ஒன்பதாம் தந்திரம் - 11. சிவானந்தக் கூத்து


பண் :

பாடல் எண் : 1

தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேனுந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்த நடம்செய்யும் நம்பிக்(கு) அங்(கு)
ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே.

பொழிப்புரை :

மேற்கூறிய ஐவகைக் கூத்துக்களுள் சிவானந்தக் கூத்தாவது, என்றும் அழிதல் இல்லாமையால் சத்தாய், அதனோடே சித்தாய், ஆனந்தமாய் உள்ள சத்தியிடமாக நின்று ஆனந்தத்தை முடிவின்றிப் பொழியும் கூத்தாகும் ஆகவே, ஆன்ம அறிவைக் கடந்து அந்தக் கூத்தினை இயற்றும் சிவனுக்கு அவ்விடத்தில் அந்த நடனத்தைச் செய்தற்கு அரங்காய் நிற்பது மேற்கூறிய அந்தச் சத்தியே.

குறிப்புரை :

`பரா சத்தி` என்பது உணர்த்துதற்கு, `சத்தாயும், ஆனந்தமாயும் உள்ளது` என்றார். அதனானே சித்தாதலும் தழுவப்பட்டது. `சத்தாவது உள்ளது` என்று மட்டும் கூறுவாரை மறுத்துச் சித்தாந்தம் கூறுதற்பொருட்டு, தோற்றக் கேடுகள் இன்றி உள்ளது` என்பார். ``தான் அந்தம் இல்லாச் சத்தி`` என்றார். அந்தம் இன்மை கூறவே, ஆதியின்மையும் பெறப்பட்டது. `ஆன்ம அறிவைக் கடந்து தன்னியல்பில் நிற்கும் சத்தியே பராசத்தி` என்றற்கு ``ஞானம் கடந்து`` என்றார். `அவ்வானத்தக் கூத்து` எனச்சுட்டு வருவிக்க. ``ஆடரங்கு`` என்பதில் ஆடுதல் வாளா பெயராகி நின்றது. `ஆனது அந்தச் சத்தியே` எனப்பயனிலை வருவித்து முடிக்க.
``ஆனந்த மாநடம்`` என்பதை முதலிற் கூட்டுக. கண்டீர், முன்னிலையசை. `சத்திமேல் நிகழ்ந்து` என ஒருசொல் வருவிக்க. ``உந்தும்`` என்பது கூறப்பட்டது.
எனவே, இது பரமுத்தியை அடைந்த ஆன்மாக்கட்கு அந்நிலையில் பராசத்தி வழியாகப் பேரானந்தத்தை இடையறாது தந்து கொண்டிருக்கும் கூத்தாதல் விளங்கும்.
``மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்
தானந்த மானிடத்தே தங்கியிடும் - ஆனந்தம்
மொண்டருந்தி நின்றாடல் காணும், அருள் மூர்த்தியாக்
கொண்டதிரு அம்பலத்தான் கூத்து``
``பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தால்
உரைஉணர்வுக் கெட்டா ஒருவன் - வரைமகள்தான்
காணும் படியே கருணைஉருக் கொண்டாடல்
பேணுவர்க் குண்டோ பிறப்பு`` என்பவற்றால் அறிக.

பண் :

பாடல் எண் : 2

ஆனந்தம் ஆடரங்(கு) ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்இயம் ஆனந்த வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்தகந் தானுக்கே.

பொழிப்புரை :

`ஆனந்தம்` என்னும் சொல் வழியாக உணரப் படுகின்ற அந்தப் பொருள், ஆருயிர்களுக்கு அனுபவப் பொருளாதற் பொருட்டு ஆனந்தக் கூத்தை விரும்பிச் செய்யும் சிவனுக்கு அந்நிலையில், `மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி` என்பதுபோல, உடன் நிகழும் அரங்கமும் ஆனந்தமாய்; பாட்டுக்களும் ஆனந்தமாய்; பலவகை வாத்தியங்களும் ஆனந்தமயம்; இயங்கு திணை றிலைத் திணைகளாகிய அனைத்துப் பொருள்களும் ஆனந்தமயம்.

