எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை


பண் :

பாடல் எண் : 1

அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.

பொழிப்புரை :

உலகத்தாரால், `அறிவு, அறிவு` என்று சொல்லப் படுவதாகிய உயிர்களும் அனாதியே உள்ளன. அவற்றின் அறிவுக்கு அறிவாய் உள்ள இறைவனும் அனாதியே உளன். அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள அறிவற்றனவாகிய பாசங்களும் அனாதியே உள்ளன. ஆயினும் அனாதியாகிய சிவனது ஞான சத்தி உயிரி -னிடத்துப் பதியுமாயின், உயிர் பிறவித்தொடர்ச்சி அறப்பெறும்.

குறிப்புரை :

``அனாதி`` எனவே, ஆதியும், அந்தமும் இலவாயின. ஞானசத்தியே அருட்சத்தி என்க. அது பதிதலே சத்தி நிபாதம். `சத்தி நிபாதம் வந்தால் பிறப்பு அறும்` என்றாரேனும், `ஞானம் நிகழப் பிறப்பறும்` என்றலே கருத்தென்க.
இம்மந்திரத்தில் கூறப்பட்டன, மேல், ``பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்``8 என்னும் மந்திரத்துக் கூறப்பட்டனவே யாதலின், அவை நெடுஞ்சேயவாயினமைபற்றி, இங்கு இயைபு படுதற் பொருட்டு மறிதுணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 2

பசுப்பல கோடி பிரமன் முதலாப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், ``அனாதி`` எனப்பட்ட பசுக்கள் பிரமதேவன் முதலாகக் கோடிக் கணக்கில் உள்ளன. ஆயினும், அவற்றைக் கட்டியுள்ள பாசங்கள் மூன்றே. (ஆணவம், மாயை, கன்மம்). பதி பசுக்களைக் கட்டியுள்ள பாசங்களை அறுத்துவிட்டால், பசுக்கள் பசுத்தன்மை நீங்கிப் பதியைப் பற்றிக்கொள்ளும். பின்பு அவை பதியை விட்டு நீங்கமாட்டா.

குறிப்புரை :

`பிரமன்` முதலிய பெயர்கள் பிறப்புப் பற்றி வருவனவாம். `பிரமன் முதலா` என்றது, காரணக் கடவுளர்களைக் கீழ்த் தொடங்கிக் கூறியது. `அறுப்பது பதி` என்பது பாரிசேடத்தால் அமைந்தது. `பந்தம் அனாதியாய் இருக்கும் அதினின்றும் நீங்குதல் உளதாதல் போலப் பதியைப் பற்றிய பின்னும் அதினின்றும் நீங்குதல் உளதாகும்போலும்` என நிகழும் ஐயத்தை நீக்குதற்கு ``பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே`` என்றார். பாசங்களின் சத்தி காலப் போக்கில் மெலிவடைவன அதனால் உயிர் அவற்றினின்றும் நீங்குதல் உளதாகின்றது; சிவசத்தி அத்தன்மைத்தன்றாய் என்றும் ஒருபெற்றித் தாம் ஆதலின் சிவத்தை அடைந்த உயிர்க்குப் பின் அதனினின்றும் நீங்கும் நீக்கம் இல்லை என்க.
``துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்``l
``மேவினார் பிரிய மாட்டா விமலனார்``3
என்னும் திருமொழிகளையும் நோக்குக. `அறுத்தால் நீங்கிப் பற்றிவிடா` என்றதனால், `பசுக்கள்தாமே பாசங்களை அறுத்துக் கொள்ள வல்லுன அல்ல` என்பது பெறப்பட்டது.
``கட்டிய நீயே அவிழ்க்கி னல்லது
எட்டுணை யாயினும் யான்அவிழ்க் கறியேன்``*
என்றது காண்க. ``தலைவனைப் பற்றி விடா`` என ஒருமையும், பன்மையுமாகக் கூறியவற்றால், `பதிப்பொருள் ஒன்றேயன்றி, இரண்டாவதில்லை` என்பது பெறப்பட்டது.
இதனால், `முப்பொருளில் பதி ஒன்றே; பசுக்கள் எண்ணில; பாசம் மூன்று` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்
நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்
தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பொழிப்புரை :

உயிர்கள் அனாதியே கிடந்த பாசநிலையிலே கிடந்தாலும் அப்பொழது அவைகட்கு உண்டாகின்ற பயன் மூன்று. அவை, `அறம், பொருள், இன்பம்` என்பனவாம். நான்காவதாகிய வீடு அந்நிலையிலே கிட்டாது. அது கிடைக்க வேண்டுமாயின், அந்த மூன்றும் நீங்குதற்கு ஏதுவாகிய ஞானம் ஒன்றையே விரும்பிப் பதியை உலகப் பற்றுச்சிறிதும் இன்றி, நாள்தோறும் வழிபடுங்கள். வழிபட்டால் அந்தப் பதி, குடத்தில் இட்ட விளக்குப் போல மறைந்திருந்த நிலையினின்றும் நீங்கிக் குன்றில் இட்ட விளக்குப் போல வெளிப்பட்டு விளங்கும்.

