எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை


பண் :

பாடல் எண் : 1

அஞ்சும் கடந்த அனாதிபரம் தெய்வம்
நெஞ்சமுந் தாய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடலுயிர் வேறு படுத்திட
வஞ்சத் திருந்த வகையறிந் தேனே.

பொழிப்புரை :

உருவம் இரண்டு, (வித்தை, ஈசுரன்) உருவாருவம் ஒன்று, (சதாசிவன்) அருவம் இரண்டு (சத்தி, சிவன்) ஆகமுத்திறத்து ஐந்துநிலைகளையும் கடந்து, தன்னியல்பில் நிற்கும் பரசிவனே சுத்த சிவன். (மேற்கூறிய ஐந்தும் அபர சிவங்களாம்.) பரசிவன் - மனத்தையும் கடந்தவன். இயல்பாகவே மலங்கள் இல்லாதவன். எனவே, மாயா சரீரங்களை எடாதவன். ஆகவே, அவன் (தனது திருவருள் காரணமாக) மலங்களுட் பட்டனவாயினும் உண்மையில் அவற்றினும் மேற்பட்ட உயிர்களை முன்னர் மாயாகாரியமாகிய உடலோடு ஒன்று படுத்திப் பின்பு அதனினின்றும் வேறுபடுத்தி உய்வித்தற் பொருட்டு அவ்வுயிர்கள் தன்னை அறியாதபடி அவற்றின் அறிவினுள்ளே கள்வன் போல ஒளித்திருந்தான். எனினும், அவனது கள்ளத்தை நான் அவன் அருளாலே அறிந்து கொண்டேன்.

குறிப்புரை :

`அதனால் பராவத்தையில் உள்ளேன்` என்பது குறிப் பெச்சம். `நீவிரும் இதனை எய்தலாம்` என்பது கருத்து. `அஞ்சு` என்றது ஐம்மலங்களை எனின், `நின்மலன்` என்பது வெற்றெனத் தொடுத்தல் ஆதலும், `தடத்த சிவத்தின் மேற்பட்ட சொரூப சிவமே பரசிவம்` என்பது பெறப்படாமையும் அறிக. `அனாதி` என்றது, செயற்கையோடு கூடாத இயற்கையைத் குறித்தது. `தெய்வம்` என்பது `திவ்வியம்` என்னும் பொருட்டாய்த் தூய்மையை உணர்த்திற்று. `நெஞ்சமும்` என்னும் உம்மை, `நாவையேயன்றி` என, இறந்தது தழுவி நின்றது. `மனம், வாக்கு` - என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந்தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்தின்* உரையிற்காண்க. தாய - கடந்த, `விஞ்சும் உயிர்` எனக் கொண்டு கூட்டுக. `உயிருடல்` என்றே பாடம் ஓதுதலும் ஆம். வேறு படுத்துதல் கூறினமையால், முன்பு ஒன்றுபடுத்தினமை பெறப்பட்டது. `திருவருளால்` என்பதும் `அவன் அருளால்` என்பதும் ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.
இதனால், `பராவத்தைக்கு நிலைக்களம் பரம்பொருள்` என்பதும், அதன் சிறப்பியல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சத்தி பராற்பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர்விந்து
சத்தி அம் மாயை தனுட்சக்தி ஐந்துடன்
சத்தி பெறும்உயிர்தான் அங்குற் றாறுமே.

பொழிப்புரை :

(குண குணிகட்குத் தம்முன் வேற்றுமை யின்மையால்,) `சத்தியே சிவம்` என்று கூறலாம். எனினும், சத்தியை ஆள்வது பொருளேயாதலின், சிவத்தினின்றே சத்தி தோன்றுகின்றது. (அஃதாவது செயற்படுகின்றது.) அதனால் உயிர்கட்கு, அமைதியைத் தருவதும், மேலான ஆனந்தமாய் விளைவதும் பராசத்தியே. இனி அந்தச் சத்தியினால் தான் சுத்தமாயையாகிய சத்தி காரியப்படுகின்றது. அது காரியப்படும் நிலையில் சிவசத்தி, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என ஐந்தாய் இருக்கும். அந்த ஐந்துடனும் கூடுவதனாலே தான் உயிர் ஆற்றலைப் பெறுகின்றது. ஆகவே, உயிர் அமைதியை அடைந்து, ஆனந்தத்தைப் பெறுவது பரையாகிய சத்தியிடத்தில்தான்.

குறிப்புரை :

`சத்தியேபராற்பரம்` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல் பெற்றது. பராற் பரம் - மேலானவற்றிற்கெல்லாம் மேலானது; `தனில் ஆன சத்தி சாந்தி; பரானந்தம்` எனவும், `தன்னில் விந்து சத்தி சுடர்` எனவும் கொண்டு கூட்டுக. விந்துவின் (சுத்த மாயையின்) சத்தி, மோகினியின் (அசுத்த மாயையின்) சத்திபோல மயக்குதலைச் செய்யாது, தெளிவைச் செய்தலின் அதன் சத்திகாரியப் படுதலை `சுடர்தல்` என்றார். சுடர், முதனிலைத் தொழிற்பெயர். `சுடர்தல் நிகழும்` எனப் பயனிலையும் `உடன்` என்பதன்பின், `கூடி` என்னும் சொல்லெச்சமும் `உயிர்` என்பதன்பின் `ஆகலின்` என்னும் சொல்லெச்சமும் வருவிக்க. ஆறும் - சாந்தி யடையும். ஆகவே, ஆனந்தத்தை அடைதல் சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `பராவத்தையாவது உயிர்பராசத்தியைப் பொருந்தி நிற்றல்` என்பதும், `அவ்விடத்து அதற்கு அமைதியும், அதன் வழியாக ஆனந்தத்தையும் பராசத்திதரும் என்பதும் தெரித்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆறாறுக் கப்பால் அறி(வு)ஆர் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருள் ஆர் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரன்இனி தாமே.

பொழிப்புரை :

முப்பத்தாறு தத்துவங்களும் சடமேயாதலின் சித்தாகிய பரம்பொருள் அத்தத்துவங்கள் அனைத்திற்கும் அப்பாற் பட்டதாம். (அந்தப் பரம் பொருளை யடைதலே பராவத்தை) இந்தச் சடசித்துக்களைப் பகுத்து, சித்தின் இயல்பை அறிபவரும் அரியர். அந்தச் சித்துப் பொருளின் குணமே அருள் ஆதலின், அப்பொருளை அறிந்து அருளைப் பெறுபவரும் அரியர். உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது. ஆகலின், அறிவே வடிவான பரம் பொருளைச் சார்ந்து அறிவே வடிவாய்விட்ட அவர்கட்குத்தான் சிவன் அளவிலா இன்பப் பொருளாய் இன்புறுத்துவான்.

குறிப்புரை :

இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது. இனிச் சொற்பின்வருநிலையணி பெற்றதாகக் கொண்டு. `ஆறு` என்பவற்றிற்கு வேறு வேறு பொருள் உரைப்பாரும் உளர். `இனிது` என்றது, `இன்பப் பொருள்` என்றதாம். இனி இதனை வினையெச்சக் குறிப்பாகக் கொண்டு, `நன்கு விளங்குவான்` என உரைப்பினும் ஆம்.
இதனால், `பராவத்தை அறிவு, அருள், ஆனந்த மயமானது` என்பதும், `அதனால், அதனை மடமை, வன்கண்மை, துக்கமயமாகி நிற்பவர் அடைதல் அரிது` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

அஞ்சொடு நான்கும் கடந்(து) அகமேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சற நாடின் நயஞ்செய்யு மாறே.

பொழிப்புரை :

வித்தியா தத்துவங்கட்கு முதற் காரணமாய் உள்ள அசுத்த மாயையைக் கடந்து சிவத்துவத்தை அடைந்தமையால் `வித்தியாதரர்கட்குத் தலைவன்` எனச் சொல்லுதற்குரியசாதகன், பிராசாதகலைகளில் ஒன்பதைக் கடத்தலால், சுத்த மாயாகாரியங் களையும் கடந்த ஒருநிலையைப் பெற்றுப் பத்தாம் கலையாகிய வியாபினி கலையில் நின்று, அருட் சத்தியை வஞ்சம் அற்ற நெஞ்சுடன் நாடுவானாயின் அஃது, ஒன்பது அடுக்குக்களுக்கு மேல் உள்ள பத்தாவது மாடியில், காலில் செம்பஞ்சு ஊட்டுதல் முதலிய ஒப்பனை களுடன் கட்டிலில் உறங்குகின்ற தலைவியைத் தலைவன் அடைந்து, அவளோடு இனிய சொற்களைக் கூறுவது போன்றதாகும்.

குறிப்புரை :

இங்கு, மெல்லியலாளுக்கு ஒப்பாகச் சொல்லப்பட்டது அருட்சத்தியேயாகலின், `அஞ்சொடு நான்கும்` என்றது, பொதுப்பட `ஒன்பது` என்னும் பொருட்டாய்ப் பிராசாத கலைகளில் கீழுள்ள ஒன்பதைக் குறித்தது. ஆகவே, `அகம்` என்று பத்தாவதாகிய வியாபினிகலையாயிற்று.
`விஞ்சையர் வேந்தனும் அஞ்சொடு நான்கும் கடந்து, அகமே புக்கு, நஞ்சு அற நாடின்(அது) நயம் செய்யும் ஆறு` எனக் கூட்டிப் பொருள் கொள்க. `அது` என்பது தோன்றா எழுவாய். `பஞ்சு அணிகால் அத்தோடு துயில்கின்ற` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. அது, பகுதிப் பொருள் விகுதி. அத் தோடு, `அதனோடு` என்பதன் மரூஉ. காலில் செம்பஞ்சுக் குழம்பூட்டுதல், ஏனை ஒப்பனைகளுக்கு உபலக்கணம். `செல்வர் இல்லத்து இளமகள் நலத்தை வேண்டினோன், பல மாடிகளைக் கடந்து மேல்மாடியில் சென்றவழியே அவனைத் தலைப்பெய்தல் கூடுவது போலச் சுத்த சிவனது அருட்சத்தியை அடைய வேண்டினோன் பிராசாத யோகத்தில் பல படிகளைக் கடந்து மேலே சென்றபொழுதே அந்தச் சத்தியை அடைதல் கூடும்` என்றபடி.
``கிடந்த கிழவியைக் கிள்ளி யெழுப்பி
உடந்தை யுடனே நில்``l
என்றார் திருவுந்தியார் ஆசிரியர். `அவள் கிடக்கும் இடம் பத்தாம் தானம்` என்பதை இம்மந்திரத்தால் அறிகின்றோம். பத்தாம் தானத்தைக் கடந்து நான்கு தானங்கள் அந்தரமாய் நிற்க. அப்பால் உள்ள இரண்டு தானங்கள் சிவன் இருக்கும் ஆத்தானம் ஆகும். இன்ப வழியாதல் பற்றி, `கிழவி` என்றும்` `மெல்லியலாள்` என்றும் சொல்லப் படினும், `தாயுடன் சென்றே பின் தாதையைக் கூடவேண்டும்`3 என்பது பற்றி, `சத்தியை முதற்கண் சார்தல் வேண்டும்` எனக் கூறினார்.
`சத்தி ஐந்துடன் - சத்தி பெறும் உயிர் தான் அங்குற்று ஆறுமே` என முன் மந்திரத்திற் கூறினார். அதனை ஞான நெறியாற் கூட இயலாபொழுது, பிராசாத யோக நெறியால் கூடுதல் கூடும்` என்பது இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

உரிய நனாத்துரி யத்தின் இவன்ஆம்
அரிய துரிய நனாவாதி மூன்றில்
பரிய பரதுரி யத்தில் பரன்ஆம்
திரிய வரும்துரி யத்தில் சிவமே.