குறிப்புரை :

வாச்சியம் - சொற்பொருள். `ஆனந்த வாச்சியம் ஆனந்தமாக, ஆனந்தக் கூத்து உகந்தானுக்கு என்பவற்றை முதலில் கூட்டியுரைக்க. ``ஆனந்தம் ஆக`` என்றது, `உண்மையில் ஆனந்த மாகும்படி` என்றதாம். உண்மையாவது, அனுபவம் அகத்தல், தன் காரியத்தைத் தோற்றுவித்து நின்றது. ஆனந்தத்தை விளைப்ப வற்றையும், பெறுபவற்றையும் ஆகுபெயரால் ``ஆனந்தம்`` என்றார். ``சராசரம்`` என்றது அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. ``சராசரம்`` என்ற அப்பிறப்பினை எடுத்த உயிர்களை. `எஞ்ஞான்றும் எல்லாப் பொருள்களும் முதல்வன் வழியாவனவற்றி வேறாவன அல்ல` என்பதாம். `பூவோடு சேர்ந்த நாரும் மணங் கமழும்` என்பது போல, `ஆனந்தக் கூத்தோடு இயைந்த அனைத்தும் ஆனந்தமாம்` என்பது கருத்து. பராகாசத்துள் நிகழும் ஆனந்தக் கூத்தின் இயல்பு இது வாகலின், அதுதானே இவ்வுலகில் நிகழுமிடத்தும் இவ்வியல்பினதேயாம்.
``உணர்வின் நேர்பெற வரும்சிவ போகத்தை
ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும் எளிவர
அருளினை எனப்போற்றி``
என்ற ஆளுடைய பிள்ளையாரது அனுபவ நிலையை இங்கு நினைவு கூர்க.

இதனால், சிவானந்தக் கூத்தினால் எல்லாப் பொருளும் ஆனந்தமாய் விளங்குதற் பயன் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 3

ஒளியாம் பரமும் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருத்துறை அந்தத்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

பொழிப்புரை :

`உள்ளது` என வழங்கபப்டும் சத்தாதல் தன்மையும், `ஒளி` என வழங்கப்படும் சித்தாதல் தன்மையும், சமய நிலையில் `சிவகாமி` என வைத்து வணங்கப்படும் அருள் வடிவான ஆனந்த மாதல் தன்மையும் ஆகிய இம்மூன்று தன்மைகளையும் உயிர்கள் பெறுதல், சிவன் செய்யும் ஆனந்த நடனத்தை உள்ளத்தில் தெளிவாகக் கண்டு தியானிக்கும் தியானத்தினாலாம்.

குறிப்புரை :

``பரம்`` மூன்றும் பரமாதல் தன்மை மேல் நின்றன. பரமாதல் தன்மையை உபநிடதங்கள், `சத்து சித்து, ஆனந்தம்` என மூன்றாகக் கூறும் வழக்குப்பற்றி அவற்றையே எடுத்துக் கூறினார். செய்யுள் நோக்கிச் சித்து முதற்கண் கூறப்பட்டது. `சிவகாமி` என்பது பொதுவாக, `சிவனை விரும்புவள், விரும்பச் செய்பவள்` எனப் பொருள் தரினும் உண்மையில் `காமம்` என்பது இன்பத்தைக் குறிப்பதாக `சிவகாம வல்லி` என்பதை, தன் ஆனந்தக் கொடி`l எனக் கூறுமாற்றால் அறிக. தெளிவு, இங்கு, தியானம். ``தெளிவாம் நட்டத்தின்`` என்றது, `நட்டமாம் தெளிவானதின் சத்தி` எனப் பொருள் தந்து நின்றது.
இதனால் சிவானந்தக் கூத்துப் பரமுத்தி ஆனந்தத்தைத் தருதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆன நடமைந்(து) அகள சகளத்தன்
ஆன நடம்ஆடி ஐங்கரு மத்தாகம்
ஆன தொழில் அருளால் ஐந்தொழில் செய்தே
தேன்மொழி பாகன் திருநடம் ஆகுமே.

