ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை


பண் :

பாடல் எண் : 1

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன்இருந் தானே.

பொழிப்புரை :

உலகத்தில் கண்வழியாகக் காட்சி நிகழுங்கால் அக்காட்சி காணப்படும் பொருள், அதுவும் அதனைக் காணும் கண்ணொளியும் விளங்குதற்கு இன்றியமையாத் துணையாகிய ஒளி, அவ்வொளியால் விளங்கி உருவத்தைக் காண்பதாகிய கண்ணொளி ஆகிய மூன்றன் கூட்டத்திலே நிகழ்வதாகும். ஆயினும் கண்ணால் உருவத்தைக் காண்கின்றவன் அம்மூன்றனையும் ஒருங்கே அறிதல் இயலாது) மற்று காணப்படும் உருவத்தையும், காண்பதாகிய கண்ணொளியையும் விளக்கி நிற்கின்ற அந்த ஒளியை அறிவானாயின் அப்பொழுது ஏனை யிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இனிக் காணப்படும் உருவத்தை அறிவானாயின் அப்பொழுது ஏனையிரண்டும் மறைந்து நிற்கும், இனிக் கண்ணொளியின் இயல்பை அறியின் அப்பொழுது ஏனையிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இம்முறையில் தான் சிவன்தான் ஆன்ம ஒளி மறைந்தவிடத்து அவன் அவ்வான்மாவினோடு உயிர்க்குயிராய் என்று உடனாகியிருத்தல் விளங்கும்.

குறிப்புரை :

`ஆகவே, அவ்வாற்றால் அவனை அறிந்து நிற்றலே அறிவுடைமையாம்` என்பது குறிப்பெச்சம். தத்துவத்துறையில் `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களுக்கிடையே உள்ள உறவு எத்தகைய உறவு, என்னும் ஆராய்ச்சியல் ``அவ்வுறவு த்துவித உறவு`` என்னும் சிவாகநூல் துணிவினை முன்னைத் தந்திரத்தில், `பதி, பசு, பாசம் வேறின்மை` என்னுக. அதிகாரத்தில் ஓராற்றால் விளங்கிய நாயனார், அவ்வுறவு பிரசாத யோகத்தில் நிகழும் ஒளிக் காட்சியில் வைத்து அறியின் இனிது விளங்குதல் பற்றி அதனை இங்கு இவ்வாறு நுண்ணிதாக விளக்கினார். மெய்கண்ட தேவரும்,
``காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்``3

என அருளிச் செய்ய, அதனையே அருணந்தி வேதர்,
``... ... காட்டக் கண்டிடும் தன்மை உடைய கண்ணிற்கு
ஏயும் உயிர் காட்டிக்கண் டிடுமா போல
ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன்``9

எனவும், உமாபதி தேவர்,
``அறிவொளிபோல் பிறிவரும் அத்துவிதமாய்``l எனவும் கூறினர். ``அறிவொளி`` என்றதில் அறிவு, ஆன்ம அறிவு. ஒளி, கண்ணொளி.
முதற்கண் உள்ள `ஒளி`, காட்டும் ஒளி அது விளக்கொளி ஞாயிற்றின் ஒளிகளில் ஒன்றாகலாம். இரண்டாவதாய் உள்ள `ஒளி`, காணும் ஒளியாகிய கண்ணொளி இரண்டாம் அடியில் உள்ள ``ஒளியும்`` என்பது `செய்யும்` என் முற்று. `மறையும்` என்பது அதன் பொருள். அஃது, ``உருவும், ஒளியும்`` என்னும் எழுவாய்கட்கும் பயனிலையாய் நின்றது. ஒளிதல் தன்வினை; ஒளித்தல் பிறவினை. அவை `செய்யும்` என் முற்றாகுமிடத்து முறையே `ஒளியும்` எனவும், `ஒளிக்கும்` எனவும் வரும் ``ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்``8 என்பதில் ``ஒளிக்கும்`` என்பது தன்வினையால் நின்றது இரண்டாம் அடிப்பகுதியை, `உருவகத்தை அறியில் உருவேயாம்` என விரித்துக்கொள்க. `ஏனையிரண்டும் தோன்றா` என்பது கருத்து. மூன்றாம் அடியில் உள்ள ஒளிகள், கண்ணொலியாம். அவ்விடத்து ``உருவம்`` என்றது அதன் இயல்பை. இங்கும் ``ஒளியே`` என்றது, `அவ்வொளியே தோன்றும்; ஏனையவை தோன்றா` என்றதாம். மூன்றடடிகளாலும் உவமையே கூறப்பட்டது. ஈற்றடியில் உள்ள ஒளி, ஆன்ம அறிவு. அஃது உருகுதலாவது, நிலையழிதல் உம்மை, `பாச அறிவேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``உருக`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது. `இருப்பான்` என்னும் எதிர்காலம், விரைவு பற்றி ``இருந்தான்`` என இறந்த காலமாயிற்று. இருத்தல் இருக்கும் அது விளங்குதல் இருத்தலுக்கு `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
உவமையில், `மூன்றில் ஒன்றை யறியுமிடத்து ஏனையவவை மறைந்து விடும்` என ஒரு தொடராற் சுருங்க ஓதாது, மூன்று தொடரால் விரியக் கூறினார். `மூன்று யாவை` என்பதை முன்னர்த் தொகுத்து கூறாமையின் அவை விளங்கா என்பது பற்றி. பொருளில், காட்டுவது சிவனருளும், காண்பது ஆன்ம அறிவும், காணப்படும் பொருள் பதி, பசு, பாசங்களுமாகக் கொள்க. கண் உருவங்களைக் காணும்பொழுது காட்டுவதாகிய ஒளியையும், காண்பதாகிய தன்னையும் மறந்து, உருவங்களை மட்டுமே காண்பதுபோல, ஆன்ம அறிவு பெத்த காலத்தில், அறிவிப்பதாகிய திருவருளையும், அறிவதாகிய தன்னையும் அறியாது அறியப்படுவதாகிய உலகத்தை மட்டுமே அறிந்து வருதலால் அது பொழுது அது தன்னையும், தலைவனையும் அறியாது மயங்கு கின்றது. ஆசிரியர் அருளுரையைக் கேட்டு அதன்வழி நின்று அதுதான் அறியும் முறைமையை உற்றுணருமாயின் மயக்கம் நீங்கி மெய் யுணர்வைப் பெறும்` என்பதும் `மெய்யுணர்வாவது முப்பொருளும் பிரித்தறியுமாறு வேறு வேறு நில்லாது அத்துவிதமாய் இருத்தலின். அந்நிலையை அறிதல் ஆசிரியரது அருளாலன்றிக் கூடாது` என்பதும் கூறியவாறு. இம்மந்திரம் சொற்பின்வரு நிலையணி பெற்றது,
இதனால் `உலகில் காட்டுவதும், காண்பதும், காணப்படுவதும் ஆகிய மூவகை ஒலிகளின் முறைமையில் வைத்து பிரணவ யோகத்தில் வெளிப்படும் ஒளிகளின் இயல்பு உணரற்பாலன` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

