எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்


பண் :

பாடல் எண் : 1

அதீதத்து ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்து ளாகி அறிவிலன் ஆன்மா
மதிபெற் றிருள் விட்ட மன்னுயிர் ஒன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

பொழிப்புரை :

சிவன் நின்மல துரியாதீதத்தில் ஞேயமாய் வெளிப் பட்டுப் பின்பு அதனையும் நீங்கி நிற்பான். (அஃதாவது, `போக்கியப் பொருளாகாது நிற்பான்` என்றபடி. அவன் போக்கியப் பொருளாதல் பராவத்தைகளிலாம்) அந்நிலையில் உயிர் தற்போதத்தை இழந்து நிற்கும். ஞானத்தைப் பெற்று, அஞ்ஞானத்தினின்றும் நீங்கிய உயிரே, ஒன்றாகிய பதிப்பொருளில் அழுந்தி அதுவாகும். அங்ஙனம் ஆய பொழுது அந்த உயிரே `பரமான்மா` என்னும் பெயரைப் பெறும்.

குறிப்புரை :

``ஆகி அகன்றவன்`` என்றமையால் அவ்வதீதம் நின்மலாதீதமாயிற்று. இரண்டாம் அடியில் `அவ்வதீதத்துள்` என எடுத்துக்கொண்டுரைக்க. ``இருள்`` என்றது வாதனை அளவாய் நிற்கும் ஆணவ மலத்தை அதுவும் நீங்குதல், தேகம் நீங்கிய பின்பாம். ஆகவே, `இருள்விட்ட மன்னுயிர்`` என்றது பராதீதத்தை அடைந்த வுயிரையாம். பரான்மாவை அடைந்த பொழுது சீவான்மாவும் `பரமான்மா` எனப் பெயர்பெறும் - என்பது சர்வஞ்ஞானோத் தரத்திலும் கூறப்பட்டது. ``பர உயிர் தானே`` என்பதை, `தான் பர உயிரே` என மாற்றியுரைக்க.
இதனால், `சகல கேவலங்களில் பாலில் நெய்போல் விளங்காமலும், சுத்தத்தில் நின்மலாவத்தையில் பாசி படுகுட்ட நீர் போல ஒருகால் விளங்கியும், மற்றொருகால் விளங்காதும், பரா வத்தையில் தயிரில் நெய்போல விளங்கியும் நிற்பது பரம் என்பது கூறப்பட்டது. அந்நிலைகளில் ஆன்மா எய்தும் பயனும் விளங்குதற் பொருட்டு உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே.

பொழிப்புரை :

பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. வியாபகமான பேரொளியாயும், அப்பொழுதே உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் மி நுண்ணிய விளக்காயும் உள்ளது. அஃது ஏனைப் பொருள்கள்போல எல்லார்க்கும் இனிது விளங்கித் தோன்றாது, ஒரு சிலர்க்கே விளங்கித் தோன்றுவதாய் நின்றே, கோட்டம் இன்றி, நடுவு நிலையதாயே உள்ளது. காலத்தைக் கடந்ததாகிய அந்தப் பரம் பொருளின் இயல்புகளை உணர்ந்தவர் தவம் செய்தவராவர்.

குறிப்புரை :

`ஆதியும் அந்தமும் இல்லாதது` என வேறு கூறற் பாலதனை ஒன்றாக உடம்பொடு புணர்த்துக் கூறினார். ``அரும்பதி`` என்பதனை முதலிற் கொள்க. ``பரஞ்சுடர்`` என்பதில் பரம் - மிகு நுண்மை. பரபோதம் - பரத்தை உணரும் போதம். புண்ணியம், சிவபுண்ணியம். இதுவே தவம் ஆதல் அறிக.
இதனால், பரலக்கணம் மற்றும் சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

துரியங் கடந்து துரியாதீ தத்தே
அரிய இயோகங்கொண் டம்பலத் தாடும்
பெரிய பிரானைப் பிரணவக் கூத்தே
தெரியவல் லார்க்குத் துரிசில்லை தானே.

பொழிப்புரை :

யோகாவத்தையில், அனாகதம், விசுத்தி ஆஞ்ஞை, பிரமரந்திரம், துவாதசாந்தம் என்பன முறையே சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகட்குரிய தானங்க -ளாகும். அவற்றுள் துரியத்தானமாகிய பிரமரந்திரத்தையும் கடந்து, அதீதத் தானமாகிய துவாத சாந்தத்தில், அரிதாகிய அம்பலத்தில் பொருந்தி ஆடுபவன் பெரிய பெருமான்; மகாதேவன் அந் நடனத்தைக் காணுதல் பிரணவ கலைகளின் வழியாகவே கூடும் ஆகையால், அவ்வழியால் அக்கூத்தில் அவனைக் காணவல்லவர்க்கு மலக்குற்றங்கள் இல்லையாகும்.

குறிப்புரை :

துரியம், துரியாதீதம் என்பன அவற்றிற்குரிய இடங்களைக் குறித்தன. ``அம்பலத்து`` என்பதை, ``அரிய`` என்பதன் பின்னர்க் கூட்டுக. அரிய அம்பலம் - சிதாகாசம்; ``இயோகம்`` என்பதில் இகரம் விரித்தல். யோகம் - கூடுதல். சேர்தல். பிரணவக் கூத்து - பிரணவத்தின் வழியாக அடையப்படும் கூத்து. `கூபத்தே` என்பது பாடம் அன்று. ஏகாரம் பிரிநிலை அதனால் பிற வழிகளால் அடைதல் பிரிக்கப்பட்டது. ``கூத்தே`` என்பதில் ஏழாவது விரிக்க.
இதனால், `பரபோதத்தால் உண்மையாக அடையத்தக்க பரம்பொருள், பிரணவ யோகத்தால் பொதுவாக - ஒருவாறாக அடையப்படும்` என்பது கூறப்பட்டது. அடைந்தவர் பெறும் பயனும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

பொழிப்புரை :

மாணிக்க மணியின் செந்நிறம் முன் வந்து நின்ற போது, பளிங்கின் வெண்ணிறம் அந்தச் செந்நிறமாகவே திரிந்து காணப்படுதல் போல, வெளிப்பட்டு நின்ற அந்த நிலையான பரம் பொருள் முன்வந்து நின்றபொழுது ஆன்மாத் தன்வண்ணம் அப்பரம்பொருள் வண்ணமேயாக, அதனுள் அடங்கி நிற்கும் அப்பொழுது அதுகாறும் நிலையற்ற பிரபஞ்சத்தை நுகர்ந்து வந்த ஆன்ம ஞானம் பாச ஞானமாய் இருந்த நிலை அற்றொழியும். அவ்வொழிவில் சிவம் மேருமலையாய் நிற்க. ஆன்மா அந்த மேருமலையை அடுத்த காக்கையாய் இருக்கும்.

குறிப்புரை :

`சிவமேயாய் நிற்கும்` என்றபடி. ``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே``8 என்பதனால் இவ்வுவமப் பொருளை உணர்ந்து கொள்க. ``செம்மை, சுவேதம்`` என வாளா கூறினாராயினும், `மாணிக்கத்தினது செம்மை`` என்பதும், `பளிங்கினது வெண்மை` என்பதும் குறிப்பால் கொள்ளக் கிடந்தன. `மெய், பொய்` என்பன நிலை நிலையாமைகளைக் குறித்தன. `போதப் பாழ்` என இயையும். செம்மை - திரிபின்மை. சிவ மேரு, உருவகம். கொடி - காக்கை. ``ஆகும்`` என்றும் உருவகத்தையே தோற்றி நின்றது.
இதனால், `பரம்பொருள் உயிர்களைத் தன்வண்ணம் ஆக்கும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

வைச்ச கலாதி வருதத் துவம்கெட
வெச்ச இருமாயை வேறாக வேரறுத்(து)
உச்ச பரசிவ மாம்உண்மை ஒன்றவே
அச்சம் அறுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை :

எனக்குக் குருவாகிய நந்திபெருமான் சிவபெருமானால் எனக்கென என்னோடு கூட்டி வைத்த கலை முதல் நிலம் ஈறாக வருகின்ற தத்துவங்கள் எல்லாம் தம்தன்மை கெட்டுச் சிவ கரணங்களாகும் படியும், பின்பு அத்தத்துவங்கட்கு முதலாகிய அசுத்தமாயை. அதன் காரியங்களைச் செலுத்தி நிற்கின்ற கருவிகட்கு முதலாகிய சுத்தமாயை ஆகிய துன்பத்தைத் தரும் இருமாயைகளும் என்னைப் பொறுத்த மட்டில் காரண மாதற்றன்மை அடியோடு கெடும்படியும் செய்து, அதனால், யான் தடத்தசிவத்திற்கு மேலேயுள்ள சொரூபசிவத்தைத் தலைப்படும்படி. `இனியும் பிறவி வருமோ` என்னும் அச்சம் நிகழாதவாறு என்னை ஆட்கொண்டருளினார்.

குறிப்புரை :

ஏகாரம் தேற்றம். அதனால், `சிவன் இவ்வாறு சுத்தான்ம சைதன்னியத்தில் அதுதானேயாகும்படி ஆவேசித்து நின்று. அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தந்து, அது வழியாக வீடுபேற்றைத் தரும்` என்பது தோற்றுவிக்கப்பட்டது சிவஞான போதத்திலும் இவ்வாறே.
``இவ்வான்மாக்க ளுக்குத் தமது
முதல்தானே குருவுமாய் உணர்த்தும்
என்றது,
அவன் அன்னிய மின்றிச் சைதன்னிய
சொரூபியாய் நிற்றலான்`*
எனக் கூறப்பட்டது வெச்ச - வெச்சென்ற; `கொடிய` என்றபடி உச்சம் - மிக மேலேயுள்ள இடம்.
இதனால், பரம்பொருள் உயிர்கட்கு முடிநிலைப் பயனை அருளுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

என்னை யறிய இசைவித்த என்நந்தி
என்னை யறிவித்(து) அறி யாத இடத்துய்த்துப்
பின்னை ஒளியில் சொருபம் புறப்படத்
தன்னை யளித்தனன் தற்பர மாகவே.

பொழிப்புரை :

எனக்குக் குருவாகிய நந்திபெருமான், முதலில் என்னை யான் அறியுமாறு அறிவித்தருளினார். (கருவிக் கூட்டத்தி -னின்றும் என்னை வேறாக யான் உணரும்படி செய்தார்.) அதனால், என்னை யான் அறிந்தபின்பு, என்னையான் அறியாது நிற்கின்ற ஓர் இடத்திலே என்னைச் செலுத்தினார். (சிவபோத மிகுதியால் சீவ போதம் தோன்றாது நிற்கின்ற திருவருள் நிலையிலே செலுத்தினார்.) பின்னர் அங்ஙனம் நின்ற அந்த ஒளியினாலே அவ்வொளிக்கு முதலாகிய பொருள் புலப்பட்டது. புலப்பட்டபின் யான் அந்த மேலான பொருளே ஆகும்படி அதனை என் கைக்குள் வருமாறு அளித்தார்.

குறிப்புரை :

`என்னை அறிய இசைவித்தது`, ஆன்ம தரிசனம்` என்றும், `என்னை அறியாதவிடத்து உய்த்தது`, `ஆன்ம சுத்தி` என்றும், `சொரூபம் புறப்படத் தன்னை அளித்தது`, `ஆன்ம லாபம்` என்றும் உணர்க. முன் மந்திரத்தில் கூறியன தத்துவ ரூபம் முதல் ஆன்ம ரூபம் முடிவாக உள்ளன ஆகையால், அவற்றிற்குமேலே எஞ்சியுள்ள பயன்களைப் பரம்பொருள் ஆசான் மூர்த்தியாய் வந்து அருளுதல் இதனால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள்
அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

பொழிப்புரை :

சிவன்,
``நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலாப், பகலோன்,
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்``3
எனவும்,
``இருநிலனாய்த், தீயாகி, நீரு மாகி,
இயமான னாய், எறியும் காற்றா மாகி,
அருநிலைய திங்களாய், ஞாயி றாகி,
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி
... ... ... எம்மடிகள் நின்ற வாறே``l
எனவும் அருளிச் செய்தவாறு, ஐம்பெரும்பூதங்களும், `ஞாயிறு` திங்கள், என்னும் இரு சுடர்களும், ஆன்மாவும் ஆகிய எட்டினையும் தனக்குத் திருமேனியாகும்படி அவைகளில் வேறின்றிக் கலந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

`அஃதறிந்து அவனைப் போற்றி உய்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பரந்தும் சுருங்கியும் நின்றான்` என இயையும். பரத்தல், பெரியதிற் பெரியனாய் அளவின்றி விரிந்து நிற்றல். சுருங்கல், சிறியதிற் சிறியனாய் நுணுகி எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்றல்.
``அணோரணீயாந் ஹதோ மஹீயாந்``
என உபநிடதம் கூறும்.l செய்யுள் நோக்கி, எட்டுப்பொருள்களையும் முறை பிறழ வைத்தார். நிரந்த - எங்கும் நிறைந்த அரத்தம் - சிவப்பு. அது பண்பாகு பெயராய், அந்நிறத்தையுடைய தீயைக் குறித்தது. `அரத்தம், தரத்த` என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. தரம் - ஏனை ஏழிற்கும் மேலான வியாபகம். அங்ஙனமான தன்மையுடைமை பற்றி ஆன்மாவை உவமையாகுபெயரால் ``விசும்பு`` என்றார். ``அரன்`` என்பதை முதலிற் கொள்க. நெறியாய் - முறையாக. தாங்கி நிற்றல். அவற்றினுள் நிறைந்து அவற்றை நிலைத்திருக்கச் செய்தல், அரன், பார் முதலியவற்றுள் முறையாய் அவையாகி, விசும்பு ஒன்றைத் தாங்கி நின்றான்` எனவினை முடிக்க. சிவனுக்கு ஆன்மாவோடே நேர்த்தொடர்பு. பின்பு அதுவழியாகவே ஏனையவற்றோடு தொடர்பு. அது பற்றியே, விசும்பு ஒன்றையே சிவன் தாங்கி நிற்பதாகக் கூறினார்.
இதனால், பரம்பொருள் அட்ட மூர்த்தமாய் நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல்
உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.

பொழிப்புரை :

`தத்` பதப் பொருளாகிய சிவன், தனது உண்மை நிலையில் உள்ள பொழுது அவனின் வேறாகாது அவனோடு ஒன்றாகியே நிற்கும் சத்தியும், `பரை` என நிற்கும். அஃதாவது யாதொன்றனையும் பற்றாது, தான் தனியே மேலானதாய் நிற்கும் என்பதாம். ``சத்தியும்`` என்னும் உம்மையால், சத்தியையுடைய சத்திமானாகிய சிவனும் அப்பொழுது `பரன்` என நிற்றல் பெறப்பட்டது. `பரசிவனாய் நிற்பன்` என்க. அந்தச் சத்தியே சிவனுக்கு வடிவம். என்றது, `சிவம் சத்தியே மயமானது` என்றபடி. இனி அந்தச் சத்தி, அருள் காரணமாக உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலாகிய நாடகத்தை மேற்கொண்டு செய்யும் பொழுது, தன்னிச்சையாகவே இச்சை, ஞானம், கிரியை முதலிய வகைகளாய்ப் பலவாகி, அவ்வைந் தொழிலை இடையறாது நடத்தும்.

குறிப்புரை :

``தத்`` என்பதை முதலிற் கொள்க. `சத்து, உண்மை` என்பன ஒரு பொருட்சொற்கள். இதுவே, `சொரூபம்` எனப்படும். `பரம்பொருள் எவ்வாற்றானும் இருமையையுடையதன்று; முற்றிலும் ஒருமையையே உடையது` என்பர் மாயாவாதிகள். `அவ்வாறன்றிப் பரம்பொருள் பொருளால் ஒன்றாயினும், குண குணித் தன்மையால் `சிவம், சத்தி` எனத்தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்கும்` என்பது சித்தாந்தம். இது, ஞாயிறு பொருளால் ஒன்றாயினும் குணகுணித் தன்மையால், `கதிரவனும், கதிரும்` எனத் தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல் போல்வதாகும்.
சிவன் உயிர்களையும், மாயையையும் ஒரு கருத்துப் பற்றிச் சிறப்பாக நோக்காது, பொதுவாக அறிந்து மட்டும் நிற்றலே அவனது `தன்னியல்பு`, அல்லது `சொரூப லக்கணம்` எனப்படும். அந்நிலையில் அவன் `பர சிவன்` அல்லது `பரம சிவன்` எனப்படுவான். `சுத்த சிவன்` என்றும் சொல்வதுண்டு. அப்பொழுது அவனது சத்தியும் `பராசத்தி` எனப்படும். பரா - மேலானவள் அந்நிலையில் சத்தி செயலாற்றுதல் இல்லை. இதனையே, சத்தின் நிலையினில் தானான சத்தியும் - பரையாய் நிற்கும் என்றார். `இன்` வேண்டாவழிச் சாரியை. ``தானான`` என்றது `தாதான்மியமான` என்றபடி. `பரா` என நின்ற சத்தி உயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்ய விரும்பிமாயையைக் காரியப்படுத்த நினைக்கும் பொழுது அதில் ஒரு சிறிய கூறு, (`ஆயிரத்தில் ஒரு கூறு` என்பர்.) `ஆதி சத்தி` எனப் பிரிந்து நிற்கும். இஃது உயிர்களை கன்மம் மாயைகளினுட் செலுத்தலால், `திரோதான சத்தி` எனப்படும். திரோதானகரி, `திரோதாயி` என்னும் பெயர்களாலும் குறிக்கப்படும். மலங்களின் வழி நிற்றல் பற்றி, இதனையும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறுவர். இவ்வாறு `ஆதி` என நின்ற அது பின், `ஞானம், இச்சை, கிரியை` என மூன்றாகிப் பின் பலவாகும். அதனையே, ``ஞானாதி பேதமாய்`` என்றார். இவ்வாறு அது பலவாவது, தன்னிச்சை யாலன்றிப் பிறரால் அன்று. அதனையே, ``உய்த்தகும் இச்சையில்`` என்றார். `உய்த்தல்தகும்` என்பது, ``உய்த்தகும்`` என நின்றது. `இங்ஙனமாகி ஐந்தொழிலை அது நடத்துதற்கு முடிவில்லை` என்றற்கு, ``நித்தம் நடத்தும்`` என்றும், `இதனால் அது தன்னியல்பினின்று வேறுபடுதல் இல்லை` என்றற்கு, `நடிக்கும்` என்றும், `இவ்வாறு நடித்தற்குக் காரணம் உயிர்கள் மாட்டு வைத்த பெரிய கருணையே யன்றிப் பிறிதில்லை` என்றற்கு ``மா நேயத்தே`` என்றும் கூறினார். `நேயத்தானே` என உருபு விரிக்க. சத்தி `ஆதி சத்தி` முதலிய பெயர்களைப் பெற்றுச் செயலாற்றும் பொழுது, சிவனும் அந்நிலைகளில் எல்லாம் அவற்றிற்கு ஏற்ப ``ஆதி சிவன்`` முதலாகப் பல பெயர்களைப் பெற்று நிற்பன். பரமசிவன், `சொரூப சிவன்` எனவும், ஏனைய ஆதி சிவன் முதலியோர் `தடத்த சிவர்` எனவும் அறிக. இவ்வனைத்துச் சிவமும், சத்தியும் பெயர், உருவம், தொழில் என்னும் இவற்றால் வேறு வேறாகச் சொல்லப் படுகின்றனவேயன்றிப் பொருளால் வேறுபாடு சிறிதும் இன்றி, ஒன்றேயாம்.
``சத்திதான் பலவோ என்னில்,
தான்ஒன்றே; அனேக மாக
வைத்திடும், காரியத்தால்``*
``சத்தன் வேண்டிற்று எல்லாமாம் சத்தி தானே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், பரம்பொருளின் இயல்பு பற்றி மாயாவாதி முதலியோர் கூறும் கூற்றுக்களை மறுத்துச் சித்தாந்தம் உணர்த்தப்பட்டது.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``l
எனத்திருவருட் பயனிலும் இவ்வியல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

மேலொடுகீழ் பக்கம்மெய் வாய்கண்ணா நாசிகள்
பாலிய விந்து பரஉட் பரையாகக்
கோலிய நான்கவை ஞானம் கொணர்வித்துச்
சீலமி லாஅணுச் செய்திய தாகுமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய சத்தி மேல், கீழ், புடை என்னும் இடங்களையும், மெய், வாய், கண், நா, மூக்கு என்னும் ஐம் பொறிகளையும், விந்து, நாதம், பர நாதம் என்னும் வாக்குகளையும், அவைகட்குப் பற்றுக் கோடாய் நின்று அவற்றின் பெயர்களையே தாமும் பெற்று நிற்கின்ற சுத்த தத்துவங்களையும் இங்ஙனம் பாகுபட்ட பல பொருள்களை உண்டாக்கி அவற்றால் எல்லாம் சரியை முதலிய நான்கினாலும் ஞானத்தை வருவித்து, இவ்வாறெல்லாம் அஞ் ஞானத்திற் கிடக்கின்ற உயிர்களை ஈடேற்றுதலாகிய செயல்களை உடையதாய் நிற்கும்.

குறிப்புரை :

`ஆக்கப்படும் பொருள்கள் அளவில்லன` என்பது தோன்றுதற் பொருட்டுச் சிலவற்றை எடுத்து எண்ணிக் காட்டினாலே யன்றி, அனைத்தையும் எடுத்துக் கூறிற்றிலர். ஆகவே, அவற்றை உபலக்கணமாகக்கொண்டு, ஏனையவற்றையும் அறிதல் வேண்டும். பாலிய - பாகுபட்ட. கோலிய - வரம்பு செய்யப்பட்ட. ``அவை`` பகுதிப்பொருள் விகுதி. `நான்கவற்றால்` என உருபு விரிக்க. சீலம் - தூய்மை. `தூய்மை இலா` எனவே , மாசுடைமை பெறப்பட்டது. அணு - உயிர். அணுச்செய்தி - அணுவைப் பற்றிய செயல்.
இதனால், முன் மந்திரத்தில், `நித்தம் நடத்தும்`` எனத் தொகுத்துக் கூறப்பட்ட செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

வேறாம் அதன்தன்மை மேலும்இக் காயத்தில்
ஆறாம் உபாதி அனைத்தாகும் தத்துவம்
பேறாம் பரவொளி தூண்டும் பிரகாசமா
ஊறா உயிர்த்துண் டுறங்கிடும் மாயையே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில், `அணு` எனக் கூறப்பட்ட உயிரின் தன்மை தனியானது. ஆகவே, காணப்படாது நிற்கின்ற அந்த உயிருக்குக் காணப்படுகின்ற இந்த உடம்பில் உள்ள ஆறு அத்துவாக் -களும் உபாதிகளேயாம். அஃதாவது, அதனை மாசுபடுத்துகின்ற வேற்றுப் பொருள்களேயாம். அதனால், முப்பத்தாறு தத்துவங்களும் உயிர் தான் பெறுதற்குரிய மேலான ஒளியை அடைதற்குத் தூண்டு கின்ற சிறிய ஒளியாய் உதவுவதால், மாயையாலே உயிர் உறுதல், உயிர்த்தல், உண்டல் முதலியவைகளைச் செய்து, பின் அதிலிருந்து நீங்கியும் நிற்கும்.

குறிப்புரை :

`அதன் தன்மை வேறாம்` எனவும், `ஆறு உபாதியாம்` எனவும் மாறிக் கூட்டுக. `ஆறும்` என்னும் முற்றும்மை தொகுத்த லாயிற்று. மேலும் - வேறாதல் மேலும், `ஆறும் உபாதியாம்` என முடிக்க. ஆறத்துவாக்களில் தத்துவங்கள் சிறந்தமை பற்றி அவற்றையே வேறெடுத்துக் கூறினார். `பரவொளிக்கு` என்னும் நான்கன் உருபு தொகுத்தலாயிற்று. அதனை, `பர வொளியை அடைதற்கு` என விரிக்க. `பிரகாசமாக` என்பதன் ஈறு குறைந்தது. `உறா` என்பது நீட்டல் பெற்றது. `உற்று, உயிர்த்து, உண்டு` என்றதனால், `கண்டு, கேட்டு` என்பனவும் கொள்ளப்படும். `மாயை -யாலே` என உருபு விரித்து `உறா, உயிர்த்து, உண்டு உறங்கும்` என முடிக்க. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலனும் மாயா காரியங்களால் வருதலால், `மாயையால் உயிர் இவைகளை நுகரும்` என்றார். உறங்குதல் - சுழுத்தி நிலையை அடைதல். `உறா` முதலியவற்றிற்கும், உறங்குதலுக்கும், `அஃது` என்னும் எழுவாய் வருவிக்க. `மாயையும் உயிர்க்கு உபாதியேயாயினும், நோய்க்கு மருந்துபோல, அஃது உயிர்க்கு நலம் பயக்கும்` என்பது ``அனைத்தாகும் தத்துவம்`` என்பது முதலாகக் கூறப்பட்ட பொருள்.
இதனால், முன் மந்திரத்தில் ``அணுச் செய்தி`` எனக் கூறப்பட்ட பொருள் அன்னது ஆமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

தற்பரம் மன்னும் தனிமுதற் பேரொளி
சிற்பரந் தானே செகம்உண்ணும் போதமும்
தொற்பதந் தீர்பாழில் சுந்தரச் சோதிபுக்(கு)
அப்புறம் அற்றதிங் கொப்பில்லை தானே.

பொழிப்புரை :

`தத்` பதப் பொருளாகிய பதி, தன்னிலையில், நிலையான ஒப்பற்ற, முதன்மை வாய்ந்த பேரறிவே எனினும், அதுவே உயிர்களை நோக்கி இயங்கும் பொதுநிலையில் உயிர்களை உலகத்தை நுகரும்படி செய்கின்ற பாச அறிவாய் நிற்கும். (`திரோதான சத்தியாய் நிற்கும்` என்றாம். ) அந்தப் பாச அறிவால் உயிர் உலகத்தை நுகர்ந்து வருங்காலத்தில் அந்தப் பாச அறிவும், அதன் அறிவாகிய பசு அறிவும் நீங்கப் பெற்ற பொழுது, முன்சொன்ன பேரொளியிற்கலந்து, அதற்கு அப்பாலும்போய், முன்னை நிலையெல்லாம் நீங்கப்பெற்று நிற்கும். அப்பொழுது அதற்கு ஒத்ததும், உயர்ந்ததும் இல்லாத ஓர் உயர்வை அஃது அடையும்.

குறிப்புரை :

`அச் சிற்பரம்` எனச் சுட்டு வருவிக்க. ``போதம்`` என்பதன்பின், `ஆம்` என்பது எஞ்சி நின்றது. `தொல் பதம்` என்பது, எதுகை நோக்கி, ``தொற்பதம்`` எனத் திரிந்து நின்று. பதம் - நிலைமை. தீர் பாழ் - தீர்ந்ததாகிய பாழ். இது பின்னர், `போதப் பாழ்` எனக் குறிக்கப்படும். `அப்புறமாய்` என ஆக்கமும், ``இங்கு`` என்பதன்பின், `அதற்கு` என்பதும் வருவிக்க.
இதனால், சிவசத்தி திரோதான சத்தியாய் நின்று செயற்படுதலால் வரும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

பண்டை மறைகள் பரவான் உடல் என்னும்
துண்ட மதியோன் துரியாதீ தன் தன்னைக்
கண்ட பரனும்அக் காரணோ பாதிக்கே
மிண்டின் அவன்சுத்த னாகான் வினவிலே.

பொழிப்புரை :

முதல் நூல்களாகிய வேதாகமங்கள், சில இடங்களில் சுத்த மாயையை, `சிவனுக்குத் திருமேனி` எனக் கூறும். அஃது உபசாரமே.
[``சுத்ததத் துவம் சிவன்றன் சுதந்திர வடிவ மாகும்;
நித்தம்என் றுரைப்பர் காலம் நீங்கிய நிலைமை யாலே``*
என்னும் சிவஞான சித்தியையும், அதன் உரையையும் காண்க.] ஏனெனில், சிவன் துரியத்தையும் கடந்து அதீதமூர்த்தி. (நின்மல துரியம் வரையிலே சுத்தமாயை உள்ளது) தத்துவசுத்தி, ஆன்மரூபம் ஆகியவற்றைக் கடந்து ஆன்ம தரிசனத்தைப் பெற்ற ஆன்மாவும் சிவ தரிசன சிவயோகங்களால் ஆன்ம சுத்தியை எய்தாது, காரணோபாதி யாகிய சுத்தமாயையில் இருப்பானாயின் அவனது நிலையை நன்கு ஆராயுமிடத்து அவன் தூய்மை எய்தியவன் ஆகான்.

குறிப்புரை :

``காயமோ மாயையன்று காண்பது சத்தி தன்னால்8 என எதிர்மறை முகத்தானும், உடம்பாட்டு முகத்தானும் தெளிவுபடக் கூறுதலின் சிவனுக்குச் சத்தியே - அருளே திருமேனியாவதல்லது, மாயை திருமேனியாகாது.
``அரிதரு கண்ணி யானை ஒருபாக மாக
அருள்கா ரணத்தில் வருவார்``
என்பதே திருமுறை மொழி. இதனை,
``உருஅருள்; குணங்களோடும்,
உணர்வருள் உருவில் தோன்றும்
கருமமும் அருள் அரன்றன்
கரசர ணாதி சாங்கம்
தரும்அருள்; உபாங்க மெல்லாந்
தானருள்; தனக்கொன் றின்றி,
அருளுரு உயிருக் கென்றே
ஆக்கினன்; அசிந்த னன்றே``*
எனச் சாத்திரமும் பலபடியால் வலியுறுத்தி ஓதுதல் காண்க. இங்ஙனமாகவே, சிவன் அசுத்த மாயையைப் போலச் சுத்த மாயையை விலக்காமல் அதிட்டித்து (இடமாகக் கொண்டு) நிற்றல் பற்றிச் சில இடங்களில் அதனைச் சிவனுக்குத் திருமேனியாக உபசரித்துக் கூறும். ஆகவே, சிவனுக்கு உண்மையில் திருமேனியாய் அமைவது அவனது சத்தியே என்பதாம்.
``ஆகாச சரீரம் பிரஹ்ம``
என்னும் உபநிடத மொழியில் ``ஆகாசம்`` என்பதும் சிதாகாசமாகிய சத்தி என்பதே சித்தாந்தம். ``பர வான்`` என்றது இங்குச் சுத்த மாயையை. காரணோபாதியாவதும் அதுவே. ``பரன்`` என்றது, தத்துவங்கடந்து தன்னைத்தான் கண்டமையால் பாசங்களின் நீங்கினவனாகிய ஆன்மாவை. ``பரனும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், முன் மந்திரத்தில், ``சுந்தரச் சோதிபுக்கு அப்புறமாய் அறுதல்` எனக் கூறியது பற்றி நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து)
அளியா கியதற் பரங்காண் அவன்றான்
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

பொழிப்புரை :

`மாயா காரியமாகிய உலகப்பொருள் அனைத்திலுமே பரமசிவன் அருள் காரணமாக நிறைந்திருக்கின்றான்` என வேதாகமங்கள் கூறும். அவ்வாறு கூறுவதற்கும், `அவனது சத்தியே அவ்வாறு நிறைந்துள்ளது` என்பதே கருத்து. பூதாகாயம் ஏனைப் பூதங்களில் எல்லாம் நிறைந்திருத்தல் போல அனைத்துலகங் களிலும் நிறைந்திருத்தல் பற்றி அச்சத்தி, `பரவெளி - பராகாயம்` எனக் கூறப்படுகின்றது. அந்தச்சத்தியே, உண்மையில் பரமனுக்கு திருமேனியாகும்.

குறிப்புரை :

அனைவரும் ஆறந்த ஐம்பூதங்களைக் கூறும் முகத்தால் உலகப்பொருள் அனைத்தையும் கொள்ளவைத்தற்கு அவற்றைத் தோற்ற முறையில் வைத்து எண்ணிக் காட்டினார். `நின்றது பரம்` என இயையும். ``அளியாகியபரம்`` என்றது உடம்பொடு புணர்ந்தது. காண், முன்னிலையசை ``அவன்றான் சத்தி`` என்றது, `சத்தி அவனின் வேறானதன்று`` என்றதாம். `பரம் பொருள் தன்னிலையில் தான் நிற்கும் பொழுது சிவம் என்றும், உலகத்தோடு ஒன்றாய், வேறாய், உடனாய்த் தொடர்பு பட்டு நிற்கும் பொழுது சத்தி என்றும், ஐந்தொழில் செய்யும் பொழுது பதி என்றும் பெயர்பெறும்` என்னும் ஆகமப்பொருளை யுணர்த்துவார். `வெளி, கால் ... ... ... நின்ற வெளியாய சத்தி` என்றார்.
இதனால், முன் மந்திரத்தில், `பரவான் உடல் - என்றல் உபசாரமாயின், உண்மை யாது` என்றெழுந்த அவாய்நிலை நிரப்பப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

மேருவி னோடே விரிகதிர் மண்டிலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டா பிறிதில்லை தானே.

பொழிப்புரை :

இடைகலை பிங்கலைகளை, `சந்திர சூரியர் வழி` எனக் கூறுதலால், அவ்வழியாக இயங்கும் பிராண வாயும் வலம் வரும் சுழுமுனை நாடியை, `மகாமேரு` என்றலும், அந்தச் சுழுமுனை நாடியின் நடுப் பாகமாகிய அநாகத விசுத்தி ஆதாரங்களை, `சூரிய மண்டலம்` என்றலும் யோக நூல் வழக்கு. அனாகதமாகிய இருதயம் பூசைத் தானமாகக் கொள்ளப்படும். அதனால், சுழுமுனை வழியாகச் சென்று இருதயத்தில் சிவபெருமானை நன்றாக நினைந்து வழிபடு பவனை, `மேருவினோடே சென்று விரிகதிர் மண்டிலத்தில் (சிவனை) ஆரநினையும் அருந்தவயோகி` (`சென்று`) என ஒரு சொல் வருவித்து, `விரிகதிர் மண்டிலத்தில்` என உருபு விரித்து கொள்க.) ``செய்யின்`` என்பது `செய்வதனால்` எனப் பொருள்தந்து நின்றது. ஆகவே, `அந்த அருந்தவ யோகிக்குச் சிவனருள் தானாகவே கிடைக்கும்` என்றும், `அவன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் வேறொன்றும் இல்லை யாகையால் அந்நெறியைவிட்டு அவன் விலகுதல் வேண்டா` என்றும் கூறினார்.

குறிப்புரை :

இதனால், `இங்குக் கூறப்பட்ட இலக்கணங்களையுடைய பரம்பொருளை அடைதற்கு யோகம் சிறந்த சாதனம்` எனக் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி