ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்


பண் :

பாடல் எண் : 1

பலியும் அவியும் பரந்து புகையும்
ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக்
குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.

பொழிப்புரை :

`வித்தியா குரு, கிரியா குரு, ஞான குரு எனக் குருமார் முத்திறப்படுவர். அவருள் வித்தியாகுருமார் இருக்குமிடம், `குருகுலம்` எனப்படும். குலம் - இல்லம். ஏனை இருதிறத்தார் இருக்குமிடம் `மடாலயம்` எனப்படும். அஃது இங்குச்சுருக்கமாக, ``மடம்`` எனப்பட்டது. அவருள்ளும் இங்கு, ``குரு`` என்றது, சிறப்பாக ஞான குருவையே.
வித்தியா குரவராவார் இல்லறத்தவரே. வானப்பிரத்தராயும் இருப்பர். ஏனையிருவரும் `கிருகத்தம், வானப்பிரத்தம், சந்நியாசம்` என்னும் மூன்று ஆச்சிரமங்களில் தங்கட்கு ஏற்புடையதில் இருப்பர். இம்மூவரது இருப்பிடங்களுமே `மடம்` எனப்படும். எனினும், கிருகத்தர் தவிர ஏனையிருவரது இருப்பிடங்களையே வழக்கத்தில் `மடம்` என்பது குறிக்கின்றது.
``தாவில் சீர் முருகனார் திருமனைக் கெய்தி``
என முருக நாயனாரது இல்லத்தை, ``திருமனை`` என ஓரிடத்தில் அருளிச் செய்த சேக்கிழார் தாமே, அதனை வேறிடங்களில்
``திக்கு நிறைசீர் முருகர் முன்பு
செல்ல, அவர்மடம் சென்று புக்கார்``3
``முருகனார் திருமடத்தின் மேவுங் காலை``
``ஓங்குபுகழ் முருகனார் திருமடத்தில் உடனாக``3
என, ``மடம்`` என்றும், ``திருமடம்`` என்றும் அருளிச் செய்தார். ஆதலின், சிவனுக்கு அடியவராய்ச் சிவப்பணி செய்வார் யாவ ராயினும் அவரது இல்லங்கள், `திருமடம்` எனக் குறிக்கப்படுதற்கு உரியவாதல் விளங்கும். இன்னும் அவர், (சேக்கிழார்) அப்பரும், சம்பந்தரும் திருவீழிமிழலையில் சிலநாட்கள் எழுந்தருளியிருந்த இடங்களையே, `அக்காலங்களில் அந்த இடங்கள் திருமடங்களாய் விளங்கின` என்னும் கருத்தால்,
``ஈறி லாத பொருளுடைய
இருவர் தங்கள் திருமடமும்``l
 ``நாவினுக்கு வேந்தர் ``திருமடத்தில்``*
``பிள்ளையார்தம் திருமடத்தில்``
எனத், ``திருமடம்`` எனக் குறித்தருளினார். இன்னும் திருஞான சம்பநத்ர் திருமணத்தின் பொருட்டுச் சென்று, அதற்குமுன் சிறிதுபோது எழுந்தருளியிருந்த இடத்தையே, அவர் எழுந்தருளியிருந்தமை காரணமாகச் சேக்கிழார்,
``பூதநா யகர்தம் கோயிற்
புறத்தொரு மாமடத்திற் புக்கார்``*
என, ``மடம்`` என்று அருளிச்செய்தார்.
இனித் திருநாவுக்கரசு நாயனார், திருப்பூந்துருத்தியில்,
``திங்களும் ஞாயிறும் தோயும்
திருமடம் ஆங்கொன்று செய்தார்``
எனப்பட்டது, ஆசிரியன்மார்களும், அடியார்களும் எழுந்தருளி யிருக்கத் தக்கதாக, நிலையாக அமைந்த திருமடமாகும்.
``நான்காம் வருணத்தாறருள் நைட்டிகருக்கல்லது
ஆசாரியத் தன்மையில் அதிகாரம் இல்லை``
என்றும்,
``ஆதிதசைவராயின் கிருகத்தருக்கும் ஆசாரியத்
தன்மையில் அதிகாரமும் உண்டு``
என்னும் சிவஞான யோகிகள் தமது சிவஞான போத மாபாசியத்துச் சிறப்புப் பாயிரப் பாடியத்துள், ``ஆசாரியத் தன்மையின் அதிகாரம்`` என்னும் தலைப்பின்கீழ்ப் பலவகைத் தடைவிடைகளால் நிறுவினார். அதுபற்றிச், `சைவ சமய நெறி` நூலின்,
