எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்


பண் :

பாடல் எண் : 1

காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

பொழிப்புரை :

முற்செய் தவம் இன்மையால் இப்பிறப்பில் நல்லறி வின்றிப் புல்லறிவேயுடையார், தம்மை எல்லாம் அறிந்தவராக மதித்துக்கொண்டு, ஏவவும் செய்கலாது, தாமும் தேராதுl பயனில வற்றைப் `பயனிடைய` எனவும், பயனுடையவற்றை `பயனில` எனவும் கொண்டு தாம் வேண்டியவாறே செல்பவர்களை, `தலை கால் தெரியாது திரிபவர்` என்றல் வழக்கு. அதன் பொதுப் பொருள் வெளிப் படையாயினும், சிறப்புப் பொருள் குறிப்பாகவே உள்ளது. அஃது யாதெனின், `கால்` என்பது சிவனது சத்தி. அஃதே திருவருள். அஃதே எல்லாவற்றிற்கும் வினை முதல் `தலை` என்பது உயிர். `உயிர்க்கு அறிவு உண்டாதல் தலையிலே` என்பது யாவரும் அறிந்தது. எனவே, ஞானம் உதயமாவது `தலை` எனப்படுகின்ற உயிரினிடத்திலேதான். அந்த ஞானம் தானே உதயமாகாது. `கால்` எனப்படுகின்ற சிவசத்தி உதிப்பிக்கவே உதயமாகும். (ஞானகுரு மாணாக்கனது தலையில் தமது காலை வைத்துத் தீக்கைசெய்தல் இந்த உண்மையை நன் குணர்த்தும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் காலில் தங்கள் தலைபடும் படிவணங்கும் மரபும் இது பற்றியது. ``பொல்லார் இணை மலர் நல்லார் புனைவரே``8 என மெய்கண்டதேவர் அருளிச்செய்த குறிப்பும் உணரத்தக்கது.
``கோள் இல் பொறியிற் குணம் இலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை``*
என்றதும் இக்குறிப்பினதே.) காலாகிய சிவசத்தி உதிப்பிக்கின்ற ஞானத்தின் பயன் அந்த உயிர் வீடு பெறுதலாம்.

குறிப்புரை :

`கால்` என்பது, `தாள்` எனவும்படும் தாள் - முயற்சி -யுமாம். முயற்சியே கிரியை. ``எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை செய்தி``* என்றபடி, இச்சையும் கிரியையும் ஞானத்தின் வேறு பாடேயாம். இச்சை எப்பொழுதும் ஒரு நிலையிலேயிருக்கும். ஏனை ஞானமும், கிரியையுமே செயற்படும் அதனால், இயங்கு கருவி யாகிய கால், (இறைவனது இருதிருவடிகளும் இறைவனது) ஞானமும், கிரியையுமேயாம். உயிர்கட்கு அறிவு தலையில் இருத்தலால், அவற்றின் இச்சை செயல்களும் தலையில் உள்ளனவாம். எனவே, `காலின்கீழ் உள்ளது தலை` என்பது பொருள். இறைவனது ஞானேச்சாக் கிரியைகள் வியாபகமாய் நிற்க. அவற்றில் உயிர்களின் ஞானேச்சாக் கிரியைகள் வியாப்பியமாய் நிற்றலைக் குறிப்பதாம். சிவமும், சீவனும் ஒன்றும் ஆகாமல் இரண்டும் ஆகாமல் நிற்பதே சித்தாந்தபரமுத்தியாகலின், அதனை விளக்குதற்கு எத்தனையோ தொகைச் சொற்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் விடுத்து, ``தாடலைபோல்`` எனக் கூறுவதும் இது பற்றி.
``தாடலைபோற் கூடிஅவை தான்நிகழா வேற்றின்பக்
கூடலைநீ ஏகம்எனக் கொள்``*
என்பது காண்க. `காறலைபோல்` எனக் கூறலும் உண்டு. ``என்பர்`` என்பதை, ``காரணம்`` என்பதன் பின்னர் கூட்டுக. `கால்` என்பதைக் குறையெண்ணுப் பெயராகக் கூறுவோர், `தலை` என்பதை அங்ஙனங் கூறமாட்டாமை அறிக.
இதனால், `அடிதலை தெரிதல்` என்னும் வழக்கின் உண்மைப் பொருள் விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
தலைஅடி உச்சி உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில், ``காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே`` என்ற சிவஞானமாகிய பதி ஞானமாம்) உடம்பில் `தலை, கால்` என்பன. வெளியுறுப்பாய் இருத்தல் யாவரும் அறிந்தது. ஆயினும் உடம்பிற்கு உள்ளே தலை கால்கள் உள்ளன; அவற்றைப் பலர் அறியார். அந்த `தலை, கால்` என்பன முறையே தலை உச்சியும், மூலாதாரமும் ஆகும். (தலை உச்சி `ஏழாம்தானம் எனப்படும்) அந்தத் தலையில் எல்லாருக்கும் இயல்பாக உண்டாகின்ற அறிவு உலகியல் அறிவாகும். அந்த அறிவு, மூலாதாரத்தில் உள்ள குண்டலி கீழ் மேலாகச் சுழன்று செய்யும் செயலால் யோகக்காட்சி அறிவாய் மாறி நிகழப்பெற்றவர், அந்த அறிவையே உடையராய் இருத்தலன்றி, உலகியல் அறிவை உடையவர் ஆகார்.