புகல்எளி தாகும் புவனங்கள் எட்டும்
அகல்ஒளி தாய்இருள் ஆசற வீசும்
பகல்ஒளி செய்ததும் அத்தா மரையில்
இகல்ஒளி செய்தெம் பிரான் இருந்தானே.

பொழிப்புரை :

நிவிர்த்தி கலையில் `நூற்றியெட்டு` என்றும், பிரதிட்டா கலையில் `குய்யாட்டகம், அதிகுய்யாட்டகம், குய்யதராட்டகம்` என்று இன்ன பலவாகவும் எட்டு எட்டாகச் சொல்லப்படுகின்ற, சகல வருக்கத்தினராலும் எளிதில் அடையப்படும் புவனங்களிலும் ஞான ஒளியைப் பரப்பி அறியாமையாகிய இருளைப் போக்குகின்ற சிவனாகிய ஞாயிறு வெளிப்பட்டு விளங்குவதும் உள்ளதுமாகிய தாமரையிலேயாம். அத்தாமரையில் அந்த ஞாயிறாகிய சிவன் ஒன்றோடு ஒன்று மாறுபட்ட இரு நிற ஒளியுடையனாய் விளங்குகின்றான்.

குறிப்புரை :

`அதனை அறிவுடையார் உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். மாறுபட்ட இருநிற ஒளிகளாவன சிவப்பும், நீலமும். இவை முறையே சிவமும், சத்தியும் ஆகும். நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் உள்ள புவனங்கள் எட்டு எட்டாகச் சொல்லப்படுதலைச் சிவாகமங்களிலும் சிவஞான போத மாபாடியம் முதலியவற்றிலும் காண்க. அவை சகல வருக்கத்தினர்க்கு இடமாதல் பற்றி, `புகல் எளிதாகும்` என்றார். திருவருள் அண்டத்திலும் ஞானிகட்கு விளங்குதல் பற்றி ``அகல் ஒளி செய்து இருள் ஆசற வீசும் பகல்`` என்றார். அகல் ஒளி - விரிந்த ஒளி. தாய் - தாவ; பாவ. ஆகமலம் இருள் மலம் ஆணவம். வீசுதல் - அகற்றுதல். பகல் - பகலவன் `இருள் மலம் அகற்றும் பகலவன்` என்றதனால் அது சிவனாகி ஞாயிறாயிற்று. ஒளி செய்தல் ஒளியைத் தருதல். ``செய்ததும்`` என்னும் உம்மை இருத்தலாகிய எதிர் வருவதனைத் தழுவிற்று `சிவ ஒளி அண்டம், பிண்டம் இரண்டிலும் விளங்கி அறியாமையாகிய இருளைப் போக்கும் என்றபடி.
இதனால், மேற்கூறிய ஒளிகளில் ஆன்ம அறிவிற்குக் காட்டாகி நிற்கும் சிவ ஒளியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

விளங்கொளி அங்கி விரிகதிர் சோமன்
துளங்கொளி பெற்றன சோதி அருள
வளங்கொளி பெற்றது பேரொளி வேறு
களங்கொளி செய்து கலந்துநின் றானே.

பொழிப்புரை :

[முன் மந்திர்ததிற் கூறியவாறு, `சிவனே அண்டத்திலும், பிண்டத்திலும் ஒளியைத் தருகின்றான்` என்றால், `இங்குக் கண்கூடாகக் காணப்படும் - தீ ஞாயிறு, திங்கள் - என்பவை ஒளியைத் தருகின்றன` எனக் கருதுதல் பிழையோ எனில், அன்று; மற்று.]
ஆங்காங்கு அவ்வப்பொழுது காலவரையறை ஏதும் இன்றி வெளிப்பட்டு மறைகின்ற தீயும், சில கால வரையறைகளின்படி தோன்றி நின்று ஒளியைத் தந்துவிட்டு மறைகின்ற ஞாயிறும், திங்களும் ஆகிய அவையும் அவ்வாற்றால் ஏற்ற பெற்றியால் ஒளியைத் தந்து விளங்குதலு, ஒளியைத் தாராது மறைந்து போதலும் ஆகிய நிலைமையை உடையனவாகச் சிவன் அருள் செய்தனாலேயே அவை ஒரளவில் உலகிற்கு ஏற்ற பெற்றியால் ஒளியைத் தரும் செயற்கைச் சிற்றொளிப் பொருள்களாய் உள்ளன. என்றும் வற்றா வளம் கொண்டவனாகிய சிவன் கொண்டுள்ள ஒளியே முற்றும் நீக்க மாட்டாது சிறிது சிறிது நீக்குகின்ற அந்தச் சிற்றொளிப் பொருள்களை உலகிற்குப் படைத்துத் தந்து தான் அவற்றோடு இரண்டறக் கலந்து அவற்றை நிலைபெறுத்தியும் நிற்கின்றான்.