குறிப்புரை :

`அது வெளிப்பட்டு விளங்கவே, முன் மந்திரத்திற் கூறியபடி பாசம் அறுக்கப்படப் பதியைப் பற்றிக் கொள்ளும் நிலை உளதாம்` என்பது குறிப்பெச்சம். `கிடக்கின்ற ஆற்றிலே` என உருபு விரித்துக்கொள்க. பயன், உயிர்கள் அடையத்தக்க பயன் `அவை அறம் முதலிய நான்கு` என்பது வெளிப்படை. நடத்தல், இங்கு நீங்குதல். ``இம்மூன்றும் - விட்டதே பேரின்ப வீடு`` என்னும் ஔவையார் வாக்கையும் நினைக. நடக்கின்ற ஞானம் - நடத்தற்கு ஏது வாகிய ஞானம். அறம் முதலிய மூன்றும் உலகியலாதலின் அவை பாச நிலையிற்றானே நிகழ்வவாயின. விளக்கால் அல்லது இருள் நீங்காதவாறுபோல, ஞானத்தால் அல்லது உலகியல் நீங்காமை பற்றி, ``மூன்றும் நடக்கின்ற ஞானம்`` என்றும், பதியைத் தொழுதலே தவம் ஆதலாலும், அத்தவத்தை உலகப் பற்றுடன் செய்யின் உபாயத் தவமும், பற்றற்றுச் செய்யின் உண்மைத் தவமுமாம். ஆதலால், உண்மைத் தவத்தாற்றானே ஞானம் உண்டாம் ஆதலாலும், ``தொடக்கு ஒன்றும் இன்றித் தொழுமின்`` என்றும், `தொழுதல் நியமமாதல் வேண்டும்` என்பார். ``நாடோறும் தொழுமின்`` என்றும் கூறினார். பதியைத் தொழுதலாகிய தவம், `சரியை, கிரியை, யோகம்` என மூன்று என்பதும், `அத்தவத்தானே பதிஞானம் உளதாம்` என்பதும் மேல் பல இடங்களில் கூறப்பட்டன. குடத்திட்ட விளக்கு, குன்றில் இட்ட விளக்கு` இருதொடராக்கி உரைக்க. ``அது`` என்றது, உபநிடத வழக்கு. `பதி` என்றவாறு. `குடத்தில் இட்ட விளக்காயுள்ள அது, குன்றில் இட்ட விளக்காம்` என்க. சாதன சாத்தியங்கள் தம்முள் இயைபிலாவாதல் கூடாமையின், தொழுவதும் பதியையேயாயிற்று.
இதனால், `பதியால் பாசம் அறுக்கப்படுதல் இவ்வாற்றால்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும்
கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முற் பாசத்தை நீக்குதற்குப் பிற்பாசங்களைக் கூட்டிப் பிறப்பு இறப்புக்களில் சூழலவைத்து இவனை, `அஃதும் கருணையே` என அறிந்து அவன் மாட்டு அன்பு செய்து அவனை நினைப்பவர். அவ்வாறு நினைத்தபின், அவன் பிறப்பு இறப்புக்களில் வைத்துள்ளமை பற்றி நாணம் உறுதலும், அந்நாணத்தால் அதனை வன் கண்மையாகக் கருதுதலும் எங்ஙனம் உளவாகும்? உளவாகா.

குறிப்புரை :

முற்பாசம், ஆணவம், பிற்பாசம், மாயை கன்மங்கள். பாசத்தால் பாசத்தை நீக்குதல் ஆடையின் அழுக்கினை உவர்மண் முதலிய அழுக்கினால் நீக்குதல் போல்வதாகும். இவ்வுண்மையை உணர்வார் பிற்பாசங்களைச் சேர்த்தமையை வன்கண்மையாகக் கருதார் என்பதாம். பிற்பாசங்களைச் சேர்த்தமையே மேற்காட்டியபடி ``கட்டிய நீ`` எனப்பட்டது.l `வைக்கின்றவாற்றை உன்னிக் குறிக்கொள்வது எவ்வண்ணம்` என்க.
இதனால், கட்டியவனே பதிதான்` என அவனை வெறாது அன்பு செய்து, முன்மந்திரத்திற் கூறியவாறு, `நாள்தோறும் தொழுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.

பொழிப்புரை :

ஒருவனுடைய உடலில் பற்றிய விடம், மணி மந்திர ஔடதங்களால் நீங்கிப் போனபின்பு மீண்டும் அஃது அவன் உடலில் ஏற இயைபில்லாததுபோல, மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவன், அவ்வுணர்வினால் அவனோடு ஒன்றியிருந்த பாசங்கள் வேறாகி நீங்கிவிட்ட பின்பு, அவன் அப்பாசங்களோடு பொருந்துதற்கு இயைபில்லை. அதனால், அவன் தன்னைத் தடை செய்திருந்த கேவல சகல நிலைகளைப் போக்கி சாக்கிரத்தில் அதீதமாகிய நின்மல துரியாதீதத்தில் அழுந்திச் சீவன் முத்தனாகியே நிற்பான்.

