரிய கன்மேந்திரியங்களும், அவற்றிற்கு, வலிமை தருகின்ற வாயுக்கள் பத்தும் கொள்ளப்படும். படவே, `எடுத்துக் கூறிய பதினைந்துடன் இவ்விருபதுங்கூட, அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் முப்பத்தைந்து` என்பதும், `அவற்றால் நிகழ்வது கேவல சாக்கிரம்` என்பதும் விளங்கும். `அமர்ந்து நின்றான்` - என்னும் பயனிலைக்குத் தோன்றா எழுவாயாய் நின்றது `புருடன்` என்பதே யாகலின், அதுவும் எடுத்துக் கூறப்பட்டதாயிற்று. மந்தமாய் நிகழினும் ஐம்புலனையும் உணர்தலிற் குறையாமைபற்றி. `அண்டமும் தானாய் அமர்ந்து நின்றான்` என்றார்.
இதனால் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 13

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து)
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

பொழிப்புரை :

ஞானேந்திரியமும், கன்மேந்திரியமும், அந்தக் கரணங்களும் ஆகிய பதினான்கு கருவிகளோடு கூடிச் சாக்கிரா வத்தையில் நின்ற புருடன், அவ்வாறு நிற்கும் நிலையிற்றானே இரு வகை இந்திரியங்களாகிய பத்துக் கருவிகளை நீக்கிவிட்டு, எஞ்சிய நான்காகிய அந்தக்கரணங்களோடு மட்டும் அழுத்தமான கண்டத் தானத்தில் சென்று, முன்பு சாக்கிரத்தில் புருவ நடுவில் நின்று நுகர்ந்த உலக நுகர்ச்சிகளின் வாசனையைக் கனவாகக் காண்பான்.

குறிப்புரை :

அவத்தைக்கு ஏதுவாவனவாக மேற்கூறிய கருவிகள் முப்பத்தைந்தனுள் ஞானேந்திரிய விடயம் ஐந்தும், கன்மேந்திரிய விடயம் ஐந்தும், பிராணாதி வாயுக்கள் பத்தும் ஆக இருபதும் தாத்துவிகங்களாதல் பற்றி அவற்றை விடுத்து, தத்துவங்களாகிய பதினைந்து மட்டுமே இங்குக் கூறினார். கண்டத்தில் கனா நிகழும் பொழுது, `அந்தக்கரணம், புருடன்` என்னும் ஐந்தோடு தாத்துவிகங் களாகிய இருபதும் கூட, இருபத்தைந்து கருவிகள் செயற்படும் என்பது அறிக. இதுவே சொப்பனமாம்.
`மன்று` - என்றது புருவ நடுவை. கன்றுதல் - இறுகப் பற்றுதல். விழிப்பினின்றும் நீங்கிய உயிரை அமைதியாக உறங்க ஒட்டாது கனாவில் பிணித்து வைத்தல் பற்றிக் கண்டத்தானத்தை, `கன்றிய கண்டம்` - என்றார். `வாதனையைக் கனவாகக் கண்டான்` என்க. அது, பகுதிப்பொருள் விகுதி. பல நாளும் நிகழ்வதை எதிர்காலத்தாற் கூறாது, ஒரு காலத்தின்மேல் வைத்து, இறந்த காலத்தாற் கூறினார். `பதினாலிற் பத்து நீத்து` என்றதனானே, கேவல சாக்கிரம் முப்பத் தைந்து கருவிகளால் நிகழ்தல் பெறப்பட்டது.
இதனால், கேவல சாக்கிரம், கேவல சொப்பனம் ஆகிய அவத்தைகளின் இயல்பு கூறப்பட்டது. கேவல ஐந்தவத்தையே கீழாலவத்தையாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 14

தானம் இழந்து தனிபுக் கிதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி
ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்திய தாமே.

பொழிப்புரை :

மேற்கூறிய கண்டமாகிய தானத்தை (இடத்தை) விட்டுப்புருடன் கீழ் இறங்கி, அங்ஙனம் இறங்கும் நிலையில், முன்பு இருந்த அந்தக்கரணங்களுள் மானமாகிய அகங்காரத்தையும், மதியாகிய புத்தியையும் விடுத்து, யாதொன்றையும், பற்றிநினைக்க மாட்டாத நிலையையடைந்து, இருதயத்தில் தனியேசென்று, புலன் உணர்வையிழந்து இழப்பு நிலையில் உயிரினது சொரூபமே காணப் படாது கிடக்கும் நிலையே சுழுத்தியவத்தையாம்.