குறிப்புரை :

துளங்குதல் - அலைதல்; நிலையில்லாது நீங்கியும், தோன்றியும் வருதல். `அங்கி, கதிர், சோமன் ஆகியவை துளங்கு ஒளியையே பெற்றன; சொதி அருளப் பெற்றன` என்க. வளம் கொளி - வளத்தைக் கொண்டிருப்பவன்; இயற்கையாகவே கொண்டிருப் பவன். `பெற்றது` என்றதும், `இயற்கையில் பெற்றிருப்பது` என்றதேயாம். பேரொளி - கால வரையறையும், இட வரையறையும் இல்லாத ஒளி - இஃது, `அளவில் பேரொளி` எனப்படும் `களங்கம்` என்பது ஈற்று அம்முக் குறைந்து நின்றது களங்கமாவது இருள். அதனை அறவே நீக்காது அதனுடன் இருக்கின்ற ஒளிகள் களங்கொளிகளாம். வேறு களங்கொளி - களங்கம் இல்லாத தனது பேரொளிக்கு வேறான களங்க ஒளி. செய்தல் படைத்தல். கலந்து நிற்றல் அவற்றை நிலைபெறுத்தற் பொருட்டு ஆதலின் அது வருவித் துரைக்கப்பட்டது. ``செய்து நின்றான்`` என்னும் பயனிலைக்கு, `அவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `உலகில் காணப்படும் முச்சுடர்களாகிய ஒளிகளும், சிவனது திருவருட் பேரொளி தந்த ஒளிகளே; சுதந்திர ஒளிகள் அல்ல; அவை அளவில்லனவும் அல்ல` என்பது கூறப்பட்டது. இவ் வுண்மையை விளக்குவதே உமை சிவனது கண்களைப் பொத்திய போது, உலகம் ஒளியையிழந்து இருளடைந்ததைக் கூறும் வரலாறு.

பண் :

பாடல் எண் : 4

இளங்கொளி ஈசன் பிறப்பொன்றும் இல்லி
துளங்கொளி ஞாயிறும் திங்களும் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காயம் ஆமே.

பொழிப்புரை :

சிவன் என்றும், எவ்விடத்தும் பிறத்தலை இல்லாதவன் ஆதலால், அவனே இயற்கையாய் விளங்கம் ஒளி. அவனொழிந்த பிற பொருள்கள் எல்லாம் தோற்றம் உடையனவே யாதலால் அவற்றுள் சிலவாகிய முச்சுடர்களும் அவன் ஆக்கிய செயற்கை ஒளிகளே. முச்சுடர்களுள் ஞாயிறும், திங்களும் அவனது வல இடக் கண்களாகவும், தீ பிறருக்கில்லாத மூன்றாவதான நெற்றிக் கண்ணாகவும் உயர்ந்தோரால் சொல்லப்படுகின்றன. இனி அவனது திருமேனியே ஒளிமயமாகலின், ஒளியுடன் விளங்குகின்ற ஆகாயம் அவனது திருமேனியாகச் சொல்லப்படுகின்றது.

குறிப்புரை :

`இலங்கு` என்பது எதுகை நோக்கி ``இளங்கு`` எனத் திரிந்தது. இயற்கையாகவே இலங்குகின்ற ஒளி என்க. இதனை முதல் அடியின் ஈற்றிற் கூட்டி. அதற்கு முன் `ஆதலால்` என்பது வருவித் துரைக்க. ஏனையோரெல்லாம் பிறந்திறந்தமை பலவிடத்தும் கேட்கப் படுகின்றது. துளங்குதல், செயற்கையை உணர்த்திற்று. `மற்றை நெற்றிக்கண்` என மாற்றியுரைக்க. இதனை வேறு வைத்துக் கூறினமையால், இஃது ஏனையோர்க்கு இல்லாமை விளங்கிற்று. முச்சுடர்களும் இறைவனது உறுப்பாதலைக் கூறுகின்றவர், அவற்றிற்கு இடமாகிய ஆகாயம் அவனது உடம்பாதலையும் உடன் கூறினார்.
``ஆகாய வண்ணம் உடையாய் போற்றி``9
என அப்பர் அருளிச் செய்தார். ``ஆகாச சரீரம் பிரம்ம`` எனத் தைத்திரீய உபநிடதம் கூறிற்று. மற்றை உபநிடதங்களிலும் இவ்வாறு கூறப் படுகின்றது. முன் மந்திரத்தில் இயற்கையிற் பெற்றுள்ளதைக் குறித்த ``வளங்கொளி`` என்பது இம்மந்திரத்தில் சிவனிடமிருந்து பெற்றதைக் குறித்தது. காயம் - ஆகாயம் - `காயம் மெய் ஆம்` என இயைக்க.
இதனால், `சுதந்திரமான ஒளியையுடையவன் சிவன் ஒருவனே` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மேலொளிக் கீழதின் மேவிய மாருதம்
பார்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும் பொன்றினும்
ஓர் ஒளி ஐந்தும் ஒருங்கொளி யாமே.

பொழிப்புரை :

எல்லா ஒளிகளினும் மேலான ஒளியாகிய திருவருள் ஒளியின்கீழ் அதினின்றும் தோன்றியனவை, விரிந்து பரந்த ஒளியை யுடைய ஆகாயம், காற்று, ஒளிப்பொருளாகிய தீ, நீர், நிலம் ஆகியவை. இவை ஐந்தும் உயிர்கட்கு அறிவைத் தந்து, ஆகாயம் ஒன்றிற்குள்ளே ஏனை நான்கும் அடங்கியிருப்பினும், இவை ஐந்தும் ஒடுங்கும் இடம் திருவருள் ஒளிதான்.

குறிப்புரை :

மேவிய - மேவின. செய்யுள் நோக்கிப் பூதங்கள் முறை பிறழ வைக்கப்பட்டன. செவ்வெண்ணாகச் சொல்லப்பட்ட இவற்றின் இறுதியில் `ஐந்தும்` என்னும் தொகை வருவித்து, ``மேவிய`` என்பதற்கு முடிபாக்கிப் பின், `ஐந்தும் ஒளி செய்து விசும்பின் ஒன்றினும் ஒருங்கு ஒளி ஓரொளியாம் என இயைத்து முடிக்க. முதலடி இன எதுகை. `பரந்த` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ஐம்பூதங்களும் தூல சரீரமாகி, ஒளி செய்வனவாகக் (அறிவைத் தருவனவாக) கூறினார். ஒருங்குதல் - ஒருசேர அடைதல். `ஒடுங்கொளி` என்றே பாடம் ஓதுதலுமாம். `மாயா காரியங்கள் ஆன்மாவிற்கு விளக்காய் அமையினும் அவை திருவருளால் விளக்கம் பெருவனவே, என்பது கூறியவாறு.
இதனாலும் `அனைத்து ஒளிகட்கும் மூல ஒளி அருள் ஒளியே` என்பது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மின்னியல் தூவொளி மேதக்க செவ்வொளி
பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி
துன்னிய ஆறொளி தூய்மொழி நாடொறும்
உன்னிய ஆறொளி ஒத்தது தானே.