பொழிப்புரை :

எளிதில் இயல்பாக நிகழும் சகல சாக்கிர துரியம் போலவே, அரிதில் சாதித்து அடைவதாகிய நின்மல துரியத்திலும் ஆன்மா, ஆன்மாவாய்த்தான் இருக்கும். ஆயினும், வியாபகமாகிய பர துரியத்தில் அது மேல்நிலையை அடையும். அந்தத் துரியம் வேறுபட நிகழ்கின்ற பரதுரியாதீதத்தில் தான் ஆன்மாச் சிவமாம் தன்மையை அடையும்.

குறிப்புரை :

முன் மந்திரத்தில் `விஞ்சையர் வேந்தன்` என ஒப்புமைப் பெயரால் குறிக்கப்பட்ட ஆன்மாவை இங்கு எழுவாயாக வருவிக்க. பின்னர் `அரிய` என வருதலால், முன்னர், `உரிய` என்றது எளிதில் இயல்பாக நிகழ்வதாயிற்று. நனாத் துரியம் - சகல சாக்கிரமாகிய மத்தியா லவத்தையில் நிகழும் துரியம். `துரியத்தின்` என்பதில் உள்ள `இன்` உருபு. ஒப்புப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை உருபு. ``மூன்றில்`` என்னும் ஏழாவதனை முடிப்பதாகிய `இவன் ஆம்` என்பது அவ்வேற்றுமைக்குப் பின்னர் வாராது, முன்னர் வந்தது. பருமை - வியாபகத்தைக் குறித்தது. எனவே, பராவத்தையில் தான் ஆன்மா உண்மையாக அணுத்தன்மை நீங்கி, விபுத்தன்மையை அடைதல் பெறப்பட்டது. `பரன்` என்பது, பொதுப்பட, `மேல் நிலையன்` எனப் பொருள் தந்தது. அது வியாபக நிலையன் ஆயினமையைக் குறித்ததேயாகும். திரிதல் - வேறுபடுதல். `திரிய வரும் துரியம்` என்றது, துரியம் வேறுபட, அதன்பின் நிகழும் அதீதத்தைக் குறித்தது. `ஆம்` என்றதை இறுதியிலும் கூட்டுக.
இதனால், பராவத்தை நின்மலாவத்தையினும் உயர்ந்ததாதல் இனிது விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பரமாம் ஆதீதமே பற்றறப் பற்றப்
பரமாம் ஆதீதம் பயிலப் பயிலப்
பரமாம் ஆதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

பொழிப்புரை :

`பராவத்தையிலும் அதன் முடிநிலையாகிய அதீதத்தை அடைதல் வேண்டும்` எனக் கூறுதல், சிறிதே எஞ்சி நிற்கும் மலவாசனை நீங்குதற் பொருட்டாம். (வாசனை, `இலய மலவாசனை` என்க.) இனி அந்த அதீதத்தைத் தலைப்பட்ட பின்பும் விடாது தொடர்ந்து அதிற்றானே பழகிப் பழகியிருந்தால்தான், ஆன்மாச் சிவமாம் தன்மையைப் பெறும். ஆகவே, அதில் அவ்வாறு தொடர்ந்து பழகா தவர்கள் எத்துணைச் சாதகங்களைச் செய்தவராயினும் அவர் சிவமாம் தன்மையை அடையார். அத்தன்மையை அடையாமையால், சிறிதளவு எஞ்சி நின்ற பாசமும் நீங்காமல் இருந்துக் கொண்டேயிருக்கும்.

குறிப்புரை :

`அவ் இருப்பு எல்லையில் இன்பத்திற்குத் தடையாகும்` என்பது கருத்து. ``பற்றறப் பற்ற`` - என்பதற்குக் கருத்து நோக்கி இவ்வாறு உரை கூறப்பட்டது.
``பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு``l
எனத் திருவள்ளுவரும்,
``பற்றை அறுப்பதோர் பற்றினைப் பற்றில், அப்
பற்றை அறுபர்என் றுந்தீபற``3
எனத் திருவுந்தியார் ஆசிரியரும் அருளிச் செய்தமை காண்க.
இன்னும் திருவுந்தியார் ஆசிரியர்,
``பழக்கந் தவிரப் பழகுவ தன்றி,
உழப்புவ தென்பெண்ணே, உந்திபற;
ஒருபொரு ளாலேயென் றுந்திபற``*
என்றமையும் அறியற்பாற்று. பாசம் - பாச வாசனை. ஒன்று - சிறிது, அஃது அவ்வளவிற்றாகிய பாச வாசனையைக் குறித்தது. `ஒன்றும்` என உம்மை விரிப்பின், அது நின்மலாவத்தையைப் பயனிலதாகச் செய்தல் உணர்க. ``பற்று`` என்றதை, `குறிகளும் அடையாளமும் கோயிலும்`3 ஆக உரைததாரும் உளர்.
இதனால். பராவத்தையிலும் அதீதம் இன்றியமையாதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆயும்பொய் மாயை அகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய அறிவு சிவானந்த மாகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

பொழிப்புரை :

பல சமயத்தாராலும், `எத்தன்மைத்து` என ஆராயப் படுவதாய், அருவமாய் நிற்கும்மாயை, சிவத்திற்கு வேறும் ஆகாமல், ஒன்றும் ஆகாமல் இடைப்பட்டதாய் இருக்கும். அதனால், வாக்கு மனங்கள் நீங்கிய பின்பும் வாசனை யளவாய் நிற்கின்ற அந்த மாயை அறவே நீங்கினால், அறிவு முழுத் தூய்மை அடைந்து, அதனால் சிவானந்த மயமாகிப் பின்பு அந்தச் சிவானந்தத்தால் விழுங்கப்பட்ட பொருளாகிவிடும்.

குறிப்புரை :

`பொய்` என்றது கண்ணுக்குப் புலனாகாமையே. அகம் புறமாய் நிற்றல், சிவத்தில் வியாப்பியமாய உயிரில் வியாத்தியாய் நிற்றல், `வாக்கு, மனம்` என்பவற்றின் உண்மைப் பொருளை, `சாக்கிரந் தன்னில் அதீதம் தலைப்படின்` என்னும் மந்திரத்து8 உரையிற் காண்க. வேய்தல் - மூடுதல்; அகப் படுத்தல். `விளைவது` என எதிர்காலத்தில் கூறற்பாலது, துணிவு பற்றி, ``விளைந்தது`` என இறந்த காலமாகக் கூறப்பட்டது.
இதனால், பராவத்தையில் அதீதத்தில் செல்லவேண்டுதற்குக் காரணம் கூரப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்(கு)
உரிய வினைகள்நின்(று) ஓலமிட் டன்றே.

பொழிப்புரை :

பர துரியமாகிய குதிரைமேல் ஏறிய ஆன்மா, அதனை விடுத்து, அதற்குமேல் உள்ள அதீதமாகிய புலிக்குள் தன்னைப் புகவிடுமாயின், புலியால் கௌவிக் கொள்ளப்பட்ட ஆட்டினை நரிகள் பற்ற மாட்டாது அஞ்சி ஒடிவிடுதல் போல, அந்த ஆன்மாவை மாயாகாரியங்களாகிய தத்துவங்கள் அணுகமாட்டாது நீங்கிவிடும். (அஃதாவது, `செயல் இழந்துவிடும்` என்பதாம்) மாயா கருவிகள் நீங்கினமையால் பிராரத்த கன்மம் வந்து பற்றமாட்டாது ஒழியும்.

குறிப்புரை :

`விசாக்கிரம், வியாக்கிரம்` என்னும் சொல் ஒற்றுமைப் பற்றி பராவத்தையில் முடிவான அதீதத்தைப் புலியாக உருவகிக் கின்றவர், அதற்கேற்பத் தத்துவங்களை நரிகளாக உருவகித்தார். அத னானே ஆன்மா ஆடாக உருவகிக்கப்பட்டதும் விளங்கும். `ஆட்டை உண்பன நரியும், புலியும் ஆயினும், புலிபற்றிக் கொண்ட ஆட்டினை நரி அணுகமாட்டாது. அதுபோல ஆன்மாவை உட் கொள்வன மாயா கருவிகளும், சிவமும். ஆயினும் சிவத்தால் பற்றிக் கொள்ளப்பட்ட ஆன்மாவை மாயா கருவிகள் அணுக மாட்டா` என்பது நயம்.
நாதர் - தலைவர். இங்கு, ஞானத்தலைவர். உரியவினை, முகந்து கொண்ட பிராரத்த வினை. ஓலமிடுதல் - அஞ்சி, தீங்கு செய்யாதிருக்கும்படி முறையிடுதல். `ஓலமிட்டன்று` என்றது, `ஈயென இரத்தல் இழிந்தன்று`* என்பது போல, `ஓலமிட்டது` என்பதாம். இது பன்மை யொருமை மயக்கம்.
இதனால், பர துரியாதீதத்தை அடைந்த ஆன்மாவை மாயை கன்மங்கள் தொடராமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

நின்ற இச் சாக்கரம் நீள்துரி யத்தினில்
மன்றறும் அங்கே மணம்செய்ய நின்றிடும்
மன்றன் மணஞ்செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன்வடி வாமே.

