எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்


பண் :

பாடல் எண் : 1

நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம்
இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.

பொழிப்புரை :

[ஆன்மா, `சீவன்` எனப்படுவது பாசநிலையில் ஆகலின், முதற்கண் சொல்லப்பட்ட நனவு, சகலத்தில் கேவலமாய் நிகழும். கீழாலவத்தையிலும், சகலத்தில் சகலமாய் நிகழும் மத்தியாலவத்தையிலும் நிகழும் நனவுகளாம்.] கீழாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியம் ஆணவ அனுபவம் மிகுவது ஆதலாலும், மத்தியாலத்தையில் நிகழும் சாக்கிரம் முதலிய வற்றில் நிகழும். துரியம் ஐம்புல அனுபவம் மிகுவது ஆதலாலும் அவையிரண்டும் சீவ துரியமாம். (இவை தொடக்கத்தில் நிகழ்வன. மேலாலவத்தையாகிய யோக துரியமும் சீவதுரியமே) இறுதியில் நிகழும் பராவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் உயிர் பாசப்பற்று இன்றிப் பரம்பொருள் அனுபவமே மிகப் பெற்றிருத்தலால் அது பர துரியமாம். (`இஃது இலய முத்திநிலை` என்பது மேலே குறிப்பிடப்பட்டது.) இடையில் மத்தியாலவத்தைக்கு மேல் நிகழும் மேலாலவத்தையாகிய யோகாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும், நின்மல சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும் உலகியல் உணர்வு முற்ற நீங்காத நிலையில் சிவானுபவம் மிகப் பெறுவன ஆதலின் அவை பரதுரியம் ஆகாது சிவதுரியமாம். இவற்றுள் சிவதுரியமும், பர துரியமுமே `தத்துவமசி` மகா வாக்கிய அனுபவங்களாம்.

குறிப்புரை :

தனது - பரம் பொருளினது. இன - இன்ன `இவை` என்றபடி `இவை` என்பது அண்மைச் சுட்டாகலின், அது பின்னிரண்டு துரியங்களையே குறித்தது. பதத்து ஈடு - பத அனுபவத்தில் இடுவன.
இதனால், `முத்துரியங்களாவன இவை` எனச் சுட்டியும், விளக்கியும் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம்
தானாம் துரிய நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா
வானான மூன்று துரியத் தணுகுமே.

பொழிப்புரை :

சீவன் சீவனாகவே இருக்கின்ற மத்தியாலவத்தைச் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் ஆன்மா, `துவம்` பதப் பொருளாய் இருக்கும். ஆன்மாச் சிவமாந்தன்மையைப் பெறுகின்ற நின்மல சாக்கிரம், பராசாக்கிரம் முதலியவற்றில் நிகழ்கின்ற துரியங்களில் ஆன்மா சிவமாகி, `தத்` பொருளாய் இருக்கும். ஆகவே, இவ்விரு துரியங்களிலும் ஆன்மாப் பாசம் அற்றதாம். சகலத்தில் கேவலத்திற்கு மேலாக நிகழும் மூன்று துரியங்களிலும் ஆன்மா இவ்வாறான நிலைகளை அடையும்.

குறிப்புரை :

``தான்`` மூன்றில் முன்னது சீவனையும் ஏனையவை பரத்தையும் உணர்த்தின. ``தான்மூன்றில்`` என்பதை `மூன்றில் தான்` என மாற்றியுரைக்க. ``அரு நனா`` என்றது, எளிதில் இயல்பாக நிகழாது அரிய திருவருளால் நிகழ்வது என நின்மல சாக்கிர பரசக்கிரங்களைக் குறித்தன. ``அருநனாவான்`` என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத்திரித்துக் கொள்க. ``காலத்தினாற் செய்த நன்றி``l என்பதிற் போல,
இதனால், `முத்துரியங்களுள் சீவ துரியம் பெத்த துரியமும் ஏனைய துரியங்கள் முத்திதுரியமும் ஆம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அணுவின் துரியத்து நான்கும்அ தாகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சார் முத் துரியக்
கணுவிரு நான்கும் கலந்தஈ ரைந்தே.

