எட்டாம் தந்திரம் - 26. முச்சூனிய தொந்தத்தசி


பண் :

பாடல் எண் : 1

தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

பொழிப்புரை :

துவம் தத், அசி, என்னும் மூன்று சொற்கள் தொன்மை -யான வேதத்தில் சொல்லப்பட்டனவாகும். இவை உலகியலில் தோன்றுதல் போலாது யோக துரியம். நின்மலதுரியம், பரதுரியம் ஆகிய முத்துரியங்களில் உணர்வின்கண் தோன்றும் பொழுது அவை முறையே சீவ அறுதியும், பர அறுதியும், சிவ அறுதியுமாய் நிற்கும்.

குறிப்புரை :

`சிவம்` என்பது அருளையும் `பரம்` என்பது ஆனந்தத் -தையும் குறிக்கும் நிற்பது, தொழிற்பெயர். ஈற்றில் உள்ள பதம் நிலை, முடிநிலை. ``உயிர், பரம்`` என்பவற்றிலும் எண்ணும்மை விரிக்க. ஈற்றில் உள்ள ``தொந்தத்தசி`` என்பதை, ``மூன்றின்`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆம்` அம்மூன்றின், எனச் சுட்டு வருவித்துரைக்க. சிறப்பு நோக்கி, `அசி` என்பதை மட்டும் `முன்னர், தான் ஆம் அசி` என்றார்.
இதனால், `முச்சூனியம் ஆவன இவை` என்பதும், அவை தோன்றும் இடங்களும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற
இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.

பொழிப்புரை :

முன் மந்திரத்தில் கூறிய மூன்று அறுதிகளுள் தொம்பத அறுதியில் (சீவ அறுதியில்) மாயா - மலமும், தற்பத அறுதியில் பர அறுதியில்) ஆணவ மலமும், அசிபத அறுதியில் (சிவ அறுதியில்) கன்ம மலமும் நீங்கும். அவ்வாறே அம்மூன்று அறுதிகளிலும் முறையே இராசதம், சாத்துவீகம் தாமதம் என்னும் குறைகள் நீங்கும். இவ்வாறு மூவறுதியில் மும்மலங்களும், முக்குணங் களும் நீங்குதல் நிலாவின் முன் இருள் நீங்குதலை ஒக்கும்.

குறிப்புரை :

``மூன்றில்`` என்பன இரண்டும், `மூன்று அறுதிகளில்` என்றபடி. ``காமியம் ஆதி`` என்பதை, `காமியம், ஆணவம், மாயை என்றவாறாகக் கொண்டு, அவற்றை எதிர் நிரல்நிறையாகப் பொருத்துக தாமதமாதி முக்குணங்களை ஏற்ற பெற்றியால் பொருத்திக் கொள்க. ``சிவம் தோன்ற`` என்பதை ``மலம் குணம் மாளல்`` என்பதற்கு முன்னே கூட்டுக. ``ஆதி`` என்பதன் பின், `நீங்கும்` என்பது வருவிக்க.
இதனால், முச்சூனியங்களில் நிகழ்வன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

தொந்தத் தசிய வாசியில் தோற்றியே
அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு
அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து)
உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.

பொழிப்புரை :

`தொம், தத், அசி` என்னும் மூன்று பதங்களையும் முத்தி பஞ்சாக்கர மூன்றெழுத்துக்களில் முறையே யகார சிகார வகாரங் -களில் வைத்து அந்த முறையிற்றானே தூல பஞ்சாக்கரம் ஐந்தும், சூக்கும பஞ்சாக்கரம் ஐந்தும் அடங்கியிருப்பதாகக் கொண்டு அதனையே அழிவில்லாத யோகாவத்தை நின்மலாவத்தை பராவத்தைகளில் `தொந்ததசி` வாக்கியமாகச் சிகார வகாரங்களை முன் வைத்து உச்சரி.

குறிப்புரை :

`அவத்தையில்` எனவும், `அவ்வாக்கியத்தை` எனவும் அவ்வவ்வுருபினை விரிக்க. `ஓதினால் முச்சூனியமும் விளையும்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், திருவைந்தெழுத்து மந்திரமே தத்துவமசி மகா வாக்கியமாய் முச்சூனியங்களைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.