குறிப்புரை :

அகங்காரத்தையும், புத்தியையுமே இழந்ததாகக் கூறினமையால், சித்தம் விடப்படாதாயிற்று. நினைத்தல் மனத்தால் ஆகலின், `நினைக்க மாட்டாது` என்றமையால் மனம் நீங்கினமையும் பெறப்பட்டது ஆகவே, பெரும்பான்மை பற்றி, `தனி புக்கு` - என்றா ராயினும், `சித்தத்துடன் புக்கு` என்பதே பொருளாயிற்று. புறப் பொருளைப் பற்றுவது மனமேயாகலின், அஃதில்லையாகவே, `அதனால் பற்றப்படும் ஞானேந்திரிய விடயங்களும், கன்மேந்திரிய விடயங்களும் இலவாம்` என்பது தானே விளங்கிற்று. தாத்துவிகம் ஆதல்பற்றி, வாயுக்களை நாயனார் கூறாதே விடுத்தலால், பிராணாதி வாயுக்களில் பிராணன் தவிர ஏனை ஒன்பது வாயுக்களும் சொப்பனத் தானத்தோடே நின்று விடுதல் உரையிற் கொள்க. இதனால், சொப்பனத் தானத்தில் செயற்படுவனவாகக் கூறப்பட்ட இருபத்தைந்து கருவிகளில் சத்தாதி விடயங்கள் ஐந்து, வசனாதி விடயங்கள் ஐந்து, வாயுக்கள் ஒன்பது, மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்கள் மூன்று ஆக இருபத்திரண்டு கருவிகள் சொப்பனத் தானத்திலே நின்று விட, `சித்தம், பிராணன், புருடன்` என்னும் மூன்று கருவிகளினாலே இருதயத்தில் சுழுத்தி நிகழும் என்க. சித்தம் செயற் படுதலால் `சுழுத்தியில் ஆன்மாவிற்கு ஆழ்ந்த சிந்தனை உண்டு` என் பதும், ஆயினும் `புத்தி` இல்லாமையால் விழித்தபின் `முன்பு என்ன சிந்தித்தோம்` என்பதை ஆன்மா உணர்வதில்லை - என்பதும் உணர்க.
பிராண வாயுவை இயக்குவது அகங்கார தத்துவமே ஆகையால், `பிராணன் உண்டு` எனவே, `அதனை இயக்கும் அகங்கார தத்துவம் உண்டு` என்பது பெறப்பட்டதாயினும், அஃது பிராணனை இயக்குவதைத்தவிர, `நான்` என முனைப்புற்று எழுச்சி யாகிய தனது காரியத்தைச் செய்யமாட்டாமையால், நீங்கிய கருவி யாகவே எண்ணப்படும்.
இதனால், கேவல சுழுத்தியின் இயல்பு கூறப்பட்டது.
சுழுத்தியில் ஆன்மா அறியும் கருவிகள் இல்லாமையால் அறியாமையிற்பட்டு, முடமாய்க்கிடப்பதையே ஏகான்மவாதிகள், ஆன்மாச் சுழுத்தியின் பிரம்மானந்தத்தில் அழுந்தியிருப்பதாகக் கூறுவர். `நிர்க்குணமாகிய சுத்தப்பிரமமே அவிச்சை வசத்தால் சகுணமாகிய பந்தத்தை எய்தும் எனக் கூறுகின்ற அவர்கட்கு, `பிரம்மா னந்தத்தை அடைந்த சீவன் மீட்டும் அதைவிட்டு விடயானந்தத்திற்கு வந்துவிடும்; இந்நிலை அன்றாட நிகழ்ச்சியாகச் சீவனுக்கு மாறி மாறி நிகழும் எனக் கூறுதல் பொருந்தும். `சிவனை அடைந்து, அவனது இன்பத்தை நுகர்ந்த உயிர், மீட்டும் ஐம்புல இன்பத்தை நோக்கி வருதல் இல்லை. அதனால், சிவன் தன் அடியார்களுக்கு மீண்டு வாரா வழியையே அருள்புரிவான்` எனக் கூறுகின்ற சித்தாந்திகட்கு அது பொருந்தாது - என்பதை விளக்கச் சுழுத்தி நிலையை, `விரிவு - அறியா அவ்வியத்தம்` என்றார். விரிவு - அறியப்படுவனவாய் விரிந்து கிடக்கும் பொருள்கள். அவ்வியத்தம் - விளங்காமை. `அவ்வியத்தம்` என்பது காரண இடுகுறியாய் மூலப் பிரகிருதியைக் குறிப்பதாயினும் இங்குக் காரணக்குறியால் ஒன்றும் விளங்காதநிலையைக் குறித்தது. உலக அனுபவத்தை இழந்துவிடுவதே சிவாநுபவத்தை, அல்லது பிரம்மாநுபவத்தைப் பெற்றுவிடுதல் ஆகிவிடாது. `ஆகும்` எனின், கட் குடியில் மயங்குவோர், விடம் தலைக்கேறுதல் முதலிய காரணங் களால் மூர்ச்சையுற்றோர் முதலிய பலரும் யாதொரு ஞான ஒழுக்கமும் இல்லாமலே சிவாநுபூதியைப் பெற்றவர் ஆகி விடுவர். ஆகவே, `சுத்தத்தில் அரிதில் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன வேறு; கேவலத்தில் எளிதில் அன்றாட நிகழ்ச்சியாய் நிகழும் சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன வேறு எனவும் தெரிந்துணர்ந்துகொள்க. மேனி - சொரூபம். ஆன்மாவின் சொரூபம் அறிவு.
இவ்விடத்தில் கூறப்பட்டுவருவன `கீழாலவத்தை` எனப்படும் கேவல ஐந்தவத்தைகளேயாம்.

பண் :

பாடல் எண் : 15

சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.