பொழிப்புரை :

அருவம், உருவம் அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளை உயிர்களின் பொருட்டுக் கொள்கின்ற சிவன் படைத்தல் முதலிய ஐந்தொழிக்கு ஏற்ப ஐந்து வகை வடிவங்களையும், அவற்றிற் குரிய பெயர்களையும் கொண்டு செய்தலை நாடகமாக உடையவன். ஆகையால் அவன் செய்யும் தொழில்கள் யாவும் அருள் காரணமாகச் செய்வனவே அந்நிலையில் அத்தொழிலை அவள் ஐந்தாக வகுத்து அம்மையோடு உடனாய் நின்று திருக் கூத்தாடுகின்றான். அக்கூத்தும் ஐந்தாகும்.

குறிப்புரை :

அகளம் - உருவம். சகளம் - உருவம். இற்றைக் கூறவே, இனம் பற்றி அருவுருவமும் கொள்ளப்பட்டது. ``ஆடி`` என்பது பெயர். ``நடம் ஐந்து`` என்றது, பொன், வெள்ளி, செம்பு, இரத்தினம், பல்வகைக் கூட்டு, என்பவற்றாலாகிய மன்றங்களில் செய்யும் நடனத்தை எனவே, மன்றம் ஐந்தாதல் பற்றி நடனம் `ஐந்து` எனப்பட்டதாம். பொன் மன்றம் முதலியன முறையே `தில்லை` கூடல்` திருநெல்வேலி, திருவாலங்காடு, திருக்குற்றாலம்` என்னும் தலங்களில் உள்ளவை. ஆகம் - திருமேனி ஐந்தொழிலுக்கு ஏற்ற ஐந்து திருமேனிகளாவன யன், மால், அரன், மகேசுரன் சதாசிவன் ஆகிய திருமேனியின் அயன் முதலிய மூவரையும் இங்கு, `சம்பு பக்கத்தினர்` என்க. ஆன தொழில், தான்என்று கொண்டு தொழில், அருளால் ஆவன` என ஒருசொல் வருவிக்க.
``அகள சகளத்தன் ஐங்கருமத்து ஆகம் ஆன நடம் ஆடி`` எனத் தொடங்கி, `பாகனாய்` என ஆக்கம் வருவித்து, `ஆன நடம் ஐந்து` என முடிக்க. ``ஐந்தொழில் செய்து`` என்பதைத் `தொழில் ஐந்து செய்து` என மாற்றிக் கொள்க.
இதனால் முடிநிலைக் கூத்தாகிய ஆனந்தக் கூத்திற்குமுன் அதற்கு ஏதுவான வேறு கூத்தக்களையும் சிவன் செய்தருளுகின்றான் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பூதாண்டம் பேதாண்டம் போகாண்டம் யோகாண்டம்
மூதாண்ட முத்தாண்டம் மோகாண்ட தேகாண்ட
தாகாண்டம் ஐங்கரு மத்தாண்ட தற்பரத்(து)
ஏகாந்த மாம்பிர மாண்டத்த தென்பவே.

பொழிப்புரை :

`நிலையற்ற இன்பத்தில் மோகத்தை உண்டாக்குவ தாகிய சுவர்க்கம், மக்கள் விலங்கு முதலிய வேறுபட்ட பல உடம்புகளையுடையதாகிய பூமி, துன்பத்தையே தருவதாகிய நரகம்` என்றும் மூவகை உலகங்களில் உயிர்களைச் செலுத்தி ஐந்தொழில் செய்து அவைகளை ஆட்கொள்கின்ற, மேலான பரம்பொருளும் அனைத்துப் பொருட்கட்கும் இடமாதல் பற்றி, `பிரமம்` எனக் குறிக்கப்படுவதும் ஆகிய அந்த ஒரு பொருளில் அடங்கியுள்ள அண்டங்களோ பல கோடி என்றாலும் அவை ஐந்து தொகுப்புக்களில் அடங்குகின்றன. அவை, `பூதாண்டம், பேதாண்டம், போகாண்டம் இவை அனைத்திலும் பழைதான முத்தாண்டம்` என்பன.