குறிப்புரை :

கட்டிய கேவலம் - ஒன்றையும் அறியாத கேவலம். காணும் சகலம் - சிறிது அறிவு பெற்றுச் சிலவற்றை அறிகின்ற சகலம். சுடுதல் - போக்குதல். `தோன்றும்` என்பது பாடம் அன்று. `மெய்கண்டான்` என்பது நாயனாராலே கூறப்பட்டிருத்தலும் சிவஞான போதத்தில் அச்சொல் ஆளப்பட்டிருத்தலும் குறிக்கொளத் தக்கன.
இதனால், `பசுக்கள் தலைவனைப் பற்றிய பின் விடா` என மேற்கூறியது, உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்த நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

பொழிப்புரை :

சத்தி நிபாதம் வரப்பெற்றமையால், `நாம் உய்யும் வழியாவது யாது` என ஏக்கற்று ஆராயும் பக்குவிகள் அவ்வழியை உணர்தற் பொருட்டுச் சிவாகமங்கள் வழியாகச் சிவபெருமான் அருளிச் செய்தவை, பதியேயன்றிப் பசு பாசங்களின் அனாதி நித்தத் தன்மையும், அவற்றுள் பசுக்கள் பாசத்தினின்றும் நீங்கிப் பதியை அடையும் முறைமையும் ஆகும். ஆயினும் அவைகளை அறியும் பக்குவிகள் உலகத்து அரியர்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலில் கொண்டு, அதன்பின் மூன்றாம் அடியையும், அதன்பின் முதல் இரண்டு அடிகளையும் கூட்டியுரைக்க. முதல் இரண்டடிகளில் சித்தாந்தத்தின் அடி நிலைப் பொருள் சுருங்கக் கூறப்பட்டது.
இதனால், முப்பொருளியல்பை உள்ளவாறு உணரமாட்டா தாரது நிலைமையது இரங்கத்தக்க தன்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :

சிவாலயங்களின் அமைப்பை உற்று நோக்கி உணரவல்லார்க்குக் கருவறையில் முதலிடத்தில் உள்ள இலிங்கமே பதியாயும், அவ்விலிங்கத்தின் திருமுன்பில் உள்ள இடபமே பசுவாயும், (உயிராயும்) இடபத்திற்குப் பின் உள்ள பலிபீடமே அடக்கிஒடுக்கப்பட்ட பாசமாயும் காட்சியளிக்கும்.

குறிப்புரை :

இடபம் இலிங்கத்தை நோக்கின் பலிபீடம் அதன் பின்னதாயும், இலிங்கத்தை நோக்காது வெளியை நோக்கின் இடபத்தின் முன்னதாயும் இருக்கும், இவை சிவத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் பிற்படுதலையும், சிவத்தை நோக்காது, உலகத்தை நோக்கும் உயிர்கட்குப் பாசம் முற்படுதலையும் உணர்த்தும்.
சிவத்தை நோக்கும் உயிரைப் பாசங்கள் அடரமாட்டாது, இருந்தும் இல்லதாயக் கிடத்தலின், பலியிடப்படும் பீடமே பாசமாகின்றது. பாசத்தை, ``ஆகும் நற்பாசம்`` என்றும் இது பற்றி, `சன்மார்க்கமாகிய தத்துவப் பொருள்களே சிவாகமங்களில் சமய சங்கேதப் பொருள்களாகச் சொல்லப்பட்டுள்ளன` என்பது - இதனை
``சன்மார்க்க
சமய சங்கே தப்பொருளும் தான்ஒன் றாகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்ட தில்லை``
என வியந்து கூறினார் தாயுமான அடிகள்.
இதனால், `முப்பொருள்களின் இயல்பை ஆகமங்களைப் பற்றி உணரமாட்டாதார், சிவாலயங்களின் அமைப்பை நோக்கி யேனும் உணரற்பாலர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

பதிபசு பாசம் பயில்வியா நிற்கப்
பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில்நில் லாவே.

பொழிப்புரை :

முப்பொருள் இயல்பை மாணாக்கர்க்கு முன்னர்க் கேட்பித்துப் பின்னர் மீள மீள அவற்றைச் சிந்திப்பித்தற்பொருட்டு அவற்றை உபதேசிக்கின்ற ஆசிரியன் மார்கட்கு உபதேச மொழியை ஆக்கி, அதுவழியாகச் சிவன் பசுக்களின் பாசங்களை அறிவே நீக்குவான். அம்முறையில் முப்பொருள் இயல்பைச் சிந்தித்துத் தெளியின் பாசங்கள் தம்மியல்பில் நிற்கமாட்டா `நிலைகெட்டு ஒடுங்கும்` என்பதாம்.