பொழிப்புரை :

சுழுத்தியில் உள்ள மூன்று கருவிகளுள் புருடனுக்கு அறிவைத் தருவதாகிய சித்தம் நீங்கிப்போக, உந்திக் கமலத்தின்கண் பிராணவாயு ஒன்று மட்டுமே அவனுக்கு அறிவைத் தருவதாய் அமைய அங்கு இருந்துகொண்டு, ஆன்ம தத்துவங்கள் யாவும் தன்கண்வந்து ஒடுங்கநிற்பதாகிய மூலப்பிரகிருதியைத் தான் சிறிது அறிதலை அவன் செய்துகொண்டிருப்பான்.

குறிப்புரை :

அதுவே கேவல துரியமாம். சுழுத்தியை, `சுழுனை` என்றார். காட்சிக்குக் கருவியாவனவற்றை, `காட்சி` என்றது ஆகு பெயர். `பிராணன் தன்காட்சியாக` என ஆக்கம் விரித்து, அத்தொடரை ஈற்றடியில் முதலில் கூட்டுக. ஒழுகுதல் - ஒழுகிப்போதல்; நீங்குதல். `சித்தம் ஒழுக` - என இயைக்க. `கமலம்` என்பது இடத்திற்கு ஏற்ப உந்திக் கமலத்தைக் குறித்தது விழுதல் - வந்து ஒடுங்குதல்.
இதனால், புருடன், பிராணன்` என்னும் இரு கருவிகளே செயற்பட, ஆன்மா உந்தியில் நிற்றல் கேவல துரியம், அல்லது கீழாலவத்தைத் துரியம் - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

தானத் தெழுந்து தருந்துரி யத்தினின்
வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத் தெழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.

பொழிப்புரை :

உயர் தனக்குச் சிறப்பிடமாகிய இருதயத்தினின் றும் புறப்பட்டவழி அதற்குத் தரப்படும் துரியத்தானத்தில் நின்று பின்பு அதனையும் விட்டு அப்பாற் சென்று, உலகத்தைப் பின் தள்ளிவிட்டு, நாதத்தால் உணர்வு விளங்குமாறு நிற்கின்ற குண்டலினி சத்தியின் தலைபொருந்தியுள்ள மூலாதாரத்தை அடைந்து, அவ்விடத்தில் பொருள்களை மயங்கியறிதலாகிய அந்த அறிவும் இன்றி அறிவே யில்லாதது போலக் கிடக்கும்.

குறிப்புரை :

ஆறு ஆதாரங்களும் உயிர்க்கு இடமாயினும் அவற்றுள் இருதயமே சிறந்ததாதல் பற்றியே `உயிருக்குத் தானம்` என்றார். `தானத் தினின்றும்` என ஐந்தாவது விரிக்க. `எழுந்தவழி` என்பது `எழுந்து` எனத்திரிந்து நின்றது. வாயுவுக்குமேல் உள்ளது வானம் ஆதலின், `வானத்தெழுந்து`` என்றது, பிராண வாயு நீங்கிய நிலையைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றது. பிராணவாயுவின் இயக்கமும் இல்லாது போதலின் உயிர் உலக அனுபவத்தைச் சிறிதும் உடைத் தாகாமையை, ``வையம் பிறகிட்டு`` என்றார், கானம் - நாதம், கருத்து - உணர்வு. அஃது அதனைத் தரும் குண்டலி சத்தியை உணர்த் திற்று. `வித்தை` என்பதும் உணர்வே, `அது மயக்க உணர்வு` என்றற்கு `ஊனத்த வித்தை` என்றார். ஊனம் - குறை. `ஊனமாய் நின்றான்` என ஆக்கம் விரித்து, ஆக்கம் உவமை குறித்து நின்றதாக உரைக்க. ஊமனுக்கு உணர் விருப்பினும் அதனை வெளிப்படுத்த மாட்டுவான் அல்லன் ஆதலின், அவன் உணர் வுடையனாயினும் அது செயற்படாத நிலையை உடைய உயிருக்கு உவமையாயினான். காரியமாகிய உலகத்தை நுகராமையின் காரண மாகிய மூலப்பிரகிருதியே அவ்விடத்தில் உயிருக்கு நுகர்ச்சியாவதாம்.
இதனால், `பிராணவாயுவின் இயக்கமும் இன்றிப் புருடன் மூலாதாரத்தில் மூலப்பிரகிருதியைப் பற்றிக்கொண்டு, வெறும் மூடமாய்க் கிடப்பதே கேவல துரியாதீதம்` என அதனது இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.

பொழிப்புரை :