பொழிப்புரை :

இங்குச் சொல்லிவாராநின்ற இந்தச் சாக்கிரமுதலிய அவத்தைகளில் துரியத்தை அடைந்த போதிலும் சிவன் அனைத்தும் கடந்த வெற்ற வெளியான அதீத நிலையில் இருப்பவன் ஆதலால், அவ்விடத்திலே உயிரைக் கூட இருப்பான். (துரியத்தில் வந்துகூட மாட்டான்.) அவன் உயிரைக் கூடினால்தான் உயிர்க்கு உலக உணர்வு மறையும். அப்பொழுது அது சிவ உணர்வு ஒன்றேயுடையதாய்ச் சிவமாகும். (எனவே `உயிர் அதீத நிலையை அடைதல் வேண்டும்` என்பதாம்.)

குறிப்புரை :

அதிகாரம் `பராவத்தை` ஆதலின், பராவத்தையை `நின்ற இச் சாக்கிரம்` என்றார். சாக்கிர நீள் துரியம் - சாக்கிரத்தினின்று நீண்டுசெல்ல உளதாகின்றதுரியம். மன்றல் - அம்பலவன். அம்பலம் - வெற்ற வெளி. அது அனைத்தும் கடந்த அதீத நிலையைக் குறித்தது. `மாயை` என்பது காரிய ஆகுபெயராய் உலகத்தை உணர்த்தி, இருமடி யாகுபெயராய் உலக உணர்வை உணர்த்திற்று. கூடுதல், புணர்தல் முதலிய சொற்களாற் கூறாமல், `மணம்` என்னும் சொல்லாற் கூறினமையால், அது, தலைவன் தலைவியை ஈருடல் ஓருடலாக முயங்குதல் போல இரண்டறக் கலத்தலைக் குறித்தது. எனவே, `துரியம் முதலிய பிற நிலைகளில் சிவன் உயிரோடு, கேளிர், கிளைஞர் முதலியவரோடு தலைப்பெய்தல் போலத் தலைப்பெய்திருப் பானாயினும் இரண்டறக் கலத்தல் அதீதநிலையில்தான் என்றதாயிற்று.
``அவன் இவன் ஆனது அவன் அருளால் அன்றி,
இவன் அவன் ஆகான் என் றுந்தீபற``3
என்பர் ஆதலால், `உயிரை வந்து மணப்பவன் சிவனே` எனக் கூறினார். அன்றே - அப்பொழுதே.
இதனால், `சிவன் தன்னிலையில் நிற்பது சுத்த துரியாதீத நிலை` என்பது கூறும் முகத்தால், `அதனை ஆன்மா அடைதலே அது பேறு பெறும் நிலையாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை யீடான மாயை
பொருந்தும் துரியம் புரியில்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதல லாதே.

பொழிப்புரை :

சிவத்திற்கும், ஆன்மாவிற்கும் இடையே நிற்பதாகிய மாயை தனது நிலையினின்று விருத்திப் படுமாயின் ஆணவ இருளில் உள்ள உயிர்கட்கு விளக்குப் போல உதவும். அதனாலேயே மத்தியாலவத்தை நிகழும் துரியத்தில் ஆன்மாப் பாசத்தினின்றும் நீங்காது அழுந்திநிற்கும். (ஆதலின் அஃது ஆன்மா அடைதற்குரிய துரியம் அன்று.) அஃது அடைதற்குரிய துரியம் பரதுரியமே. அதனை அடைந்தால் அது பாசங்கள் நீங்கித் தூயதாம்.

குறிப்புரை :

`இடையீடான மாயை இருந்த இடத்து விரிந்திடின் விளக்காய்ச் சாக்கிரம் மேவும்` என மாற்றி இதன் பின் ஈற்றடியைக் கூட்டுக. `ஆய்` என்பதை ஆக` எனத் திரிக்க. `தெரிந்த துரியம்` என்பது, `எல்லார்க்கும் அனுபவமாய் அறியப்பட்டதுரியம்` என மத்தியாலவத்தைத் துரியத்தைக் குறித்தது. `தீது அகலாது` என்றதனால் அது பொருந்தி தாத் துரியம் ஆயினமையின், `பொருந்துந் துரியம்` என்றது பரதுரியம் ஆயிற்று. தான் ஆதல், ஆன்மாப் பாசமாய் இருந்த நிலையின் நீங்கித் தானேயாய் இருத்தல்.
இதனால், `துரியம்` என்பது உயர்வுடையது போலக் கூறப்பட்டாலும், உண்மையில் உயர்ந்த துரியம் பர துரியமே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

உன்னை யறியா(து) உடலைமுன் நான்என்றாய்
உன்னை யறிந்து துரியத் துறநின்றாய்
தன்னை யறிந்தும் பிறவி தணவாதால்
அன்ன வியாத்தனம லன்னென் றறிதியே.

பொழிப்புரை :

மாணவனே, நீ கீழாலவத்தை மத்தியாலவத்தை -களில் நின்ற பொழுது உன்னையே நீ, `யார்` என்று அறிந்து கொள்ளாது, உடம்பையே, `நான்` என்று சொல்லிக் கொண்டிருந்தாய். பின்பு, நின்மலாவத்தையை அடைந்தபொழுது உன்னை நீ, `சடமாகிய உடம்பின் வேறாகிய சித்துப் பொருள்` என அறிந்து, அதன்கண் துரிய நிலையிலே சிவன் உன்னையே தானாகக் கொண்டு நிற்கும்படி அவனது அருள் வழியில் நின்றாய், எனினும் ஆன்மாத் தன்னையும், தலைவனையும் அறிந்து அவனது அருள் வழியில் நின்ற அளவிலே அதற்குப் பிறவி நீங்கி விடாது. `சிவன் எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்து நின்றானாயினும், அவனது உண்மை நிலை பிறிதொன் றோடும் கூடாது அனைத்தினும் வேறாய் நிற்கு தூய்மையே` என்பதை அறிந்து, அவனை அந்நிலையிலே சென்று தலைப்படமுயல்.

குறிப்புரை :

`அம்முயற்சியாவது, நின்மலாவத்தையையும் கடந்து பராவத்தையை அடைய முயலுதல்` - என்பது குறிப்பு, ஈற்றில் தந்துரைத்தது இசையெச்சம். `முள்` என்றது, `ஞானவத்தைக்கு முன்` என்றது. ஆகையால் அது, கீழாலவத்தை மத்தியாலவத்தைகளையும், அறிதல் ஞானத்தினால் ஆதலின், `அறிந்து` என்றது, ஞானாவத்தை யாகிய நின்மலாவத்தையையும் குறித்தன. உறுதற்கு வினை முதல் வரு வித்துக் கொள்க. `அமலன்` என்றது, `சகலாவத்தைக்கு அப்பால் நிற்பவன்` என்பதைக் குறிப்பினால் உணர்த்தியது. எனவே, சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையும் கடந்து, பராவத்தையில் செல்லுதல் வேணடும்` என்பது போந்தது. அன்ன வியாத்தன் - அத்தன்மை யாதான ஒரு நிறைவினையுடையவன்.
இதனால், நின்மலாவத்தையும் சகலத்தில் சுத்தமேயாக, பராவத்தையே உண்மைச் சுத்தம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

கருவரம பாகிய காயத் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்(று)அவர் கூடிய பின்னை
இருவரும் இன்றிஒன் றாகிநின் றாரே.

பொழிப்புரை :

கருவிற்கு உட்படுதலையுடைய உடம்பில் நிகழ் வதாகிய துரியத்தில் நீயும், சிவனும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டீர்கள். (அது போதாது; ஏனெனில்,) பிறப்பு இறப்புக்களிற் பட்டு உழல்கின்றவர்கள். ஞான குருவின் அருளைப் பெற்றுச் சிவனும், தாமும் வேறறக் கலந்த பின்பே தாம் சிவனின் வேறாய சீவராய் நில்லாது. சிவமாகி நிற்பர்.

குறிப்புரை :

`அங்ஙனம் நின்றவரே பிறப்பிறப்பு அற்றவராவர்` என்பது குறிப்பெச்சம். `துரியத்தில்` - ஏழாவது விரிக்க. `துரியத்து` எனப் பாடம் ஓதுதலும் ஆம். கூடுதலுக்குச் செயப்படுபொருளாகிய `சிவனை` என்பது வருவிக்க. `கண்டீர்` என்றதனால், அது சிவ தரிசனமும், `கூடிய` என்றதனால் அது சிவயோகமும் ஆயின. சிவ தரிசனமும் குருவருளால் பெறற்பாலதே யாயினும் பிறப்பறுதியைத் தரும் சிறப்புப் பற்றிச் சிவயோகமே குருவருளால் பெறப்படுவது போலக் கூறப்பட்டது. சிவதரிசனத்தளவில் நின்றவர் பிறப்பெய்து தலை நோக்கிச் சிவயோகத்தில் நின்றவர் பிறப்பெய்துதல் சிறு பான்மையாதலின், அவர்களைப் பிறப்பறப்பு அற்றவராகக் கூறினார். அங்ஙனம் கொள்ளாக்கால் மேல், ``தன்னையறிந்தும் பிறவி தணவாது`` என்றதனோடு முரணும் என்க. சிவயோகமே துரியமாக, சிவதரிசனம் சுழுத்தியே யாயினும் அது துரியத்தின் தோற்றுவாயாதல் பற்றி அதனையும் `துரியம்` என்றார். `நின்றார்` என்பது, துணிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாக வந்த கால வழுவமைதி.
இதனால், `தம்மை உணர்ந்து தலைவனை உணர்தலாகிய நின்மலாவத்தைய அடைதற்குக் குருவருள் வேண்டும்` என்பது கூறப்பட்டது. `அவ்வாற்றால் நின்மலாவத்தையை அடைந்து பராவத்தையை எய்துதல் கூடும்` என்றற்கு.

பண் :

பாடல் எண் : 13

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணுஅசை விற்பரா தீதம். சுழுத்தி
பணியில் பாதுரி யம்பரம் ஆமே.

பரதுரி யத்து நனவும் பரந்து
விரிசகம் உண்ட கனவும்மெய்ச் சாந்தி
உருவுறு கின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவதுரி யத்தனு மாமே.

பொழிப்புரை :

(`மேலாலவத்தை` என்றும், சகலத்தில் `சுத்தா வத்தை` என்றும் கீழ் உள்ளவைகளை நோக்கிச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற யோகாவத்தைகள் அது காரணம் பற்றியே `துரியம்` எனப்படும். (துரியம் - மேற்பட்டது) ஆயினும், அதில் சீவத் தன்மை நீங்காமையால் அவை சீவதுரியமேயாம். அவையே இங்கு `அணுவின் துரியம்` என்றும் `அணுவசைவு` என்றும் சொல்லப்படுகின்றன.
சீவ துரியமாகிய யோகாவத்தையில் உள்ள, `சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்` என்பன தாழ்வுடையனவே - என அறியப்பட்டால், அதன் பின்பே பராவத்தை உளதாகும். அந்தப் பராவத்தையே அவத்தைகளில் எல்லாம் மேலான அவத்தை.

