எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி


பண் :

பாடல் எண் : 1

சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

பொழிப்புரை :

மும்முத்திகளுள் முதலாவதாகிய சீவன் மும்முத்தி யாவது, உலகத்தில் இருப்பினும் உலகத்தைக் கடந்து நிற்கும் நிலையாம். எனவே, `இஃது உடம்புள்ள பொழுதே நிகழ்வது` என்பது அறியப்படும். நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலியனவாம். மூன்றாவதாகிய பரமுத்தியாவது, உயிர் முன்பு இருந்த பாச நிலைகள் முற்றும் அற்று நிலையான அமைதியைப் பெறும் நிலையாகும். (ஆகவே, இஃது உடம்பு நீங்கிய பின்னர்ப் பெறப்படுவதால் விளங்கும். பிறர், `விதேக முத்தி` என்பர். இந்நிலையில், `சிவானந்தத்தை நாம் அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வும் இன்றி, அந்த ஆனந்தத்துள் மூழ்கியிருக்கும் நிலையாதல் பற்றி இதனை, `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். ஆனந்தாதீதம் ஆனந்தத்தில் ஆதீதம். இவ்வாறன்றி, உலக இன்பத்தில் தோயாது, சிவானந்தத்திலே தோய்தல் சிவமுத்தியாம். (எனவே நின்மலாவத்தையில் துரியாதீத நிலையாம்.) இவ்வாறு மூன்று நிலைகளில், உயிர் மூன்று தன்மைகளை உடையதாக, முத்தி மூன்று வகையாய் இருக்கும். இவற்றுள் சொல்லிறந்த முத்தியாகிய பரமுத்தியே நாதாந்த முத்தியாகக் கருதப்படும்.

குறிப்புரை :

``அதீதம்`` என்பது, `கடந்தது` என்னும் பொருளது. ஆனந்த அனுபவத்தை, ``ஆனந்தம்`` என்றார். `தாரகத்தில்` என்பது இடைக்குறைந்து நின்றது. தாரகம் - பிரணவம். இது அனைத்துச் சொற்களும் ஆதல் அறிக. ஓவுறு தாரகம் - தாரகம் ஓவிய (நீங்கிய) நிலை. உள்ளும் - உள்ளப்படும். என மாறிக் கூட்டியுரைக்க.
இதனால், `மும்முத்திகளாவன இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும்
ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும்
ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று)
ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.

பொழிப்புரை :

[``அறிவுடையார் ஆவ தறிவார்;`` அறிவிலார் - அஃதறிகல்லாதவர்``* என்றபடி, பின் வளைவதை முன் கூட்டிக் காரிய காரண இயைபு பற்றி உய்த்துணர்பவரே `அறிவுடையார்` எனப் படுவார். அங்ஙனம் அறியமாட்டாதவர் அறிவிலார் ஆவர். அறிவால் இன்பம் வருதலும், அறியாமையால் துன்பம் வருதலும் நியதி. ஆகவே] பின் விளைவதை முன்கூட்டி அறிந்து வருமுன்னர்க் காத்துக் கொள்ளாத உயிர்கள் பிறப்பாகிய துன்பத்திலே வீழ்ந்திடும். பின் விளைவதை முன்கூட்டியே அறிந்து, `வருமுன்னர்க் காத்துக் கொண்ட உயிர்கள் சிவனது திருவருளிலே சென்று பொருந்தும். `சிவனாலன்றி உடம்பாலும், உலகத்தாலும் உயிர்கட்கு வருவதொன்றில்லை` என்பதை உணர்ந்து, அவனது அருளைப் பெற்று, அந்த அருளாலே அவனுடன் ஒன்றுபடுதலே முத்தியாகும்.

குறிப்புரை :