[நால்வகை வாக்குக்களில் மிகவும் தூலமாகிய வைகரிவாக்குச் சகல ஐந்தவத்தையிலும் தூலமாகிய மத்திமை வாக்கு கேவல ஐந்தவத்தையிலும், சூக்குமமாகிய பைசந்தி வாக்கு யோகா லவத்தையிலும், மிகவும் சூக்குமமாகிய சூக்குமை வாக்கு சுத்த ஐந்த வத்தையிலும் செயற்படும். அதுபற்றித்தான் வாக்குக்கள் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகளாக எண்ணப்படவில்லை.]
மேற்கூறிய நால்வகை ஐந்தவத்தைகளில் மேற்கூறியவாறு நால்வகை வாக்குக்கள் செயற்படுங்கால், சாக்கிரம் முதலிய ஐந்திலும் முறையே, தூலதமம், தூலதரம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம்` என்னும் நிலையில் செயற்படும் அதிசூக்குமமே ``ஊமையெழுத்து`` என்றும் ஏனையவை ``பேசும் எழுத்து`` என்றும் மறைபொருட் கூற்றாகக் கூறப்பட்டன. அதிகாரம் கீழாலவத்தையாதலின் இங்குக் கூறப்பட்ட, `பேசும் எழுத்து, ஊமையெழுத்து` - என்பன கீழாலவத் தையில் செயற்படுவ தாகிய மத்திமை வாக்கின் `அதிசூக்குமம், சூக்குமம்` என்பவற்றை யாம். தூலதமம், தூலதரத்திலும், தூலதரம் தூலத்திலும், தூலம் சூக்குமத்திலும் ஒடுங்கிவிடப்பின்பு சூக்குமமும் அதிசூக்குமத்தில் ஒடுங்கிவிட்டால் பெத்தநிலையில் உள்ள உயிர் புறப்பொருள்களில் யாதொன்றையும் அறியமாட்டாது உணர்வை முற்றிலுமாக இழந்து, பிரகிருதிமயமாகியே கிடக்கும். இதுவே கீழாலவத்தையில் துரியா தீதத்தின் நிலைமை. இதனையே,
``ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்``
என்றார். `ஆமை` என்றது உயிரை. இஃது உருவகம். அஞ்சு - ஐம் புலன்கள்மேல் சென்று அவற்றைக் கவர்கின்ற உணர்வு. அவ்வுணர்வு சிறிதும் வெளிச்செல்லாது உயிரோடு உயிராய் ஒட்டிக் கிடத்தல், ஆமையின் ஐந்து உறுப்புக்கள் அதனது ஓட்டிற்குள்ளே அடங்கி வெளித் தோன்றாதிருத்தலோடு ஒத்திருத்தல் பற்றி, உயிர் ஆமையாக உருவகம் செய்யப்பட்டது. சுழுத்தி துரியங்களிலும் அஞ்சும் அடங்கி யிருப்பினும் சித்தமும், பிராணனும் செயற்படுதலால் `அவற்றின் வாசனை சிறிதாயினும் இருக்கும்` என எண்ண இடம் உண்டு. உயிர்ப்பு அடங்கி விட்டமையால் அதீதத்தில் அவ்வாறு எண்ணச் சிறிதும் இடம் இல்லாமை பற்றி, இவ்விடத்திற்றானே ``அஞ்சும் அடங்கிடும்`` எனக் கூறினார். `தமோமாய்` (இருள்மயமாய்) நிற்கும் அதீத நிலையை சிவத்தில் அழுந்தி ஒளிமயமாய் நிற்கும் நிலையாகக் கூறுபவர் யாதும் அறியாதவர்` என்பதை உணர்த்துதற்குப் பின்னிரண்டடிகளைக் கூறினார். அவற்றுள் `ஓம்` என்றது அதன் உண்மைப் பொருளாய் நிற்கும் சிவத்தை.
`சுத்த துரியாதீதத்தில் சிவத்தை அடைந்த சிவமயமான உயிர், இருள் முழுவதும் நீங்கி ஒளிமயமானதாகும். அதனால் அது `நாம்` என்னும் சீவபோதமும் இல்லாததாகும். அந்த நிலையை நாம் அறிந்திலோம் என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.

குறிப்புரை :

கீழாலவத்தையைக் கூறிவருகின்றார் ஆகலின், அது பற்றித் தம்மை அந்த அவத்தையின் நின்று பேசுபவராக வைத்து, ``நாம் அறியோம்`` என்றார். ஆகவே `கீழாலவத்தையில் நிற்போர் சுத்த வத்தையின் அனுபவத்தை அறியார்` என்பது அதன் உண்மைப் பொருளாயிற்று.
இதனால், `கீழாலவத்தைத் துரியாதீதம் இருள் மயமானது, என்பது உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள
நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

பொழிப்புரை :

சுழுத்தியைக் கடந்து உள்ள `துரியம், துரியாதீதம்` - என்னும் இரண்டனுள் துரியம், `எவ்வாறு இருந்தது` என வினாவு பவர்க்கு, `இவ்வாறு இருந்தது` என விடையிறுக்கக் கூடியதாகும். துரியா தீதமோ எனில், அவ்வாறு வினாவுவார்க்கு இவ்வாறு இருந்தது` எனச் சொல்லவாராத நிலையாகும். ஏனெனில், சாக்கிராவத்தையில் அடக்கினும் அடங்காது, யாதானும் ஓர் ஆற்றால்தப்பிப் புறத்தே ஓடுதலால், `நரிகள்` என்று சொல்லத்தக்கனவாகிய ஞானேந்திரியம், கன்மேந் திரியம், அந்தக்கரணம் என்னும் பதினான்கு பொறிகளும் (கரணங்களும்) பிரகிருதியின் தமோ குணமாகிய விடத்தை உண்டமையால் இறந்து போய்விட்டன. அப்பொறிகளின் வழிச் செல்லும் உணர்விற்கு ஊர்தியாகிய `பிராணன்` என்னும் குதிரையும் தனது ஓட்டம் அடங்கி ஒழிந்தது.

