ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்


பண் :

பாடல் எண் : 1

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.

பொழிப்புரை :

எவராலும் மறுக்க ஒண்ணாத உண்மையை எளிய மக்கள் மிக எளிதாக உடன்படாது மறுத்து வாதிடுவர். அவர் அவ்வாதத்தினை விட்டு அஞ்ஞான இருளை அகற்றும் ஞான ஒளியாகிய எங்கள் சிவபெருமானை நினைந்து உருகுகின்ற மனத்தை உடையவராய்க் கணிப்பார்களாயின. அப்பெருமான் அந்த, `சிவாயநம` என்னும் குளிகையினால் அவர்களது உயிரை மட்டுமன்று; உடம்பாகிய செம்பையே பொன்னாக்கி விடுவான்.

குறிப்புரை :

`அப்பேற்றினை அவர்கள் பெறுகின்றிலர்` என்பது குறிப்பெச்சம். குளிகை பிற உலோகங்களைப் பொன்னாக்கும் இரச மணி. இதனைச் செய்யும் முறையை அக்காலத்தில் சித்தர்கள் அறிந் திருந்தனர். பிற உலோகங்களைப் புடம் இட்டு உருக்கிப்பதம் அறிந்து இக்குளிகையைச் சேர்த்தால், அந்த உலோகங்களில் உள்ள வேற்றுப் பொருட்கள் நீங்கி அவை பொன்னாய் ஒளிரும். கூடு - உடம்பு. ``கூட்டையே`` என்னும் தேற்றேகாரத்தால் உயிரை அதற்கு முன்பே பொன்னாக்குதல் பெறப்பட்டது. உயிர் ஆணவத்தால் அறிவையிழந்து களிம்பினால் ஒளியிழந்து நிற்கின்ற செம்புபோல் உள்ளது. திருவைந்தெழுத்துக் கணிப்பினால் ஆணவம் நீங்கி விட்டால், இரச குளிகையால் களிம்பு நீங்கிச்செம்பு பொன்னாய் ஒளிர்வது போல உயிர் சிவமாய் விளங்கும். உயிர் சிவமாயின், அதன் உடம்பும் சிவகாயமேயாம். இதனை மேலேயும் சில இடங்களில் கூறினார்.8
மேல், ``நகார முதலாகும்``9என்றதனை, `ஆகி உதித்து, ஏறி ஆகும்` என்றமையால் நகாரம் முதலாக அமைவது `தூலபஞ்சாக்கரம்` என்பதும், இங்கு, `உன்னி உருகும் மனதீதராய்த் தெளியவே ஓதின் கூட்டையே பொன்னாக்குவன்` என்றதனஆல், சிகாரம் முதலாக அமைவது `சூக்கும பஞ்சாக்கரம்` என்பது போந்தன.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
``சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்
றிருக்கினல்லால் ... ... ... ...
அத்தன் அருள்பெற லாமோ, அறிவிலாப்
பேதை நெஞ்சை``
``உனதருளால் - திருவாய்ப் பொலியச்
சிவாய நம என்று நீறணிந்தேன்,
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே``3
``நானேயோதவம் செய்தேன், சிவாயநம எனப்பெற்றேன்``l
எனத் திருமுறைகளில் இச்சூக்கும பஞ்சாக்கரம் சிறுபான்மையாகச் சில இடங்களில் எடுத்தோதப்படுதல் காண்க.

பண் :

பாடல் எண் : 2

தெள்ளமு தூறச் சிவாய நமவென்(று)
உள்ளமு தூற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமு தூறல் விரும்பிஉண் ணாதவர்
துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :

புறத்தில் தெளிவான அமுதமான கண்ணீர் கரந்து பாயவும், அகத்தில் அன்பு பெருகவும் சிவாயநம` என்று ஒருமுறை சொல்வதால் உண்டாகும் இன்பமாகிய அமுத வெள்ளத்தை உண்ண விரும்பாதவர்கள் பெருங்காற்றில் அகப்பட்ட மழைத்துளிபோல அடையும் இடம் அறியாது அலமருதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``உள் அமுது`` என்றது அன்பினை ``அமுது ஊற`` என்பதையும் ``தெள்ளமுதூற`` என்பதனோடு இயைக்க. உரைத்திடும் அமுது - உரைத்தலால் விளையும் அமுதம் `வெள்ள அமுது` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. ``விரும்பி உண்ணாதவர்`` என்றாராயினும் `உண்ண விரும்பாதவர்` என்றலே கருத்தென்க. ``துள்ளிய நீர்`` என்பதற்கு ஆற்றல் பற்றி இவ்வாறு உரைக்கப்பட்டது, இறுதியில் `இரங்கத் தக்கது` என்னும் சொல்லெச்சம் வருவிக்கப்பட்டது.
இதனால், பஞ்சாக்கரத்தைச் சூக்குமமாக வைத்து ஓதுவார் சிறந்த பயனை அடைதல் எதிர்மறை முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

சிவன் சத்தி சீவன் செறுமலம் மாயை
அவம் சேர்த்த பாசம் மலம்ஐந் தகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே.

பொழிப்புரை :

சூக்கும பஞ்சாக்கரத்தில் சிகாரம் முதலிய ஐந்தெழுத்துக்களும் முறையே சிவம், அருட் சத்தி, உயிர், திரோதான சத்தி, ஆணவ மலம்` என்னும் ஐந்தையும் குறிக்கும். (மாயேயம் மாயையில் அடங்க, மாயை கன்மங்கள் திரோதாயி வழிபட்டு அதனுள் அடங்க, திரோதாயியைக் குறிக்கு நகாரம் ஆணவம் ஒழிந்த மற்றை நான்கு மலங்களையும் குறிக்கும்.) ஆகச் சீவன் ஐந்து மலங்களிலும் நீங்கிச் சிவம் சத்திகளோடே சேர்ந்திருக்குமாயின், பயனில்லாத செயல்களில் செலுத்துகின்ற பாசங்கள் சிவனைச் சாராமாட்டா.

குறிப்புரை :

திரோதான சத்தி மலங்களைச் செயற்படுத்துதல் பற்றி அதுவும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறப்படும். மலத்தைக் கெடுத்தலே அதன் குறிக்கோள் ஆதல் பற்றி அதனை, ``செறு மலம்` ஒன்றார். `மலத்தைக் கெடுக்கின்ற மலம்`` என்பது அதன் பொருள். மாயையாகிய அவத்தினைச் சேர்த்த பாசம் ஆணவம். உண்மை விளக்கம். சிவப்பிரகாசம் ஆகிய நூல்களிலும் இவ்வாறே,
``சிவன், அருள், ஆவி, திரோதம், மலம் ஐந்தும்
அவன்எழுத் தஞ்சின் அடைவாம்``*
எனவும்
``திருவெழுத் தஞ்சில் ஆன்மாத்
திரோதம், மாசு, அருள், சிவம்-சூழ்
தர, நடு நின்றது.3
எனவும் கூறப்படுதல் காண்க. சிவப்பிரகாசச் செய்யுளில், ஆன்மா நடு நின்றமை கூறப்பட்டது, முதற்கண் ``பாசம்`` என்பதன்பின் `இவற்றில்` என்பது வருவிக்க. இவற்றைக் குறிப்பன சிகாரம் முதலிய எழுத்துக்கள்` என்பது, மேல் அவற்றைக் கூறியதனானே அமைந்தது.
``சீவனார்`` என உயர்த்துக் கூறியது, பாசத்துள் அகப்பட்டுத் துன்புறுதலைக் குறிக்கும் இழித்தற் குறிப்பு. சீவனார் மலம் ஐந்து அகல, சிவம் சத்தி தன்னுடன் சேர` என்றது அதிசூக்கும பஞ்சாக்கரதத்திற் செல்லல் வேண்டும் குறிப்பின் உட்கொண்டது. ``உடன்`` என்பதைச் சிவனுடனும் கூட்டுக. ``பதி அணுகின் பசு பாசம் நில்லாவே``9 என முதலிலேயும் கூறினார்.
திருவைந்தெழுத்தை நகராம் முதலாகச் சொல்லுமிடத்து ஒரு தொடர்மொழியாய் நின்று, `சிவனுக்கு வணக்கம்` என்னும் ஒரு பொதுப் பொருளையே தந்து நிற்றலால் `தூல பஞ்சாக்கரம்` எனச் சொல்லப்பட, சிகாரம் முதலாகச் சொல்லுமிடத்து ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் நுண்பொருளைக் குறிக்க. உயிர் பாசங்களின் நீங்கித் திருவருள் வழியகச் சிவத்தை அடைதல் வேண்டும் என்னும் சிறப்புப் பொருளைக் குறித்தலால் `சூக்கும பஞ்சாக்கரம்` எனப்படுகின்றது என்க.
தூல பஞ்சாக்கரம் சமய தீக்கையிலும், சுக்கும பஞ்சாக்கரம் விசேட தீக்கையிலும் உபதேசிக்கப்படும். விசேட தீக்கை வேண்டுவோர் உலகியலில் ஓரளவேனும் பற்றுவிட்டவராய் இருத்தல் வேண்டும்.
``அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி``8 என்னும் திருமுறைத் திருமொழியுள் அஞ்செழுத்தை, ``அஞ்சு பதம்`` என்றது, சூக்கும நிலைபற்றி எனக் கொள்ளுதல் உண்டு.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் உட்கிடைப் பொருள் உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சிவனரு ளாய சிவன்திரு நாமம்
சிவன் அருள் ஆன்மாத் திரோதம் மலமாய்ச்
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவம தகன்று பரசிவ னாமே.