`எனவே, சிவனது அருளைப் பெற்றோர் முத்தியாகிய இன்பத்தை அடைவர்` என்பதாம். `பிற` என்னும் முதனிலையே, `பிறப்பு` எனத் தொழிற் பெயர்ப் பொருளைத் தந்தமையின் முதனிலைத் தொழிற்பெயர்.
``ஞானத்தால் வீடு ... ... ... அஞ்ஞானத்தால்
உறுவதுதான் பந்தம்``*
என்பார், ``ஆவதறியா உயிர் பிறப்பால் உறும் - ஆவதறியும் உயிர் அருட்பால் உறும்`` என்றார். அகன்று அகமாகிய உடம்பையும், புறமாகிய உலகத்தையும் அடிநிலைக்காரணமாக உணர்தலினின்றும் நீங்கி, ஓவு சிவன் - எல்லாவற்றையும் கடந்தவனாகிய சிவன்.
இதனால், முத்திகளின் பொது இலக்கணம் கூறப்பட்டது. இதனானே, `சித்தாந்த முத்தி இது` என்பதும், `ஏனைச் சமயவாதிகள் பிற பிறவாகக் கூறும் முத்திகள் எல்லாம் பூர்வ பக்க முத்திகளே` என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அவர் கூறும் முத்தி வகைகளைச் சிவஞானசித்தி* சிவப்பிராகச* நூல்களிற் காண்க. முத்தியை இலக்கண வகையால் தெரிந்துணர்த்துபவர் `அதனை அடைதல் ஞானம் ஒன்றானேயாம்` என்பதும் உடன் கூறினார்.

பண் :

பாடல் எண் : 3

சிவமாகி மும்மலம் முக்குணஞ் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத் தைக்கியத்
துவமா கியநெறி சோகம்என் பார்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

பொழிப்புரை :

சித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களையும், ஏனைச் சமயத்தார் முடிவாகக் கூறுகின்ற முக்குணங்களையும் (சாத்துவிக ராசத தாமதங்கள்) போக்கிச் சிவமாம் தன்மையை எய்திச் சரியை முதலிய தங்களால் உண்டாகும் அந்த ஞானத்தின் பயனாகப் பெறுகின்ற மும்முத்திகளையே, `தத்துவமசி` `ஸோஹமஸ்மி` என்னும் மகா வாக்கியங்கள் கூறும் முத்தி நிலையாக உணர்ந்து, அந்த மகாவாக்கியப் பொருள்களை அனுபவமாக உணர வல்லவர்கட்கு நன்மையே நிறைந்து, தீமை சிறிதும் இல்லாதவனாகிய சிவன், பிற பொருள்களை யெல்லாம் விலக்கித் தான் ஒருவனே விளங்கி நிற்பான்.

குறிப்புரை :

சிவன் அவ்வாறு விளங்கி நிற்றல், ஞாயிறு பிற பொருள்களைக் காண்பவர்கட்கு அவற்றைக் காட்டித் தன்னைக் காட்டாது நின்று, தன்னைக் காண்பவர்கட்குப் பிற பொருளைக் காட்டாது, தன்னையே காட்டி நிற்றல் போல்வது. `சிவன் இவ்வாறு தன்னையே காட்டி நிற்பதே முத்தி நிலை` எனவும், `தன்னைக் காட்டாது பிறபொருள்களைக் காட்டி நிற்பதே பெத்தநிலை` எனவும் உணர்க. ``சிவம் ஆகி`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டுக. ``தவம்`` என்பது முன்னர் அதன் பயனாகிய ஞானத்தையும், பின்னர் ஞானத்தால் அடையும் பயனையும் குறித்த இருமடி யாகுபெயர். ``ஐக்கியம்`` என்றது, `அசி` என்றபடி. மூன்றாம் அடியில் உள்ள ``துவம்`` தன்மை. ``துவமாகிய நெறி`` என்பதை, ``சேகம்`` என்பதன் பின்னர்க் கூட்டி, `தத்துவ மஸி, ஸோகமஸ்மி இவற்றின் தன்மையாய நெறி` என உரைக்க. மகாவாக்கியங்கள் இங்குத் தம்மை யுணர்த்தி யொழியாது, தம் பொருளை உணர்த்தி நிற்றலின் `தன்மை` என்றது அவை பற்றிய அனுபவங்களையாம். நெறி - ஞான நெறி. இதுவும் ஆகுபெயரால் அதன்பயனையே குறித்தது. ``சிவமாம் அமலன்`` என்று, `நன்றுடையானைத் தீயதில்லானை``8 எனஅறாற்போல்வது. இங்ஙனம் மறுதலைப் பொருளையும் உடன் கூறியது முத்திநிலையில் சிவன் உயிருக்குப் பிற பொருளைக் காட்டாமையை உணர்த்தற்கு. ``பொய்காட்டா மெய்யா``l என்றதும் காண்க.
இதனால், `வேதாந்தமுத்தி சித்தாந்த முத்தியே` என உணர வல்லவர்களே வேதாந்த ஞானிகளாய், மும்முத்திப் பயன் பெறுவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

பொழிப்புரை :