குறிப்புரை :

எனவே, நரிகள் பதினான்கு இல்லையென்றாலும் பரி (குதிரை)யின் ஓட்டம் இருந்ததால் துரியநிலை `இவ்வாறு இருந்தது` எனச் சொல்லத் தக்கதாயிற்று - என்பதாம். `நான் சுகமாகத் துயின்றேன்` - எனப் பின்பு விழிப்பு நிலையில் கூறுவது, துரிய நிலையில் எய்திய அனுபவத்தையேயாம். அந்த அனுபவமும் அறியப்படாத நிலையே கீழாலவத்தைத் துரியாதீத நிலை என்க. `இறந்த` என்னும் பெயரெச்சத்து ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், கீழாலவத்தைத் துரியாதீத நிலை உயிர் தன்னையும் மறந்திருக்கும் நிலை` - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு)
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து)
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

பொழிப்புரை :

முத்தி பெறுங்காறும் விட்டு நீங்காதிருக்கின்ற ஐந்து மலங்களால் நிலைபெறுவதாகிய சகலாவத்தையில் தனியொரு சிறப்பினையுடைய மாயேயமாகிய தனு, கரணம் முதலியவற்றிற்கு இந்தச் சகல நிலையில் முடிவேயில்லாமையால், எல்லாவகையான உயிர்களும் ஒரு பிறப்பின் பிறந்து, பின் அதனை விட்டு நீங்கி, வேறொரு பிறப்பை அடைந்து அலமரும். அதற்குக் காரணம் தனது ஆற்றல் குன்றப்பெறாத வினையே.

குறிப்புரை :

எனவே, `அவத்தை பேதங்கள் பெரும்பான்மை யாகச் சகலாவத்தையிலே நிகழ்வன` என்பதும், `அவற்றிற்குக் காரணம் வினையே` என்பதும் கூறியவாறாம். ஆகவே, `கேவல ஐந்தவத்தை என்பன` - சகலத்திற் கேவல அவத்தைகள் என்றும் சகல ஜந்தவத் தைகள் - என்பன, - `சகலத்திற் சகல ஐந்தவத்தைகள்` என்றும், `சுத்த ஐந்தவத்தைகள் - என்பன, - சகலத்தில் சுத்த ஐந்தவத்தைகள்` என்றும் உணரற்பாலன - என்றதாயிற்று. சகலத்திற் சகலம் `மகாசகலம்` - எனப்படும் இவற்றைக் கூட்டிக்கணக்கிடின் மூவைந்து பதினைந்தாதல் அறிக. இனி, `யோகாலவத்தைகள் - என்பனவும் சகலத்தில் நிகழ் வனவேயாதலின் அவற்றைக்கூட்ட, சகலத்தில் நிகழும் அவத்தைகள் இருபதாம், அவை நிற்க. தனியே கேவலத்தில் ஐந்தும், தனியே சுத்தத்தில் ஐந்தும் கூட்ட அவத்தைகள் முப்பதாம். `இவற்றுள் சகலத்தில் நிகழும் அவத்தைகளே பெரும்பாலன` - என்றது உணர்த் துதற்கே` `மாறா மலம் ஐந்தின் மன்னும் அவத்தையின்` என்றார். கேவலத்தில் மன்னும் மலம் ஆணவம் ஒன்றே சுத்தத்தில் யாதொரு மலமும் இல்லை. ஆகவே, `மலம் ஐந்தால் மன்னும் அவத்தை` என்றது சகலாவத்தையாயிற்று. `கேவலம், சகலம், சுத்தம்` எனக் காரண அவத்தைகள் மூன்று. அவை ஒவ்வொன்றிலும் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தும்காரிய அவத்தைகள். ஈறாகாது` என்னும் எதிர்மறை வினையெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது.
இதனால், இயைபுபற்றி, `அவத்தை` என்பன பலவும் குறிப்பால் தொகுத்துணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 20

உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து)
எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.

பொழிப்புரை :

இன்ப துன்பங்களை வினைக்கு ஏற்றவாறு விளைவித்து நிற்கின்ற மாயேயமாகிய உலகம், அந்த இன்பத் துன்பங்கள் தன்கண் வாதியாதபடி புளியம் பழத்தின் ஓடுபோல ஒட்டற்றுக் கழிய, இறைவனது திருவருளில் தோய்ந்து நிற்றலே முத்தியாகும். (என்றது, சீவன் முத்தி நிலையை, அதுவே சகலத்தில் சுத்தம் - என்க. இந்நிலைமுற்றாகக் கைகூடுதற்கு முன் பிராரத்த மாயினும் நீங்கிவிடுமாயின் அந்த உயிர் மற்றொரு பிறப்பை அடையும்) அத்தகைய உயிர் மற்றொரு பிறப்பை அடையுமாயினும் முன்னை ஞானத்தோடே பிறந்து, அது வழியாக அப்பிறப்பில் அது சீவன் முத்திநிலை முற்றாகக் கைகூடப் பெற்றுப்பின் முடிநிலையாகிய பரமுத்தியை அடையும்.

குறிப்புரை :

``ஊட்டிடும் மாயை`` என்றதனால் அவை மாயேய மாயின. எனவே, `மாயேயத்தின் ஒட்டற்று நிற்கும் நிலையும், அதுவும் இன்றி நீங்கி வைந்தவத்தோடு நிற்கும் நிலையுமே சுத்தாவத்தை` என்பதும் கூறியவாகும்.
ஏர்முத்தி - எழுச்சியையுடைய முத்தி முடிநிலை முத்தி. `ஊட்டிடும் மாயையும் உண்ணும் தன் ஊடாடாது அண்ணல் அருள் பெறல் ழுத்தியதாவது; அவனை நண்ணல் இலா உயிர்` என உரைக்க. ஞானத்தினால் - ஞானத்தினோடு.