குறிப்புரை :

`தலையும், அடியும் முறையே உச்சியில் உள்ளது. மூலத்தில் உள்ளது` என நிரல்நிறையாக வைத்து உரைக்க. ``உள்ளது`` என்பது, ``மூலம்`` என்பதன் பின்னரும் சென்று இயையும். தலை அடியான அறிவு - தலை அறிவு அடி அறிவாக மாறிய அறிவு. `தலை அடியாகவே இருந்தார்` என்க.
இதனால், `அடி தலை யறிதல்` என்னும் வழக்குச் சிவஞான நிகழ்ச்சியைக் குறித்தலேயன்றி யோக ஞான நிகழ்ச்சியையும் குறிக்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.

பொழிப்புரை :

`அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும் - தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.

குறிப்புரை :

`அஃது அவனே இரங்கி வந்து எனக்கு அருளியது` என்பது குறிப்பு. இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `நின்றான்` என்பதை முதலடியின் இறுதியில் வைத்து உரைக்க. `முழுதும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. ``அண்டமும்`` என்பதன்பின் எஞ்சி நின்ற `கீழ்` என்பதை வருவித்து நிரல்நிறையாக்குக. `பின்` என்பது தெளிவுப் பொருட்கண் வந்தது, `நீயிர் பொய் கூறியபின், மெய் கூறுவார் யாவர்` என்பதிற் போல. ``தான்`` என்பதில் பிரிநிலை ஏகாரம் விரித்து, `உலகம் படைத்தவன் தானே` என்க. ``படைத்தவன்`` என்றது உபலக்கணம்.
இதனால், `அடிதலை அறிதலை இறைவனிடம் வைத்து நோக்குங்கால் - அவை நம்மால் அறிய இயலாதன - என அறிதல் வேண்டும்` என்பதும், `அறிந்து அவனது அடியை அடைய முயல வேண்டும்` என்பதும் கூறப்பட்டன.
``நிலமுதற்கீழ் அண்டம்உற நின்றிலனேல் இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார்காண் சாழலோ``3
என்றதும், `அவன் அவ்வாறு நின்றிராவிடில் உலகம் அழிந்திருக்கும்` என்பதையே குறித்தது.
``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே`` 8
``கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்
பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் ;
சோதி மணிமுடிசொல்லில், சொல்லிறந்து நின்ற தொன்மை``*

பண் :

பாடல் எண் : 4

சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லா னாயின்
எந்தையை யானும் அறியகி லேனே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில் சொல்லியவாறு சிவனது திருவடி -யினை எனது தலைமேல் மட்டும் உள்ளதன்று எனது சித்தத்தி னுள்ளேயும் உள்ளது. இனி எனது சித்தத்தை உள்ளடக்கி, வெளியி -லேயும் உள்ளது. (இந்நிலை, அவன்தானே இரங்கி எனக்குச் செய்த அருட்செயலாகும். ஏனெனில்,) முதற் கண் அவன் என்னை நினையாதிருப்பின், நான் அவனை நினைப்பதற்கே வழியில்லை.

குறிப்புரை :

அந்தக்கரணம் நான்கனுள் சித்தம் ஒன்றை மீள மீள இடைவிடாது நினைந்து நினைந்து நிற்றலால்தான் ஆன்மா அப்பொருளில் அழுந்தி நின்று அதனை அனுபவிக்கின்றது. அது பற்றியே, ``திருவடி சிந்தையினுள்ளே`` என்றார்.
``சிந்திப் பரியன;சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன ... ... ஐயாறன் அடித்தலமே``3
``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாக``*
என அருளிச் செய்தன காண்க.
``என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான்;
தன்னை நானும்முன் ஏதும் அறிந்திலேன்;
என்னைத் தன்அடி யான்என் றறிதலும்,
தன்னை நானும் பிரான்என்றறிந்தேனே``l
எனவும்,
``எந்த மாதவம் செய்தானை நெஞ்சமே,
பந்தம் வீடவை யாய பராபரன்,
அந்தம் இல்புகழ் ஆரூர் அரனெறி
சிந்தை யுள்ளும், சிரத்துளும் தங்கவே``8
எனவும் போந்த அப்பர்திருமொழிகளை இங்கு உடன்வைத்துக் காண்க.
இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட திருவடிப் பேற்றின் நிலை மேலும் வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம்
உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

பொழிப்புரை :

சொற்களால் சொல்லவராராத ஒரு நிலம்; அவ்வாறான ஓர் ஓளி; இவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்ற அதற்கு அப்புறத்தாகிய இடமே என்னுடையதலைவர் இருக்கும் இடம். அவர் அவ்வாறிருக்கவும் மனக் கண்ணிற்கும் காணப்படாத ஓர் ஒளியாயும், வாக்கிற்கு வாராத ஒரு மந்திரமாயும் உள்ள அதனது இயல்பையும், அதனை அடையும் வழியையும் ஒருவன் எனக்குச் சொன்னான். அந்த வழியிலே நின்றமையால், முன் தந்திரத்திற் கூறியவாறு என் தலைவனது திருவடியை யான் அடைந்தேன்.

குறிப்புரை :

``பன்னாத`` என்பதை ஒளிக்கும் கொள்க. `ஒரு நிலம்` என்றும், `ஓர் ஒளி` என்றும் சொல்லப்பட்டது. `பரவெளி` என்றும், `சிதாகாசம்` என்றும் சொல்லப்படுகின்ற பராசத்தி அது தன் குணமாக, அக்குணத்தையுடைய குணியாதல் பற்றிப் பரமசிவனை, அதற்கும் அப்புறத்துள்ளவனாகக் கூறினார். ``அப்பால்`` என்றது, `அந்த இடம்` என்றபடி. `அப்புறத்துள்ள அந்தப் பால்` என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. உள்ளத்துள் ஒரு பொருளை நினைப்பது என்றாலும் யாதானும் ஒருவடிவில்தானே நினைத்தல் வேண்டும். அஃது இயலாமையால், ``உன்னா ஒளி`` என்றார். உரை செயா மந்திரமாவது உரைசெய்யப்படும் மந்திரங்களையெல்லாம் வாயிலாகக் கொண்டு இயக்கி, அம்மந்திரங்கைளக் கணிப்பவர்க்கு அவற்றின் பயனைத் தந்து நிற்கும் அந்தப் பொருள். இங்ஙனம் இருவகையாகக் கூறிய இதுவும் திருவருளைக் குறித்ததேயாம். ``உரைசெயா மந்திரம்`` என்பதிலும் எண்ணும்மை விரிக்க. ஒருவன் - குருமூர்த்தி. அவ்வெழுவாய் வருவிக்கப்பட்டது. குருமூர்த்தி அருளைச் சொன்னதாவது, `உண் அறிவிற்கு அருளையே தாரகமாகக் கொண்டு, அறிந்தும், செய்தும்நில்` எனக் கூறியது. `அவ்வழியில் நிற்கவே, தலைவனது திருவடிப்பேறு கிட்டிற்று` என்பதாம்.
இதனால், `அடி, தலை` என்பவற்றுள் இறைவனது, திருவடிபின் சிறப்பும், அதனை அடையுமாறும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 6

பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :

பதியாகிய சிவன் உங்கட்குக் காட்டாவிடினும் அன்பர்கட்குக் காட்டிய திருவடிகளை பதி வரலாறு உணர்ந்து அவைகளைப் பாவனையால் உங்கள் தலை மேல் வையுங்கள் மற்றும் மலர்போன்று அவைகளை உங்கள் உள்ளத்திலே வைத்துத் தியானிப்ப -துடன், வாயால் புகழ்ந்து பாடுங்கள். இவைகளையெல்லாம் இடை யறாது செய்யாவிடினும் இவற்றிற்குரிய காலங்களைத் தெரிந்து அக்காலங்களில் செய்யுங்கள்.

குறிப்புரை :

`செய்தா அவன் தனது திருவடிகளை உங்கட்கும்காட்டி உய்யக்கொள்வான்` என்பது குறிப்பெச்சம் ``தோற்றும்`` என்றது இறந்த காலத்தில் நிகழ்காலம் பின்னர் ``மதி`` என்றும் ``ஓதும்`` என்றும் கூறுதலால், முன்னர்வைத்த தலைமேலாயிற்று.
``வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சுழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே``l
என்ற அப்பர் திருமொழியும் காண்க.
`இறைவனைத் தியானித்தற்குரிய சிறப்புக் காலங்கள் மூன்று` என்ப. அவை `காலை நண்பகல் மாலை` என்பன
``தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலங்கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே``8
என ஓதியருளினமை காண்க. இவைகளை, `சந்தியாகாலம்` என்பர். சம் தியா காலம் - நன்றாகத் தியானித்தற்குரிய காலம்.
இனி வழிபாட்டிற்குரிய காலங்களை `முன் மூன்று, பின் மூன்று` என வைத்த ஆறு காலங்களும் சொல்லப்படும் `வைகறை, காலை, நண்பகல்` - என்பன முன் மூன்று காலங்கள், `எற்பாடு, மாலை, யாமம்` - என்பன பின்மூன்று காலங்கள். ``கதிசெயும்` என்பதில், செய்தல் - உண்டாக்குதல்.
இதனாலும் இறைவனது திருவடியை அடையும் முறையே வகுத்துச் சொல்லப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில்
தரித்துநின் றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

பொழிப்புரை :

எல்லாப்பொருள் கட்கும் ஆதாரமாய் அவை -களைத் தாங்கிநிற்பவனாகிய சிவன் தன்னை எண்ணாதவர்களது உள்ளத்தை வெறுத்தும், அடைதற்கரிய அப்பரிபாகத்தை அடைந் தமை காரணமாக பரிபாகிகளது உள்ளத்தை விரும்பியும் நிற்கின்றான். ஆகவே, அவனது திருவடியைத் தனது உள்ளத்தில் தாங்கி நிற்பவன் இவ்வுலகத்திருப்பினும் சிவலோகத்தில் இருப்பவனேயாவான்.

குறிப்புரை :

`தரித்து நின்றான், கருதாதவர் சிந்தை கரித்து நின்றான்; அப்பரிபாகத்தானே பரித்துநின்றான்; அவன் அடி தன்னுடை நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதிநாதன்` என இயைத்துப் பொருள்கொள்க; ``பரித்து`` என்பதை, `பரிப்ப` எனத்திரிக்க. ``சிந்தை`` என்பது பரித்த லோடும் இயையும். அகரச்சுட்டு அடைதற்கு அருமை தோன்றி நின்றது. `அவன் அடி` எனச் சுட்டியுரைக்க. கரித்தல் - வெறுத்தல். `கருதாமைக்குக் காரணம் பரிபாகம் இன்மை` என்பது தோன்றுதல் அறிக. `அமரர்` என்பது தேவரையும், `அமராபதி` என்பது தேவ ருலகத்தையும் குறித்தல் பொது வழக்காயினும், சிவநெறி வழக்கில் அவை சிவ சாலோக சாமீப சாரூப நிலைகளை அடைந்தவர்களையும், சிவலோகத்தையும் குறிக்கும்.
இதனால், சிவனது திருவடிப்பேற்றின் அருமையும், அப்பேறு பெற்றவர்களது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
கன்றாத தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு)
இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :

மக்கள் உடம்பிற்குள் தாமரைக் கொடி ஒன்றே உள்ளது: அதில் மலர்கள் மூன்று உள்ளன. அந்த மூன்று மலர்களிலும் என்றும் அவற்றால் வருந்துதல் இல்லாத சிவனது திருவடியிணையும் உள்ளது. ஆயினும் அத்திருவடியிணையைக் காண்பதற்கு அந்த மூன்று மலர்களும் மலராக மலர்தல்வேண்டும். அவ்வாறு மலர்தற்கு அவை பக்குவப்படவேண்டும். அதற்கு உடம்பிற்றானே உள்ள நெருப்பை எழுப்பி வெதுப்பினால், அம்மலர்கள் பக்குவப்பட்டு மலரும் மலர்ந்தால், அங்ஙனம் மலர்விக்க வல்லவர்கட்குச் சிவனை அடைதல் இப்பொழுதே எளிதாகிவிடும்.

குறிப்புரை :

தாமரைக்கொடி, சுழுமுனைநாடி, மூன்று மலர்கள், அனாகதம், (இருதயம்) விசுத்தி, (அடித்தொண்டை) ஆஞ்ஞை (புருவநடு) ஆகிய ஆதாரங்கள். அனாகதத்திற்குக் கீழ் உள்ள ஆதாரங்கள் தாமரைக்கொடியின் அடிப்பாகமாகக் கருதப்படுகின்றன. வழிபாடு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றுறுப்புக்களால் நிகழ்வது. அவை மூன்றும் முறையே மொழி, மெய் மனம் என்ப வற்றால் நிகழுங்கால், விசுத்தி, அனாகதம், ஆஞ்ஞை என்பவற்றில் நிகழ்தல்பற்றி அம்மூன்றையே கூறினார். இன்றே - இப்பிறப்பிலேயே.
இதனால், `சிவனது திருவடியை அடைதற்கு மேற்கூறிய நினைத்தல் வாழ்த்தல் வணங்கலேயன்றிச் சிவயோகமும் சிறந்த சாதனமாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான் பக்குவம் எய்திய என்னைத் தனது திருவடியாகிய மலர்கள் எனது தலையிலே எனது பாசக்கட்டு நீங்குமாறு மலரும்படி செய்யும் முகத்தால், மயக்கம் கொண்ட எனது மனத்தால் திகைத்து நிற்கின்ற திகைப்பை நீக்கி ஆட்கொள்ள நினைத்தான். அதனால் நான் கோணங்கள் எல்லாம் நீங்கி, நேர்மையை அடைந்தேன் அந்த நேர்மை இது` எனச் சொல்லவாராது.