குறிப்புரை :

`ஆகவே - மேலாலவத்தை - எனக் கூறப்படுதலே பற்றி அவற்றையே `பராவத்தை` - என மயங்கற்க` என்பதாம்.
`யோகில் - தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்து பின் சனனம் சாரும்`
-சுபக்கம் சூ.5.34.
என்னும் சிவஞான சித்தி மொழி மேலேயும் எடுத்துக்காட்டப் பட்டது. செய்யுள் நோக்கிச் சுழுத்தி இறுதியில் வைக்கப்பட்டது. பராதீதம் - பரமும் அதீதமும்; உம்மைத் தொகை. இதன் பின்னும், `சுழுத்தி` என்பதன் பின்னும் எண்ணும்மை விரிக்க. `பரம்` என்றது துரியத்தை. பணிதல் - தாழ்தல். அஃது இங்கு அறிபவனது அறிவில் அத்தன்மை யதாய் விளங்குதலைக் குறித்தது.
இதனால், பராவத்தை பற்றியதோர் ஐயம் அறுக்கப்பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படுகின்ற `பரதுரியத்து நனவும்` என்னும் பாடல் மிகையாகத் தெரிகின்றது)

பண் :

பாடல் எண் : 14

பரமாம் நனவின்பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவு சிறந்த சுழுத்தி
உரமாம் உபசாந்தம் முற்றல் துறவே
தரனாம்சிவதுரி யத்தனும் ஆமே.

பொழிப்புரை :

பராவத்தையில் சாக்கிரம் சீவன் முத்தி அதில் உலக அனுபவம் சிவானுபவமாய் நிகழும், (அதுவே,
`பெற்றசிற் றின்பமே பேரின்பமாம்`l
எனக் கூறப்பட்டது.) அந்த அனுபவம் அதிகார முத்தியில் பழக்க வாசனையாய் நிகழும். அதுவே பர சொப்பனம். போக முத்தியில் அந்த வாசனையும் தாக்கமாட்டாது நீங்கும். அதுவே பர சுழுத்தி. (இதில் சுத்த தத்துவ போகத்தில் இச்சையுண்டாம்) அந்த இச்சையும், அதனால் வரும் அந்தப் போகமும் அடங்கி நிற்றலே `உபசாந்தம்` எனப்படும். அது பர துரியம். அதை அடைந்தவன் மேல்நிலையை அடைந்தவனாவன். `சிவ துரியம்` எனப்படுகின்ற நின்மலத் துரியத்தை அடைந்தவனும் இந்நிலையை அடைந்தே உயர்வு பெறுதற்குரியன்.

குறிப்புரை :

காயம் இருந்து நீங்கின பாத்திரத்தில் அதன் வாசனை பதித்திருத்தல் போன்ற பதிவை, `திரம்` என்றார். திரம் - நிலைப்பு. `கனவில் வாசனை உண்டாம்` என்றதனால், நனவில் அனுபவந் உண்மை பெறப்பட்டது. வாசனை தாக்காத உறுதி. `உறும்` எனப் பட்டது. `உரம் சிறந்த சுழுத்தியாம்` என்க. முற்றல் - முதிர்தல். துறவு - கீழ் நிலைகளின் நீங்குதல்; அது துரியம். `சிவ துரியத்தனும் ஆம்` என்பது `ஒரு தலையாக ஆவன்` என்றதாம். உபசாந்தம் துரியம் ஆகவே, இன்பம் துரியாதீதம் ஆயிற்று. ஆகவே, `முடிநிலை உயர்வு பராவத்தையே` என்பது பெறப்பட்டது.
இதனால், பராவத்தைகளின் இயல்பும், `அவைகளே முடிநிலை உயர்வு` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 15

சீவன் துரியம் முதலாகச் சீராக
ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்(து)
ஓவும் பரானந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நாலேழ் விடுத்துநின் றானே.

பொழிப்புரை :

`சிவதுரியம்` எனப்படுவது, யோகாவத்தையில் இமயம் முதலிய எட்டில் ஏழாவதாகிய `தியானம்` என்பது. `சிவ துரியம்` எனப்படுவது, தசகாரியத்துள் ஒன்பதாவதாகிய சிவயோகம். இவ்வொன்பதில் ஆன்ம சுத்தி சிவ தரிசன சிவயோகங்களில் அடங்கிவிடுதலால், எஞ்சிய எட்டோடு, யோகாவத்தையில் `தியானம் சமாதி` - என்னும் இரண்டைக் கூட்ட, சீவதுரியம் முதலாகச் சிவ துரியம் ஈறாக உள்ள அவத்தைகள் பத்தாம். ஆகவே, இந்தப் பத்த வத்தைகளையும் கடந்து, சிவானந்தந் தருவதாகிய உண்மைச் சுத்தா வத்தை அடைந்தவனே, தான் முன்பு கட்டுண்டிருந்த அனைத்துத் தத்துவங்களினின்றும் நீங்கினவனாவன்.

குறிப்புரை :

`மேலாலவத்தை` எனப்படுதலால் யோகாவத்தையில் நிகழும் துரியம் சகலத்திற் சுத்தமே யாகையால், அது சீவ துரியமாம். எவ்வாறெனில், சகலத்தில் நிற்கும் உயிரே சிவன் ஆகலின். இனி- ஞானாவத்தையும் சகலத்தில் சுத்தமாயினும் அது ஞான குருவின் அருளால் ஞானத்தைப் பெற்றபின் அதனை முற்றுவிக்கும் நிலை யாதலின் அதன்கண் நிகழும் துரியம் சிவதுரியமாம். தசகாரியத் துள்ளும் `சிவயோகம்` என்றே சொல்லப்படுதல் நினைக்கத் தக்கது. என்னும், உண்மைச் சுத்தாவத்தையாகிய முத்தி வகைகளே பரா வத்தை யாதலின், அதன்கண் நிகழும் துரியம் பர துரியமாம். அதன் பின் நிகழும் அதீதமே சாயுச்சிய முத்தியாகலின், அந்நிலையில் விளையும் ஆனந்தமே முடிநிலைப் பேரானந்தம் ஆதலின் அது பரானந்தமாகும். பரானந்தத்தை அடைந்தவன் பரானந்தி. உண்மைச் சுத்தத்தை, உண்மை` என்றும், `அனைத்துத் தத்துவங்களும்` எனக் கூற வந்தவர் அதனை வேதாந்திகளும் உணரும் வகையில், `மேவிய நாலேழ்விடுத்து நின்றான்` என்றும் கூறினார். `அந்தம்` என்பதன் பின்னும் ஆக்கம் வருவித்து, `சீவன் துரியம் முதலாகச் சிவன் துரியம் அந்தமாகச் சீராக ஆவ அவத்தை பத்து` என முடிக்க.
இதனால், யோகாவத்தை, தசகாரியம் இவற்றை வைத்து நோக்கின், சுத்தாவத்தைகள் பலவாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

பரம்சீவன் மேலாம் பரமம் பரத்தின்
பரம்பரன் மேலாம் பரநன வாக
விரிந்த கனாஇடர் வீட்டும் சுழுனை
உரந்தகும் ஆனந்திஆம் உண்மை தானே.

பொழிப்புரை :

`பரம்` என்பது `மேல்` என்னும் பொருளது ஆதலின், `எங்கும் பரன் என்று சொல்லப்படுகின்ற சிவன், மேலானவன்` - என்பது போதரும். இனி, `பரமம்` என்பது பரத்தினும் உயர்ந்த மேன்மையைக் குறிக்கும். ஆகவே, `பரம்பரன்` என்று சொல்லப்படுகின்ற சிவனே மேலான சிவன். அவனைத் தலைப்படும சீவன் முத்திநிலையே பரசாக்கிரம். (அதில் பிராரத்தம் உயிரைத் தாக்காவிடினும் உடலூழாய் வந்து போகும்.) `பர சொப்பனம்` எனப் படுகின்ற அதிகார முத்தியில் பிராரத்துவத் தொடர்பு உண்டாகாது. பர சுழுத்தியாகிய போக முத்தியிலும், பர துரியமாகிய இலய முத்தியிலும் ஞானம் முற்றி நிற்கும். பரதுரியாதீதமாகிய பரமுத்தியில் சிவானந்தப் பெருக்கு உளதாம். இவையே உண்மைச் சுத்தாவத்தைகளாம்.

குறிப்புரை :

`பரமம் பரத்தின் மேலாம்` என இயைக்க. `பரன்` என்பதை `சொரூப சிவன்` என்றும், `சிவன்` என்பதை தடத்த சிவன் என்றும் நாயனார் கொள்கின்றார். `பர நனவாக` என்பதோடும் `இடர்` என்பதைக் கூட்டி. `பரநனவில் (இடர்) ஆக விரிந்த கனா இடர் வீட்டும்` என முடிக்க. விரிந்த கனா பர சொப்பனம். எனவே, `சுழுனை` என்றதும் பர சுழுத்தியே ஆயிற்று உயிர் ஆனந்தியாதல் பரா தீதத்தில் ஆதலின், அதற்கு முன்னேயுள்ள துரியமும், `உரந்தகும்` என்றதிலே அடங்கிற்று. அனைத்தையும் `உண்மை` என ஒன்றாய் அடக்கினமையின், `தானே` என ஒருமை அசையே கூறினார்.
இதனால், பராவத்தைகளே உண்மைச் சுத்தாவத்தைகள் ஆமாறு காரண வகையாலும், பயன் வகையாலும் வலியுறுத்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 17

சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேலாய விந்து சதாசிவம் மிக்கோங்கிப்
பாலாய்ப் பிரமன் அரிஅமர் ஆபதித்
தேவாம் உருத்திரன் ஈசன்ஆம் காணிலே.

பொழிப்புரை :

தத்துவங்களை ஆராயுமிடத்து, எல்லா உயிர் களும் முடிவில் அடையும் இடமாய் உள்ள பரமசிவனும், பரா சத்தியும் முதற்கண் முறையே பர நாத மூர்த்தியும் பரவிந்து சத்தியுமாய் நிற்க பின்பு பரவிந்து சத்தியினின்று அபர நாத மூர்த்தியும், அவனிடத் தினின்று அபரவிந்து சத்தியும் தோன்ற, அதன்பின் அபரவிந்து சத்தியினின்று சதாசிவன், மகேசுரன், உரூத்திரன், மால், அயன், என்போர் முறையே ஒருவரினின்று மற்றொருவர் தோன்றுவர்.