பண் :

பாடல் எண் : 21

அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
இதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாக ஐயவத் தைப்படு வானே.

பொழிப்புரை :

அறிவு சிறிதேனும் தொழிற்படாத, `ஒரு பேருறக்கம்` எனச்சொல்லத்தக்கது, ஆன்மா ஆணவத்தோடு மட்டும் இருக்கின்ற நிலை (அஃது `அநாதி கேவலம்` எனப்படும்). பின்பு அந்த ஆணவ மலத்தின் சத்தி மாயையினால் சிறிதே கெட, அந்த மாயை விளக்கும் அளவிற்கு அறிவு விளங்கப் பெற்ற உயிர், நீக்குதற்கரிய வினைக்கு ஈடான உணர்வையே உடையதாம் நிலையில் இன்பம் போல நிகழ்கின்ற அறியாமையில் செல்வதே சகலத்தில் கேவலம். இந்தக் கேவலத்தில்தான் ஆன்மாக் கீழாலவத்தை ஐந்தினையும் அடையும்.

குறிப்புரை :

ஆணவத்தின் சத்தி கெடுவது மாயையால் ஆதலின் அஃது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `கன்மத்தால் முன்னி` என உருபு விரிக்க. `கேவலம்` - என்பது `அறியாமை` என்னும் பொருட்டாய் நின்றது. `கேவலத்து` என்னும் அத்துச் சாரியை தொகுத்தலாயிற்று. பரம் - மேன்மை `பரம் ஆக` - என்றது `வேறு (கீழ்) ஆகின்ற` என்னும் பொருளைத் தந்தது. ஈற்றடி உயிரெதுகையாயிற்று.
இதனால், கீழால் அவத்தை` - எனப்படுவன சகலத்தில் நிகழும் கேவல ஐந்தவத்தைகளாம் - என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடா ணவத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

பொழிப்புரை :

அநாதியே பற்றி, இறுதியற்றிருக்கும் ஆணவ மலத்தால் அறிவிழந்து கிடக்கும் உயிர்களைக் கருணையே உருவாய் உள்ள இறைவன் எவ்வாறு அறிவை மறைத்தல் இன்றி, அதனை விளங்கச் செய்வதாகிய மாயையாகிய பணிப்பெண்ணை விட்டு ஆணவ உறக்கத்தினின்று தட்டி எழுப்பும்படி செய்வான். இது நல்லாசிரியன் ஒருவன் முன்னைநிலையில் சோம்பலால் உறங்கி விடுகின்ற சில மாணவர்களை அவ்வாசிரியன் மாணவர்களது அறிவை வளர்க்கத் தனது கையில் கொண்டுள்ள பிரம்பால் தட்டியெழுப்புதல் போல்வது.

குறிப்புரை :

`ஆசான்எழுப்பும்` என இயைக்க. `தன்முன்னே துயில் மாணவகரை` என்க. உவமையில் சொல்லளவில் திணை மயங்கின எனினும், பொருளில் மயக்கம் இன்று. நேசம்` என்பது கடைக் குறைந்து நின்றது `ஆணவத்தரை மாயையால் எழுப்பும்` என்றதனால், `ஆணவம் சோம்பல்போல உறக்கத்தை விளைவிக்கும்` என்பதும், `மாயை ஆசான் கைப்பிரம்புபோல உறக்கத்தினின்றும் விழிப்பிக்கும்` என்பதும் பெறப்பட்டன. இன்னும், மாயையை ஆசானது கையில் உள்ள பிரம்போடு உவமித்தமையால், `அது சிவனுக்கும் பரிக்கிரக சத்தியேயன்றித் தாதான்மிய சத்தியன்று` என்பதும் விளங்கிற்று. இம்மந்திரப் பொருள் உமாபதி தேவரது சதரத்த சங்கிரகத்துள். l
``குருர் யதாக்ரதா; சஷ்யாந் ஸுப்தாந் தண்டேந போதயேத் I சவோபி மோஹநீத்ரயாம் ஸுப்தாந் சத்தியா போதயேத் II
எனக்கூறப்பட்டது. அதனைத் துறைமங்கலம் சிவப்பிரகாசர் தமது சதமணி மாலையில்,
``குரவன் முன்துயில் கொள்ளும்மா ணாக்கனை
உரிய கோல்கொண் டுணர்த்துவன்; ஈசனும்
துரிய போகத் துயில்கொளு வான்றனை
அரிய சத்தியி னால்அறி விக்குமே`` 8#
என மொழிபெயர்த்தார்.
சதரத்ந சங்கிரகத்தின் மூலத்திலும், அதன் மொழிபெயர்ப்பிலும் `சத்தி` எனப் பொதுவாகக் கூறப்பட்டதனை இம்மந்திரத்தில் `மாயாள்` எனச் சிறப்பாக விளக்கினமை அறியத்தக்கது.
இதனால், `கேவலாவத்தைக்கு காரணம் ஆணவ மலம்` என் பதும், `சகலாவத்தைக்குக் காரணம் மாயை` என்பதும் கூறப்பட்டன.
`ஏசாத மாயை` என்றது, `அறிவை மறைத்தலைச் செய்யாது, விளக்கத்தைச் செய்வது` என்னும் குறிப்புடையதேயாகும். அதுபற்றி, `சுத்தமாயை` எனப் பொருள் கூறுதல், `பிரளயாகலர், சகலர்` என்னும் இவர்கட்குப் பொருந்தமாட்டாது.

