ஒன்பதாம் தந்திரம் - 10. திருக்கூத்து


பண் :

பாடல் எண் : 1

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன்விளை யாட்டதே.

பொழிப்புரை :

சிவனது சத்தி `அங்கு, இங்கு` எனாதபடி எங்கும் நிறைந்திருத்தலால், `சத்தியே அவனது திருமேனி` என்பது பற்றி எங்கும் அவனது திருமேனி உள்ளதாம். `சத்தியே அவனது இருப்பிடமாகிய பர வெளி, அல்லது சிதாகாசம்` என்பது பற்றி, எங்கும் அவன் இருக்கும் சிதாகாரம் உள்ளதாம்; `அவனது சத்தி, அல்லது திருவருளே அவனது செயல்கள்` என்பது பற்றி, அவனது திருக்கூத்து எங்கும் நிகழ்வதாம். இவ்வாற்றால் எங்கும் எல்லாம் சிவமயமாய் இருத்தலால், எங்கு நிகழும் எந்தச் செயலும் அவனது திருவருள் திருவிளையாட்டேயாம்.

குறிப்புரை :

`எங்கும் சிவ சத்தி ஆதலால் எங்கும் திருமேனி ... ... ... இருத்தலால், சிவனது அருள் விளையாட்டே எங்கெங்கும் தங்கும்` என இயைத்து முடிக்க. `அது` பகுதிப் பொருள் விகுதி.
இதனால், `எங்கும் நிகழும் எல்லாச் செயல்களும் அவனது திருவிளையாட்டாம் ஆதலின் அவ்விளையாட்டாகிய அவனது திருக்கூத்துக்கள் தாம் பலவாம்` என அவை தொகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனை
சொற்பத மாய்அந்தச் சுந்தரக் கூத்தனை
பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

பொழிப்புரை :

அறிவே வடிவாதல் பற்றி, பரஞ்சோதியாய் மேலான ஒளியாய் - விளங்குகின்ற சிவனது அருள் விளையாட்டாக முன் மந்திரத்தில் கூறப்பட்ட அத்திருக்கூத்துத் தான் பலவாயினும் அவை, `சிவானந்தத்க் கூதது, சுந்தரக் கூத்து பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து` என ஓராற்றால் ஐந்து வகையாகின்றன. அவற்றின் மேலும் பலவாகின்ற கூத்தினை இயற்றுகின்ற அவனது ஆற்றலை யாரே அளவிட்டறிவார்!

குறிப்புரை :

இவைகளை ஒரோ ஒன்றாக நாயனார் பின்வரும் அதிகாரங்களில் விளங்கக் கூறுவார்.
இதனால் திருக்கூத்து வகைகள் தொகுத்துப் பெயரளவில் கட்டப்பட்டன.
சிற்பி