``சூத்திரனும் தேசிகனா வான்மரணாந் தம்துறவி,
சாத்திரத்தின் மூன்றும்உணர்ந் தால்``8
என்னும் திருக்குறளின் உரையில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் பின்வருமாறு கூறியுள்ளதை இங்கு அறிதல் இன்றியமையாதது. (மூன்றும் - முப்பொருள்களின் இயல்பும்.)
``சூத்திரருள் நைட்டிகப் பிரமசாரிகட்கே
குருத்துவம்; கிருகத்தர்களுக்குச் சமயி,
புத்திர, சாதகத்துவம் மாத்திரம்; குருத்துவம்
இல்லை - என்று காமிகாகமத்தில் கூறப்படுதல்
பற்றி இவ்வாறுரைத்தார்.
- சூத்திரருட் கிருகத்தருக்கும் குருத்துவம்
உண்டு - என்று வேறுசில ஆகமங்களில்
விதிக்கப்பட்டது.
முன்னை விதி, நைட்டிகப் பிரமசரியம் வழுவாது
அநுட்டிப்போர் பலருளராகப் பெற்ற முனை
யுகங்களிலும், பின்னை விதி, நைட்டிகப்
பிரமசரியம் வழுவாது அநுட்டிப்போர்
மிக அரியராகப் பெற்ற இக்கலியுகத்திலும்
கொள்ளற்பாலன வாதலின், விரோதமின்மை
தெளிக.``
இதனால், `ஆகமங்களில் சூத்திரர்களில் கிருகத்தருக்கும் ஆசாரியத் தன்மையில் அதிகாரம் உண்டு` எனக் கூறப்பட்டிருப்பதை அறிகின்றோம். வழக்கத்திலும் அவ்வாறு உள்ள ஆசாரியர்கள், `தேசிகர்கள்` எனப் பெயர் பெற்று விளங்கக் காண்கின்றோம். அவர்களைச் சிவஞான யோகிகள் `ஆசாரியர்கள்` என்று ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், தீக்கையைப் பற்றி விரிவாகவும், சுருக்க மாகவும் கூறுகின்ற, சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் என்னும் நூல்களிலும, சாதியை வைத்துத் தீக்கை வேறுபாடு கூறவில்லை. அவ்வாறே சாதி பற்றிக் கூறப்படும் சைவ பேதங்களையும் அந்நூல்கள் குறிப்பிடவில்லை. இந்நாயனாரும் குருமார்களைப் பற்றிப் பேசும் இடங்களில் இவ்வாறெல்லாம் கூறவில்லை.
`ஞான தீக்கையால், உயிரே சீவனாய் இருந்தது, சிவமாகி விடுகின்றது` என்றால், அதன்பின் அதற்குக் கருவியாய் அமைந்து, அது வேண்டியவாறே பயன்படுகின்ற உடம்பைப் பற்றிய சாதி, தீக்கை யினாலும், மாறுதல் இல்லை` என்பதை உடன்பட முடியவில்லை.
சிவப்பிரகாச நூலில் உமாபதி தேவர், ``பெத்தான்மாவின் உடம்பே பாசம்; முத்தான்மாவின் உடம்பு திருவருளே`` என்கின்றார்.3 இந்நாயனாரும்,
``திண்மையின் ஞானி சிவகாயம்``l
என்பதனால், ``சிறந்த ஞானியின் உடம்பு சிவனது திருமேனியே`` என முன் தந்திரத்தில் கூறியிருத்தலைப் பார்த்தோம். துறவிகள் உடம்பிற்குச் சமாதிக் கிரியை விதித்ததும் இது பற்றியே. திருநாவுக்கரசு நாயனார்,
``எவரேனும் தாம்ஆக; இலாடத் திட்ட
திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி,
உவராதே அவரவரைக் கண்டபோது
உகந்தடிமைத் திறம்நினைந்து அங்கு உவந்து நோக்கி,
இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி
இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்
கவராதே தொழும் அடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.``9