குறிப்புரை :

`பயில்வியாநித்தம்` என்பது பாடம் அன்று. ஆறு - வழி என்றது உபதேச மொழியை அம்மொழியாவது திருவைந்தெழுத்து மந்திரமேயாதல்.
``நானேயோ தவம்செய்தேன்! சிவாயநம எனப்பெற்றேன்``l
என்னும் அனுபவ மொழியால் விளங்கும். ஐந்தெழுத்தின் உட்பொருள் முப்பொருளே என்பது.
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்,
அவன் எழுத் தஞ்சின் அடைவாம்``8
என்பது முதலியவற்றில் விளக்கப்பட்டது. ``நில்லா`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், `முப்பொருள் இயல்பைச் சிவாலயங்களை நோக்கி ஒருவாறுணர்ந்தார், பின்பு ஆசிரியரை அடைந்து அவர் உபதேசிக்கும் உபதேச மொழியைப் பெற்றுத் தெளிய உணர்ந்து உய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பொழிப்புரை :

சித்தாந்தத் தத்துவங்களைச் சிவாகம ஞான பாதத்தில் அருளிச்செய்த சிவபெருமான், அப்பொருளைப் பயக்கும் தோத்திரங்களையும் கிரியா பாதத்தில் சொல்லிவைத்திருக்கின்றான்.

குறிப்புரை :

`அத்தோத்திரங்களையும் அன்போடு பொருள் உணர்ந்து பாடித் தோத்திரித்து உய்தி பெறுக` என்பதாம். ``தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே``8 என அப்பாரும் அருளிச் செய்தமை காண்க. ``காணும்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. சுத்த சைவம் பூர்வபக்க ஞானங்களைப் போக்கிச சித்தாந்த ஞானத்தைத் தருகின்ற சிவாகமம்.
இதனால், `சைவ சாத்திரங்களின் பொருளைச் சைவ தோத்திரங்களை நியமமாக ஓதும் முறையால் பயிலுக` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.

பொழிப்புரை :

மூவகை ஆன்மாக்களும் தாம் தாம் பெற்ற தனு கரணத்தளவாக அறிவு விளங்கப் பெறுதலின், அவை யாவும் `அணு` எனப்படுகின்றன ஆயினும் அவற்றின் உண்மை நிலை பதியைப் போல வியாபகமே. பாசத் தடை நீங்கியபின் உயிர் தனது உண்மை நிலை யாகிய வியாபக நிலையை அடையும். ஆயினும், பதியினது வியாபகத்தில் அது வியாப்பியமேயாம். உயிர்களின் ஏகதேச நிலை, வியாபக நிலை ஆகிய இருநிலைகளும் என்றும் ஒரு பெற்றியனாய் உள்ள பதியே அவைகட்கு ஆவனவற்றைச் செய்துநிற்பான்.

குறிப்புரை :

பின் இரண்டடிகளிற்போல `அறிந்த` என வர வேண்டிய பெயரெச்சம் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்று நின்றது. யாங்களும் ஆதல் வியாபகம் ஆதல். இரண்டாம் அடி அனுவாதம், அனாதி - அனாதியாய சிவன். `அனாதியில்` என உருபுவிரிக்க. உம்மை, சிறப்பு. ``அனாதியில் வியாத்தனும் ஆவன்`` என்றதனால், `முப்பொருள்களும் அதிசூக்கும சூக்கும தூலமாம் முறையால் வியாபக வியாப்பிய வியாத்தியாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்தப்பட்டது. இதுவே ``பதிபசு பாசம் வேறின்மை`` என்க. ``அவற்றையே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, `பதியே` எனக் கூட்டுக. `முப்பொருள்களும் வியாபக வியாப்பிய முறையால் சமமாய் நிற்பினும் பதியே சுதந்திரமுடையதாய் ஏனையவற்றை இயக்கி நிற்கும்`` என்றற்கு. `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` என்றார். அங்கு அவ்விருநிலைகளிலும். ``படைப்பான்`` என்றது, `எல்லாவற்றையும் செய்வான்` என்னும் குறிப்பு மொழி.
இதனால், பதி பசு பாசம் வேரின்மையும், அவற்றுள் பதியே தலைமையது ஆதலும் கூறப்பட்டன.
முன்மந்திரத்தில், `சுத்த சைவத்திலே நந்திமதி தந்து வைத்தனன்` எனக் கூறப்பட்டவற்றில் இவ்வதிகாரத்தில் எடுத்துக் கொண்ட சிறப்புப் பொருளை இதனுள் இவ்வாறு கூறிய நாயனார், இதன் தொடர்பாக மற்றும் சிலவற்றை இங்கும் கூறிகின்றார். அவை மேலே கூறப்பட்டன வாயினும், `பெற்றதன் பெயர்த்துறை நியமப் பொருட்டு` என்னும் முறையால் இவ்வதிகாரத்தில் எடுத்துக்கொண்ட பொருளோடு அவற்றையும் உடன்கூறித் தெளிவிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 11

படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி
இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.

