ஒன்பதாம் தந்திரம் - 12. சுந்தரக் கூத்து


பண் :

பாடல் எண் : 1

அண்டங்கள் ஏழினுக்(கு) அப்புறத்(து) அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேல்
கண்டங் கரியான் கருணைத் திருவுருக்
கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே.

பொழிப்புரை :

பிரகிருதி உலகங்களுக்கு அப்பால் உள்ளவை அசுத்த மாயா உலகங்கள். அவற்றிற்கு அப்பால் சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் தத்துவ புவனங்கட்கு அப்பால் உள்ளவை சத்தி தத்துவ புவனமும், சிவ தத்துவ புவனமும், அவைகளில் முறையே `சத்தி` என்றும், `சிவன்` என்றும் இருதிறப்பட்டு நின்று ஐந்தொழில் புரிகின்ற சிவன், அத்தொழிலின் பொருட்டு அருளே திருமேனியாகக் கொண்டு சத்தி காணத்தான் ஆடலை விரும்பி ஆடுகின்றான்.

குறிப்புரை :

எனவே, அங்ஙனம் ஆடுகின்ற கூத்தே சுந்தரக் கூத்தாம்` என்பது போந்தது. சுந்தரம் - அழகு. எனவே, அது வடிவைக் குறிக் -கின்றது. வடிவுதான் `அருவம், அருவுருவம், உருவம் என மூவகைப் படுதல் பலவிடத்தும் சொல்லப்பட்டது. அவற்றுள் உருவத்திருமேனி கொண்டு செய்யும் கூத்தையே நாம் கூத்தாகக் காணினும், அதனோடு ஒப்ப ஐந்தொழில் இயற்றும் மற்றைத் திருமேனிகளின் செயலும் சுந்தரக் கூத்து` என்றே இங்குக் கூறப்படுகின்றன. `சூக்கும நடனம், அதிசூக்கும நடனம்` எனச் சாத்திரங்களில் கூறப்படுவனவற்றை இங்கு நினைவு கூர்க. இதனால் மேல் தொகுத்துக் கூறிய கூத்து ஐந்தனுள் முதலாவதாகிய சிவானந்தக் கூத்து ஒன்றும் சொரூப நிலைக் கூத்தம், ஏனைய நான்கும் தடத்தநிலைக் கூத்தும் ஆதல் அறிக.
``அண்டங்கள் ஏழ்`` என்றது, பிரகிருதி அண்டங்களை யாதலின், பின்னர்க் கூறப்பட்டவை அசுத்த மாயை, சுத்தமாயா அண்டங்களாதல் விளங்கிற்று. சிவன் இன்றிச் சத்தியில்லையாதலின், சத்தியைக் கூறவே, சிவன் தானே பெறப்பட்டான். `சத்தி, சிவன்` என்பன அவரையும், அவர்க்கு இடமாய தத்துவங்களையும் குறித்து நின்றன. `உச்சிமேல் உள்ளது` என ஒருசொல் வருவித்து முடிக்க. ``கண்டம் கரியான்`` என்பது, `சிவன்` என்னும் அளவாய் நின்றது. சிவன் செய்யும் கூத்தினை உமை காணுதலாவது, சிவனது செயலை உயிர்கட்குச் சேர்ப்பித்தலாம். உகத்தல் தன் காரியம் தோற்றி நின்றது.
இதனால், `சுந்தரக் கூத்தாவது ஐந்தொழில் பற்றிய கூத்து` என்பது கூறப்பட்டது.
(பதிப்புக்களில் இதனை அடுத்துள்ள ``கொடுகொட்டி பாண்டரம்`` என்னும் மந்திரம் அடுத்த அதிகாரத்தில் இருத்தற்குரியது.)

பண் :

பாடல் எண் : 2

பரமாண்டத் துள்ளே பராசத்தி பாதம்
பரமாண்டத் துள்ளே படரொளி ஈசன்
பரமாண்டத் துள்ளே படர்தரு நாதம்
பரமாண்டத் துள்ளே பரன்நட மாடுமே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் வியாபித்து நிற்றலால் சுத்த மாயை யின் வியாபகம் பரமாண்டம் ஆகும். அதற்குள்ளே உள்ள அனைத்து இடங்களிலும் பராசத்தியின் கூறாகிய ஆதி சத்தி பரவியுள்ளது. ஆகவே அந்தச் சத்தயைத் தனது விரிந்த ஒளியாகக் கொண்ட தடத்த சிவன், அவ்விடங்களில் எல்லாம் உளன். அவையேயன்றிச் சுத்தமாயையின் காரியமாகிய வாக்குக்களும் `அதிசூக்குமம், சூக்குமம், தூலம்` என்னும் வகையில் அந்த எல்லா இடங்களிலும் உள்ளன. ஆகவே, அந்த எல்லா இடங்களிலும் சிவன் தனது சுந்தரக் கூத்தினைச் செய்கின்றான்.