எனப் பொதுவான திருவேடமுடையாரைப் பற்றியே இவ்வாறு அருளிச் செய்தார். அங்ஙனமாக, `சிறந்த ஞானாசிரியரால் பலவகைத் தீக்கைகளையும் செய்து, ஔத்திரி தீக்கையால் அத்துவ சோதனையும் செய்யப்பட்டபின்னும் அந்த அத்துவாக்களையுடைய உடம்பு, தாய் வயிற்றினின்றும் பிறந்தது பிறந்தபடியேதான் உள்ளது. சிறிதும் மாற்ற மில்லை` எனக் கூறுதல், `சமயத்திலும் சாதியே வலுவுடையது; அது பிறப்பு மாறினாலன்றி, மாறாது` எனக் கறும் மிகுதி நூல்களையே தலை யாய பிராமாணங்களாகக் கொள்கின்ற சுமார்த்த சமயத்தின் தாக்கமே யாகும். `சைவத்தில் அஃதல்லை` என்பது திருத்தொண்டர் புராணத்தில் மிக மகி வெளிப்படை. `தீக்கையால் உயிரினது நிலை மட்டுமே மாறும்; உடலது நிலையில் மாற்றம் உண்டாகாது` எனக் கூறினால், `துறவிகளது உடம்பிற்குச் சமாதி விதித்தலால் பயன் என்னை, என்க. `அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்` என்போர்` நிருவாண தீக்கைபெற்றுச் சைவ சந்நியாசமும் பெற்ற பின்னரும், `முன்பு இருந்த அந்தணன் அந்தணன்தான்; வேளாளன் வேளாளன் தான்` எனக் கூறுதல் எவ்வளவு தொலைவு உண்மையோடு ஒட்டு கின்றது என்று பார்த்தல் வேண்டும்.
எனவே, இங்கு, ``குரு`` என்றது, எவ்வாற்றாலேனும் ஆசிரியத்தன்மை பெற்றோரையேயாம். எனினும் சந்நியாச ஆச்சிரமத்தில் உள்ள குருமார் இருப்பிடத்தற்கே `மடம்` என்னும் பெயர் சிறப்பாக உரியது. வானப்பிரத்த, கிருகத்த ஆசாரியர்கள் இருப்பிடத்திற்கு அது பொதுவாக உரியதே.
இனி, `சந்நியாசிகட்கு ஆசாரியத் தன்மை இல்லை` என்னும் ஓர் வாதமும் உண்டு.*
அது தபசுவி - என்னும் சந்நியாசியைக் குறித்து மட்டுமே கூறியது` எனச் சிவஞான யோகிகளே மேற்குறித்த இடத்தில் விளக்கினார். இங்கு வானப்பிரத்தர் `தபசுவி` அல்லாத சந்நியா சிகளுள் அடங்குவர்
``அப்பாஇம் முத்திக்(கு) அழியாத காரணந்தான்
செப்பாய், அருளாலே; செப்பக்கேள் - ஒப்பில்
குருலிங்க வேடம்எனக் கூறில்இவை கொண்டர்,
கருஒன்றி நில்லார்கள் காண்``
``கற்றா மனம்போல் கசிந்துகசிந் தேஉருகி
உற்றாசான் லிங்கம் உயர்வேடம் - பற்றாக
முத்தித் தலைவர் முழுமலத்தை மோகிக்கும்
பத்திதனில் நின்றிடுவார் பார்``9 என்றபடி, சித்தாந்த முத்திக்குத் துணையான, குரு லிங்க சங்கமங்களே யாதல் பற்றி அவைகளை, மேல் இடம் வாய்த்துழிக் கூறிய நாயனார், இங்கு முதற்கண் குரு இடமாகிய திருமடத் தரிசனத்தின் சிறப்பைக் கூறுகின்றார். இவ்வதிகாரம் ஆறு மந்திரங்களையுடையது.
`சிவபெருமான் ஒருவனுக்கே உரியன` எனக் கருதிக் கொண்டு, தனியாகப் படைக்கப்படுகின்ற படையல்களும், நெருப் பிடமாக இடப்படுகின்ற அவிசுகளும், தூபம், வேள்வி, குருலிங்க சங்கமங்கட்காக அடுகின்ற அட்டில் இவற்றினின்றும் எழுகின்ற புகைகளும், வழிபாடுகளில் மெல்ல ஓதுகின்ற மந்திர ஒலிகளும், இசையுடன் உரக்க ஓதுகின்ற வேதம், திருமுறை இவற்றின் ஓசைகளும் வந்து வந்து பரவிக் குவிகின்ற இடம் குருமடம், இதைக் கண்ணால் கண்டவர்களும் சிவலோகத்திலே சிவனது திருவடியைச் சார்வார்கள்.