பொழிப்புரை :

பெத்த துரியம் அனைத்தையும் `சீவ துரியம்` என ஒன்றாகவும் முத்தி துரியம் இரண்டையும் ஒன்றாகவும் ஆக்க. அவ்விரண்டிலும் துரியம் முதலாகக் கீழ் நோக்க உளவாம் அவத்தைகள் இருநான்கு; எட்டு. இனி இவ்விரண்டிலும் உள்ள துரியா தீதங்களைக் கூட்ட அவத்தைகள் பத்தாகும். இவைகளில் பெத்தா வத்தை ஐந்தில் ஆன்மாக்கீழ் நிலையதாயும், முத்தியவத்தை ஐந்தில் மேல்நிலையை எய்தியும் இருக்கும்.

குறிப்புரை :

`அது வாகி` என்பதில் முற்றியலுகரம் கெட்டு ``அதாகி`` என நின்றது. பணிதல் - கீழ்போதல். தணிவு - தாழ்தல். பரமாதல் - மேற் போதல். சார், முதனிலைத் தொழிற் பெயர். ``பரமாகி`` என்னும் எச்சம் இதனோடே முடிந்தது. கணு - சேர்க்கை. சேர்க்கையால் வருவதை, `சேர்க்கை` என்றார். `கணுவில்` என உருபு விரிக்க. `சீவ துரிய பரதுரிய அவத்தைகளின் தொகை பத்து` எனச் சுருங்கக் கூறிப் போகாமல் இங்ஙனம் விரிவாகக் கூறியது, `ஓர் ஐந்து தாழ்வுடையன; மற்றோர் ஐந்து உயர்வுடையன` என்பது உணர்த்துதற்கும்; அதீதத்தைக் கூட்டாமல் துரியத்தோடே முடித்து. அவத்தைகளை `நான்கு` எனவும், `எட்டு` எனவும் தொகை கூறுதலும் உண்டு என்பது உணர்த் துதற்குமாம் என்க.
இதனால், முத்துரியங்களது தராதரங்கள் விளக்கப்பட்டன.

பண் :

பாடல் எண் : 4

ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
நேரந்த மாக நெறிவழி யேசென்று
பாரந்த மான பராபரத் தைக்கியத்(து)
ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.

பொழிப்புரை :

கீழாலவத்தை ஐந்து, மத்தியாலவத்தை ஐந்து, மேலாலவத்தை ஐந்து இம் மூவைந்து பதினைந்தவத்தைகளை `சீவாவத்தை` என ஓரைந்தாகவும், நின்மலாவத்தை ஐந்து, பராவத்தை ஐந்து இவ்வீரைந்தையும் `பராவத்தை ஐந்து` என ஓரைந்தாகவும் தொகுக்க அவத்தைகள் ஈரைந்தாகி, `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரியங்களும் அவற்றுள்ளே அடங்கும். அவ் அவத்தைகளை மேலாலவத்தைச் சாக்கிரம் முதலாகத் தொடங்கிப் படி முறையாக மேலே மேலே ஏறிச்சென்று, முடிவில் எல்லாமாய் உள்ள பரம்பொருளில் ஒன்று பட்டு, முடிந்த பயனைப் பெற்று, அதற்கு முன்னே நிகழ்ந்த யோக துரியம், நின்மல துரியம் ஆகிய இரண்டு உபாதிகளையும் பயனுடைய அவத்தைகளாகும் படி ஆக்கிக்கொள்க.

குறிப்புரை :

பார் - உலகம். பார் அந்தமான அனைத்துலகங்கட்கும் அப்பாற்பட்ட. பராபரம் - மேல், கீழ் அனைத்துமாய் நிற்பது. நின்மலா வத்தையை நோக்க யோகாவத்தையும், பராவத்தையை நோக்க நின்மலா வத்தையும் இடர்தருவன வாதல் பற்றி அவற்றை ``உபாதி`` என்றார்.
இதனால், `முத்துரியங்களையும் முறையால் எய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.

பொழிப்புரை :

இறைவனை அறியுமாற்றால் அறியின், பல், நா, உதடுகள் இவைகளில் அகப்படாத ஒரு மெய்ப்பொருள் யாராலும் அணுக முடியாதாயினும் அணுக முடியும். ஆகையால், மெய்ப் பொருளை அடைய முயல்கின்றவர்களே, நீவிர் அதனை அடைதற் பொருட்டு துரிய நிலத்திலிருந்து கீழ் இறங்கிவிடாமல் இருங்கள்.

குறிப்புரை :

`துரியத்திற்குக் கீழ் உள்ள அவத்தைகள் தாம் மெய்ப் பொருளோடு தொடர்பில்லாத நிலை` என்பதும், `பல், நா, உதடுகளின் செயல்கள் துரியத்திற்குக் கீழ் உள்ள நிலைகளில்தான் நிகழும்` என்பதும் கருத்து. இங்குக் கூறிய துரியம் சிவ துரியம், ஏனெனில், சீவதுரியத்தில் மெய்ப்பொருள் தொடர்புறாது நிற்கும் ஆகலானும், பரதுரியத்திற்கு சென்றோர் மீளார் ஆகலானும் என்க. `இறைவனை ... ... ... தத்துவந்தான எட்டாதெனினும்நின் ரெட்டும். (ஆதலால்) துரிய நிலத்தினைத் தொட்டே இருமின்` எனக் கூட்டி முடிக்க.
``துரியம் கடந்தஇத் தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றதென் றுந்தீபற;
துறந்தார் அவர்களென் றுந்தீபற``*
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியுடும் அன்பர்க் கவன்``*
என்பவற்றிலும், `சிவதுரியத்திற்றான் சிவன் தொடர்புற்று நிற்பான்` எனக் கூறப்பட்டது. துரியத்திலே நிலையாக நின்றால், பிரபஞ்சம் தாக்கா தொழிதலுடன், மேல் அதீதத்திற்குச் செல்லும் ஆற்றலும் உளதாகும் என்க.
இறைவனை அறியுமாற்றால் அறிதலாவது, அவன் அருளாலே அறிதல். பல், நா, உதடுகளில் தட்டாமையாவது, சொல்லவாராமை. `எட்டப்படாது, எட்டப்படும்` என்பன, `எட்டாது` எனவும், ``எட்டும்`` எனவும் வந்தன.
இதனால், `முத்துரியத்துள் சிவ துரியமே முத்திக்கு வழி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே
பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொழிப்புரை :

சடங்களாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கும் முகத்தால், அடர்ந்துள்ள மாயையைப் போக்கிச்சித்தாய் நின்றுபின்னர் வெளிப்படுகின்ற திருவருளாலே அதுவேயாய் நிற்கின்ற தன்மையால் உயர் நெறியை அடைந்த அன்பர்களே சிவனது இயல்பை உண்மையாக உணர்ந்தோராவர்.

குறிப்புரை :

``அறிவாய்`` என்பதை, `சிதைத்து` என்பதன் பின்னர்க் கூட்டுக. ``அசத்து`` எனவே, அசித்தாதலும் சடம் என்பதும் பெறப் பட்டது. `அருளாலே அருளாய்`` என்றதனால், `அருள் தானே வெளிப் பட, அதனாலே ஆன்மா அந்த அருளேயாய் நிற்கும்` என்பதும், `ஆறா றகன்று அறிவாய் அருளாயிடும்` என்றனால், `அருள் வெளிப்படல் ஆன்மா அறிவான பின்னர் ` என்பதும், `ஆன்மா அறிவாதல் ஆறாறகன்றபின்னும்` என்பதும் பெறப்பட்டன. ``ஆறாறகன்று`` என்பது தத்துவசுத்தி ஆன்ம ரூபங்களையும், ``அறிவாய்`` என்றது ஆன்ம தரிசன சிவரூபங்களையும், ``அருளாலே அருளாயிடும்`` என்றதனால், ஆன்ம சுத்தி, சிவதரிசன சிவயோகங் களையும் குறித்தமை காண்க. இவற்றுள் சிவயோகமே சிவதுரியமாம். `பெற்றியால்` என உருபு விரிக்க.
இதனால், `சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட சிவதுரியமே சிவத்தோடு உண்மையில் தொடர்பு கொள்ளும் நிலை` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

நனவில் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யம்தற் பதமே.

பொழிப்புரை :

பிராரத்த வினை நீங்காமையால், கருவி கரணங்களோடு கூடிய உடம்பிற்றானே புருவ நடுவின் கண் நிகழும் சுத்த சாக்கிரம் தலிய சிவ ஐந்தவத்தைகளில் நாலாவதாகிய சிவ துரியத்தில் சீவன் ஆன்ம சுத்தியைப் பெற்று `துவம்` பதப் பொருளாய் நிற்றல்போல, பிராரத்தவினை நீங்கினமையால், கருவி கரணங்களைக் கடந்து நிற்கின்ற நிலையில் நிகழும் பர சாக்கிரம், பர சொப்பனம் முதலாக நிகழும் பர அவத்தை ஐந்தில் நாலாவதாகிய பரதுரியத்தில் ஆன்மா, `தத்` பதப் பொருளாய் நிற்கும். அஃதாவது, `சிவமேயாய் நிற்கும்` என்பதாம்.

குறிப்புரை :

`பராவத்தைகளில் சீவன் முத்தி தவிர ஏனைய நான்கும் உண்மையில் உடம்பு நீங்கிய பின்னர் நிகழ்வனவாயினும் சீவன் முத்தி நிலையிலும் அவை பொதுவாக நிகழும்` என்பதும், `இம்மையில் (உடம்பு உள்ளபொழுது) பராவத்தையில் முடிவான அதீத நிலையில் நின்றவர்களே அம்மையில் (உடம்பு நீங்கியபின்) பரமுத்தியை அடைவர்` என்பதும், `ஏனையோர் தாம் தாம் இங்கு நின்ற நிலைக்கு ஏற்ப அங்குள்ள நிலைகளை அடைவர்` என்பதும் இம்மந்திரத்தால் அறிக. கேவலாத்துவிதிகளும் சீவன் முத்தரை, வரிட்டன், வரியான், முதலாக வகைப்படுத்துவர்.
முதலடியின் ஈற்றில் `கண்` உருபு விரிக்க. ``தனதுயிர்`` என்பதில் ஆறன் உருபு, `இராகுவினது தலை` என்பதுபோல `ஒற்றுமைக் கிழமைக்கண்` வந்தது. பின்னர் ``வினை அறு சீவன்`` என்றதனால், முன்னது `வினை உருசீவனது நிலை` என்பது பெறப்பட்டது. வினை, இங்குப் பிராரத்தம். ``ஆமாறுபோல`` என்ற அனுவாதத்தால், ஆமாறும்தானே பெறப்பட்டது. `தன` என்பது இடை ஐகாரச் சாரியை பெற்றது.
இதனால், சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட பர துரியத்தின் சிறப்பு அதனது பயன் உணர்த்தும் முகத்தால் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :

`துவம்` பதம், `தத்` பதம் முதலிய சொற்களின் வழியாக நிகழும் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரிய அனுபவ நிகழ்ச்சிகளில், பெரிதும் விரும்பப்பட்ட மூன்றாவதாகிய பரதுரியத்தில் முதற்கண் சொல் நிகழ்ச்சி சிறிது உளதாயினும், முடிவில் சொல்லற்றதாகிய பேரொளியாம் பரசிவம் அனுபவப்பட்ட அந்நிலை, உலக வாசனை முழுதும் அற்றுச் சூக்குமத்திலும் சூக்குமமாய் விளங்க, `அவ்விடத்தில் அனைத்துப் பொருட்கும் அப்பாற்பட்ட அந்தப் பரசிவமே தனது பேரருள் காரணமாகக் குறுமூர்த்தியாய் வந்து தனக்கு அருள் செய்தது` என்னும் உண்மையும் விளங்கும்.

குறிப்புரை :

``தற்பதம்`` என்பதன்பின் `முதலிய` என்பது வருவித்து, `சொல்லால் நிகழும்` என உருபும், பயனும் விரிக்க. `முத்துரியத்துள்` என `உள்` என்பது விரிக்க. போல் அசை, ``பரம்`` என்பதன் பின் `வெளிப்பட`, என்பதும், `அதிசூக்கம்` என்பதன்பின் `ஆக` என்பதும், ஈற்றில் `ஆம்` என்பதும் வருவிக்க.
இதனால், முத்துரியத்துள் முடிநிலைத் துரியத்தின் உயர்வுகூறி முடிக்கப்பட்டது.
சிற்பி