எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்


பண் :

பாடல் எண் : 1

மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

பொழிப்புரை :

உயிர்களை எப்பொழுதும் வருத்துவனவாய் மூன்று குற்றங்கள் உள்ளன. அதனால் ஆணவத்தின் சத்தி முற்றும் மடங்காது செயற்பட, சில வேளைகளில் ஒன்றை மற்றொன்றாக உணர்ந்தும், சில வேளைகளில் எதனையும் அறியாதே கிடந்தும் உயிர்கள் துன்புறு கின்றன. ஆகவே அம்முக்குற்றம் நீங்கப்பெற்றவரே துன்பத்தை நீக்கினவர் ஆகின்றனர். நீங்கப் பெறாதவர் அக்குற்றங்களில் கிடந்து கெடும் முறைமையை உடையவர் ஆவர்.

குறிப்புரை :

`மூன்று குற்றங்கள் இவை` என்பது வருகின்ற மத்திரத்தால் கூறப்படும். ``மான்று`` என்பதும் `மயங்கி என்றதே யாயினும் அது திரிபுணர்வையும், மயங்கி என்பது யாதும் அறியாமை -யையும் குறித்தன. ``ஆறு`` என்பதன்பின், `உடையர்` என்பது சொல் லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `உயிர்களின் துன்பத்திற்குக்காரணம் முக்குற்றம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :

`காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக்கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர்ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.

குறிப்புரை :

காமம் - விருப்பம். வெகுளி - சினம்; வெறுப்பு. மயக்கம் - அறியாமை. `வேட்கை` என்பதையும் காமம் ஆக்கியும், `செருக்கு` என்பதையும் மயக்கம் ஆக்கியும் குற்றத்தை `ஐந்து` என்றல் சாங்கிய நூல் முறைமை. அந்த ஐந்தையும் அந்நூலார் `பஞ்சக்கிலேசம்` என்பர். அந்த ஐந்தையே திருவள்ளுவர். ``காமம், வெகுளி, மயக்கம்``* என மூன்றாக்கிக் கூறியதாகப் பரிமேலழகர் உரைத்தார். எனினும், தமிழ் நூலார் மூன்றாகக் கூறுவதையே சாங்கியர் ஐந்தாக விரித்தனராவர். பிடித்திருத்தல் - குறிக்கொண்டிருத்தல். `எறிமணி போலும் ஓை\\\\u2970?` என்க. மணி, அதன் ஓசையைக் குறித்த ஆகுபெயர், மணியை அடிப்பது ஒரு கணமேயாயினும், அதினின்றும் எழும் ஓசை நெடிது போது தொடர்ந்து ஒலித்தல் போல, உந்தியினின்றும் எழுந்த `ஓம்` என்னும் ஓசை இரண்டு மாத்திரையைக் கடந்து தொடர்ந்து ஒலித்தது` என்றற்கு `எறி மணி ஓசை போல்` என்றார். `இவ்வோசை யோகத்திற் கேட்கப்படும்` என்பது மூன்றாம் தந்திரத்தில் கூறப்பட்டது. `ஓம்` என்பது ஒரு
சொல்லாகலானும் சொல்லுக்குச் சார்பாய் உள்ளது பொருளாகலானும் பொருளை `சார்பு` என்றார். தாமம் - சார்பு. இதன்பின், `வெளிப்பட` என ஒருசொல் வருவிக்க. ``உள்ளே உறைவது`` என்றதனால் அஃது அறிதற்கரியது என்பது பெறப்பட்டது. `வியப்பு` என்பது சொல்லச்சம்.
இதனால், `முக்குற்றங்கள் இவை` என்பதும், `அவை யோக முயற்சியால் நீங்குதலும்` கூறப்பட்டன.
சிற்பி