குறிப்புரை :

`கால்கொண்டு` என்பது, இறுதியில் நின்ற ``கட்டற`` என்பதனோடு இயைந்தது. அந்த `கட்டற` என்றது, `முறுக்கவிழ்ந்து மலர` என்றதாம். ``கால்கொண்டு கட்டற`` என்றாரேனும், `கால் கட்டறலைக் கொண்டு` என்றலே கருத்து. `பரன், பால் கொண்ட என்னைக் கால் கட்டறல்கொண்டு துயக்கறக் கொள்ள நாடினான்` என இயைக்க. பால் - பான்மை` பக்குவம் மேல் - அதன்பின் மேல் கொண்ட` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. கோணங்கள் ஆணவ மலத்தால் எழும் செருக்கும், கன்ம மலத்தால் வரும் இன்பத் துன்பங்களும், மாயா மலத்தால் வரும் ஐம்புலத் தாக்குதலும் பிறவுமாம். நேர்மை, மெய்யுணர்வு, முதல்வனது இயல்பு பற்றி எழும் அன்பு, அதனால் விளையும் ஆனந்தம் முதலியனவாம்.
`பக்குவம் வந்தால் நீவிரும் இவையெல்லாம் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `திருவடிப் பேறே கோட்டம் நீக்கிச் செம்மை செய்வது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர்
பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச்
செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.

பொழிப்புரை :

தாம் பெற்ற புதல்வரிடத்தில் உள்ள தீ நாற்றத்தையும், அதற்குக் காரணமான அசுத்தப் பொருள்களையும் அனுபவித்த போதிலும் அப்புதல்வரிடத்தில், வெறுப்புக் கொள்ளாமலே பெற் றோர்கள் அவை நீங்குதற் பொருட்டுப் புதல்வர்க்கு வெறுப்பான செயல்கைளச் செய்வார். (அவை நெய்யிட்டு, நலங்கிட்டு முழுக் காட்டுதல், மருந்தூட்டுதல் முதலியனவாம்) அது போலவே, சிவனும் உயிர்கள் பக்குவம் எய்தற் பொருட்டு உலகப் பற்றை அவைகட்கு உண்டாக்குதலால், அப்பற்றின் வழியவான செயல் -களைச் செய்வான் ஆகவே, அது கருணை காரணமானது அன்றி, வன்கண்மை காரணமானது அன்றாம்.

குறிப்புரை :

குற்றம் - இங்கு, அசுத்தம். இதனைக் கூறவே ``நாற்றம்`` என்றது தீ நாற்றமாயிற்று. ``குணம் குறை`` என்றது `குணம் இல்லன்` என்றபடி. `குணம் இல்லன` என்று புதல்வரது கருத்து நோக்கி `பான்மை பக்குவம்` என்பதை முன் மந்திர உரையிலும் கூறினோம். பான்மைக்கு - பக்குவம் வருதற்கு, செற்றம் - பகை; வன்கண்மை `இலாது` என்பது ஈறு குறைந்து நின்றது. செய்கைக்கு - செய்கையால்; உருபு மயக்கம். ஈசன் உயிரது பான்மைக்குச் செற்றம் இலாது ஓர் பற்றைச் செய்கையால், அதற்கு எய்தின செய்யும்` என்க. உலகப் பற்றிற்கு எய்தன பிறப்பு இறப்புக்களும், இன்பத்துன்ப நுகர்ச்சிகளுமாம்.
இதனால், `பக்குவம் வாயாத உயிர்கட்கு இறைவன் செய்வதும் அருளேயன்றி, வன்கண்மையன்று` என்பது கூறும் முகத்தால், அவ்வுயிர்களும் திருவடிப்பேற்றை அடைவனவே என்பது கூறப்பட்டது.
சிற்பி