பொழிப்புரை :

[`ஒளி` என்பதனை `மின்னியல்` ஞானம் என்பவற்றோடும் கூட்டுக.]
சிவனது சத்தி, பரை, ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி என முன்னர் ஆறாகி நின்று அருள்புரிவனவாம். (ஈசானி முதலிய ஐந்துமே ``ஈசானம்`` முதலிய பஞ்சப் பிரம மந்திரங்களாம்) அந்த ஆறின் வடிவாகவே நாள்தோறும் பிரணவத்துடன் கூட்டிச் சிகாரம் முதலாக வைத்து எண்ணப்படும் திருவைந்தெழுத்துக் கொள்ளப்படும்.

குறிப்புரை :

`அதனை உணர்ந்து அம்மந்திரத்தைக் கணிக்கவே சிவஞானம் உளதாம்` என்பது கருத்து.
பராசத்தி ஏனைச் சத்திகளாய் வெளிப்படுதலல்லது நேரே வெளிப்படாமையின் அதனை ``மின்னியல் ஒளி`` என்றும், ``ஈசாளி பளிங்குபோன்றது, என்பதனால் அதனை, ``தூவொளி`` என்றும், பூரணி கன்ம சாதாக்கியமாய் நின்று எல்லாவற்றையும் செவ்வனே ஏற்றல் பற்றியும் அதனை, மேதக்க செவ்வொளி`` என்றும், ஆர்த்தி பற்றியும் அதனை, மேதக்க செவ்வொளி`` என்றும் ஆர்த்தி அஞ்ஞானத்தை அழித்தல் பற்றி அதனை`` ``பள்ளிய ஞானம்`` என்றும், (பன்னிய - வேதாகமங்கள் சொல்லிய) வாமை உலகுயிர்கள் அனைத்தையும் வினைவழி நடத்துதலின் ``பரந்த பரவொளி`` என்றும், (``பரத்து`` என்பதில் அத்து வேண்டாவழிச் சாரியை) மூர்த்தி உயிர்களைப் பலபேதப்படத் தோற்றுவிக்குமாற்றால் சிவனை அடைய வழிவகுத்தல் பற்றி அதனை, ``துன்னிய ஆறொளி`` என்றும், (ஆறு - வழி நகரம் இரட்டியாமை செய்யுள் விகாரம்.) என்றும் கூறினார். இவ்வாறு நுண்பொருள்களை மறை பொருட் கூற்றுக்களால் உய்த்துணரக் கூறுதல் நாயனாரது நெறி என்பது பலவிடத்தும் நன்கறியப்பட்டது. ``துன்னிய ஆறொளி`` என்பதன்பின் ``இந்த ஆறு ஒளியும்`` என்பது வருவித்து. ``நாடொறும் உன்னிய ஆறு ஒளி ஒத்தது`` என முடிக்க. ``ஒத்தது`` என்பது பன்மை யொருமை மயக்கம். தான், ஏ அசைகள்) தூமொழி - தூய்மையைத் தரும் மொழி, திருவைந்தெழுத்து.
இனித் திருவைந்தெழுத்திற்கு ஈடாகப் பிரணவ கலைகளாகிய `அ, உ, ம், விந்து, நாதம்` என்பவற்றைக் கொள்ளுதல் பொது நெறியாம்.
இதனால், மூல மந்திரம் சிவசத்தி வடிவாய் நின்று ஒளியை (ஞானத்தை)த் தருதல் கூறும் முகத்தால் திருவருள் பேரொளியாமாறு விளக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும்எப் போதும்
உளங்கொளி ஊனிடை நின்றுயிர்க் கின்ற
வளங்கொளி எங்கும் மருவிநின் றானே.

பொழிப்புரை :

சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் மிக விளங்கு கின்ற ஒளியாய் இருப்பினும் தன்னை நினைக்கின்றவனது உள்ளத்தில் மட்டுமே விளங்கி நின்று, உடலிலும் உயிர்ப்பாய் இயங்குகின்ற வண்மையுடையவனாயும், மற்றை எல்லாப் பொருள்களிலும் மேகத்தில் ஒரே ஒரு காலத்தில் மட்டுமே சிறிது விளங்கி விரைவில் மறையும் மின்னல்போல மறைந்துள்ளவனாயும் இருக்கின்றான். ஆகையால் அவனை ஈங்கள் இடைவிடாது துதியுங்கள்.

குறிப்புரை :

`துதித்தால் உங்கள் உள்ளத்தில் விளங்கி, உடலில் உயிப்பாயும் இயங்குவான்` என்பது குறிப்பெச்சம். `துலங்கொளி` என்பது எதுகை நோக்கி, ``துளங்கொளி`` எனத் திரிந்து நின்றது. `ஈசன், உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற வளங்கொளியாய், எங்கும் விளங்கொளி மின்னொளியாகிக் கரந்து மருவி நின்றான். (அவனை) எப்போதும் சொல்லும் என இயைத்து முடிக்க. முதல் அடியில் உள்ள ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``உளம் கொளி`` என்பது, சாதியொருமை.
இதனால், பேரொளியாகிய சிவன் தன்னை நினைப்பவரது நெஞ்சில் மட்டுமே விளங்கி நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

விளங்கொளி அவ்வொளி அவ்விருள் மன்னும்
துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி யார்அமு தாரநஞ் சாரும்
களங்கொளி ஈசன் கருதது மாமே.