குறிப்புரை :

`இங்ஙனம் பரமசிவனும், பராசத்தியும் ஆகிய அவர்களே தடத்த நிலையில் பர நாத மூர்த்தி, பர விந்துசத்தி முதலாகிய ஒன்பது பேதங்களாய் நிற்பர்` என்றபடி இதனை,
``சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்தி ரன்றான், மால், அயன் - ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; அருவம் நால்; இங்கு உருவம் நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்``3
என்னும் சிவஞான சித்தியாலும் உணர்க. இச் செய்யுளில் பரநாத மூர்த்தியே `சிவம்` என்றும், பர விந்து சத்தியே `சத்தி` என்றும் சொல்லப் பட்டனர். எனவே, `நாதம், விந்து` எனப் பட்டவை அபர நாதமு, அபர விந்துவும் ஆயின. இம் மந்திரத்துள் `பரநாதம்` என்றதனானே அபர நாதமும், `பரவிந்து` என்றதனானே அபர விந்துவும் பெறவைக்கப் பட்டன. `காணில்` என்பதை முதலில் வைத்து, `ஓங்கி` என்பதை `ஓங்க` எனத்திரித்து, `ஈசன் அவன்பால் ஆய், அரி, பிரமன், அமர் ஆபதித் தேவாம் உருத்திரன் ஆம்` என இயைத்து முடிக்க. செய்யுள் பற்றி இங்ஙனம் முறை பிறழவும், சொற் சுருங்கவும் ஓதினார். ஈசன் - மகேசுரன். `ஆய்` என்பதனையும் `ஆக` எனத் திரிக்க. `மகேசுரன், சதா சிவன்பால் ஆவன்` என்றகுறிப்பானே, `உருத்திரன் மகேசுரன்பால் ஆம்` என்பது பெறப்பட்டது `அரி, பிரமன்` என்பது செவ்வெண். அதன்பின் தொக்கு நின்ற `இவ்விருவரும்` என்னும் எழுவாய் `ஆபதி` என்பதில் ஆதலாகிய பயனிலையோடு முடிந்தன. `அமர்` என்னும் முதனிலையே `அமர்ந்து` என எச்சப்பொருள். அமர்ந்து ஆதலாவது. ஒடுங்கியிருந்து தோன்றுதல். `ஆ பதி` ஏதுப் பொருட்டாய வினைத்தொகை. பதி - தலைவன். பதித் தேவாம் உருத்திரன்` என்பது, `பதியாகிய தேவனாகிய உருத்திரன்` எனப் பல்பெயர் ஒட்டுப் பண்புத் தொகை. இந்திரனுக்கு இங்கு இடம் இன்மையால் `அமராபதி` என்பதை இந்திரனது நகரமாகக் கொள்ளுதற்கு யாதும் இயைபில்லை. `அமர்ந்தாபதி` என்றே பாடம் ஓதுல் சிறக்கும்.
சிவனது இந்த ஒன்பது நிலைகளும் தடத்த நிலைகளேயாகும். இவை `நவந்தரு பேதம்` - எனப்படுகின்றன. இவைகளை நாயனார் இங்குக் கூறியதற்குக் காரணம், `முத்தி வகையாகிய பராவத்தையை அடைந்தோர் படிமுறையானே கீழ் இருந்து மேல் உள்ள இந்நிலைகளை யெல்லாம் அடைவர்` என்பதும், `அந்நிலையில் அவர்களும் இங்குக் கூறிய பெயர்களையெல்லாம் பெறுவர்` என்பது உணர்த்தற் பொருட்டாம். சிவனது நிலைகள் `சம்பு பட்சம்` என்றும், பராவத்தையை எய்தினோரது நிலைகள் `அணுபட்சம்` என்றும் சொல்லப்படும்.
மேற்காட்டிய சிவஞான சித்திச் செய்யுளில் கூறியபடி கீழ் உள்ளவை நான்கும் உருவம். மேல் உள்ளவை நான்கும் அருவம். இடையில் உள்ள ஒன்றும் அருவுருவம். அருவம் இலயம், அரு வுருவம் போகம். உருவம் அதிகாரம். இந்த மூன்றும் இறை யவத்தைகளாகும். மேல் எல்லாம் கூறியன உயிர் அவத்தைகள். அருவம், `நிட்களம்` என்றும், உருவம், `சகளம்` என்றும், அருவுருவம் `நிட்களசகளம்` அல்லது `சகள நிட்களம்` என்றும் சொல்லப்படும். இறையவத்தை மூன்று பற்றிய முத்திகளே, `அதிகார முத்தி, போக முத்தி, இலயமுத்தி` எனக் கூறப்படுகின்றன. இம்மூன்றும் `அபரமூத்தி` என்றும் சொல்லப்படும். இவையெல்லாம் இம்மந்திரத்தின் வழிப் பெறப்படும். இதனானே இது, மேல், `சிவமாம் பரத்தினில் சத்தி`* என்றதற்குப்பின் `கூறியது கூறல்` ஆகாமை உணர்க.
இதனால், `பராவத்தை சாக்கிரம் முதலியவற்றால் ஐந்தாதலே யன்றிப் பிறவாற்றால் பலவாதலும் உண்டு` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

கலப்பறி யார்கடல் சூழ்உல கேழும்
உலப்பறி யார்உடலோடுயிர் தன்னை
அறப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல கடலது வாமே.

பொழிப்புரை :

சிவன் தமது அறிவினுள் அறிவாய்க் கலந்திருத் தலையும், `பூவுலகம் முழுதும் ஒரு காலத்தில் முற்று அழிந்தொழியும்` என்பதையும் அறியாதமடவோர், உடலோடு கலப்பினால் ஒன்றாய் இருக்கின்ற உயிர் பொருளால் வேறாதலை உணர்ந்து உடம்பையே தாமாகப் பற்றி நின்று, அதனால் இவ்வுலகத்திற்றானே அருளரசு ஆள மாட்டுவாரல்லர். அவர் அத்தகைய நிலையை அடைய வேண்டின், அவர்கள் குறிக்கொளத் தக்கது சிவனது தடத்தத் திருமேனிகளை எழுதி வைக்கும் உள்ளமாகிய கிழியேயாம்.

குறிப்புரை :

``உயிரா வணம் இருந்து உற்றுநோக்கி
உள்ளக் கிழியின் உருவெழுதி,
உயிரா வனஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோடு ஒட்டி வாழ்தி``*
என அப்பரும் அருளிச் செய்தார். அவ்வருள்மொழியால், அஃது யோகப் பயிற்சியானே கூடும்` என்பது விளங்கும்.
`கடல் சூழ் உலகு ஏழு` ஆவன, நாவலம் பொழில் முதலிய ஏழு பொழில்கள். தாம் உள்ள இடத்து உள்ளவர்களை உள்ளத்துட் கொண்டே ஓதுகின்றார் ஆதலின், பூவுலகத்தின் நிலையாமையையே எடுத்துக் கூறினார். பூவுலகமும் ஏழ்கடலும் ஏழ்பொழிலுமாய் விரிந்து கிடத்தலின், `இவை முழுதும் எஞ்சாது அழிந்தொழிதலும் உளதாகுமோ` என மயங்குவர் என்றற்கு ``கடல் சூழ் உலகேழும் உலப் பறியாது`` என்றார். பறிதல் - நீங்குதல். `அலப்பறிந்து` என்பது பாடம் அன்று. `அறப்பிரிந்து` என ஓதலும் ஆம். இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், `பராவத்தை நிலையை அடைதற்கு அந்நிலையில் நிற்கும் சிவனைச் சகலாவத்தையிற்றானே பாவனை முறையால் வழிபடுதல் வழியாகும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியின் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற ஞானமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

பொழிப்புரை :

சிறு தவங்களையெல்லாம் செய்து அலுத்துவிட்ட பின்பு நல்லறிவு பிறந்து செய்கின்ற பெருந்தவந்தின் வழியாக உயிர்களைப் பராவத்தையில் சேர்க்கின்ற தனது இயல்பை ஒருவன் அறிந்து தன்னை அடைய விரும்பினால் எங்கள் இறைவனாகிய சிவன் உடனே அவன் முன் தோன்றுவான். ஏனெனில் அவன் பெருங் கருணையாளன். அம்முறையில் யான் எனது பழைய சிற்றறிவு முடியும் காலத்தையும் அறிந்தேன் அதனால் சிவனது பேரறிவாலே என்னையும் அறிந்தேன். யான் இது பொழுது இன்புற்றிருக்குமாறு இவ்வாறாம்.

குறிப்புரை :

பெருந்தவம், சரியை கிரியா யோகங்கள், இவற்றை பின்னையறிவனவாகக் கூறினமையால், முன்பு சிறு தவங்களைச் செய்தமை விளங்கிற்று. அவை உலகப் பயன்களை விரும்பிச் செய்தன வாகும். அப்பயன்கள் யாவும் சில காலமே யிருந்து அழிந்தொழிதலை உணர்ந்தமையால், அவற்றைத்தரும் தவங்களைச் செய்வதில் அலுப்பு உண்டாயிற்று. முன்மந்திரத்தில் சொல்லியபடி இப்பெருந்தவத்தால் சிவன் உயிர்களைப் பராவத்தையில் சேர்த்தல் பெறப்பட்டது. மோனை நயம் கெடுதலையும் நோக்காது, `உண்மை செய்து அன்னை அறியின்` எனப் பிரித்து, `சத்தி நிபோதம் வாய்க்கின்` எனப் பொருள் உரைப் பார்க்கு சத்தி நிபாதத்தின் பின்னர் நிகழ்வதாகிய பெருந்தவம் சத்தி நிபாதத்திற்கு முன் நிகழ்வதாய் முடிதலை நோக்குக. சிற்றறிவு - ஏக தேச ஞானம்; அஃதாவது சில பொருள்களையே அறிதல். அது முடியுங் காலம், அவ்வாறு அறிந்து வருதலில் உவர்ப்புத் தோன்றும் காலம். `தன்னாலே தந்தால் தன்னையும் தானே காணும்` என்பவாகலின், `என்னையறியலுற்று` என்றது சிவ ஞானத்தினால் ஆயிற்று. இவ்வாற்றால் பராவத்தையைத் தலைப் பட்டமையால் இன்புற்றிருக்க இயன்றது.
இதனால், முன் மந்திரத்தில், ``குறிப்பது கோல மடலது வாமே`` எனக் கூறிய அந்நெறியிலே நின்றவழி, முறையாக விளையும் பயன்களின் முடிநிலைப் பயனாகப் பராவத்தையும் அதன்கண் பரானந்தமும் உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தன தன்கர ணங்கள்தாம்
தன்னில் மறைந்தன தன்கர ணங்களே.

பொழிப்புரை :

பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணி கலன்கள் தம்மிடத்துப் பொன் உள்ளதாயினும் அதனை உரைச் செய்யாது மறைத்துத் தமது அழகினையே உணரப் பண்ணி மக்களை மயக்குகின்றது. ஆயினும் அந்த அணிகலன்களின் செயற்கை நலன்களை அழித்துவிட்டால், அணிகலனாய் இருந்த பொருள்கள் அழியாதிருப்பினும் அவை பொன்னாகி விட்ட அதனுள்ளே மறைந்து விடும். அவைபோல, சார்ந்ததன் வண்ணம் ஆகின்ற ஆன்மாவைப் பெத்தகாலத்தில் அதனுடைய தனு கரணங்கள் தம் வயப்படுத்தித் தம்மயம் ஆகச் செய்து, ஆன்மாத் தன்னைத் தான் அறியாதபடி மறைத்து அதனைத் தாமென்றே மயங்கிச் செய்துவிடுகின்றன. ஆயினும், ஆன்மாக் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுதலால், ஆன்மாவில் வியாப்பியமாய்த் தமக்கெனச் சுதந்திரமின்றி ஆன்மாவின் வழியே செயற்படுகின்ற தனு கரணங்கள் தாம் அழிந் தொழியாது ஆவ்வான்மாவின் வயப்பட்டு முன்போல மருள் வழியில் இயங்காமல், ஆன்மாவைப் போலவே அருள் வழியில் இயங்கும்.

குறிப்புரை :

இவையிரண்டிற்கும் காரணம், ஆன்மாவின் அபக்குவமும், பக்குவமுமேயாகும். `ஆன்மா அபக்குவ காலத்தில் மாயை கன்மங்களின் வழிபட்டுச் சகலாவத்தையையும், பக்குவ காலத் -தில் அதனின் நீங்கி நின்மலாவத்தையையும், வீடுபெறும் காலத்தில் பராவத்தையையும் அடையும்` என்பது இதனால் ஆன்மாவின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இஃது எடுத்துக் காட்டுவமை.

பண் :

பாடல் எண் : 21

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே.

பொழிப்புரை :

மரத்தால் செய்யப்பட்ட பெரிய மதயானை உருவம் சிற்பியின் கைவண்ணத்தால் மரத்தை உணர ஒட்டாமல் மறைத்து, மக்களை மயக்குகின்றது. ஆயினும் சிற்பியினது வேலைப் பாடுகளை அழித்து விட்டால், அந்த மத யானையாய் இருந்த பொருள் அழியாதிருப்பினும் மரத்தினுள்ளே மறைந்துவிடும். அது போல, பரம்பொருளால் இயங்குகின்ற உலகம், ஆன்மாவின் பெத்த காலத்தில் தானே சுதந்திரமாய் இயங்குவனவாய் அதற்குக் காட்சியளிக்கும். ஆயினும் குருவருளால் ஞானத்தைப் பெற்ற முத்தி காலத்தில் உண்மை ஞானம் பொது ஞானத்தை அழித்துவிடுவதால், உலகம் சுதந்திரம் அற்றொழியப் பெரும் பொருளின் இயக்குதலே விளங்கி நிற்கும்.

குறிப்புரை :

இவற்றிற்கும் காரணமும், மேற்கூறிய அபக்குவ பக்குவங்களே என்பது வெளிப்படை.
இதனால், மேற்கூறிய அந்தப் பொருளே பரம் பொருளின் மேல் வைத்துக் கூறப்பட்டது. இதுவும் அவ்வுவமை.

பண் :

பாடல் எண் : 22

ஆறா றகன்று நமவிட் டறிவாகி
வேறான தானே யகாரமாய் மிக்கோங்கி
ஈறார் பரையின் இருளற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.

பொழிப்புரை :