குறிப்புரை :

`கண்டவர்கட்கு உலக ஆசைகள் நீங்க, சிவபத்தி தோன்றி முதிரும்` என்பதாம். ``நல்லாரைக் காண்பதுவும் நன்றே``8 என்றதும் இது பற்றி, ``ஈசன்றனக் கென்றே உள்கி`` என்பதை முதலிற்கொள்க, கருதுதலைச் `சங்கற்பம் செய்து கொள்ளல் என்பர். `அங்ஙனம் செய்து கொண்டு செய்வனவற்றிற்குப் பயன் மிகுதி என்பது ஆகமங்களின் துணிபு. ``ஈசன்`` என முன்னர்ப் போந்தாமையால், ``மலரடி`` என்றதும் அவனது திருவடியே யாயிற்று. `ஈசன்` என்பது சிவ பெருமானுக்கே உரிய சிறப்புப் பெயர். ``உள்கி`` என்பதன்பின், `செய்ய` என ஒரு சொல் வருவித்து ``பரந்து`` என்பதைக் ``குவியும்`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. தெளிவு நோக்கி எதிர்காலம் `சார்ந்து நின்றார்` என இறந்த காலம் ஆயிற்று. பின்னிரண்டடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், குருமட தரிசனம் பத்தியைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

இவன்இல்லம் அல்ல(து) அவனுக்கங் கில்லை
அவனுக்கு வேறில்லம் உண்டா அறியின்
அவனுக்கு இவன்இல்லம் என்றென் றறிந்தும்
அவனைப் புறம்பென்(று) அரற்றுகின் றாரே.

பொழிப்புரை :

`சிவனுக்கென்று சுத்த தத்துவங்களில் உலகங்கள் உள்ளன` எனக் கூறப்படுவன, அவனுக்காக அமைக்கப்பட்டன அல்ல இந்தச் சிவகுருவுக்காக அமைக்கப்பட்டனவே. (ஏனெனில், சிவனுக்கு இருக்க ஓர் இடம் தேவையில்லை. சிவகுருவுக்கு, மாசுடம்பு நீங்கிய வுடன் இருக்க ஒரு தூய இடம் வேண்டும்.) `சுத்த தத்துவ உலகம் தவிர, அவற்றின் வேறாகச் சிவனுக்கென்றே இடம் இருக்கின்றது` என்று சொன்னால் அந்த இடம் இந்தச் சிவகுருதான். இதை உண்மை நூல்கள் பலவற்றால் அறிந்தும் சிலர், `குருமடம் வேறு; சிவனது உலகம் வேறு` எனக் கூப்பாடு செய்கின்றனர்.