பொழிப்புரை :

சிவன் எல்லா ஒளிகளிலும் மேலாய் விளங்குகின்ற தனது ஒளியை, எல்லா இருளிலும் மேலானதாய் மிக மறைக்கின்ற ஆணவ இருளின் வலிகெடுதற்கு ஏதுவான ஒளியாக உடையவன். அவ்வொளியை அவன் எவ்வுயிரிடத்தும் மறைத்தல் இல்லை. ஏனெனில், விளங்கும் ஒளியுடம்பினராகிய தேவர்கள் அமுதம் உண்டற்பொருட்டு நஞ்சம் நிறைந்த கண்டத்தையுடைய அவனது திருவுள்ளம் அத்தகையது.

குறிப்புரை :

``ஈசன்`` என்பதே முதலிற் கொள்க. ``விளங்கொளி யாகிய அவ்வொளியைத் துளங்கொளியாக உடையான்` என்க. அவ்விருள் - ஒளிகளின் மேலான ஒளிபோல, இருள்களின் மேலான அந்த இருள். அஃது ஆணவ மலம்.
``ஒரு பொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்;
இருபொருளும் காட்டாது இது``9
என ஆணவ இருளின் கொடுமை மிகுதி கூறப்படுதல் காண்க. துளங்குதல் - பெரிதும் மெலிதல். ஆணவம் அநாதியாதலின் அழியாது சத்தி மெலிந்தே நிற்பதாதல் பற்றி, `துளங்குதல்` என்றார். அலங்குதல், `அளங்குதல்` என மருவி வந்தது. தொழுவார்க்கும் என்ற உம்மையால், `தொழாதார்க்கும்` என்பது கொள்ளப்பட்டது. ஒளியான் - கரவான். அது - அத்தன்மையது. அஃதாவது உயிர்கள் ஒளியைப் பெறத் தான் இருளைத் தாக்கி அடக்கும் தன்மை.
``சிற்றுயிர்க் கிரங்கிக் - காய்சின ஆலம் உண்டாய்
அமுதுண்ண``3
``விண்ணாள்வார் அமுதுண்ண மிக்கபெரு
விடம் உண்ட
கண்ணாளா``
என்பனபோலும் திருமொழிகளைக் காண்க.
இதனால், பிற ஒளிகளால் நீங்காத கொடிய திணியிருளை நீக்குகின்ற செவ்விய நுண்ணொளியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

இலங்கிய தெவ்வொளி அவ்வொளி ஈசன்
துளங்கொளி போல்வது தூங்கருட் சத்தி
விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி
உளங்கொளி யுள்ளே ஒருங்குகின் றானே.

பொழிப்புரை :

பிறிதொரு பொருள் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளி எந்த ஒளியோ அந்த `ஒளியே சிவன்` எனப்படும் பொருள். (எனவே, விளக்கினால் விளக்கும் ஒளி எந்த ஒளியே சீவன்` எனப்படும் பொருள் என்பது தானே விளங்கிற்று.) இனி, ஞாயிறு, பிறரால் காணப்படுதற்கு ஏதுவாய் அதனினின்றும் வியாபிக்கின்ற அதன் கதிர்போன்றது சிவனது சத்தி. ஆக, விளக்கம் உடைய ஒளிகள் மூன்றாகும். அவற்றுள் பேரொளியாகிய சிவன் தன்னை நினைக்கின்ற உயிரினது நெஞ்சத்தில் வெளிப்பட்டு அதனது ஒளியைத் தனது ஒளிக்குள் அடக்கி விளங்குவான்.

குறிப்புரை :

``இலங்கியது`` என்றது, `தானே இலங்கியது` என்றபடி. தூங்குதல், நீக்கமின்றியிருத்தல். இதனுள் இன வெதுகை வந்தது.
இதனால், சிவ ஒளி சீவ ஒளிக்கு உதவும் ஒளியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

உளங்கொளி யாவதென்? உள்நின்ற சீவன்
வளங்கொளி யாய்நின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
அளங்கொளி ஆயத்து ளாகிநின் றானே.

பொழிப்புரை :

பிறிதோர் ஒளியைத் தன்னுட் கொண்டிருக்கும் ஒளியாவது எந்த ஒளி? உடலினுள்ளே ஒளியாய் நிற்கும் சீவ ஒளியாம் அந்த ஒளிக்குள் ஒளியாகி நிற்கும் வன்மையை உடைய பெரிய மாணிக்க ஒளியாகிய சிவனஅ, தன்னைக் காணும் பக்குவம் எய்தினார் கண்முன் முதற்கண் திடீரென விளங்குகின்ற மின்னல் ஒளிபோல மின்னிப் பின்பு பரவெளியிலே ஒன்றி அதுவாகி, பேரொளியைப் பெற்ற திருக்கூட்டத்துள் நீங்காது நிற்பான்.

குறிப்புரை :

``உளம் கொளி`` என்பதில் கொள்வதும், கொள்ளப்படுவதும் ஒளிகளாதல் அதிகாரத்தால் பெறப்பட்டது. அதனால் ``மாமணிச் சோதி`` என்பதும் ``விளங்கொளியாய் மின்னி`` என்பதும் பொருந்துவவாயின. வளம், ஒளிக்கு ஒளியாய் நிற்கும் செழுமை. இங்கும் அலங்கொளி அளங்கொளியாயிற்று.
இதனால், சிவ ஒளி பக்குவம் எய்தினார்க்கு வெளிப்பட்டு விளங்கிப்பின் மறையாது நிற்றல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

விளங்கொளி யான விகிர்தன் இருந்த
துளங்கொளிப் பாசத்துள் தூங்கிருள் சேரா
கலங்கொளி நட்டமே கண்ணுதல் ஆடி
உளங்கொளி உன்மனத் தோன்றிநின் றானே.

பொழிப்புரை :

தானே விளங்கும் ஒளியாகிய சிவன் விளங்கி நின்ற மெலியப்பெற்ற சீவ ஒளியின் உடல் பொறி காரணங்களில் முன்பு சேர்ந்திருந்த ஆணவ இருள் சேரமாட்டாது ஒதுங்கியிருக்கும். அவ்வாறு அந்த இருள் மெலிதற்குரிய அதிசூக்கும நடனத்தைச் செய்து கொண்டு தன்னை நினைக்கின்ற உயிரின் நுண்ணுடம்பில் முடிநிலைத் தானமாகிய உன்மனாந்தத்திலே இருப்பான்.