பொழிப்புரை :

படைப்பு முதலிய செயல்கள் நிகழ்தல் `பரசிவம், பராசத்தி` என்னும் இருவராலேயாம். படைப்பு முதலிய ஐந்தொழில் களாவன, தனுகரண புவன போகங்கைள உயிர்களுக்குச் சேர்ப்பித் தலும், நீக்குதலுமேயாம். இவ்வைந்தொழில், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகையில் நிகழும். சூக்கும ஐந்தொழிலைச் சிவன் சுத்தமாயையில் தான் நேரே செய்வான். தூல ஐந்தொழிலை அவன் அசுத்த மாயை பிர கிருதி மாயைகளில் அனந்ததேவர், சீகண்டர் வழியாகச் செய்விப்பான்.

குறிப்புரை :

`முதற் பொருள் பொருளால் ஒன்றாயினும் ஞாயிறு ஒன்றே `கதிரவனும், கதிரும்` என இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல்போல, `சிவம், சத்தி` என இருதிறப்பட்டுத் தாதான் மியமாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்துதற்கு, ``படைப்பாதி ஆவ, பரசிவம் சத்தி`` என்றார். `சத்தியால்` என உருபு விரிக்க. இடைப் பால் - `கேவலம், சுத்தம்` என்னும் இரண்டற்கு இடையேயுள்ள சகலத்தில், படைத்து ஒடுக்கப்படுவன தனுகரணாதிகளேயாதலின், வாளாதே, ``இவை`` எனச் சுட்டிப் போயினார். `சூக்கப் படைப் பாதியை`` எனவும், `தூலப்படைப்பாதி` எனவும் பின் முன்னாக மாற்றிக் கொள்க. ``சூக்கத்தைத் தற்பரம் செய்ய`` என்றதனால், தூலம் பிறரால் செய்யப்படுதல் விளங்கிற்று. அவற்றிற்கு ஏற்ப முதற்காரண வேறுபாடும் காட்டப்பட்டது. ``பாசம்`` என்றது, இங்கு தூலம் அதிதூலமாகிய அசுத்தமாயை பிரகிருதி மாயைகளை.
இதனால், முன் மந்திரத்தில், `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` எனக் கூறப்பட்டபொருள் அஃது ஆமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.

பொழிப்புரை :

அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம், பராசத்தி என்னும் மேலான ஐந்து நிலைகளில் நின்று சூக்கும ஐந்தொழில் செய்பவன். அருவத்தையும் கடந்த பரம சிவன். தூல ஐந்தொழிலைச் செய்பவன் மகேசுரன்.

குறிப்புரை :

சத்தி ஞானம், கிரியை முதலிய பாகுபாடின்றி நிலையில் பராசத்தியாம். ஞானம், கிரியை முதலியனவாகப் பாகுபட்டுப் பொதுவகை ஞானமாய் நிற்கும் நிலையில் பரநாதமாம். பொதுவைக்கிரியையாய் நிற்கும் நிலையில் பரவிந்துவாம். சிறப்புவகை ஞானமாய் நிற்கும் நிலையில் அபரநாதமாம். சிறப்பு வகைக் கிரியையாய் நிற்கும் நிலையில் அபரவிந்துவாம். இங்ஙனம் இவ்வைந்தையும் காண்க. விந்துவை முதலிற்கூறியது கீழிருந்து எண்ணும்முறை பற்றியாம். ``பரம்`` எனப் பின்னர்க் கூறினைமையின், `சத்தி, சிவம்` என்று பரவிந்து பரநாதங்களையாயிற்று. `அவ்விந்து நாதமும்` என்று எடுத்துக் கொண்டு, சூக்கத்து ஐங்கருமம் செய்வோன் சூக்கத்து ஐ` என மேலே கூட்டி முடிக்க. சூக்கத்து ஐ - அருவத்தையும் கடந்தலைவன். இங்கு, ``ஈசானன்`` என்று மகேசுரனை. என்னை? தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்பவன் அவனே யாகலின். அவன் தூல ஐந்தொழிலைச் செய்தும், செய்வித்தும் நிற்குமாறு வருகின்ற மந்திரத்தால் கூறப்படும்.
இதனால், முன் மந்திரத்தில் தொகுத்துக் கூறப்பட்ட சூக்கும தூல ஐந்தொழில் நிகழ்ச்சிகளில் சூக்கும ஐந்தொழில் நிகழுமாறு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அரன் மே.

பொழிப்புரை :

(இம்மந்திரத்தில் கூறப்படும் பொருள் எழாம் தந்திரத்தில், ``சிவமொடு சத்தி நிகழ்நாதம் விந்து``, ``தலையான நான்கும் தனதருவாகும்`` என்னும் மந்திரங்களில் கூறப்பட்டதேயாம். ஆகையால், அவற்றில் கண்டு கொள்க.)