பண் :

பாடல் எண் : 23

மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என
விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.

பொழிப்புரை :

`காலம், இடம், கருவி, கரணம் ஆகிய இவற்றுள் எந்த ஒன்றினாலும் உட்படுத்தப்பட்டு, ஏகதேசப்படுதலை ஒரு ஞான்றும் எய்தாத பேரறிவாகிய அந்தப் பரப்பிரமந்தான் இந்த உயிர்` என ஏகான்மவாதி கூறும் அக்கூற்று, `ஒரு குடத்துள் அடங்கியுள்ள நீரைச்சுட்டி, - மேகம் - என்பதும் இதுதான்; - தான் கங்கா நதி - என்பதும் இதுதான் எனக் கூறுகின்ற மிக்க அறிவில்லாதவன் மிக்க அறிவுடையான் போன்று கூறுகின்ற கூற்றோடு ஒப்பதாய்ப் போக, இந்த உடம்பிற்குத் தலைவனாகிய உயிர் இதைவிட்டு நீங்கும் நாள் வருகின்ற வரையில் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகளை இந்த உடம்பின்கண் எய்தி, ஏகதேசப்பட்டுத் துன்பன் உறும்.

குறிப்புரை :

`எஞ்சலில் ஒன்றெனும் ஆறு` என்பதை முதலில் வைத்து உரைக்க. எஞ்சல் இல் ஒன்று, பரப்பிரமம். ஆறு - முறைமை. `இவ்வுடற்கண்` என ஏழாவது விரிக்க. குடம், அதன்கண் உள்ள நீரைக்குறித்த ஆகுபெயர். `மஞ்சு, மத்தாகினி` - என்பனவும் அன்ன.
அவத்தை இயல்பே கூறுகின்றாராயினும், `இவ்வியல்பானே ஏகான்ம வாதம் பொருந்தாமையும் விளங்கும்` என அதனையும் இனிது விளங்குதற்பொருட்டு இடம் வாய்த்தமையின் கறினார்.

பண் :

பாடல் எண் : 24

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

பொழிப்புரை :

இம்மந்திரம் ஒட்டணியாய் நின்று பொருளைத் தருகின்றது. படி - நாடு; என்றது புற உலகத்தை. அதனை இறைவன் ஆணையால் தனதாகக் கொண்டு இன்பத்துன்பங்களை எய்திவரும் உயிரையே, `உடை மன்னவன்` என்றார். வடிவு - பல உள்ளமைப் புக்கள். மாநகர் - கோநகர்; என்றது உடம்பை. வருதல் - உலாவருதல். என்றது, எல்லா இடங்களிலும் வியாபித்து, எல்லாப் புலன்களையும் உணர்ந்தும் அவற்றிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் செய்தும் வரும் சாக்கிராவத்தையை. அடியுடை ஐவர் - அணுக்கமாய் நிற்கும் அமைச்சர்கள். என்றது, ஞானேந்திரியங்கள் ஐந்தையும், அவற்றால் உணரப்படும் பொருள்கள் அந்தக்கரணங்களாலே தெளிவுபடும் ஆதலின், அந்த அந்தக்கரணங்களும் `ஐவர்` என்றதிலே அடங்கின. அங்கு உறைவோர் - அமைச்சர்களுக்குக் கீழாய் அரசனது உலாவில் பலவகைப் பணிகளையும் செய்துநிற்கும் பல பணியாளர்கள் என்றது பிறகருவிகளை. இம்முறையை, `கால்கொடுத்து இருகை மூட்டி` என்னும் ஞானாமிர்த அகவலிலும் காண்க. (அகவல் - 9) இச்சாக்கிர நிலை, ``படைகொடு பவனிபோதும் பார் மன்னன்`` எனச் சித்தியாரிலும் கூறப்பட்டது. (சுபக். சூ. 4)

குறிப்புரை :