குறிப்புரை :

விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன். ``பாசம்`` என்றது இங்கு மாயேயத்தை, அதனானே அதனைப் பற்றுக் கோடாகக் கொள்ளும் வினையும் பெறப் பட்டது. `இருள் கலங்கு நட்டம்` என மாற்றியுரைக்க. அது ஞான நடனம். உன்மனை பற்றிக் `கலைநிலையில்` காண்க.l உயிரை ஆணவம் பற்றியுள்ள பொழுதே அதனை `மாயை, மாயேயம், வினை` என்பவற்றையும் இருள் பற்றி உயிரை ஆணவம் பற்றாது நீங்கிய பொழுது அதன் மாயை முதலியவற்றையும் ஆணவம் பற்றாது; அதற்குக் காரணம் திருவருள் விளக்கமே என்பதை,
``மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
மருள்எனில் இருளாய் நிற்கும்,
மாயைமா யேயம் மாயா
வரும்இரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும்
அருள்எனில் ஒளியாய் நிற்கும்``* என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறிக. மூன்றாம் அடி இன எதுகை. `சேராது` என்பது ஈறு குறைந்து நின்றது. `உன் மனாந்தத்து` என்பது `உன் மனத்து` என இடைக் குறைந்து நின்றது.
இதனால் சிவ ஒளியால் சீவ ஒளி உடம்பொடு நலம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

போது கருங்குழல் போல்நவர் தூதிடை
ஆதி பரத்தை அமரர் பிரானொடும்
சோதியும் அண்டத்தப் பால் உற்ற தூவொளி
நீதியின் அல்லிருள் நீக்கிய வாறே.

பொழிப்புரை :

ஆன்மாக்கள் சிவனுக்குத் தலைவனுக்குப் புதுமணம் செய்துகொண்ட மனைவியர் போன்றவர்கள். சிவனோ, புதுமணம் செய்து கொள்ளப்பட்ட மனைவியர் எளிதில் செல் லொணாத காவற் கட்டடத்தில் உள்ள தலைவன்போல் உள்ளான். இவர் இருதிறத் தாரிடையே தூதாகின்றவள் தலைவனுக்குக் காதற் பரத்தைபோன்ற ஆதி சத்தி. (திரோதான சத்தி) அவளது தூதின் பயனாகச் சிவன் இரங்கி வந்து ஆன்மாக்களது திணிந்த இருளை நீக்கியது வியப்பு.

குறிப்புரை :

போது - பேரரும்பு. `அதனை அணிந்த கருங்குழல்` என்றது, அக்குழலையுடைய புதுமண மனைவியை போல்நவர் - அவளோ டொத்த புதியர். பந்தத்தில் பழையவராயினும் வீட்டிற்குப் புதியரே. உவமையில் பன்மையில் ஒருமை மயங்கிற்று. அருட் சத்தியும், திரோதான சத்தியும் வேறு வேறல்லவாயினும் திரோப வித்தல் சிவனுக்குக் கருத்தன்றாகலின், அதனைச் செய்கின்ற செயல் பற்றித் தனது அறத்திற்கு ஒத்த அருட்சத்தியாகிய தேவியின் வேறான, தனது அறத்திற்கு ஒவ்வாத பரத்தையாக உருவகம் செய்தார். `பரத்தை` என்பது சொல் நயத்தால் பிறிது பொருள் தந்ததாயினும், அது, தொழு பவனை `தொழுத்தை` என்பது போல, `பரத்தின்பால் உள்ளவள்` என்றே பொருள் தரும். சிவனையடைந்து இன்புறுதற்கு உரியவாதல் பற்றித் தலைவனை அடைந்து இன்புறுதற்குரிய சீவான்மாக்கள் பெண்டிரோடு ஒப்பிக்கப்படுதலை,
``இருவர் மடந்தையருக்கு என்னபயன் உண்டு? உண்டாம்,
ஒருவன் ஒருத்தி யுறின்``8
என்பதிலும் காண்க. `இஃது உவமை மாத்திரையேயன்றிப் பொருளன்று` என்பது உணராதார். `உயிர்கள் எல்லாம் பெண்டிர்` எனவும் `இறைவன் ஒருவனே ஆடவன்` எனவும் கூறி மகிழ்வர். அவர், ஆடவர், பெண்டிர்` என்னும் வேற்றுமை மாயாகாரியப் பொருளான உடம்பின் கண்ணதன்றி அறிவேயான நுண் பொருளிடத்து எங்ஙனம் விளங்கக் கண்டனரோ!.
எண் ஒடு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் சென்று இயையுமாயின் இங்கு `ஒடு` `போல்நவர்` என்பதனோடும் சென்றியைந்தது. உம்மை அசை. `போது கருங்குழல்போல் நவரோடும், அமரர் பிரானோடும் இடை தூது ஆதி பரத்தை, எனக் கூட்டுக.
இதனால், அனைத்தையும் கடந்து நிற்கும் பேரொளியாகிய சிவன், அனைத்துப் பொருளிலும் கலந்து நின்று இயக்கும் சிற்றொளியாகிய திரோதான சத்தயுடன் நின்று ஆன்மாக்களது ஆணவ இருளை நீக்குதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

`உண்டில்லை` என்னும் உலகத் தியல்பிது
பண்டில்லை என்னும் பரங்கதி உண்டுகொல்
கண்டில்லை மானுடர் கண்ட கருத்துறின்
விண்டில்லை உள்ளே விளக்கொளி யாமே.

பொழிப்புரை :

உலகம், சிலர் சிலவற்றை `உண்டு` எனக் கூறினால், உடனே அவற்றை `இல்லை` என மறுத்துக் கூறும் இஃது உலகத்தின் இயல்பு ஆதலை எளிதில் காணுதல் கூடும். காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு, எளிதில் அகப்படுகின்ற பொருள் பற்றியே இவ்வா றாதலின், `காலம், இடம் இவற்றைக் கடந்த, `முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள் உண்டு`8 என அறிந்தோர் கூறுவதை, உலகம் `இல்லை` எனக் கூறிப் பிணங்குகின்றது இவ்வுலகத்திற்கு `மேற்கதி` என்பது உண்டாகுமோ! உண்டாகாது. அந்த முன்னைப் பழம்பொருளை மக்கள் கண்டதில்லை. ஒரு சிலர் கண்டனரேனும், அவர் `அதன் இயல்பு இது` என விளக்கிச் சொல்லியதில்லை. `மற்று அதன் இயல்புதான் யாது` எனின், புறக்காட்சியை விடுத்து அறிவிற்குள்ளே ஒற்றித்துக்காணும் அகக்காட்சியில் விளங்குகின்ற ஓர் அதிசய விளக்கொளியாகும் அது.