குறிப்புரை :

பரசிவம் - பரநாதம். மேற் சத்தி - பரவிந்து `உம்பரின் மேவும் விந்து` என்க. உம்பர் - சதாசிவத்திற்குமேல். ஐம்முகன் - சதாசிவன். ஈசன் - மகேசுரன். மேதினி ஆகும்படி - உலகம் தோன்றும்படி. படைப்போன் அரனே ஆம் இந்த அனைவரையும் உண்டாக்குபவன் ஒரு சிவனே. எனவே, `உலகம் இந்நவந்தரு பேதங்களால் நடைபெறுகின்றது` என்பதாம். ஈற்றடி உயிரெதுகை.
இதனால், சூக்குமம், தூலம் ஆகிய இருவகை ஐந்தொழில் களும் நடைபெறும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்(து)
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

பொழிப்புரை :

`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சகலத்தில் படைத்தல், காத்தல், உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு அழித்தல், சிற்றின்பத்தை அதன் இழிவு அறிந்து வெறாது விரும்பி நுகருமாறு மறைத்தல் ஆகிய முன்னர் நிகழும் அருட் செயல்களையும், சடமாகிய பாசங்களை விடுவித்துத் தன்னைக் காட்டி யருளும் அருளலாகிய பின்னர் நிகழும் அருட்செயலையும் உயிர்கள் பொருந்த வைத்த அனாதியாகிய பரமசிவனை, இத்தொழில்களை நோக்கி, `ஐவர்` என்று கூறலாம்.

குறிப்புரை :

`மறைத்தலும் அதன்வழி நிகழும் படைப்பு முதலியனவும் அருளே` என்றற்கு அவற்றை ``முற்றோன்றும் அருளும்`` என வும், `அழித்தல்கூட அருளோ` என்றும் ஐயத்தை நீக்குதற்கு அதனை ``இளைப்பாற்றும் துடைப்பும்`` எனவும் கூறினார். தன்னிலையில் நிற்கும் சொரூப சிவன் `அனாதிசிவன்` என்றும் உயிர் களின் பொருட்டாய் ஐந்தொழில் செய்யும் தடத்தசிவன் `ஆதிசிவன்` என்றும் சொல்லப் படுவான். `ஒருவனாகிய அனாதிசிவனே, ஐந்தொழில் பற்றி ஐவர் தடத்த சிவராய் நிற்பர்` என்பது உணர்த்துற்கு, ``அனாதியை ஐந் தெனலாமே`` என்றார். ஐவர் - சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன். அவர் சம்பு பட்சத்தினர். சம்பு பட்ச அணுபட்ச விளக்கங்களை மேலே காண்க. நிலைநோக்கி, ``ஐந்து`` என அஃறிணையாகக் கூறப்பட்டது.
இதனால், `முன் மந்திரத்தில் ஒன்பதாகச் சொல்லப்பட்ட பேதங்களில் தூல ஐந்தொழிற்கு உரியனவாய், யாவராலும் அறியப்படுவன ஐந்தே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு)
ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு
வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.

பொழிப்புரை :

பதி, முப்பத்தாறு தத்துவங்களைச் சுத்த மாயையில் வியாப்பியமாகச் செய்து, அம்முப்பத்தாறு தத்துவங்கட்குக் காரணமாய் வேறுநிற்கும் மாயையை, சுத்த, சுத்தாசுத்தம், அசுத்தம்` என மூன்றாக வகுத்து, அந்த மாயை மாயேயங்களின் பின்னவாகிய `தாத்துவிகம்` என்னும் காரிய பூதங்களையும் இந்தமாயை மாயேயங்களால் ஆக்கி, அனைத்துப் பொருள்கட்கும் வேறாய் நிற்கும். (எனவே, `பசு, மாயை, மாயேயம், தாத்துவிகம் ஆகியவற்றில் கட்டுண்டு நிற்கும் என்பது பெறப்பட்டது. எனினும்) பாசங்கள் நீங்கியவழிப் பசு, பதியாகும்.

குறிப்புரை :

குண்டலி - சுத்த மாயை. ``தன்னின்`` என்பதில் இன், சாரியை மேற்சாரியை, `அவற்றினின்` முதலியன போல `மாயையில் மிகுத்திட்டு` என இயையும். `மூன்று` என்னாது, ``முப்பால்`` என்றமையால், ஒருமாயைதானே மூன்றாகி நிற்றல் பெறப்படும். `வீட` என்பது ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `பதி ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. `பசு, பதி ஆதல் எவ்வாறு` என்பது. மேல் ``உயிரைப் பரனை, உயர்சிவன் தன்னை`` [மந்திரம் - 2368.] என்னும் மந்திரத்து உரையில் காட்டப்பட்டது.
இதனால், `அனைத்தையும் செய்தும் பதி அவற்றால் எய்துவ தொன்றின்றி நிற்க, பசுவே அவற்றால் பல நிலைகளை எய்தும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத்
தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு
நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.