`மன்னன் உலா வரும்போது அங்கு உறைவோர் துயின்றனர்` என்றதனால், `துயின்றது, அவன் அந்தப்புரத்தில் சென்றபொழுது` என்பது போந்தது. அந்தப்புரமாவது மூலாதாரம். அந்தப்புரத்தில் அரசன் தன் மனையாளைத் தழுவிக் கிடத்தல், உயிர் மூலப்பிர கிருதியைப் பற்றி அதனை யொழித்துப் பிறிதொன்றையும் அறியாது கிடத்தல். இது சகலத்தில் கேவல துரியாதீத நிலையாகும். `சகலத்தில் சகல சாக்கிரம் ஆன்மாவின் அறிவு முற்றாகவும், தீவிரமாகவும் செயற் படும் நிலை எனவும் சகலத்தின் கேவல துரியாதீதம் ஆன்மாவின் அறிவு சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலை எனவும் உணர்க. முற்றாகவும் தீவிரமாகவும் செயற்படும் நிலைக்கு அரசன் குதிரைமீது ஏறி நகர்வலம் வருவதையும், சிறிதும் செயற்படாது மூடமாய்க் கிடக்கும் நிலைக்கு அரசன் அந்தப்புரத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து கிடத்தலையும் நூல்களில் உவமையாகக் கூறுதல் மரபாக உள்ளது. இல்லம் - அவரவருக்கு உரிய இடம். `அவற்றை அடைதற்கு அவர்கள் துடிப்பர்` என்க. `அரசன் உலாவரும்பொழுது அமைச்சர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகச் செயற்படுதல்போலச் சகலத்தில் சகல சாக்கிரத்தில் அனைத்துக் கருவிகளும் நன்கு செயற்படும்` எனவும், `அரசன் அந்தப்புரத்தில் சென்று உறங்கிவிட்டபொழுது தனி யொரு காவலாளியுங்கூட உறங்கிவிடுதல்போல, உயிருக்குக் காவ லாகிய பிராண வாயுவுங் கூட இயங்காது` எனவும் கொள்க. சாக்கிர நிலைக்கு, அரசன் கொலுமண்டபத்தில் அமர்ந்து அரசியலை ஆழ்ந்து நோக்குதலும் உவமையாகச் சொல்லப்படும். `சாக்கிரத்திற்கு இடம் புருவ நடு` என்பது முன்பே சொல்லப்பட்டது. அதனால் அவ்விடம் அரசனது கொலுமண்டப மாகவும் கூறப்படும்.
இதனால், சகலத்தில் விளக்க நிலைகளில் உச்சகட்டமானதும், மூடநிலைகளிலும் உச்சகட்டமானதும் சொல்லப்பட்டன. இவற்றாலே இடையில் உள்ளவற்றின் இயல்புகள் தாமே விளங்கும் என்பது பற்றி.

பண் :

பாடல் எண் : 25

நேரா மலத்தினை நீடைந் தவத்தையின்
நேரான வாறுன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.

பொழிப்புரை :

சகலத்திற் கேவலமாகவும், சகலத்திற் சகலமாகவும் இயல்பாக நிகழ்ந்து வருகின்ற அஞ்சவத்தைகளிலே பாகம் (பக்குவம்) எய்தாத ஆணவமலத்தைச் சகலத்தில் சுத்தமாய் நிகழும் சாக்கிரா வத்தையில் பாகம் எய்தியதாக அறிந்து, அதனானே பஞ்ச மலங்களும் பாகமெய்தியவற்றையும் நன்கு கண்டு, எஞ்ஞான்றும் தனது செம்மை யினின்றும் திரிதல் இல்லாத மேலான பொருளோடுகூடி நிற்பதே உண்மைச் சுத்தாவத்தையாகும்.

குறிப்புரை :

நீடு ஐந்தவத்தை - நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்ற ஐந்தவத்தை என்றதனால் அவை பந்த நிலையில் நிகழும் சகல ஐந்தவத்தைகளாயின. இதனை முன்னர்க் கூட்டியுரைக்க. `நீடு நனவு` என்னும் காலங்கந்த பெயரெச்சத் தொடர், `நீடுதற்கு ஏதுவாகிய நனவு` எனப்பொருள் தந்து, சுத்தசாக்கிரத்தைக் குறித்தது. `ஞானச்செய்தி` - எனப்படும் தச காரியத்துள் முதல் ஆறும் சுத்த சாக்கரமும், ஏனைய நான்கும் சுத்த சொப்பனம் முதலிய நான்குமாம். இவையே சகலத்தில் சுத்தமாம் ஐந்தவத்தைகள். இந்நிலையில் உயிர்தான் தன்னையும், தலைவனையும் அறிதலின் இதுகாறும் அங்ஙனம் அறியாதிருந்தது ஆணவ மலத்தாலே என்பதையும், இப்பொழுது அது நீங்கியதால்தான் இந்த அறிவு நிலை எய்தியதையும் வழியளவையானே தெளிவாக உணரும் ஆதலின் அதனையே, `நேரா மலத்தை நடு நனவினில் நேரானவாறு உன்னி` என்றார். `மூலமலத்தின் இயல்பு விளங்கவே, ஏனைய மலங்களின் இயல்புகள் தாமே விளங்க, எல்லா மலங்களின் இயல்பும் விளங்கினவாம்` என்றற்கு `முன்பு நேராதிருந்த மலம் ஐந்தையும் இப்பொழுது நேரே தரிசித்து` என்றார்.
இந்நிலை துகளறு போதத்தில் `பத்தாம் அவதாரமாகிய கேவலாதீதம்` - எனக் கூறப்பட்டது.
சகலத்தில் சுத்தம் நிலையில்லாது மாறி மாறி நிகழ்வதாக, உண்மைச் சுத்தமே நீங்காது நிற்பதாகலின் அதனை `நித்தம்` என்றார்.
இதனால், `சகலத்தில் நிகழும் ஐந்தவத்தைகளில் சுத்த ஐந்தவத்தைகளும் உள` என்பதும், `ஆயினும் அவை நிலை யற்றனவாக, நிலையானவையாய்ச் சகலத்தோடு தொடர்பு சிறிதும் இல்லாத உண்மைச் சுத்தாவத்தைகளும் உள` என்பதும் கூறப்பட்டன.
சிற்பி