குறிப்புரை :

இவை முறையே, `நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை` என்னும் கலைகளில் அடங்கியுள்ளனவாம். ``மோகாண்டம்`` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. ``மோகாண்டம்`` என்பது முதலிய மூன்றிலும் ``அண்டம்`` என்றது உலகத்தை உலகத்தை. ``தாகாண்டத்து`` என்பதில் அத்துத் தொகுத்த லாயிற்று. `ஐங்கருமத்தால்` என உருபு விரிக்க. ஆண்டதற்குச் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. `ஏக அந்தமாம் பிரமமாகிய அண்டத்தன பூதாண்டம் ... ... ... முத்தாண்டம்` என முடிக்க. `பிரமத்தை அண்டம்` என்றது இடமாதல் பற்றி.
``பூதாண்டம்`` என்பதில் ``பூதம்`` என்றது யாவரும் நன்கறிந்த பிருதிவியை. ``பேதம்`` என்றது அதற்குமேல் அப்பு முதல் பிருகிருதி முடிய உள்ளவற்றை. ``போகம்`` என்பது போக்தா. (நுகர்வோன் மேலதாய்ப் புருட தத்துவத்தையும் அதற்குக் காரணமான மற்றை வித்தியா தத்துவங்களையும் குறித்தது.) யோகாண்டம், தவத்தோர் அடையக் கூடிய வித்தியேசுர புவனங்கள். அவை `சுத்த வித்தை ஈசுரம், சாதாக்கியம்` என்னும் தத்துவங்களில் உள்ளன. முத்தாண்டம், அபர முத்தித் தானங்களாகிய சிவதத்துவ, சித்தி தத்துவ புவனங்களை தோற்ற முறையில் இவை முற்பட்டனவாதல் பற்றி ``மூதாண்டம்`` எனப்பட்டன. ``மூதாண்டம்`` என்பது, ஏனைய வற்றோடு இயைந்து இன்னோசை தர வேண்டி, ``மூதாண்டம்`` என நீட்டல் பெற்றது. ``மோகாண்ட தேகாண்ட தாகாண்டம்``, உம்மைத் தொகை தற்பரத்து - தற்பரமாம் தன்மையையுடைய. அத்தன்மை யாவது உயிர்கள் அனைத்திற்கும் மேலானதாதல்.
`இவ் ஐங்கலைகளிலும் சிவனது ஆனந்தக் கூத்து நிகழ்கின்றது` என்பது கருத்து. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.
இதனால் ஆனந்தக் கூத்தின் வியாபகம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வேதங்க ளாட மிகும்ஆ கமமாடக்
கீதங்க ளாடக் கிளாண்டம் ஏழாடப்
பூதங்க ளாடப் புவனம் முழுதாட
நாதன்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே.

பொழிப்புரை :