பொழிப்புரை :

முன் மந்திரத்திற் கூறியவாறு முத்தி பஞ்சாக்கரத்தை சிவ முன்னாக வைத்து உணர்வைப் பர சொரூபமாகிய ஆனந்த நிலையிற் செலுத்தி அதனோடே பிரணவமாகிய அந்த உபதேச மந்திரத் -தையும் அவ்வாறே உள்ளத்தில் சேர்ப்பி, சேர்ப்பித்தால், அப்பொழுதே நீ மெய்யுணர்வைப் பெற்றுச் சிவனுக்கு அடிமையாகி விடுவை.

குறிப்புரை :

முன்மந்திரத்தை அடுத்து அந்தாதியாக ``வைத்து`` என்றனால், `முன் வைத்து` என்றதாயிற்று. பிரணவத்தையும் அவ்வாறாகி வைக்கும் முறை பின்னர்க் கூறப்படும். தெளிவு பற்றி எதிர்காலம் இறந்த காலமாயிற்று.
இதனால், பிரணவமும், தத்துவமசி, முத்திபஞ்சாக்கரம் இவை போல முச்சூனியத்தைத் தரும்` என்பது கூறப்பட்டது. `சிவத்தை முன் வைத்து` என்றது அனுவாதம்.

பண் :

பாடல் எண் : 5

தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய
உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.

பொழிப்புரை :

`தத்துவமசி` மகாவாக்கியத்தில் `துவம்` பதப்பொரு ளாகிய சீவன் உயிர் தத்துவங்களையே `தான்` என மயங்கும் மயக்கம் மாயையால் தோன்றுவதாகும். தற்பதப் பொருளாகிய பதி ஐந்தொழில் செய்தற் பொருட்டுப் பரா சத்தியினின்றும் சிவமாகித் தோன்றும் சீவன் சிவமாதலைத் தெரிவிப்பதாகிய `அசி` பதப்பொருள் உயிர் அனைத்துப் பாசங்களினின்றும் நீங்கித் தூயதாய நிலையில் தோன்றும். இனி, `தத்துவமசி` மகா வாக்கியத்தில் உள்ள `அசி, தத், துவம்` என்னும் முப்பதங்களும் முத்தி பஞ்சாக்கரத்தில் முறையே `வா,சி,ய` மூன்றெழுத்துக்களில் அடங்கும்.

குறிப்புரை :

எனவே, தத்துவமசி மகாவாக்கியப் பயிற்சியின் பயனாகிய முச்சூனியங்களை முத்தி பஞ்சாக்கரப் பயிற்சியே தரும்` என்பது குறிப்பெச்சம். ``பதம்`` மூன்றும் அவற்றின் பொருளைக் குறித்த சொல்லாகு பெயர்களாம். நம்புதல், விரும்புதல் தூய்மையை, ``சாந்தி`` என்றார். உம்பர் உரை, தொன்மை மொழி ஈற்றில் யகர உயிர்மெய் செய்யுள் நோக்கி நீட்டல் பெற்றது.
இதனால், முத்தி பஞ்சாக்கரம், `தத்துவமசி` இவற்றின் பொருள் தோன்றுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து
ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி
வாகிய சீவன் பரசிவ னாமே.

பொழிப்புரை :

`சோயம் தேவதத்தன்` என்பது `தேவதத்தனாகிய அவனே இவன்` என்பது இதன் பொருள். ஒரு வடமொழி உதாரணம். இதன் விளக்கம் இல்லற நிலையில் அதற்குரிய கோலமும், உடையும், பெயருமுடையவனாய் இருந்த ஒருவன் அவற்றையெல்லாம் விடுத்துத் துறவியாகி, அதற்குரிய கோலம், தண்டு கமண்டலம், வேறு பெயர் ஆகியவற்றைக் கொண்டால், `அவன்` எனப்பட்ட நிலையில் அவனிடம் இருந்த சேர்க்கைப் பொருள்களையெல்லாம் விடுத்து, அவற்றை உடையவனாய் இருந்த அவனை மட்டுமே கொண்டு, `இவன்` எனச் சுட்டுதல் போல்வதே `சீவன் சிவமாகிறது` என்றலும் - என்பது அஃதாவது பசுத்துவத்தால் `சீவன்` எனப்படுகின்ற உயிர் அப்பசுதுவத்தின் நீங்கித் தூயதாகிய நடுநிலையிலேதான் சிவனைச் சார்ந்து சிவமாகின்றது என்பதாம்.