பக்குவான்மாக்கட்குப் பாசத்தை அறுத்துத் தன்னையே அளிப்பதாகிய சித்தாந்த முத்தியைத் தருகின்ற, பெரிய பெருமானாகிய (மகாதேவனாகிய) சிவனே ஏனையோர்கட்கு அவரவர்களது தகுதிக்கு ஏற்ப, பொது யோகிகள் விழைகின்ற அணிமாதி அட்ட மாசித்தியாகிய பயனையும், ஏனைச் சமயத்தார் தாம் தாம் `முத்தி` எனக் கொண்டு விழைகின்ற பல்வேறு பயன்களையும், அகப்புற, அகச்சமயிகள் விழையும் பொதுநிலைச் சிவபதமாகிய பயனையும், இப்பயனுக்கு எதிராய் உள்ள `தாபத் திரயம்` எனப்படும் மூவகைத் துன்பங்களைப் போக்கிக் கொள்கின்ற ஆற்றலையும், சிவயோகிகள் விரும்புகின்ற அந்தமேலான சமாதியாகிய சீவன் முத்தியையும் தருபவனாவான்.

குறிப்புரை :

`சிவன் முத்தி தரும் பெருமான்` என்பதே பற்றி, அவன் தன்னையளிப்பதாகிய அந்தப் பரமுத்தி ஒன்றைத் தான் தருவான் போலும்` என மயங்கி யுரைக்கும் பல்வேறான வழக்குரைகளால் மாணாக்கர் மயங்காமைப் பொருட்டு, `அனைத்துப் பயன்களையும் தருபவன் சிவன் ஒருவனேயன்றிப் பிறர் ஒருவரும் இல்லை` என்பதை விளக்கினார். `முத்தியைத் தரும் பெருமான், அதற்குக் கீழ்ப்பட்ட ஒன்றையும் தர வல்லனல்லன்` என்றல், தன்னைச் சார்ந்தவர்க்குக் காணியும், மனையும், மாடமும், மாளிகையும், ஊரும், நாடும் வழங்கவல்ல அரசனுக்குப் பரிசிலர் வேண்டும் பொன்னும், பூடணமும், யானையும், குதிரையும், தேரும் போல்வனவற்றைத் தருதல் இயலாது` எனக்கூறுவாரது கூற்றோடு ஒக்கும் என்பதாம். `சிவன்அ முத்தியைத் தருபவன்` என்பதற்கு, `ஏனைப் பயன்களை ஏனைத் தேவரிடத்தும் சென்று பெறுதல் கூடும்; பிறவியற்ற பெருநிலையாகிய முத்திப் பயனைச் சிவன் ஒருவனிடத்தில் பெற முடியும்` என்பதே கருத்தாகலின், அஃதறியாது, சிவன் முத்தியைத் தவிர வேறு ஒன்றையும் தர மாட்டுவானல்லன் என்பார்க்கு நாம் என் கடவோம் என்பது கருத்து. `சிவனலால் முத்தியில் சேர்த்துவார் இலை``* என்னும் காஞ்சிப்புராணத்தையும் காண்க.
`பிற சமயிகள் விழையும் முத்தி` என்றதனால் உலகாயதர் விழையும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அரிவையர் இன்பம் முதலிய இம்மைப் பயன்கள் பலவும் அடங்கின. `பிற பயன்களையும் தேவர் பிறர் அளித்தல் சிவனது ஆணையைப் பெற்றே` என்பது மேலேல்லாம் விளக்கப்பட்டது ஆதலின், பிறர்தேவர் தரும் பயன்களும் அவர்தாமே சுதந்திரராய் நின்ரு தருவன அல்ல என்பது விளங்கும்.
மூவகைத் துன்பங்களாவன `ஆதியான்மிகம், ஆதி பௌதிகம், ஆதிதைவிகம் என்பன. இவை முறையே, தன்னாலே தனக்கு வருவது (`தான்` என்பது தன் உடம்பையும் சேர்த்தே), ஐம் பெரும் பூதங்களால் வருவது, பிற காரணங்களைக் கருதாது, ஊழே காரணமாகக் கருத வருவது என்பனவாம். இவ்வாறு ஞானா மிர்தத்தில்l சொல்லப்பட்டது. பரிமேலழகர், `ஆதி பௌதிகம்` என்பதைப் பிற உயிர்களால் வருவனவாகக் கூறினார்.8 ``சுத்தி`` என்றது `குற்றம் அற்றதாகிய முத்தி` என்றபடி. தரும் பெருமானைத் தரப்படும் பயனாகவே உபசரித்துக் கூறினார்.
சிற்பி