பொழிப்புரை :

(சிவனுடையனவாகச் சொல்லப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் அவனது அருளேயாகலின்) அவனது திருப் பெயராகிய திருவைந்தெழுத்தும் அவனது அருளேயாகும். அதில் சிகாரம் முதலிய எழுத்துக்கள் மேற்கூறியவாறு, `சிவன், அருட்சத்தி, சீவான்மா, திரோதான சத்தி, ஆணவ மலம்` எனஅபவற்றைக் குறித்து நிற்குமிடத்து அவ்வெழுத்துக்கள் சிகாரம் முதலாக நின்று முத்திக்கு வழி யாகும். (ஆகவே `நகாரம் முதலாக நிற்பின் அஃது அத்தன்மையது ஆகாது` என்றதாயிற்று) அதனால், சிகாரம் முதலாகக் கொண்டு கணிக் -கின், அவ்வாறு கணிப்பவன் பிறவியினின்றும் நீங்கிச் சிவனாவான்.

குறிப்புரை :

முன் இரண்டடிகளால், முன் மந்திரத்தில் கூறியதனையே அனுவதித்துக் கூறினார். அது முத்தி நெறி ஆதலைக் கூறுதற் பயன் நோக்கி, உண்மை விளக்கத்திலும்,
``நம்முதலா ஓங்கிஅருள் நாடாது, நாடும்அருள்
சிம்முதலா ஓதுநீ சென்று``2
``அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில், இராப்பகல்அற் றின்பத்தே - நண்ணி
அருளா னதுசிவத்தே ஆக்கும் அணுவை,
இருளா னதுதீர இன்று``
ஆதி, மலம்இரண்டும் ஆதியா ஓதினாவ்
சேதியா மும்மலமும் தீர்வாகா``3
என்றும், (ஆதி, திரோதான சத்தி) சிவப்பிரகாசத்தில்,
``ஆசுறு திரோதம் மேவா(து)
அகலுமா சிவம்முன் னாக
ஓசைகொள்அதனில் நம்மேல்
ஒழித்(து) அருள் ஓங்கும்``*
என்றும்,
திருவருட் பயனில்,
``மாலார் திரோதம் மலம் முதலாய் மாறுமோ,
மேலாசி மீளா விடின்``
``சிவம் முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்; இதுநீ ஓதும் படி``*
என்றும் எல்லா இடத்திலும் இவ்வாறே கூறப்பட்டன.
`சிறந்த`` என்னும் செய்தென் எச்சம் காணப் பொருளில் வந்தது. நிரோதம் - நீக்கம்; பாச நீக்கம். நிரோதம் ஆம்` எனப் பயனிலை வருவித்து முடிக்க. ``அகன்று ஆம்`` என்பதற்கு சீவன் என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால் சுக்கும பஞ்சாக்கரம் முத்தி நெறியாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நமாதி நனாதி திரோதாயி யாகித்
தமாதிய தாய்நிற்கத் தாள்அந்தத் துற்றுச்
சமாதித் துரியந் தமதாகம் ஆக
நமாதி சமாதி சிவஆதல் எண்ணவே.