பொழிப்புரை :

பதி, பசுவை இயல்பாகவே உள்ள ஒரு பாசத்தின்மேல் மற்றொரு பாசம் பற்றும்படி அதனுள்ளே புகுத்தும். (இப்பாசம் மாயை, இயல்பாக உள்ளது ஆணவம்) அதன்பின், இருவினைகளாகிய குழியிலே ஆழச் செய்யும். அதன்பின், அந்த இருவினைகளுக்கு ஈடான துன்பத்தையும், இன்பத்தையும் பசு நுகர்தற்பொருட்டு அதனை நரகத்திலும். சுவர்க்கத்திலும் சேர்த்து, அங்கே சிலநாள் தங்க வைக்கும், இவையெல்லாம் இப்படித் தொடர்ச்சியாக நிகழ்தல் திரோதான சத்தியாலாம். அச்சத்தி இவ்வாறு செய்வித்தல், பசுக்கள் தம் பசுத்துவத்தின் நீங்கிப் பதியை அடையும் நாளைக் கிட்டுதற் பொருட்டாம்.

குறிப்புரை :

`வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்` என்பன திரிந்து நின்றன. தாழ்த்தல் - தங்கச் செய்தல். ``மீதுற`` என்றதனால், முன்பே ஒரு பாசம் உள்ளமை விளங்கும். ``ஆழ்க்கும்`` என்றது, குறிப்புருவகம். ``இருவினைக்கண்` என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. `ஆங்கவை` என்பது ஒருசொல். ``அவற்றால்`` என்பதன் பின், `வரும் பயனை` என்பது, `நாட்கு` என்பதன்பின், `அணிமைக் கண்` என்பதும் வருவிக்க. முன்னர் ``வீழ்க்கும், ஆழ்க்கும், தாழ்க்கும்`` என்றமையால், ``நாள்`` என்றது, அவை நீங்கும் நாளாயிற்று. நாலுதல், நீளுதல், பாசங்களைச் செலுத்துதல் பற்றி இறைவனது சத்தியும், `பாசம்` என உபசரித்துக் கூறப்படும். ஆயினும் அது நலங்கருதியே செலுத்துதலின், ``நற்பாசம்`` என்றார். `நற்பாசத்தால்` என உருபு விரித்து, `இவையெலாம் நாட்கு உற, நற்பாசத்தால் நான்று அங்கு நண்ணும்` என முடிக்க.
இதனால், `பதி, பசுக்கள் பாசத்தின் நீங்கித் தன்னை அடைதற் பொருட்டுத் திரோதான சத்தியால் அவைகட்கு மாயை கன்மங்கைளச் சேர்த்து, அவை வழியாக ஐந்தொழில் புரியும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.

பொழிப்புரை :

உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களில், `நான்` என்னும் முனைப்பை உண்டாக்குவது ஆணவமே. (இம் முனைப்பே, `தற்போதம்`) என்றும், `சீவ போதம்` என்றும் சொல்லப்படும். மாயையைக் கருவியாகப் பற்றி உயிர்கள் செயற்படும்பொழுது, இந்த `நான்` என்னும் முனைப்போடு செயற்படுவதால்தான் அவைகட்கு வினைகள் உண்டாகின்றன. `நான் செய்கின்றேன்` என்னும் உணர் -வோடு செய்தலால், அச் செயல்களின் பயனைச் செய்த உயிரையே நுகரச் செய்ய இறைவன் திருவுளங் கொள்கிறான். அதற்குக் காரணமும் அவன் அவ்வுயிர்கள் மாட்டு வைத்த கருணையே யன்றிப் பிறிதில்லை. அதனால், வினைப் பயனை ஊட்டுவித்தலும் அவை அவனது திருவடியை அடைதற்கு உபாயமேயாகும்.

குறிப்புரை :

`மாயையில் பண்ணிய ஊட்டல்` என்க. பண்ணிய, அன்பெறா அகஈற்று அஃறிணைப் பன்மை வினைப் பெயர். பண்ணி - பண்ணப்பட்டவற்றை. `ஊட்டற்குப் பரிந்தனன்` என்க. `அதுவும் போருளே` என எழுவாய் வருவிக்க. ``போருள்`` என்பதன்பின், `ஆதலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது.
இதனால், இறைவன் உயிர்கள் செய்த வினைகளைத் தான் ஏற்றுக்கொண்டு, அவற்றின் பயனை அவைகளை நுகரச் செய்தற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல்
ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.

பொழிப்புரை :

இறைவன் உயிர்கட்கு ஆணவ பாசத்தின்மேல் மாயை கன்ம பாசங்களைச் சேர்த்தது பல உபாயங்களுள் ஓர் உபாயம் அன்று. உயிர்கள் ஆணவ மலத்தினின்றும் நீங்கித் தூய்மை பெறுதற்கு அவற்றைச் சேர்ப்பது தவிர வேறு வழியேயில்லை. அஃது எதுபோலும் எனின், புதிதாகத் தோன்றிய ஆடையில் இயல்பாய் உள்ள அழுக்கினை மேலும் பிற அழுக்கை ஏற்றித் துவைத்தும் போக்குதல் போல்வதாம். அதனால், இயற்கையாக அன்றி இறைவனால் சேர்க்கப்பட்ட பாசங்கள் யாவும் அருளால் சேர்க்கப்பட்ட பாசங்களே.