குறிப்புரை :

`குருமடம் சிவலோகமே` என்றபடி. ``இல்லம்`` என்பதை ``அங்கு`` என்பதன் பின்னும் கூட்டுக. மூன்றாம் அடியில், `சிவனே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுக்கப்பட்டது. (அவனுக்கு இல்லம் இவனே` என மாற்றிக்கொள்க. ``என்று என்று`` என்னும் அடுக்கு, பலமுறை கற்றும், கேட்டும் அறிதலைக் குறித்தது` ``அவனைப் புறம்பென்று`` என்பதற்குக் கருத்து நோக்கி, இவ்வாறு உரைக்கப்பட்டது.
இதனால், `குருமட தரிசனம், சிவலோக தரிசனமே` என அதனது சிறப்புக் கூறப்பட்டது. `அவ்விடம் திருவருள் விளக்கம் நிரம்பியுள்ள இடம்` என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 3

நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரிய சிறப்பில்லி எம்மிறை
ஓடும் உலகுயி ராகிநின் றானே.

பொழிப்புரை :

ஞானமாகிய கடலில் மூழ்குதற்கு உரிய பெரிய துறையாகிய குருமடத்தைச் சென்று நான் தரிசித்தபின்பு, எல்லா உயிர்களும் சென்று சேரும் இடமாகிய சிவனது, அப்பொழுது கொய்த தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகள் தேடிக் காண்பதற்கு அரியனவாகவே இருக்க, திருமடத்தைத் தனக்கு இருப்பிடமாகக் கொண்டுள்ள சிவகுருவே எங்கட்குச் சிவனாய் இயங்குகின்ற உலகம், உயிர் எங்கும் நிறைந்து நிற்கின்றான்.

குறிப்புரை :

``பெருந்துறை`` என்றது, குறிப்புருவகம். `பெரிதாகிய கடலில் சென்று ஆடுதல், அதற்குரிய துறைவழியாக அன்றி இயலாத வாறு போல, அகண்ட ஞானத்தைப் பெறுதல் அதற்குரிய குருமடத்தில் சென்றன்றி இயலாது` என்பது தோன்ற இவ்வாறு உருவகித்தார். ``பெருந்துறை`` என்னும் சொற் குறிப்பால், `இந்நாயனார் ஆளுடைய அடிகள் காலத்திற்குப் பின் இதனை அருளிச்செய்தார்` எனக் கருதலாம்.
``பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன்``3
என அடிகளைச் சிவப்பிரகாசர் போற்றினார். `ஞானத்தைப் பெற்றவர்களுக்கு அதனை அளித்தருளிய ஞானகுருவே சிவன்` என்பதை, ``குருவே சிவம் எனக்கூறினன் நந்தி``88? என நாயனார் முதற்கண் கூறியதுபோலவே, அருணந்தி தேவரும்,
``பரம்பிரமம் இவன்என்றும், பரசிவன்றான் என்றும்,
பரஞானம் இவன்என்றும், பராபரன்றான் என்றும்,
அரன்தரும்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும்
அருட்குருவை வழிபட``9
எனக் கூறினமை அறியற்பாலது. இவ்வாற்றால், `சிவனது சேவடி தேடி அடைய அரியன அரியனவாகவே இருக்க, நாங்கள் குருமடத்தில் குருவினது சேவடியையே சிவனடியாக அடைந்து விட்டோம்` என்றார். சிறப்பு இல் - ஞானம் நிலையம். இகர ஈறு, அதனையுடைய குருமூர்த்தியை உணர்த்திற்று. ``கைகூடும் சிவனது ... ... ... தேட அரிய`` என்பதை இடைப் பிறவரலாக்கி, இம் மந்திரத்தை வினை முடிபு செய்க. `அரிய ஆக` என ஆக்கமும், `எம்மிறையும், உலகுயிராகியும்` என எண்ணும்மைகளும் விரிக்க.
இதனால் ஞானிகட்குக் குருமடம் புகலிடமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.

பொழிப்புரை :

`சிவன் எழுந்தருளியிருக்கின்ற இருக்கை, கயிலாய மலை, ஞானிகளது உள்ளம் என்பன. முறையே திருமடத்தில் உள்ள பீடமும், மடலாயமும், திருநந்தவனமுமே` என்று நான், பன்னிரு பகுதியாகிய, பெரிய தமிழ்நாட்டு மக்கட்கு உறுதியாகக் கூறுவேன்.