பெத்தம், முத்தி இரண்டும் சிவன் செயலே யாகலின் அது பற்றி அவையிரண்டும் முறையே, `ஊனநடனம், ஞான நடனம்` எனப்படும். ஊன நடனத்தில் சிவனது சத்திதிரோதான சத்தியாயும், ஞானநடனத்தில் சிவனது சத்தி அருட்சத்தியாயும் செயற்படும். சிவசத்தி பொருளால் ஒன்றேயாயினும், செயல் பற்றி இவ்வாறு இரண்டாக வகுத்து விளக்கப்படுகின்றது. திரோதான சத்தி மறைத்தலையும், அருட் சத்தி அருளலையும் செய்யும்.
உமாபதி தேவர், திருவைந்தெழுத்தை `நமசிவாய` எனத் தூலமாகக் கொண்டாலும், `சிவாயநம` எனச் சூக்குமமாகக் கொண்டாலும்,
``ஊன நடனம் ஒருபால்; ஒருபால்ஆம்
ஞானநடம்; தான்நடுவே நாடு``l
என அருளிச் செய்தார். தான் - சீவன்; அல்லது ஆன்மா. `அது நடுவே உள்ளது` எனக் கூறப்பட்டமையால், யகாரம் பசு வெழுத்தாயிற்று.
`உண்மை விளக்க` - நூல் திருவைந்தெழுத்தை, `சிவாயநம` எனச் சூக்குமமாக எடுத்துக் கொண்டு,
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன் எழுத்து ஐந்தின் அடைவாம்``*
எனக் கூறிற்று. ஆகவே, `சிகாரம் சிவன்; வகாரம் அருட்சத்தி, யகாரம் ஆன்மா, நகாரம் திரோதான சத்தி, மகாரம் ஆணவ மலம்` என்ற தாயிற்று. மாயை கன்மங்கள் ஆணவ மலம் போல உயிருக்கு இயற்கை யாகாது, திரோதான சத்தியாலே செயற்யைாகக் கூட்டப்பட்டு, ஆணவ மலத்தின் பரிபாகத்திற்குத் தக்கவாறு அந்தத் திரோதான சத்தியாலே செயற்படுத்தப்படுவதால், அவை வேறு நில்லாது, திரோதான சத்தியுள் அடங்குகின்றன. `மாதவச் சிவஞான யோகி கட்கும் இதுவே கருத்து` என்பது அவரது உரைகளால் விளங்கும். இஃது அறியாதார், `மகாரம் மாயையைக் குறிக்கும்` என்பர். `அவ்வாறாயின் மூல மலமாகிய ஆணவத்தைக் குறிப்பது எது` என அவர் நோக்காமை யறிக.
உமாபதி தேவரும் ஆன்மாவை நடுவாக வைத்து,
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத், திரோதம், மாசு, அருள், சிவம்``l என முதலில் முன் உள்ள எழுத்து பாச எழுத்து இரண்டையும், பின்பு பின் உள்ள பதியெழுத்து எழுத்து இரண்டையும் குறித்தார். `முன், பின்` என்பவற்றைக் காலம் பற்றிக் கொள்ளாது. இடம் பற்றிக் கொள்க. இவற்றால், `ந, ம` என்பன பாச எழுத்துக் களும், `சி, வ` என்பன பதி எழுத்துக்களும் ஆயின. எனவே, முப்பொருள்களும் அஞ்செழுத்தில் அடங்குதலாலும், ``பலகலை ஆகமம், வேதம் யாவையினும் கருத்துப் பதி, பசு, பாசம் தெரித்தலே`` யாகலானும்,
``அஞ்செழுத்தே ஆகமமும், அண்ணல் அருமறையும்
அஞ்செழுத்தே ஆதிபுரா ணம்அனைத்தும்``8
என உண்மை விளக்கத்திலும்,
``அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் அஞ்சின்
பொருள்நூல் தெரியப் புகின்``3
எனத் திருவருட் பயனிலும் கூறப்பட்டன.
இவற்றால், `நகார மகாரங்கள் ஊன நடனம்` என்பதும், `சிகாரவகாரங்கள் ஞான நடனம்` என்பதும் விளங்கும்.
கீழாலவத்தை மத்தியாலவத்தை, மேலால் அவத்தைகளில் நிற்போர் தத்துவங்களின் நீங்காமையால் அவர்களில் பற்றுக்களை விட விரும்பாதவர் அஞ்செழுத்து மந்திரத்தைத் தூலமாக வைத்தும், பற்றுக்களை விட விரும்பினோர் அதனைச் சூக்குமமாக வைத்தும் கணித்தற்கு உரியர். அவற்றின் பயனாக ஞான குருவின் உப தேசத்தைப் பெற்றுப் பற்றுக்களை விட்டொழிக்க முயல்கின்றவர்கள் தத்துவங்களாகிய பாசங்கள் நீங்குதற்பொருட்டு அஞ்செழுத்துக்களில் பாச எழுத்துக்கள் இரண்டையும் நீக்கி, மற்றை மூன்றெழுத்தை மட்டுமே கணித்தற்கு உரியர். இதனை, `அதிசூக்கும பஞ்சாக்கரம்` என்பர். இந்நிலையில் பிரணவத்தைச் சேர்த்தல் கூடாது. பிரணவம் இன்றிச் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களைத் திரும்பத் திரும்பக் கணிக்குங்கால், யகாரம்வகாரத்திற்கும், சிகாரத்திற்கும் இடைப்பட்ட தாகிவிடும். ஆகவே, ஆன்மாவை எவ்வகையிலும் பாசங்கள் பற்றுதற்கு வழியில்லை, யகாரத்தைத் தொடர்ந்து சிகார வகாரங்கள் வர,பின்பு வகரத்தைத் தொடர்ந்து யகாரம் வருதலால், ``அடியேன் நடுவுண் இருவீரும் இருப்பதனால் ``* என்னும் திருவாசகத் தொடர் இதனையே குறிப்பதாகக் கூறுவர்.
சிவஞான போதஒன்பதாம் சூத்திரத்தில் மெய்கண்ட தேவர்.
``உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி``
எனக் கூறி, அதனையடுத்து ``எண்ணும் அஞ்செழுத்தே`` எனக் கூறியவர், அதனை வாளா கூறாது, `விதி எண்ணும் அஞ்செழுத்தே, எனக் கூறியருளினார். வார்த்திகத்திலும்.
``இவ்விடத்துச் சீபஞ்சாக்கரத்தை
விதிப்படி யுச்சரிக்க``
என்றார். `பாசம்ஒருவ` என முன்னே கூறினமையால், `விதிப்படி` என்றது, `பாச எழுத்துக்களை நீக்கிப் பிரணவமும் இல்லாமல் உச்சரித்தல் வேண்டும்` என்றதேயாகின்றது. வெளிப்படையாகவே அந்த மூன்றெழுத்து மந்திரத்தை அவர் எடுத்துக் கூறாமைக்குக் காரணம், `அவ்வாறு கூறுதல் மரபன்று` என்பதும், இன்னோரன்னவை யெல்லாம் குருமுகமாகவே அறிதற்குரியன` என்பதுமேயாம். ஆயினும் காலப்போக்கில் அவரது பொருளை உணர்ந்து பயன் பெறு பவர்கள் அருகி மாறுபட்ட கருத்துக்கள் மலிந்து வருதலால், இவ் விடத்து எடுத்துக் காட்ட வேண்டி வருகின்றது. இதுபற்றியே மாதவச் சிவஞான யோகிகள்.
``இங்ஙனம் ஆசிரியர் மாட்டெறிந்ததூஉம்
உணராதார் ... ... ... ... சித்தாந்த வழக்கொடு
முரணிக் கூறுவர்``8
எனக் கூறினார்.
பஞ்சாக்கரத்தைத் தூலமாகக் கணித்தலை விடுத்துச் சூக்குமமாகக் கொண்டு கணிப்பினும் யகாரம் வகாரத்திற்கும், நகாரத்திற்கும் இடைப்பட்டே நிற்றலால் பாசம் நீங்காதது பற்றி,
``ஆசில் நவா நாப்பன் அடையாது, அருளினால்
வாசி யிடை நிற்கை வழக்கு`` * *திருவருட்பயன் 89.
என்றார் உமாபதி தேவர். அஞ்செழுத்தில் பாச எழுத்துக்களை நீக்கி உச்சரிக்கின், யகாரம் வகாரதிற்கும் சிகாரத்திற்கும் இடைப்பட்டு நிற்றலை மேற்கூறியவாற்றால் அறிக. இதனையறியாதார், `சிவாய சிவ` என்பதை ஓர் உருவாக வைத்துப் பல உருக்கள் கணிக்க வேண்டும் என்பர். அவ்வாறு கணிப்பின். சில உருக்களில் `சிவா` என்பது `வசி` என இயைந்து அவ்வுருக்கள் வாசியிடை நிற்றலாகிய சாதகத்தப் பயவாமை உணர்க.
சிவஞானபோத ஒன்பதாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட சகலத்தில் சுத்த சுழுத்தியில் சிகாரம் முதலிய மூன்றெழுத்துக்களையே உச்சரித்தல் வேண்டும் எனக் கூறினமையால், `பத்தாம் சூத்திரத்தில் சொல்லப்பட்ட `அவனே தானே ஆகிய. அந்நெறி - ஏகனாகி` ஆன்மாத் தன்னை யிழந்து நிற்பதாகிய சகலத்தில் சுத்த சுழுத்தியில் யகாரத்தையும் நீக்கி, `சிவ` என இரண்டெழுத்தாக உச்சரித்தல் வேண்டும்` என்பது போந்தது. `இது காரண பஞ்சாக்கரம்` எனப்படும். இதனை நாயனார் அடுத்து வரும் தந்திரத்தில் ``சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்``, ``சிவ சிவ என்கிலர் தீவினை யாளர்`` என்பன முதலாக அருளிச் செய்வார்.
இங்ஙனமாகவே, சிவஞானபோதப் பதினொன்றாம் சூத்திரத்தில் அரன் கழலின்கீழ் ஆன்மா ஆனந்தத்தில் மூழ்குதலாகிய சகலத்தில் சுத்த துரியாதீதத்தில் அருள் எழுத்தாகிய வகாரமும் நீங்க. சிகாரம் ஒன்றுமே அசபா நலமாய் நிற்கும் என்பதும் பெறப்படும். இந்த ஓரெழுத்து மந்திரத்தை நாயனார் `நாயோட்டு மந்திரம்` என மறைபொருட்கூற்றாக ஓதினார். அந்தமந்திரத்தை மிகையானதாகப் பிற்காலத்தார் கருதிவிட்டனர். நாயின் தன்மை குரைப்பது. நாயின் தன் மையையே, `நாய்` என்றார். `குரைத்தலை ஓட்டுவது` என்றது, `பேச்சை ஒழித்து மௌனத்தை உண்டாக்குவது` என்றதாம். தருமை ஆதீன ஆதி பரமாசாரியராகிய குருஞான சம்பந்தரும்,
``கற்க இடர்ப்பட்டுமிகக் கற்றஎலாம் கற்றவர்பால்
தற்கமிட்டு நாய்போலச் சள்ளெனவோ``1
என, ஞான நெறியில் நில்லாது பேசும் பேச்சுக்களுக்கு நாயின் குரைப்பை உவமை கூறினார். `பேசா அனுபூதி`2 `மோனம் என்பது ஞானவரம்பு3 என்பன போன்றவற்றை நோக்குக. இந்த ஓரெழுத்து மந்திரம், `மாககாரண பஞ்சாக்கரம்` - எனப்படும். மந்திர நூல் வழக்கில், ஓர் எழுத்தான் ஆயதே சிறப்பாக `மந்திரம்` எனப்படும். அந்த மந்திரத்தை நாயனார் தமது மந்திர மாலையில் கூறாது போவாரோ.
ஐந்தெழுத்தாய் இருந்த மந்திரம் பின்பு மூன்றெழுத்தாய்ப் பின்பு இரண்டெழுத்தாய், இறுதியில் ஓரெழுத்தே ஆகிவிடுகின்றது. இது,
``சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே``4
என அருளிச் செய்த அனுபவத்திற்கு ஒத்துள்ளது. இதனை உமாபதி தேவர்,
``பதிபசு பாச முதிர்அறி வுகளுடன்
ஆறா முன்னர்க் கூறாப், பின்னர்
இருபொருள் நீத்துமற் றொருநால் வகையையும்,
ஈனமில் ஞாதுரு ஞானம் ஞேயம் என்று
இசைய மூன்றாய்ப் பசு பதி என்றவற்று
இரண்டாய், இரண்டும் ஒன்றின்ஒன் றாகத்
திரண்டாம் பயனெனும் திருவருள் தெளியில்
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம்
என்றிவற் றியற்கை இயம்புதல் தகுமே``*
எனக் கூறினார். இங்ஙனம் கூறிய இதனையே சிவஞான யோகிகள் பரம சித்தாந்தத்தை ஓதியதாக உரைத்தார்.* இங்ஙனம் ஓதப்பட்டதன் பொருளை உணரமாட்டாதவர், பூர்வ பட்சம் எது? என அறிந்து கொள்ளாமல் இதற்கு உரை செய்துள்ளனர்.
இம்மந்திரத்தின் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு இத்துணையும் கூற வேண்டியதாயிற்று.
(உரை): தச காரியங்களில் முதல் மூன்றின் முடிவில் உள்ள தத்துவ சுத்தி எய்திய பொழுது அது நிலை பெறுதற் பொருட்டுத் திரு வைந்தெழுத்தில் பாச எழுத்தாகிய நமக்கனை நீக்கி - மூன்றெழுத்தாகக் கணித்து, அதனாலே முன்பு தத்துவங்களாகிய சடத்தோடு கூடிச் சடமாய் இருந்த நிலை நீங்கிச் சித்தாகிய ஆன்மாத் தானேயாகி யகாரத்தோடே நின்று, (அஃதாவது நமக்களோடு சேராது நின்று - ஆன்ம ரூபம். ஆன்ம தரிசனம் இரண்டும் இவ்விடத்தே நிகழ்ந்துவிடும் இவையெல்லாம் சகலத்தில் சுத்த சாக்கிரம் சுத்த சொப்பன சுத்த சுழுத்திகளாய்விடும்) பாசங்களினின்று மிக மேன்மை யுற்றுப் பின் இறுதியில் உள்ள அருட் சத்தி வழியாக, (இது சகலத்தில் சுத்த துரியம்.) இயல்பாகவே பாசம் அற்று இருக்கின்ற சிவனைப் பெறும் பேற்றை அடை (இது சகத்தில் சுத்த துரியாதீதம்) அப்பொழுது முன்பு இருந்த யகாரம் வகாரத்திலே அடங்கும். பின்பு வகாரமும் சிகாரத்திலே அடங்கிவிடும் அதன் பிறகு உனக்குக் கிடைப்பது பரானந்தந்தான். (இதற்குமேல்) அடையத்தக்கது எதுவும் இல்லை என்பதாம்.

குறிப்புரை :

இதனைக் கீழ்க் காணும் பிற்காலத்து அடிகளது பாட்டு ஒன்று மிக நயம்படத் தெரிவிக்கின்றது.
``மாயநட் டோரையும், மாயா மலமெனும் மாதரையும்
வீயவிட் டோட்டிவெளியே புறப்பட்டு மெய்யருளாம்
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயை மறந்(து)
ஏயும் அதே நிட்டை யென்றான் எழிற்கச்சி ஏகம்பனே. ``
நட்டோர் - நண்பர். திரோதான சத்தியும். அதனால் கூட்டிச் செயற் படுத்தப்படுகின்ற மாயை கன்மங்களும். இவை நகாரத்தால் குறிக்கப் படுகின்றன.
மாயா - என்றுமே அழியாது நிற்கின்ற, மலம் - ஆணவம். ஆணவத்தை ஒரு பெண்ணாகக் கூறும் வழக்கு உண்மையை,
``பலரைப் புணர்ந்தும்இருட் பாவைக்குன் டென்றும்
கணவற்கும் தோன்றாத கற்பு``3
என்னும் திருவருட் பயனாலும் அறிக. இம்மலம் மகாரத்தால் குறிக்கப்படுகின்றது.
வீயவிட்டு ஒட்டுதல், நகார மகாரங்களை நீக்குதல். மெய்யருளாம்தாய் வகாரம். அதனோடு கூடுதலாவது, முன்புபோல நகார மகாரங்களோடு கூடாது, வகாரத்தோடே இணைந்து நிற்றல்.
தாயுடன் செல்லுதல் யகாரத்தையும் நீக்கி, இரண்டெழுத்தாகக் கணித்தல்.
தாதையைக் கூடிப் பின் தாயை மறந்துவிடுதல், வகாரத்தையும் நீக்கிச் சிகாரத்தோடு மட்டும் இருந்துவிடுதல்.
`தானே` என்பது, முன்னிலைக்கண் படர்க்கை வந்த இட வழுவமைதி. ஈறு ஆர் பரை - இறுதியில் உள்ள அருட் சத்தி, பரையின் - பரையினால், தற்பரன் பேறு - தற்பரனைப் பெறும் பேறு. நிலை மொழியின் ஈறுதிரியாமை சிறுபான்மை பொதுவிதியானே கொள்ளப் படும். பேறு ஆர், `பேற்றினைப் பொருந்து` என முன்னிலை ஏவல். `சிவாய அடங்கும்` `சிய்யில் வவ்வும் யவ்வும் அடங்கும்` எனக் கொள்க. `முத்தி` என்றது ஆனந்த நிலையை. ஏகாரம் தோற்றம்.
இவையெல்லாம் நின்மலாவத்தைக்கண் நிகழ்வனவே யாயினும், `பராவத்தையிலும் அதீதம் ஒழிந்த ஏனை நான்கிலும் சூக்குமமாய் நிகழும்` என்பது உணர்த்துதற்கு இங்கு இதனைக் கூறினார்.
இதனால், `அஞ்செழுத்தின்புணை` எல்லா அவத்தைகளிலும் ஏற்றபெற்றியில் பிறவிக் கடலைக் கடத்துதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

துரியத்துல் ஓரைந்தும் சொல்அகா ராதி
விரியப் பரையின் மிகுநாதம் மந்தம்
புரியப் பரையின் பராவத்தா போதம்
திரியப் பரமாமாம் துரியம் தெரியவே.