குறிப்புரை :

ஆகிய - இயற்சொல்லாகாது, ஆக்கச் சொல்லாய் அமைந்த அகரச்சுட்டு `சோயம் தேவத்தன்` என்னும் தொடர் முழு வதையும் சுட்டிற்று. ``இடத்து`` என்பது ஏழாம் வேற்றுமை பொருட்டாய் நின்றது. ஆகியவை - சேர்க்கைப் பொருளாகச் சேர்ந்துள்ளவை. `விட்டாற்போல` என உவம உருபு விரிக்க. `காயம் முதலிய` என ஒரு சொல் வருவிக்க. ஏகிய - நீங்கிய. ``ஏகிய` `தொம்` என்பதையே - தத் அசி - என்ப`` என முடிக்க. இங்ஙனம் கூறிய வற்றின் விளக்கமாகேவே, ``மெய்யறிவாகிய சீவன் பரசிவன் ஆமே`` என்பது கூறப்பட்டது. சீவனே என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப் பட்டது. ``மெய்யறிவாகிய சீவன்`` என்றதனால், அது பொய்யறி வாகிய உடம்பு முதலியவற்றின் நீங்கினமை பெறப்பட்டது. இவ்வாறு பொருள் கொள்ளுதல் விட்டு விடாத `லக்கணை` எனப்படும். இலக்கணை பின்பு விளக்கப்படும்.
``சோயம் தேவதத்தன்`` என்னும் இவ்வுதாரணத்திற்கு ஏகான்ம வாதிகள் தரும் விளக்கம், `இல்லறத்தானாய் இருந்தவன் எவனோ அவனேதான் துறவியானவனும்; வேறொருவனல்லன்; அதுபோலத் -தான் சீவனும், பிரமமும் வேறாகாததும்` என்பது. துறவிக்கும் இல்லறத்தானுக்குப் போலக் கோலமும், உடைமையும் ஒழுக்கமும் உள்ளன ஆகலின், அவற்றைப் பெற்றவனே துறவியாதல் நினைக்கத் தக்கது.
இதனால், முச்சூனிய நிலை உவமையில் வைத்து விளக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

தாமத காமிய மாதி தகுகுணம்
ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு
ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில்
தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே.

பொழிப்புரை :

முக்குணங்களும், மும்மலங்களும் `அ, உ, ம` என்னும் பிரணவ கலைகள் செயற்படில் செயற்படும்; ஒடுங்கில் ஒடுங்கும். அச்செயற்பாடு ஒடுக்கங்களும் மூவகை உடம்பின் கண் நிகழும் `தொம், தத், அசி` என்னும் முப்பதங்களின் சூனியங்களும் அவ்வாறேயாம். அஃதாவது `முச்சூனியங்கள் நின்மல துரியத்தில் நிகழும்` என்பதாம்.

குறிப்புரை :

`தாமத மாதி குணம், காமியமாதி மலம்` எனக் கூட்டுக. ``மூன்றில்`` என்பதன் பின் `நிகழும்` என்பது வருவிக்க. உடல் மூன்று, இவ்வதிகாரத் தொடக்கத்தில் சொல்லப்பட்டன. தாம் ஆம் துரியம் - ஆன்மாச் சுத்தி பெற்ற நின்மல துரியம் `தொம் தத், அசி` என்பன அவற்றின் சூனியங்களைக் குறித்தன.
இதனால், முச்சூனியங்களின் இயல்புகள் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டன. இவற்றால் இவை பிராசாத யோகத்தில் சொல்லப்படும் சூனியங்கள் ஆகாமை விளங்கும்.
சிற்பி