குறிப்புரை :

`சிவனுடைய` என்பது முன் மந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. ``இயம்புவன்`` என்பது மீள மீள வந்தது சொற்பொருட் பின்வருநிலையணி. மடம் முதலிய மூன்றினையும் ஆசனம் முதலிய மூன்றதனோடும் நிரல் நிறையாக இயைக்க. ``ஆதாரம்`` எனப்பின்னர் வருதலால், ``படம்`` என்பது பீடத்தைக் குறித்தது. தானியாகு பெயராக, மடத்தையே `பீடம்` என வழங்குதல் உண்மையையும் இங்கு நோக்குக. நந்தவனம் மலர்பொதுளி விளங்குதலால், அது ஞானிகளது உள்ளமாயிற்று. அதன் மணம், ஞான மணமாம். ஈராறு நிலம் - தமிழ்ப் பன்னிரு நாடுகள்.
``செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும்``8
என்றமையால், தொல்காப்பியர்க்கு, இவைகளைக் கொடுந்தமிழ் நாடாகக் கூறுதல் கருத்தாகாமை விளங்கும்.
``என்னைநன் றாக இறைவன் படைத்தனன்,
தன்னைநன் றாகத் தமிழ்ச்செய்யு மாறே``3
என நாயனாரே பாயிரத்துட் கூறியவாறு தமிழ் மக்கட்கே தாம் நூல் செய்கின்றார் ஆகலானும், ``தமிழ் மண்டலம் ஐந்து`` எனத் தமிழ்நாடு முழுதையும் நோக்கினார் ஆகலானும் தமிழ் மக்களையே குறித்தார். இனி, `ஈராறும், இரண்டும் ஆகிய நிலம்` என வைத்து,`பதினான்கு உலகங்களில் உள்ளார்க்கும் இயம்புவன்` என்றும் உரைப்பர். `அஃது எத்துணைப் பொருத்தம் உடையது` என அறிந்துகொள்க.
இதனால், `குருமடத்தில் உள்ள பீடம் முதலியன சிவனது பீடம் முதலியனவேயாம் சிறப்புடையன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

முகம்பீட மாம்மட முன்னிய தேகம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி
அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

பொழிப்புரை :

குருமடத்தில் முதன்மையாக அமைந்துள்ள பீடம், சிவபெருமானுடைய முகம். மடாலயம் உயிர்களால் நினைக்கப் படுகின்ற சிவனுடைய திருமேனி. திருமடத்தில் உள்ள பல உயிர்ப் பொருட்கள், உயிரல் பொருட்கள், சிவனுடைய வியாபகத்துள் அடங்கியுள்ள உயிர்களும், உயிர் அல்லாதனவும் ஆகிய உலகங்கள். குருமூர்த்தியின் ஆட்சி, சிவபெருமான் உயிர்களின் பாசத்தைப் போக்குதற்குச் செய்கின்ற செயல்கள். குருமூர்த்தியினுடைய உள்ளம், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மேலான இருக்கை. குருமூர்த்தி தாம் இருப்பதாகக் கொண்டுள்ள குகை, சிவனுடைய இடமாகிய சிதாகாசம். ஆகவே, குருமூர்த்திக்கு அவர்தம் மாணவர் செய்யும் பதினாறு வகை முகமன்களோடுகூடிய வழிபாட்டுச் செயல்கள். உலகில் சிவபெருமானுக்கு அந்தணர் முதலியோர் அவ்வாறு செய்யும் வழிபாட்டுச் செயல்களே.