பொழிப்புரை :

நமாதி - `நம` என்பதை முதலாக உடைய தூல பஞ்சாக்கரம். திரோதாயி ஆகி நனவாதி - திரோதான சத்தி வசப்பட்டதாய்ச் சகல கேவலங்களில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளை உண்டாக்கும். (இனி) சமாதித் துரியம் தமது அகம் ஆக-நின்மலாவத்தையே சீவர்களுக்கு உடம்பதாற் பொருட்டு தம் ஆதியாய் நிற்க - அப்பாஞ்சாக்கரம் சிவன் சத்திகளது வசமாதற் பொருட்டு தான் அந்தத்து உற்று முன் சொன்ன `நம` என்பது ஈற்றில் பொருந்த நம ஆதி சமம் சிவ ஆகி ஆதல் எண்ண - `நம` முதலுக்கு ஈடாகச் `சிவ` முதல் ஆவலைக் கருதுக.

குறிப்புரை :

`நனவாதி` என்பது அகரம் தொக ``நனாதி`` என்று ஆயிற்று. திரோதாயி ஆதல் திரோதாயி வசம் ஆதல். அஃதாவது, பந்தத்தைத் தருவது ஆதலாம். நின்மலாவத்தை `சமாதித் துரியம்` எனப் பின்னர் வருதலால், முதற்கண் உள்ள நனவாதிகள் சகலத்திலும் கேவலத்திலும் நிகழ்வனவாம் `நனவாதியைத் தரும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ``தமாதியது`` என்பதலி ``தம்`` என்றது சிவனையும், சத்தியையும் அங்கு ``ஆதியது`` என்றது, முதன்மையையுடையது வசப்பட்டது என்றவாறு. ``நிற்க`` என்பது, ``ஆக`` என்பதனோடு முடிய, ``ஆக`` என்பது ``ஆதல்`` என்பதனோடு முடிந்தது ``நிற்க`` என்பதற்கு நமாதியைச் சுட்டும் `அத` என்பது வருவிக்க ``தான்`` என்றது, முதற்கண் கூறிய நம ஆதியதைதான் ``அந்தம் உற்று`` என்பதில், ``உற்று`` என்பதை `உற` எனத் திரித்து, அத்தொடரை ஈற்றடியின் முதலிற் கூட்டுக. தமது - சீவர்களது. ஆகம் - உடம்பு. சமாதி - பரம்பொருளோடு ஒன்றுதல், அஃது அத்தன்மையதாகிய நின்மலாவத்தையைக் குறித்தது. அந்நிலையில் திருவருளாய் நிற்றலால் ``தமது ஆகம் சமாதித் துரியம் ஆக`` என்றார் `சிவ ஆதி, நம ஆதி சமம் ஆதல் எண்ண` என மாற்றியுரைக்க. `சமம்` என்பது ஈற்று அம்முத் தொகநின்றது. சமம் ஆதல், ஈடாதல். ``எண்ண`` என்பது அகர ஈற்று வியங்கோள் `எண்ணுக` என்றது `ஆய்ந்தறிக` என்றதாம்.
அவத்தை வேறுபாடுகளை முன் மந்திரத்தில் காண்க.
இதனால், தூல பஞ்சாக்கரம் சகல கேவலங்களாய் , நிற்க, சூக்கும பஞ்சாக்கரம் சுத்தத்திற்கு ஏதுவாதல் கூறிமுடிக்கப்பட்டது.
சிற்பி