குறிப்புரை :

முதல் மூன்று அடிகளின் ஈற்றிலும் உள்ளது, உளன், உள்ளன` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன. மூன்றாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பதும் உடன் எஞ்சி நின்றது. நாதம் இல்லையேல் பொருள் விளங்காமை பற்றி அதன் இருப்பையும் உடன் கூறினார். நடம், அதிகாரத்தால் இங்கு நடைபெறுமாறு கூறப்பட்டடது.

பண் :

பாடல் எண் : 3

 `அங்குசம்` என்ன எழுமார்க்கப் போதத்தில்
தங்கிய `தொம்தி` எனுந்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போதல் இல்லையே.

பொழிப்புரை :

(`அம்சம்` என்பதை இடையே குகரச் சாரியைக் கூட்டி, `அங்குசம்` என ஒரு கருவியின் பெயர்போல ஆக்கி மறை பொருட் கூற்றாக வழங்குதல் சித்தர் மரபு. எனவே,) அங்குசம் என்ன எழும் மார்க்கம்` என்பது, `அம்சம்` என எழுகின்ற வழி என்பதாம். இம்மந்திரம் இரேசக பூரகமாய் நிகழும் வாயு இயக்கத்தால் இயல்பாக நிகழ்தலின் `அசபா மந்திரம்` எனப்படும். அம்மந்திரவழி இயங்கும் உயிர்ப்பினாலே அறிவு நிகழ்தலி அவ்வாற்றால் அறிவை விளக்கு கின்ற இறைவனது செயல் `அசபா நடனம்` எனப்படுகின்றது. அந்த நடனத்திற்கு, `அம், சம்` என்பனவே, `தொம், தி` என ஒலிக்கின்ற தாளங்களாம். அந்தத் தாள ஒற்றுக்கு இயையச் சிவன் சுழுமுனை நாடிக்குள் நின்று சுந்தரக் கூத்து ஆடுதலை அறிவு விளங்கிய காலத்தில் தொடங்குகின்றான். ஆயினும் அக்கூத்தினை அவன் முடித்துவிட்டு அப்பாற்போதல் இல்லை.

குறிப்புரை :

போதம் - அறிவு. மூல நாடி, சுழுமுனை நாடி. தரித்தல் - தங்குதல். அறிவு விளங்குதல், குரு உபதேசத்தால் அசபா நடனத்தை அறியப் பெறுதல்`. ``புகுதல்`` எனப் புதிதுபோலக் கூறியது, அறிவுக்குப் புலனாகும் காலம் பற்றி. விளங்கிய அறிவு பின் விளக்கம் அற்று மறவாமை பற்றி, ``போதல் இல்லை`` என்றார். அசபா நடனத்தால் இங்ஙனம் அறிவு விளங்கச் செயதல் ஐந்தொழில் நடனத்தில் `அதிசூக்கும நடனம்` எனப்படும். எனவே, இதுவும் சுந்தரக் கூத்தின் வகையாயிற்று.
இதனால், சுந்தரக் கூத்த வகைகளுள் ஒன்றன் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஆளத்தி ஆடிப் பின்நவக் கூத்தாடிக்
காலத்தீ ஆடிக் கருத்தில் தரித்தாடி
மூலச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞாலத்துள் ஆடி முடித்தான்என் நாதனே.

பொழிப்புரை :

எனக்குத் தலைவனாகிய சிவபெருமான் முதலில் சுந்தரக் கூத்திற்கு ஆயத்தங்களைச் செய்தும், பின் அதனை, `அருவம் நான்கு அருஉருவம் ஒன்று, உருவம் நான்கு` என்னும் முறையில் திருமேனி கொண்டு மும்மாயைகளின் மேலும் நிகழ்த்திப்பின் முற் றொடுக்கத்தைச் செய்தும், அக்காலங்களில் உயிர்களின் அறிவின்கண் நின்று அதனை விளக்கியும், தோற்றம் நிலை, இறுதி மூன்றனுள் இடையதாகிய நிலைப்புக் காலத்தில் முன் மந்திர்ததில் கூறியவாறு சுழுமுனை நாடியில் நின்று உயிர்ப்பு வழியாகப் புலன் உணர்வைத் தந்து; இறுதியாக, என்றும் அழிதல் இல்லாத பெருநிலவுமாகிய முத்தி நிலத்தில் பேரானந்தத்தைத் தரும் நடனத்தைச் செய்தும் நிற்பதாக அக்கூத்தினை இங்ஙனம் வரையறை செய்துகொண்டான்.

குறிப்புரை :

ஆளத்தியாவது, பண் அமைதற்கு ஏழிசை முறையால் அதனை ஏற்றிழிவு வகைகளில் முன்னர் அமைத்துக் காண்பது. அஃது இங்குச் சுந்தரக் கூத்தினை இயற்றுவதற்கு ஆவனவற்றைச் செய்தலைக் குறித்தது. காலம் - ஊழி; பேரூழி; முற்றழிப்புக் காலம். ``கருத்து`` என்றது அறிவை, ``ஆடி`` என வந்த செய்தென் எச்சங்கள் ஆறும் எண்ணுப் பொருளவாய் முறையே `ஆயத்தம், தூலம், சூக்குமம், கேவலம், சகலம், சுத்தம்` என்னும் அறுவகைக் கூத்தினையும் குறித்தன. சிவன் ஆயத்த நிலையில் பரநாத பரவிந்துக்களாயும், தூல நிலையில் அபநாத அபவிந்து சதாசிவன் முதலிய ஐவராயும் நிற்பன் `நவந்தரூ பேதம்` என்னும் மரபில் மலைபு வாராமைப் பொருட்டு. ``நவக்கூத்தாடி`` என ஒன்பது பேதம் கூறினாராயினும், அவற்றுள் முதலில் உள்ள பரநாத பரவிந்துக்கள் ஒழிந்த ஏழனையே அங்குக் கொள்க. இனி `நவக் கூத்தாடி` என்றே போயினால், ஆயத்த நிலை தோன்றாமை பற்றி அதனை வேறு வைத்தும் முற்றழிப்புத் தனிச் சிறப்புடைமையின் அதனைப் பின்னரும் எடுத்தோதியும் வலியுறுத்தினார். சுத்த நிலைக் கூத்து முன் அதிகாரத்திற்குரிய ஆனந்தக் கூத்தேயாயினும் அதுவும் கூத்தினுள் ஒன்றாதல் தோன்றுதற் பொருட்டு, ``முடிவிலா ஞானத்துள் ஆடி`` எனத் தொகுத்தோதினார். ``முடித்தான்`` என்றது, `இவ்வாறு முடித்தான்` என வரையறை செய்தமையைக் குறித்தது. இனிச் சுத்தம் ஒழிந்த கேவல சகலக் கூத்துக்களும் நவக் கூத்தில் அடங்குவனவே என்க. முதல் அடி இன எதுகை.
இதனால் சுந்தரக் கூத்தின் வகைகள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன. ஆனந்தக் கூத்தைக் கூறியது எய்தியது இகந்து படாமைக் காத்தது.

பண் :

பாடல் எண் : 5

சத்திகள் ஐந்தும் சிவபேதந் தாம்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம்எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தாம்எட்டும்
சுத்திகள் எட்டீசன் தொல்நட மாடுமே.

பொழிப்புரை :

சத்தி பேதங்கள் ஐந்து, அவை, `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` என்பன. இவற்றோடு இயைந்த சிவபேதமும் ஐந்து, அவை, `பரம், சிவன், சிவன், கருணாகரன், நாதமூர்த்தி, விந்துமூர்த்தி` என்பன. திருவருள் பெற்றோர் அடையும் முத்திகள் எட்டு. அவை, காலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம், சிவன் முத்தி, அதிகாரமுத்தி, போகமுத்தி, இலயமுத்தி, பரமுத்தி அல்லது சாயுச்சியம்` என்பன. முதன்மைப்பதவிகள் எட்டு. அவை, `கணபதி, குமாரன்` நந்தி, சண்டி, அரன், அரி, அயன், இந்திரன்` என்போரது பதவிகள். சித்திகள் எட்டு. அவை அணிமாதிகள். சிவபதம் - சிவனது நிலை. அவை எட்டாதல் அட்டமூர்த்தியாய் நிற்றலால். அட்ட மூர்த்தமாவன `ஐம்பூதம், ஞாயிறு, திங்கள், உயிர்` என்பன. இவற்றில் நிற்குமிடத்தே `பவன், சர்வன்` முதலிய எட்டுப் பெயர்களைச் சிவன் உடையவன் ஆகின்றான். சுத்திகள் எட்டு, வழிபாட்டில் செய்யப் படுவன. `நிரீக்கணம், புரோக்கணம், தாடனம், அப்பியுக்கரணம்` என்பன. இவை முறையே `பார்த்தல், தெளித்தல், தட்டுதல், மூடுதல் மும்முறை கை கொட்டல், திசைக்காப்புச் செய்தல், சுற்றுதல், அமுதமய மாக்கல்` என்பனவாம். இவை முதலாக அனைத்தும் நிகழும்படி சிவன் தொன்று தொட்டுச் சுந்தரக்கூத்தினை நிகழ்த்தி வருகின்றான்.

குறிப்புரை :

``பேதம்`` என்பதைச் ``சத்தி`` என்பதனோடும் கூட்டுக. ``எட்டீசன்`` என்பதில், `எட்டும் நிகழ` என ஏனையவற்றோடு இயைய எண்ணும்மை விரித்து, அவற்றிற்கு முடிக்கும் சொல் ஒன்றும் வருவிக்க.
இதனால், சுந்தரக் கூத்தின் பயன்கள் பலவும் விரித்தோதப் பட்டன.

பண் :

பாடல் எண் : 6

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் தாம்ஏழும்
ஆகின்ற நந்தியடிக்கீழ் அடங்குமே.

பொழிப்புரை :

மேகங்கள் ஏழு:- பிங்கல நிகண்டிலும், சூடாமணி நிகண்டிலும்` சிறிது சிறிது வேறுபடச் சொல்லப்பட்டன. நீர்மழையை அளவாகவும், மிகையாகவும், சிறிதாகவும் பொழிவன, மண்மழை, கல் மழை, பொன் மழை, மணி மழை என்பவற்றைப் பொழிவன இவைகள். கடல் ஏழு:- உப்பு, பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு, தேன், நன்னீர் - என்பவற்றை உடையன. தீவு ஏழு:- அந்த ஏழு கடல்களாலும் சூழப்பட்டுத் தனித்தனியே ஏழு நிலப்பகுதிகள். அவை:- சம்பு, சாகம், குசை, கிரௌஞ்சம், சான்மலி கேரமேதகம், புட்கரம் என்னும் காரணப் பெயர்களையுடையன. சம்புத்தீவு, நாவலந் தீவு. இதுவே நாம் வாழும் நிலம். தேகங்கள் ஏழு:- `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுபிறப்புக்கள். பாற்கரன் - சூரியன். சிவ பாற்கரன் - சிவ சூரியன். சிவன் உள்ளிருந்து அறியாமை இருளைப் போக்கி அறிவைப் பிறப்பித்தற்குக் கருவியாய் அவனால் அமைக்கப்பட்டவை. அவை ஏழாவன:- ஐம்பொறிகளும், மனமும் புத்தியும் ஆய அந்தக் கரணங்களுமாம். இன்னும் `ஏழ்` என்றதனானே வித்தியா தத்துவம் ஏழினையும் கொள்க. தாகம் - வெப்பம்; அஃது அதனையுடைய தீயைக் குறித்தது. ``தீக்கு நாக்கு ஏழ் உள` என்பர். அது பற்றி அஃது ஏழ் எனப்பட்டது. சாந்தி என்றது சுத்தத்தை அஃது ஏழாதல் கலா சுத்தி ஐந்தும், கன்ம சுத்தி ஒன்றும், ஆணவ சுத்தி ஒன்றுமாம். இந்த ஏழ் சுத்தியாலும் ஆன்ம சுத்தி உளதாகும்.

குறிப்புரை :

இதனால், வகை வகையாகச் சொல்லப்படுகின்ற அனைத்துப் பொருள்களும் சுந்தரக் கூத்துள் அடங்குதல் தொகுத்துக் கூறி முடிக்கப்பட்டது.
சிற்பி