குறிப்புரை :

`பண்டு` என்பது இடைச் சொல்லாயினும் பெயர்த் தன்மைப் பட்டு ஆகுபெயராய்ப் பண்டையதைக் குறித்தது. `கண்டது, விண்டது` என அவ்வத்தொழில் மேல் நிற்கும் வினைப் பெயர்களில் அகரச் சாரியையும், துவ்விகுதியும் தொகுத்தலாயின. `கண்டவர் விண்டில, விண்டவர் கண்டிலர்` என்பது ஒரு பழமொழி. விள்ளுதல் - விளக்கிச் சொல்லுதல். `உண்மை மாத்திரையாற் சுட்டப்படுமே யன்றி, இலக்கண வகையால் விளக்கிச் சொல்லுதல் இயலாது, அநுபவித்து அறியத் தக்கது` என்பதாம். இதனை,
``மகட்குத் தாய் தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லெனின் சொல்லுமா றெங்கனே``
எனப் பின்னர் நாயனாரும்,
``இங்ஙனம் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்;
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``9
எனவும்,
``அன்றுமுதல் ஆரேனும் ஆளாய், உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன்!
அவ்வா றிருந்த தது``l எனவும்,
``மருவி இருவரும் புணர வந்த இன்பம்
வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்``3
எனவும் பின்னை ஆசிரியன்மாரும் கூறுமாற்றால் உணர்க. இங்ஙன மாதலின், `முன்னைப் பழம்பொருள்` என்பது சூனியம் போலும் என மலையாமைப் பொருட்டு, ``உள்ளே விளக்கொளியாமே`` என்றார்.
இதனால் `சிவ ஒளி பேரொளியாதலுடன் உள்ளொளி நுண்ணொளி` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

சுடருற ஓங்கிய துள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசி
உடலுறு ஞானத் துறவிய னாமே.

பொழிப்புரை :

உலகத்தில், விளக்கு முதலாய் நிற்க, அதினின்றும் வியாபிக்கின்ற ஒளி இருந்தும் இல்லையாய்ப் போகும்படி தோன்றி விளங்குகின்ற ஞாயிறு போன்றவன் சிவன். ஆகவே, உடல், பொறி, உலகு நுகர் பொருள்களாய்ப் பல்வேறு வகைப்பட்டு நெருங்கி யிருக்கின்ற மாயா கருவிகள் செய்யும் மயக்கத்தை அடக்கி, அதற்கு மாறான ஞானத்தினால் உயிர்களோடு உறவுகொள்பவன் அவன்.

குறிப்புரை :

`அஃதறிந்து, கருவி ஞானத்தை நீக்கி, அவனது ஞானத்தை நாடிப்பெறுக`` என்பது குறிப்பெச்சம். ``ஆங்கு`` என்றது, `அங்து நின்றும்` என்றபடி. படர்தல், இங்கு நீங்குதல். படர் உறு காட்சிப் பகலவன் படர்தற்கு ஏதுவாய் உறுகின்ற காட்சியையுடைய பகலவன். ``மாயை`` என்றது, மாயையின் காரியத்தை. இன், சாரியை மயக்கத்தை ``இருள்`` என்றார். மயக்கத்திற்கு ஏது அதுவாகலின். வீசுதல் - போக்குதல். உடலுல் - மாறுபடுதல். ``உறவியன்`` என்பதில் அன் ஆடூவை அறிவித்தற்கு வந்த விகுதிமேல் விகுதி.
இதனால், `மேற்கூறிய அக விளக்கைக் காணுதல் அதன் ஒளியாலல்லது, பிற ஒளிகளால் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன்
அளிபவ ளச்செம்பொன் ஆதிப்பிரானும்
களிபவ ளத்தினன் காரிருள் நீக்கி
ஒளிபவ ளத்தென்னோ(டு) ஈசன்நின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் தனது திருமேனி பவளமும், செம்பொன்னும் போல்வதற்கு ஏற்ப அருமையாலும் அன்பினால் பிறர்க்கு அளிக்கப்படுகின்ற பவளமும், பொன்னும் போல்பவன் அவன், உலகிற்கு மகிழ்ச்சியைத் தருகின்ற பகலவன், உலகத்துத் திணிந்த இருளைப் போக்குதல் போல எனது உள்ளத்தில் திணிந்த இருளைப் போக்கி, `என் அறிவினுள்ளே இருக்கும் பவளம்` என்று சொல்லும்படி என்னும் இருக்கின்றான்.

குறிப்புரை :

``ஆதிப்பிரானும்`` என்பதை முதலிற் கொள்க. உம்மை சிறப்பு. ஆதிப்பிரானும்`` என்பதுடன் முதல் அடியும் கூடிய தொடர் `சிவபெருமான்` என்னும் பொருட்டாய் நின்றது. `வெண்ணீற்றில் ஒளிந்த - மறைந்த பவளத் திருமேனியன்` என்க. ``பவளச் செம் பொன்`` என்னும் உம்மைத் தொகை ஒரு சொல் நீர்மைப்பட்டு நிற்க, அதனோடு ``அளி`` என்பது வினைத்தொகை நிலைப்படத் தொக்கது. அளி - அளிக்கப்படுகின்ற. அன்பினால் ஒருவர் பிறர்க்கு அளிக்கும் பரிசுப் பொருள்களில் பவளமும், பொன்னும் சில அரும்பொருள் களாம். அவ்அருமை பற்றியே அவை இங்குச் சிவபெருமானுக்கு உவமையாகச் சொல்லப்பட்டன.
``வைப்பர் - பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து``* என்பதிலும் பொன் பொதிந்து வைத்துப் போற்றப்படும் அருமை பற்றியே பொறுத்தார்க்கு உவமையாகக் கூறப்பட்டது. இன்னும் ``முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் - பொன்னே போற் போற்றுவம்``* என்பதிலும் பொன் அருமை பற்றியே உவமை யாயிற்று. ``பவளத்தையும் பொன்னையும்போலச் சிவபெருமான் உள்ளத்துப் பொதிந்து வைத்தப் போற்றுதற்குரியவன்` என்பது, ``அளி பவளச் செம்பொன்`` என்பதனால் குறிக்கப்பட்டது. ``பவளச் செம்பொன்`` என்னும் உம்மைத் தொகை உவம ஆகுபெயர் இனன் - பகலவன் பவளத்து இனன் - பவளம் போலும் நிறத்தையுடைய இனன். களி இனன் - உலகம் களிப்புறுதற்கு ஏதுவாகிய இனன். திணிந்த இருள்` என்றற்குக் ``காரிருள்`` என்றார். `இனன்போல` எனவும் `பவளத்தைப் போல` எனவும் உவம உருபு விரிக்க. ஒளி பவளம் உள்ளத்தில் மறைந்து நிற்கும் பவளம். ``ஈசன்`` என்பது `அவன்` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. அதனை மூன்றாம் அடியின் முதலிற் கூட்டுக.
இதனால், சிவன் உயிர்களின் உள்ளொளியாய் நின்று உளளிருளை நீக்கும் அருமை அறியற்பாலதாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

 ஈசன்நின் றான்இமை யோர்கள்நின் றார்நின்ற
தேசம்ஒன் றின்றித் திகைத்தழைக் கின்றனர்
பாசம்ஒன் றாகப் பழவினைப் பற்றுற
வாசம்ஒன் றாமலர் போன்றது தானே.

பொழிப்புரை :

உள்ளத்துள்ளே உள்ளொளியாகிய சிவனும் இருக்கின்றான். கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருக்கின்ற தேவர்களும் இருக்கின்றார்களும். இருப்பினும், அவர்கள் ஒளி தம்மிடத்தில் சிறிதும் இல்லாததுபோல, `ஒளி எங்கே உள்ளது` எனத் தேடித் திகைத்து, `சிவனே! சிவனே` என ஓலமிடுகின்றனர். அதற்குக் காரணம், ஆணவமாகிய ஒரு பாசம் முதலிலே பற்றியிருக்க, அது காரணமாக வகையால் இரண்டாய், விரியால் அளவிறந்தனவாகிய வினைகள் வந்து பற்றியிருப்பதேயாம். ஆகவே, அவர்களது செயல், மலர் இருந்தும் மணம் கமழாதது போன்றதாகும்.

குறிப்புரை :

`தேசு` என்பது, `தேசம்` என அம்முப்பெற்று வந்தது. தேசு - ஒளி. இன்றி - இல்லாதது போல. `பற்றற` என்பது பாடம் அன்று. ``வாசம், ஒன்றாமலர் போன்றது`` என்றலே கருத்தென்க. `மலர் உயிரும், மணம் சிவமும்` என்க.
``பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்,
சீவனுக் குள்ளே சிவணம் பூத்தது``3
என முன்னரும் கூறினார். இதனை,
``உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். உயர் பிறப்பினராகிய தேவர்களைக் கூறவே மக்கள் நிலை சொல்ல வேண்டாவாயிற்று.
இதனால், `சிவன் உள்ளொளியாய் இருந்தும் பாசப்பற்றால் விளங்கிலன்` என்பது கூறப்பட்டது. ஆகவே, பாசம் பற்று அற்றால் விளங்குவன` என்பது சொல்லாமே அமைந்தது.

பண் :

பாடல் எண் : 17

தானே இருக்கும் அவற்றின் தலைவனும்
தானே இருக்கும் அவன்என நண்ணிடும்
வானாய் இருக்கும்இம் மாயிரு ஞாலத்துப்
பானாய் இருக்கப் பாவலும் ஆமே.

பொழிப்புரை :

வேதமாய் இருப்பவனும் சிவனே. வேதத்தைச் செய்தவனும் சிவனே. இனி வேதமும் இயல்பாகவே அவனையே, `முடிநிலைப் பொருள்` எனக் கூறி முடியும். ஆகவே, ஆகாயத்திற்குள் அடங்கியிருக்கும் உலகம் அனைத்தினுள்ளும், `ஞான சூரியனாய் உள்ளவன் சிவன் ஒருவனே` எனப் புகழ்ந்து பாடி அவனை அடைதலே தக்கது.

குறிப்புரை :

முதலில் உள்ள, `தான்` சிவன் என்பது, அதிகாரத்தால் விளங்கிற்று. `இருக்கு` என்பது பொதுப்பட அனைத்து வேதங் களையும் குறிக்கும் பெயராயும் வரும். இரண்டாம் அடியில் ``இருக்கும்`` என்னும் உம்மை சிறப்பு. அவ்விடத்து, ``தானே`` என்றது `இயல்பாகவே` என்றபடி. ``அவன்`` என்பதன்பின் `முடிநிலைப் பொருள்` என்பது எஞ்சி நின்றது. வேதத்தைக் கூறவே ஆகமமும் அடங்கிற்று. `வானின் உள்ளாய் இருக்கும்` என உருபு விரிக்க. `சான்றோராவார் வேதாகமங்களின் வழி நிற்பவர் ஆகலான், எவ் விடத்தும் சிவனையே ஞான மயமான மெய்ப்பொருளாகப் போற்றி வணங்குதலே சான்றோராயினார்க்கு உரிய இயல்பு` என்றபடி. `பானுவாய்` என்பதில் ஈற்று உகரம் குறைந்து, `பானாய்` என வந்தது.
இதனால், `வேதாகம வழக்காகிய சான்றோர் சென்ற நெறிப்படி உயிர்களுக்குள்ளே ஒளி வளர் விளக்காய் ஒளிர்பவன் சிவனே` என உணர்ந்து அவனைக் கண்டு இன்புறல் வேண்டும்` என்பது கூறிமுடிக்கப்பட்டது.
சிற்பி