குறிப்புரை :

``அகம்`` இரண்டில் முன்னது இடவாகு பெயராய், அதில் உள்ள பொருட்களைக் குறித்தது பரவர்க்கம் - ஏனைப் பொருட்கள். செய் - செயல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஆசு இன்மைக்கு ஏதுவான செயல்` என்க. `தேயம், காட்சி` என்பன பாடம் அல்ல. பரம் + ஆதனம் = பரமாதனம். எண் எண் - எட்டும் எட்டும்; பதினாறு. இஃது எண்ணாகு பெயராய் அத்துணை வழிபாட்டுச் செயல்களைக் குறித்தது எழுவாயாய் நின்று ``கிரியை`` என்னும் பயனிலையைக் கொண்டது. `குகையாகிய ஆதாரம்` என்க. குகையை `ஒடுக்கம்` என்பர்.
`பீடம் முகமாம்; பரவர்க்கம் அகம்; ஆட்சி செயல்; தற்குகை ஆதாரம் சிதம்பரம்; ஆகவே, எண்எண் முகமன் கிரியை` என இயைத்துக் கொள்க. ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிர் எதுகையுமாம்.
இதனால் குருமடமே சிவசொரூபமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும்
சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும்
செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும்
அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.

பொழிப்புரை :

புற ஆரவாரங்களை விடுத்து, அகநோக்குக் கொண்டு நோக்குகின்ற ஞான குரவர்கட்கு, அனைத்திற்கும் அடி நிலையாகிய அந்த அக நோக்கு உணர்வே சிவன் எழுந்தருளி யிருக்கும் ஆசனமாகும். அந்த அகநோக்கு உணர்வு. நிலை திரியாதே மாணாக்கர்பொருட்டு உலகை நோக்குகின்ற அதுவே சிவன் கொள்கின்ற திருவுருவமாகும். அங்ஙனம் நோக்கி மாணாக்கர்க்குச் செய்யும் அருட் செயல்களே அத்திருவுருவத்தில் உள்ள சிவபெருமானாகும்.

குறிப்புரை :

வழிபாடு, `ஆசனம், மூர்த்தி, மூர்த்திமான்` என்னும் மூன்றும் அமையச் செய்யப்படும் ஆகலின் அம்மூன்றும் குரு மூர்த்திகளது அருட்செயலில் அமைதல் காட்டியபடி. `ஞானகுரு தம் மாணாக்கர்க்கு அருள்புரியுமிடடத்துத் தமது நிலையை இவ்வாறு பாவித்து நின்றே புரிதலால், அவர் செயல் அவருக்குச் சிவப் பணியாயும், ஏனையோர்க்குத் திருவருட் செயலாயும் அமைந்து பயன் தருகின்றன` என்பதாம்.
`அகமுமாம் ஆதாரம் பீடம் ஆம்` என்க.
ஆதனம் - ஆசனம். என்றது, இங்கு, உறையும் இடமாகிய உருவத்தைக் குறித்தது. சிவனுக்குச் சத்தியே திருமேனியாதல் அறிக வழிபாட்டிற்கு உரிய வகையில் கட்புலனாகியிருக்கும் நனி நுண்ணுடம்பு சிவன் அவ்வுடம்புகளின் உள்ளிருக்கும் உயிர் ஆதலின், நனி நுண்ணுடம்பையே இங்குக் கூறினார். சத்தி வெளிப்படும்பொழுது சிவமும் உடன் வெளிப்பட்டு நிற்கும் ஆதலின் ``சகமுமாம் சத்தி`` என்றும், ``தெய்வம்`` என்றது, திவ்வியமாகிய செயல்களை.
இதனால், ஞானகுருவினது பாவனை முதிர்ச்சியால் அவர் சிவமாய் நிற்றலின் அவரது மடம் சிவசொரூபமாயிற்று` என்பது விளக்கப்பட்டது.
ஆறு, ஏழாந் தந்திரங்களில் குருவைப் பற்றிக் கூறினா ராயினும் அங்குக் குருமடத்தின் சிறப்புப் பற்றிக் கூற இயைபில் லாமையால், அவற்றின் ஒழிபாக இதனைக் இங்குக் கூறினார். இது முன்னைத் தந்திரத்து இறுதிக்கண் நின்ற `பத்தி யுடைமை` அதிகாரத்தோடு இயைந்து நிற்றலும் காண்க.
சிற்பி