எட்டாம் தந்திரம் - 10. அண்டாதி பேதம்


பண் :

பாடல் எண் : 1

பெறுவ பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணலள வாகப்
பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்
செறியும்அண் டாசனத் தேவர் பிரானே.

பொழிப்புரை :

அண்டங்களை ஆசனமாகக் கொண்டு, அவற்றிற்கு மேலே விளங்குகின்ற சிவபெருமான், உயிர்களால் பற்றப்பட்டுப் புறமும், அகமுமாய்ப் பல்வேறு வகையில் அமைந்துள்ள அண்டங்கள் எண்ணிலவாய் நிற்க, அவை அனைத்திலும், கட்பொறிக்குப் புலனாகின்ற மாற்றொளியையுடைய, பொன்னால் ஆகிய அணிகலன்போல அவற்றினுள் நிறைந்திருக்கின்றான்.

குறிப்புரை :

பெறுதற்கு வினைமுதல் வருவிக்கப்பட்டது. ``எறிகடல் ஏழின் மணலளவாக`` என்றது, `எண்ணிலவாக` என்றபடி, ``ஒளி`` என்றதனால், பொறி, கட்பொறியும், ``பொன்`` என்றதனஆல், ஒளி, பொன்னினது மாற்றொளியும் ஆயின. `பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் உள்ளனவாயினும் அவற்றது ஒளியையே மக்கள் நோக்குதல் போல, அண்டங்களிலே சிவபெருமான் நிறைந்திருப் பினும், அண்டங்களை மட்டுமே உயிர்களை உணர்கின்றன` என உவமையை, உணர்ப்படுதல் படாமை பற்றிய ஒரு புடை உவமையாகக் கொள்க.
``அண்டம் ஆரிரு ளூடுகலந் தும்பர்
உண்டு போலும் ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவார் எலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``l
எனவும்,
``அண்டங் கடந்தபொருள்; அளவில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்``8
எனவும் ஓதினாற்போல இவரும், ``அண்டாசனத் தேவர்பிரான்`` என ஓதினார். `விளங்கி` என்பதை `விளங்க` எனத்திரித்து, `அண்டங்கள் விளங்கத்தான் அவற்றினுள் விளங்காது நிறைந்திருப்பான்` என்க.
இதனால், `தத்துவங்களின் காரியமாகிய அண்டங்கள் எண்ணிலவாம்` என்பது கூறப்பட்டது. `தேவர்பிரான் செறியும்` என்றது, அவை அவனால் நிலைபெறுதலை உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின்மேல்
மேனி ஐந்தாக வியாத்தம்முப் பத்தாறாய்த்
தானந்த மில்லாத தத்துவ மானவை
ஈனமி லாஅண்டத் தெண்மடங் காமே.

பொழிப்புரை :

அண்டங்களாகிய ஆசனத்தின்மேல் ஆனந்தமாய் உள்ள மெய்ப்பொருள்தான் (வடிவமற்றதாயினும்) அருவம் இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்துவடிவங்களைக் கொண்டு விளங்குதலால், அதனால் வியாபிக்கப்பட்ட முப்பத்தாறு முதனிலைப் பொருள்கள் தோன்றி, அழிவின்றி நிற்பனவே `தத்து வங்கள்` எனப்படுகின்றன. அவையே குறைவில்லாத அண்டங் களாய்க் காரியப்பட்டு, அளவிறந்து நிற்கின்றன.

குறிப்புரை :

ஐந்துவடிவங்கள் மேல், \\\"சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்`` 3 என்னும் மந்திரத்தின் உரையில் சொல்லப்பட்ட `சிவம், சத்தி, சதாசிவன், மகேசுரன்` என்பவற்றோடு `வித்தை` என்பதுமாகும். ஆகி நின்று செயலாற்றுதலால். முப்பத்தாறு தத்துவங்களில்மேல் உள்ள ஐந்தையும் மெய்ப்பொருள்தானே நேரே செயற்படுத்துகின்றது. கீழ் உள்ள முப்பத்தொன்றினைப் பிறரைக்கொண்டு செயற்படுத்து கின்றது. `தத்துவம்` எனப்படுவன முதற் காரணப் பொருளாய் ஊழி முடிவுகாறும் அழியாது நிற்பன ஆதல் பற்றி, \\\"தான் அந்தம் இல்லாத தத்துமானவை`` என்றார். \\\"தான்`` என்றது பன்மையொருமை மயக்கம். `தத்துவமானவை அண்டமாய், எண்மடங்கு ஆம்` என்க. ``எண் மடங்கு`` என்பது மிகுதியைக் குறிப்பதொரு வழக்கச்சொல். அண்டத்து - அண்டமாம் நிலையில். `அண்டங்கள் குறைந்த எண்ணிக்கையையும், தத்துவங்கள் அவற்றினும் மிக்க எண்ணிக்கை யையும் உடையன` என உரைப்பார்க்கு, `அவ்வாறான மேற்கோள் எங்குளது` எனத் தெரியவில்லை.
சிற்பி