குறிப்புரை :

``மூலமே`` என்னும் ஏகாரம். தேற்றம். `அறுவையை எற்றல்போல்` என்க. எற்றல் - அடித்தல்; துவைத்தல். ``போல்`` என்றும் முதனிலை, `போலும்` என முற்றுப் பொருள் தந்தது. அருட்பாசம் - அருளால் சேர்க்கப்பட்ட பாசம்.
இதனால், ``அண்ணலடிசேர் உபாயமதாகும்`` எனப்பட்டது. உவமையில் வைத்து வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

பாசம் பயில்உயிர் தானே பரம்முதல்
பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப
பாசம் பயிலப் பதிபரம் ஆதலால்
பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.

பொழிப்புரை :

பசு தன்னைக் கட்டியுள்ள பாசங்கள் குறும்பு செய்தலால், `நானே பரம்` என்கின்றது. ஆயினும், அங்ஙனம் நினைப்பதும், சொல்வதும் என்றும் நிலைத்து நில்லாமல் பின் நீங்கிப் போவதால், உயிர்க்கு அந்நிலை செயற்கை நிலையாதல் விளங்கு தலின், `உயிர் அனாதியே செயற்கையோடு கூடிப் பசுவேயாய் நிற்கின்று? என, அறிந்தோர் கூறுவர். ஆயினும், `பதிதான் முதலிலே பாசத்தோடு கூடிப் பசுவாய் இருந்து பின் பாசத்தினின்றும் நீங்கிப் பதி யாகின்றது` எனச் சிலர் கூற முற்படுவாராயின், அங்ஙனம் கூறு வார்க்குப் பதியின் வேறாய்ப் பசு இல்லையாம் ஆகலானும், பாசங்கள் சடம் ஆகலின் தாமே செயற்படமாட்டா ஆகலானும் பதியே தன்னின் மிக இழிந்த பாசங்களை மேலிட்டுக்கொண்டு பசுவாதல் கூடுமோ?

குறிப்புரை :

`கூடாது ஆதலின், அங்ஙனம் கூறுதல் அடாததே` என்பது குறிப்பெச்சம். ``பயில்`` இரண்டும் முதனிலைத் தொழிற் பெயர். இரண்டிடத்தும் `பயிலுதலால்` என உருபு விரிக்க. முதல் அடியின் ஈற்றில் `என்னும்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது, இரண்டாம் அடியில், ``தான்`` அசை நிலை. `உயிர் பசுவே என்ப` எனத் தேற்றேகாரத்தை மாற்றி வைத்து உரைக்க. ``பயில`` இரண்டில் முன்னது, `பயிலும் படி` எனவும், பின்னது `பயிலுதலால்` எனவும் பொருள் தந்தன. பயிலுதல் - செயற்படுதல். பரம் - தலைமைப் பொருள். ஈற்றில் உள்ள ஏகாரம் வினாப் பொருட்டாய், எதிர்மறைப் பொருள் தந்தது.
இதனால், `பசுவே ஐந்தொழில் செய்யும்` என்பாரையும், `பதியே தனது விளையாட்டால் பசுவாகி ஐந்தொழிற்படும்` என்பாரையும் மறுத்துச் சித்தாந்தம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே.

பொழிப்புரை :

வேதாகமங்களின் அர்த்தத்திலே தெளிவு பிறவாமல் ஐயுற்று வினாவிய முனிவர்களை, அந்த வேதாமகப் பொருள்களில் முடிந்த பொருளாய் உள் அருட்டிரு மேனியானது தனது கையினாலே அணைத்துத் தழுவிக் கொள்ளுதலும், அவர்கள் அத்திருமேனியில் அமைந்த கைக்குறிப்பினாலே தம்மை உள்ளவாறு உணர்ந்துகொண்டார்கள்.

குறிப்புரை :

`அருந்தவரை` என்னும் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. ``உத்தரம்`` இரண்டில் முன்னது விடை; பின்னது முடிநிலை. மேனி - தக்கிணா மூர்த்தி அணையப் பிடித்தல் - அவர்களது தலைமேற் கை வைத்துத் தானாகச் செய்தல். அத்திரு மேனியின் கைக் குறிப்பு, சின்முத்திரை, இம்முத்திரை.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்பதையும்,
``பதியினைச் சென்றணு காபசு பாசம்``*
என்பதையும்,
``பதியணு கில்பசு பாசம்நில் லாவே``
என்பதையும் உணர்த்தும் அதனால் அருந்தவர் ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தனர்``* என்க. ``தம்மை அடைந்து நின்றார்`` என்றமையால், பின் தலைவனை அடைந்து நின்றமை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `இவ்வதிகாரப் பொருளே முதல் ஆசிரியனாகிய தென்முகக் கடவுளால் முனிவர்க்கு உணர்த்தப்பட்டது` என்பது கூறிமுடிக்கப்பட்டது.
சிற்பி