பொழிப்புரை :

சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தை ஐந்திலும் வாக்குக்கண் அகாரம் முதலிய ஐந்து அக்கரங்களாய், (அ, உ, ம, விந்து, நாதம் - என்பனவாய்)த் தூலமாய் நிகழும். (எனவே, அவ்விடத்து உலக வாசனை இருக்கவே செய்யும் என்பதாம்.) நின்மலா வத்தைக்கு மேலான உண்மைச் சுத்தாவத்தையில் அவ்வாக்குக்கள் சூக்குமமாய் நிகழும். (அதனால், உலக வாசனை தோன்றாவிடினும், `யான்` எனது என்னும் உணர்வினால் ஞாதுரு ஞான ஞேய வேற்றுமை நிகழவே செய்யும்.) அந்த வேற்றுமையும் அறுவது பர துரியத்திலாம். (அவ்விடத்தில் ஆன்மா அருள்மயமாய் நிற்கும்.) அதன் பின்பு மேலானதாய அதீதம் தோன்றும். (அதில் ஆன்மா ஆனந்தமயமாய் இருக்கும்.)

குறிப்புரை :

`துரியம்` என்பது, `மலாவத்தைகளைக் கடந்தது` என்னும் பொருட்டாய், நின்மலாவத்தையைக் குறித்தது. `ஐந்திலும்` என உருபும், `ஆதியாய், மந்தமாய்` என ஆக்கங்களும் விரிக்க. `சொல், நாதம்` என்பன வாக்கைக் குறித்தன. `விரிய, புரிய, தெரிய` என்ற அனுவாதத்தானே விரிதலும், புரிதலும், தெரிதலும் பெறப்பட்டன. விரிதல் - தூலமாய் நிகழ்தல். புரிதல் - இடையறாது நிகழ்தல். தெரிதல் - விளங்குதல். `மந்தம்` என்றது சூக்குமத்தைக் குறித்தது. `பரை` இரண்டில் முன்னது ஆகுபெயராய்ப் பராசத்தியால் நிகழும் பராவத்தையைக் குறித்தது. மூன்றாம் அடியில் அவை நேராகவே கூறப்பட்டன. பராவத்தா போதம் - பராவத்தையில் நிகழும் திரிபுடி ஞானம். இது வடமொழிச் சந்தி. திரிய - வேறுபட; நீங்க. `திரிய` என்னும் எச்சம் `தெரிய` என்னும் எச்சத்தோடும், அவ்வெச்சம் `பரமம்` என்பதில் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடும் முடிந்தன. `பராவத்தா போதம் திரியத் துரியம் தெரியப் பரமம்` என வினைமுடிக்க. பரம் - மேலான அதீதம்.
இதனால், `பந்தம் சூக்குமமாய் நிற்கும் அவத்தைகளும் பின் அது முற்றும் அறும் அவத்தையும் இவை` என்பது சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஐந்தும் சகலத்(து) அருளால் புரிவுற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப்பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர்முனம்
அந்தி யிருள்போல ஐம்மலம் மாறுமே.

பொழிப்புரை :

சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகளையும் சகலத்தில் மாயா கருவிகளால் அடையாது, திருவருளால் அடைந்து, (எனவே, `மேலா லவத்தையையும் கடந்து நின்மலாவத்தையை அடைந்து` என்றதாம்.) சகலத்திற் சுத்தமாகிய அந்த அவத்தைகளில் மேலே பாய்ந்தும், கீழே வீழ்ந்தும் பந்துபோல அலைகின்ற அலைவினால் அவ்வலைவு நீங்கப் பெறுகின்ற உண்மைச் சுத்தமாகிய பராவத்தையில் நாட்டம் உண்டாகுமானால், அந்த நாட்டத்தின் முன் ஐந்து மலங்களும் அந்திக் காலத்தில் விளக்கின்முன் இருள் நில்லாது நீங்குதல் போல நில்லாது நீங்கும்.

குறிப்புரை :

`சகலத்து` எனவும, `அருளால்` எனவும் கூறிய வற்றால், புரியப்படுவன நின்மலாவத்தைகளாயின. தானே நிகழ்வன வற்றை ஆன்மாநிகழ்வித்துக் கொள்வது போலவைத்து, `புரிவுற்று` என்றார். பந்து இடும் - பந்தினை வீசுவது போல நிகழும் நந்தி - சிவன்.
இதனால், `ஆன்மாநின்மலாவத்தையையும் கடந்து, பரா வத்தையை எய்திய பொழுதே உண்மையில் தூயதாம்`என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 25

ஐயைந்து மட்டுப் பகுதியும் மாயையாம்
பொய்கண்ட மாயேயந் தானும் புருடன்கண்(டு)
எய்யும் படியாய் எவற்றுமாய் அன்றாகி
உய்யும் பராவத்தை யுள்உறல் சுத்தமே.

பொழிப்புரை :

`இருபத்தைந்து` எனத் தொகை பெற்று நிற்கின்ற தத்துவங்களாய் உள்ள மூலப் பிரகிருதியில் இயல்பையும், `மாயேயம்` எனப்படுகின்ற வித்தியா தத்துவங்களாய் உள்ள அசுத்தமாயையின் இயல்பையும் சாதகன் உள்ளவாறு உணர்ந்து தத்துவ ஞானியாய், எல்லாப் பொருளிலும் கலப்பினால் ஒன்றாகியும், பொருள் தன்மையால் வேறாகியும் நிற்கின்ற சிவமாகிப் பிறவியினின்றும் நீங்கி நிற்கும் பராவத்தையை அடைதலே உண்மைச் சுத்தாவத்தையாகும்.

குறிப்புரை :

`பொய்கண்ட` என்பது தாப்பிசையாய் `ஐயைந்து` என்றதனோடும் சென்றியைந்தது. பொய்கண்ட - நிலையாமை நன்கு உணரப்பட்ட. இங்கும் `மாயேயம்` என்பது, `மாமாயை` எனப்பாடம் திரிக்கப்பட்டுள்ளது. `மாயையாம் மாயேயம்` என்றாராயினும், `மாயேயமாம் மாயை` என மாறிக் கூட்டுக. தான், அசை, எய்தல் - அறிதல், படி - வகை. இஃது ஆகுபெயராய், `படியன்` எனப் பொருள் தந்தது. `சிவமாந் தன்மையைப் பெற்ற ஆன்மாவும் சிவம்போலவே வியாபகமாய் நிற்கும்` என்பார். ``எவற்றுமாய் அன்றாகி`` என்றார். ``எவற்றுமாய்`` என்றது, `எவற்றிலும் அவையேயாய்` என்றபடி.
இதனால், பராவத்தையை எய்துமாறும், `பராவத்தையே பிறவாநிலை` என்பதும், `அஃதே உண்மைச் சுத்தாவத்தை` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 26

நின்றான் அருளும் பரமும்முந் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனைவிடுத் தூங்கிற்செல் லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.

பொழிப்புரை :

பரம்பொருளை அறிய அவாவிநிற்கின்ற சுத்தான் மாவும், அதற்கு அதனை அறிதற்குத் துணைபுரிந்து அதன் அறிவுக்கு அறிவாய் நிற்கின்ற திருவருளும், அவ்வருளின் துணையால் அந்த ஆன்மாவால் அறியப்படுகின்ற பரம் பொருளும் ஆகிய மூன்று உயர் பொருள்களும், ஆன்மாவினிடத்து மூவகை உடம்புகளாய் நிற்கின்ற தத்துவங்களும், அவற்றைச் செலுத்துகின்ற திரோதான சத்தியும் நீங்கினவிடத்து ஒன்றாய்ப் பொருந்திவிடும். அஃதன்றியும், சிவன் பின்னர் அந்த ஆன்மாவைவிட்டுப் பிரியாத நிலைமையும் உண்டாகும்.

குறிப்புரை :

`நின்றான்` என்பதிலும் எண்ணும்மை விரிக்க `முன்னேயமும்` என்பது பாடம் அன்று. நேயம் - அன்பு; விருப்பம், விருப்பத்திற்குரிய பொருளை `விருப்பம்` என்றார். முந்நேயம் - திரிபுடி. அவை `ஞாதுரி, ஞானம், ஞேயம்` என்பன. இவைமூன்றும் வேறு வேறாய்த் தோன்றுங்காறும் `அனுபவம்` என்பது இல்லையாம். சிவத்தை உணர்தல் சிவஞானத்தாலன்றிக் கூடாமையால், பிற மதத்தினர் என்ன கூறினாலும் சித்தாந்தம் `ஞானம்` என்பது சிவ ஞானத்தையே. அது திருவருளேயாதல் அறிக. உபாதிகளைச் செலுத்துதல் பற்றித் திரோதான சத்தியும், `உபாதி` என உபசரித்துக் கூறப்படும். `சென்ற` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்த லாயிற்று. சென்ற ஆன் - நீங்கிய அவ்விடத்து. எங்கு - வேறிடம். `சொல்லாமையும்` என்னும் உம்மை இறந்தது தழுவிய எச்சம். இதன் பின்னும் `மருவும்` என்பதனைக் கூட்டுக. `உருவும், உபாதியும் சென்ற ஆன், நின்றானும் ... ... ... ஒன்றாய் மருவும்; நன்றான ஞானத்தின் நாதப் பிரான் (ஞானத்தின் நாதன் - திருவருளுக்குத் தலைவன்) எனை விடுத்து ஊங்கிற் செல்லாமையும் மருவும்` எனக் கூட்டி முடிக்க `ஊங்கிற் செல்லாமை` என்பதை, `எங்கெழுந்தருளுவது இனியேl என்பது போலக் கொள்க.
இதனால், பராவத்தை எய்துமாறும், அதன்கண் நிகழும் அனுபவமும் கூறும் முகத்தால் அதனது மேன்மை எடுத்தோதி முடிக்கப்பட்டது.
சிற்பி