(``அவனன்றி ஓரணுவும் அசையாது`` என்னும் பழமொழி. `அவன் அசையவில்லையாயின் எதுவும் அசையாது` என்பதையும் தெரிவிப்பதுடன் `அவன் அசைந்தால் அனைத்தும் அசையும்` என்பதையும் தெரிவிக்கின்றது. ஆகவே, `அனைத்தும் அசைய வேண்டி அவர் அசைகின்றான்` என்பது விளங்குகின்றது. அசைதல், அது அது தன் தன் இயல்பிற்கு ஏற்பச் செயற்படுதல், `அவனது திருக்கூதினாலே அனைத்தும் செயற்படுகின்றன` என்பதையே இம்மந்திரம் உணர்த்துகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`சொல்லும், பொருளும்` என அனைத்தப் பொருளும் இருவகைப்படும். சொல் `வழக்குச் சொல், செய்யுட் சொல்` என இருவகைத்து. செய்யுட்களும் முதல் நூல்களே தலையாயவை. ஆகவே அவற்றை வேதங்கள் ஆட, மிகும் ஆகமம் ஆட`` என எடுத்தோதவே, ஏனைய சொல்வகைகள் ஆடுதல் தானே அமைந்தது. சொற்கள் அசைதலாவது வழக்கிலும், செய்யுளிலும் நின்று பொருளுணர்த்தி வருதல். செய்யுட்கண் தம்மியல்பில் நிற்குங்கால் இயற்செய்யுளாயே நிற்கும். இசையோடு பொருந்தினால் இசைச் செய்யுளாய் முன்னையினும் இனிமையைத் தரும். அதனால், ``கீதங்கள் ஆட`` என அவற்றை வேறெடுத்தோதினார். அண்டம் - உலகம். உலகங்களை `ஏழ்` என்றல் வழக்கு. ``பூதங்கள்`` என்றது உபலக்கணத்தால் தத்துவம் அனைத்தையும் தழுவி நின்றது. புவனங்கள், உலகங்களை ஆட்சி புரியும் அதிகார தேவர்களுக்கு உரிய இடங்கள், `அவை இருநூற்று இருபத்து நான்கு என்பது சைவ சித்தாந்தம். நாதன் ஞானானந்தக் கூத்தினைக் கொண்டு ஆடினான்` என இயைக்க. கொள்ளல், மேற்கொள்ளல், ஞானத்தைக் கூறவே, அதனோடு உடன் நிற்பதாய உண்மையையும் கொள்ளப்படும். உண்மை அறிவு இன்பக்கூத்தே ஆனந்தக் கூத்து ஆதல் விளங்கும்.
இதனால் சிவனது உண்மையறிவின்பக் கூத்தே அனைத்துப் பொருள்களும் நிலைத்துத் தத்தம் இயல்பிற்கேற்பச் செயற்பட்டு பயன் விளைக்கச் செய்வது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும்ஆ கமம்ஐந்தில்
ஓதும் கலை காலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் ஈசனே.

பொழிப்புரை :

(முன் மந்திரத்தில், `அளைத்துப் பொருள்களின் இயக்கங்கட்கும் காரணமாய் நிகழ்வது சிவன் கூத்து` என்பது கூறப் பட்டது. இம்மந்திரத்தில், அவை இயங்குங்கால், அக்கூத்து அவற்றோடு உடனாயும் இயங்கி திகழ்கின்றது` என்பது கூறப் படுகின்றது. இவையே இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வேற்றுமை. எனவே மேற்கூறிய மந்திரத்தின் பொருளே இம்மந்திரத்திற்கும் ஆகின்றது.)
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

பாரதத்தை அதன் சிறப்புப் பற்றி, `ஐந்தாம் வேதம்` என்றல்போல வேதத்தின் பொருளை உபவிருங்கணம் செய்யும் புராண இதிகாசங்களை உபசாரத்தால் `வேதம்` என வைத்து, ``வேதங்கள் ஐந்து`` என்றார். துணை நூல்களாய் நின்று முதல் நூலின் பொருளை விரித்து விளக்குதல் ஓதும் - நூல்களில் சொல்லப்படுகின்ற கலை, காலம் இவை வித்தியா தத்துவங்களில் தலையாயவை. ஊழி, உலகத்தின் நிலைப்புக் காலம். `அண்டம் ஐந்தில் போதம்` என மாற்றியுரைக்க. அண்டம் ஐந்து, நிவிர்த்தி முதலிய கலைகளில் உள்ள அண்டத்தின் வகை ஐந்து, போதம் - அறிவு. இஃது உயிர்களின் அறிவு, என்றது அதன் நிகழ்ச்சியை. புணர்தல் - உடனாய் நிற்றல்.

பண் :

பாடல் எண் : 8

தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே.

பொழிப்புரை :

முன் இரு மந்திரங்களில் அஃறிணையாக வைத்துக் கூறிய பொருளை இம்மந்திரம் உயர்திணையாக வைத்துக் கூறுகின்றது.
இதன் பொருள் வெளிப்படை.

குறிப்புரை :

`ஆதியின் மூவர்கள்` என மாற்றிக் கொள்க. ஆதி உலகத் தோற்றக் காலம். சாத்தர் - சாத்தியர். `சாத்தியர்` என்னும் ஒருசாராரும் தேவர் கூட்டத்துள் சொல்லப்படுகின்றனர்.
சிவனது திருக்கூத்து உலகத்தின் செயற்பாடு எல்லாவற்றிற்கும் காரணம் ஆதல் தொகுத்துக்கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி